World Socialist Web Site www.wsws.org


WSWS: செய்திகள் & ஆய்வுகள்: ஐரோப்பா : பிரான்ஸ்

Lionel Jospin and Trotskyism: the debate over the French prime minister's past

லியனல் ஜொஸ்பனும் ட்ரொட்ஸ்கிசமும்: பிரான்ஸ் பிரதமரின் கடந்தகாலம் தொடர்பான விவாதம்
Peter Schwarz
27 June 2001

Back to screen version

கடந்த மூன்று வாரங்களாக பிரான்சின் தொலைத்தொடர்பு சாதனங்கள் பிரதமர் லியனல் ஜொஸ்பனின் ட்ரொஸ்கிச கடந்தகாலம் தொடர்பான வெளியான செய்திகளால் நிறைந்திருந்தன.

ஆரம்பத்தில் பிரான்சின் பத்திரிகைகளின் தலைப்பு செய்தியில், Organisation Communiste Internationaliste ன் [OCI- சர்வதேச கம்யூனிச அமைப்பு- இது நான்காம் அகிலத்தின் கிளையாக இருந்தது] முன்னாள் உறுப்பினரான Patrick Dierich இன் பேட்டியை வெளியிட்டிருந்தது. 1968 தொடக்கம் 1986வரை OCI இல் இணைந்திருந்த 56 வயதுடைய வான்வெளி ஆராச்சியாளரான இவர், தான் 1971 கோடைகாலத்தின் ஜொஸ்பனை கட்சியின் அங்கத்தவராக அறிந்திருந்ததாக தெரிவித்திருந்தார். அவர் ''இதில் எந்தவித பிழையுமில்லை. 1971 இல் அவர் இருந்த கட்சிக் கிளையிலேயே நானும் இருந்ததேன். அவர் தோழர் 'Michel' எனவும் நான் தோழர் ‘Blum' எனவும் அழைக்கப்பட்டோம். நாங்கள் அனைவரும் புனைபெயரைக் கொண்டிருந்தோம்'' எனக் குறிப்பிட்டார்.

Patrick Dierich இன் கருத்துக்கள் ஒன்றும் புதிதானவையல்ல. இப்படியான வதந்திகள் 1995 இல் இருந்தே உலாவுகின்றன. ஆனால் இதற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை. 1980ம் ஆண்டுகள்வரை OCI இன் முக்கிய அங்கத்தவராக இருந்த தனது சகோதரனான Oliver உடனான ஆள் மாறாட்டத்தின் விளைவு என ஜொஸ்பன் இவற்றை நிராகரித்துள்ளார்.

Dierich இன் கருத்துக்களை தொடர்ந்து, இன்னுமொரு முன்னாள் OCI அங்கதவரான 80 வயதுடைய Boris Fraenkel இன் பேட்டியொன்று Nouvel Observateur என்னும் வலைத் தள வார வெளியீடு ஒன்றில் வெளிவந்தது. Boris Fraenkel ஜேர்மன் நகரமான டன்ஸிக்கில் ஜேர்மன்- யூதக் குடும்பத்தில் பிறந்தவர். இவர் நாஜிகளிடமிருந்து தப்பி சுவிற்ஸலாந்தை நோக்கிச்சென்று, யுத்தத்தின் பின்னர் பிரான்சில் குடியேறினார். அங்கு அவர் OCI இன் நிறுவக உறுப்பினராக இணைந்துகொண்டார்.

Boris Fraenkel தான் ஒருவருட காலமாக தனது வீட்டில் அரசியல் வகுப்புக்களில் கலந்துகொண்டபோது 1964 இல் ஜொஸ்பனை அறிந்துகொண்டதாக குறிப்பிட்டார். மேலும் ''லியனல் ஜொஸ்பன் எனது வீட்டில் நடந்த 'புரட்சிகர கல்வி வகுப்புகளில்' ஒழுங்காக கலந்துகொண்டார். இவ் வகுப்புகள் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் இணைவதற்கான முன்நிபந்தனைகளாகும். எனது பல நண்பர்கள் பெருமையுடன் கூறுவது போல் இளம், இடதுசாரித் தன்மையான இளைஞர்களை எனது வலையில் விழுத்துவது எனது விஷேட தன்மையாகும். ஜொஸ்பன் அப்போது École Nationale D'administration [ENA, பிரான்சின் தேசிய அரசியல் உயர்மட்டத்தினருக்கான பல்கலைக் கழகமாகும்] இல் கல்வி கற்றுக்கொண்டிருந்தார். நான் அவருக்கு இரகசியமாக பயிற்சியளித்தேன். எதிர்காலத்தில் உயர் அரச அதிகாரியாக வரவிருப்பவர் ஒரு புரட்சிக்காரராக காட்டிக்கொள்ள விரும்பவில்லை. கலந்துரையாடல் மூலம் நாங்கள் நண்பர்களானோம்'' என குறிப்பிட்டார்.

தனது நட்பிற்கு ஆதாரமாக அவர் விடுமுறையின் போது 'லியனல்' என கையெழுத்திட்டு அனுப்பப்பட்ட தபால் அட்டையை காட்டினார். Fraenkel தான் 1966 இல் கட்சியிலிருந்து விலக்கப்பட்டபின் ஜொஸ்பன் உடனான தொடர்புகளை இழந்ததாக கூறினார். அப்போதைய OCI இன் தலைவரான Pierre Lambert, ஜொஸ்பன் உடனான தொடர்புகளை வைத்திருந்ததாக தான் கருதுவதாக குறிப்பிட்டார். ஆனால் தன்னால் இதனை உறுதிப்படுத்தமுடியாது என்றார். Fraenkel OCI இல் இருந்து வெளியேற்றப்பட்டதற்கு அவர் Wilhelm Reich இனதும் Herbert Marcuse இனதும் கருத்துக்களுக்கு இசைந்ததும், அவர்களின் புத்தகமான Eros and Civilisation இனை பிரான்ஸ் மொழிக்கு மொழிபெயர்த்ததும் தான் காரணமெனக் கூறினார்.

பாராளுமன்றத்தின் கேள்வி நேரத்தின் போது இது தொடர்பாக ஜொஸ்பனின் இடம் கேட்கப்பட்டபோது முதல் தடவையாக தனக்கு உண்மையாக ட்ரொட்ஸ்கிச இயக்கத்துடன் தொடர்பு இருந்ததை ஒப்புக்கொண்டுள்ளார். அவர் ''தான் 60ம் ஆண்டுகளில் ட்ரொட்ஸ்கிச கருத்துக்களில் ஆர்வம் கொண்டிருந்ததாகவும், இவ்வியக்கத்தின் அமைப்பு ஒன்றுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், இது தனது சொந்த புத்திஜீவித, அரசியல் கடந்தகாலம் பற்றியது எனவும், நான் இச்சொல்லை பாவிக்க அனுமதிக்கப்பட்டால், இது தொடர்பாக தான் வெட்கப்படவில்லை'' எனவும் கூறினார்.

அவர் மேலும் ''தான் இத்தொடர்புகளால் பல குறிப்பிடத்தக்க நபர்களை அறிந்துகொள்ளக் கூடியதாக இருந்ததாகவும், இது தனது சொந்த அபிவிருத்திக்கு உதவியதாகவும், இது தொடர்பாக நான் கவலைப்படவோ அல்லது மன்னிப்புக்கேட்கவோ தேவையில்லை'' எனவும் குறிப்பிட்டார். அவர் கடந்தகாலத்தில் பல சந்தர்ப்பங்களில் தான் ''ஒரு Suez இனதும் Budapest இனதும்'' குழந்தை என குறிப்பிட்டுள்ளார். [Suez- என குறிப்பிடப்படுவது அந்நேரம் பிரான்சின் சோசலிச கட்சியின் பிரதமரான Guy Mollet ன் கீழ் பிரான்சும், பிரித்தானியாவும் எகிப்தின் மீதான படையெடுப்பை குறிக்கின்றது. Budapest- ஹங்கேரியின் எழுச்சிகளை சோவியத் யூனியனின் படைகள் 1956 ஒடுக்கியதை குறிக்கின்றது.] ஜொஸ்பன் அப்போது 19 வயதானவராக இருந்தார்.

அடுத்தநாள் அவர் Radio Europe 1. ஆல் விசேடமாக ஒழுங்கு செய்யப்பட்ட பேட்டி ஒன்றில் அவருக்கும் OCI இற்கும் இடையிலிருந்த தொடர்பு சம்பந்தமாக விபரமாக குறிப்பிட்டார். அதில் அவர் அப்போது ''உறுதியான பல மனிதர்களையும், போர்க்குணம் மிக்க தொழிலாளர்களையும், சிலவேளை புத்திஜிவிகளையும் அறிந்துகொண்டதாகவும், இது மிகவும் பிரயோசனமான எதிர்நிலையாக இருந்தது. நான் École Nationale D'administration TM விசேடமான கல்வியூட்டலின் எதிர்த்தன்மையாக இருந்ததாக குறிப்பிடலாம்'' என தெரிவித்தார். அவர் ''தீவீரவாத்துடனான அனுபவத்தை பெற்றுக்கொண்டதாகவும், மற்றவர்களைவிட தான் அதனை விளங்கிக் கொண்டதாகவும்'' கூறினார்.

பிரெஞ்சுப் பத்திரிகையான Le Monde " லியனல் ஜொஸ்பனின் ட்ரொட்ஸ்கிச கடந்தகாலம் '' என்ற தலையங்கத்தின் கீழ் பெரிய கட்டுரை ஒன்றை வெளிவிட்டிருந்தது. அதில் அப்போது 1971 யூன் இல் சோசலிசக் கட்சியில் ஜொஸ்பன் OCI இன் 'இரகசிய அங்கத்தவராக' [மறைவாக இயங்குபவராக] இணைந்து கொண்டார் என்ற குற்றம் சாட்டப்பட்டது. அப்பத்திரிகை 1969-1971 வரை OCI இல் ஜொஸ்பனின் கிளையில் இருந்த 10 பேரை சாட்சியமாக வைத்திருப்பதாக குறிப்பிட்டது. ஆனால் அவர்களில் Patrick Dierich இனையும் Yvan Berrebi எனப்படுவவரையும் தவிர்த்து ஏனையோரின் பெயர்களை குறிப்பிடவில்லை.

அப் பத்திரிகை தொடர்ந்தும் ''70 ஆம் ஆண்டுகள் முழுவதும் ஜொஸ்பன் OCI உடனான தொடர்புகளை பராமரித்து வந்தததாகவும், சோசலிசக் கட்சியின் செயலாளராக தெரிவுசெய்யப்பட்டு 6 வருடங்களின் பின்னரே 1987 ம் ஆண்டு OCI இன் தலைவரான Pierre Lambert உடனான தொடர்புகளை துண்டித்துக் கொண்டதாக குறிப்பிட்டது. அவர்கள் மேலும் பெயர் குறிப்பிடாத, 70ம் ஆண்டுகளில் OCI இன் முழுநேர அங்கத்தவர்களான இரண்டு சாட்சியங்களை இதற்கு ஆதாரமாக குறிப்பிட்டனர். Pierre Lambert தனது பாரிஸ் OCI அலுவலகத்தில் ஜொஸ்பன் உடனான தொடர்புகளை இரகசியமாக வைத்திருக்கவில்லை. அவர் கம்யூனிச கட்சி தலைவரான Georges Marchais உடனான ஒரு தொலைக்காட்சி விவாதத்திற்காக ஜொஸ்பன் தயாராவதற்காக உதவியதாக 1980 ஏப்பரல் மாதம் பெருமையுடன் கூறியிருந்தார்.

முன்னைநாள் OCI இன் தலைவர்களிடமிருந்து சரியாக தகவல்களை பெறும் இப்பத்திரிகையின் முயற்சி தோல்வியில் முடிந்தது. தற்போது 84 வயதான Pierre Lambert இது தொடர்பாக கருத்து தெரிவிக்க மறுக்கின்றார். OCI இல் இருந்து உருவாகிய Parti des Travailleurs [PT-தொழிலாளர் கட்சி- Workers Party] இன் தேசிய செயலாளரான Daniel Gluckstein தான் ''தற்போதைய ஜொஸ்பனை பற்றி கதைக்க தயாராக இருப்பதாகவும், ஜொஸ்பனின் கடந்தகாலம் அவரது பிரச்சனை, எமது பிரச்சனையல்ல, மற்றவை எமக்கு தேவையில்லை'' எனவும் கூறினார். வரலாற்று ஆசிரியரான Pierre Broué தனக்கு இதைப்பற்றி ஒன்றும் தெரியாது என்றார். 70 ஆம் ஆண்டுகளில் OCI இன் இளைஞர் இயக்கமான AJS இன் செயலாளரான, Charles Berg இவர் Le Monde இன் கருத்தின்படி சோசலிச கட்சியினுள் உட்புகுதல்வாத வேலைகளுக்கு பொறுப்பாக இருந்தவர், இது தொடர்பாக வெளிப்படையான நிலைப்பாடு எடுக்க விரும்பவில்லை.

Charles Berg 1979ம் ஆண்டு OCI இல் இருந்து வெளியேற்றப்பட்டார். இவர் தற்போது Jacques Kirsner என்ற பெயரில் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளராக வேலை செய்கின்றார். இவர் 1999ம் ஆண்டில் Libération என்ற பத்திரிகைக்கு எழுதிய கட்டுரை ஒன்றில் ''லியனல் ஜொஸ்பனுடன் பலவருட காலம் ஒரே புரட்சிகர, சோசலிச, ஜனநாயக நம்பிக்கைகளுக்காக ஒன்றாக அரசியல் ரீதியாக போராடியதாக'' OCI இற்கும் லியனல் ஜொஸ்பனிற்கும் இடையிலான உறவு தொடர்பாக குறிப்பிட்டார்.

Radio Europe 1 இனால் Le Monde ஆல் குறிப்பிடப்பட்ட கருத்துக்கள் தொடர்பாக கேட்டப்பட்டபோது ஜொஸ்பன் சந்திப்புக்களும், கூட்டங்களும் நடந்ததை மறுக்கவில்லை. ஆனால் அவை ''தனிப்பட்ட விடயங்களாகும்'' எனவும் இவை சோசலிச கட்சியில் தனது பகிரங்க, வெளிப்படையான நடவடிக்ககளை பாதிக்கவில்லை எனக் கூறினார்.

சோசலிச கட்சியில் OCI இன் 'இரகசிய அங்கத்தவராக' 1971 ஆம் ஆண்டு இணைந்தது தொடர்பாகவும், எப்போது அதனுடனான அரசியல், புத்திஜீவித் தொடர்புகளை துண்டித்துக் கொண்டீர்கள் என கேட்கப்பட்டதற்கு அவர் ''தான் சோசலிச கட்சியில் சுயமாக இணைந்ததாகவும், அங்கு சுயாதீனமாக செயற்பட்டதாகவும், 1973 இல் இருந்து சோசலிசக் கட்சியை பொறுப்பேற்றதிலிருந்து ஒரு முழுமையான சோசலிச கட்சியின் அங்கத்தவராக இயங்கியதாக'' குறிப்பிட்டார். மேலும் ''நான் வைத்திருக்க விரும்பிய தொடர்புகள், கலந்துரையாடல்கள் அனைத்தும் தனிப்பட்ட விடயங்களே தவிர அவை வெளிப்படையானவை அல்ல எனவும், தான் 1973-1981 வரை நான் கல்வி அமைச்சராகவும், ஏனைய பதவிகளையும் பின்னர் வகித்தபோது அதில் ஏதாவது பிரச்சனைகளை இருந்ததா என பாருங்கள்'' எனவும் கூறினார்.

ஜொஸ்பனின் செயல்கள் தொடர்பான பொதுமக்களின் கருத்து மட்டுப்பட்டிருந்தது. தனது சொந்த முகாமிலிருந்து அவர் ஆதரவை பெற்றுள்ளார். ஒரு சில எதிர்க்கட்சியினர் இதனை அரசியலாக்கப் பார்ப்பதுடன், ட்ரொட்ஸ்கிச இயக்கத்துடனான அவரது வரலாற்றை எதிர்வரும் தேர்தல் பிரசாரத்தின் ஆயுதமாக பயன்படுத்த ஜனாதிபதி Jacques Chirac இன் அலுவலகம் முனைவதாக சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஜொஸ்பனின் 2002ம் ஆண்டு தேர்தலில் Gaullist களின் வேட்பாளரான Jacques Chirac இனை எதிர்த்து போட்டியிடவுள்ளார்.

இதன்போது ஜொஸ்பன் இவ் இரகசியங்களை நீண்டகாலமாக மறைத்து வைத்திருந்தமைக்காக பாரியளவில் தாக்கப்படப்போவதில்லை. 1960களின் பாரிய மக்கள் பிரிவினர் தீவிரமயமாக்கப்பட்டிருந்த போது பிரான்சில் இளைஞர்கள் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புகளை வைத்திருந்தது ஒன்றும் அபூர்வமானதல்ல. Gaullist களின் ஜனாதிபதியான Jacques Chirac தான் இளைஞராக இருந்தபோது ஸ்ராலினிச பத்திரிகையான l'Humanité இனை விற்பனை செய்ததாக பகிரங்கமாக ஒத்துக்கொண்டுள்ளார்.

ஜொஸ்பனின் நெருங்கிய வட்டாரங்களில் 80ம் ஆண்டுகளில் தீவிரவாத அமைப்புகளில் இருந்த பலர் இருக்கின்றனர். பாரிஸ் இன் பாராளுமன்ற உறுப்பினரான Jean Christophe Cambadélis சோசலிச கட்சியினுள் ஜொஸ்பனின் முக்கிய ஆதரவாளராவார். இவர் 1986 வரை OCI இன் மத்தியகுழு உறுப்பினராக இருந்தவராவர்.

OCI உம் மித்திரோனும் ''இடதுகளின் கூட்டும்'' (Union de la Gauche)

இறுதியாக ஜொஸ்பன் தனது தீவிரவாத கடந்தகாலத்தைப் பற்றி ஏற்றுக்கொண்டமை ஒரு தந்திரோபாய நோக்கிலாகும். பகிரங்கமாக இதனை ஏற்றுக்கொள்வதன் மூலம் அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் தேர்தலில் இப்பிரச்சனையை தனது எதிராளிகள் பயன்படுத்தாமல் இருப்பதற்காகும். நாளாந்த அரசியல் நோக்கிலிருந்து பார்க்காவிட்டாலும், ஜொஸ்பனிற்கும் OCI இற்கும் இடையிலான தொடர்புகள் அடிப்படையான கேள்விகளை எழுப்புகின்றன. தனது 30 ஆவது வயதுகளில் ட்ரொட்ஸ்கிச சிந்தனைகளின் மீது ஆர்வத்தைக் காட்டியவரும், அநேகமாக நான்காம் அகிலத்தின் பிரிவில் உறுப்பினராக இருந்த ஒரு மனிதன், 25 வருடங்களின் பின்னர் முதலாளித்துவத்தின் முக்கிய பிரதிநிதியாக பிரெஞ்சு அரசாங்கத்தின் தலைமையை எவ்வாறு பிரதிநிதித்துவப் படுத்தக்கூடியதாக இருக்கின்றது?

ஜொஸ்பனின் நோக்கங்கள் குறித்து ஒருவர் ஊகம் தெரிவிக்கவே முடியும். தனது இளமைக் காலத்தில் ட்ரொட்ஸ்கிச கருத்துக்களுக்கு அவர் உண்மையில் எந்தளவிற்கு ஆதரவளித்தார் என்பதை அவர் மட்டுமே குறிப்பிடமுடியும். இதை அவர் செய்ய மறுக்கின்றார். ஆனால் ஜொஸ்பனின் போக்கிற்கும் OCI இன் அபிவிருத்திக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. 1960ம் ஆண்டுகளில் ஜொஸ்பன் OCI உடன் நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்த காலகட்டத்தில், 1971 ஆம் ஆண்டு ஜொஸ்பன் சோசலிச கட்சியில் இணையும் போது, ட்ரொட்ஸ்கிச கொள்கைகளில் இருந்து விலகி அமைப்பு ரீதியாக பிரான்சின் பிரிவாக இயங்கி வந்த OCI நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிலிருந்து உடைத்துக்கொண்டது.

1971 ஆம் ஆண்டு OCI, ட்ரொட்ஸ்கியின் கொள்கைகளுக்கு பொருந்தாத, சோசலிசக் கட்சி தலைவரான பிரான்சுவா மித்திரோனின் நோக்கங்களுக்கு பொருந்தக்கூடிய அரசியல் நிலைப்பாட்டை எடுத்து. இது Patrick Dierich இற்கும், ஜொஸ்பனிற்கும் அவரது OCI உடனான தொடர்பு மித்திரோனுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் என்பதை எடுத்துக்காட்டுகின்றது. ஆனால் அது தொடர்பாக எவ்வித எதிர்ப்பும் எழவில்லை. Patrick Dierich இன்படி ''மித்திரோனுக்கு ஜொஸ்பனின் இரட்டை அங்கத்துவம் தொடர்பாக தெரிந்திருந்தது. அவர் முன்னர் உள்நாட்டு அமைச்சராக இருந்தார் என்பதை மறக்காதீர்கள். அந்நேரம் நாங்கள் சோசலிச கட்சியை விட கம்யூனிஸ்ட் கட்சி தொழிலாளர்களுக்கு நெருக்கமாக இருந்தது என கருதவில்லை. மேலும் தேர்தல் தந்திரோபாயத்தின் படி சோசலிச கட்சியின் வேட்பாளரே வலதுசாரிகளை தோற்கடிக்கமுடியும். எனவே மித்திரோனுக்கு உதவிசெய்யவேண்டும். இதனையே ஜொஸ்பனும் தனக்கு இயலுமானளவு செய்தார். OCI புறநிலைரீதியாக சோசலிச வாதிகளின் கூட்டாகும்''.

மித்திரோன், ஜொஸ்பனை விரைவாகப் புரிந்துகொண்டு 1973 ஆம் ஆண்டு கட்சியின் தேசிய செயலாளராக்கினார். Radio Europe 1 இற்கு அவர் வழங்கிய பேட்டியில் OCI இல் தனது அங்கத்துவம் இதற்கு தடையாக இருக்கவில்லை என உறுதிப்படுத்தியிருந்தார். அதில் மித்திரோனுக்கு ஏதாவது தெரியுமா? என கேட்கப்பட்டபோது ''எனது கருத்தின்படி யாரோ மித்திரோனின் காதுக்குள் இது தொடர்பாக ஓதியுள்ளார்கள். ஆனால் நாங்கள் இது தொடர்பாக ஒருதடவையும் கதைத்தது கிடையாது. நான் செய்தது அவருக்கு பிடித்திருந்தது என நான் நினைக்கின்றேன்'' என கூறினார்.

1971 எப்பினே (Épinay) என்னும் இடத்தில் நடந்த மாநாட்டில், மித்திரோன் சோசலிச கட்சியின் தலைமையை எடுத்ததுடன், மிகவும் ஆச்சரியப்படத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தினார். 2ம் உலக யுத்தத்திற்கு பின்னர் பதவியிலிருந்த, குளிர்யுத்தகால கருத்துகளுக்கு அடிபணிந்திருந்த முன்னாள் தலைவரான Guy Mollet இற்கு மாறாக மித்திரோன் இடதுசாரிகளின் கூட்டிற்கு வழிமொழிந்தார். இதன் மூலம் அந்நேரத்தின் தேர்தல் வாய்ப்புகளில் கம்யூனிஸ்ட் கட்சி பின்தங்கி இருந்த நிலமையில் குடியரசு வாதிகளையும், பிரிவுகளாக இருந்த சோசலிச போக்குகளையும், கம்யூனிஸ்ட் கட்சியையும் ஒன்றிணைத்து சோசலிச கட்சி முன்னணிப்பங்கு வகிக்கலாம் என கருதினார்.

மித்திரோன் அந்நேரத்தின் ஒரு இடது சாரியாகவோ அல்லது சோசலிச வாதியாகவோ இருக்கவில்லை. நாஜிகளின் சார்பான விச்சி (Vichy regime) அரசாங்கத்தின் அதிகாரியாகவும், பின்னர் நான்காம் குடியரசில் முதலாளித்துவ அமைச்சராகவும் இருந்த அவர், பாரிய அரசியல் நோக்கங்களை கொண்டிருந்தார், ஆனால் அரசியல் நம்பிக்கைகளை கொண்டிருக்கவில்லை. அவர் மற்றவர்களின் நம்பிக்கையை பாவிப்பதில் நவீன Joseph Fouché போல் நம்பிக்கை கொண்டிருந்தார். இவர் 1965 இல் General de Gaulle இற்கு எதிரான இடதுசாரிகளின் பிரதிநிதியாக தேர்தலில் போட்டியிட்டு குறிப்படத்தக்க வாக்குகளை பெற்றபோதும், பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தார்.

1968 மே-யூன் பொதுவேலை நிறுத்தமும், மாணவர்கள் எழுச்சியும் மித்திரோனின் ''இடது கூட்டுக்கு'' உருவாக்கம் முயற்சிக்கு புது உத்வேகம் வழங்கியது. அப்போது ஐந்தாவது குடியரசு வேருடன் ஆட்டங்கண்டிருந்தது. ஜனாதிபதியான General de Gaulle தற்காலிகமாக கட்டுப்பாட்டை இழந்திருந்ததுடன் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவுடனேயே பதவியை தக்கவைத்துக் கொள்ள முடிந்தது. அவரின் ஆட்சியின் முடிவிற்கான அறிகுறிகள் காணப்பட்டன.

இவ்வரசாங்கத்தின் நெருக்கடியானது சமுதாயத்தில் ஏற்பட்ட மாற்றத்தின் விளைவுமாகும். 1950-60 ஆம் ஆண்டுகளில் கைத்தொழிலுக்கும் விவசாயத்திற்கும் உள்ள சமநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தியது. இது பிரான்சின் அரசியலில் அதுவரை ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த கிராமப்புற விவசாயிகளின் முக்கியத்துவதை இல்லாது செய்தது. நகரங்களில் ஒரு இளம் தொழிலாள வர்க்கம் வளர்ச்சியடைந்தது. ஸ்ராலினிஸ்டுக்களால் ஏற்படுத்தப்பட்ட பாதிப்புகளுக்கும், சோசலிஸ்டுக்களின் மத்தியிலிருந்த உடைவுகளுக்கு மத்தியிலும் இப்புதிய தட்டினரது போர்க்குணம் ஒரு புதிய புரட்சிகர திசையை நோக்கிபோகும் அபாயத்தை கொண்டிருந்தது.

இந்நிலைமைகளின் கீழ் ''இவ் இடதுகளின் கூட்டு'' இவ்வியக்கத்தை திசைதிருப்பி அபாயமற்ற நிலையை உருவாக்கியது. மித்திரோனுக்கு அவரது கடந்தகாலம் காரணமாக பாரிய மதிப்பில்லாத போதிலும், இவ் இடதுகளினது கூட்டின் (Union de la Gauche) உதவியுடன் பரந்த தொழிலாளர்கள் மத்தியில் ஒரளவு ஆதரவை பெறமுடிந்தது. 70 ஆம் ஆண்டுகளில் இடதுகளினது கூட்டின் மேலிருந்த நப்பாசைகளும், எதிர்பார்ப்புக்களும் மிக அதிகமாகும். இதனை தொடர்ந்து 1981ம் ஆண்டு மித்திரோன் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டபோது ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் நடனமாடினர். ஆனால் மித்திரோனின் மீதுவைக்கப்பட்ட நம்பிக்கைகுக்கு அவர் வெகுவிரைவில் ஏமாற்றத்தை வழங்கினார்.

1971ம் ஆண்டு OCI, மித்திரோனால் உருவாக்கப்பட்ட நம்பிக்கைகளையும் எதிர்பார்ப்புக்களையும் பலப்படுத்துவதில் ஒரு முக்கியபங்கு வகித்தது. இவர்கள் அவருக்கு மிகவும் முக்கியமானதும், வரவேற்புக்குரியதுமான பாதுகாப்பை இடதுபக்கமிருந்து வழங்கினர்.

1969 ஏப்பிரல் மாதம் ஜனாதிபதியான General de Gaulle பதவிவிலகியதிலிருந்து இவர்கள் ஜனாதிபதி வேட்பாளராக சோசலிசகட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து ஒருவரை தெரிவு செய்யவேண்டும் என்பதை தமது அரசியலின் மத்திய புள்ளியாக கொண்டிருந்தனர். அவர்கள் இதனை ''தொழிலாளர் ஐக்கிய முன்னணி'' எனவும், இது ஒரு தந்திரோபாய நோக்கல்ல மாறாக இது தமது முக்கிய மூலோபாயமென வலியுறுத்தினர். இது முதலாளித்துவத்திற்கும், அரசுக்கும், அதன் அரசாங்கத்திற்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தை ஒரு சுயாதீனமாக நிறுத்துவதன் அடித்தளத்தில் உருவாகியதாக கூறினர். இவர்கள் தமது பத்திரிகையான உண்மை (La Vérité இல. 544, பக்கம் 10) இல் ஆட்சி அதிகாரத்திற்கான கேள்விக்கான பதிலில் ''தொழிலாள வர்க்கத்தின் ஐக்கிய முன்னணியுள்'' அடங்கியிருப்பதாகவும், இது அதிகாரத்திற்கும் அரசுக்குமான கேள்விக்கான பதிலுடன் தவிர்க்கமுடியாதாக உள்ளது என குறிப்பிட்டது.

சோசலிசக் கட்சியினதும், ஸ்ராலினிச கட்சியினதும் இணைந்த ஒரு வேட்பாளருக்கான ஆதரவை தொழிலாள வர்க்கத்தின் ஆட்சியதிகாரத்துடன் இணைத்து பார்ப்பது உண்மையில் ஒரு முட்டாள் தனமானதாகும். பலபத்து வருடங்களாக இவ்விரு கட்சிகளும் முதலாளித்துவ அரசின் மீதான தமது அடிபணிவை எடுத்துக்காட்டியுள்ளனர். ஆனால் மித்திரோனின் அரசியலுக்கு இடதுசாயம் பூசும் தன்மையின் தேவையை பூர்த்திசெய்தது. 1969 இல் இணைந்த இடது வேட்பாளரை உருவாக்குவது சாத்தியமற்றுப் போனபோது OCI, சோசலிச கட்சியினையும், ஸ்ராலினிச கட்சியினையும் அவர்கள் ''பாட்டாளி வர்க்கத்தின் வர்க்க முன்னணியை'' அழித்ததாக குற்றம் சாட்டினர். Michel Rocard இன் ஐக்கிய சோசலிச கட்சி (United Socialist Party-PSU) உம் Alain Krivine இன் Communist League தமது வேட்பாளர்களுடன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது, "வர்க்க முன்னணியை உடைப்பதாக" OCI குற்றஞ்சாட்டியது.

மித்திரோன் வெளிப்படையாக இப்பிரிவினரின் ஆரதவை தெரிந்துகொண்டார். OCI அவரது முடிவிற்காக மட்டும் பிரசாரம் செய்யவில்லை, மாறாக அது அவருக்கான முக்கிய ஆதரவை திரட்டிக்கொடுத்து. ஜொஸ்பனின் சுயசரிதை எழுதிய Gérard Leclerc, Florence Muracciole இருவரும் OCI (அதை அவர்கள் அந்நேரத்தில் PCI என குறிப்பிடுகின்றனர்) தொடர்பாக பின்வருமாறு குறிப்பிடுகின்றனர், ''68 மேயின் நிகழ்வுகளால் 70 களின் ஆரம்பத்தில் PCI இனுள் ஒரு புதிய தாக்கத்தை கொடுத்தது. அவர்கள் 8000 இற்கு மேலான அங்கத்தவர்களை கொண்டிருந்தபோதும், தமது இளைஞர் அமைப்பான AJS இனுள் பத்தாயிரக்கணக்கானோரை அணிதிரட்டக் கூடியாதாக இருந்தது. அது முக்கிய மாணவர் அமைப்பான UNEF-ID கட்டுப்பாட்டினுள் வைத்திருந்ததுடன், Force Ouvrière தொழிற்சங்கத்தினுள் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட பல கிளைகளையும் கொண்டிருந்தது. ஆசிரியர்களின் தொழிற்சங்கமான கம்யூனிஸட் கட்சியால் கட்டுப்படுத்தப்பட்ட CGT இனுள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தபோதும் அதனுள்ளும் இயங்கிக்கொண்டிருந்தனர். [Lionel Jospin, L'héritier Rebelle", pp. 43-44].

1971 இல் பாரிஸ் கம்யூனின் 100 வது ஆண்டுவிழாவினை OCI ஒழுங்கு செய்திருந்ததோடு, அதற்கு மித்திரோனை பிரதம பேச்சாளராக அழைத்ததுடன், கூட்டத்திற்கான ஒழுங்காளர்களாகவும் இயங்கினர்.

OCI உம் நான்காம் அகிலமும்

1964 ஆம் ஆண்டு ஜொஸ்பன் OCI உடன் தொடர்புகளை ஏற்படுத்தும் போது, OCI நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரெஞ்சு பிரிவாக இருந்தது. அனைத்துலகக் குழுவானது மைக்கல் பப்லோவாலும், ஏர்னஸ்ட் மன்டேலாலும் தலைமை தாங்கப்பட்ட சந்தர்ப்பவாத போக்கான பப்லோவாதத்திற்கு எதிராக ட்ரொட்ஸ்கிசத்தின் பாரம்பரியத்தை பாதுகாக்கும் நோக்குடன் 1953 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அனைத்துலக் குழுவுடனான OCI இன் உடைவும் மித்திரோனுக்கான அவர்களது ஆதரவும் பிரெஞ்சு தொழிலாள வர்க்கத்தை நான்காம் அகிலத்தின் முன்னோக்கிலிருந்து துண்டித்ததுடன், சகல புரட்சிகரமான மாற்றீட்டினையும் இல்லாதொழித்தது. இது தொழிலாள வர்க்கத்ததிடம் இன்று காணப்படும் நெக்கடிக்கான முக்கிய காரணமாகும். தொழிலாள வர்க்கம் போர்க்குணமிக்க போராட்டங்களை தொடர்ச்சியாக செய்தபோதும் தனது அரசியல், சமூக நலன்களை பாதுகாத்துக் கொள்ள இயலாதுள்ளது. இதனை புரிந்துகொள்ள நான்காம் அகிலத்தின் வரலாற்றை சற்று திரும்பிபார்ப்பது அவசியமாகும்.

பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டமானது ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் முன்னோக்கின் அடிப்படையான கொள்கைகள் சம்பந்தப்பட்டதாகும்.

1930 ஆம் ஆண்டுகளில் ட்ரொட்ஸ்கி நான்காம் அகிலத்தை நிறுவுவதற்கான ஆயத்தங்களை செய்தபோது, சமூக ஜனநாயகமான இரண்டாவது அகிலமும், கம்யூனிச அகிலமான மூன்றாம் அகிலமும் எவ்வித எதிர்பார்ப்புமில்லாமல் சீரழிந்துபோயும், சமூகத்தின் முன்னேற்றத்திற்கான ஒரு அமைப்பாக இயங்க இலாயக்கற்றுப் போய்விட்டது என்ற முடிவிற்கு வந்தார். சமூக ஜனநாயகமானது முதலாம் உலக மகா யுத்தத்திலிருந்து முதலாளித்துவத்தின் உண்மையான உதவியாளனாக தன்னைக் காட்டிக்கொண்டது. மூன்றாம் அகிலம், மொஸ்கோவின் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் ஆயுதமாக மாறியதன் மூலம் சர்வதேச தொழிலாள வர்க்கத்தினதும் முக்கியமாக ஜேர்மன் தொழிலாள வர்க்கத்தினதும் பாரதூரமான தோல்விக்கு காரணமாகியது. முக்கியமாக 1933 ஆம் ஆண்டு ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியினது மோசமான அரசியலின் காரணமாக ஜேர்மன் தொழிலாள வர்க்கத்தின் தோல்வியானது கிட்லர் பதவியேற்றபோது அவர்களை இயக்கமற்ற நிலைக்கு இட்டுச்சென்றதுபோது, ட்ரொட்ஸ்கி மூன்றாம் அகிலமானது சோசலிச புரட்சிக்கு இலாயக்கற்றுப்போய்விட்டது என்ற முடிவிற்கு வந்தார்.

அதனால் தொழிலாள வர்க்கத்தின் தலைமை நெருக்கடியானது புதிய தொழிலாள வர்க்க கட்சிகளை, அதாவது நான்காம் அகிலத்தின் பிரிவுகளை கட்டுவதன் மூலமே தீர்க்கப்படலாம் என கூறினார். மேலும் நான்காம் அகிலத்தின் ஸ்தாபக ஆவணமானது 1938 இல் இது தொடர்பாக பின்வருமாறு குறிப்பிடுகின்றது. ''நான்காம் அகிலம் இரண்டாம், மூன்றாம் அகிலங்களின் அதிகாரத்துவத்திற்கு எதிராகவும், அம்ஸ்ரடாம், தீவாரவாத- தொழிற்சங்கவாத அகிலங்களுக்கு எதிராகவும் அவற்றின் ஏனைய மத்தியவாத பிரிவுகளுக்கு எதிராகவும் தனது சமாதானப்படுத்த முடியாத போராட்டத்தை பிரகடனப்படுத்துகின்றது. இவ்வமைப்புக்கள் எதிர்காலத்திற்கான உத்தரவாதமல்ல, மாறாக இவை கடந்தகாலத்தின் அழிகிப்போகும் எச்சசொச்சங்களாகும்''.

பப்பலோவாதமானது இம்முன்னோக்கை நிராகரித்தது. இரண்டாம் உலக மகாயுத்தத்தின் பின்னர் செம்படையால் ஆக்கிரமிக்கப்பட்ட நாடுகளில் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட தேசியமயமாக்கலுக்கு அடிபணிந்து பப்பலோ புறநிலையான நிகழ்வுகளின் அழுத்தங்களின் கீழ் ஸ்ராலினிசம் சுயசீர்திருத்தத்திற்கு உள்ளாகும் என கூறினார். மேலும் சோசலிசத்தின் வளர்ச்சியானது அப்போது கிழக்கு ஐரோப்பாவில் நிகழ்ந்ததுபோல் நூற்றாண்டிற்கு மேலாக ''உருக்குலைந்த தொழிலாளவர்க்க அரசு'' என்ற வடிவத்தை எடுக்கும் எனவும், அதற்கு ஏற்றாற்போல நான்காம் அகிலத்தின் கடமையானது, ஸ்ராலினிசக் கட்சிகளுக்கு எதிராக போராடாது அவர்களின் மீது ஆழுமை செலுத்துவதனூடாக அவர்களுக்குள் இருக்கும் முற்போக்கான பிரிவினரை கண்டுபிடிக்கவேண்டும் அல்லது எம்மை அவர்களுக்குள் கலைத்துவிடவேண்டும் என பப்பலோ தெரிவித்தார்.

பின்னர் இந்நிலைப்பாட்டை பப்பலோவாதம் பலதரப்பட்ட குட்டிமுதலாளித்துவ இயக்கங்களான மாவோவின் விவசாய இராணுவத்திற்கும், பிடல் காஸ்ரோவின் கெரில்லாப்படைக்கும், 60 ஆம் ஆண்டுகளின் பலதரப்பட்ட தேசிய விடுதலை இயக்கங்களுக்கும் மாணவர் இயக்கங்களுக்கும் பிரயோகித்தது. இம்முன்னோக்கின் உள்ளடக்கம் ஒன்றாகவே இருந்தது. அதாவது சோசலிசப் புரட்சிக்கான முக்கிய காரணி தனது சொந்தகொடியின் கீழ் தொழிலாள வர்க்கமல்ல, மாறாக புறநிலை அழுத்தங்களின் கீழ் இடதுபக்கம் செல்லக்கூடிய ஏனைய சமூகசக்திகளாகும்.

பிரெஞ்சு ட்ரொட்ஸ்கிஸ்டுக்கள் இக்கேள்வி தொடர்பாக பிளவடைந்தனர். 1952 ஆம் ஆண்டு பப்பலோவால் கட்டுப்படுத்தப்பட்ட சர்வதேச செயலகத்தின் உதவியுடன் பப்பலோவாத சிறுபான்மையினர் பெரும்பான்மை ட்ரொட்ஸ்கிஸ்டுகளை கட்சியிலுருந்து வெளியேற்றினர். பின்னர் OCI என அழைக்கப்பட்ட பெரும்பான்மையினர் 1953 ஆம் ஆண்டு அனைத்துலகக் குழுவுடன் இணைந்துகொண்டனர். சிறுபான்மையினர் சர்வதேச செயலகத்துடன் (இது பின்னர் ஐக்கிய செயலகம் என அழைக்கபட்டது) இருந்தனர். இதிலிருந்து தற்போது Alan Krivine ஆல் தலைமை தாங்கப்படும் Revolutionary Communist League [LCR] உருவானது. இதைவிட பிரான்சில் மூன்றாவது பிரிவு ஒன்றும் உள்ளது. அது தன்னை ட்ரொட்ஸ்கிஸ்டுக்கள் என கூறிக்கொள்வதுடன், 1938 இல் இருந்தே நான்காம் அகிலத்தில் இணைய மறுப்பதுடன், இன்று Arlette Laguiller ஆல் தலைமை தாங்கப்படும் Lutte Ouvrière [LO- Workers Struggle] ஆகும். இவர்கள் தீவிர தொழிற்சங்கவாதப் போக்கை கொண்டிருப்பதுடன், இன்று ஒரு அரசியல் நிலைப்பாட்டை எடுப்பதற்காக சர்வதேச விவாதங்களை கவனத்துடன் அவதானித்துவருகின்றனர்.

1960 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அனைத்துலகக் குழு பப்பலோவாதத்திற்கு எதிராக நடாத்திய போராட்டத்தை OCI கேள்விக்குள்ளாக்கியது. அதன் ஆரம்பமாக அவர்கள் பப்பலோவாதத்தினால் நான்காம் அகிலம் அழிக்கப்பட்டுவிட்டதாகவும், அது புதிதாகக் கட்டப்பட வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

அனைத்துலக் குழுவின் பிரித்தானிய பிரிவான சோசலிச தொழிலாளர் கழகம் [Socialist Labour League- SLL] இந்நிலைப்பாட்டை மூர்க்கமாக எதிர்த்தது. 1967 ஆம் ஆண்டு அவர்கள் OCI இற்கு ''நான்காம் அகிலம் தமது போராட்டத்தை காட்டிக் கொடுத்த ஸ்ராலினிசத்தினதும், சீர்திருத்தவாதிகள் மீதான வெறுப்புக்களையும், அனுபவங்களையும் கொண்ட இலட்சக்கணக்கான தொழிலாள வர்க்கத்தின் நலன்களை எதிர்காலத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும். நான்காம் அகிலம் உணர்மையுடன் தலைமைக்கான போராட்டத்தில் ஈடுபடவேண்டும். முதலாளித்துவத்திற்கும், அதிகாரத்தவத்திற்கும் எதிரான போராட்டத்திற்கு உள்இழுக்கப்படும் இலட்சக்கணக்கான தொழிலாள வர்க்கத்தின் தலைமையை எடுத்துக்கொள்வதற்கு அதன் காரியாளர்களை தயார் செய்வற்கு திரிபுவாதத்திற்கான போராட்டம் மட்டுமே முக்கிய பங்குவகிக்கும். பப்லோவாதத்திற்கு எதிரான உயிருள்ள ஒரு போராட்டமும், அதன் காரியாளர்களையும் கட்சியினையும் இப்போராட்டத்தின் அடித்தளத்தில் பயிற்றுவிப்பதும் 1952 ஆம் ஆண்டின் பின்னர் நான்காம் அகிலத்தின் உயிர்வாழ்க்கையாகும்'' என எழுதினர். [Trotskyism versus Revisionism, vol. 5, London 1975, pp. 107-114]

1968 இன் பாரியபோராட்டங்களின் முன்னர் OCI இன் ஐயுறவுவாதம் தொடர்பாக சோசலிச தொழிலாளர் கழகம் பின்வருமாறு எச்சரித்தது. ''முக்கியமாக பிரான்சிலும், ஐரோப்பாவிலும் தொழிலாள வர்க்கத்தின் தீவிரமயமாகல் விரைவாக அபிவிருத்தியடைகின்றது. அப்படியான அபிவிருத்தி நிகழும் காலகட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் நிலைமைக்கு புரட்சிகரமான திசையில் அணுகாமல், தமது முன்னாள் தலைமைகளிடம் இருந்து தொழிலாள வர்க்கம் பெற்ற சொந்த அனுபவத்தினுள் கட்டுப்படுத்தப்பட்ட மட்டத்தில் கட்சியும் இயங்கும் அபாயம் எப்போதும் உள்ளது. அதாவது ஆரம்ப குழப்பமான நிலைமை காணப்படும். சுயாதீனமான கட்சிக்கான போராட்டத்தையும், இடைமருவு கோரிக்கைகளையும் திரிபுபடுத்துவது வழக்கமாக 'தொழிலாள வர்க்கத்தை நெருங்குவது, அனைவருடனுமான கூட்டு, போராட்டத்தின் மத்தியில் நிற்றல், காலக்கேடு விதிக்காதுவிடல், உறுதியாக நிற்காதுவிடல்' போன்றவற்றின் திரையின் பின்னாலேயே நிகழ்கின்றது.

இவ் எச்சரிக்கை கவனமெடுக்கப்படாது விடப்பட்டது. 1968 இன் எழுச்சிகளின் போது ஆயிரக்கணக்கான அனுபவமற்ற, புதிய இளம் அங்கத்தவர்கள் OCI இனுள்ளும், அதன் இளைஞர் அமைப்பான AJS இனுள்ளும் அங்கத்தவராகினர். OCI இந்த பிரிவினரின் குழப்பங்களுக்கு அடிபணிந்தது. 1967 அம் ஆண்டு சோசலிச தொழிலாளர் கழகத்தினாலே ஏற்கனவே எச்சரிக்கப்பட்ட ''ஐக்கிய வர்க்க கூட்டு'' OCI சமூகஜனநாயக கட்சியின் அதிகாரத்துவத்திற்கு அடிபணியும் சுலோகமானதுடன், புதிதாக அணிதிரண்டவர்களை சக்திகளை பழைய அதிகாரத்துவ அமைப்பினுள் போகச்செய்தது.

OCI இனது நிலைப்பாடு பப்பலோ வாதத்தினதை விட பாரியளவில் வித்தியாசத்தை கொண்டிருக்கவில்லை. அவர்களிடமிருந்த ஒரேயொரு வித்தியாசம் OCI தனது சமூக ஜனநாயக் கட்சியை நோக்கிய அடிபணிவானால், தமது ஸ்ராலினிச எதிர்ப்பை மேலும் மேலும் சமூக ஜனநாயகத்தின் கம்யூனிச எதிர்ப்பிற்கு அடிபணிய செய்தது. ஆனால் பப்பலோவாதம் ஸ்ராலினிச கட்சிகளை நோக்கிய திருப்பத்தை தொடர்ந்தும் பாதுகாத்தனர்.

1970 ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் OCI சமூக ஜனநாயத்தின் இளம் தலைமுறையினரை உருவாக்கும் ஒரு பிற்களமானது. OCI இன் கல்விக்கூடத்தினூடாக உருவாகிய பலரில் ஜொஸ்பனும் ஒருவாராவர். சோசலிச கட்சியின் வலதுபிரிவில் இருக்கும் பப்பலோவாத இளைஞர் அமைப்பான LCR இன் உறுப்பினரான இருந்த Henri Weber இன் கருத்துப்படி ''சோசலிச கட்சியினுள் நூற்றுக்கணக்கான ட்ரொட்ஸ்கிஸ்டுக்கள் இருக்கின்றனர். இது ஒரு விஷேடமான பாதையாகும். அவர்களை வைத்து ஒரு அமைப்பே கட்டிவிடலாம், எனவும் பாரம்பரிய ட்ரொட்ஸ்கிஸ்டுகளுக்கும், ட்ரொட்ஸ்கிஸ்டுக்கள் என கூறிக்கொள்ளும் பப்பலோவாத OCI போன்றவற்றை ஒன்றிணைத்து அவர் ட்ரொட்ஸ்கிசம் கல்வியூட்டலுக்கான சிறந்த பாடசாலை எனக் கூறினார்''.

ஜொஸ்பனின் ஆதரவாளரான Marisol Touraine ஜொஸ்பன் OCI இன் கோரிக்கையின் பேரில் தான் சோசலிசக் கட்சியில் இணைந்தார் என்ற குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கையில் ''இறுதியில் சமூக ஜனநாயத்தில் சென்று முடியுமானால், உள்புகுவாதம் எதற்காக சிறந்தது'' என கூறினார்.

OCI தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கும் தனது கதவுகளை திறந்துவைத்திருந்தது. முக்கியமாக ஸ்ராலினிச CGT இன் இருந்து வலதுசாரித்தனமாக பிரிந்த Force Ouvrière உடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தது. OCI இன் பல முக்கிய தலைவர்கள் Force Ouvrière அமைப்புகளுள் இயங்கியதுடன், Force Ouvrière இன் தலைவரான André Bergeron இற்கு OCI இன் தலைவரான Pierre Lambert முக்கிய ஆலோசகராக இருந்தார். André Bergeron இற்கு பின்னர் பதவிக்குவந்த Marc Blondel உம் தனது தெரிவிற்கு OCI இற்கு நன்றி தெரிவிக்கவேண்டும் என்றார்.

1980 èOTM OCI தன்னை சோசலிச கட்சியினுள் ஒரளவு கலைத்துக்கொண்டு Parti des Travailleurs [PT-Workers' Party] என்ற பெயருடன் இயங்கியது. ஆனால் இது பாரம்பரிய ட்ரொட்ஸ்கிசத்தை நோக்கி திரும்பியதற்றகான அறிகுறியல்ல. Parti des Travailleurs வலதுசாரி சமூக ஜனநாய வாதிகளின் கூட்டமைப்பானதுடன், பதவிக்கான பிரச்சனைகளாலோ அல்லது வேறு காரணங்களுக்காவோ சோசலிச கட்சியிலிருந்து விலகினர்.

OCI இனது அரசியலின் விளைவு தொழிலாள வர்க்கத்திற்கு மிக பாரதூராமானதாகும். 'இடது கூட்டினதும், பின்னர் வலதுசாரிகளினதும் உதவியுடன் 14 வருட மித்திரோனின் ஆட்சியில் தொழிலாள வர்க்கத்தினது சமூகநலன்கள் அனைத்தும் அழிக்கப்பட்டதுடன், அவர்களுக்கு ஒரு அரசியல் மாற்றீடும் இருக்கவில்லை. மித்திரோன் இறுதியில் Gaullists கள் மீண்டும் ஆட்சிக்கு திரும்ப வழிவகுத்தார்.

1996 இன் பாரிய வேலைநிறுத்தப் போராட்டத்தின் விளைவாக 1997 இல் ஜொஸ்பன் ஆச்சரியப்படத்தக்க வகையில் பிரதமராக தெரிவுசெய்யப்பட்டார். அவர்களுக்கு இடையிடையேயான இடதுசாரி வார்த்தை ஜாலங்களுக்கு மத்தியிலும் அவர்களது பொருளாதார, சமூகக்கொள்கைகள் தமது முன்னையவர்களைவிட வித்தியாசப்படவில்லை. தற்போது ஜொஸ்பனின் ''பெரும்பான்மை இடதுகளின் அரசாங்கம்'' தன்மீது வைக்கப்பட்ட நம்பிக்கைகள் அனைத்தையும் இழக்கச்செய்து விட்டது. முக்கியமாக கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆதரவை இழந்துவருகின்றது. தனது எழுச்சியான சிறந்த காலங்களில் 20% வாக்குக்களை பெற்றவர்கள் தற்போது 7-8% மான வாக்குகளை பெற்று பசுமைக்கட்சியால் மேவிச்செல்லப்படும் நிலையில் உள்ளது.

ட்ரொட்ஸ்கிசத்தின் வரலாறு தொடர்பான பல கட்டுரைகளுடன் பிரான்சின் தொலைத்தொடர்பு சாதனங்களில் விவாதிக்கப்படும் இவ்விடயம் தற்போதைய பிரான்சின் அரசியல் நிலைமைகளுடன் தொடர்புபட்டது. ஜொஸ்பனின் அரசாங்கத்தின் நெருக்கடியின் மத்தியிலும் முதலாளித்துவம் ட்ரொட்ஸ்கிஸ்டுக்கள் என கூறிக்கொள்ளும் Krivine இன் LCR இடமிருந்தும் Laguiller இன் Lutte Ouvrière இடமிருந்தும் புதிய ஆரதவை பெற்றுக்கொள்ளமுனைகின்றது. 1953 ஆம் ஆண்டு நான்காம் அகிலத்தின் முன்னோக்கிலிருந்து விட்டுச்சென்ற பப்பலோவாத OCI உடனான அனுபவங்களில் முதலாளித்துவம் அதிருப்தி அடைந்துள்ளது. தற்போது Lutte Ouvrière தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் நெருங்கி இணைந்துகொள்ள முனைகின்றது, LCR கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஒன்றிணைய விரும்புகின்றது.

தொழிலாள வர்க்கத்திற்கு இவ்விரு கட்சிகளும் எந்தவொரு முன்னோக்கையும் வழங்கவில்லை. எனவே 1971 ஆம் ஆண்டு OCI கைவிட்ட முன்னோக்கான நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் பிரிவை கட்டுவதை நோக்கி திரும்புவது அவசியமாகின்றது.

பி.கு: Joseph Fouché என்பவர் Jacobin வாதியான இவர் முன்னாள் அரசர்களினதும், அதிகாரிகளினதும் கொடுங்கோல் ஆட்சியின் முக்கிய பாதுகாவலராகும். அவர் Jacobin இன் கொடுங்கோல் ஆட்சியை தூக்கிவீசுவதற்கான வலதுசாரி சதி ஒன்றினை ஒழுங்குசெய்தார். பின்னர் முதலாளித்துவ ஆட்சியின் பொலிஸ் அதிகாரியாக 1794-1799 வரை கடமையாற்றி பின்னர் நெப்போலியன் போனபாட்டின் கீழும் இதே பதவியுடன் பணிபுரிந்தார். இவர் கொடுமையான, நேர்மையற்ற, கொள்கைகளற்ற ஒரு அரசியல் பிரதிநிதித்துவத்திற்கான அடையாளமாகும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved