World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

Attackers storm US consulate in Saudi Arabia

சவுதிஅரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தாக்கப்பட்டது

By Bill Van Auken
7 December 2004

Back to screen version

சவுதிஅரேபிய நகரமான ஜெட்டாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தை எதிர்ப்பாளர்கள் தாக்கியபோது குறைந்தது 12 பேராவது கொல்லப்பட்டனர். அமெரிக்க உத்தியோகபூர்வ அறிக்கையின்படி ஐந்து தூதரக அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர். தாக்குதலில் அல்லது தூதரகத்தை மீளகைப்பற்றும் முயற்சியில் நான்கு தேசிய பாதுகாவலர்கள் கொல்லப்பட்டதாக சவுதி உள்துறை அமைச்சர் குறிப்பிட்டார். அறிக்கையின்படி மூன்று தாக்குதல் தொடுத்தவர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் காயமுற்ற இருவர் பிடிக்கப்பட்டனர்.

மிகுந்த பாதுகாப்புடைய கோட்டை போன்ற காவலில் முன்வாயிலின் இரண்டு கதவுகளிலும் இருந்த காவற்காரர்களைத் தாக்கிவிட்டு, எதிர்ப்பாளர்கள் தாக்குதல் நடத்தினர் என்று நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். ஒரு கூற்றின்படி, அவர்கள் ஒரு கார் குண்டையும் கையெறி குண்டையும் பயன்படுத்தி உள்ளே நுழைந்ததாகத் தெரிகிறது. உள்ளே சென்றடைந்த பின்னர் அவர்கள் அமெரிக்கக் கொடியைக் கீழே இறக்கி அதை எரித்தனர். தூதரகத்திற்குள் இருந்தவர்களில் குறைந்தது 18 பேராவது இந்த நிகழ்வை அடுத்து பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், தாக்குதலை நடத்தியவர்களும் சவுளதிப் படையினரும் மிக அதிகமாக வெடிமருந்துகளைப் பயன்படுத்தனர். கட்டிடத்தின் ஒரு பகுதியில் தீப்பற்றிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. தூதரக வளாகத்தில் இருந்து பெரும் புகை மண்டலம் எழும்பியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

முதலில் சவுதி அதிகாரிகள் தாக்குதல்கள் நடத்தியவர்களைப் பற்றிய அடையாள விவரங்களை வெளியிடவில்லை; அவர்கள் "மாற்றுக் கருத்துடைய குழுவின் உறுப்பினர்கள்" என்று மட்டுமே குறிப்பிட்டனர். இதேபோன்ற தாக்குதல்களுக்கு எல்லாம் அல்கொய்தாவைத்தான் மன்னராட்சி குற்றம்சாட்டி வந்துள்ளனர்.

தாக்குதலில் உயிரிழந்த தூதரக அலுவலர்களில் அமெரிக்கக் குடிமக்கள் எவரும் இல்லை என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உளவுத்துறை அதிகாரிகள் இன்னும் தாக்குதல்கள் வரக்கூடும் என்று எச்சரித்ததை அடுத்து ரியாத்தில் உள்ள தூதரகம் மற்றும் தஹரனில் உள்ள துணைத்தூதரகம் இரண்டையும் மூடிவிடுமாறு வாஷிங்டன் உத்தரவு இட்டுள்ளது. இந்த நெருக்கடியின் விளைவாக உலக எண்ணெய்ச் சந்தையில் உடனடியாக கச்சா எண்ணையின் விலை மிகவும் உயர்ந்தது.

சவுதிஅரேபியாவில் இஸ்லாமியப் போராளிகளினால் கடந்த மே மாதம் கிழக்கு நகரமான கோபரில் ஒரு வீட்டு வளாகத்தில் தாக்குதல்கள் நடத்தப்பட்டு 22 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டதற்குப் பிறகு நடந்துள்ள மிகப்பெரிய நிகழ்ச்சியாகும் இது. சவுதி மன்னராட்சியில் உள்ள ஆழ்ந்த நெருக்கடி, மற்றும் ஈராக்கிய ஆக்கிரமிப்பிற்கு எதிராக நடத்தப்படும் எழுச்சியை கடுமையாக இராணுவத்தைக் கொண்டு அடக்க வேண்டும் என்ற அமெரிக்க முயற்சிக்கு எதிரான சீற்றத்தையும் இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இந்தத் தாக்குதலுக்கும் ஈராக்கில் நடத்தப்படும் போராட்டத்திற்கும் உள்ள தொடர்பை ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ புஷ் சுட்டிக்காட்டியுள்ளார். "பயங்கரவாதிகள் இன்னும் செயல்பட்டுத்தான் வருகின்றனர். அவர்கள் நாம் சவுதிஅரேபியாவை விட்டு நீங்க வேண்டும் என்று விரும்புகின்றனர்: அவர்கள் நாம் ஈராக்கை விட்டு வெளியேறவேண்டும் என்றும் கூறுகின்றனர்; நாம் கோழைத்தனத்தில் ஆழ்ந்து அவர்கள் இலக்கின்றிச் செய்யும் கொலைகள், நிரபராதிகள் மீது நடத்தும் கொலைகளை கண்டு அச்சத்தால் நகர்ந்துவிட வேண்டும் என்று விரும்புகின்றனர். எனவேதான் இப்பொழுது நடைபெறவுள்ள ஈராக்கியத் தேர்தல்கள் மிகவும் முக்கியமானது ஆகும்." என்றார் அவர்.

ஜனவரி 30ம் தேதி நடத்தப்படவேண்டும் என்று அமெரிக்க நிர்வாகம் நிர்ணயித்துள்ள தேர்தலுக்கு முன்பாக இன்னும் 12,000 படைவீரர்கள் ஈராக்கிற்கு அனுப்பப்பட உள்ளனர் என்று புஷ் நிர்வாகம் அறிவித்துள்ளது, மற்றும் அமெரிக்க ஆக்கிரமிப்பை ஒட்டி பாசாங்குத்தனமான வாக்கெடுப்பை எதிர்க்கும் அரசியல் சக்திகளையும் கடுமையான முறையில் இது அடக்கி வருகிறது.

செங்கடல் துறைமுக நகரில் நடைபெற்றுள்ள கடுமையான சண்டை, அமெரிக்காவிற்கு எதிரான வன்முறை அலைகள் போல் எழும்புவதற்குத் தொடர்புடைய இஸ்லாமியப் போராளிகளுக்கும் சவுதி பாதுகாப்புப் பிரிவுகள், அதன் ஆளும் செல்வந்த தட்டு குழுவில் உள்ள சில பிரிவுகள் இவற்றிற்கும் இடையே உள்ள தொடர்புகள் பற்றிய வினாக்களை, மீண்டும் எழுப்பியுள்ளன.

ஆரம்பத்தில் ஒரு சிறிய ஆயுதமற்ற குழு எவ்வாறு தூதரகத்திற்குள் நுழைய முடிந்தது என்பது தெளிவாகத் தெரியாமல் இருந்தது. ஜெட்டா வளாகத்தைப் பற்றி ஓரளவு அறிந்தவர்கள்கூட அதன் பாதுகாப்புத் தன்மை எவ்வாறு "உடைக்க முடியாதது" என்று விவரித்துள்ளனர்; இதைச் சுற்றி காங்க்ரீட் தடுப்புக்கள் இருப்பதோடு, கவச வாகனம் ஒன்றின் பாதுகாப்பும், இயந்திரத் துப்பாக்கிகளுடன் கூடிய படைப்பிரிவு ஒன்றின் காவலும் இங்கு உள்ளது. தாக்குதல் நடத்தியவர்களுக்கு வளாகத்தின் சுற்றுச் சுவர் அருகே செல்வது கூட மிகக் கடினமாகத் இருந்திருக்க வேண்டும், ஏனெனில் இதைச் சுற்றியுள்ள பகுதியும் பலத்த கண்காணிப்பிற்கு உட்பட்டதாகும்.

"தூதரகத்தின் முன் நிகழ்தப்பெற்ற தாக்குதலின் பெரிய வகைத் தன்மை ஜெட்டா மக்கள் அனைவரையுமே வியப்பில் ஆழ்த்தியுள்ளது" என்று ஜெட்டாவைத் தளமாக உடைய Arab News உடைய ஆசிரியரான கலேட் அல் மாவினா, ராய்ட்டர் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

"சவுதியின் கூற்றுக்களுக்கு முற்றிலும் எதிராக, அல்கொய்தா இன்னமும் இந்த நாட்டில் செயற்பாடுகளைச் நடாத்த முடியும் என்பதை இந்நிகழ்வு காட்டுகிறது" என்று சவுதிஅரேபியா பற்றிய ஒரு பிரிட்டிஷ் ஆலோசகரான சைமன் ஹெண்டர்சன் தெரிவித்துள்ளார். "சவுதி பாதுகாப்புப் படையினரின் திறமையைப் பற்றிய கவலைகள் இன்னும் இருப்பதோடு அவற்றின் நம்பகத்தன்மை பற்றிய வினாக்களும் எழுந்துள்ளன." என்று அவர் கூறியுள்ளார்.

இதற்கு முந்தைய தாக்குதல்களில் போராளிகள் சவுதிய அரசு அமைப்பினுள்ளேயே ஆதரவைக் கொண்டிருந்தனர் என்பதற்குத் தக்க சான்றுகள் இருந்தன. சில நிகழ்வுகளில், அதில் தொடர்புடையவர்கள் போலீஸ் சோதனையில் இருந்து தப்பி ஓட முயன்று வெற்றியும் பெற்றிருக்கின்றனர். தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டுள்ள ஆயுதங்கள் சவுதி தேசியப் பாதுகாப்புக் கிடங்குகளில் இருந்து பெறப்பட்டவை என்றும் கண்டுபிடிக்கப்பட்டு இருந்தன. சில நிகழ்வுகள், தாக்குபவர்கள் இராணுவ வண்டிகள், சீருடைகள் என்று கூட பல வசதிகளைப் பெற்றிருந்தனர்.

சவுதியில் பிறந்த, அல்கொய்தா வலைபின்னல் தலைவரான ஓசாமா பின் லேடன்தான், கடந்த ஆண்டு நவம்பர் துவக்கத்தில் இருந்து கிட்டத்தட்ட 170 உயிர்களைக் குடித்துள்ள நிகழ்வுகளுக்குப் பொறுப்பு என்று கூறப்படும் நிலையில், அவரே நாட்டின் மிகப் பெரும் செல்வக் கொழிப்பு உடைய ஆளும் வர்க்கத்தில் இருந்து தோன்றியவர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமுதாயத்தின் இந்த பிரிவுகளுக்குள் இன்னமும் அவர் தொடர்ந்து ஆதரவைக் கொண்டுள்ளதுடன், இஸ்லாமியப் போராளிகளை நாட்டின் பாதுகாப்புப் படைகளில் இருந்து பாதுகாக்கவேண்டும் என்ற ஆணைகளையும் பிறப்பித்து வரும் சவுதிஅரேபியாவின் சக்திவாய்ந்த மதக்குழுவினரின் ஆதரவையும் அவர் கொண்டுள்ளார்.

இத்தகைய தொடர்புகளை வாஷிங்டன் வெளிப்படையாகப் புறக்கணித்து, மன்னராட்சி தொடர்ந்து பயங்கரவாதத்திற்கு எதிராக உறுதியான போரை நடத்திவருகிறது என்ற புகழாரத்தையும் கொடுத்து வருகிறது. அனைத்து எண்ணெய் ஏற்றுமதிகளுக்கும் முக்கிய வளமாக இருக்கும் இந்த ஆட்சி இன்னும் உறுதியற்றபோகும் என அது கவலைகொண்டுள்ளது. ஆனால் இத்தகைய உறவுகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நீண்டகால இஸ்லாமிய அடிப்படைகளுடனான தொடர்புகளைப் பற்றிப் பொதுவாகவும், பின் லேடனுடனான தொடர்புகளைப் பற்றி குறிப்பாகவும், அதிலும் CIA ஆதரவுடன் சோவியத் படைகளுக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் 1980 களில் நிகழ்த்தப்பட்ட யுத்தம் தொட்பாகவும் சங்கடத்தின் ஆழ்த்தும் வினாக்களை எழுப்புகின்றன.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved