World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

US atrocity in Najaf

நஜாப்பில் அமெரிக்க அட்டூழியம்

By the Editorial Board
13 August 2004

Back to screen version

நஜாப்பின்மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் ஒரு போர்க்குற்றம் ஆகும். அந்நிய ஆக்கிரமிப்பில் உள்ள வலுவற்ற ஆயுதம் தரித்த எதிரிகள்மீது, உலகின் தலையாய ஏகாதிபத்திய சக்தி தன்னுடைய பெரும் இராணுவ ஆற்றலைக் கட்டவிழ்த்து விட்டுள்ள காட்சி, ஸ்பெயினில் உள்ள Guernica மீதுபாசிஸ்டுகள் நிகழ்த்திய குண்டுவீச்சுக்கள், எத்தியோப்பியோவை இத்தாலி கற்பழித்த செயல், இரண்டாம் உலகப்போரின்போது அண்டை நாடுகள் மீது ஜெர்மனி நடத்திய மின்னல்வேகத் தாக்குதல்கள் உள்பட இருபதாம் நூற்றாண்டின் மிக இழிவான குற்றங்களைத்தான் நினைவுகூற வைத்துள்ளது.

இயத் அல்லாவியின் கீழான வாஷிங்டனுடைய கைப்பாவை அரசாங்கத்தின் பெயரால், அமெரிக்க இராணுவம், ஈராக்கை நடைமுறையில் ஓர் அமெரிக்கக் காலனியாக மாற்றும் முயற்சிகளுக்கு எதிராக எழுச்சி செய்து வரும் மொக்தாதா அல் சதர் என்னும் சமயகுருவின் ஆதரவாளர்களை அமெரிக்க இராணுவம் படுகொலை செய்து வருகிறது.

நஜாப்பில், 11வது கடற்படை விரைவுப் படையினராலும் முதல் குதிரைப் படைப் பிரிவாலும் செய்யப்பட்டு வரும் கொடூரத்தின் உண்மைத் தன்மை பற்றி அமெரிக்கத் தொலலைக்காட்சி வலைப் பின்னல்களும், செய்தி ஊடகங்களும் சரியாகக் கூறுவதில்லை. அமெரிக்க போர்க் குண்டுவீச்சு விமானங்கள், ஹெலிகாப்டர் பீரங்கிப்படைகள், களக் குண்டுவீச்சு பீரங்கிகள் மற்றும் கவசவண்டிகள் அனைத்தும், அமெரிக்க கவச வாகனங்களுக்கு எதிராக சிறு ஆயுதங்கள், கைகுண்டு எறிதல் போன்ற ஒப்பீட்டளவில் பயனற்ற சிறிய ஆயுதங்களை மட்டுமே பயன்படுத்தி வரும் ஈராக்கிய போராளிகளுக்கு எதிராகத் தங்கள் வலிமையைக் காட்டிவருகின்றன.

நஜாப்பில், சதரின் மஹ்தி இராணுவ படையினரை, இடுகாட்டில் அவர்களின் காப்பு நிலைகளில் இருந்து, ஷியைட் முஸ்லிம்களின் மிகப்புனிதமான தலங்களில் ஒன்றாகிய இமாம் அலி மசூதியின் மேற்குப் பகுதிக்கு விரட்டுவதற்கு நடைபெற்ற ஒருவாரக் கடும்போரில், அமெரிக்கப்படை கூறும் எண்ணிக்கை சரியென்று வைத்துக்கொண்டால், குறைந்தது 500 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கானவர்கள் காயமுற்றுள்ளனர்.

அமெரிக்கப் படைகளின் நடவடிக்கைபற்றி விவரிக்கையில், ஒரு கடற்படை செய்தித்தொடர்பாளர் அசோசியேட்டெட் பிரஸ்ஸிற்கு ஆகஸ்ட் 11 அன்று, "நாங்கள் அப்பகுதியில் கூடுதலாக ரோந்துப் பணியில் ஈடுபட்டு, ஹெலிகாப்டர்களையும் கொண்டு பகுதி முழுவதும் பறந்து வந்து, எதையாவது மோசமானது என்று பார்த்தபொழுது, அதனைத் தகர்த்தோம்" என்றார்.

அமெரிக்க தாக்குதலை நடத்தியவர்களால் சாதாரணக் குடிமக்கள் மடிந்த எண்ணிக்கை பற்றிய மதிப்பீடு எதுவும் செய்யப்படவில்லை; எனினும் பாக்தாதில் சதர் நகர ஷியைட் சேரிப்பகுதி, தெற்கு ஈராக்கில் நஜாப் தவிர மற்ற நகரங்களிலுள்ள நகர்ப்புற மையங்கள்மீது நிகழ்த்தப்பட்ட பெரும் குண்டு வீச்சு சக்திகளின் தன்மையைக் கவனிக்கும்போது, அவை பல்லாயிரக்கணக்கில் இருந்தாக வேண்டும்.

இந்தவாரத் துவக்கத்தில், அமெரிக்க இராணுவம் பல்லாயிரக்கணக்கான நஜாப் பகுதி வாழ்வோரிடம் அவர்கள் இல்லங்களை "இராணுவப் பகுதி" என அறிவித்து அவர்களைக் காலிசெய்யுமாறு உத்தரவு இட்டது. ஆயிரக்கணக்கானவர்கள் படையெடுப்பாளர்களை எதிர்த்து நிற்க முடிவு எடுத்தனர் அல்லது அவர்களைச் சுற்றி நிகழ்ந்து கொண்டிருந்த போரினால் வெளியேறமுடியாதபடி தடுக்கப்பட்டுவிட்டனர்.

மின்சாரம், தண்ணீர், மருத்துவ வசதிகள் இவை அனைத்தும் 600,000 பேர் கொண்ட இந்நகரத்தில் செயல்படவில்லை. ஆயிரக்கணக்கான புனிதத்தலங்களும், கல்லறைகளும் அழிக்கப்பட்டுள்ளன அல்லது சேதப்படுத்தப்பட்டுள்ளன. மசூதியைச் சுற்றி வளர்ந்துள்ள, 1,300 ஆண்டுகளுக்கும் முந்தைய இப்பழைமை வாய்ந்த நகரத்தின் வரலாறு, இப்பொழுது வெறும் கற்குவியலாகியுள்ளது.

ஈராக்கின் ஷியைட் மக்களின் பண்பாட்டு உறைவிட மையமாகத் திகழும் பகுதியை அமெரிக்க இராணுவம் இடிபாடுகளாக மாற்றிவருவதன் கடும் அவலத்தை அமெரிக்கச் செய்தி ஊடகம் கவனத்தில் கொள்ளத் தவறியுள்ளது. 1991 ம் ஆண்டில் இருந்து கடந்த ஆண்டு வரை அமெரிக்கவால் தெற்கு ஈராக்கில் வலிந்து செயல்படுத்தப்பட்டிருந்த "பறக்கக் கூடாத பகுதி" என்பது சதாம் ஹுசைனின் பாதிஸ்ட் ஆட்சியால் மேற்கொள்ளப்படும் அடக்கு முறையில் இருந்து ஷியைட் மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையாக நியாயப்படுத்தப்பட்டிருந்தது. அமெரிக்கப் படையெடுப்பு அடக்கப்பட்டிருக்கும் ஷியைட்டுக்களை "விடுவிக்கும் செயல்" என்று பிரச்சாரம் செய்யப்பட்டிருந்தது.

இப்பொழுது அமெரிக்க "விடுவிப்பாளர்கள்" 1991க்குப் பிறகு காட்டு மிராண்டித்தனமான பெரும் அவதிக்குட்படுத்தும் பெரும் அடக்குமுறையை ஷியைட்டுக்கள்மீது கட்டவிழ்த்துள்ளனர். நஜாப்பில் நடைபெற்றுள்ள படுகொலைக்கு எதிராக ஷியைட்டுக்களின் பெரும் மக்கட்பிரிவினர் பாக்தாத், பாஸ்ரா, நசீரியா மற்றும் ஈராக்கில் ஷியைட்டுக்கள் பெரும்பான்மையாக வாழும் பல நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்தித் தங்கள் எதிர்ப்பைக் காட்டியுள்ளனர். பிற மத்திய கிழக்கு நாடுகளிலும் கூட எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன.

கடந்த 24 மணிநேரத்தில், அமெரிக்கா நகரத்தின் மையப்பகுதியை நோக்கிப் பாய்ந்து வரும் நிலையில், சதரின் நூற்றுக்கணக்கான போராளிகள், ஒருகால் சதரும் உட்பட, கடைசி அரணாக இமாம் அலி மசூதியைக் கொண்டுள்ளனர். அமெரிக்கா நிறுத்தியுள்ள இடைக்கால அரசாங்கத்தின் பெயரளவுக் கட்டுப்பாட்டிற்குள் அடங்கிய பீரங்கிவண்டிகளும், ஆயிரக்கணக்கான அமெரிக்கப்படைகளும், பெரும்பாலும் அடையாளக் குறியீடாய் இருக்கும் ஈராக்கியப் படைகளும், அவர்களைச் சூழ்ந்துள்ளன. சதரின் போராளிகள் சரணடைய வேண்டும் என்று கோருகின்றன, மற்றும் அவ்வளாகத்தைத் தகர்ப்போம் அல்லது பாதுகாத்துக் கொண்டிருப்பவர்களை பட்டினியிடுவோம் என்று அமெரிக்கப் படைகள் அச்சுறுத்துகின்றன. மஹ்திப் படையின் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் கல்லறைக்குள்ளும், பழைய நகரத்தின் கட்டிடங்களுக்குள்ளும் அகப்பட்டுக்கொண்டுள்ளதாக நம்பப்படுகிறது.

ஈராக்கியத் எதிர்ப்பிற்கு எதிராக வாஷிங்டன் தயாரித்து வரும் குருதிக்குளியலை மறைக்கும் வகையில் "இறைமை" பெற்ற இடைக்கால அரசாங்கத்தை நியமித்தல் என்ற முழு சொல்விளையாட்டின் மறுக்க முடியாத அரசியல் உண்மையைத்தான் இந்தப் படர்ந்த படுகொலை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. பிரதம மந்திரி அல்லாவியின் கைப்பாவை அரசாங்கம் "ஜனநாயகத்திற்கான மாற்றத்தைப்" பிரதிபலிக்கிறது என்று கூறும் அமெரிக்கச் செய்தி ஊடகத்தின் அவநம்பிக்கைக் கூற்றுக்கள் இருந்தபோதிலும், இதனுடைய உண்மையான பணி, கடந்த வசந்த காலத்தில் வாஷிங்டன் முடிக்க விரும்பிய ஆனால் அரசியல் காரணத்திற்காகத் தாமதப்படுத்தவேண்டிய கட்டாயத்திற்குட்பட்ட, அதன் மனிதப் படுகொலைக்கு ஒரு உள்நாட்டு முகம் கொடுப்பதுதான் என்பது தொடர்ந்து இருந்து வருகிறது.

சதர் தலைமையிலான ஷியைட்டு இயக்கம் சடரீதியாக அழிக்கப்பட வேண்டும் என்று ஈராக்கில் இருந்த அமெரிக்க நிர்வாகம் சதரையும் மற்ற மஹ்தி படைகளையும் கைதுசெய்யக் கடந்த மார்ச் மாதம் புஷ் முதன் முதலில் உத்தரவிட்டார். அதே நேரத்தில், வெள்ளை மாளிகை ஆக்கிரமிப்பிற்கு எதிராக சன்னி சார்புடைய எழுச்சியின் மையமாக இருந்த பல்லுஜாவைத் தாக்குவதற்கு உத்தரவு இட்டது.

ஆயினும், இந்த அடக்குமுறை எதிர்பாரமால் ஈராக் முழுவதையும் விரைவில் சூழ்ந்த ஓர் எழுச்சியைத் தூண்டிவிட்டது. உழைக்கும் வர்க்கம், மற்றும் நாடெங்கிலும் மிகவும் ஒடுக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த ஈராக்கிய ஷியா, சன்னி இளைஞர்கள் பல்லாயிரக் கணக்கில் போராட்டத்தில் நுழைந்த நிலை, ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்பு பழைய பாதிஸ்ட் ஆட்சியின் ஆதரவாளர்களிடமிருந்து மட்டுமே என மட்டுப்படுத்தப்பட்டிருந்த அதிகாரபூர்வமான அமெரிக்கப் பொய்யுரையை அம்பலப்படுத்தியது.

ஈராக்கிய நகரங்களின் மீது பாகுபாடு காட்டாமல் குண்டுவீச்சு நடத்திய காட்சிகள், பெருகி வந்த அமெரிக்கப் படைவீரர்களின் இறப்புக்கள், அபு கிறைப் சிறைச் சாலையில் நிகழ்ந்த சித்திரவதை பற்றிய உண்மையின் வெளிப்பாடுகள் அனைத்தும் அமெரிக்காவில் பெரும் போர் எதிர்ப்பு உணர்விற்கு வகைசெய்தன. ஏப்ரல் மாதக் கடைசியில் அமெரிக்காவில் நடந்த ஒரு கணக்கெடுப்பில் 58 சதவிகிதத்தினர் "அமெரிக்க உயிரிழப்பு பயனற்றது" என்று கூறினர், 50 சதவிகிதத்தினர் அனைத்து அமெரிக்கப் படைகளும் ஈராக்கில் இருந்து "எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில்" வெளியேறவேண்டும் என்ற கருத்தை ஆதரித்தனர்.

இப்பெருகிவந்த அரசியல், இராணுவ நெருக்கடிக்குப் பதில் கொடுக்கும் வகையில் அமெரிக்கப்படைகள் தந்திரோபாய முறையில் தொடர் பின்வாங்கல்களுக்கு புஷ் நிர்வாகம் உத்தரவிட்டது. பல்லுஜாவின் எழுச்சியாளர்களுடன் முதலிலும், பின்னர் நஜாப், கர்பாலா, பாக்தாதின் புறநகர் சதர் நகரம் இவற்றில் இருந்த மஹ்தி படையுடனும் போர்நிறுத்த உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தப் போர்நிறுத்த உடன்படிக்கைகளின் நோக்கமே, இப்பொழுது பெரும் இரத்தக் குளியலை சிந்திக் கொண்டிருப்பதற்குத் தேவைப்படும் அரசியல் மற்றும் இராணுவ நிலைமைகளை உருவாக்குவதற்கான நேரத்தை அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு வழங்குவதற்காகும். மிகப்பெரிய அமெரிக்க ஒடுக்குமுறைக்கான ஈராக்கிய ஆதரவின் மூடிமறைப்பை வழங்கும் பொருட்டு, ஐக்கிய நாடுகள் மன்றத்தின் அனுமதியுடன், ஒரு "இறையாண்மை" பெற்ற இடைக்கால அரசாங்கம் நிறுவப்படுவதை புஷ் நிர்வாகம் முன்னெடுத்தது.

பத்து ஆண்டுகளுக்கும் மேலாக CIA இடம் பணம் பெற்றுக் கொண்டு வந்திருந்த அல்லாவியைப் பிரதம மந்திரியாகச் செய்யும் முயற்சியை வெள்ளை மாளிகை மேற்கொண்டது. அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு முற்றிலும் அடிபணிந்து நிற்றலும், மிருகத்தனமான வெறிச் செயல்களுக்குப் விருப்புடையவராக பெயர் பெற்றதும்தான் இப்பதவிக்கு வருவதற்கான அல்லாவியின் தகுதிகள் ஆகும். தன்னுடைய அதிகாரத்தை ஈராக்கிய எதிர்ப்புக்கு எதிராக அமெரிக்கா தாக்குதல் நடத்தும் முயற்சிகளைப் புதுப்பிப்பதில் அரசின் அனுமதியை வழங்குவதில் அவர் தயக்கம் காட்டவில்லை.

இந்தத் தாக்குதலுக்குத் தலைமை தாங்கும் வகையில், 7,000 கூடுதலான கடற்படையின் தாக்குதல் படையினர் ஜூலை மாத நடுவில் ஈராக்கிற்கு அனுப்பப்பட்டு, அவர்கள் பல்லுஜா, நஜாப் நகரங்களுக்கு வெளியே தம்மை சரியான இடத்தில் நிலைப்படுத்திக் கொண்டனர். இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட இராணுவத் தயாரிப்புக்கள் அமெரிக்காவிற்குள் நடைபெறும் முக்கிய அரசியல் தயாரிப்புக்களுடன் இணைந்திருந்தன. இவ்வகையில் அமெரிக்கச் செய்தி ஊடகமும், அதையும் விட முக்கியமான வகையில் ஜனநாயகக்கட்சியும் ஒரு தவிர்க்கமுடியாத பங்கைக் கொண்டிருந்தன.

அமெரிக்கச் செய்தி ஊடகத்தைக் கட்டுப்படுத்தும் பெரு வணிக நிறுவனங்கள், படையெடுப்பின் பின்னணியில் உள்ள உண்மையான போர் நோக்கத்துடன் உடன்பாடு கொண்டுள்ளன: ஈராக்கில் நிரந்தரமான இராணுவத் தளங்களை அமைப்பதற்கும், நாட்டின் எண்ணெய் வளங்கள் அமெரிக்கப் பெருவணிக நலன்களால் எடுத்துக்கொள்ளப்படவும் அனுமதிக்கும் வகையில் ஒரு கைப்பாவை அரசாங்கத்தை அங்கு நிறுவ வேண்டும் என்பதே அதுவாகும்.

வலதுசாரி வெளியீடுகள் முதல் தாராண்மை வெளியீடுகள் எனக் கூறிக் கொள்ளும் நியூ யோர்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் வரை, பெரும்பாலான செய்தி ஊடகம் அமெரிக்க மக்களின் போர் எதிர்ப்புக் கருத்துக்களை அடக்கவும், போரின் நெறித்தன்மை பற்றி வினா எழுப்புதலைத் தடைசெய்யும் வகையிலும் வேலை செய்து வருகின்றன.

ஆனால் இப்பொழுது கட்டவிழ்ந்துவரும் நிகழ்வுகளுக்குக் காரணமான போர்க்குற்றவாளிகளுக்கு மிகப் பெரிய சேவையைக் கொடுப்பது ஜனநாயகக்கட்சியும் அதன் ஜனாதிபதி வேட்பாளரும் ஆன ஜோன் கெரியும்தான். இப்பொழுது நடைபெறும் தாக்குதல், இடைவிடாத இராணுவவாதம், பிற இன பழிப்புவாதம் இவற்றின் வெளிப்பாடாகத் திகழ்ந்த ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டுக் கூட்டத்தை அடுத்து வந்துள்ளது தற்செயல் நிகழ்வு அல்ல. கட்சியின் தலைமைப்பீடமும் கெர்ரியும் போரெதிர்ப்பு உணர்வை ஒரம் கட்டுவதற்கு அனைத்து முயற்சிகளையும் கொண்டுள்ளனர். நவம்பர் மாதம் நடக்க இருக்கும் ஜனாதிபதித் தேர்தல்களுககு முன்னோடியான நிகழ்ச்சிகளில் ஈராக்கியப் படையெடுப்பிற்கு எதிர்ப்பு என்பது அதிகாரப்பூர்வமான விவாதங்களில் இருந்து முற்றிலும் விலக்கப்பட்டு விட்டது.

தான் தலைமை தாங்கும் எந்த நிர்வாகமும் அமெரிக்கப் படைகள் ஈராக்கில் அங்கு "உறுதித்தன்மை" நிறுவப்படும் வரை - அதாவது ஈராக்கிய எதிர்ப்பை முற்றிலும் அடக்கும் வரை என்பதற்கு இடக்கரடக்கல் சொற்றொடர் - நிறுத்திவைக்கப்படும் என்று கெர்ரியே அறிவித்துள்ளார்.

அமெரிக்க ஆளும் வர்க்கம் மிகக்காட்டுமிராண்டித்தனமான, மிருகத்தனமான முறைகளைத் தன்னுடைய ஏகாதிபத்திய நோக்கங்களை அடைவதற்காகப் பயன்படுத்தத் தயாராக உள்ளது என்பதை குறைத்து மதிப்பிட்டுவிடக்கூடாது. அமெரிக்க ஏகாதிபத்தியம் இறுதியாக தோல்வியை ஒப்புக்கொள்ளுவதற்கு முன், கிட்டத்தட்ட மூன்று மில்லியனுக்கும் மேலான வியட்நாம் மக்கள் உயிரிழக்க நேரிட்டது. வாஷிங்டனும், வால் தெருவும் இத்தகைய தீய நடவடிக்கைகளை மீண்டும் ஈராக்கில் மேற்கொள்ளத்தான் தயாராக இருக்கின்றன.

இப்பொழுது நஜாப்பில் நடத்தப்படும் மக்கள் படுகொலை நாடு முழுவதையும் ஓர் அமெரிக்கக் காலனியாக வலுப்படுத்தும் என்று, ஈராக்கின் மீது படையெடுத்த திட்டத்தைத் தீட்டியவர்கள் இன்னும் நம்புவார்களேயாயின், அது அவர்கள் தங்களைத் தாங்களே பெரும் ஏமாற்றிக்கொள்வதற்குத்தான் ஒப்பாகும். இந்நடவடிக்கை அமெரிக்கத் தலைமையிலான படைகளின் ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்பைத் தீவிரப்படுத்தியுள்ளதுடன், அல்லாவியின் ஆட்சிக்கும் மக்களுடைய விரோதப்போக்கை அதிகரித்துள்ளது.

மக்களிடமிருந்து பதிலடி கிடைக்கும் என்ற அச்சத்தில், நஜாப் மாநிலத்தின் துணை கவர்னரும், அமெரிக்காவினால் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக்குழுவில் உள்ள 30 பேர்களில் 16 பேரும் இத்தாக்குதலை எதிர்த்து ராஜிநாமா செய்துள்ளனர். பாக்தாத்தில் உள்ள சதர் நகர எல்லைக்குள், இரண்டு மில்லியன் மக்கள் வசிக்கும் இப்பகுதியைக் காப்பதற்காக ஆயுதம் ஏந்தியுள்ள பல்லாயிரக்கணக்கான ஈராக்கியர்களுடன் பெரும்போரை நடத்துவதற்காக அமெரிக்கப் படை ஆயிரக்கணக்கான படைவீரர்களை நிறுத்தியுள்ளது. குட், நசீரியா, மற்ற ஷியைட் நகரங்களிலும் போர்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.

பெரும்பாலான ஷியைட் பிரிவினர் வசிக்கும் தெற்கு நகரங்களான பாஸ்ரா, அமாரா ஆகியவற்றில் பெரும் மக்கள் எழுச்சியை எதிர்நோக்கும் நிலையில் பிரிட்டிஷ் படைகள் இருக்கின்றன. "ஈராக்கியர்களுக்கு எதிரான ஒரு சட்டவிரோத, தேர்ந்தெடுக்கப்படாத அரசாங்கம் நடத்தும் குற்றங்களுக்கு விடையிறுக்கும் வகையிலும், ஈராக்கை விடுவிக்க வந்தோம் எனக் கூறிக்கொண்டு ஈராக்கியர்களைக் கொன்று குவிக்கும் ஆக்கிரமிப்புப் படைகளுக்கும் விடையளிக்கும் வகையிலும் ", பஸ்ரா மாநிலத்தின் துணை ஆளுனர் ஹாஜி சலாம் அவட் அல் - மாலிகி, நகரத்தின் துறைமுகத்தில் இருந்து எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுவது நிறுத்தப்படவேண்டும் என்ற அழைப்பை விடுத்துள்ளார்.

தெற்கு ஈராக்கிய எண்ணை வயல்களில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் செயல்பாடுகளை நிறுத்திவிட்டு, வேலநிறுத்தத்தின்பேரில் வெளியேறியுள்ளனர்.

மாலிகியிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பிரிட்டிஷாரால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 1000 போலிசாரும், படைத் துணைப் பிரிவினரும் அறிவிப்புக் கொடுத்துள்ளதுடன், சதரின் படைகளுடன் சேர்ந்துவிடுவோம் என்ற அச்சுறுத்தலையும் வரவேற்றுள்ளனர்.

சன்னி முஸ்லிம் அமைப்பின் முஸ்லிம் அறிஞர்கள் சங்கம் எனப்படும் (Association of Muslim Scholars) அமைப்பு ஒரு சமய ஆணையை விடுத்துள்ளது; இதன்படி அரசாங்கத்தின் இராணுவம், போலீஸ் படைகளில் இருக்கும் சன்னிகள் அனைவரும் அமெரிக்க இராணுவம் சதரின் இயக்கத்தைத் தாக்குவதற்கு உதவக்கூடாது எனத் தடை போட்டுள்ளது. பல்லுஜாப் பகுதியில் மீண்டும் போர் வெடித்துள்ளது.

அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமித்துள்ளது, மத்திய கிழக்கிலும் அதற்கு அப்பாலும், மக்களுடைய உள்ளத்தில் சீற்றத்தைக் கொழுந்துவிட்டு எறியச் செய்து, தங்கள் நாடுகளிலுள்ள முதலாளித்துவ அரசாங்கங்களின் செயலற்ற தன்மை, இயலாத தன்மை இவற்றின் மீதுள்ள சீற்றத்தையும் தீவிரப்படுத்தியுள்ளது. மிக அதிக அளவில் ஷியைட் பிரிவு முஸ்லிம்கள் உள்ள ஈரான் நாட்டில் மக்களுடைய உணர்வு, அமெரிக்காவிற்கு எதிராக வெளிப்படையாகப் போரிடவேண்டும் என்ற உணர்வு கொந்தளிக்கும் தன்மை, அந்ந நாட்டின் சமயச் சார்புடைய அரசாங்கத்தை தலையீடு செய்வோம் என்ற எச்சரிக்கை விடும் நிலைக்குக் கொண்டுவிட்டுள்ளது. இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்கள் தங்கி இருக்கும் முக்கிய ஆட்சிகள் சிலவற்றின் உயிர்வாழ்வு தப்புமா என்று கேள்வி எழுகின்றது : குறிப்பாக எகிப்தில் ஹோஸ்னி முபாரக், ஜோர்டானில் ஹாஷிமைட் முடியாட்சி, செளதி அரேபிய அரசகுடும்பம், பாகிஸ்தானின் இராணுவ சர்வாதிகாரி பர்வேஸ் முஷாரப் ஆகியோருடைய ஆட்சிகளாகும்.

எல்லாவற்றிற்கும் மேலாக அமெரிக்க ஏகாதிபத்தியம், அமெரிக்கத் தொழிலாள வர்க்கத்துடன் ஒரு மோதுதல் போக்கில் சென்று கொண்டிருக்கிறது. அதிகாரப்பூர்வமான விவாதங்களில் ஈராக்கிய ஆக்கிரமிப்பின் குற்றஞ்சார்ந்த தன்மை ஒதுக்கப்படலாம் எனினும், அது பெருகிய அளவில் அதிருப்தியையும், வெறுப்புணர்வையும் மில்லியன் கணக்கான மக்களிடம் விதைத்துக் கொண்டு வருகிறது.

இத்தகைய ஜனநாயகக் கட்சி, மற்றும் செய்தி ஊடகத்தின் முயற்சிகளான, அமெரிக்க மக்கள் பெயரில் இழைக்கப்படும் குற்றங்களுக்கு எதிராக மக்கள் கொண்டுள்ள எதிர்ப்பை அமுக்கிவிடும் முயற்சிகளுக்கு எதிராக, அமெரிக்க மற்றும் அதன் நட்புநாடுகளின் படைகள் உடனடியாக அங்கிருந்து விலக்கப்பட்டாகவேண்டும், ஈராக்கிய மக்கள் மீது இழைக்கப்பட்டுள்ள மாபெரும் தவறுகளுக்குத் தக்க இழப்பீட்டுத் தொகை கொடுக்கப்பட்டாக வேண்டும், ஈராக் படையெடுப்பை நடத்தியவர்கள், அமைத்தவர்கள், திட்டமிட்டவர்கள், அதற்காகப் பிரச்சாரம் செய்தவர்கள் அனைவர் மீதும் போர்க்குற்றத்திற்காக கட்டாயம் வழக்குத் தொடுக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை கட்டாயம் எழுப்பப்படவேண்டும்.  


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved