World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India's elections: the decline and decay of the Congress Party

இந்தியத் தேர்தல்கள்: காங்கிரஸ் கட்சியின் சீரழிவும் சரிவும்

By Deepal Jayasekera
23 April 2004

Back to screen version

இந்தியாவில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் தேர்தல்களில், ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு (பிஜேபி) பிரதான எதிர் கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ், தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் பாரம்பரிய கட்சி ஆகும், இது பத்தொன்பதாம் மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளின் காலனித்துவ எதிர்ப்பு போராட்டங்களில் மூலங்களை கொண்டுள்ளது.

1947ல் பெயரளவிலான சுதந்திரத்திற்கு பின்னர், தேசிய அளவிலும் மாநிலங்கள் அளவிலும் காங்கிரஸ் இந்திய அரசியல் மேடையில் மேலாதிக்கம் செய்து வந்தது. 1996ல் அது அகற்றப்படுகின்றவரை, அக்கட்சியானது தேசிய அளவில் தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் நீங்கலாக பதவியில் இருந்து வந்தது. இன்று, அக்கட்சியானது அதன் முந்தையதின் நிழலாகவே இருக்கிறது. வெகுஜனங்களின் நலன்களுக்காக நிற்பதாக அது கூறிக் கொள்வதெல்லாம் சுக்குநூறாகிவிட்டது மற்றும் அதன் ஆதரவுத் தளங்கள் விரைந்து சுருங்கி வருகின்றன.

கடந்த 1999 தேர்தலில், காங்கிரசானது இந்து மேலாதிக்கவாத பிஜேபியால் மறைக்கப்பட்டது, அது பாராளுமன்றத்தின் கீழ் சபை அல்லது மக்களவையின் 545 இருக்கைகளில் சுமார் 112 இருக்கைகளை வென்றது. பிஜேபியானது 182 இருக்கைகளுடன் பாராளுமன்ற பெரும்பான்மை பெறத் தவறிய வேளை, பல சிறு கட்சிகளின் உதவியுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) எனும் கூட்டணியை அதனால் அமைக்க முடிந்தது. காங்கிரஸ் 22 இருக்கைகளுடன் மட்டுமே அதன் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவைப் பெற முடிந்தது.

பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே அகலமாகி வரும் இடைவெளிக்கு வழிவகுத்த தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்தின் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத் திட்டத்திற்கு குரோதம் வளர்ந்து வரினும், காங்கிரசானது எந்தவித குறிப்பிடத்தக்க ஆதாயங்களையும் பெறும் என எதிர்ப்பார்க்கப்படவில்லை. லண்டனை அடிப்படையாகக் கொண்ட எக்கனாமிக் டைம்ஸ் இதழின் படி,"கட்சி மூலோபய வல்லுநர்கள் கூட அது உச்சபட்சம் சுமார் 135 (இருக்கைகள்) பெற முடியும் என்று கூறுகின்றனர்." ஆயினும், கட்சியானது கணிசமான அளவு மோசமாகத்தான் பெறும். அது கடந்த டிசம்பரில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சட்டிஸ்கார் ஆகிய நான்கு மாநிலங்களில் தோற்கடிக்கப்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் சீரழிவின் ஒரு அடையாளம் பிராந்திய அடிப்படையிலான கட்சிகளுடன் ஒரு தொடரான தேர்தல் கூட்டுக்களுக்கு திரும்புவதற்கு நிர்பந்திக்கப்பட்டிருக்கிறது என்பதாகும். மொழி, இனக்குழு மற்றும் சாதி என்ற அடிப்படையில் வட்டார தப்பெண்ணங்களை தூண்டி வரும், 1990களில் எழுந்த இக் கட்சிகளின் உதயமானது, பெரிய கட்சிகளிலிருந்து பரந்த அளவிலான மக்களின் அந்நியப்படலின் இன்னொரு எதிரொலிப்பாகும். கடந்த தேர்தல்களில் காங்கிரஸ், அத்தகைய தேர்தல் கூட்டுக்கள் தனது தேசிய அடையாளத்தை கீழறுத்துவிடும் என்றும் அத்தகைய ஏற்பாடுகள் தேவையற்றன என்றும் நம்பி தேர்தல் கூட்டுக்களை தவிர்த்தே வந்தது.

ஆயினும் இப்பொழுது, காங்கிரஸ் பங்காளிகளை தேடும் ஆற்றொணா நிலையில் இருக்கிறது மற்றும் இந்த தேர்தலில் பல முக்கிய மாநிலங்களில் துணைநிலை அந்தஸ்தை ஏற்றுக் கொண்டிருக்கிறது. பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளத்துடனான அதன் கூட்டில், தேசிய பாராளுமன்றத்தில் மாநிலத்தின் 40 இருக்கைகளில் நான்குடன் மட்டுமே திருப்தி அடைந்திருந்தது- இது அது கேட்டிருந்த 14 இடங்களை விடவும் குறைவானதாகும். காங்கிரஸ் ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரம் மற்றும் தமிழ்நாடு ஆகியனவற்றில் கூட கூட்டணியை உருவாக்கி இருக்கிறது. ஆனால் மக்கள் தொகை அதிகம் கொண்ட மாநிலமான உத்திரப் பிரதேசத்தில், பகுஜன்சமாஜ கட்சி மற்றும் சமாஜ்வாதி கட்சி ஆகியன அதன் அணுகுதலைத் தவிர்த்து ஒதுக்கின. மாநிலத்தில் 80 இருக்கைகளில் காங்கிரஸ் 9 ஐ மட்டுமே தற்போது வைத்திருக்கிறது.

கட்சியின் திவாலை அது நேரு-காந்தி பரம்பரையை சார்ந்திருத்தலைப் போல் வேறெதுவும் கோடிட்டுக்காட்ட முடியாது. இத்தாலியில் பிறந்த, படுகொலை செய்யப்பட்ட ராஜீவ் காந்தியின் விதவை மணைவி கட்சியை வழிநடத்துமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டது மட்டுமல்லாமல், அவரது இரு குழந்தைகளும் கூட இந்தப் பிரச்சாரத்தில் பட்டியலிடப்பட்டிருக்கிறார்கள். அவரது மகன் ராகுல் உத்திரப்பிரதேசம், அமேதி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக நிற்பது, இம்மாநிலத்தில் கட்சியின் நிலையை உயர்த்துவதற்கான ஒரு முயற்சியாகும். அவரது சகோதரி பிரியங்காவும் கூட அந்த இடத்தில் முக்கிய பிரச்சாரம் செய்து வருகிறார்.

காலனித்துவ எதிர்ப்பு இயக்க தலைவர்களுடன் - மாகாத்மா காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு ஆகியோருடன்- கட்சியின் மெல்லிய தொடர்பு -இந்தியாவின் உழைக்கும் மக்களின் நலன்களை பிரதிநிதித்துவம் செய்வதாக அது கூறும் கூற்றுக்களுடன் தொடர்ந்து இருக்கிறது. காங்கிரஸ் எப்போதும் இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் கட்சியாகவே இருந்தது, அது பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான பரந்த இயக்கம் தனிச்சொத்துடைமைக்கு ஒருபோதும் அச்சுறுத்தலில்லாததை உறுதி செய்தது மற்றும் அதன் சொந்த சலுகைமிக்க நிலையை உத்திரவாதம் செய்வதற்கான சாதனமாக ஆனது. அதே நேரத்தில், அதன் காலனித்துவ எதிர்ப்பு தலைமையினூடாக, காங்கிரஸ் முற்போக்கான மாற்றத்தின் ஒரு கட்சி என்ற புகழையும் ஆழமான அரசியல் வேர்களையும் நிறுவியது, அது பிரிட்டிஷ் ஆட்சியின் முடிவுக்குப் பின்னர் அரசியல் அரங்கில் அதனை மேலாதிக்கம் செய்யக் கூடியதாக ஆக்கியது.

அதன் மதிப்பை அதிகமாய் மங்கச்செய்வதைத் தொடர்ந்து வைத்திருக்கும் காங்கிரசின் திறமை இரண்டாம் உலகப் போரை தொடர்ந்து வந்த விசித்திரமான பூகோள பொருளாதார மற்றும் அரசியல் சூழ்நிலையின் விளைபொருளாகும். அடுத்தடுத்து வந்த இந்திய அரசாங்கங்கள் இறக்குமதி பதிலீட்டுக் கொள்கை, மற்றும் தொழிலாளர்களுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் மட்டுப்படுத்தப்பட்ட சலுகைககள் இவற்றின் அடிப்படையில் உயர்ந்த அளவில் ஒழுங்கு படுத்தப்பட்ட தேசிய பொருளாதாரத்தை பின்பற்றி வர முடிந்தது. குளிர் யுத்த சூழ்நிலையில் காங்கிரஸ் தலைவர்கள், ஸ்ராலினிச அதிகாரத்துவங்களின் உதவியுடன் "ஏகாதிபத்திய எதிர்ப்புவாதிகள்" என காட்டிக்கொண்டு, வாஷிங்டனுக்கும் மாஸ்கோவிற்கும் இடையில் சமநிலையைப் பேணிக் கொள்ள முடிந்தது. அணிசாரா இயக்கம் என்று அழைக்கப்படுவதின் தலைவர்களுள் ஒருவராக இந்தியா இருந்தது.

ஆயினும், 1980கள் மற்றும் 90களில், பூகோளமயமாக்கல் தேசியப் பொருளாதார ஒழுங்குபடுத்தலின் அனைத்து வடிவங்களையும் கீழறுத்தது - மிகக் கூர்மையான வெளிப்பாடாக சோவியத் ஒன்றியத்தின் பொறிவு இருந்தது. 1990களின் தொடக்கத்தில், பிரதமர் நரசிம்மராவின் காங்கிரஸ் கட்சி அரசாங்கம் சந்தை சீர்திருத்தங்களின் முதற்கட்டத்தை முன்னெடுத்து நாட்டின் மலிவு விலையிலான கூலி உழைப்பின் பெரும் சேர்ம இருப்பை அந்நிய முதலீட்டாளர்களுக்கு திறந்துவிட்டது. வர்த்தகர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் நன்மை அடைந்த அதேவேளை, பொருளாதார மறுசீரமைப்பானது தொழிலாள வர்க்கத்தினதும் ஒடுக்கப்பட்ட மக்களதும் வாழ்க்கை நிலைமைகளின் மீது கடும் தாக்குதலை விளைவித்தது. அதிகரித்த அதிருப்தியானது1996 தேர்தல்களில் கட்சியின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தது.

பிஜேபிக்கு மாற்று இல்லை

காங்கிரசுடன் உள்ள எதிர்ப்பை பயன்படுத்திக்கொள்ளும் அதேவேளை, பிஜேபி அதே மறுசீரமைப்பு வேலைத் திட்டத்தை 1998லிருந்து நடைமுறைப்படுத்தி வந்திருக்கிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவின் குறைந்த செலவு, படித்த, ஆங்கிலம் பேசும் தொழிலாளர் அளிப்பை, மதிப்பிடல், ஆய்வு செய்தல் மற்றும் அலுவலகப் பணிகளை உருவாக்குவதற்கும் இந்திய நடுத்தர வர்க்கத் தட்டுக்களுக்கு நலன்பயக்கும் ஒரு வளர்ச்சி வேகத்தை உருவாக்கவும் பயன்படுத்தி கொண்டுள்ளனர். இந்தியாவை பொருளாதார வளர்ச்சி உள்ளதாகவும் சர்வதேச அங்கீகாரம் பெற்றதாகவும் கொண்டு வருவதாகவும் கட்சியை உருவப்படுத்திக் காட்டுவதற்கு வடிவமைக்கப்பட்ட, அரசாங்க நிதியுதவி அளிக்கப்பட்ட "இந்தியா ஒளிர்கிறது" செய்திஊடக தாக்குதலை பிஜேபி-ன் தேர்தல் பிரச்சாரம் மையப்படுத்தி இருக்கிறது.

அரசாங்கப் பொருளாதாரக் கொள்கைகள் பணக்காரர்களுக்கும் தொடர்ந்து வறுமையில் ஆழ்ந்திருக்கும் பரந்த அளவிலான பெரும்பான்மையினருக்கும் இடையிலான ஆழமான சமூகப் பிளவு அகலமாகிவருவதற்கு வழிவகுத்திருக்கிறது என்ற உண்மை மீதாக நுட்பமான செய்தி ஊடக பிரச்சாரம் பளபளப்பாய் மெருகு போடுகிறது. பிஜேபி-ன் நிலைச்சான்றை தாக்கும் முயற்சியில், காங்கிரஸ் அடிப்படைப் பிரச்சினையை எதிர் கொள்கிறது: அதன் கொள்கைகள் அந்த அரசாங்கத்தின் கொள்கைகளிடமிருந்து வேறுபட்டதல்ல. அதன் விளைவாக, அதன் பிரச்சாரம் முரண்பாடுகளில் சிக்கிக் கொள்கிறது. மக்களின் வாழ்க்கைத் தரங்களை முன்னேற்றுவதற்கு காங்கிரஸ் வெற்று வாக்குறுதிகளுடன் மக்களை ஏமாற்றும் அதேவேளை, காங்கிரஸ் திறந்த சந்தை செயற்பட்டியலை தொடரும் தனது திறம் பற்றி பெருமுதலாளிகளை நம்பச்செய்ய முயற்சிக்கிறது.

இவ்வாறு கட்சியின் தேர்தல் அறிக்கை தற்பெருமை பேசுகிறது: "தாராளமயமாக்கல் மற்றும் பொருளாதாரச் சீர்திருத்தங்களை தொடங்கியது காங்கிரஸ்தான். 1998 அளவில் இந்தியாவை உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக ஆக்கியது காங்கிரசின் கொள்கைகள்தான்." மேலும், தனியார் முதலீட்டாளர்களுக்கு மேலும் கூடிய ஊக்கத் தொகைகள் அளிப்பதாகவும் அந்நிய முதலீட்டை அங்கீகரிப்பதற்கான முறையை "இன்னும் எளிதாகச்செய்யும் வகையில்" அதனை இலகுவாக்குவதற்கும் அது உறுதி அளிக்கிறது.

பிஜேபியின் கொள்கைகளை நீட்டிப்பதாகவும் தொடர்வதாகவும் உறுதி தரும் அதேவேளை, காங்கிரஸ் வேலையின்மையும் கிராமப்புற வறுமையும் வளர்ந்து வருவதாக அரசாங்கத்தைக் குற்றம் சாட்டுகிறது. கிராமப்புற மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கையில், அதன் தேர்தல் அறிக்கை, கிராமத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு உறுப்பினருக்கு "ஒவ்வொரு ஆண்டும் குறைந்த பட்சம் 100 நாட்களுக்காவது குறைந்தபட்ச சம்பளத்தில் சொத்தை உருவாக்கும் பொதுப்பணித் திட்டங்களில் வேலை வாய்ப்பை வழங்குவதற்கு", "தேசிய வேலைவாய்ப்பு உத்திரவாத சட்டம்" ஒன்றை உருவாக்க அழைப்பு விடுக்கிறது.

கட்சியின் வாக்குறுதிகளின் வெற்றுத் தன்மை தேசிய ஜனநாயக முன்னணி அரசாங்கத்தின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை ஆதரிப்பதற்கான அதன் விருப்பத்தால் அம்பலமாகிறது. கடந்த ஆண்டு பொதுத்துறையில் வேலைநிறுத்தம் செய்வதற்கான உரிமையை பறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக பெப்ரவரி 24 அன்று, 50 மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தபொழுது, தொழிற்சங்க நடவடிக்கையை எதிர்ப்பதில் காங்கிரஸ் பிஜேபியுடன் பக்கம் எடுத்து நின்றது. குறிப்பிடத்தக்க வகையில், காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தமது விருப்பம்போல் வேலையில் அமர்த்தவும் நீக்கவுமான முதலாளிகளின் திறமைக்கு சட்டரீதியான தடைகளை மேலும் செறிவற்றதாக்கும் தொழிலாளர் சட்டங்களில், பெரும் மாற்றங்களை பிஜேபி முன்மொழிவது பற்றி அச்சுறுத்தும் வகையில் அமைதியாய் உள்ளது.

ஏனைய பிரச்சினைகள் மீதான காங்கிரசின் நிலைப்பாடு குறைவான முரண்பாடுடையதல்ல. குளிர் யுத்தத்தின்பொழுது, கட்சியானது அணிசேரா அமைப்பின் முன்னணி ஆதரவாளராய் இருந்தது. ஆயினும், இப்பொழுது, புஷ் நிர்வாகத்துடன் நெருக்கமான மூலோபாய மற்றும் இராணுவ உறவுகளை பிஜேபி உருவாக்கியற்கு அது மறைமுகமாக ஆதரவு தருகிறது. அதன் தேர்தல் அறிக்கை மென்னயமாய் காங்கிரஸ் அரசாங்கம் "அமெரிக்காவுடன் விஞ்ஞான, தொழில்நுட்பவியல், மூலோபாய மற்றும் வர்த்தக ஒத்துழைப்பில் ஈடுபடும்" என்று அறிவிக்கிறது", ஆனால் அதன் வெளிநாட்டுக் கொள்கைக்கு உண்மையான சோதனை ஈராக்கை சட்டவிரோதமாக அமெரிக்கா ஆக்கிரமித்திருப்பது பற்றிய அதன் மனோபாவமாகும். காங்கிரஸ் தலைவர்கள் அமெரிக்க படையெடுப்பை எந்த அடிப்படை அர்த்தத்திலும் சவால் செய்யவில்லை, ஐநா குடையின் கீழ் அது இடம்பெறுவதற்கு மட்டுமே அழைக்கின்றனர். கடந்த ஜூனில் வாஷிங்டன், இந்தியத் துருப்புக்கள் ஈராக்கிற்கு அனுப்பப்பட வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தபோது, காங்கிரசுக்கு ஆட்சேபனை இல்லை என்று உறுதி அளிக்க சோனியா காந்தி பிரதமரைச் சந்தித்தார்.

''தேசிய பாதுகாப்பு" என்ற பெயரில், பாதுகாப்பு படைகளை போதுமான அளவிற்கு பலப்படுத்த தவறிவிட்டதாக அரசாங்கத்தை விமர்சனம் செய்து, காங்கிரஸ் பிஜேபி-ஐ விடவும் மிகவும் இராணுவவாத நிலைப்பாட்டைக் கூட ஏற்றுக்கொண்டுள்ளது. "எமது படைகளை நவீனப்படுத்துவதில் உள்ள அனைத்து தாமதங்களும் நீக்கப்படும் மற்றும் நவீனமயமாக்கலுக்காக திட்டமிடப்பட்ட நிதிகள், உண்மையில், முழுமையாக செலவு செய்யப்படும் என்று காங்கிரஸ் உறுதிப்படுத்தும்." அத்தகைய கொள்கை இந்தப் பிராந்தியத்தில் உள்ள பதட்டங்களை - சிறப்பாக பாக்கிஸ்தானுடன் உள்ள பதட்டங்களை மேலும் உக்கிரப்படுத்தும்.

கடந்தகாலத்தில், காங்கிரஸ் மதச்சார்பற்று இருப்பதாகக் கூறிக்கொள்வதன் மூலம் இந்து மேலாதிக்கவாத பிஜேபி யிலிருந்து தன்னை வேறுபடுத்திக் கொள்ள முயற்சித்திருக்கிறது. ஆனால், பிரிட்டிஷ் காலனித்துவம் இந்தியாவை முஸ்லிம் பாக்கிஸ்தான் மற்றும் இந்து மேலாதிக்க இந்தியா என அழிவுகரமாக பிரிவினை செய்வதற்கான அதன் ஆதரவை நேராக திரும்பிப் பார்க்கையில், கட்சியானது அரசியல் காரணங்களுக்காக வகுப்புவாத பதட்டங்களை சுரண்டிக் கொண்டதன் நீண்ட வரலாற்றை அது கொண்டிருக்கிறது. காங்கிரஸ் இந்தியாவை பாக்கிஸ்தானுடன் மூன்று போர்களுக்கு இட்டுச்சென்றது மற்றும் பிஜேபி போல இஸ்லாமாபாத்தை கண்டனம் செய்வதில் ஆக்ரோஷமாக இருக்கிறது.

ஆயினும், பிஜேபி-ன் எழுச்சியுடன், காங்கிரசானது மேலும் மேலும் தன்னை பிஜேபி-ன் இந்துத்துவ கொள்கைக்கு அல்லது பிறமத பழிப்பு இந்துவாதத்திற்கு மாற்றி அமைத்துக் கொண்டது. மிகவெளிப்படையாக அமைந்தது குஜராத்தில் 2002 மாநில தேர்தலில் நடந்த அதன் பிரச்சாரம் ஆகும், செய்தி ஊடகம் அதன் கொள்கைகளை "மெல்லிய - இந்துத்துவ" என்று முத்திரை குத்தியது. டிசம்பர் 1992ல் இந்து வெறியர்கள் கும்பலால் அயோத்தியில் பாபர் மசூதி இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட பிரச்சினை தொடர்பான அதன் மனோபாவம் அறியக்கூடியதாய் இருக்கிறது. அந்தப் பகுதியில் இந்துக் கோவிலை கட்டுவதற்கான "உரிமைக்காக" ஆத்திரமூட்டும் வகையில் இந்து வகுப்புவாதிகள் வலியுறுத்தி வருகையில், காங்கிரஸ் அந்தக் கோரிக்கையை பிஜேபி போல செயலூக்கத்துடன் ஆதரிக்காத அதேவேளை, அது நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டியது என்று அறிவிக்கிறது.

பிஜேபியுடன் ஒப்பிடும்பொழுது காங்கிரசானது எந்தவகையிலும் குறைந்த தீமை உடையது என்ற பொய்யை அதிகரித்த அளவில் நிலைநாட்டுவதற்கு, காங்கிரசானது இரு முக்கிய ஸ்ராலினிச கட்சிகளை - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட்-மார்க்சிஸ்ட் (சிபிஐ-எம்) - மிகவும் சார்ந்திருக்கிறது. தசாப்த காலங்களாக சிபிஐ-எம் மற்றும் சிபிஐ ஆகியன பல்வேறு வழிகளில் உழைக்கும் மக்கள் மத்தியில், காங்கிரஸ் முற்போக்கு மற்றும் சோசலிச மாற்றைக் கூட பிரதிநித்துவப்படுத்துவதாக திட்டமிட்டே பிரமையூட்டின. இன்று, ஸ்ராலினிஸ்டுகள் தமிழ்நாடு மாநிலத்தில் காங்கிரசுடன் கூட்டை அமைத்துள்ளனர் மற்றும் பிஜேபி உடன் ஒப்பிடும்பொழுது காங்கிரசானது குறைந்தபட்சம் "மதச்சார்பற்றது" என்ற நைந்துபோன வாதத்தின் அடிப்படையில் வெளியிலிருந்து காங்கிரஸ் அரசாங்கத்திற்கு ஆதரவுதருவதாக உறுதி கொடுத்திருக்கின்றனர்.

காங்கிரசின் தேர்தல் நல்வாய்ப்பை முண்டு கொடுத்துத் தாங்குவதற்கான சிபிஐ மற்றும் சிபிஐ(எம்)-ன் திறனானது மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாகும். பலதசாப்தகால வெறுக்கத்தக்க காட்டிக் கொடுப்புக்களுக்கு பிறகு, குறிப்பாக மேற்குவங்காளம் மற்றும் கேரள மாநிலங்களில் சிபிஐ-எம் ஆட்சியின் பொழுது, இரு கட்சிகளும் மக்களின் கண்முன்னே ஆழமாய் சமரசம் செய்து கொண்டன. இவ்விரு கட்சிகளும் பெயரளவிற்கு மார்க்சிசத்தை ஆதரிப்பதை கூட உண்மையில் கைவிட்டு விட்டன மற்றும் பிரதான முதலாளித்துவக் கட்சிகளுடன்- பிஜேபி அதேபோல காங்கிரஸ் இவற்றுடன்- கொஞ்சியும் குலாவியும் இந்திய அரசியல் நிறுவனத்தின் ஒரு விசுவாசமான பகுதியாகிவிட்டன.

காங்கிரசை தூக்கி நிறுத்துவதற்கான இவ்வனைத்து முயற்சிகளும் அதன் தொடர்ச்சியான சரிவை தடுத்து நிறுத்த முடியாது. ஆளும் செல்வந்தத் தட்டுக்களை கவனத்தில் கொள்கையில், தற்போது குறைந்த பட்சம், பிஜேபியானது அவர்களின் பொருளாதார மற்றும் மூலோபாய செயற்பட்டியலை முன்னெடுத்துச் செல்வதற்கான சிறந்த அரசியல் வாகனம் ஆகும். பொய்கள் மற்றும் நிறைவேற்றா வாக்குறுதிகளின் பல தசாப்தங்களுக்கு பின்னர், மக்கள் தொகையின் அபரிமிதமான பெரும்பான்மையினர், குறைந்த தீமையேயாயினும், காங்கிரசுக்கு வாக்களிக்க விரும்பமாட்டார்கள்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved