World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : ஜப்பான்

Japan's political establishment rocked by pension scandal

ஓய்வூதிய மோசடியில் ஆட்டம் கண்டுவிட்ட ஜப்பானின் அரசியல் ஸ்தாபனம்

By Joe Lopez
31 May 2004

Back to screen version

சட்டபூர்வமான ஓய்வூதிய சந்தா தொகைகளை செலுத்த முடியாத நிலையின் காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நிலவிவரும் மோசடியில் மூத்த அரசாங்க அதிகாரிகளும், அரசியல் தலைவர்களும் பதவி விலகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நெருக்கடி பரவிய வேகமும், அதனுடைய செயற்பரப்பு எல்லையும் நாட்டில் அரசியல் ஸ்தாபனத்திற்கும் மிகப்பெரும்பாலான மக்களுக்குமிடையே, குறிப்பாக இளைஞர் தட்டுகளுக்கும் இடையில் நிலவுகின்ற ஆழமான பிளவுகளை எடுத்துக்காட்டுகிறது.

முதலில் பதவி விலகியவர் அமைச்சரவைத் தலைமைச் செயலாளர் Yasuo Fukuda, இவர் பிரதமர் Junichiro Koizumi-ன் தாராளவாத ஜனநாயகக்கட்சி (LDP) அரசாங்கத்தில் மிக முக்கியமான அரசியல் வலிமைமிக்க அதிகாரியாவார். ஓய்வூதிய திட்டத்தில் சந்தாக்களை செலுத்தவில்லை என்று அம்பலப்படுத்தப்பட்டுள்ள இதர ஆறு அரசாங்க அமைச்சர்கள் ராஜிநாமா செய்யவேண்டும் என்ற கோரிக்கைக்கு மேலாக Fukuda மே-7-ல் பதவியிலிருந்து விடுபட்டார்.

Fukuda முன்னாள் பிரதமரின் மகனும் Kozumi- ன் கீழ் பணியாற்றிவரும் பிரதான வலதுசாரி சிந்தனையாளர்களுள் ஒருவருமாவார். புஷ் நிர்வாகத்தோடு அரசாங்கத்தின் நெருக்கமான உறவுகளை உருவாக்கி, மக்களது வெறுப்பிற்கு இலக்காகும் வகையில் ஜப்பான் துருப்புக்களை ஈராக்கிற்கு அனுப்புவதிலும் நாட்டின் அரசியல் சட்டத்தைத் திருத்தி மீண்டும் ஜப்பானை இராணுவமயமாக்கும் முயற்சியிலும் சிற்பி என்று பரவலாக கருதப்படுபவர்.

இந்த மோசடி ஆரம்பத்தில் ஏப்ரல் வெடித்த பொழுது, அது சம்மந்தமான கேள்விகளுக்கு பதிலளிக்காமல் விலகியும், தான் சந்தாத் தொகையை செலுத்தாதது தனது சொந்த விவகாரமென்றும் கூறினார். அதற்கு பின்னர் மூன்றாண்டுகளுக்கு மேலாகவே சந்தாக்களைச் செலுத்தத் தவறிவிட்டதாக அவர் ஒப்புக்கொண்டார். இதனால் ஏற்பட்ட பரபரப்பு தாக்கத்தை மட்டுப்படுத்துவதற்காக Fukuda பதவி விலகினார் என்றும் ஜூலை மாதம் நடைபெறவிருக்கும் மேலவை தேர்தலில் தலைமை அமைச்சக பதவியொன்று தனிப்பட்ட முறையில் அவருக்கு உறுதியளிக்கப்பட்டிருப்பதாகவும் பல அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இந்த மோசடியை தேர்தலுக்கு முன்னர் அரசியல் ஆதாயம் பெறுவதற்காக எதிர்க்கட்சி தன் கையில் எடுத்துக்கொண்டது. ஏப்ரல் 24-ல் ஜப்பான் ஜனநாயகக் கட்சி தலைவர் (Democratic Party of Japan-DPJ) Naoto kan உரையாற்றும்போது ஆரம்பத்தில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று காபினெட் அமைச்சர்களைப் பற்றி மிகுந்த ஆவேசமாகக் குறிப்பிட்டார்: ''அவர்களே திட்டத்தில் சந்தா செலுத்தவில்லை, பொதுமக்கள் இந்த தேசிய திட்டத்திற்கு கூடுதல் காப்பீட்டு கட்டணம் (Premiums) செலுத்தவேண்டும் என்று [அவர்கள்] கோரிக்கை விடுப்பது வேடிக்கையாக இருக்கிறது. அவர்கள் மூவரும் பணம் செலுத்தாத (non-payment) மூன்று சகோதரர்கள். இத்தகைய பணம் செலுத்தாத நான்காவது அல்லது ஐந்தாவது சகோதரர்களும் இருக்கலாம்''.

இறுதியில் விசாரித்ததில், கானே (Kan) 1996-ல் 10-மாதங்கள் வரை பணம் செலுத்தவில்லை, அப்போது அவர் சுகாதாரம் மற்றும் நலன்புரி அமைச்சகத்தில் (welfare ministry) ஓய்வூதிய திட்ட மேற்பார்வை பொறுப்பை வகித்தவர் என்பது தெரிந்தது. Fukuda ராஜிநாமா செய்து பல நாட்களுக்கு பின்னர்கூட, Kan- தான் ராஜிநாமா செய்யப்போவதில்லை என்று அறிவித்தார், அப்போது பத்திரிகை ஒன்று அவர் ராஜிநாமா செய்வார் என்று செய்தி வெளியிட்டிருந்தது. என்றாலும் மே 10-ல் அவர் ராஜிநாமா செய்தார் DPJ- வில் குழப்பம் ஏற்பட்டது.

இப்படி மேல்மட்டத்தில் நடைபெற்று வருகின்ற பதவி விலகல்கள் இந்தப் பிரச்சனையில் பொதுமக்களது விரோத போக்கின் ஆழத்தை எடுத்துக்காட்டுகிறது. இந்த மோசடிக்கு நடுவிலேயே, Koizuimi அரசாங்கம் கடுமையான நிதி பற்றாக்குறையில் இருக்கும் இந்தத் திட்டத்திற்கு நிதிவழங்கும் புதிய சட்டத்தை நிறைவேற்றுவதற்கு முயன்று வருகிறது. நாட்டின் முதியோர் தொகை உயர்ந்துகொண்டு வருகிறது, அதே நேரத்தில் உழைக்கும் மக்களது தொகை சுருங்கிக்கொண்டு வருகிறது, எனவே இந்தத் திட்டம் நீடித்து நிற்கவேண்டும் என்றால் ஓய்வூதிய காப்பீட்டுக் கட்டணம் (Premiums) உயர்த்தப்பட வேண்டும், அதே நேரத்தில் திட்டத்தின் மூலம் கிடைக்கும் பயன்கள் குறைக்கப்பட வேண்டும் என்று அரசாங்கம் வாதிட்டு வருகிறது.

தற்போது ஒரு தனிமனிதரது வருவாயில் 13.58- சதவீதம் இந்த திட்டத்திற்கு பணம் செலுத்தப்பட்டு வருகிறது, 2017-வாக்கில் படிப்படியாக இந்த தொகை 18.3- சதவீத அளவிற்கு உயத்தப்படுவதற்கு சட்டம் வகை செய்கிறது. அதே காலகட்டத்தில் தற்போது சராசரி ஆண்டு வருவாயில் 59.3 சதவீதமாக வழங்கப்பட்டு வரும் பயன்கள் 50.2 சதவீதமாக குறைக்கப்படும்.

இந்த மாற்றங்கள் குறிப்பாக இளைஞர்களிடையே மிகுந்த எதிர்ப்பை உருவாக்கியுள்ளது, இன்றைய இளைஞர்கள் ஓய்வுபெறும் வயதில் முறையான பயன்களைப் பெறமுடியுமா என்ற சந்தேகம் உருவாகியுள்ளது. இந்த உணர்வை அதிகப்படுத்துகிற வகையில் பொருளாதாரத்தில் அச்ச சூழ்நிலையும், நிச்சயமற்ற நிலையும் உருவாகியுள்ளது, வேலையில்லாத் திண்டாட்டமும் நீடித்துக் கொண்டிருக்கிறது.

இந்தச் சட்டத்தை மக்கள் பரவலாக ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கும் ஓய்வூதிய திட்டத்திற்கு கட்டணம் செலுத்துவதை ஊக்குவிக்கவும் Koizumi அரசாங்கம் நாடுதழுவிய தொலைக்காட்சி மற்றும் சுவரொட்டி விளம்பர பிரச்சாரத்தை 6.5 மில்லியன் டாலர் செலவில் நடத்தியது. முன்னணி ஜப்பான் சினிமா நடிகை Makika Esumi- ஐ இதற்காக ஊழியராக அமர்த்தியது, அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றி ''இப்போது நீங்கள் கட்டணம் செலுத்தினால் பின்னர் அது உங்களுக்குத் திருப்பித்தரப்படும். எதிர்காலத்தில் நீங்கள் கைபிசைந்து, கதறப்போகிறீர்களா?'' என்று கூறினார்.

அந்த விளம்பர பிரச்சாரம் தோல்வியடைந்தது ஏனெனில் அந்த நடிகையே ஓய்வூதிய பணம் செலுத்தவில்லை என்பது அம்லத்திற்கு வந்தது. பல அரசியல்வாதிகள் பணம் செலுத்தவில்லை என்பது தெளிவானதும் பொதுமக்களது கோபம் வளர்ந்தது. சாதாரணத் தொழிலாளர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையே வழங்கப்படும் ஓய்வூதிய வேறுபாடுகள் இந்தக் கசப்புணர்வை மேலும் அதிகரித்தன.

தற்போது பொதுமக்கள் குறைந்த பட்சம் 25 ஆண்டுகளுக்கு ஓய்வூதிய காப்பீட்டுக் கட்டணம் (premiums) செலுத்தினால் தான் அவர்களுக்கு ஆண்டு ஓய்வூதியம் 7,97,000 யென்கள் வழங்கப்படும். ஒரு அரசியல்வாதி நாடாளுமன்றத்தில் 10 ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் ஆண்டிற்கு 4,120,000 யென்களை பெறுகிறார், இது சாதாரண தொழிலாளி பெறுவதைவிட ஐந்து மடங்கு அதிகமாகும்.

இந்த விரோதப் போக்கை பயன்படுத்திக் கொள்வதற்காக DJP தனது சொந்த மாற்று முன்மொழிவை தெரிவித்தது. ஓய்வூதிய காப்பீட்டு கட்டணத்தை உயர்த்தி, கிடைக்கின்ற ஊதிய பயன்களை (Benefits) வெட்டுவதற்குப் பதிலாக, எதிர்க் கட்சி நுகர்வோர் வரிவிதிப்பை உயர்த்தும் கோரிக்கையை விடுத்தது, இது 1989-ல் முதலில் கொண்டுவரப்பட்டது, ஓய்வூதிய திட்டம் வீழ்ச்சியுற்றதற்கு நிதி அளிக்கும் பொருட்டு 3-சதவீதத்திலிருந்து 5 சதவீதத்திற்கு உயர்த்தப்பட்டது.

ஓய்வூதிய கட்டணங்களைப் போன்று நுகர்வோர் வரியும் மக்களால் வெறுக்கப்பட்டு வருகிறது. இரண்டு வகைகளிலுமே ஜப்பானின் தொழிலாள வர்க்க குடும்பங்கள், மாணவர்கள், வேலையில்லாதிருப்போர் மற்றும் ஏழைகள் பெருமளவில் துன்பத்திற்கு இலக்காகின்றனர், கடந்த தசாப்தங்களாக பொருளாதார சரிவு, பெரிய நிறுவனங்கள் மறுசீரமைப்பு மற்றும் வேலை அழிப்பு காரணமாக ஜப்பானில் சாதாரண மக்களது வாழ்க்கைத்தரம் குறைந்து கொண்டு வருகிறது.

அண்மையில் Kyodo News நடத்திய கருத்துக்கணிப்பில் பல அரசியல்வாதிகள் பணம் செலுத்தவில்லை (Non-payment) என்ற தகவல் அம்பலத்திற்கு வந்த பின்னர் 67.7 சதவீத மக்கள் ஓய்வூதிய சீர்திருத்த மசோதாக்களை எதிர்க்கின்றனர். எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் சட்டப்பூர்வமான ஓய்வூதியம் பணம் செலுத்துவது பற்றிய விவரங்களை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று 78.9 சதவீதம் பேர் கோருகின்றனர்.

இறுதியாக மே 11-ல் நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டன மற்றும் ஜூன் தொடக்கத்தில் மேல் சபையில் இவை தாக்கல் செய்யப்படும். ஆனால் இந்த மோசடியினால் மேலும் பல அரசியல்வாதிகள் தலை உருளுகின்ற நிலை ஏற்படலாம். Yomiuri Shimbun செய்திப் பத்திரிகை 118 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதிய பணம் செலுத்தவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளது.

பிரதமர் Koizumi-தான் மொத்தம் ஆறு ஆண்டுகள், மற்றும் 11- மாதங்களுக்கு பென்ஷன் திட்டத்திற்கு பணம் செலுத்தவில்லை என்று தெரிவித்தார், என்றாலும் 1986-ல் பென்ஷன் திட்டம் சட்டப்பூர்வமாக கட்டாயமாக்கப்படுவதற்கு முன் இது நடைபெற்றது என்றும் தெரிவித்தார். Asahi Shimbun மே மாதம் மத்தியில் நடத்திய நாடு தழுவிய ஆய்வில், அரசாங்கத்திற்கு முந்திய மாதத்தின் 45 சதவீதத்தை விட மக்களிடையே ஆதரவு 5 சதவீதம் குறைந்துவிட்டது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

எதிர்க்கட்சியும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. DPJ தலைவராக ஆவதற்கு ஆரம்பத்தில் சம்மதம் தெரிவித்த Ichiro Ozawa, தானும் பணம் செலுத்தாதது தெரிய வந்ததும், தலைவர் பதவியை ஏற்க மறுத்தார். கட்சியின் பொதுச்செயலாளர் Katsuya Okada இறுதியாக தலைவர் பதவியை ஏற்றார். அவர் ஓய்வூதிய பணத்தை முழுவதையும் முறையாக செலுத்தி வருகிறார் என்பதுதான் அவருக்குரிய முக்கிய தகுதியாகும்.

இந்த பிரச்சனையின் உணர்வுபூர்வமான தன்மை குறித்து கருத்து தெரிவித்த ஜப்பானின் பொருளாதார ஆய்வு நிலையத் தலைவர் Naohiro Yashiro, கார்டீயனுக்கு பேட்டியளிக்கும்போது, இந்தத்திட்டம் Dinosaur போன்றது என்று கூறினார். ''இதை இப்போது நாம் பராமரிக்க முடியாது; Dinosaur-க்கு தொடர்ந்து இனியும் தீனி போட்டுக்கொண்டிருக்க முடியாது. இளைய தலைமுறையினர் பெருகிவரும் சுமையை தாங்கிக்கொள்ள முடியாமல் இன்றைக்கு இல்லாவிட்டாலும் என்றைக்காவது ஆட்சிக் கவிழ்ப்பில் இறங்கக்கூடும். எப்போது அது நடக்கும் என்று நமக்குத்தெரியாது, ஆனால் அது ஒரு குறித்த நேரத்தில் வெடிக்கும் வெடிகுண்டு, நிச்சயம் வெடிக்கும்'' என்று கூறினார்.

ஜப்பானில் பரவலாக நிலவும் அதிருப்தியின் அடையாளச் சின்னமான இந்த மோசடி பொருளாதாரத்தில் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டிருப்பதால் மட்டும் தூண்டிவிடப்படவில்லை, ஜப்பானிய இராணுவவாதத்தின் மீள்வெளிப்பாட்டிற்கு குரோதத்தினாலும் கூட இது ஏற்பட்டிருக்கிறது. ஜப்பான் துருப்புக்களை ஈராக்கிற்கு அனுப்புவதற்கு அண்மையில் நடத்தப்பட்ட பல்வேறு கருத்துக்கணிப்புக்கள் பெரும்பான்மையோரின் எதிர்ப்பைப் பதிவு செய்தன. இந்த பொதுமக்களது அரசாங்கத்திற்கு எதிரான விரோத போக்கு எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக மாறவில்லை, ஏனென்றால் தற்போது உள்ள அரசியல்வாதிகளின் கொள்கைகளில் அடிப்படை மாற்றங்கள் இல்லை.

சென்ற நவம்பரில் நடைபெற்ற தேசியத் தேர்தல்களில் வாக்குப்பதிவு எண்ணிக்கை குறைந்து வருகிற மற்றும் சுயேட்சைகளுக்கு ஆதரவு பெருகும் போக்கு தொடர்கிறது. 2000- தேர்தலைவிட சென்ற ஆண்டு தேர்தலில் வாக்குப் பதிவு 60 சதவீதத்திற்கு ஏறத்தாழ 3 சதவீதம் வீழ்ச்சியடைந்துவிட்டது. ஆளும் LDP மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் செல்வாக்கு இழந்துவருவதால் DPJ ஓரளவிற்கு ஆதரவு பெற்றிருந்தாலும் இப்போது நடைபெற்றுவரும் மோசடி குற்றச்சாட்டுக்களால் அவர்களது செல்வாக்கும் சிதைந்து கொண்டு வருகிறது. சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டுமே தங்களது இருக்கைகளை இழந்திருக்கின்றன.

நடைபெறவிருக்கின்ற மேலவைத் தேர்தலிலும் இதே போன்ற முடிவுதான் ஏற்படக்கூடும். மாற்றீடு எதுவும் இல்லாததால், பலர் வாக்களிப்பது பற்றியே கவலைப்படமாட்டார்கள்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved