World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Iraqi interim regime implements further police state measures

ஈராக் இடைக்கால ஆட்சி மேலும் போலீஸ் அரசு நடவடிக்கைகளை அமுல்படுத்துகின்றது

By Peter Symonds
10 August 2004

Back to screen version

அமெரிக்கா நியமித்துள்ள ஈராக் இடைக்கால அரசாங்கம் ஜனநாயக பாசாங்கு எதையும் கைவிட்டுவிட்டு, நாட்டில் ஆக்கிரமிப்பை எதிர்த்து பரலாக நடைபெற்றுவரும் ஆயுதந்தாங்கிய எதிர்ப்பை நசுக்கும் முயற்சியாய் பகிரங்கமாக போலீஸ் அரசு நடவடிக்கைகளை அமுல்படுத்திவருகிறது.

பிரதமர் இயத் அல்லாவி நஜாப்பிற்கு விஜயம் செய்திருந்தமை, அவருடைய ஆட்சியின் நிலையின் மூர்க்கத்தனத்திற்கு மேலும் சமிக்கை காட்டும் வகையில் அமைந்திருந்தது, அங்கு அமெரிக்க மற்றும் ஈராக்கிய படைகள் ஷியைட் மதபோதகர் மொக்தாதா அல் சதரின் மக்தி இராணவ போராளிகளோடு சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ''மஹ்தி இராணுவ போராளிகள் அனைவரும் தங்களது ஆயுதங்களை கைவிட்டு நகரத்தை விட்டு வெளியேற வேண்டும்..... எந்தவிதமான பேச்சுவார்த்தைக்கும், சண்டை நிறுத்த உடன்பாட்டிற்கும் இடமேயில்லை'' என்று அவர் அறிவித்தார்.

அல்லாவியின் விஜயம் நகர மையத்தில் இரத்தக்களரி போருக்கான தொடக்க கட்டத்தை உருவாக்கிவிட்டது. அல் சதர் பதிலளிக்கும் போது நஜாப் நகரில்தான் தான் இருக்கபோவதாகவும் ''எனது கடைசி சொட்டு இரத்தம் சிந்துகின்றவரை தொடர்ந்து'' போரிடப்போவதாகவும் அறிவித்தார். பிரிட்டனை தளமாக கொண்ட இன்டிபெண்டன்ட் பத்திரிகை தந்துள்ள தகவலின்படி, இமாம் அலியின் கல்லறையிலும் ''அதைச்சுற்றியுள்ள'' பகுதிகளிலும் ஷியாக்கள் புனிதமான இடங்கள் என்று கருதுகின்ற பிறபகுதிகளிலும் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கு உள்ளூர் அதிகாரிகள் பச்சைக்கொடி காட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

அத்தகைய தாக்குதல் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கும் அல்லாவி ஆட்சிக்கும் எதிர்ப்பை தீவிரப்படுத்தவே செய்யும். எந்தவித குறிப்பிடத்தக்க சமூக அடித்தளமும் இல்லாத நிலையில், அல்லாவியுடைய ஒரே பதில் அடக்குமுறைதான். பிரதமர், நஜாப்பிற்கு அமெரிக்க Black Hawk ஹெலிகாப்டரில் கொண்டு செல்லப்பட்ட அதே நாளில், அவரது அரசாங்கம் பல்வேறு வகைப்பட்ட குற்றங்களுக்கு மரண தண்டனையை மீண்டும் அறிமுகப்படுத்தப்போவதாக அறிவித்தது.

ஏற்கனவே அமெரிக்கா ஈராக்கில் இருப்பதற்கு ஆழமான விரோதப் போக்கு கொண்டுள்ள அந்த மக்களை பயமுறுத்தி மிரட்டுவதே இந்த முயற்சியின் நோக்கமாகும். இந்த நடவடிக்கையை அறிவித்த, அரசின் அமைச்சர் Adnan al-Janabi ''ஈராக்கில் பாதுகாப்பு நிலவரத்தை'' சமாளிப்பதற்கு மரண தண்டனை தேவைப்படுவதாக அறிவித்தார். இம்முடிவுக்கு பொதுமக்களின் பதில்வினை தொடர்பான வெளிப்படையான பீதி உணர்வால், Janabi ''இது எவரையும் அல்லது அரசாங்கம் வெறுக்கின்ற மக்களையும் தூக்கில் போடுவதற்கு வழி திறந்துவிடவில்லை. இது சதாம் சட்டம் அல்ல'' என்று குறிப்பிட்டார்.

ஆனால் அதிகாரபூர்வமான மறுப்பு தெரிவிக்கப்பட்டாலும், இந்தக்கட்டளை தீவிரமாக எதிர்காலத்தில் செயற்படுத்தக்கூடிய தன்மை கொண்டதாகும். உயிரை இழப்பதற்கேதுவான தாக்குதங்களில் ''தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்தை உண்டாக்குவது,'' ''போக்குவரத்தை பாதிக்கும் குற்றங்கள்,'' அதேபோல திடீர் தாக்குதல்கள், வழிப்பறிக்கொள்ளை போன்ற குற்றங்கள் மற்றும் நாட்டின் தொழிற் கட்டமைப்புக்களை தாக்குவது ஆகியவை உள்ளடங்கும். ஆட்களை கடத்துவது, கொலை, போதைப்பொருட்கள் கடத்தல், கற்பழிப்பு, உயிரியியல் அல்லது இரசாயனப்போர் தொடர்பான எந்த நடவடிக்கையும் இந்த குற்றத்திற்குள்ளாகிறது ----இந்த வாக்கியம் சதாம் ஹூசைன் மற்றும் அவருடைய முன்னாள் அதிகாரிகளை நேரடியாக குறிவைப்பதற்காக தோன்றியுள்ளது.

நியூ யோர்க் டைம்ஸ் கட்டுரை ஒன்று கூறியிருப்பதாவது: ''அமெரிக்க தலைமையிலான படையெடுப்பிற்கு பின்னர் நடத்தப்பட்ட எந்த கிளர்ச்சி நடவடிக்கைக்கும் தற்போது இந்த தண்டனை பொருந்துமென்று தாங்கள் நம்புவதாக, டாக்டர் அல்லாவியின் உதவியாளர்கள் தனிப்பட்ட முறையில் தெரிவித்தனர். இந்த வழக்கு நிரூபிக்கப்படுமானால், அல்லாவி ஏற்றுக்கொள்ள விரும்பும் குறிக்கோள் முதலாவது தூக்குத் தண்டனைகள் மிக விரைவாக வரும். குண்டு வீச்சுக்கள் திடீர் தாக்குதல்கள், ஆட்கள் கடத்தல் போன்ற குற்றங்களில் சம்மந்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களது வழக்கு பாக்தாத்திலும், இதர நகரங்களிலும் நீதிமன்றங்களில் மாதக்கணக்காக விசாரணையில் உள்ளது, ஆனால் நீதிமன்றங்கள் நீண்டகால சிறைதண்டனை விதிக்கும் அளவை கட்டுப்படுத்தி வைத்துள்ளன.

அதே நேரத்தில் அல்லாவி, ஊடகங்கள் மீது ஒடுக்குமுறை நடவடிக்கைளை மேற்கொள்ளத் தொடங்கியிருக்கிறார். சனிக்கிழமையன்று அவரது அரசாங்கம் அல் ஜசீரா வின் பாக்தாத் அலுவலகத்தை மூடுமாறு கட்டளையிட்டுள்ளது, கட்டாரை தளமாக கொண்ட பிரபலமான அந்த தொலைக்காட்சி நிலையம் ''ஈராக்கின் உண்மையான அரசியல் வாழ்வை'' காண்பிக்க தவறிவிட்டதாகவும், ''பயங்கரவாத குழுக்களின் குரலாக'' இயங்கி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது. ''அல் ஜசீரா அல்லது வேறு எவரும் நாட்டின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்'' என்று உள்துறை அமைச்சர் Falah al-Naqib அறிவித்தார்.

இந்தத்தடை ஒருமாதத்திற்கு நீடிக்கும், ஈராக்கில் திரும்ப செயல்பட வேண்டுமென்றால் அல் ஜசீரா அரசாங்கத்தின் அடியையொற்றி பின்பற்றியாக வேண்டுமென்று Naqib தெளிவுபடுத்தினார். அது மூட்பட்டிருப்பது தன்னுடைய வலைப்பின்னல் ''கொள்கை செயற்திட்டத்தை திருத்திக்கொள்வதற்கு'' ஒரு வாய்ப்பைத்தரும் என்று அவர் குறிப்பிட்டார். இந்தத் தடையின் உண்மையான நோக்கம் அமெரிக்க ஆக்கிரமிப்பு நீடிப்பதற்கும், அல்லது அதன் ஈராக் ஒத்துழைப்பாளர்களுக்கும் எதிராக எந்தவிதமான விமர்சனமும், அல் ஜசீராவாலோ அல்லது வேறு எந்த ஊடகத்தினாலோ வரவிடாமல் நசுக்குவதற்காகும்.

அல் ஜசீரா இந்த முடிவை நியாயமற்றது என்றும் ''ஈராக்கிய அரசாங்கம் பேச்சு சுதந்திரத்திற்கும் ஒளிவுமறைவற்ற நடவடிக்கைகளுக்கும் ஒரு புதிய யுகத்தை தொடக்கப்போவதாக அளித்திருந்த உறுதி மொழிகளுக்கு விரோதமானது'' என்றும் வர்ணித்துள்ளது. அல் ஜசீராவின் சார்பில் குரல்தரவல்ல Jihan Ballout இந்த தடைக்கு அதிகாரபூர்வமான காரணம் எதையும் தமது வலைப்பின்னலுக்கு தரவில்லை என்று குறிப்பிட்டார். இப்படி மூடப்பட்டிருப்பதை சர்வதேச பத்திரிகையாளர் சங்கங்கள், பாரீசை அடிதளமாக கொண்ட Reporters without Borders அமைப்பு உட்பட கண்டனம் தெரிவித்திருக்கின்றன, அது ''ஒரு உடனடி விளக்கம் தரவேண்டுமென்று'' கோரியும், அது ''ஈராக்கில் இடைவிடாது தொடர்ந்து கொண்டிருக்கும் முன் தணிக்கை கதைகள் மிகவும் கவலையளிப்பதாக உள்ளன'' என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த முடிவு பற்றி கேட்கப்பட்டபோது, அமெரிக்க அரசுத்துறை அதிகாரியான Adam Ereli ''இது ஒரு ஈராக்கிய முடிவு. எங்களுக்கு அதில் சம்மந்தமில்லை'' என்று கூறினார். என்றாலும் அவர் அந்த தடையை நியாயப்படுத்தி, பாக்தாத் ஆட்சிக்கு தனது அனுதாபத்தை தெரிவித்தார். ''ஈராக் ஒரு கடினமான சூழ்நிலையில்'' இருப்பதாக குறிப்பிட்டார். ஆயினும், இப்படி வெளிப்படையாக வெளியிடப்பட்டுள்ள விமர்சனங்கள் அல்லாவிக்கும் அவரது அமெரிக்க ஆதரவாளர்களுக்கும் இடையே நிலவுகின்ற உறவுகளை கோடிட்டுக் காட்டுவதாக அமைந்திருக்கிறது. அவர்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக அல் ஜசீராவை கடுமையாக கண்டித்து வருகின்றனர். அந்த புதிய ''சக்திவாய்ந்த மனிதரான'' அல்லாவி, அமெரிக்க ஆக்கிரமிப்பு முற்றுகையை தாங்கி நிறுத்துவதற்கு வாஷிங்டனில் வகுக்கப்பட்ட ஒடுக்குமுறை கொள்கைகளுக்கு வசதியாக அவர் ஈராக்கிய முகச்சாயல் தருகிறார்.

தூக்குத்தண்டனை அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதும், அல் ஜசீரா மீது தடைவிதிக்கப்பட்டிருப்பதும் அடுத்து வரயிருப்பதைக் கோடிட்டுக்காட்டுவதாக அமைந்திருக்கின்றன. பதவியில் அமர்த்தப்பட்ட 10-நாட்களுக்குப் பின்னர், அல்லாவி பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்தார், அவை நாடு முழுவதிலோ அல்லது ஒரு பகுதியிலோ இராணுவச்சட்டத்தை கொண்டுவருவதற்கு வகைசெய்தன. அவசரநிலை பிரகடன விதிகளின்படி, எல்லா பாதுகாப்புப்படைகளும் பிரதமருக்கு நேரடியாக அறிக்கைகளை தரவேண்டும். ஊரடங்கு உத்தரவுகளை பிறப்பிப்பதற்கும், நகரங்களை, மாநகரங்களை சுற்றிவளைப்பதற்கும், சொத்துக்களை முடக்குவதற்கும், முறையின்றி சோதனைகளை நடத்துவற்கும் மற்றும் ஆயுந்தாங்கிய எந்த தனிமனிதர்களையும் கைதுசெய்வதற்கும் அவருக்கு சர்வாதிகார அடிப்படையிலான அதிகாரங்களை தருவதற்கும் வகை செய்யப்பட்டிருக்கிறது.

இன்று வரை, அல்லாவி இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்கவில்லை. என்றாலும், சென்ற வாரம் நாட்டின் இடைக்கால ஜனாதிபதியான Sheikh Ghazi al-Yawar தற்போது நஜாப்பில் நடந்து வருகின்ற சண்டை இராணுவச் சட்டத்தை கொண்டு வருவதற்கு சாக்குப்போக்காக அமையக்கூடும் என்று கோடிட்டுக்காட்டினார். ''புதிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்த வேண்டிய தருணம் வந்துவிட்டது'' என்று அவர் கூறினார். பெரும்பாலும் ஷியாக்கள் அடங்கிய 20- லட்சம் மக்கள் வாழ்கின்ற, பரவலாக தொழிலாள வர்க்கம் வாழ்கின்ற, பாக்தாத்தின் குடிசைப்பகுதியான சதர் நகரத்தில் திங்களன்று அரசாங்கம் மாலை 4-மணிமுதல் காலை 8- மணிவரை தினசரி ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது, அந்தப்பகுதி ஆக்கிரமிப்பிற்கெதிரான எதிர்ப்பு மையமாக உள்ளது.

தனது அதிகாரத்தை இறுக்கமாக்கிக் கொள்வதற்கு அல்லாவி மற்றொரு நடவடிக்கையை எடுத்திருக்கிறார். அவரது பிரதான அரசியல் எதிரிகளில் ஒருவரான அஹமது சலாபி மீது கள்ள நாணயம் தாயாரித்த குற்றச்சாட்டின் மீது கைது வாரண்டுகள் பிறபிக்கப்பட்டுள்ளன. அல்லாவியை போன்று, சலாபி ஈராக் தேசிய காங்கிரஸ் தலைவர் (INC), நீண்டகால வாஷிங்டனின் கைக்கூலியாவார். சில மாதங்களுக்கு முன்னர் வரை, தரகராக இருந்த அவர், முன்னணி பென்டகன் அதிகாரிகளால், குறிப்பாக அடுத்த பிரதமர் ஆவதற்கு வாய்ப்புள்ளவர் என்று கூறப்பட்டவர்.

என்றாலும், அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு பொதுமக்களது எழுச்சி அச்சுறுத்தலாக வளர்ந்ததை தொடர்ந்து, சலாபிக்கு அமெரிக்க ஆதரவு வீழ்ச்சியடைந்தது. தனது சொந்த விசுவாசிகளுக்கு வழிசெய்வதற்காக அவர் பாத்திஸ்டுகளை முற்றிலுமாக நீக்கிவிடும் கடுமையான கொள்கைக்கு அவர் வாதிட்டு வந்தார். ஆயுந்தாங்கிய எதிர்ப்பு வளர்ந்து கொண்டு வந்ததால், அல்லாவியின் பக்கம் வாஷிங்டன் திரும்பியது, அல்லாவி பாத் கட்சியின் முன்னாள் உறுப்பினர், சதாம் ஹூசேனின் இராணுவ மற்றும் புலனாய்வு சாதனங்களின் அதிருப்தி சக்திகளோடு நெருக்கமான தொடர்பு வைத்திருப்பவர், கொடூரமானவர் என்ற நிலைச்சான்றின் அடிச்சுவட்டை கொண்டவர்.

Salem Chalabi, INC தலைவரின் மைத்துனர் மற்றும் சதாம் ஹூசேனையும் இதர பாத் கட்சி தலைவர்களையும் விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்தின் தலைவர், அவரும் குறிவைக்கப்பட்டிருகிறார். சலாபி குடும்ப விவகாரங்கள் குறித்து விசாரணை செய்து வந்த ஈராக் நிதித்துறை மூத்த அதிகாரி ஒருவரது கொலையில் சம்மந்தப்பட்டிருக்கிறார் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருகிறது. சலாபி அவரது மைத்துனர் இருவருமே குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளனர். திட்டவட்டமான சூழ்நிலைகள் இன்னும் தெளிவாகத்தெரியவில்லை என்றாலும், அவர்கள் இருவரும் அல்லாவியைப் போல் தங்களது பொருளாதார மற்றும் அரசியல் அந்தஸ்தை பெறுவதற்கு பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. 1991-ல் ஜோர்டான் நீதிமன்றம் அஹமது சலாபியை மோசடி செய்தார் என்பதற்காக தண்டித்துள்ளது, அவர் 22 ஆண்டுகள் சிறைத்தண்டனையிலிருந்து தலைமறைவாகியுள்ளார்.

சலாபிக்கு நீதி வழங்க வேணடும் என்ற நோக்கத்தில் இந்த பிடி வாரண்டுகள் பிறபிக்கப்படவில்லை. அல்லாவியின் பதவிப்பிடிப்பை இறுக்கமாக்கிக் கொள்வதற்கும் போட்டிபோடுவதிலிருந்து அவர்களை விலக்கி வைப்பதற்காகவும் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்ற மாதம் Sydney Morning Herald பத்திரிகையில் பிரதமர் நேரடியாக பாக்தாத்திலுள்ள அல்-அமாரியா சிறைச்சாலையில், ஜூன் மத்தியில் கிளர்ச்சிக்காரர்கள் என்று சந்தேகப்பட்ட 6- கைதிகளை நேரடியாக நீதி நிர்வாகத்திற்கு வெளியில் சுட்டுக்கொன்றதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து அதிகாரபூர்வமான விசாரணைகள் எதுவும் நடத்தப்படவில்லை, அல்லது குற்றச்சாட்டுக்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, கடந்த சில நாட்களுக்கு மேலாக அல்லாவி நிர்வாகம் எடுத்துவரும் நடவடிக்கைள், பாக்தாத்தில் ஒரு போலீஸ் அரசை உருவாக்குவதற்கு வாஷிங்டன் முயன்று வருகிறது என்பதை உறுதிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. இப்படி உருவாக்கப்படும் ஆட்சிக்கும் சதாம் ஹூசேன் ஆட்சிக்கும், அடிப்படையில் எந்த வேறுபாடுகளும் இல்லை. என்றாலும் இந்த வகையில், அல்லாவி முற்றிலும் பொருளாதார அரசியல் மற்றும் இராணுவ அடிப்படையில் அமெரிக்காவின் ஆதரவை முழுமையாக சார்ந்திருக்கிறார்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved