World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா

Tutu, COSATU and the "powder keg" of South Africa

டுட்டு, தென்னாபிரிக்க தொழிற்சங்க கூட்டமைப்பும் தென்னாபிரிக்காவின் ``வெடிமருந்தும்``

By our South African correspondent
14 December 2004

Back to screen version

தலைமைக் குரு டேஷ்மொண்ட் டுட்டுவிற்கும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸிற்கும் இடையே (ANC) ஒருவர்மீது ஒருவர் சேற்றை வாரி இறைக்கும் மோதல் நவம்பர் 29-ல் டுட்டு ஆற்றிய நெல்சன் மண்டேலா ஆண்டு பேரூரையில் இருந்து வெடித்துக் கிளம்பியது.

``எந்தப் பாறையிலிருந்து நீங்கள் வடிவமைக்கப்பட்டீர்களோ அதைத் திரும்பிப் பாருங்கள்`` என்ற தலைப்பில் டுட்டு உரையாற்றினார். அவரது உரையில் பாதிக்குமேல் ``புதிய தென்னாபிரிக்கா`` மீது மற்றும் குறிப்பாக நெல்சன் மண்டேலாவிற்கு பாராட்டு பாசுரமாக அமைந்துவிட்டது. அவருக்கே உரித்த கவர்ச்சிகரமான மொழியில் தென்னாபிரிக்கா சோதனைக் கட்டத்திலிருந்து மாறியதை, உண்மை மற்றும் சமரச கமிஷன் அமைக்கப்பட்டமை, மற்றும் இன ஒதுக்கலுக்கு பிந்திய 1994 தேர்தல்கள் பற்றி அவர் நினைவு கூர்ந்தார். புதிய தேச பக்தி பற்றி அதிகம் பேசினார் ---``பலர் தங்களது புதிய தேசியக் கொடியை தங்களது அங்கியின் முன்புறமும், தங்களது உடைமைகளிலும் அலங்கரித்துக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். தாங்கள் Madibaland-லிருந்து வந்தவர்கள் என்பதை அனைவரும் அறிந்துகொள்வதற்காக அவ்வாறு அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்`` என்று அவர் குறிப்பிட்டார்.

ஆளும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் மீது சில விமர்சனங்களை தலைமைக் குரு தெரிவிக்க தொடங்கினார். ANC-க்குள் நிலவும் ``முகஸ்துதி கலாச்சாரத்தை`` சுட்டிக்காட்டினார், அவர் குறிப்பாக ஜனாதிபதி Mbeki-ன், HIV/AIDS தொடர்பான கருத்துக்களையும், ஜிம்பாப்வே பிரச்சனையை அவர் கையாளுவதையும் பகிரங்கமாக விவாதிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

அவரது மிக குறிப்பிடத்தக்க அறிக்கை தென்னாபிரிக்காவில் வளர்ந்து வரும் ஏற்றதாழ்வுகளும், பெருகிவரும் பாரிய அளவு வறுமையையும் குறிப்பாக சுட்டிக்காட்டுவதாக அமைந்திருந்தது. ``இந்த நேரத்தில் அளவிற்கதிகமான நமது மக்கள் வறுமையின் கொடுமையில் சிக்கித்தவித்து மிக தாழ்ந்த நிலைக்கு மனித நேயத்தையே மாய்க்கின்ற அளவிற்கு சங்கடத்தில் இருக்கிறார்கள். நாம் இப்போது, வெடிமருந்து கலவையில் அமர்ந்திருக்கிறோம்.``

அரசாங்கத்தின் கருப்பர் பொருளாதார அதிகாரமளித்தல் (BEE) கொள்கைகளை அவர் ஆட்சேபித்தார், அப்போது தலைமைக் குரு கேட்டார் ``கருப்பர் அதிகாரமளித்தல் என்றால் என்ன மிகப்பெரும்பாலோர் பயனடையவில்லை, ஆனால் திரும்பத்திரும்ப ஒரு சிறிய செல்வந்த தட்டே பயனடைந்து கொண்டு இருக்கிறது, அந்தப் பயன்கள் ஏற்கனவே அனுபவித்தவர்களுக்கே திரும்ப வந்து கொண்டிருக்கிறது? பின்னர் நாம் வருந்துகின்ற அளவிற்கு இப்போது அதிக வெறுப்புணர்வை நாம் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் இல்லையா?``

தலைமைக் குரு கவலைகளில் சில குறிப்பிடத்தக்க சிறப்பானவை. மிக பெருமளவில் ஏற்றத்தாழ்வுகள் நிலவுவது அரசியல் அடிப்படையில் நிலைத்து நிற்க முடியாதவை, இறுதியாக ஜனநாயக ஆட்சி நெறிமுறைகளுக்கு ஏற்புடையவை அல்ல. என்றாலும், அவர் ஏழைகளின் சார்பாக வாதாடுபவராக இதைப் பேசவில்லை, ஆனால், நடப்பு ஆட்சியை தாங்கிப் பிடித்து நிற்பவர்களில் ஒருவர் மற்றும் தென்னாபிரிக்க முதலாளித்துவத்தை தாங்கி நிற்பவர் மற்றும் சமூக புரட்சியை தங்கள் வாழ்நாள் முழுவதும் எதிர்த்துக் கொண்டிருப்பவர் என்ற முறையில் கூறுகிறார். உண்மையில் டுட்டு, ANC-க்கு எச்சரிக்கை விடுத்திருப்பது என்னவென்றால், அதன் சுதந்திரச் சந்தை செயல்திட்டம் அவசரக் கோலத்தில் நிறைவேற்றப்பட்டால் அது தென்னாபிரிக்க சமுதாயத்தில் மகத்தான குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதாகும்.

இதற்கு தலைமைக் குருவை ஒரு முட்டாள் என்று வர்ணித்து மிகக் கடுமையான எதிர்ப்பை தனது வலைத் தளத்தில் Mbeki-ன் கடிதத்தில் பிரசுரித்து ANC பதிலளித்தது. ``தலைமைக் குரு எப்போதுமே ANC உறுப்பினராக இருந்ததில்லை, மற்றும் ஒரு ANC கிளை அலுவலகத்தில் கூட என்ன நடக்கிறது என்பது பற்றி அவருக்கு தெரியாது. எனவே விவாதம் நடத்தப்படவில்லை என்று அவர் எப்படி முடிவு செய்ய முடியுமென்பது விளங்காத பெரும் புதிராக உள்ளது.``

ஜனாதிபதியின் கடிதம் BEE தொடர்பான டுட்டுவின் அறிக்கையை தொடர்ந்தும் தாக்குதலுக்கு உட்படுத்தியிருக்கிறது. ``இங்கே நமது நாட்டில் சிலர் இருக்கிறார்கள், அவர்கள் எப்போதுமே கருப்பர் பொருளாதார அதிகாரமளித்தல் தொடர்பாக முற்றிலும் தவறான தகவல்களையே தந்துகொண்டிருக்கிறார்கள்.... ஏதோ ANC-ஐ சேர்ந்த உறுப்பினர்கள் சிலரை கொண்ட சிறிய செல்வந்த தட்டை சேர்ந்தவர்கள் மட்டுமே தனிப்பட்ட முறையில் பயனடைந்து வருவதுபோல் அவர்கள் கூறிக்கொண்டிருக்கிறார்கள்.``

அதற்கு பின்னர் Mbeki அண்மையில் நடந்துள்ள டெல்காம் (Telkom) பேரம் பற்றி குறிப்பிட்டிருக்கிறார், அந்த பேரத்தில் அரசியலில் நல்ல தொடர்புள்ள அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் 6.5 பில்லியன் R பங்குகளை வாங்க இருக்கின்றனர். ஸ்மட்ஸ் Ngonyama- மற்றும் முன்னாள் தகவல் தொடர்பு அமைச்சக டைரக்டர் ஜெனரல் Andile Ngcaba உள்பட இந்த பேரத்தை முன்னணி ANC உறுப்பினர்கள் செய்திருக்கிறார்கள். இந்த பேரத்தின் மூலம் R32 மில்லியனுக்கும் R160 மில்லியனுக்குமிடையிலான ஒரு தொகையை இந்த பேரத்தின் மூலம் Ngonyama சம்பாதிக்கவிருக்கிறார். இந்த டெல்காம் பேரத்தின் மூலம் ``இந்தப் பொய்களை பரப்புவதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது`` என்று ஜனாதிபதி தனது கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

அரசாங்கத்தின் சாதனையை தற்காத்து நிற்கின்ற நிலையில் கூட, Mbeki கருப்பர் பொருளாதார அதிகாரமளித்தல் என்பது ஒரு செல்வந்தத்தட்டு தாங்களே பணக்காரர் ஆவதற்கு வழி செய்திருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார்----- மிகச் சரியாக சொல்வதென்றால், ஒரு கருப்பர் முதலாளித்துவ வர்க்கத்தை உறுதிப்படுத்துவதற்கு அந்தத் திட்டம் பயன்பட்டு வருகிறது. அவர் கூறுகிறார்: ``இந்த வகையில் நான் எந்த விதமான சப்பைக்கட்டுமில்லாமல் ஒன்றை உறுதிப்படுத்தியாக வேண்டும், நமது இயக்கமும், அரசாங்கமும் கருப்பர் பொருளாதார அதிகாரமளித்தலை கடைப்பிடிப்பதில் உறுதியோடு உள்ளது. எவ்வளவு தீவிரமாக முடியுமோ அந்த அளவிற்கு நமது பொருளாதாரத்தில் இன ஒதுக்கல் இல்லாத குறிக்கோளை நாம் தொடர்ந்து வளர்த்து வருவோம். நமது நாட்டின் கருப்பர் இன மக்களின் கைகளில் வருமானமும், செல்வமும் அதிகரிக்க வேண்டுமென்ற குறிக்கோளை தொடர்ந்து கடைபிடிப்போம். இது காலனித்துவம், மற்றும் இன ஒதுக்கல் கொள்கைகள் விட்டுச் சென்ற பாரம்பரியத்தை ஒழித்துக்கட்டும், நீடிக்கும் போராட்டத்தின் ஒரு உள்ளார்ந்த பகுதியாகும்.``

ANC பொதுச் செயலாளரான Kgalema Motlanthe-வும் BEE-க்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார்: ``நமது சமுதாயத்தை மாற்றுவதற்கு அரசாங்கம் கடைபிடித்துவரும் கொள்கைகள் கருப்பர் இன மக்கள் முதலீட்டை குவிப்பதற்கு அடிப்படையாக அமைய வேண்டும்.``

அது நமது மக்களில் ''மிகப்பெரும்பான்மையினர்'' நலனை குறிக்கோளாகக் கொண்டது. இந்த அறிக்கையை மறுப்பவர்கள் அதற்கு ஒரு சிறிய சான்றைக்கூட காட்ட முடியாது.``

டுட்டு இந்த வசைமாரிக்கு பதிலளிக்கிற வகையில் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார், ``என்னைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று சொன்னதற்காக ஜனாதிபதிக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன், நான் உண்மையின் மீது சொற்ப மரியாதை கொண்ட ஒரு பொய்யன்தான் இப்படி நீங்கள் சொன்னதற்காக நன்றி, நான் அப்பாவி, பசித்தோர், ஒடுக்கப்பட்டோர், வாயில்லாப் பூச்சிகளுக்காக கவலைப்படுபவனாக நான் நடித்துக் கொண்டிருக்கிறேன்.

ANC-க்கும் தென்னாபிரிக்க தொழிற்சங்க கூட்டமைப்பிற்கும் (COSATU) இடையில் இப்போது கொந்தளிப்பை ஏற்படுத்கிற வகையில் டுட்டுவின் அறிக்கை அமைந்துவிட்டது. COSATU பொதுச் செயலாளர் Zwelinzima Vavi, டுட்டுவிற்கு ஆதரவாக ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அது ''ANC-ல் முகஸ்துதி கலாச்சாரம்'' பற்றியதாகும்.

முத்தரப்பு கூட்டணிக்குள் வளரும் பதட்டங்கள்

COSATU இன்னும் முத்தரப்பு கூட்டணியில் ஒரு பாகமாக உள்ளது, அதில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் மற்றும் தென் ஆப்பிரிக்க கம்யூனிஸ்ட கட்சி உள்பட அடங்கும், மற்றும் அதன் கூட்டாளிகள் போலவே பெருவர்த்தக நலன்களின் நம்பிக்கைக்குரிய பாதுகாவலனாக உள்ளது. ஆனால் தென்னாபிரிக்காவின் தொழிலாள வர்க்கத்திடையே எந்தளவிற்கு அதிருப்தி நிலவுகிறது என்பதை மிகுந்த வேதனையோடு உணர்ந்திருக்கிறது.

டுட்டு தனது உரையை நிகழ்த்துவதற்கு ஒரு நாளைக்கு முன்னர் COSATU டெல்காம் பேரத்தில் நிலவுகின்ற ஒரு நலன்கள் மோதல் தொடர்பான குற்றச்சாட்டால் எரிச்சலடைந்த Smuts Ngonyama, Vavi-க்கு எதிராக ''கவனக்குறைவான உணர்ச்சி வசப்பட்ட தலைவர்'' என்றும் ''இந்தக் கூட்டணியில் ஒரு சிறு குழந்தையென்றும்'' வர்ணித்தார். Vavi இதற்கு பதிலளிக்கும் போது "தான் ஒரு வர்த்தகரால் தாக்கப்படுவது குறித்து பெருமைப்படுவதாக" குறிப்பிட்டார்.

``Andile Ngcaba, ''தொலைத் தொடர்புத் துறையின் டைரக்டர் ஜெனரலாக பணியாற்றிய போது, இப்போது அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முடிகின்ற இத்தகைய ஒரு பேரத்தை உருவாக்குவதற்கான சூழ்நிலைகளை உருவாக்கினாரா, மற்றும் Smuts Ngonyama ஜனாதிபதியின் ஆலோசகர் என்ற பதவியைப் பயன்படுத்தி அதில் கிடைத்த இரகசியத் தகவல்களை தனது வர்த்தக பணிகளுக்கு பயன்படுத்திக் கொண்டாரா என்று Vavi கேட்டார்.

இந்த மோதல் ANC-க்கும் COSATU-விற்கும், ஜிம்பாப்வே நெருக்கடியை ANC கையாண்ட விதம் தொடர்பான மோதலுக்குப் பின்னர் வந்திருக்கிறது. குறிப்பாக ANC நெருக்கடியில் சிக்கிக்கொண்டுள்ள ஜிம்பாப்வே தலைவர் Robert Mugabe-க்கு ஆதரவு தருவதாக கூறப்படுவது குறித்து இந்த மோதல் நடைபெற்றது. இந்த ஆண்டு ஆரம்பத்தில் COSATU ஜிம்பாப்வேக்கு உண்மையறியும் குழுவை அனுப்பியது, ஜிம்பாப்வே அந்தக் குழுவை நாடுகடத்தியது. ANC COSATU-வை அத்தகையதொரு நடவடிக்கையில் இறங்கியதற்காக விமர்சித்தது. அதற்குப் பின்னர் கூட்டணியின் இந்த இரண்டு அங்கங்களுக்கிடையே மோதல்கள் கசப்பாகிக் கொண்டு வருகின்றன.

COSATU, HIV/AIDS நெருக்கடி தொடர்பாகவும் கூட பகிரங்க நிலைப்பாட்டை எடுத்துள்ளது. நாட்டில் இந்த தொற்று நோய் பரவுவது குறித்து ANC கவலையில்லாமல் இருக்கிறது என்ற அடிப்படையில் இந்த மோதல் எழுந்தது. அரசாங்கம் வர்த்தகர்களுக்கு ஆதரவாக ஒட்டுமொத்த பொருளாதாரக் கொள்கையைக் கடைபிடித்து வருவது தொடர்பாகவும் மற்றும் தொழிலாளர்கள் உரிமைகள் மீது பொதுவான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவது குறித்தும் அதிருப்தி வளர்ந்து வருகிறது.

டுட்டுவின் உரையைத் தொடர்ந்து வாரக் கடைசியில் செய்தி பத்திரிகைகள் கூட்டணியின் எதிர்காலம் குறித்து ஊகச் செய்திகளை நிறைய வெளியிட்டிருந்தன. COSATU ஜிம்பாப்வே எதிர்க்கட்சியான MDCஐ பின்பற்றி ஒரு தொழிற்சங்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு கட்சியை உருவாக்குமா என்பது குறித்து ஊகங்கள் வெளியிடப்பட்டன. என்றாலும் பொது அறிக்கைகளில் ANC-ம் COSATU-வும் கூட்டணியில் தாங்கள் உறுதியோடு நிற்பதாக மீண்டும் உறுதியளித்துள்ளன.

MDC, COSATU எதிர்காலத்தில் செல்ல வேண்டிய வழிக்கு ஒரு சாத்தியக்கூறான முன்மாதிரி என்று காட்டப்படுவது ANC-யுடன் COSATU-விற்கு உள்ள வேறுபாடுகளின் தன்மைகளை மிகப்பெருமளவில் எடுத்துரைப்பதாக அமைந்துள்ளன. MDC தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கும் ஏகாதிபத்திய அரசுகளால் ஆதரிக்கப்படுகின்ற பணக்கார வெள்ளைக்கார விவசாயிகள் உள்பட இதர சக்திகளுக்கும் ஒரு வாகனமாக செயல்படுகிறது மற்றும் இது Mugabe ஆட்சியைவிட மிக பகிரங்கமாக சுதந்திர சந்தை கொள்கைகளுக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

ANC-க்குள் நடைபெறுகின்ற ''வாரிசு'' பிரச்சனை தொடர்பான விமர்சனங்களில் அரசாங்கத்தின் கொள்ளைப் பொருட்களில் தனக்கு ஒரு கூடுதல் பங்கு வேண்டுமென்று COSATU தெளிவுபடுத்தியுள்ளது.

ANC மிகக் கொடூரமான முறையில் சுதந்திர சந்தை செயல் திட்டத்தை கடைப்பிடித்து வருவதால் அத்தகைய தொழிலாள வர்க்கத்திற்கெதிரான கொள்கைகளை நியாயப்படுத்துவதில் COSATU தலைமைக்கு சங்கடங்களை உருவாக்கியது. ஆனால் அந்தக் கூட்டணியிலிருந்து COSATU விலகுவதன் மூலம் ANC-ன் தேர்தல் பட்டியல்களில் இடம்பெற்றுள்ள COSATU விசுவாசிகள் விலக வேண்டிவரும், மற்றும் டுட்டு சுட்டிக்காட்டியிருப்பதைப் போல், ``ஒரு கட்சி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பது இலாபம் தருகின்ற ஒன்று. தருகின்ற வெகுமதிகள் கணிசமானவை, எனவே கட்சியின் கொள்கைகளை ஆட்சேபிப்பது, அந்த பட்டியலில் இடம்பெறுகின்ற வாய்ப்புகளுக்கு ஆபத்தாகிவிடும். அப்படி பல முட்டாள்கள் இல்லை, எனவே பலர் வாக்களிக்கும் கட்சி கால்நடைகளாக மாறி அமைதியாக மேய்ப்பவர் பின்னே செல்கிறார்கள்.``

அண்மையில் பகிரங்கமாக இந்த கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும், COSATU, ANC-ன் தேர்தல் அமைப்பில் ஓர் அங்கமென்ற அத்தியாவசிய பங்களிப்புபற்றி எந்த ஆட்சேபனையையும் எழுப்பவில்லை. வருகின்ற 2005 பொதுத் தேர்தலில் ANC-க்கு பெரும்பான்மை வாக்கு கிடைக்கின்ற வகையில் அது தனது உறுப்பினர்களை அணிதிரட்டும்.

தென்னாபிரிக்க ''வெடி மருந்து கலவை''

1994 தேர்தல் அறிக்கையில் ANC ``அனைவருக்கும் ஒரு சிறந்த வாழ்வை`` தருவதாக உறுதிமொழி அளித்தது, அதுதான் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற முதலாவது ஜனநாயக தேர்தலில் ANC 60.2 சதவீத வாக்குகளைப் பெற்றது. இந்த உறுதிமொழியை நிறைவேற்றுவது என்றால் ஐந்தாண்டுகளுக்குள் ஒரு மில்லியன் வீடுகளை உருவாக்கித் தரவேண்டும். ஐந்தாண்டுகளுக்குள் 30 சதவீத விவசாய, விளை நிலங்களை மீண்டும் பகிர்ந்தளிக்க வேண்டும். ஆண்டிற்கு விவசாயம் அற்ற 100,000 வேலை வாய்ப்புக்களை உருவாக்கித்தரவேண்டும். இந்த சாதனைக்கான மூலோபாயம், ''மறு பகிர்வு மூலம் வளர்ச்சி'' என்ற குறிக்கோள்கள் ஆகும்.

பத்தாண்டுகளுக்கு பின்னர், இன்றைய தினம் உண்மையான நிலவரத்தை நாம் எதிர்கொள்கிறோம். 5.2 முதல் 8.74 மில்லியன் வரையிலான தென்னாபிரிக்கர்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தில் வாடுகின்றனர். சராசரி வாழும் வயது தோராயமாக 10 ஆண்டுகள் குறைந்துவிட்டது. இது முக்கியமாக AIDS தொற்றுநோய் பரவியதால் ஏற்பட்ட தாக்கமாகும், ஆண்டிற்கு 200,000 மேற்பட்ட வீடுகள் கட்டித்தர வேண்டிய பாக்கி உள்ளது. கட்டப்பட்டுள்ள 70 சதவீத வீடுகள் குறைந்தபட்சத் தேவையான 30 ச.மீ அல்லது அதற்கு மேற்பட்ட பரப்பைக் கொண்டதாக இல்லை. இது தவிர, தினசரி ஒரு டாலருக்கும் குறைவான வருவாயில் வாழ்ந்து கொண்டிருக்கிற "படுமோசமான வறுமை வயப்பட்டவர்கள்" எண்ணிக்கை 3.7 மில்லியனிலிருந்து 4.7 மில்லியனாக உயர்ந்துவிட்டது.

தென்னாபிரிக்க சமூகத்தில் எப்போதுமே ஏற்றத்தாழ்வுகள் நிலவி கொண்டிருந்தாலும், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சமூகத்தின் மிக உயர்ந்த செல்வந்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. அடி மட்டத்திலுள்ளவர்களது வருவாய் உண்மையான மதிப்பீட்டின்படி குறைந்துகொண்டே போகிறது. இதில் மிகவும் குறிப்பிடத்தக்க செல்வ வளர்ச்சி ''விடுவிக்கப்பட்ட மேல்தட்டினரிடையே'' மிகத் தெளிவாக காணப்படுகிறது. அந்தத் தரப்பில் வந்துள்ள தனி நபர்களில் டோக்கியோ செக்ஸ்வேல், சிரில்ராமபோசா, சக்கி மக்கோசோமா, முன்னாள் தொழிற்சங்கவாதி மார்சல் கோல்டிங் ஆகியோரும் அடங்குவர். டர்பன் வெஸ்டிவிலி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டூமிசானி நிக்கோபோ குறிப்பிட்டிருப்பதைப் போல், ``புதிய பேரத்தை உருவாக்கியவர்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் பட்டியலிடப்பட்டுள்ள கார்ப்பொரேட் கம்பெனி உரிமையாளர்களாக சம்பாதித்துள்ள தொகையை சராசரி ஆபிரிக்க முதலீட்டாளர் சம்பாதிப்பதற்கு 10 மடங்கு கூடுதலான கால அவகாசம் தேவை.``

இந்த சிறிய அரசியல் தொடர்புடைய கருப்பர் இன தென்னாபிரிக்கர்களை கொண்ட பணக்காரர்கள் வரிசை 1994 முதல் மிகப்பெருமளவிற்கு மகத்தான வளர்ச்சி பெற்றிருக்கிறது. ஒரு பத்தாண்டு நாடாளுமன்ற ஜனநாயக அனுபவத்திற்குப் பின்னால் தொழிலாள வர்க்கத்தில் பெரும்பாலோர் மிக சொற்பமாகவே ஊதியங்களைப் பெற்று வருகின்றனர். இந்த தடை செய்யப்பட்ட வெறுத்து ஒதுக்கப்பட்ட பிரச்சனைகளை எழுப்புவர்கள், தலைமைக் குரு டுட்டு போன்ற நிர்வாகத்தின் தூண்கள் உட்பட்டோர் ANC தலைமையினால் மிகக் கடுமையாக தாக்கப்படுகின்றனர்.

வெகு ஜனங்களை அரசியல் அடிப்படையில் கருத்தில்கொள்ளாமல் வாக்களிக்கும் உரிமையில்லாதவர்களாக வறுமையில் தள்ளும் நடைமுறை உள்ளார்ந்த கவனக்குறைவான முதலாளித்துவம் உயிர் வாழ்வதற்கு ஏற்றதல்ல என்பதை டுட்டு உணர்ந்திருக்கிறார். சமூக துன்பங்களை மட்டுப்படுத்துவதற்கு ஓரளவிற்கு முயற்சிகளை மேற்கொள்வது அவசியம், மற்றும் பாரிய அளவு பெருகிக்கொண்டு வரும், அரசியல் கொந்தளிப்பை நீர்த்துப்போகச் செய்வதற்கு அத்தகைய நடவடிக்கைகள் வழிவகை செய்யும், ஆனால் தொழிற்சங்க நிர்வாகம் உட்பட ஆளும் செல்வந்தத்தட்டின் அனைத்துப் பிரிவுகளும் பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் ஏகாதிபத்திய அரசாங்கங்களின் சுட்டுவிரல் அசைவிற்கு கட்டுப்படுபவர்களாக ஆகிவிட்டார்கள். அந்த பெரிய பன்னாட்டு நிறுவனங்களும் ஏகாதிபத்திய அரசாங்கங்களும் தென்னாபிரிக்காவின் தொழிலாள வர்க்கத்தையும், அதன் இயற்கை வளங்களையும் சுரண்டுவதன் மூலம் மேலும் அதிக இலாபங்களையே கோருகின்றனர். மாறுபட்ட வகையில் செயல்பட முடியாத நிலையில், தங்களது சொந்த செல்வ குவியலிலேயே மூழ்கிக் கிடப்பதால் அவர்கள் டுட்டுவின் நட்பு முறை எச்சரிக்கைகளை கண்டிக்கின்றனர், மற்றும் அப்படி செய்வதன் மூலம் அவர் அடையாளப்படுத்திக் காட்டியுள்ள "வெடிமருந்து" வெடிப்பதற்கான நிலைமைகளை உருவாக்க உதவிக் கொண்டிருக்கிறார்கள்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved