World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Britain: 20 years since the year-long miners' strike

பிரிட்டன்: சுரங்கத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தின் 20 ஆண்டுகளின் பின்னர்

முதல் பகுதி

By Chris Marsden and Julie Hyland
5 March 2004

Back to screen version

1984-85 ஆண்டு நடைபெற்ற பிரிட்டிஷ் சுரங்கத் தொழிலாளர் வேலைநிறுத்தம் பற்றிய இரண்டு பகுதி கட்டுரை தொடரில், முதல் பகுதியை கீழே வெளியிடுகின்றோம். இதன் முடிவுப்பகுதி அடுத்து வெளியிடப்படும்.

1984-85ன் ஓராண்டுகால சுரங்கத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம், பிரிட்டனின் அரசியல் வாழ்வில் ஒரு முக்கிய காலகட்ட பிரிவை குறிக்கிறது. போருக்குப்பின் தொழிலாள வர்க்கத்திற்கு நேர்ந்த இந்த தோல்வியானது மிக மோசமானது என்பது மட்டுமின்றி, அதனுடைய விளைவுகள் இன்றும் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன.

இந்த 20ம் நிறைவு ஆண்டை பற்றிய ஆவணங்களுக்கோ அல்லது கட்டுரைகளுக்கோ எவ்வித குறைவும் இல்லை. ஆனால் இவற்றில் பெரும்பாலனவை, இந்நிகழ்ச்சியிலிருந்து பெறவேண்டிய மத்திய படிப்பனைகளை பற்றி ஆராயும் தீவிர முயற்சிகள் எதையும் மேற்கொள்ளவில்லை. பொதுவாக அவை பின்வரும் இரண்டு முகாம்களில் ஏதேனும் ஒன்றினை பிரதிநிதித்துவ படுத்துகின்றது.

முதலாவதாக, இந்த சுரங்க தொழிலாளர்கள் வேலைநிறுத்தம், கடந்தகாலத்திற்குரிய மனிதர்களால் ஓர் இழக்கப்பட்டுவிட்ட காரணத்திற்காக போராடியதால் தவிர்க்கமுடியாத தோல்வியைத்தான் சந்திக்கும் என்று கூறியவர்கள் ஒருபுறம் இருந்தனர். இந்த வாதத்தின்படி, மார்கரட் தாட்சரின் அரசாங்கம் சிலநேரம் சர்வாதிகாரப் போக்கு, ஆணவம் இவற்றைக் கொண்டிருந்தாலும் எதிர்காலத்தின் நிலைப்பாட்டைத்தான் பிரதிபலித்தது. "நாட்டைத் தன் பிடிக்குள் கொண்டிருந்த", காலங்கடந்துவிட்ட நடைமுறை வழக்கங்களின் கோட்டையாக நடமாடிவந்த தொழிற்சங்கங்களின் அதிகாரத்தை குறைப்பதன் மூலம் பிரிட்டனுடைய பொருளாதாரத்தை நவீனப்படுத்துவதில் அது தீவிரத்தை கொண்டிருந்தது. ஒருவருக்கு தனிப்பட்ட சுரங்கத் தொழிலாளிகளின் தலைவிதியை பற்றி பரிவு உணர்வு இருந்தபோதிலும், இது சரியான முன்னோக்கில் காட்டப்படவேண்டும். இதன்பின்னர் அரசாங்கக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதும், தனியார் மூலதனம் ஊக்குவிக்கப்பட்டதையும் அடுத்து எழுந்த நுகர்வோரின் உயர்நிலையையும், புதிய பொருளாதாரத்தின் வளர்ச்சியையும் பின்னர் பதவிக்கு வந்த தொழிற்கட்சி அரசாங்கமே ஏற்றுக்கொண்டது எனவும் இவர்கள் வாதம் தொடர்கிறது. இதுதான் பழைமைவாத சார்பு மற்றும் தொழிற்கட்சி சார்பான செய்தி ஊடகத்தின் பார்வையாகும்.

இரண்டாவதாக, தொழிற் கட்சியினது இடதுசாரியினரும் அல்லது பல சிறிய இடது குழுக்கள் 1984 நிகழ்ச்சிகளை ஏக்கத்துடன் நினைத்து, செய்யப்பட்ட சில தவறுகளை சுட்டிக்காட்டி, இதை அடிப்படையில் "ஒரு அரிய பெருமை வாய்ந்த" நிகழ்ச்சி என கருதி, வருங்காலத்தில் வர இருக்கும் வர்க்கப் போராட்டங்களுக்கு இது ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்று கூறுகின்றனர்.

வலுவாக இருப்பதாக தோன்றும் முதல் வாதத்தின் வலிமை, பின்னர் நடந்த நிகழ்ச்சிகளின் பின்னணியில் உறுதிசெய்யப்பட்டதுபோல் தோன்றும். மார்கரட் தாட்சருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள வலைத் தளம் ஒன்று "1984ம் ஆண்டு முழுவதும் நடைபெற்ற வேலைநிறுத்தும் பழைய தொழிற்சங்க அமைப்பின் கடைசி மூச்சு எனக் கருதப்படுகிறது; ஏனென்றால் அந்த ஆண்டிற்கு பின்னர் பெரிய அளவிலான தொழிற்துறை மோதல்கள் ஏதும் பிரிட்டனில் தோன்றவில்லை'' என குறிப்பிடுகின்றது.

வலதுசாரி அரசியல் மற்றும் பொருளாதார குழுக்களின் ஏற்றத்தை இருபது ஆண்டுகள் அனுமதித்து, அதற்காக உழைக்கும் மக்கள் மிகக் கசப்பான விளவுகளை சந்திக்கவேண்டி இருந்த நிலைக்கான காரணத்தை தீவிரமாக ஆராயதவர்களால் இதற்கு விடை காணமுடியாது.

சுரங்கத்தொழிலாளர்களுக்கே இந்த வேலைநிறுத்ததின் தாக்கம் பெரும் அழிவைக் கொடுத்துள்ளது.

இங்கிலாந்தில் வேலைநிறுத்தம் ஆரம்பித்தபோது 170 சுரங்கங்களில் 181,000 பேர் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்ததுடன், 90 மில்லியன் தொன்கள் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டது. இன்று 6,500 பேருக்கு மட்டும் வேலைகொடுக்கும் 15 சுரங்கங்கள்தான் இருக்கின்றன. இன்னும் கிட்டத்தட்ட 3,000 பேர் மேற்பகுதி சுரங்கத்தில்தான் ஈடுபட்டுள்ளனர். ஒருகாலத்தில் சுரங்க தொழிலினால் பிரசித்தி பெற்ற டர்ஹம், லங்கஷைர் போன்ற பகுதிகள் இன்று சுரங்க தொழில்கள் இன்றி உள்ளன. தேசிய சுரங்க தொழிலாளர் ஒன்றியம் (National Union of Mineworkers -NUM) வேலையில் இருக்கும் ஒரு சில ஆயிரம் உறுப்பினர்களை மட்டுமே கொண்ட ஒரு பின்பிரிவாகத்தான் உள்ளது.

வேலைநிறுத்தத்தின்போது, தொழிலாளர்கள் பட்ட கஷ்டங்கள் கிட்டத்தட்ட முன்கண்டிராத தன்மையை கொண்டிருந்தன. 20,000 சுரங்க தொழிலாளிகள் காயமுற்றிருந்தனர் அல்லது மருத்துவ மனைகளில் சேர்க்கப்பட்டிருந்தனர், 13,000 பேர் கைது செய்யப்பட்டனர், 200 பேர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர், இரண்டு பேர் மறியலின் போது கொல்லப்பட்டனர், குளிர்காலத்திற்காக நிலக்கரி தோண்டியவர்களில் மூன்று பேர் இறந்து போயினர், இறுதியாக 966 பேர் வேலையிலிருந்து நீக்கப்பட்டனர்.

பிரிட்டனிலேயே இதுவரை காணப்பட்டிராத அடக்குமுறை உத்திகள் கையாளப்பட்டு, சுரங்க தொழிலாளர்கள் போலீசாரால் மிருகத்தனமாக தாக்கப்பட்டனர். குதிரைப்படை அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டோர்மீதும், சுரங்கப் பகுதி மக்கள் வாழும் பகுதிகள் வழியேயும் பாய்ந்து தாக்கினர். கவசங்களுடனும், ஆயுதங்களுடனும் இருந்த கலகப்படை போலீசார் ஒரு தேசிய பணிக்குழுவைத் தோற்றுவித்து, இராணுவ முறையிலான தாக்குதல்களை நடத்தினர். சுரங்க தொழிலாளர்கள் நாடு முழுவதும் தடையின்றிச் செல்வது தடுக்கப்பட்டது; சிறப்பு நீதிமன்றங்கள் பெரிய அளவிலான கைது செய்யப்பட்டவர்கள்மீது விசாரணை நடத்த தோற்றுவிக்கப்பட்டன.

தேசிய சுரங்க தொழிலாளர் ஒன்றியத்திற்கு எதிராக சட்டமுறையிலான தாக்குதல் நடத்தப்பட்டது; அதன் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கு நடவடிக்கைகள் அடிக்கடி எடுக்கப்பட்டன. சக்திவாய்ந்த வர்த்தக நலன்களும், அரசாங்கத்தின் பிரிவினர் சிலவும் இணைந்து மிகப்பெரிய முறையில் வேலைநிறுத்தத்தை முறியடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, ஜனநாயக சுரங்க தொழிலாளர் தொழிற்சங்கம் என்ற மாற்று தொழிற்சங்கத்தை ஏற்படுத்தியதில் முடிவுற்றது.

வேலைநிறுத்தத்தின் தோல்விக்கு பின்னர் நடந்தது இதைவிட மோசமானது. சுரங்கங்கள் மூடப்பட்ட பின்னர், முழு சமூகங்களும் மிகவறிய ஏழ்மையில் தள்ளப்பட்டனர். பல இளைஞர்கள் இருக்கும் இடங்களைவிட்டு வேலைதேட நீங்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர். மதிப்பீடுகளின்படி, அப்பகுதிகளிலேயே இருந்தவர்களில் மூன்று வீடுகளுக்கு ஒருவர் என்ற வீதத்தில் மோசமான போதைப் பொருளுக்கு அடிமையாகும் பிரச்சனையினால் தாக்குண்டனர்.

முன்னைய சுரங்க தொழில் நடந்த இடங்களில் புதிதான முயற்சிகளை கையாண்டு வாழ்வை புதுப்பிக்க கொள்ளப்பட்ட முயற்சிகள் இன்றைய பொருளாதாரத்தின் தன்மையான, சர்வதேச நிறுவனங்கள் எளிதான உழைப்பையும், அதிகமான வரிச்சலுகைகளையும் கொண்ட விதத்தில் ஆதிக்கம் செலுத்தும் நிலைமையை உருவாக்கின. இதன் விளைவாக, நிலச்சுரங்க சமூக அமைப்பு கூறியுள்ளபடி: "நிறுவனங்கள் கடுமையாகவும், தேர்ந்தெடுக்கும் முறையிலும், குறைந்த ஊதியத்திற்கு வளைந்து கொடுக்கும் முறையில் வேலை செய்யும் தொழிலாளரை, அதிலும் அடிக்கடி தொழிற்சங்க செல்வாக்கு இல்லாத வேலையிடப்பகுதிகளிலிருந்து வேலைக்கு அமர்த்தினர். ஆலைகள் திறந்த பின்னர் விரைவில் மூடப்பட்டுவிட்டதால், வேலைகள் பெரும்பாலும் பகுதி நேர அல்லது சில நேரங்களில் தற்காலிகமாகவும்தான் இருந்தன.

இன்னும் பொதுவாக சுரங்க தொழிலாளர்களின் தோல்வியானது, தொழிற்சங்கங்களும் தொழிற்கட்சியும் தொழிலாள வர்க்கத்தின் சமூகநலன்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கைகள் எதுவும் எடுக்காமல், இறுதியாக கைவிடப்படுவதற்கான சமிக்கையானது. வேறு வேலை நிறுத்தங்கள் நடந்தபோதிலும் அவையெல்லாம் இதற்கு ஒப்பான அளவைக் கொண்டிருக்கவில்லை. 1979ன் "குளிர்கால அதிருப்தி" என்று கூறப்பட்ட, 1970களில் மிக அதிகபட்சம் தொழிற்துறை வேலை நிறுத்தங்களினால் இழக்கப்பட்ட நாட்கள் 29.4 மில்லியனாக இருந்தது. அந்த பத்தாண்டு காலத்தில் சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் இழக்கப்பட்ட எண்ணிக்கை இன்னும் 12.9 மில்லியனாக இருந்தது. 1980 களில் இந்தச் சராசரி 7.2 மில்லியனாயிற்று; இது ஒருவேளை சுரங்கத் தொழிலாளர் வேலை நிறுத்தத்தையே கணக்கில் எடுத்துக்கொண்டு கொடுக்கப்பட்ட ஒழுங்கமைக்கப்படாத எண்ணிக்கையாக இருக்கலாம்; ஏனெனில் அந்த ஆண்டு மட்டும் அதில் 27 மில்லியன் உழைப்பு நாட்கள் இழக்கப்பட்டிருந்தன.

இதற்கு அடுத்த பத்தாண்டு காலத்தில், ஒவ்வொரு ஆண்டும் இழக்கப்பட்ட சராசரி உழைக்கும் நாட்கள் 660,000 மட்டுமே; இவற்றில், 1998ம் ஆண்டின் ஆகக்குறைந்த எண்ணிக்கையான 235,000, 205 வேலைநிறுத்தங்களில் மட்டுமே, 1984ல் இது 1,221 வேலைநிறுத்தங்களால் இழக்கப்பட்டது.

தொழிற்சங்க உறுப்பினர் எண்ணிக்கை இப்பொழுது, 1984ல் இருந்த 11 மில்லியனுடன் ஒப்பிடும்பொழுது ஏழு மில்லியனைவிடக் குறைவாக உள்ளது. தனியார் துறையில் 19 சதவிகிதத்திற்கும் குறைவான அளவுதான் தொழிலாளர்கள் ஒரு தொழிற்சங்கத்தில் உறுப்பினராக இருக்கின்றனர்; 18-29 வயதுப்பிரிவில் ஐந்தில் ஒருவர்தான் தொழிற்சங்க உறுப்பினர். இது தனியார் துறையில் 10 சதவிகிதத்திற்கும் குறைவு ஆகும்.

இதுவும் கூட, முதலாளிகளுடன் வெற்றிகரமாக போராடுவற்கு தொழிலாள வர்க்கத்திற்கு இருக்கவேண்டிய தகமை மீதான தாக்கத்தைப்பற்றி ஆராயத் தொடங்கவில்லை. ஏனென்றால் இன்றைய தொழிற்சங்கங்கள், தங்களுடைய உறுப்பினர்களுடைய நலன்களுக்கு பாதுகாப்பாக இருக்கவேண்டிய அமைப்புக்கள் என்பதற்குப் பதிலாக, நிர்வாகத்தின் காவற்படை போலத்தான் செயல்படுகின்றன.

தாட்சரின் பதவிக்காலம் முழுவதும், அதன் பின்னர் அந்த அம்மையாருக்குப் பின் பதவிக்கு வந்த ஜோன் மேஜர் காலத்திலும், தொழிற்சங்கங்கள் செல்வம் ஏழைகளிடமிருந்து பணக்காரர்களுக்கு செல்வதை எதிர்ப்பதற்கு எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. 1997ல் டொனி பிளேயர் தலைமையில் தொழிற் கட்சி ஆட்சிக்கு வந்தபின், அது தாட்சரின் பெருவர்த்தக சார்புடைய கொள்கைகளை தொழிற்சங்க கூட்டுகளுடைய ஒத்துழைப்புடன் தொடர்ந்து செயல்படுத்தியது.

தொழிற் கட்சி, ஆட்சிப் பொறுப்பை ஏற்ற முதல் இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே, மக்கட்தொகையின் உயர்மட்ட 10 சதவிகித செல்வந்தர்கள், தாட்சரின் உச்சக்கட்டமான 1988ல் பதிவுசெய்யப்பட்டதைவிட அதிகமாக தேசிய வருமானத்தில் தங்களுடைய மிக உயர்ந்த பங்கை பதிவு செய்தனர். இன்று வருமான சமத்துவமின்மை தாட்சர் ஆட்சியில் இருந்ததை விட மிக அதிக அளவில் உள்ளது.

உழைக்கும் நிலைமைகளின் மீதான தாக்கத்தை பொறுத்தவரை, இது 2002ம் ஆண்டு வேலை தொடர்புடைய அழுத்தத்தை ஒட்டி விளையும் உடல்நலக்குறைவு 33 மில்லியனாகவும், 1995ல் 18 மில்லியனாகவும் இருந்தது. மேலும் தொழிற்துறை நடவடிக்கைகளினால் இழக்கப்பட்ட நாட்கள் முற்றிலும் 60 மடங்கு அதிகரித்துவிட்டது (550,000).

எனவே, சுரங்கத் தொழிலாளர் வேலைநிறுத்தம் பற்றிய ஆய்வு வெறும் வரலாற்று நலன்களுக்காக அல்லாது, இக்காலகட்டத்திற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததுமாகும்.

பூகோளமயமாக்கலின் தாக்கம்

1984ல் தாட்சர் பெற்ற வெற்றியின் அளவை, அதற்கு முந்தைய ஆண்டுகளின் தன்மையை ஆராயாமல் உணரப்படமுடியாது. உண்மையில், ஓராண்டு வேலைநிறுத்தும், தாட்சர், தேசிய சுரங்க தொழிலாளர் ஒன்றிய (NUM) தலைவர் ஆர்தர் ஸ்கார்கிள் என்ற இரண்டு அரக்க உள்ளங்களின் பலப்பரீட்சையின் விளைவாக எழுந்த பூசல் என்றுகூட பொதுவாக சித்திரித்துக் காட்டப்படுகிறது. இருவருக்கும் இடையே முதலில் 1972ல் தொடங்கிய ஒரு முரண்பாட்டின் இறுதிக்கணக்கை தீர்க்க வேண்டும் என்று இருவரும் விரும்பினர். ஸ்கார்கிள், 1972ல் Saltley Gate Coke Depot என்ற இடத்தில் 1974ல் சுரங்க தொழிலாளர்கள் 27 சதவிகிதம் அதிக ஊதியத்தை பெறுவதற்காக ஒரு மறியலை நடத்தினார். அந்த ஆண்டு, ஸ்கார்கிள் தேசிய சுரங்க தொழிலாளர் ஒன்றியத்தின் யோர்க்ஷைர் தலைவராக இருந்தபோது, சுரங்க தொழிலாளர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டபோது, பழமைவாத அரசாங்கத்தின் எட்வார்ட் ஹீத்தை, "நாட்டை ஆள்வது யார், அரசாங்கமா, தொழிற்சங்கங்களா?" என்று கேட்க வைத்தது அதன் முடிவில் எட்வர்ட் ஹீத் அரசாங்கம் பதவியைவிட்டு விலக நேர்ந்து சிறுபான்மை தொழிற்கட்சி அரசிற்கு ஆட்சியை கொடுத்தது.

பின்னர் தாட்சர் கூறியிருந்த "உள்விரோதிகள்" அதாவது, சுரங்க தொழிலாளர்களுக்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் பயந்து ஹீத் பின்வாங்கியிருக்கக் கூடாது என்று கூறிய பழமைவாத வலதுசாரிக் குழு கொடுத்த ஊக்கத்தால், தாட்சர் தலைமைப்பதவிக்கு வரத்தொடங்கினார். ஆனால் இந்த டோரி கட்சிக்குள் ஏற்பட்ட மாற்றம் இன்னும் கூடுதலான அடிப்படை பொருளாதார, அரசியல் போக்குகளோடு பிணைந்து இருந்தது.

ஹீத் அரசாங்கத்தை பதவியிலிருந்து கீழிறக்குதல் உலகம் முழுவதும் முதலாளித்துவ வர்க்கத்தின் அமைப்பு முறையின் நெருக்கடியினால் பாதிக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் நடந்தது. 1968-75 இற்கு இடையிலான ஆண்டுகள், பிரெட்டன் வூட்ஸ் அமைப்பு (Bretton Woods syste) முறையிலான டொலர்-தங்க மாற்றுமுறை பொறிந்ததால் உருவாகிய சர்வதேச பொருளாதார நெருக்கடியின் விளைவாக, கூடியளவு புரட்சிகரமான வடிவமெடுத்த வரிசைக்கிரமமான வர்க்கப் போராட்டங்களை கண்டன.

ஆளுவர்க்கம் இந்தப் பரபரப்பான காலகட்டத்தில் தப்பித்தாலும், இலாப விகிதங்கள் தொடர்ந்து சரிந்தவண்ணம் இருந்தன. இதன் விளைவாக ஒரு பாரியளவிலான தொழிலாள வர்க்கம் மீதானதும் மற்றும் சிக்கலான முறையிலான சலுகைகளை கொண்ட சமூகநல அரசின் மீதான தாக்குதலாலுமே முதலாளித்துவ அமைப்பை பாதுகாக்கலாம் என ஆதிக்கம் செலுத்தும் முதலாளித்துவ பிரிவுகள் முடிவிற்கு வந்தன. தாட்சரும், அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் றீகனும் இந்த வர்க்க சமரச அரசியிலில் இருந்து நேரடி வர்க்க மோதலுக்கு தங்கள் கொள்கைகளை மாற்ற தலைப்பட்டனர்.

புதிதாக எழுச்சியுற்ற ஆதிக்கம் செலுத்தும் சக்திகளின் பிரதிநிதியாக தாட்சர் இருந்தார். இலாபவிகித சரிவை எதிர்த்து நிற்கும் பெரு நிறுவனங்கள், பூகோள முதலீட்டிலும், உற்பத்தி சர்வதேச முறையில் செய்யப்படுதலையும் மேற்கொண்டனர். இந்த மூலோபாயத்திற்காக, அவர்கள் தொழிற்துறையில் முன்னேறிய நாடுகளின் பொருளாதாரங்கள் மீதுள்ள கட்டுப்பாடுகள் அகற்றப்படவேண்டும், வரிவிகிதங்கள் குறைக்கப்படவேண்டும், நலன்புரி வழங்கப்படுதலை அழிக்கப்படவேண்டும் என்று வாதிட்டனர். "அரசாங்கத்தின் எல்லைகளை பின்னே கொண்டு செல்லுதல்" என்ற கோஷத்தின் அடிப்படையில், பிரிட்டன் பூகோளரீதியாக போட்டியிடும் வண்ணம் தாட்சர் பிரிட்டனில் பொருளாதார, சமூக மறுசீரமைப்புக்களை மாற்றத்தொடங்கினார். இதில், "அறிவுபூர்வமான செயல்பாடு" என்ற முறையில் முன்னர் தேசியமயமாக்கப்பட்டிருந்த தொழில்களை கைவிடுதல் அல்லது தனியார்மயமாக்கல், வரிகளை பெரிதும் குறைத்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, பொருளாதாரத்தின் முக்கிய பிரிவுகள் பெருநிறுவன முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்டன.

1974ம் ஆண்டிற்குப் பின்னர், பழமைவாத கட்சியினர் எதிர்க்கட்சியில் 5 ஆண்டுகள் மட்டுமே இருந்து, தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகப் பெரும் தாக்குதலுக்குத் தயார் செய்தனர். 1979ல் தாட்சர் அதிகாரத்திற்கு வருவதற்கு சற்று முன்பு, நிக்கோலஸ் ரிட்லி என்பவர், ஒரு திட்டத்தை விரிவாக தயாரித்து சுரங்க தொழிலாளர்கள் மீண்டும் தொழிற்துறை மோதலில் ஈடுபட்டால் அதை எப்படி தோற்கடிப்பது என்றும், "மறியலில் ஈடுபடுவதற்கு எதிரான சட்டத்தை செயல்படுத்த நவீன கருவிகள் கொடுக்கப்பட்ட பாரியளவிலான சுற்றிவரும் போலீஸ் வேண்டும் என்பது உட்பட" விவரங்களை விளக்கியிருந்தார்.

ஸ்கார்கிளும் 1970களில் ஆரம்ப காலகட்டத்தை 1984-85ன் வேலைநிறுத்திற்கான அடிப்படை வடிவமைப்பாக கண்டதுடன், தாட்சர் போலன்றி, தான் கருதியிருந்த மிகப்பெரிய வெற்றியை மீண்டும் காண்போம் என்று நினைத்திருந்தார்.

ஒரு புரட்சிகரமானவர் என்று வலதுசாரியினர் கிளப்பிய கட்டுக்கதைக்கு அப்பால், ஸ்கார்கிள் வாழ்நாள் முழுவதும் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளரும், ஒரு தேசிய சீர்திருத்தவாத திட்டத்தின் பாதுகாவலருமாவார். சோசலிசத்தைப்பற்றி அவர் ஏதாவது பேசுகிறார் என்றால், அது பின்னால் மிகத்தொலைவிற்குரிய முன்னோக்காகும். இதற்கிடையில் தேசிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ள ஒரு பொருளாதாரம், இறக்குமதி கட்டுப்பாடுகள், உதவித்தொகைகள் வழங்கப்படுதல், பிரிட்டனுடைய தேசியமயமாக்கப்பட்ட சுரங்க தொழில் பாதுகாப்பை அடிப்படையாக கொண்டிருத்தல் போன்றதே அவருக்கு தேவையானது. இதுதான் "நிலக்கரிக்கான திட்டம்" என்ற முறையில் தொழிற்கட்சியாலும் தொழிற்சங்க கூட்டமைப்பாலும் (TUC) பழமைவாத கட்சிக்கு எதிராக அவர் போராட்டத்தில் ஈடுபடச்செய்த திட்டமாகும். ஆனால் 1984ல், ஆளும் வர்க்கம் இனி அத்தகைய கொள்கையை பொறுத்துக்கொள்ளாது என்பதும், அத்தகைய திட்டத்திற்கு குறிப்பிடத்தக்க ஆதரவுத்தளம் இல்லை என்பதும், அவரே ஒரு பகுதியாக இருந்திருந்த தொழிலாளர் அதிகாரத்துவத்திலும் அதே கருத்துத்தான் உள்ளது என்பதும்தான் நிரூபிக்கப்பட்டுவிட்டது.

தாட்சரிசத்திற்கு எந்த வழிவகை ஏற்றம் கொடுத்ததோ, அது ஏற்கனவே தொழிற்கட்சியின் தேசிய சீர்திருத்த திட்டத்தையும் மதிப்புக்குறைவிற்கு உட்படுத்திவிட்டது. வரலாற்று ரீதியாக தொழிற் கட்சியும், தொழிற்சங்கங்களும் நிர்வாகங்களிடமிருந்து சிற்சில சலுகைகளையும், பாராளுமன்ற வழிமுறைகளால் சமூக சீர்த்திருத்தங்களை சமாதானமான முறையில் பெறவேண்டும் என்றே போராடி வந்தன. அதிகாரத்துவம் சோசலிசம் இறுதியாக வருவதற்கு இது நல்ல பாதை என்ற உண்மையான நம்பிக்கையில் இவற்றில் சிலவற்றை செய்யாமல், தொழிலாள வர்க்கம் புரட்சிகரமான அறைகூவலில் இருந்து சலுகைகள் மிகுந்த இலாப முறையில் தங்கியுள்ள கூட்டத்தை பாதுகாக்கும் பொருட்டு செய்ததாகும். அவர்களுடைய அடிப்படை விசுவாசம் எப்பொழுதுமே முதலாளித்துவ அமைப்புத்தான்; ஆனால் இதில் அதிக ஊதியங்களுக்கும், சிறந்த வேலைநிலைமைக்கும் வாய்ப்புக்கள் இருப்பதுடன் இலவச சுகாதார பாதுகாப்பு, கல்வி முதலியவற்றுக்கான சாத்தியங்களும் உள்ளன என்றும் அவர்களால் வெற்றிகரமாக வாதிட முடிந்தது.

எழுபதுகளின் நடுப்பகுதியில் பூகோளமயமாக்கப்பட்ட உற்பத்தி 1980களில் வேகமடைந்ததுடன், இது தேசிய சீர்திருத்த கொள்கையை திவாலாக்கிவிட்டது. பொருளாதார வாழ்வின் ஒவ்வொரு கூறுபாடுகளான உற்பத்திமுறை, பங்கீட்டுமுறை மற்றும் பரிமாற்றுதல் ஆகியவை சர்வதேச அளவில் தொழிற் கட்சியின் மரபு வழியான வர்க்கங்களுக்கிடையே சமூக, அரசியல் சலுகைகள் வழங்குதலுடன் பொருந்தாமல் போய்விட்டது. மாறாக, சுரங்க தொழிலாளர்களின் உதவியால், 1974ம் ஆண்டு பதவிக்கு வந்த தொழிற் கட்சி அரசாங்கம், சர்வதேச நாணய நிதியம் கட்டளையிடும் கடுஞ்சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்தி ஊதிய உயர்வுகளையும் தடுத்துவிட்டது. இவ்விதத்தில் தொழிற் கட்சிதான் முதலாளித்துவம் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக தாக்குதல் நடத்துவதற்கு முக்கியமான நேரத்தில் மூச்சு வாங்குவதற்கான கால அவகாசத்தை கொடுத்து, பின்பு 18 ஆண்டுகள் பழமைவாத ஆட்சி நடத்தப்படுவதற்கு வழிவகுத்தது.

எந்தக் காலகட்டத்திலும் தொழிற்சங்க கூட்டமைப்பு, ஹரால்ட் வில்சனுக்கும் பின்னர் ஜேம்ஸ் கல்லகன் தலைமையிலான தொழிற்கட்சி அரசாங்கங்களுக்கும் எவ்வித மாற்றையும் முன்வைக்கவில்லை. அது வெறுமனே அதன் பாதையில் சிறிய மாறுதல்களைத்தான் கொண்டுவந்தது. இதன் விளைவாக, 1979ல் குளிர்கால அதிருப்தி எனப்பட்ட தொழிற்துறை மோதல்களில் மிக ஆழ்ந்த காலத்தில், பிரிட்டனில் அதுவரை காணாத அதிதீவிர வலதுசாரி அரசாங்கத்தை அதிகாரத்திற்கு கொண்டுவருவதில் உண்மையில் வெற்றியை கண்டது.

ஸ்கார்கிளுடைய முன்னோக்கு, தாட்சர் பதவிக்கு வருவதற்கு தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்க கூட்டமைப்பு ஆகியவை வகித்த பங்கை மூடிமறைத்ததுடன், தொடர்ந்து அதிகாரத்துவம் வலதுபுறம் இடம் நகர்ந்ததற்கு எதிர்நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளவில்லை. 1983ல் இரண்டாம் முறையாக தாட்சர் பதவிக்கு வந்த பிறகு, தொழிற்கட்சியின் வலதுசாரித் தலைமை முதலாளித்துவ கட்டளையிடும் பொருளாதார, அரசியல் மரபு வழிவகைகளை முற்றிலுமாக மாற்றத்துடன் எடுத்துக்கொள்ளவேண்டும் என்ற முடிவிற்கு வந்துவிட்டது. தன்னுடைய பங்கிற்கு தேசிய நிலக்கரி தொழிற்சங்கம் அரசாங்கத்திற்கு எதிரான ஒவ்வொரு போராட்டத்திலிருந்தும் ஒதுங்கி நின்றும், காட்டிக்கொடுத்தும் இருந்ததால், தொழிற்சங்க விரோத சட்டங்களைக்கூட பெயரளவிற்கு எதிர்க்கும் கருத்தையும் கூட கைவிட்டது.

தொடரும்......


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved