World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Australian SEP public meeting:

Iraq has become a military and political debacle for the US

ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சி பொதுக் கூட்டம்:

ஈராக்கில் அமெரிக்காவிற்கு இராணுவ மற்றும் அரசியல் தோல்விகள்

By James Conachy
5 June 2004

Back to screen version

பின்வரும் உரை உலக சோசலிச வலைத் தள எழுத்தாளரும், ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னணி உறுப்பினருமான James Conachy, ஆல் ஈராக் போர் தொடர்பாக சிட்னியில் மே 30- அன்று வழங்கப்பட்ட உரை ஆகும்.

ஓராண்டிற்கு முன்னர், 2003-மே முதல் தேதி, அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் அமெரிக்க விமானம்தாங்கிக் கப்பலில் ஒடும் தளத்தில் நடமாடிக்கொண்டு, ஈராக் போரில் வெற்றி என்று அறிவித்தார்.

நாம் சந்திக்கிறவாறு, இப்போது அமெரிக்க ஆளும் வட்டாரங்களில் அந்த வெற்றிக்களிப்பிற்கு, தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்பவர்களை தவிர வேறு எவரும் வெற்றி மூச்சுவிடவில்லை.

இந்த வாரம் முழுவதிலுமே வாஷிங்டனில் பீதி நிலவுவதற்கான அறிகுறிகள் தெரிந்தன. புஷ் நிர்வாகம் தன்னால் உடைக்க முடியாத, ஈராக் மக்களது எதிர்ப்பை எதிர்கொண்டிருக்கிறது. சர்வதேச அளவில் அரசியல் அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டு நிற்கிறது. ஈராக் சிறைகளில் ஈராக் கைதிகளை அமெரிக்கர்கள் சித்திரவதை செய்தது தொடர்பான விவரங்கள் அம்பலத்திற்கு வந்ததைத் தொடர்ந்து சர்வதேச பொதுமன்னிப்பு அமைப்பு அமெரிக்காவின் மனித உரிமைகள் மீறல், நடவடிக்கைகள் குறித்து கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. ஜனாதிபதி முற்றிலும் நிதானம் தவறிவிட்டார்.

அமெரிக்க இராணுவ வட்டாரங்களில் ஈராக் விவகாரங்கள் தொடர்பாக என்ன விவாதிக்கப்படுகிறது, என்பதற்கு சில பகுதிகளை நான் படித்துக்காட்ட விரும்புகிறேன். கலாச்சார பழமைவாதத்திற்கான வலதுசாரி மையத்தின் முதன்மை பாதுகாப்பு அலுவலர் வில்லியம் S.Lind- மே13-ல் வெளியிட்ட விமர்சனத்தின் சில பகுதிகளை படித்துக்காட்ட விரும்புகிறேன்.

''ஈராக்கிலிருந்து வெற்றிகரமாக வெளியேறுவதற்கு திட்டங்களை அமெரிக்கா உறுதிசெய்து கொள்ளவேண்டியது, அவசியமாகும்..... பொதுமக்களது எழுச்சியால் ஒரு இன்டிபாதா நடக்கும்போது நாம் அங்கிருந்து விரட்டப்படுவோம் என்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. ஒவ்வொரு ஈராக்கியரும், ஒவ்வொரு அமெரிக்கரை குறிவைப்பார். அதுபோன்ற நிலையில் நமது இளம் வீரர்களும், வீராங்கனைகளும், சூடானில் கோர்டன் சந்தித்ததைப்போன்று வெளியேறுவதற்கு போரிடவேண்டியிருக்கும். அது மகழ்ச்சியளிக்கும், வாய்ப்பல்ல.

''இதன் பொருள் என்னவென்றால் ஆயிரக்ககணக்கான இன்னும் சொல்லப்போனால் பல்லாயிரக்கணக்கான அமெரிக்க மற்றும் 'கூட்டணி படைவீரர்கள்' பலியாவார்கள். ஈராக் மக்களிடையே பல மடங்கு சாவுகள் எண்ணிக்கை அதிகரிக்கும். வரலாற்றின் நினைவில் நிறுத்தத்தக்க தோல்விகளில் ஒன்றாக Syracuse, Waterloo மற்றும் ஸ்ராலின் கிராட் போன்று அமையும். அதற்கு பின்னால் ஏற்படுகின்ற அதிர்ச்சிகள் அலை அலையாக பாக்கிஸ்தானிலிருந்து, பாரசீக வளைகுடா வழியாக எகிப்து, பிரிட்டன், மற்றும் அமெரிக்காவிலேயே ஆட்சிகள் கவிழும்.

''நீங்கள் Dow புள்ளிகள் 3,000-ஆவதை, அது 300-ஆக இல்லாவிட்டால் கூட எதிர்பார்க்கலாம்.''

ஈராக்கில் அமெரிக்க தோல்வியை எதிர்நோக்கியுள்ளது என்ற இதர எச்சரிக்கைகள் அவ்வளவு பேரழி தருவதாக இல்லாவிட்டாலும், ஓய்வு பெற்ற இராணுவ ஜெனரல் Anthony Zinni உட்பட பல மூத்த அமெரிக்க இராணுவ அதிகாரிகள் எச்சரிக்கை செய்துள்ளனர்.

அவர்களது விரக்தியின் உயிர்நாடி ஈராக் நிலவரத்தின் யதார்த்தத்தில் அடங்கியிருக்கிறது. சென்ற மார்ச் மாதம் படையெடுப்பு நடத்தப்பட்ட நேரத்தில் பல்வேறு அனுமானங்கள் செய்யப்பட்டன. அவை அபத்தமானவை என அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது என்று தான் சொல்லவேண்டும்.

இதில் மிக மோசமான ஒரு அபத்தம் என்னவென்றால் ஒரு புஷ் ஆதரவாளர் குறிப்பிட்டதைப்போல் போருக்குத்திட்டமிட்டவர்களும் அமெரிக்க ஊடகங்களும் ஈராக்கை பிடித்துக் கொள்வது "மிக எளிதானது" என்று மதிப்பிட்டுவிட்டார்கள்.

அமெரிக்க இராணுவத்தின் மிதமிஞ்சிய வலிமை ஈராக் மக்களுக்கு அதிர்ச்சியூட்டி நிலைகுலையச்செய்து அவர்களை சில வாரங்களுக்குள் அடிபணியச் செய்துவிடும். சில மாதங்களில் 50,000-அல்லது அதற்கு மேற்பட்ட சில துருப்புக்கள் மட்டுமே ஈராக்கில் பொம்மையாட்சியை அமைத்து ஈராக் எண்ணெய் வளத்தை சூறையாடுவதை தொடக்கிவிடலாம் என்று கருதினார்கள். அமெரிக்க இராணுவத்தின் பெரும்பகுதி பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் அடுத்த இலக்கிற்கு நகர்ந்து விடமுடியும் என்று கருதப்பட்டது.

ஈராக் இராணுவத்தை கொன்று குவித்து ஈராக் நகரங்களை, குப்பை மேடாக்கி படுகொலைகளையும், பயங்கரசெயல்களையும் புரிவதில் அமெரிக்க இராணுவத்திற்குள்ள ஆற்றல் குறித்து எப்போதுமே சந்தேகம் நிலவவில்லை. ஆனால் ஈராக் மக்கள் எதிர்க்கப்போகிறார்கள், உடனடியாக இல்லாவிட்டாலும், சற்று தாமதமாக இந்த எதிர்ப்பு கொரில்லா, போர்கட்டத்தையும் தாண்டி கிளர்ச்சி எழுச்சி வடிவம் பெற்றுவிடும் என்பதிலும் எவருக்கும் எப்போதும் சந்தேகம் இருந்ததில்லை.

2004-மார்ச் கடைசி வாரத்தில் புஷ் நிர்வாகமும் ஈராக்கிலுள்ள அதன் ஆக்கிரமிப்பு நிர்வாகமும் இரண்டு முடிவுகளை எடுத்தன, அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கெதிராக ஈராக் மக்களது எழுச்சிக்கு ஆரம்பக்கட்டமாக அமைந்தது அந்த முடிவுகள்தான் என்று நான் சரியாகவே கருதுகிறேன்.

முதலாவதாக மார்ச் 28-ல், ஆக்கிரமிப்பிற்கான ஷியா மத போதகர் மொக்தாதா அல் சதர் செய்தி பத்திரிகை அலுவலகங்களில் பாக்தாத்தில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. அந்த வாரப்பத்திரிகை சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்பட்டது.

இரண்டாவதாக, நான்கு அமெரிக்க கூலிப்படையினர் மார்ச் 30-ல், பல்லூஜா நகரில் கொல்லப்பட்டதை புஷ் நிர்வாகம் தன்கையில் எடுத்துக்கொண்டு அந்தநகரத்தின்மீது பெரும் எடுப்பில் தாக்குதல் நடத்தவேண்டும் என்று நீண்டகாலத் திட்டத்தை செயற்படுத்தியது. ஏனெனில் ஈராக் மீது படையெடுப்பு நடத்தப்பட்டதிலிருந்து பல்லூஜா நகரம் அமெரிக்க எதிர்ப்பு மையமாக செயல்படுகிறது. பல்லாயிரக்கணக்கான கடற்படையின் நிலப்படை வீரர்கள் அந்த நகரத்தை முற்றுகையிட்டனர். ஏறத்தாழ 3,00,000 மக்கள் அந்த நகரத்திற்குள் சிக்கிக்கொண்டனர்.

பின்னர் அமெரிக்க தளபதிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் விளக்கப்பட்டவாறு, பல்லூஜா -மீது தாக்குதல் நடத்தப்பட்டதன் நோக்கம், அதன் மக்கள் மீதான அத்தகைய இறப்பும் அழிவும் திணிக்கப்பட்டது அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு குறுக்கே நிற்பவர்களுக்கு எதிரான எதிர்ப்பின் அடையாளச் சின்னமாக அல்லாமல், அவர்களுக்கு என்ன நடக்கும் என்பதை எடுத்துக்காட்டும் அடையாளச்சின்னமாக ஆக்கிக்காட்ட வேண்டும் என்பதாக இருந்தது.

மொக்ததா அல் சதர் தலைமையில் நடைபெற்றுவரும் இயக்கத்தை நசுக்குவதற்கு நடத்தப்பட்டுவரும் பயங்கரமான பழிவாங்கும் நடவடிக்கைகள் நாஜிக்களது கருத்துருவைப் போன்றே அமைந்திருக்கின்றன.

அல் சதரின் செய்திப்பத்திரிகைக்கு தடைவிதிப்பதன் மூலம் மோதல்போக்கு உருவாக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான போராளிகள் அடங்கிய இன்னும் சொல்லப்போனால் Mhadi இராணுவத்தை எளிதாக நசுக்கிவிடலாம் என்று அமெரிக்க அதிகாரிகள் நம்பினர். அல் சதர் இயக்கத்தை இரத்தக்களரியில் சிக்கவைத்துவிட்டு, நிலைபெற்றுவிட்ட மற்றும் போர்க்குணம் குறைவாக உள்ள ஷியாத்தலைவர்களை மிரட்டி, ஜூன் 30-ல் உருவாக்கப்படும் பொம்மை ஆட்சியை நிறுவுதற்கு அமெரிக்கா தீட்டியுள்ள திட்டங்களுக்கு எதிர்ப்பை கைவிடச்செய்துவிடலாம் என்று புஷ் நிர்வாகம் நம்பியது.

மக்கள் எழுச்சி

மாறாக ஒரே நேரத்தில் சுன்னி மற்றும் ஷியா எதிர்ப்பாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் அமெரிக்காவிற்கு இராணுவ மற்றும் அரசியல் நெருக்கடியை தந்துவிட்டது.

ஏப்ரல் 4- இரவில் பல்லாயிரக்கணக்கான ஆயுதந்தாங்கிய ஈராக் ஷியா இளைஞர்கள் பாக்தாத் புறநகரான சதர்-நகரத்திலும் ஷியாக்களின் புனித நகர்களான நஜாப் மற்றும் கர்பலா, குட், நசிரியா மற்றும் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டிலுள்ள அமாரா மற்றும் பாஸ்ரா நகரங்களில் அணிதிரண்டனர். அவர்கள் அரசாங்கக் கட்டடங்களைக் கைப்பற்றினர். நகரத்தெருக்களை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். அமெரிக்கா மற்றும் கூட்டணிப்படைகள் பாதுகாப்பு மிக்க தங்கள் கொத்தளங்களுக்கு திரும்பிச்செல்லும் நிர்பந்தத்தை உருவாக்கிவிட்டனர்.

பல்லூஜாவில் அமெரிக்க கடற்படையினர் ஏப்ரல் 6-ல் நுழைவதற்கு முயன்றார்கள். வியட்நாம் போருக்குப்பின்னர் அமெரிக்க இராணுவம் சந்தித்த மிகத்தீவிரமான நகர்ப்புறப் போர் அது. நூற்றுக்கணக்கில் போராளிகள் பலியானாலும், அமெரிக்கா இடைவிடாது குண்டு வீசிக்கொண்டிருந்தாலும், ஈராக் போராளிகள் உறுதியாக நின்றார்கள்.

ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடுகின்ற மக்களது வர்க்க அமைப்பு மறுக்கமுடியாதது. அவர்கள் அவ்வளவு பேரும் தொழிலாள வர்க்கத்தினர் மற்றும் நகர்ப்புற ஏழைகள். இந்த சமுதாயப் பிரிவினர்தான் ஒரு காலத்தில் அமெரிக்க ஆதரவு பெற்ற பாத்திஸ்ட் ஆட்சியின் கீழும், 13 ஆண்டுகள் அமெரிக்கப் போர்களினாலும், குண்டுவீச்சுக்களாலும், பொருளாதாரத் தடைகளாலும் மிகப்பெருமளவில் பாதிக்கப்பட்டவர்கள். இதே சமுதாயப் பிரிவினர் ஆக்கிரமிப்பு தோல்வியடைவதால் எதையும் இழந்துவிடப்போவதில்லை மாறாக அவர்களுக்கு எல்லா வகையிலும் நன்மையே ஏற்படும்.

பாக்தாத் புறநகரான சதர் நகரத்தை சேர்ந்த அப்பாஸ் என்கிற ஈராக்கியர் ஒடுக்கப்பட்ட ஈராக்கின் உணர்வுகளை இந்த வாரம் பாஸ்டன் குலோப்-ற்கு ஒரு விமர்சனமாகத் தெரிவித்துள்ளார். ''புஷ் எங்களுக்கு மரணத்தை, திட்டமிட்ட கொலையை, கற்பழிப்பை தெருக்களிலே ஓடிக்கொண்டிருக்கும் சாக்கடையை, வறுமையை, மற்றும் வேலையில்லாத்திண்டாட்டத்தை கொண்டுவந்திருக்கிறார்." இந்தப் படையெடுப்பு நடந்தது முதல் சதர் நகரத்தில் நடமாடுகின்ற ஒரு பழமொழி என்னவென்றால் மாணவர் (சதாம் ஹூசைன்) போய்விட்டார், ஆசிரியர் (அமெரிக்கா) வந்துவிட்டார் என்பதாகும்.

இந்த எழுச்சியின் முதல் கட்டத்தில் 200-க்கு மேற்பட்ட அமெரிக்கர்கள் பலியாகியிருக்கிறார்கள், ஏறத்தாழ 2,000-பேர் காயமடைந்துள்ளனர். கடந்த ஏழு வாரங்களுக்கு மேலாக ஈராக்கில் பலியான ஈராக் மக்கள் பற்றிய விவரங்கள் தெரியவில்லை. அதை அமெரிக்க இராணுவம் கணக்கிடுவதில்லை. பல்வேறு செய்தி நிறுவனங்கள் தந்துள்ள விவரங்களை கணக்கிட்டு நான் செய்துள்ள தோராயமான மதிப்பீடு 2000- போராளிகள் 1500 க்கு மேற்பட்ட சிவிலியன்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர், 5000-போராளிகளும், சிவிலியின்களும் காயமடைந்துள்ளனர்.

அமெரிக்க இராணுவம் வியட்நாம் போருக்கு போட்டியாகவும், நாஜிக்களோடு தங்களை ஒப்பிடுவதை முழுமையாக நியாயப்படுத்தும் வகையிலும் ஈராக்கில் போர்குற்றங்களை செய்து வருகிறது. பல்லூஜா, மற்றும் கர்பலா புறநகர்கள் அழிந்து கிடக்கின்றன.

இன்றைய தினம் ஈராக்கின் பெரும் பகுதியில் நிம்மதியற்ற ஒரு போர் நிறுத்தம் நடைமுறையில் உள்ளது. பொது எழுச்சியை சமாளிக்க முடியாது என்பதற்காக அமெரிக்க இராணுவம் பல்வேறு இராஜதந்திர பின்வாங்கல் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. இது William S.Lind எச்சரித்திருப்பதைப்போல் அமெரிக்க இராணுவம், எதிரிகள் மீது அயரும் நேரத்தில் திடீர் தாக்குதல் நடத்துவதற்கு முயலக்கூடும்.

பல்லூஜா-வில், கர்பலா-வில் மற்றும் தற்போது நஜாப் -ல் அமெரிக்க இராணுவம் ஒட்டுமொத்த தாக்குதலில் இருந்து பின்வாங்குமாறு கட்டளையிடப்பட்டிருகிறது. பாக்தாத் சதர் நகரம் அமெரிக்கத் துருப்புக்கள் நடமாட முடியாத இடமாக ஆகிவிட்டது.

இப்படி அமெரிக்க இராணுவம் பின்வாங்கியிருப்பது வெள்ளை மாளிகையில் பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவிப்பதில் நிலவுகின்ற தார்மீக நெறி உறுத்தல்களால் அல்ல. புஷ் நிர்வாகத்தலைவர்கள் அத்தகைய படுகொலைகளை நடத்துகின்ற வல்லமையுள்ளவர்கள்தான். ஈராக்கில் மட்டுமல்ல மத்தியக் கிழக்கு முழுவதிலும் மற்றும் அமெரிக்காவிலும் உருவாகின்ற அரசியல் விளைவுகளை கருத்திக் கொண்டுதான் ஈராக்கில் இராணுவம் பின்வாங்கியிருக்கிறது.

அமெரிக்க மக்களிடம் புஷ் நிர்வாகம் நடத்திவந்த பிரச்சாரத்தின் உயிர்நாடியையே இந்த எழுச்சி சிதைத்துவிட்டது. ஈராக்கில் அமெரிக்கர்கள், இருப்பது தங்களை விடுவிப்பதற்காகத்தான் என்று கருதி ஈராக் மக்களது ஆதவரவு இருக்குமென்று பிரச்சாரம் செய்யப்பட்டது.

சதாம் ஹூசைன் ஆட்சியில் மிச்சமிருக்கும் தனிப்பட்ட சிலரும், இஸ்லாமிய தீவிரவாதிகள் அல்லது வெளிநாட்டு பயங்கரவாதிகள் அமெரிக்காவை எதிர்த்து போராடுகிறார்கள் என்று நிரந்தரமாக கூறப்பட்டு வந்த பொய்யை ஈராக் மக்களது எழுச்சியின் அளவு தோலுரித்துக்காட்டிவிட்டது.

ஈராக் மீது ஆக்கிரமிப்பு நடத்தப்பட்டிராவிட்டால் அந்நாட்டில் போட்டி மத மற்றும் இனக்குழுக்களுக்கிடையே உள்நாட்டுப்போர் நடந்து அந்த நாடு அழிந்திருக்கும், என்ற தனக்குத்தானே சமாதானம் கூறிக்கொள்ளும் வாதத்தையும் இவ்வெழுச்சி கீழறுத்திருக்கிறது.

பெரும்பாலான மக்கள் --சுன்னிகளும், ஷியாக்களும்-- அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிரான நிலை எடுத்து ஒன்றுபட்டு நிற்கின்றனர். சதர்-க்கும், பல்லூஜா-விற்கும் ஆதரவாக விடுக்கப்பட்ட மூன்று நாள் பொது வேலைநிறுத்தக் கோரிக்கையை ஏற்று மூன்று நாட்கள் பாக்தாத் நகரமே பொதுவேலைநிறுத்தம் செய்ததது. சதர்-ம் பல்லூஜாவும் ஈராக் எதிர்ப்பு கிளர்ச்சியின் சின்னங்களாகும். பிரதான சுன்னி மசூதியில் 2,00,000 திற்கு மேற்பட்ட கூட்டு சுன்னி- ஷியா பேரணிகள் நடைபெற்றன. பல்லூஜா-விற்கு உணவையும், இரத்தத்தையும் பல்லாயிரக்கணக்கான ஷியாக்கள் வழங்கினர். அமெரிக்காவின் சப்ளை லைன்கள் மீது நிரந்தர தாக்குதல்களை நடத்துவதற்காக ஷியா மற்றும் சுன்னி போராளிகள் இணைந்துள்ளனர்.

கிளர்ச்சிக்கு ஆதரவு இல்லை என்பதற்கு பதிலாக ஆக்கிரமித்துக் கொண்டுள்ள அமெரிக்கா தனிமைப்படுத்தப்பட்டு நிற்கிறது.

கிளர்ச்சிக்கு முன்னர் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் அல் சதர்-க்கு ஆதரவு 2-சதவீதமாக இருந்தது. ஏப்ரலில் மக்கள் ஆதரவு 68- சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆய்வு மற்றும் மூலோபாய ஆய்வுகளுக்கான ஈராக் நிலையம் இந்தக் கருத்துக்கணிப்பை நடத்தியது.

அமெரிக்க நிர்வாகம் தனக்கு அடிப்படை ஆதரவு தருவதற்காக உருவாக்கிய ஒவ்வொரு அமைப்பும் பொதுமக்களது கிளர்ச்சி எழுச்சியின் அழுத்தங்களால் சிதைந்து நிற்கின்றன. ஒவ்வொரு பகுதியிலும் அமெரிக்கா நியமித்த இராணுவம், போலீஸ் மற்றும் சிவில் பாதுகாப்புப்படையினர் கிளர்ச்சிக்கெதிராக சண்டையிட மறுத்துவிட்டனர் அல்லது பல இடங்களில் கிளர்ச்சிக்காரர்களோடு சேர்ந்து கொண்டனர். தான் தேர்ந்தெடுத்த ஈராக் ஆளும் குழுவிலேயே அமெரிக்காவிற்கு எதிராக பகிரங்க கண்டனங்கள் தெரிவிக்கப்படுகின்றன மற்றும் பதவி விலகல்களும் நடைபெற்று வருகின்றன.

சர்வதேச எதிர்ப்பு

இந்த கிளர்ச்சி எழுச்சியின் மிகவும் சிறப்பு மிக்க ஓர் அம்சம் என்னவென்றால் புஷ் நிர்வாகம் மத்திய கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடுபவர்களை ஒட்டுமொத்தமாக அமெரிக்கர்களுக்கு எதிரானவர்கள், அமெரிக்க மக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள் என்று சித்தரிக்க இடைவிடாது மேற்கொள்ளும் முயற்சியை சீர்குலைத்திருக்கிறது. ஈராக் கிளர்ச்சியை பிற்போக்குத்தனமான கொள்கைகளை கொண்ட அல் கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புக்களோடு தொடர்புபடுத்த புஷ் நிர்வாகம் முயன்று வருகிறது.

மொக்தாதா அல் சதர் ஏப்ரல் 7-ல் விடுத்த வேண்டுகோளை WSWS தனது கவனத்தில் தீவிரமாக எடுத்துக்கொண்டது.

அமெரிக்க இராணுவம் பாக்தாத், பல்லூஜா மற்றும் இதர நகரங்களில் சிவிலியன் பகுதிகளில் ஜெட்போர் விமானங்கள், ஹெலிகாப்டர் குண்டுவீச்சு விமானங்கள், பீரங்கிகள் மற்றும் டாங்கிகளைக் கொண்டு தாக்குதல் நடத்திய நேரத்தில், அவர் அமெரிக்க மக்கள் மீது பழிவாங்கும் தாக்குதல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று கேட்கவில்லை.

மாறாக, சதர் அமெரிக்கர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். ''அமெரிக்க மக்கள் உங்களது சகோதரர்களாகிய ஈராக் மக்கள் பக்கம் நிற்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். ஈராக் மக்கள் உங்களது ஆட்சியாளர்களாலும், ஆக்கிரமிப்புச் செய்துள்ள இராணுவத்தாலும் அநீதியில் அவதிப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். நேர்மையான ஈராக்கியருக்கு ஆட்சியை மாற்றித்தருவதற்கு அமெரிக்க மக்களாகிய நீங்கள் உதவவேண்டும்'' என்று சதர் கேட்டுக்கொண்டார்.

ஆஸ்திரேலியாவில் ஏப்ரல் 10-ல் SEP நடத்திய கூட்டத்திற்கு WSWS சர்வதேச ஆசிரியர் குழுத்தலைவர் டேவிட் நோர்த் அனுப்பியிருந்த வாழ்த்துச் செய்தியில் கீழ்கண்ட கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்:

''இந்த வேண்டுகோள் ஈராக் மக்களிடையே ஏகாதிபத்தியம் பற்றிய புதியதொரு விழிப்புணர்வை எதிரொலிக்க வேண்டும். அமெரிக்க ஏகாதிபத்தியம் என்பது ஒன்றுபட்ட ஒரே சக்தியல்ல. அமெரிக்கா உள்நாட்டு சமூக பிளவுகளால் சிதைந்து நிற்கிறது. ஈராக் மக்கள் தங்களது நாட்டு எல்லைக்கப்பால் உள்ள மக்களது ஆதரவையும் பெறவேண்டும் என்ற உணர்வை வெளிப்படுத்துகிறது. இந்த போக்கு 2003- பெப்ரவரியில் போருக்கு எதிராக நடைபெற்ற சர்வதேச அளவிலான பேரணிகளிலேயே எதிர்பார்க்கப்பட்டதுதான்''

ஒவ்வொரு அம்சத்திலும் புஷ் நிர்வாகம் ஈராக் மக்களை அடிமைப்படுத்த வேண்டுமென்ற அதன் ஆசைகள் இரண்டு சக்திகளால் சீர்குலைக்கப்பட்டு வருகின்றன. ஈராக் மக்களது எதிர்ப்புக்கிளர்ச்சி, மத்திய கிழக்கில் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் புதிய காலனி ஆதிக்க செயற்திட்டத்திற்கு சர்வதேச அளவில் கிளம்பிவரும் எதிர்ப்பு.

இங்கே நாம் ஆராய்ந்து கொண்டிருப்பது சிக்கலான ஒன்றை ஒன்று பாதிக்கும் நிகழ்ச்சிப்போக்குகள். 2003 மார்ச்- 20-முதல் ஈராக் மக்களுக்கு ஒன்று நன்றாகத் தெரிந்துவிட்டது. அமெரிக்காவிலும், உலக மக்களிலும் ஒரு குறிப்பிடத்தக்க அளவிலான மக்கள் ஈராக் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள ஆக்கிரமிப்பை முற்றிலுமாக எதிர்த்து நிற்கின்றனர்.

சர்வதேச தொழிலாள வர்க்கத்தில் பெரிய குழப்பம் நிலவுகிறது. ஆனால் கடந்த பல தலைமுறைகளுக்கு மேலாக பொதுமக்கள் மகத்தான அனுபவங்களை கடந்து வந்திருக்கின்றனர். அவற்றில் சில படிப்பினைகளையும், பெற்றிருக்கின்றனர். பொதுமக்களில் பெரும்பாலான பிரிவுகளை சார்ந்தவர்கள் அரசியல் கட்டுக்கோப்புக்களிலிருந்து முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டு நிற்கின்றனர் மற்றும் அரசியல் கட்டுக்கோப்பை அவநம்பிக்கையுடன் பார்க்கின்றனர்.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் புஷ், பிளேயர், மற்றும் ஹோவார்ட், "பேரழிவு ஆயுதங்கள்" ஈராக் பெற்றிருப்பதன் காரணமாக இந்தப்போர் ஈராக்கிற்கு எதிராக தொடக்கப்படுகிறது என்ற பொய்களை ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு சர்வாதிகாரியிடமிருந்து அதன் மக்களை "விடுவிக்க" விரும்பி அமெரிக்க அரசாங்கம் எண்ணெய்வளம் மிக்க மூலோபாய முக்கியத்துவம் நிறைந்த அந்தநாட்டின் மீது படையெடுப்பு நடத்தியது என்பதையும் ஏற்றுக்கொள்ளவில்லை.

படையெடுப்பிற்கு முன் நடைபெற்ற பேரணிகளில் வரலாறு காணாத சர்வதேச மக்கள் ஒற்றுமை காணப்பட்டது. பெப்ரவரி 15,16-ல் நடைபெற்ற பேரணிகளில் உலகம் முழுவதும் 10-மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர், இது அவர்களது ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தியது.

இந்தப் போரால் எழுப்பப்பட்ட சீற்றங்கள் மற்றும் அரசாங்கப் பொய்களுக்கு எதிரான குரோதம் மக்கள் மனதிலிருந்து மறைந்துவிடவில்லை என்பதை இந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஸ்பெயின் நாட்டு தேர்தல்கள் எடுத்துக்காட்டின. இப்போது தென்கொரியாவிலிருந்து இந்தியாவரை, ஆஸ்திரேலியா வரை, பொதுமக்கள் பெருமளவில் அரசியல் வாழ்வில் ஈடுபடுவதால் வலதுசாரி பிற்போக்கு சக்திகள் தங்களைத் தாங்களே தற்காத்துக்கொள்ள வேண்டிய அவசியத்தில் தள்ளப்பட்டு நிற்கின்றன.

கடந்த பல மாதங்களாக ஈராக் மக்கள் தங்களது உறுதியான மற்றும் மறுக்கமுடியாத வகையில் வீரம் செறிந்த எதிர்ப்பு கிளர்ச்சியில் உறுதியாக நிற்பதை ஊக்குவிக்கின்ற வகையில் பூகோள அளவில் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் நிலவுகிறது மற்றும் ஆதரவு தெரிவித்துவருகிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியம், இராணுவ பின்னடைவுகளால் அல்லது வெள்ளை மாளிகை மற்றும் பென்டகன் தலைமையில் இப்போது பதவி வகிப்பவர்களின் திறமைக்குறைவால் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஈராக்கிலிருந்து வெளியேறி விடப்போவதில்லை. வரும் மாதங்களில் பல அரசியல் மாற்றங்களும், வியப்புகளும் நடப்பதற்கு வாய்ப்புக்கள் உள்ளன. ஆனால் என்ன மாறாது என்றால், அமெரிக்க முதலாளித்துவத்தை பூகோளத்தை வென்று கைப்பற்றும் பாதைக்கு உந்திச்செல்லும், இதன் தீவிர பொருளாதார மற்றும் சமுதாய நெருக்கடி ஆகும்.

அமெரிக்க இராணுவத்தின் வலிமை உலக அரசியலில் மிக முக்கியத்துவம் வாய்ந்த அம்சமல்ல. தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களது போராட்டம்தான் முக்கியத்துவம் வாய்ந்தாகும். அந்த இரண்டு தரப்பும் ஏகாதிபத்தியத்தை முறியடித்து, புரட்சிகர சமுதாய மாற்றத்தை கொண்டுவரும், அதற்குத்தேவை தலைமையும் முன்னோக்கும்தான்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved