World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

Egypt deepens its collaboration with Israel

இஸ்ரேலுடனான தனது ஒத்துழைப்பை எகிப்து ஆழப்படுத்திக் கொள்ளுகிறது

By Brian Smith
18 December 2004

Back to screen version

பாலஸ்தீனியர்களிடையே பெரும் அமைதியின்மையை தூண்டிவிடாத வகையில் யாசர் அரஃபாத் நல்லடக்கம் செய்வதற்கு ஒத்துழைத்தபின், எகிப்தும் இஸ்ரேலும், ஆக்கிரமிப்புப் பகுதிகளில் எதிர்ப்புக்களை அடக்குவதற்கு தயார் செய்யும் வகையில், தங்களுடைய ஒத்துழைப்பை ஆழப்படுத்தி வருகின்றன.

இரண்டு நாடுகளுமே, அரஃபாத்தின் மரணத்தையும், அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷின் இரண்டாவது பதவிக்காலத்தையும், 1979ல் சியோனிச ஆட்சிக்கு ஒப்புதலை முதன் முதலில் அரேபிய நாடுகளிடையே எகிப்து கொடுத்த காலத்தில் இருந்து காணப்படாத நட்புறவு முறையை மத்திய கிழக்கில் கொள்வதற்குத் தக்க தருணம் என்று எடுத்துக் கொண்டுள்ளன.

"சமீபத்திய மாதங்களில் நிலைமையில் முன்னேற்றத்தைக் காணமுடிகிறது" என்ற விளக்கத்தை அரஃபாத் மரணத்தை ஒட்டிய குறிப்பு ஒன்றில் Ha'aretz க்குப் பேட்டி கொடுத்தபோது எகிப்து உயர்தூதர் டாரிக் அல் குயோனி கொடுத்துள்ளார். ஆனால் அனைத்து அரேபிய நாடுகளும் இன்னும் நெருக்கமாக இஸ்ரேலுடன் இணைந்து செயலாற்றவேண்டும் என்று வாஷிங்டன் பெரிய அழுத்தம் கொடுத்திருப்பதில் எகிப்து முன்னின்று வழிகாட்டியுள்ளது. அமெரிக்க உதவிகளை நீண்ட காலமாகப் பெரிய அளவில் எகிப்தும் இஸ்ரேலும் பெற்றுவருவதுடன், அதன் புவிசார் மூலோபாயத்தின் முக்கிய அடையாளக் கற்களாவும் விளங்கி வருகின்றன.

கெய்ரோவிற்கும் டெல் அவிவிற்கும் இடையே, சமீபத்தில் நடைபெற்றுவந்த மிக உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைகளை பெருக்கிக் கொள்ளும் வகையிலான விவாதங்களில் உடன்பாடு காணப்படும் தறுவாயில் உள்ளன. இஸ்ரேலின் பிரதம மந்திரியான ஏரியல் ஷரோன் உடன் தொடர்புடைய வெளிநாட்டு மந்திரிகளான அகமத் அமு அல் கீய்ட் மற்றும் இசல்வன் ஷலாம், எகிப்திய உளவுத்துறை இயக்குனர் ஓமர் சுலைமான், இஸ்ரேலியப் பாதுகாப்பு மந்திரி ஷாவூல் மோபஸ் ஆகியோருடன் கலந்து ஆலோசித்தார். காசாப் பகுதியில் ஷரோன் திட்டமிட்டுள்ள பின்வாங்குதலுக்கு பின்னர் எகிப்து, பாலஸ்தீன மக்களை காவலுக்குட்படுத்தி கொள்ள முடியுமா என்பதை உறுதிப்படுத்துவதுதான் முக்கிய பேச்சுவார்த்தைகளின் பிரச்சினை ஆகும்.

இஸ்ரேலிய அதிகாரிகள், கடந்த அக்டோபர் மாதம். காம்ப் டேவிட் உடன்படிக்கையை மாற்றாமல் எகிப்திய படைகள் அதிகரிக்கப்படுவதற்கு உடன்பட்டனர். எவ்வளவு எகிப்திய படைகள் தேவை என்பதும் எவ்வித ஆயுதங்களை அவர்கள் கொண்டிருப்பர் என்பதும் முக்கியமாக தீர்வு காணப்படவேண்டிய தற்போதைய கருத்துக்கள் ஆகும். எகிப்தியர்கள் மென்ரக ஆயுதம் தரித்த 750 வீரர்களை அனுப்புவதற்குத் தயாராக இருப்பதாகக் கூறுவதோடு, ரபா எல்லைப் பகுதி உட்பட அனைத்துப் படைகளும் காசாப்பகுதியில் இருந்து அனைத்து இஸ்ரேலியப் படைகளும், முற்றிலும் திருப்பப் பெறவேண்டும் (பொது மக்கள் ஏற்கவேண்டும் என்பதற்காக) என்று கூறுகின்றனர்.

இஸ்ரேலியக் குண்டுத் தாக்குதலால் ரபாவில் எகிப்திய பிரிவில், நவம்பர் மாதம் மூன்று போலிசார் கொல்லப்பட்டனர். வழக்கத்திற்கு மாறான வகையில் இதை மெளனம் சாதித்து ஏற்றுக் கொள்ளும் வகையில், எகிப்திய ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக், ஷரோன் அளித்த மன்னிப்பையும், இனியும் இதுபோல் நடக்காது என்ற உறுதிமொழியையும் ஏற்றுக் கொண்டார். கடந்த வாரம், அமைதிக்கு மிக உகந்தவராகச் செயல்படுகிறார் ஷரோன் என்ற கருத்தைக் கூறும் அளவிற்கு முபாரக் சென்றுள்ளார்.

ஷரோனுடைய அரசாங்கத்திற்கு அரபு நாடுகளில் இருந்து ஆதரவு திரட்டுவதற்கான பரந்த மூலோபாயத்தின் வகையில்தான் எகிப்து முன்னின்று நடத்துகிறது. "தீவிரவாத கருத்துக்களை உடைய முஸ்லிம் அரசுகளை நாம் தொடர்ந்து தனிமைப்படுத்த வேண்டும்" என்று Knesset க்கு கடந்த வாரம் ஷரோன் கூறியிருந்தார்; இதற்குப் பொருள் சிரியா, ஈரான், பாலஸ்தீனியர்கள் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பதாகும். "கணிசமான அரேபிய, முஸ்லிம் நாடுகளிடையே நாம் உறவுகளை முன்னேற்றுவிக்க முடியும் என்பதற்கு எதிரான காரணங்கள் ஏதும் இல்லை. ...அவற்றுடன் நமக்குப் நிலப்பகுதி அடிப்படையிலோ, பொருளாதார வகையிலோ எந்தப் பூசல்களும் கிடையாது; எனவே நாம் பல தொடர்ச்சியான அரபு நாடுகளுடன் நம்முடைய உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளுவதை எதிர்பார்க்கலாம்."

இஸ்லாமிய அடிப்படை வாதம் மற்றும் அமெரிக்க-எதிர்ப்பு பெருகிக் கொண்டு வரும் தன்னுடைய உள்நாட்டுக் கூட்டத்தை கருத்திற்கொண்டு பேசும்போது, முபாரக் புதிதாகத் தோன்றியுள்ள உறவுகளைப்பற்றி வெளிப்படையாகப் புகழ்வதில் சற்று எச்சரிக்கையுடன்தான் இருக்கிறார். எகிப்திய-இஸ்ரேலிய உடன்பாடு உள்ளது என்பது பற்றியும், விரைவில் டெல் அவிவிற்கு தூதர் வருவார் என்பதையும் அவர் சமீபத்தில் மறுத்துள்ளார்; நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மிகக் கூடுதலான இஸ்ரேலியத் தாக்குதல் பாலஸ்தீனியர்களுக்கு எதிரே நடைபெற்ற பொழுது இவர் அங்கிருந்து திருப்பி அழைக்கப் பட்டிருந்தார் (இத்தகைய வன்முறை கடந்த நான்கு ஆண்டுகளில் கூடுதலாகத்தான் நிகழ்ந்து வருகின்றன.)

பெருவாரியான மக்கள் ஏற்கவேண்டும் என்ற கருத்தில் நிகழ்த்தப்பட்ட உரையில், எகிப்து ஜனாதிபதியுடைய செய்தித் தொடர்பாளரும் தூதருமான மஜீட் அப்துல் பட்டா குறிப்பிட்டதாவது: "2002 ல் பெய்ரூட்டில் நிகழ்ந்த அரேபிய உச்சி மாநாட்டில் ஏற்கப்பட்டிருந்த அரேபிய சமாதான புதிய முயற்சிகள் பரந்த அளவிலான சமாதானத்தை அடைவதற்குக் குறிப்பிட்ட தளங்களைக் கொடுத்துள்ளதால், எந்தப் புதிய முயற்சிகளை மேற்கொள்ளுவதற்கும் இப்போது தேவையில்லை."

2002 உச்சிமாநாடு, அனைத்து ஆக்கிரமிப்புப் பகுதிகளில் இருந்தும் இஸ்ரேல் "1967 ஜூன் 4ல்" கொண்டிருந்த நிலைக்குத் முழுமையாகப் பின்வாங்கினால்தான் அமைதி இயலும் என்று முடிவெடுத்த தன்மையில் பெரும் பரபரப்புக்கள் நிறைந்திருந்தன ஆனால் இந்த முடிவிற்கு இணங்கும் விருப்பத்தை இஸ்ரேல் ஒருபோதும் கொண்டிருந்ததில்லை.

உறவுகளில் முன்னேற்றம் உள்ளது என்பதற்கு மற்றொரு அடையாளமாக, இருநாடுகளும் அண்மையில் சிறைக்கைதிகளை பரிமாற்றம் செய்து கொண்டன. இஸ்ரேலுக்காக உளவு வேலை செய்து, பிடிபட்டு, எட்டு-ஆண்டுக் கால சினைவாசம் பெற்ற அஜாம் அஜாமை எகிப்தியர்கள் விடுவித்துள்ளனர். இதற்குப் பதிலாக இஸ்ரேலியர், கடந்த ஆகஸ்ட் மாதம் இஸ்ரேலிய துருப்புக்களை கடத்திச் செல்லத்திட்டமிட்டிருந்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆறு எகிப்திய மாணவர்களை விடுவிக்க முன்வந்தது.

"அஜாமை விடுவித்தல் கெய்ரோவிற்கும், டெல் அவிவிற்கும் இடையே உள்ள உறவுகளை சீர்படுத்திக்கொள்ளுவதுடன் எந்தத் தொடர்பும் கொண்டதல்ல" என்று முபாரக் கூறியுள்ளார்; இந்த முடிவு அக்டோபர் மாதம் எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறுகிறார். கடந்த வாரம் பஹ்ரைனில், இவர் ஏன் பத்தா இயக்கத்தின் பொதுச் செயலாளரான மர்வான் அல் பர்கெளதியின் விடுதலையை கோரவில்லை என்று பலமுறையும் கேட்கப்பட்டபோது, எகிப்திய குடிமக்களுடைய நலன்களுக்குத் தான் கூடுதலான முன்னுரிமை அளித்ததாக அவர் தெரிவித்தார். அந்த நேரத்தில் அல் பர்கெளதி, தன்னுடைய சிறையில் இருந்தே பாலஸ்தீனிய அரசாங்கத்திற்கு ஜனாதிபதி வேட்பாளராக இருந்தார்; பின்னர் வெளிப்படையான சமரச வேட்பாளரான மஹ்மூத் அப்பாசிற்கு ஆதரவு தெரிவித்துத் தான் வேட்பாளராக நிற்கவில்லை. இஸ்ரேல் விரைவில் எகிப்துக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் "நல்லெண்ணத்துடன்" இன்னும் 120 எகிப்தியர்களை விடுதலை செய்யக்கூடும் என்றும் தெரிகிறது.

இஸ்ரேலுடன் தன்னுடைய செயற்பாடுகளில் முன்னேற்றம் காணவேண்டும் என்று விழைவதுடன், எகிப்து அரேபிய-இஸ்ரேலிய உறவுகளை வளர்க்கவேண்டும் என்ற கருத்தில் ஒரு பெரும் சமய உணர்வு போன்ற தூதரக முயற்சிகளைக் கொண்டு, அமெரிக்க மூலோபாயத்தின் ஒரு இலக்கான, 2013க்குள் மத்திய கிழக்குத் தடையற்ற வணிகப் பகுதி (Middle East Free Trade Area MEFTA) ஐ நிறுவுவதற்கு அரும்பாடு பெற்றுவருகிறது.

சிரியாவிற்கும், இஸ்ரேலுக்கும் இடையே நடக்கும் பேச்சுவார்த்தைகளுக்கு கெய்ரோ, ஏகாதிபத்தியத்தின் சார்பில் இடைத்தரகராகச் செயல்பட்டு வருகிறது. அமெரிக்கா, இஸ்ரேல் இரண்டுமே சிரியோவோடு இரகசியப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன; இதேபோன்று பிரான்சும் பிரிட்டனும் கூடக் கொண்டுள்ளன. இதற்கிடையில் அனைத்து மேலை சக்திகளும் வெளிப்படையாகவே மிரட்டுதல், அச்சுறுத்தல் போன்றவற்றின் கலவையை டமாஸ்கசுக்கிற்கு எதிராகப் பயன்படுத்துகின்றன.

மத்தியக் கிழக்குப் பகுதி, மற்றும் மத்தியதரைக் கடற் பகுதி ஆகியவற்றில் புவியியல் நலன்கள் நிறைந்துள்ள தன்மையை வளர்த்துக்கொண்டு, வணிகத்தையும் பெருக்கிக் கொள்ளவண்டும் என்ற அமெரிக்க முயற்சிதான் MEFTA: இதேபோன்ற கருத்துக்களைக் கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் இருக்கும் தன்னுடைய போட்டி நாடுகளின் நலன்களைத் தகர்க்கவேண்டும் என்பது அதன் விருப்பமாகும். இப்பிராந்தியத்தில் சுதந்திர வர்த்தகப் பகுதிகளை(FTAs) உருவாக்க வரிசைக் கிரமமான இருதரப்பு ஒப்பந்தங்களை அமெரிக்கா முன்னெடுத்து வருகிறது, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எகிப்து கடமைப்பட்டிருப்பதற்கு பரிசு அதிகரித்த அளவில் சுதந்திர வர்த்தகப் பகுதி ஆவதாகும்.

இந்த வழிவகையில் எகிப்திய இஸ்ரேலிய வணிகத்தை வளர்ப்பதற்காக Qualified Industrial Zones (QIZ) எனப்படும் தக்க தரமுடைய தொழிற்பகுதிகளைத் தோற்றுவித்தல் முதற்படியாகும்; அதாவது, காப்பு வரிகள் இல்லாத பகுதிகளை சில ஆலைகள் தொகுப்பு நிறைந்த பகுதிகளைச் சுற்றி ஏற்படுத்தி, அதன் வழியே இஸ்ரேலில் தயாரிக்கப்படும் சில பொருட்களுக்கு அமெரிக்கச் சந்தையில் காப்பு வரி இன்றி இடம்பெற அனுமதிக்கும். இதற்குத்தகுதி பெறுவதற்கு பொருட்களில் எகிப்திய QIZ பாகங்களை உடையவற்றிற்கு 35 சதவிகிதமும், இஸ்ரேலிய பாகங்களுக்கு 11.5 சதவிகிதமும் சேர்க்கப்படும்.

எகிப்து, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகியவை, டிசம்பர் 14ம் தேதியன்று பெரிய கெய்ரோவில் நான்கு பகுதிகள், -அலெக்சாந்திரியாவிற்கு அருகே இரண்டு, சூயஸ் கால்வாய்க்கு அருகே மூன்று என்ற வகையில், மத்தியதரைக் கடலோரப்பகுதியில் மூன்று என, எகிப்தில் 7 பகுதிகள் ஏற்படுத்தப்படுவதற்கான ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. இப்பொழுது 650 மில்லியன் டாலர்கள் என்ற நிலையில் உள்ள எகிப்திய ஏற்றுமதிகள் இதையொட்டி மிகுந்த உயர்வைக் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1999ம் ஆண்டில் இருந்து அமெரிக்க 13 QIZ பகுதிகளை ஜோர்டானில் நிறுவி, இஸ்ரேலுடன் வணிக வளர்ச்சிக்கு வகை செய்துள்ளது. அதையொட்டி அமெரிக்க-ஜோர்டான் தடையற்ற ஒப்பந்தச் சந்தை 2001ல் ஏற்படுத்தப்பட்டது. இதனால் 1999ல் 31 மில்லியன் டாலர்களாக இருந்த வணிக மதிப்பு, 2003ல் 674 டாலர்களாக உயர்ந்துள்ளது.

எகிப்திய ஜவுளி உற்பத்தியாளர்களும், அரசாங்க அதிகாரிகளும் சமீபத்தில் இஸ்ரேலின் இதேபோன்ற உற்பத்தியாளர்கள் அதிகாரிகள் குழு ஒன்றை ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் வரவேற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தினர். நடப்பு ஆண்டின் முதல் அரைப்பகுதியில் இஸ்ரேலுக்கும் எகிப்துக்கும் வணிகத் தொகுப்பு 9.5 மில்லியன் டாலர்களுக்குப் பெருகியுள்ளதாக எகிப்திய அரசாங்கம் கணக்கிட்டுள்ளது; இது 2003 முதல் அரையாண்டு காலத்தோடு ஒப்பிடும்போது 4 மில்லியன் டாலர்கள் கூடுதலாகும். இஸ்ரேலுக்கு ஏற்றுமதி செய்யப்படும் எகிப்பதிய பொருட்களின் மதிப்பு 3.5 மில்லியன் டாலர்களில் இருந்து 5.5 மில்லியன் டாலர்களாகவும், இறக்குமதி மட்டும் 4 மில்லியன் டாலர்களாகியுள்ளதாகவும் தெரிகிறது.

எகிப்து வழங்கும் பணிகளுக்கு மற்றொரு தக்க பரிசும் காத்துள்ளது. ஐ.நாவின் வளர்ச்சித் திட்ட அமைப்பின் நிர்வாக இயக்குனர், ஒரு முக்கியமான ஆபிரிக்க/மத்திய கிழக்கு நாடு என்னும் முறையில் எகிப்து, ஐ.நா. வுடைய பாதுகாப்புக் குழுவில் ஒரு நிரந்தர ஆபிரிக்க உறுப்பினராக வர வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார். அமெரிக்கா, சீனா இரண்டுமே எகிப்திற்கு இந்த இடம் வேண்டும் என்ற ஆதரவைக் கொடுத்துள்ளன.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved