World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

ஹிஷி னீமீபீவீணீ நீஷீஸ்மீக்ஷீs யீஷீக்ஷீ கிறீறீணீஷ்வீகீணீsலீவீஸீரீtஷீஸீs மீஜ்மீநீutவீஷீஸீமீக்ஷீ-வீஸீ-நீலீவீமீயீ வீஸீ மிக்ஷீணீஹீ

அல்லாவியை அமெரிக்க ஊடகங்கள் மூடிமறைப்பு - ஈராக்கில் வாஷிங்டனின் தலைமைக் கொலையாளி

By James Conachy
22 July 2004

Back to screen version

ஆஸ்திரேலியாவின் முன்னணி நாளிதழ்களான சிட்னி மோர்னிங் ஹெரால்ட் மற்றும் ஏஜ், ஆகிய இரண்டும் ஜூலை 17-ல் பெயர் குறிப்பிடாத இரண்டு ஈராக்கியர் ஈராக்கின் இடைக்கால பிரதமர் இயத் அல்லாவி பாக்தாத்திலுள்ள அல் அமரியா (al Amariyah) பாதுகாப்பு மையத்தில் குறைந்த பட்சம் ஆறு கைதிகளை சுட்டுக்கொன்றதாக நேரில்கண்ட சாட்சியத்தை பிரசுரித்தன. ஈராக்கிய உள்துறை அமைச்சர் மற்றும் அமெரிக்க இராணுவ அதிகாரிகள் மற்றும் பலர் இருந்தபோது அமெரிக்காவிற்கெதிரான கிளர்ச்சியாளர்கள் என்று சந்தேகிக்கப்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இப்படி நேரில் கண்டவர்கள் சாட்சியத்தை மிகுந்த மரியாதைக்குரிய வெளிநாட்டு நிருபரும், விருதுகள் பெற்ற பத்திரிகையாளரும் Sydney Morning Herald முன்னாள் ஆசிரியருமான Paul McGeough சேகரித்திருக்கிறார். அவரும் அதை வெளியிட்ட பத்திரிகைகளும், அந்த செய்தியின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தியுள்ளனர். அவர்கள் வெளியிட்டுள்ள தகவலில் பலியானவர்கள் மூன்று பேருடைய பெயர்கள் இடம்பெற்றிருக்கின்றன. Ahmed Abdulah Ahsamey, Amer Lutfi Mohammed Ahmed al-Kutsia, மற்றும் Walid Mehdi Ahmed al-Sammarrai. (WSWS கட்டுரையை பார்க்கவும்: கைதிகளை கொலை செய்ததாக ஈராக் பிரதமர் மீது குற்றச்சாட்டு)

ஆஸ்திரேலிய ஊடகங்களில் சில பிரிவுகள் மற்றும் முன்னணி பிரிட்டிஷ் அரசியல் தலைவர்கள் கொடுத்த நிர்பந்தங்களின் காரணமாக ஈராக்கின் மனித உரிமைகள் அமைச்சர் Bakhtiar Amin ஜூலை 19-ல் ''இதை நான் சரிபார்க்கிறேன், அதேபோல் நான் பிரதமருடனும் பேசுகிறேன்'' என்று குறிப்பிட்டார். பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலிய அரசியல்வாதிகள், முன்னாள் பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் ரொபின் குக் உட்பட சுதந்திரமான புலன்விசாரணை, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினையும் உள்ளடக்கியதாக நடத்தப்பட வேண்டுமென்று கோரியுள்ளனர்.

தேர்தல்களை தள்ளி வைக்க விடுத்துள்ள அச்சுறுத்தல், இராணுவ சட்டத்தை கொண்டுவருவதற்கான இயங்குமுறைகள், அரசியல் எதிராளிகளை வேட்டையாடுவதற்கு இரகசிய போலீஸை உருவாக்குவது ஆகியவை உள்பட அல்லாவியின் சர்வாதிகார நடவடிக்கைகள் பற்றியும், அவரது கொடூரம் பற்றியும் பல கருத்துக்கள் சர்வதேச மற்றும் அமெரிக்க பத்திரிக்கைகளில் வந்ததை அடுத்து McGeough-இன் சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியின் விபரங்கள் வந்துள்ளன. சில கட்டுரைகள் நீண்டகால CIA ஏஜண்டான அவரின் முரட்டுத்தனம் பற்றி பரவலாக நிலவிவரும் வதந்திகளை குறிப்பிடுகின்றன. அவற்றில் ஒன்று ஜூலை-11ல் நியூயோர்க் டைம்ஸ் Dexter Filkins-ஆல் எழுதப்பட்ட சிறப்பு கட்டுரையில், ''பயங்கரவாத'' செயல்களை ஒப்புக்கொள்வதற்காக அல்லாவி ஒரு கைதியின் கையை வெட்ட கட்டளையிட்டுள்ளார் என்பதை பற்றி விவரமாக குறிப்பிட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய ஒலிபரப்பு கார்ப்பரேஷனின் ''Lateline" நிகழ்ச்சியில் பங்கெடுத்துக்கொண்ட McGeough, சிறையில் நடைபெற்ற கொலைகள் பற்றிய வதந்திகளை கேள்விப்பட்டு விசாரணை நடத்தியதை விவரித்திருக்கிறார். ''நான் அந்த வதந்திகளைப் பற்றி விசாரிப்பதற்காக சென்றேன் அதில் உண்மை அடிப்படை உள்ளதா, என்பதை விசாரித்தேன்'' என்று குறிப்பிட்டார். அவருக்கு இரண்டு பேர் ஈராக்கில் கிடைத்தனர். அவர்கள் ஒருவருக்கொருவர் சம்மந்தமில்லாதவர்கள் இருவரும் அந்த கொலைகள் நடந்தபோது அங்கு இருந்திருக்கிறார்கள். தனித்தனியாக பேட்டியளித்த அவர்கள், குற்றத்தை ஒரே மாதிரியாக வர்ணித்துள்ளனர்.

பத்திரிகை அளவுகோல் படி, இந்த தகவல் மிகப்பரவலாகவும், விரிவாகவும், பத்திரிகைகளில் குறிப்பாக அமெரிக்க பத்திரிகைகளில் இடம்பெற்றிருக்க வேண்டும். ஆக்கிரமிக்கப்பட்ட நாட்டில் ஜனநாயக முறைக்கு மாற்றும் அரசியல் முகவராக அல்லாவி, புஷ் நிர்வாகத்தினால் தற்பொழுது உலகிற்கு இடைக்கால பிரதமர் பதவிக்கு பொறுக்கி எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

ஒருவர் நினைக்கலாம், எனவே, வாஷிங்டனின் நம்பிக்கைக்கு பாத்திரமான பாக்தாத் மனிதர் மீது ஒட்டுமொத்தமாக கைதிகளை கொலை செய்தார் என்ற நம்பகத்தன்மையுள்ள குற்றச்சாட்டுக்கள் வந்திருக்கும் நேரத்தில் குறைந்தபட்சம் அமெரிக்க மக்களுக்கு, அமெரிக்க ஊடகங்கள் அதைப்பற்றி தகவல் தந்திருக்க வேண்டும் என்று ---குறிப்பாக அமெரிக்க படையெடுப்பையும் ஆக்கிரமிப்பையும், சதாம் ஹூசைன் கொலைகாரன் என்று கூறி அவரது ஆட்சியை கவிழ்க்க நியாயப்படுத்தப்பட்டதன் பின்னர் அவ்வாறு தந்திருக்க வேண்டும்.

என்றாலும் அமெரிக்க ஊடகங்களை ஊன்றி கவனித்து வருபவர்கள், இத் தகவலை ஊடகங்கள் ஒட்டுமொத்தமாக மூடி மறைத்திருப்பதைக்கண்டு வியப்படையவில்லை. அல்லாவிக்கு எதிரான குற்றச்சாட்டுக்களைப்பற்றி குறிப்பு தந்திருக்கிற ஊடகங்கள் கூட அந்தக் குற்றச்சாட்டுக்கள் வதந்தி என்று தள்ளுபடி செய்திருக்கின்றன, அதே நேரத்தில் நையாண்டி செய்கின்ற வகையில் இப்படி ஒட்டுமொத்தமாக கொலை செய்கின்ற ஒரு வலுவான மனிதரைத்தான், ஈராக் மக்கள் விரும்புகின்றனர், அப்படிப்பட்டவர்தான் அந்நாட்டிற்குத்தேவை என்று எழுதியுள்ளன.

ஈராக்கை ''ஜனநாயகமயமாக்குவது'' என்ற உளறல்கள் தற்போது பின்னுக்கு தள்ளப்பட்டுவிட்டன. தங்களது நாட்டை காலனி ஆதிக்கப்பாணியில் பிடித்துக்கொண்டவர்களுக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கின்ற ஈராக்கிய மக்களுக்கு எதிராக ''கடுமையான'' நடவடிக்கைகளை எடுத்துவருகின்ற அல்லாவியை பாராட்டுவது முதலிடம் பெற்றிருக்கிறது. இதை செயல்படுத்தும் கொள்கை சான்றுபடி: ''அவர் சர்வாதிகாரியாக இருக்கலாம், ஆனால் அவர் நமது சர்வாதிகாரி''.

அமெரிக்கப் பத்திரிகைகளில் நேரில் கண்டவர்கள் தந்த தகவல்கள் பற்றி மூன்று பத்திரிகைகளில்தான் சிறிய குறிப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளன. நியூஸ் வீக் வார இதழின் அண்மைய பதிப்பில் ஒரு கட்டுரை, ஜூலை- 20-ல் சிக்காக்கோ டிரிபியூன் ஒரு கட்டுரை மற்றும் ஜூலை 21ல் லொஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் ஒரு கட்டுரையை பிரசுரித்தது.

இந்த மூன்று செய்தி அறிக்கைகளுமே அல்லாவிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் சதாம் ஹூசைன் பாணியில் ஒரு சர்வாதிகாரி வர வேண்டுமென்று ஈராக் மக்களின் பெருவிருப்பை ஏதோ ஒரு வகையில் உறுதிப்படுத்துகின்றன. நியூஸ் வீக் இன் ''ஈராக்கின் புதிய SOB" என தலைப்பிட்ட அந்தக் கட்டுரையில் அல்லாவியின் குற்றங்கள் "ஈராக்கியர் நாட்டில் ஒழுங்கை நிலைநாட்டும் ஒருவரை தீவிரமாக தேடிக்கொண்டிருப்பதை" காட்டுவதாக சித்தரித்திருக்கிறது. Tribune "சாதாரண ஈராக்கியர்கள் சொல்வது "அல்லாவி கடுமையானவர், அதற்காக அவரை அவர்கள் வரவேற்கிறார்கள்" என்று கருத்துரைக்கிறது, மேலும் "பல ஈராக்கியர்... வேகமான நீதி மீண்டும் வருவது நல்லது என எண்ணுகின்றனர்'' என்று எழுதியிருக்கிறது. லா டைம்ஸ், அத்தகைய ''தெளிவான நகர கட்டுக்கதைகள்'', "பலாத்காரம் பற்றிய அச்சத்தின்மீது தங்கி இருக்கும் அமைப்பைத்தவிர தலைமைக்கான எந்தவித வரம்புகளுடனும் தொடர்பு அகற்றப்பட்ட சமுதாயம்" ஒன்றின் விளைபொருளாகும் என்று அறிவித்தது.

நியூயோர்க் டைம்ஸிலும், வாஷிங்டன் போஸ்டிலும் அல்லாவியின் குற்றச்சாட்டு பற்றிய குறிப்புக்கள் அந்தப் பத்திரிகைகளின் வலைத்தள பதிப்புக்களில் ஜூலை 20, காலை 2.15-மணிக்கு பிரசுரிக்கப்பட்டிருந்த அல்லாவி பற்றிய அசோசியேடட் பிரஸ் கட்டுரையில் அடங்கியிருந்தன. AP செய்தி McGeough இன் தகவல் பற்றி நேரடி குறிப்பையோ, அல்லது நேரில் கண்ட சாட்சியங்கள் பற்றிய அவரது விவரத்தையோ வெளியிடவில்லை. அல்லது புலன்விசாரணை நடத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கை பற்றி கவனத்தில் கொள்ளவில்லை. AP செய்தி ''இடைவிடாது உலவுகின்ற ஒரு வதந்தியான'' அல்லாவி "கண் கட்டப்பட்ட, கைவிலங்கிடப்பட்ட, பயங்கரவாதிகள் என்று சந்தேகிக்கப்பட்ட ஆறு பேர்களை" சுட்டுக்கொன்றார். என்பதை மட்டுமே குறிப்பிடுகிறது, மற்றும் சென்ற வாரம் நடந்த பத்திரிகை மாநாட்டில் அல்லாவி மறுப்புத் தெரிவித்திருப்பதையும் குறிப்பிடுகிறது.

அல்லாவி நேரடியாக நிருபர்கள் பேட்டியில் இந்த கேள்வியை எதிர்கொள்ள வேண்டி வந்தது என்பது அமெரிக்க ஊடகங்களில் அக்கறை குறைவாக இருந்தது எழுப்பப்பட்ட குற்றங்கள் பற்றிய அறியாமையால் வந்ததல்ல, அல்லது சில வட்டாரங்களில் அவை எவ்வளவு கடுமையாக எடுத்துக்கொள்ளப்படுகின்றன என்பதால் அல்ல. பாக்தாத்திலுள்ள பத்திரிகையாளர் பட்டாளம் முழுவதற்கும், அதன்காரணமாக அவர்களது அமெரிக்க பத்திரிகை ஆசிரியர்களுக்கும் இந்தப் பிரச்சனை நன்றாகவே தெரியும்.

உலக சோசலிச வலை தள நிருபர் ஜூலை 19-ல், அரசாங்கத்திற்கு எதிரான பொது மக்கள் குறைகேட்கும் அந்த இரண்டு பத்திரிகைகளின் ஆசிரியருக்கு மின்னஞ்சலில் அல்லாவியின் நீதி நிர்வாகத்திற்கு அப்பாற்பட்ட கொலைகள் பற்றி நேரில் கண்டவர்கள் தகவலை வெளியிடப்போகிறார்களா? இல்லையா, எனக் கேட்டிருந்தார். நியூயோர்க் டைம்ஸ் ஜூலை 11-ல் Filkins இன் விமர்சனத்தோடு அதைத் தொடர்புபடுத்தி அத்துடன் விட்டுவிட்டது, வாஷிங்டன் போஸ்ட் எந்த பதிலையும் அளிக்க தவறிவிட்டது.

ஏப்ரலிலும், மே மாதத்திலும் அமெரிக்கா தலைமையிலான கூட்டணி இடைக்கால நிர்வாகம், ஈராக்கில் ஷியா மதகுரு மொக்தாதா அல்சதார் தான் ஓராண்டிற்கு முன்னர் போட்டி மதகுரு கொலைக்குப்பொறுப்பு என்று ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை வெளியிட்டபோது அவற்றை அப்படியே பிரசுரிப்பதில் அமெரிக்க ஊடகங்களுக்கு எவ்வித சந்தேகமும் வரவில்லை, அப்போது அந்தக் குற்றச்சாட்டு புஷ் நிர்வாகத்திற்கு உதவியது. அல்சதார் தலைமையில் ஈராக் ஷியைட்டுகள் கிளர்ச்சியில் ஈடுபட்டிருப்பதை கண்டிக்க அவர்களை ''முரடர்கள்'' என்றும் ''பயங்கரவாதிகள்'' என்றும் இழிவுபடுத்துவதற்கு அந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் உதவின.

அமெரிக்க படையெடுப்பிற்கு பின்னர் ஈராக் மக்களது வாழ்வில் நிலவுகின்ற கொடூரமான நிலவரத்திற்கு முற்றிலும், ஏற்புடைய வகையில் தான் பத்திரிகையாளர் McGeough அந்த சம்பவத்தை வர்ணித்திருக்கிறார். அமெரிக்க ஆட்சிக்கு ஈராக் மக்களை அடிபணியச்செய்ய நிர்பந்திக்கும் முயற்சியில் அமெரிக்க இராணுவம் பாக்தாத், பல்லூஜா, நஜாப், மற்றும் கர்பலா நகரங்களில் ஆயிரக்கணக்கான ஈராக்கிய மக்களை கொன்றுகுவித்தது. மேலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் குற்றச்சாட்டு எதுவுமில்லாமல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர், அபு கிரைப் சிறைச்சாலையிலும், இதர சிறைகளிலும் அமெரிக்க காவலர்களால் கைதிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் சித்ரவதை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

அல்லாவியின் கொலை வெறிப்போக்குகளை பற்றி அமெரிக்க ஊடகங்கள் மவுனம் சாதித்துவருவது கொடூரமான ஏகாதிபத்தியப் போரையும் காலனித்துவத்தையும் வளர்க்கும் நடவடிக்கையில் அவற்றின் உடந்தையாக செயல்படும் தன்மையை கோடிட்டுக்காட்டுகின்றது, மற்றும் ஈராக்கின் எண்ணெய் வளத்தை கைப்பற்றி மத்திய கிழக்கிலும் அதற்கு அப்பாலும், மேலும் ஆக்கிரமிப்பை நடத்துவதற்கு அங்கு ஒரு இராணுவத் தளத்தை அமைப்பதை நோக்கங்கொண்ட, அமெரிக்க ஆளும் செல்வந்தத் தட்டின் உண்மையான போர் நோக்கங்களை அமெரிக்க மக்களிடமிருந்து ஊடகங்கள் மூடிமறைக்கின்றன.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved