World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Britain's Socialist Workers Party and the defence of national reformism-Part 2

A review of Alex Callinicos's An Anti-Capitalist Manifesto

பிரிட்டனின் சோசலிச தொழிலாளர் கட்சியும் தேசிய சீர்திருத்தவாதத்தை பாதுகாத்தலும்

அலெக்ஸ் காலினிகோஸ் இன் ஒரு முதலாளித்துவ-எதிர்ப்பு அறிக்கை பற்றிய மதிப்புரை

பகுதி-2
By Chris Marsden
6 July 2004

Back to screen version

அலெக்ஸ் காலினிகோசின் ஒரு முதலாளித்துவ-எதிர்ப்பு அறிக்கை, போலிட்டி பிரஸ், லண்டன், ISBN 0-7456-2904-0

மேற்கண்ட புத்தகத்தைப் பற்றிய மூன்று-பகுதி ஆய்வுக் கட்டுரையின் இரண்டாம் பகுதி கீழே பிரசுரிக்கப்படுகிறது.

காலினிகோசின் "முதலாளித்துவ-எதிர்ப்பு இயக்கம்"

"இரண்டாம் உலக சமூக அரங்கத்திற்கு பின்னர், போர்டோ அலேக்ரே விமான நிலையத்தின் பயணிகள் புறப்படும் பகுதியில் இப்புத்தகத்திற்கான இறுதித் திட்ட வரைவை எழுதினேன்; முதலாவது ஐரோப்பிய சமூக அரங்கம் புளோரன்சில் நடைபெற்ற பொழுது இருந்த விறுவிறுப்பான தயாரிப்புக்களுக்கு இடையில் நூலை எழுதி முடித்தேன்'' என தனது புத்தகத்தின் ஆரம்பத்தில் காலினிகோஸ் குறிப்பிடுகின்றார்.

ஐரோப்பிய மற்றும் உலக சமூக அரங்கங்களின் ஆதரவாளர்களுக்குத்தான் அவர் பேசுகிறார். அவர்களில் ஒருவர்கூட அரசியலுக்கு புதியவர்கள் அல்லர் என்றும் ஏதேனும் புதிய அமைப்புக்களை சேர்ந்தவர்கள் இல்லை என்பதை அவர் நன்கு அறிவர். அவர்கள் அனைவருக்குமே, பல சமூக ஜனநாயகவாத, ஸ்ராலினிச மற்றும்/அல்லது தீவிரவாதக் குழுக்களின் நீண்டகால வரலாறு உள்ளது. ஆனால் இவர் அவர்களை அணுகும்முறை அவர்கள் அத்தகையவர்தான் என்றும் அவர்கள் முன்வைக்கும் கருத்துக்களை பற்றிக் கவலை இல்லை என்பது போல் உள்ளது. அக்கறை காட்ட வேண்டியது, "இயக்கம்"; இதற்குப் பல பெயர்கள் கொடுத்துள்ளதாக அவர் கூறுகிறார் -- பூகோளமயமாக்கல்-எதிர்ப்பு இயக்கம், மாற்றீடான பூகோளமயமாக்கல் இயக்கம், மாற்று உலக இயக்கம் என்று பல பெயர்கள் அவரால் கூறப்படுகின்றன.

"என்னுடைய கருத்தில் இயக்கம் முதலாளித்துவ-எதிர்ப்பு எனச்சிறப்பாக விளக்கப்படலாம்." என குறிப்பிடுகின்றார்.

இவருடைய புத்தகம் இந்த முதல் பெரிய பொய்யைத்தான் அடிப்படையாகக் கொண்டுள்ளது.

உலக வர்த்தக அமைப்பின் பேச்சுவார்த்தைகளுக்கு எதிராக 1999ல் சியாட்டிலில், 40,000 பேருக்கு மேல் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்குப்பின் தொடர்ந்த ஒவ்வொரு மற்றும் அனைத்து எதிர்ப்பு அரசியல் ஆர்ப்பாட்டங்களும் முதலாளித்துவத்திற்கு எதிரான ஒருங்கிணைந்த இயக்கம் என்று இவர் வலியுறுத்துகிறார். முதலாளித்துவத்தை, நவீன-தாராளவாத சுதந்திர சந்தை மரபு வகையை கொண்ட முறையுடன் இவர் ஒன்றாகக் கருதுவதுடன், இம்முறை சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி, மற்றும் டோனி பிளேயரின் புதிய தொழிலாளர் கட்சி, மற்றும் சமூக ஜனநாயக அமைப்புக்கள் கைவிடப்பட்ட பழைய-வழியிலான சீர்திருத்த வாதத்தினை அடுத்து அபிவிருத்தியடைந்துள்ளது என கூறுகின்றார்.

செயல்பட்டுக் கொண்டுள்ள பூகோளச்சந்தை, பன்னாட்டு பெருநிறுவனங்கள் மீது எவர், எத்தகைய தடையை கொள்ளக் கருதினாலும் அதை "முதலாளித்துவ-எதிர்ப்பு" என்று சித்தரிக்க இவருக்கு உதவுகிறது. அடிப்படையில், இவருடைய சொந்த அரசியல் காரணங்களுக்காக 1999 இலிருந்து வளர்ந்துள்ள அனைத்து எதிர்ப்புக்கள், சமூக இயக்கங்களையும், ஒரு நனவுபூர்வமான முதலாளித்துவ-எதிர்ப்பு திசையில் அபிவிருத்தியடைவதை தடுக்கும் அரசியல் போக்குகளோடு சமன்படுத்துவதில் முடிகிறது.

எனவே 1999ல் சீயாட்டிலில் எதிர்ப்பில் ஆரம்பித்து 2002-ல் இவர் கூறும் "ஒரு புதிய இடது" என்னும் பிரான்ஸ் நாட்டின் மாத ஏடான Le Monde Diplomatique, மற்றும் சர்வதேச நிதி ஊடாக அற்றாக்கிற்கு எதிரான இயக்கம்" வரை நடந்த நிகழ்வுகளை ஆய்வு செய்கிறார். (p.9) கடைசி நிகழ்ச்சியை இவர் 2002 பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலின் முதல் சுற்றுக்கு முன் நடந்த நிகழ்வின் ஆரம்பக்கட்டமாக சித்தரிக்கிறார்; இதில் இரண்டு தீவிரவாதக் குழுக்கள், ட்ரொட்ஸ்கிசத்தை சேர்ந்தவர்கள் எனக் கூறிக்கொள்ளுபவை (Ligue Comuniste Revolutionaire and Lutte Ouvriere) இரண்டும் 10 சதவிகதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற்றதும், ஜோசே போவே மரபணுவை மாற்றும் பயிர்களுக்கு எதிராக ஒரு சர்வதேச "எதிர்ப்பின் அடையாளமாக", உருவாகியதுடன், மேலும் அற்றாக் சர்வதேச விரிவாக்கம் பெற்று உலக சமூக அரங்கின் ஒரு முக்கிய பங்கை கொண்டிருக்கிறது.

"பூகோள இயக்கத்தைப் பற்றி நாம் பேசலாம் என்பதற்கு ஒரு காரணம், அது சிந்தனைமுறையில் வெளிப்பட்டு பலதரப்பட்ட அறிவுஜீவிகளினதும் விமர்சனரீதியான கருத்தாக வெளிப்பாடாக வந்துள்ளது." என்று காலினிகோஸ் வலியுறுத்திகிறார்.(பக்கம் 9).

மிகக் குழப்பமான முறையில் கூட "நவீன-தாரளவாத முதலாளித்துவத்தை'' விமர்சித்திருக்கும் எந்தவொரு நபரைக்கூட அவர் ஒரு பட்டியல் போட்டு வைத்துள்ளார்: உதாரணத்திற்கு இவர் கொடுத்துள்ள பெயர்கள், Pierre Bourdeieu, Noam Chomsky, Michael Albert, Walden Bello, Susan George, Toni Negri, Naomi Klein, மற்றும் Michael Hardt. இந்நபர்களைப் பற்றியும், அவர்கள் தலைமை தாங்கும் "இயக்கத்தைப்" பற்றியும், "அதன் பெரும்பாலான பங்கேற்போர் 'மார்க்ஸிஸ்ட்' என்ற முத்திரையை நிராகரித்தாலும்கூட" அவர்கள் முதலாளித்துவத்தைப்பற்றிய மார்க்சின் விமர்சனத்தை "தத்துவ மற்றும் நடைமுறைரீதியாக மீண்டும் கைக்கொள்கின்றனர்" என்று வலியுறுத்தி, இதுதான் உண்மை என்று கூறுகிறார்.(பக்கம் 20 ).

நனவற்ற முறையில் மார்க்சிசம் மற்றும் சோஷலிசத்திற்கு வெளிப்படையான எதிர்ப்புத் தெரிவிக்கும் கருத்துடையவர்களை "முதலாளித்துவ-எதிர்ப்பு" உடையவர்கள் என்று இவர் எப்படியேனும் சித்தரித்துக் காட்டவேண்டும் என்ற முயற்சிகள் உண்மையிலேயே வெட்கக்கேடாகும்.

"முதலாளித்துவ-எதிர்ப்பு" பல வடிவமைப்புக்களைக் கொண்டுள்ளது எனக் கூறும் இவர், அவற்றைப் பட்டியலிட்டுக் காட்டுகிறார்.

பிற்போக்கு முதலாளித்துவ-எதிர்ப்பு---- இது சாரம்சத்தில் வலதுசாரிப் பொருளாதாரப் பாதுகாப்பு கோருதல், பாசிசத் தன்மைகூட நிறைந்தது.

"உட்பகுதி முதலாளித்துவ-எதிர்ப்பு" -- இதில் பலதரப்பட்ட பசுமைகளும், நியாயமான வர்த்தகத்திற்காக வாதிடுபவர்களும் அடங்குவர்.

இதன்பின்னர் " முதலாளித்துவ, முதலாளித்துவ-எதிர்ப்பு" -- இவர்களைப் பற்றிக் கூறுகையில் அவர் எழுதுவது; "இது ஒரு பயனற்ற பிரிவு எனக்கூறலாம். உண்மையில் இப்படிப்பட்ட பாணியே முரண்பாடுகளின் வெளிப்பாடாகும்."

ஆனால் காலினிகோஸ், இந்த பயனற்ற வகைக்குக்கூட ஆதரவு கொடுக்கும் முறையில், "சிந்தனைகள் எப்பொழுதும் முரண்பாடற்ற தன்மை விதியைப் பின்பற்றுவதில்லை" என எழுதியுள்ளார்.(p.70)

இந்த முதலாளித்துவ, முதலாளித்துவ-எதிர்ப்பு நபர்களில் ஒருவராக Noreena Hertz. ä காலினிக்கோஸிடம் இல்லாத அளவு நேர்மையாவது இவருடைய எழுத்தில் உள்ளது மேற்கோளிடுகிறார்: "என்னுடைய வாதம் முதலாளித்துவ எதிர்ப்பை நோக்கமாகக் கொண்டது அல்ல. முதலாளித்துவம் இருக்கும் முறைகளிலேயே செல்வத்தைக் கொழிக்க வைக்க, தடையற்ற சந்தை, சுதந்திர சந்தை இவற்றைத் தோற்றுவித்து, முன்கண்டிராத அளவு வளர்ச்சியை உலகம் முழுவதும் அல்லாவிடினும் குறைந்தது பெரும்பாலான பகுதிகளில் ஏற்படுத்தியுள்ளது."

காலினிகோஸின் கருத்தின்படி, ஹெர்ட்சும் அவரைப் போன்றவர்களும் இன்னும் முதலாளத்துவ-எதிர்ப்பு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என அழைக்கப்படலாம்; ஏனென்றால் இவ்வம்மையார் தேசிய அரசாங்கங்களுக்கு சர்வதேச சந்தைகளை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் தேவை எனக் கூறுகிறார்--- இது இவருடைய தேசிய சீர்திருத்தவாத அளவுகோலை நன்கு நிரப்பும் வகையில் உள்ளது.

இவருடைய தலைப்புக்களில் மற்றொன்று, "சீர்திருத்தவாத முதலாளித்துவ-எதிர்ப்பு" ஆகும்; இதற்கு அற்றாக் (ATTAC) என இவர் பொருள் கொள்ளுகிறார். இதற்கும் அற்றாக்குடைய பிரதிநிதிகளில் ஒருவரான, இவருடைய கருத்தான முதலாளித்துவ-எதிர்ப்பு சார்பை மறுக்கும் Susan George இனை மேற்கோளாக காட்ட முற்பட்டுள்ளார்.

இவ்வம்மையார் எழுதுகிறார்: "இருபத்தோராம் நூற்றாண்டு ஆரம்பத்தில், முதலாளித்துவத்தை தூக்கிவீசுவது என்றால் என்ன என்பது பற்றி எனக்குத் தெரியாது எனத்தான் கூற விரும்புகிறேன். சிலவேளை தத்துவமேதை பாவுல் விரிலோ கூறியது போன்று "பூகோள விபத்தை" ஒருகால் நாம் காணக்கூடும். அது நடந்தால் அத்துடன் மிகப்பெரிய மனிதகுல பாதிப்புகளும் உடன்வரும். உலகத்தில் உள்ள நிதிச்சந்தைகள், பங்குச்சந்தைகள் அனைத்தும் ஒரே நேரத்தில் வீழ்ச்சியடைந்தால், மில்லியன்கணக்கான மக்கள் பிச்சையெடுக்கும் நிலை ஏற்படுவதுடன், வங்கிகள் முறிதலும் மிகப்பெரிய முறையில் ஏற்பட்டு அரசாங்கங்கள் பேரழிவுகள், பாதுகாப்பின்மை, குற்றங்கள் இவற்றைத் தவிர்க்கமுடியாமல் போய் அவையே நடைமுறையாகப் போகும் நிலை ஏற்பட்டு நாம் அனைவருமே Hobbesian கூறியுள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொருவருக்கும் எதிராக என்ற நரகத்தில் ஆழ்த்தப்படுவோம். வேண்டுமானால் என்னைச் சீர்திருத்தவாதி என்று அழையுங்கள்; ஆனால் நவீன-தாராளவாதத்தின் எதிர்காலத்தை தவிர இவ்வாறான ஒன்றை விரும்பவில்லை."

காலினிகோசின் மற்றொரு முதலாளித்துவ-எதிர்ப்பு, Negri, Klein ஆகியோரின் கருத்துக்களுடன் தொடர்புடைய அராஜகவாதி, மற்றும் எதிர்ப்பு குழுக்களின் வெளிப்பாடான "தன்னாட்சியுடைய முதலாளித்துவ-எதிர்ப்பு" ஆகும். இந்த அரும் தட்டுக்களின் சிறப்பாக, அதன் தலைவரே மேற்கோளிடுவதற்கு முன், மெக்சிகோவில் உள்ள ஸபடிஸ்டா (Zapatista) விவசாய நிலச்சீர்திருத்த இயக்கத்தைக் குறிப்பிடுகிறார்.

துணைத்தளபதி மார்கோஸ்; இவருடைய முதலாளத்துவ-எதிர்ப்பின் போர்க் கோஷம் வருமாறு:

"உதாரணமாக, ஒரு புதிய அரசியல் அறநெறி, ஒரு புதிய வகையில் அதிகாரத்தைக் கைப்பற்றுதல் அல்லது தக்க வைத்துக் கொள்ளுதல் என்ற முறையில்லாமல், ஒரு எதிர்ப்புச் சக்தித்தன்மை, எதிர்க்கட்சித் தன்மை என்ற முறையில் செயல்பட்டு அதிகாரத்தை "கீழ்ப்படிதல் என்ற முறையில் ஆட்சி செய்யவைக்கும்" (p.81)

அவர் பின்னர் மேற்கோளிடுகிறார்: "ஸபடிஸ்டாக்கள், மெக்சிகோவில் மீட்பும் தேசிய இறைமையின் பாதுகாப்பும் தாரளவாதக் கொள்கை எதிர்ப்பு புரட்சியின் ஒரு பகுதி என்றுதான் நம்புகின்றனர். ...நாட்டை பூகோளமயமாக்கலின் எதிர்கொள்ளுதலில் இருந்து பாதுகாக்கவேண்டும். (p.82)

இதுதான் காலினிகோஸ் சித்தரித்துள்ள அழிவு தரும் நிலையாகும். அவருடைய கருத்தின்படி, நீங்கள் முதலாளித்துவ-எதிர்ப்பு இயக்கத்தைக் கொள்ளலாம் -- அது உலகத்தை அமைப்பதில் சிறந்தமுறை என்று நம்பவும் செய்யும், அதன் இருப்புக்கள் அனைத்தும் தேசிய நாட்டின் முக்கிய இலக்கை காப்பதாக இருக்கும்!

காலினிகோஸ் நூலின் இறுதிப் பிரிவில் முதலாளித்துவ-எதிர்ப்பு, சோசலிச முறையிலான முதலாளித்துவமுறை-எதிர்ப்பு என்று விளக்கப்பட்டுள்ளது. இதில் சோசலிச தொழிலாளர் கட்சி, அதன் இணை அமைப்புக்கள், பிரெஞ்சு Ligue Communiste Revolutionnaire (LCR) மற்றும் பப்லோவாத நான்காம் அகிலத்தின் ஐக்கியச் செயலகத்தின் மற்ற பிரிவுகளும் அடங்கியுள்ளன.

"முதலாளித்துவ-எதிர்ப்பு எழுச்சிக்கு", இவரால் இகழ்வுடன் குறிப்பிடப்படும், "கொள்கை அளவில், குறுங்குழுவாத பாணியில்" தன்னுடைய விளைவை காட்டாததால் LCR, காலினிகோசால் புகழப்படுகிறது. இதையொட்டி அவர் சோசலிச எதிர்ப்பு போக்குகளை விமர்சனமற்ற முறையில் ஒப்புதல் கொடுப்பதற்கு LCR தயார்நிலையில், SWP உடன் இருப்பதை சுட்டிக் காட்டுகிறார். உதாரணமாக, LCR "அற்றாக்கில் ஆரம்பத்தில் இருந்தே முக்கியமான பங்கை கொண்டுள்ளது என்றும்", ஐக்கிய செயலகத்தில் மற்றவர்களும் "மிக அதிகமான முறையில் உலக சமூக அரங்குடன் தொடர்புடையவர்களாக" உள்ளனர் என்றும் குறிப்பிடுகிறார்.

இங்கும் கூட, காலினிகோஸ் பழைய ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் ஒரு பிரிவின் கருத்திற்கு இசைவு காட்ட தயாராக இருப்பதைக் காண்பிக்கிறார். அவர் வலியுறுத்தினார் இத்தாலியில் "ஒரு முதலாளித்துவ-எதிர்ப்பின் ஒரு சோசலிச முறை செயல்படுத்தப்படுகிறது----- இது நல்ல முறையில் அமைக்கப்பட்டுள்ள Partido della Rifondazione Comunista (PRC) யால் நடத்தப்படுகிறது." என்று அவர் கூறுகிறார். இந்த அமைப்பை "ஒரு ஸ்ராலினிச தோல்வியின் எஞ்சிய பகுதியாக இல்லாமல், வெகுஜன கட்சியை பாராளுமன்ற பிரதிநிதித்துவ முறையில் பராமரித்துக்கொண்டுள்ளதுடன், கணிசமாக தொழிற்சங்கங்களின் ஆதரவையும் பெற்றுள்ளது" (p.84-85) என்று அவர் புகழ்த்துள்ளார்.

Partido della Rifondazione Comunista உடைய சீர்திருத்தவாத, தேசியவாத திட்டங்கள், அதன் அரசியல் வரலாறு இவற்றை பற்றி இயல்பாகவே காலினிகோஸ் எதுவும் கூறவில்லை; அது எவ்வாறு "அதன் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம்", "கணிசமான தொழிற்சங்க ஆதரவு" இவற்றை மத்திய-இடதுசாரி அரசாங்கங்கள் இத்தாலிய தொழிலாள வர்க்கத்தின் மீது கொள்ளும் தொடர்ந்த தாக்குதல்களை செயல்படுத்துவதை ஆதரிக்கிறது என்றும், எவ்வாறு அது சர்வதேச அளவில் முக்கிய பங்கினை பழைய ஸ்ராலினிச கட்சிகள் மீட்பிற்கு கொண்டுள்ளது என்பது பற்றியும் குறிப்பிடவில்லை.

சோசலிச தொழிலாளர் கட்சி மற்றும் பல ட்ரொட்ஸ்கிஸ்டுகள் எனக்கூறிக்கொள்ளும் அதிகமான இடது குழுக்களின் விசுவாசத்தை தான் அவற்றை வரவேற்பதன் மூலம் Partido della Rifondazione Comunista சம்பாதித்துள்ளது. LCR இன் சக இத்தாலியச் சிந்தனையாளரான Livio Maitan, Partido della Rifondazione Comunista இன் மத்திய குழுவில் பல ஆண்டுகளாக அமர்ந்து அதன் முக்கிய தலைவரான Fausto Bertinotti-க்கு ஆலோசகராக இருந்திருக்கிறார். இது Partido della Rifondazione Comunista ஐ இன்னும் வலதுசாரிக்கு அரசியலில் ஒரு மாற்றாக செயல்படமுடியும் என்பதற்கு நிரூபணம் என்று பழைய தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் இடது தீவிர பிரிவுகளால் கொள்ளப்படுகிறது.

உண்மையில் Partido della Rifondazione Comunista பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இத்தாலிய சமூக ஜனநாயகவாதிகளுக்கு முக்கிய அரசியல் தூணாகத்தான் நடந்து வந்துள்ளனர். 1990 களில் பல நேரங்களில் மத்திய-இடது "ஒலிவ் மரம்" கூட்டு பாராளுமன்றத்தில் தப்பியதே Partido della Rifondazione Comunista உடைய ஆதரவினால்தான். 'ஒலிவ் மர'த்தின் தாக்குதல்கள், Partido della Rifondazione Comunista இசைவுடன் தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்தப்பட்டதுதான் வலதுசாரி Forza Italia வின் சில்வியோ பெர்லுஸ்கோனியின் வெற்றிக்கு வழிவகுத்தது.

ஆனால் காலினிகோசிற்கு Partido della Rifondazione Comunista குட்டையில் இருக்கும் பெரிய மீன் போன்றது; அது இயற்கையாகவே தலைமை தாங்கும் ஆற்றல் உடையது; அதுபோன்ற அந்தஸ்தையும், அரசியல் ஸ்தாபனங்களில் அத்தகைய நிலையையும், சோசலிச தொழிலாளர் கட்சி அடைவதை நினைக்க முடியும்.

முதலாளித்துவ அரசியலில் ஒரு பிரிவு

உலக, மற்றும் ஐரோப்பிய சமூக அரங்கங்களிடையே உள்ள உண்மை உறவு, அவற்றோடு இணைந்த அமைப்புக்கள் பற்றிய நிலையை மறைத்தல், ஆளும் வர்க்கம், அதன் அமைப்புக்கள் இவற்றோடு உள்ள தொடர்பு இவற்றை மறைத்தலில் காலினிகோசின் இரண்டாவது பொய் உள்ளது.

இவர் "கீழிருந்து வரும் பாரிய எதிர்ப்புகளுக்கு" முதலாளித்துவத்தில் இரட்டை பிரதிபலிப்பை பற்றிப்பேசுகிறார்; ஒன்று அடக்குமுறை அல்லது அதையும் இணைத்துக் கொள்ளுவது, அதாவது, "குறைந்த அளவுச் சலுகைகள் கொடுத்து இயக்கத்தை பிரிப்பதின்மூலம், குறிப்பாக கூடுதலான நிதானப் போக்கு உடைய பிரிவினரை தீவிரவாதிகளிடமிருந்து தனிமைப்படுத்துவதன் மூலம் அதை வலுவிழக்க செய்துவிடுவதே." (p.86)

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி எவ்வாறு "தங்களைக் விமர்சிப்போருடன் விவாதங்களை நடத்துகின்றன", இந்த உரையாடலுக்கு "கூடுதலான மதிப்புடைய அரசாங்கச் சார்பு இல்லாத அமைப்புகள்" வரவேற்பு தருகின்றன, அவை எவ்வாறு மேற்கத்திய அரசாங்கங்கள், அரசுகள் இவற்றை நம்பியுள்ளன, குறிப்பாக பிரான்ஸ், ஜேர்மனி அரசாங்கங்கள் இயக்கத்தின் கோரிக்கைகள் சிலவற்றை "அதன் பல்லைப் பிடுங்குவதற்காக" ஏற்கின்றன என்பதையும் பற்றிக் குறிப்பிடுகிறார்.

பொதுவாக, இந்த எச்சரிக்கைகள் ஊமையாகத்தான் உள்ளன. சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி இவற்றைப் பொறுத்தவரையில், உரையாடல் தொடங்குவது பற்றி, காலினிகோஸ் அவை "இயக்கத்தின் உணர்வை வளர்த்தன, அதாவது அவற்றின் எதிர்ப்பாளர்கள் அறநெறியிலும், அறிவார்ந்த நிலையிலும் திவால் நிலையில் உள்ளன" என்ற கருத்தைக் கூறியுள்ளார்.

அத்தகைய நடப்புக்களை புறக்கணிப்பதற்காக, இவர் புகழாரம் சூட்ட முற்படும் பெரும்பாலான "இயக்கத் தலைவர்கள்", பேரம் பேசி விலைக்கு வாங்கப்பட்டவர்கள் என்பதை காலினிகோஸ் நன்கு அறிவார்; "அறநெறி", "அறிவுஜீவித" திவால்தன்மை இங்கு அதிகம் பயனில்லை; ஏனென்றால் இசைக்கருவியை இசைக்க வைப்பவருக்குக் கூலி கொடுப்பவர் எப்பொழுதுமே இன்ன இசைதான் வாசிக்கப்படவேண்டும் என்று கூற முடியும்.

லூயி இனாசியோ "Lula" da Silva உடைய பிரேசிலிய தொழிலாளர்கள் கட்சி அரசாங்கத்தினதும் அற்றாக்குடைய கூட்டுத்தான் உலக சமூக அரங்கம். இது 2000ம் ஆண்டில் உலகப் பொருளாதார அரங்கத்திற்கு ஒரு மாற்று எனக் கருதப்படும் வகையில் ஆரம்பிக்கப்பட்டது.

ஏகாதிபத்திய-எதிர்ப்பு மற்றும் சோசலிச வாய்வீச்சையும் பயன்படுத்தி அரசாங்கத்திற்கு வந்த பிறகு, லூலாவின் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் புகழ்ந்து, அவை வழங்கிய 260 பில்லியன் டொலர் கடனைத் திருப்பிக்கொடுக்கும் முயற்சிகளுக்காகவும், பிரேசிலிய தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக கடும் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டது.

2003ம் ஆண்டில், சர்வதேச நாணய நிதியத்தின் துணை நிர்வாக இயக்குனரான Anne Krueger, லூலா நிர்வாகத்தின் பொருளாதாரக் கொள்கைகளை புகழ்ந்து அது எவ்வாறு "எதிர்பார்ப்புக்களை திறமையுடன் சமாளித்து வருகிறது என்றும் பிரச்சினைகளுக்கு பொறுப்பான முறையில் அணுகுமுறையை கொண்டுள்ளது" என்றும் பாராட்டினார்.

அற்றாக் பிரெஞ்சு சோசலிசக் கட்சியின் அரை-அதிகாரபூர்வமான சிந்தனைக்குழுவாகும்; Le Monde Diplomatique ஏட்டை சூழ்ந்துள்ள ஓர் அமைப்பாகும். "ரொாபின் வரியை" மூலதனச் செயற்பாடுகளில் செலுத்தி சமூக வேலைதிட்டங்களுக்கான நிதியத்தை வலுப்படுத்தவேண்டும் என்றும் பொருளாதார வாழ்வினை தேசிய அரசாங்கம் நெறிப்படுத்தும் வகையில் திறன் கொண்டிருக்கவேண்டும் என்பதுதான் இதனுடைய தீவிர செயற்பட்டியலில் உள்ளது.

நன்கு ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ள "ஐரோப்பிய சமூக அரங்கத்தை கட்டுப்படுத்துவது யார்?" என்ற கட்டுரையில், Paul Treanor, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, உலக சமூக அரங்கின் முக்கிய முதலாளித்துவ அமைப்புக்களான ஐரோப்பிய குழு, ஐக்கிய நாடுகள் மற்றும் போர்ட் நிறுவனம், Droits et Démocratie (கனேடிய வெளியுறவுத்துறை அமைச்சகத்தால் நடத்தப்படும் ஒரு அமைப்பு), Heinrich Böll Stiftung என்று ஜேர்மனிய பசுமைக் கட்சியுடன் தொடர்புடைய அமைப்பு, ICCO (நெதர்லாந்து அரசாங்கம், மற்றும் ஐரோப்பிய ஒன்றிய இவற்றின் நிதி உதவியால் நடத்தப்படும் திருச்சபைக் கூட்டு அமைப்பு), Le Monde Diplomatique, Oxfam, இன்னும் கனேடிய, டேனிஷ், ஜேர்மனிய, இத்தாலிய, நோர்வே, ஸ்வீடன் அரசாங்கங்கள் நடத்தும் அமைப்புக்கள், 77 வளர்சியடையாத நாடுகளின் குழு, சர்வதேச தொழிலாளர் நல அமைப்பு, ஐரோப்பிய குழு இன்னும் பல குழுக்கள் இதில் பங்கெடுத்துள்ளன.

2002 ஐரோப்பிய சமூக அரங்கம், ஜனநாயக இடது, Partido della Rifondazione Comunista என்ற இத்தாலிய ஸ்ராலினிசத்தின் இரு பிரிவுகளும், பல நூறாயிரக்கணக்கான யூரோக்கள் அளித்ததின் மூலம் பெரிதும் ஆதரவு கொடுக்கப்பட்டது.

மூன்றாம் உலக சமூக அரங்கம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மாவோயிச, மற்றும் பழைய ரஷ்ய சார்பு உடைய கட்சிகளால், அதிக ஆதிக்கம் செலுத்தப்பட்டது. நேரடியாகவே இது 2.5 மில்லியன் டொலருக்கும் மேலாக நிதியை பெற்றது. CIA இன் நடவடிக்கைகள் நிறைந்துள்ள இக்கூட்டத்தில், International Confederation of Free Trade Unions (ICFTU) உடைய பொதுச்செயலாளர் கலந்து கொண்டார்.

''உலக சமூக அரங்க திட்ட 2004" என்னும் இந்தியாவில் நடக்கவுள்ள நிகழ்வின் மொத்த செலவு 29.7 மில்லியன் டொலராக இருக்கும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது; இதில் பெருந்தொகையான 26.2 மில்லியன் டொலர்கள் பல அரசு சார்பற்ற அமைப்புகளில் (NGO) இருந்து வந்த பிரதிநிதிகள் பங்கு பெறுவதற்கான செலவினங்களாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

அரசு சார்பற்ற அமைப்பு என்பது வசதியான போலிப் பெயர்; இது அரசாங்கங்கள், பெரு நிறுவனங்கள் இவற்றின் அரசியல் கருவிகளாகச் செய்யும் பங்கை மூடிமறைக்க உதவுகிறது; அவற்றைத்தான் இவ்வமைப்புக்கள் நிதியங்களுக்கு நம்பியுள்ளன.

Treanor, "Report on Development 2000-01) [1] என்னும் ஒரு உலக வங்கி ஆவணத்தை மேற்கொளிட்டுக்கூறுகிறார்: "உலக வங்கி 1999-ல் ஒப்புதல் அளித்த திட்டங்களில் 70 சத விகிதத்திற்கும் மேலானவற்றில் அரசு சார்பற்ற அமைப்புக்கள், "சாதாரண சமுதாயத்தின்" (civil society) பிரதிநிதிகள் ஆகியோரின் பங்கு இருந்தது; ஒரே ஒரு திட்டத்தில் மட்டும் அரசு சார்பற்ற அமைப்புக்களை ஏழு நாடுகளில் உயர்த்தும் வகை 900 மில்லியன் டொலர்கள் செலவில் மேற்கொள்ளப்பட்டது. தன்னுடைய இரு பணியாளர்களை அரசு சார்பற்ற அமைப்புக்கள் மற்றும் 'சாதாரண சமுதாயத்தின்' பிரதிநிதிகள் ஆகியோரோடு தொடர்பு கொள்ள வங்கி உத்திரவு இட்டது; அந்த எண்ணிக்கை இப்பொழுது 80 ஆக உயர்ந்துள்ளது.

"அரசாங்க ஆதரவைப் பொறுத்தவரையில், மற்றொரு அறிக்கை அரசு சார்பற்ற அமைப்புக்களுக்கு கொடுக்கப்படும் நிதியங்கள், அமெரிக்காவை தவிர மற்ற தொழிற்துறையில் முன்னேறிய நாடுகளிலிருந்து 2.3 பில்லியன் டொலர் அளவு 1995ல் இருந்ததாகக் கூறியுள்ளது. இந்தத் தொகை அமெரிக்க தொகையுடன் கூட்டப்பட்டால் இன்னும் அதிகமாக இருக்கும். ஒரு கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ளபடி, "இந்த மாபெரும் நிதியங்கள் அரசு சார்பற்ற அமைப்புக்கள் "சமூக இயல்நிகழ்வுபோல்" விரைவாக வளருகின்றன என்ற கூற்று எப்படிப்பட்ட ஏமாற்றுத்தனம் நிறைந்தது என்பதை வெளிப்படுத்துகின்றன."

இந்த ஏமாற்றுவித்தையைத்தான் காலினிகோஸ் நிரந்தரமாக்க ஆர்வம் கொண்டுள்ளார். உலக சமூக அரங்கின் நிதியில் கிட்டத்தட்ட 60 சதவிகிதம் கடந்த ஆண்டு அரசு சார்பற்ற அமைப்புக்களிடம் இருந்து வந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

உலக, ஐரோப்பிய சமூக அரங்கங்களின் தன்மையை அடிக்கோடிட்டுக் காட்ட, அவை முதலாளித்துவத்தின் முகவர்கள் என்று காட்டுவதற்கு, கடந்த ஆண்டின் நவம்பரில் பாரிஸில் நடைபெற்ற ஐரோப்பிய சமூக அரங்கம், அனைத்து வசதிகளையும் மாநகர நிர்வாகத்தின் அளிப்பினால் நடந்தது என்பதும், முன்னைய சோசலிச கட்சியின் பொருளாதார மந்திரியும் சிலவேளை 2007 தேர்தல்களில் ஜனாதிபதி வேட்பாளராக இருக்கக் கூடியவருமான Laurent Fabius, ஆரம்பநாளன்று விவசாயிகளின் தலைவரான José Bové உடன் காலைச் சிற்றுண்டி அருந்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்விற்கு நன்கொடை பிரான்சின் கோலிச ஜனாதிபதி ஜாக் சிராக்கிடமிருந்து கூட வந்தது; அவர் ஐரோப்பிய சமூக அரங்கிற்காக 50,000 யூரோக்களைக் கொடுத்தார், தன்னுடைய சிறப்பு தூதராக மாநாட்டிற்கு Jérôme Bonnafont- ஐ அனுப்பி வைத்தார்.

இந்த ஆண்டு ஐரோப்பிய சமூக அரங்கம் லண்டனில் நடைபெற உள்ளது; சோசலிச தொழிலாளர் கட்சி இதை நடத்த முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. இதற்குத் தேவையான நிதியான மில்லியன் பணத்திற்கு இலண்டன் மாநகர மேயரான கென் லிவிங்ஸ்டனிடம் இருந்தபெற அழைப்புவிடப்பட்டுள்ளது; அண்மையில்தான் அவர் தொழிலாளர் கட்சிக்கு மீண்டும் திரும்பினார்; இப்பொழுது நகர நிதிநிறுவனங்களுக்கு வேண்டியவராக திகழ்கிறார் இவர் தொழிற்சங்க காங்கிரசில் இருந்தவர்.

தொடரும்


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved