World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India: Behind the rout of the Telugu Desam Party-a portrait of World Bank social engineering

இந்தியா: தெலுங்கு தேச கட்சியின் படுதோல்விக்குப் பின்னால்-உலக வங்கியின் சமூகப் பொறியாளர் பணியின் ஒரு சித்திரம்

By Kranti Kumara
12 June 2004

Back to screen version

பாரதிய ஜனதாக் கட்சி (BJP) தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி (NDA) அரசாங்கம் சென்ற மாதம் நடைபெற்ற தேர்தலில் படுதோல்வியை தழுவியது, இந்தியாவில் ஆளும் செல்வந்த தட்டினருக்கும் உழைக்கும் வெகுஜனங்களுக்குமிடையே நிலவுகின்ற மிக பிரமாண்டமான இடைவெளியை கூர்மையாக வெளிப்படுத்தியது. BJP- ன் இந்தியா ''ஒளிர்கிறது'' என்ற கூற்று வெளிநாட்டு முதலீடுகளாலும் பங்குசந்தைப் பூரிப்பாலும் உற்சாகம் கொண்ட செல்வந்த தட்டினரை மயக்கம் கொள்ளச்செய்து விட்டது. ஆனால் கோடிக்கணக்கான தொழிலாளர் மற்றும் சிறு விவசாயிகளுக்கு "இந்தியா ஒளிர்கிறது" பிரச்சாரம் அவர்களது துன்பங்களில் அரசாங்கம் எந்தளவிற்கு இரக்கமற்ற அக்கறையற்றதனமாக இருந்தது என்பதை கோடிட்டுக் காட்டுவதாக அமைந்தது. BJP- யையும், NDA- வையும் வாக்குச்சீட்டின் மூலம் மக்கள் வெறுத்து ஒதுக்கியிருப்பது அதன் வேலைத்திட்டமான பொருளாதார "தாராளமயமாக்கலை"---- தனியார்மயமாக்கல், நெறிமுறைகளைத் தளர்த்தல், பொதுத்துறை மற்றும் சமூக சேவைகளை அழித்தல், ஆகியவற்றை---1991-முதல் எல்லா இந்திய அரசாங்களும் பின்பற்றி வருகின்றன, தென்னிந்திய மாநிலமான ஆந்திரத்தில் BJP- ன் கூட்டணிக் கட்சியான தெலுங்கு தேசம் கட்சி (TDP) அடைந்த படு தோல்வியால் இது கோடிட்டு காட்டப்பட்டது.

தசாப்த கால ஆந்திர பிரதேசத்தின் பழைய-TDP அரசாங்கத்தை உலக வங்கியும், சர்வதேச வர்த்தக பத்திரிகைகளும், அகில இந்தியாவிற்கே அது முன்மாதிரி என்று கூறிவந்தன. ஆந்திர பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தன்னை ஆந்திரத்தின் CEO என்று அழைத்துக்கொள்வதில் விருப்பத்துடன் செயற்பட்டார். மாநிலத்தின் மிகப்பெரிய நகரமான ஹைதராபாத்தை தகவல் தொழில் நுட்ப (IT-information technologies) மையப் பகுதியாக மாற்றுவதற்கு முயற்சி செய்ததற்காக அவர் பாராட்டப்பட்டார்.

ஆனால் சென்ற மாதம் இந்திய மக்களவை தேர்தல்களிலும் ஆந்திர பிரதேச (AP) மாநில தேர்தல்களிலும் TDP-யும், BJP-யும் படுதோல்வியடைந்தன. ஆந்திராவில் 42- மக்களவைத் தொகுதிகளில் TDP-க்கு 5 இடங்களில் வெற்றி பெற்றது, BJP- க்கு ஒரு இடமும் கிடைக்கவில்லை. மாநிலத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி இடதுசாரி முன்னணியுடன் சேர்ந்து போட்டியிட்டு மகத்தான வெற்றிபெற்றது, மாநிலத்தின் மிகப்பெரும்பாலான மக்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து வருகின்ற பொருளாதாரத் துறையான விவசாயத்திற்கு மாநில அரசு ஆதரவு காட்டாததாலும், வேலையில்லாத் திண்டாட்டம் தொடர்பாக பொதுமக்களிடையே நிலவிய மனக்குறையை பிரச்சாரமாக பயன்படுத்திக்கொண்டதாலும் காங்கிரஸ் மகத்தான வெற்றிபெற்றது. உலக வங்கி ஊக்குவிப்பால் பல ஆண்டுகளாக மாநிலத்தின் மின்சாரத் தொழிற்துறை சீரமைக்கப்பட்டு மின்சாரக்கட்டணங்கள் உயர்த்தப்பட்டதால் மக்களிடையே அதிருப்தி வளர்ந்திருந்தது, குறிப்பாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதாக காங்கிரஸ் உறுதியளித்தமை, அவர்களை வெகுவாகக் கவர்ந்தது. ஆந்திர பிரதேச சட்டமன்ற தொகுதிகள் 294-ல் TDP 47- இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது, BJP 2-தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.

வாக்குப்பதிவு எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தது, TDP-BJP க்கு எதிரான பொதுமக்களின் தன்மையை சுட்டிக்காட்டுவதாக அமைந்தது. மக்களவைத் தேர்தலில் ஆந்திர பிரதேசத்தில் 70- சதவீதத்திற்கு மேற்பட்ட மக்கள் வாக்களித்தனர், அகில இந்திய அடிப்படையில் மிக உயர்ந்த வாக்குப் பதிவு விகிதங்களில் இதுவும் ஒன்று.

TDP, ''தாராளமயமாக்கலும்'' மாநிலக் கட்சிகள் உதயமும்

1990-களில் அகில இந்திய அடிப்படையில் அரசியலில் மிகப்பெரிய பங்களிப்பு செய்யத் தொடங்கிய மாநிலக் கட்சிகளின் கூட்டத்தில் TDP- யும் ஒன்றாகும். இந்திய அரசியலில் இன, மொழிக் குழுக்களுடன் வெளிப்படையாய் இனம் காட்டிக் கொண்டு, நீண்டகால அடிப்படையில் பல கட்சிகள் பங்களிப்புச் செய்தன, ஆனால் அந்தக்கட்சிகள் 1990-களில்தான் அகில இந்திய அரங்கில் பிரதான பங்களிப்பு செய்ய தொடங்கின. இந்த மாற்றத்திற்குப் பின்னே ஒன்றுக்கொன்று தொடர்புள்ள இரண்டு செயல்முறைகள் இருந்தன: இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் பாரம்பரிய ஆளும் கட்சியான காங்கிரஸ் மக்கள் ஆதரவை இழந்தது, இந்தியா விடுதலை பெற்ற பின்னர் முதல் இரண்டு தசாப்தங்களில் காங்கிரஸ் உருவாக்கிய தேசியரீதியான நெறிமுறைபடுத்தப்பட்ட பொருளாதாரத்தை 1991-ல் தொடக்கத்தில், ஒழித்துக்கட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

1983-ல் திரைப்பட முன்னணி நடிகராக விளங்கிய NT ராமராவ், தெலுங்கு தேசம் கட்சியை தொடக்கி, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை மத்திய காங்கிரஸ் அரசாங்கம் அலட்சியப்படுத்தி வருவதாகவும், மாநில காங்கிரஸ் கட்சியின் உள் விவகாரங்களில் திரும்பத் திரும்ப தலையிட்டு வருவதாகவும் குற்றம்சாட்டினார். தமிழ் நாட்டை தளமாக கொண்டு செயற்பட்டு வரும் திராவிட முன்னேற்றக் கழகம் (DMK) மற்றும் அஸ்ஸாமுடைய அஸ்ஸாம் கண பரிசத் (AGP-Assam's Asom Gana Parishad) ஆகியவற்றோடு சேர்ந்து TDP- காங்கிரஸ் அதிருப்தியாளர் VP- சிங் தலைமையில் 1989-1990-வரை நடைபெற்ற குறுகியகால தேசிய முன்னணி அரசாங்கத்தை ஆதரித்தது. ஆனால் 1996-க்கும் 1998-க்கும் இடைப்பட்ட காலத்தில்தான் TDP - முதல் தடவையாக தேசிய அளவில் அதிகாரத்தில் பங்கெடுத்துக்கொண்டது, அப்போது TDP ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் ஒரு பிரதான அங்கமாக இருந்தது, பிராந்திய மற்றும் ஜாதி கட்சிகளுடன் ஒன்றிணைந்த இந்த அரசாங்கத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்) தலைமையிலான இடதுசாரி அணி ஆதரித்தது.

ஐக்கிய முன்னணி அரசாங்கம், நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் 1991-ல் கொண்டுவந்த பொருளாதார ''சீர்திருத்தங்களை'' அழுத்தம் கொடுத்து முன்னெடுத்துச் சென்றது. ஆனால் ஸ்ராலினிஸ்டுகள் இந்து மேலாதிக்கவாத BJP -க்கு எதிராக ''முற்போக்கு, மதச்சார்பற்ற'' பாதுகாப்பு அரண் என்று ஐக்கிய முன்னணியை ஆதரித்தனர்.

என்றாலும், 1998- மக்களவைத் தேர்தல்களுக்குப் பின்னர், BJP மீண்டும் மிகப்பெரிய கட்சியாக வந்தது, ஸ்ராலினிஸ்டுகள் TDP-க்கு மதச்சார்பற்ற முத்திரை குத்தினாலும், BJP- யுடன் TDP - ஒரு பேரம் செய்து கொண்டது. ஆந்திர பிரதேசத்தின் கணிசமான முஸ்லீம் சிறுபான்மையினரின் ஆதரவை இழந்துவிடுவோம் என்ற பயத்தில் TDP, NDA-விற்கு அதன் நாடாளுமன்ற எதிர்ப்பாளர்களுக்குமிடையே நடுநிலை வகிப்பதாக பகிரங்கமாக அறிவித்தது, ஆனால் நடைமுறையில் அக்கட்சி BJP- க்கும், NDA கூட்டணிக்கும் நெருக்கமான கூட்டணியாக செயல்பட்டது. 1999 தேர்தல்களுக்கு பின்னர், TDP -தனது நடுநிலையைக் கைவிட்டது. அது NDA வில் முறைப்படி சேராவிட்டாலும், அதன் 28 மக்களவை உறுப்பினர்களை இந்து மேலாதிக்கவாத கட்சிக்கு மிகப்பெரிய நாடாளுமன்ற கூட்டணியாக உருவாக்கி, நெருக்கடி ஏற்பட்ட நேரத்தின் பொழுதெல்லாம் திரும்பவும் ஸ்பிரிங்காக பாதுகாத்து, அதைத் தொடர்ந்து 2002-ல் BJP குஜராத்தில் வகுப்புவெறி படுகொலையைத் தூண்டிவிட்டது.

இதற்கு கைமாறாக TDP - ஆந்திர பிரதேச அரசாங்கம் உலக வங்கியோடு நெருக்கமான உறவுகளை வைத்துக்கொண்டு வெளிநாட்டு முதலீடுகளை நாடுவதற்கு மத்திய அரசு முழு உரிமையை கட்டுத்திட்டமற்று வழங்கியது.

இதற்கு முந்திய காலத்தில், இந்தியாவின் பிராந்தியக் கட்சிகள், தங்களது மாநிலங்களுக்கு மத்திய காங்கிரஸ் அரசாங்கத்திடம் கூடுதல் வளங்களை ஒதுக்குவதற்கு பல்வேறுபட்ட பிராந்திய செல்வந்த தட்டுகளுடன் தொடர்புகொண்டிருந்தன. அதற்குப் பின்னர் கடந்த தசாப்தங்களுக்கு மேலாக, அதற்குமாறாக, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதிலும், நேரடியாக வெளிநாட்டு முதலீடுகளைப் பெறுவதிலும் மாநிலங்களுக்கு இடையிலேயும் பல்வேறு பிராந்திய செல்வந்தத் தட்டுக்களுக்கு இடையிலேயும் அதிகரித்த அளவில் ஒன்றோடொன்று போட்டிபோட்டுக்கொண்டு செயல்படுவதில் மாநிலக் கட்சிகளின் வளர்ந்து வரும் முக்கியத்துவம் தொடர்பு கொண்டிருந்தது.

TDP-ம் அதைப்போன்று தி.மு.க மற்றும் அ.இ.அ.தி.மு.க- போன்ற கட்சிகளும் ஒட்டுமொத்தமாக மாநிலத்தின் நோக்குநிலையை முன்னணியாகக் கொண்ட கொள்கைகளை வலியுறுத்தின. உள்நாட்டு முதலாளித்துவ வர்க்கத்தின் சார்பில் பொருளாதார வளர்ச்சியை முன்னின்று கட்டளையிடுவதற்கு பதிலாக, இதுபோன்ற மாநிலக்கட்சிகள் வெளிநாட்டு நேரடியான முதலீடுகளுக்காக பணியாற்றத் தொடங்கி, தனியார்மயமாக்குதல், பொருளாதார நெறிமுறைகள் தளர்வு, தொழிலாளர் உரிமைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள், பெரிய நிறுவனங்கள் வரிகளை வெட்டுவது, பொது மற்றும் சமூக சேவைகளை குறைத்துக்கொண்டு நெடுஞ்சாலைகள் மற்றும் இதர தொழிற்கட்டமைப்புத் திட்டங்களை மேற்கொள்வது, தனியார் முதலீடுகளை பெருக்க பொது நிதிகளை ஒதுக்குவது, போன்ற நடவடிக்கைகள் மூலம் அந்நிய மூலதனத்துக்கு உதவுகின்ற அமைப்புகளாக மாநிலக்கட்சிகள் செயல்படத் தொடங்கின.

வெளிநாட்டு முதலீடுகள், குறிப்பாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக செய்முறை துறைகள், ஆகியவற்றிற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்வதற்காக, வேளாண்மைத் தொழிலுக்கான ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்டன. பாசனத்திட்டங்கள் இலவச மின்சாரம், ஆகியவை முழுமையாக புறக்கணிக்கப்பட்டன. இதன் விளைவாகத்தான் விவசாயிகளிடையே போர்க்குணம் கொண்டவர்கள் தோன்றினார்கள் மற்றும் தற்கொலைகள் பெருகின.

ஆந்திர பிரதேசம் உலக வங்கியின் சமூக ஆய்வுக்கூடம்

இரண்டு முறை ஆந்திராவின் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட TDP - தலைவர் சந்திரபாபு நாயுடு, இந்தப் புதிய மாற்றத்தை வேறு எவரையும்விட மிகுந்த ஈடுபாட்டோடு வரவேற்றுச் செயல்படுத்தினார். உலக வங்கியும் வெளிநாட்டு ஆலோசகர்களும் தந்த கட்டளைகளுக்கேற்ப இந்த சாதாரண சிந்தாதவாதி தீவிரமான சமூக பொறியாளர் நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதனுடைய விளைவு அந்த மாநில மக்களை மிகக்கொடூரமான துன்பத்தில் தள்ளியதுமட்டுல்ல, மாநில கஜனாவில் மிகப்பெருமளவிற்கு வெளிநாட்டு, உள்நாட்டுக் கடன் சுமைகள் சேர்ந்துவிட்டன. இந்திய திட்டக்கமிஷன் தந்துள்ள தகவலின்படி 2001- வாக்கில் இந்த மொத்தக்கடன் 11-பில்லியன் டாலர்கள், ஒவ்வொரு ஆண்டும் வட்டி மட்டுமே 1 பில்லியன் டாலருக்குமேல் செலுத்தவேண்டும்.

கணணி, தொலைத் தகவல் தொடர்புகள் மற்றும் தொழிற்துறை வளர்ச்சிக்கான ''முதல் தர'' உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்காக TDP அரசாங்கம் பொது சேவைகளுக்கான ஒதுக்கீடுகளை வெட்டியது, உலக வங்கியிடமிருந்தும், பிரிட்டிஷ் அரசாங்கத்தின் சர்வதேச வளர்ச்சித் துறையிடமிருந்தும் (DFID)ஏராளமான தொகையை கடனாகப் பெற்றது.

உலக வங்கியால், ஆந்திர பிரதேசம்: பொருளாதார சீர்திருத்தங்களுக்கான செயற்திட்டம் என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அறிக்கை, புதிய பொருளாதார கொள்கைப்பான வரைபடமாயிற்று. இந்தக் கொள்கையை நிறைவேற்றுவதற்கு 80- சதவீத நிதியை வெளிநாட்டு ஆதாரங்களிலிருந்து பெற வேண்டி இருந்ததை எதிர்நோக்கி இருந்தது. உலக வங்கியும், DFID- யும் மாநிலக் கொள்கையை கண்காணிக்கும் பங்களிப்பை ஏற்றன.

உலக வங்கியும் DFID-ம் அரசாங்க நிதி பெறும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்றுவிட வலியுறுத்தின. இந்த பொதுத்துறை நிறுவனங்கள் நீண்டகாலமாக மாநிலத்தில் உயிர் நாடியான சமூக பொருளார பங்களிப்பை செய்து வருபவை, வேலைவாய்ப்புக்களை உருவாக்கித் தருவதிலும், தொழிலாளர்களது குடும்பங்களுக்கு இலவச மருத்துவ சேவைகளை தருவதிலும், பால்பண்ணை, போக்குவரத்து, மற்றும் மின்சாரம் போன்ற துறைகளில் நுகர்வோருக்கு குறைந்த செலவில் வழங்குவதிலும் முக்கிய பங்களிப்பு செய்துவந்தன. இந்த ''சீர்திருத்தங்கள்'' விவசாயத்தின் அனைத்து மானியங்களையும் நீக்கிவிட வலியுறுத்தின, மாகாணத்தின் 75- மில்லியன் மக்களில் முக்கால்வாசிப்பேர் தங்களது வாழ்க்கைக்கு விவசாய மானியங்களையே நம்பியிருப்பவர்கள் ஆவர்.

உலக வங்கிக்கு ஒன்று நன்றாகத் தெரியும், வறுமை நிலையிலுள்ள விளிம்பு நிலை விவசாயிகளும், பருவத்திற்கேற்ப பணிபுரியும் விவசாயிகளும், கிராப்புறங்களில் நிறைந்திருக்கிறார்கள். இந்த கொள்கையை செயல்படுத்துவதால் அவர்களது வாழ்வில் படுமோசமான சீர்குலைவு ஏற்பட்டுவிடும். என்றாலும் இந்தக் காட்டுமிராண்டித்தனமான திட்டத்தை மிக வேகாமாகவும், கடுமையாகவும் செயற்படுத்த வலியுறுத்தியது.

உலக வங்கியும் DFID-யும் அமுல்படுத்தும் செயலகத்தை (IS) உருவாக்குமாறு நாயுடுவை வலியுறுத்தின. இது மாநில சட்டசபையை புறக்கணித்துவிட்டு செயற்படுகின்ற அமைப்பாகும். இந்த IS ல் இடம்பெற்றுள்ள ஊழியர்கள் Adam Smith -Insitute என்கிற பிரிட்டிஷ் வலதுசாரி நிபுணர் (think tank) குழுவாகும். அதில் பிரதானமாக பிரிட்டனிலிருந்து பலவந்தமாய் நாடு கடத்தப்பட்டவர்கள்தான் இடம்பெற்றிருந்தனர்.

நாயுடு அரசாங்கம் ஒத்துழைப்போடு இந்த IS அரசாங்கத் தொழில்களை ஒட்டுமொத்தமாக குறைந்த விலையில் விற்கின்ற சூறையாடல் நடவடிக்கையில் இறங்கியது. ''விருப்ப'' ஓய்வூதிய திட்டத்தின்கீழ் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்பட்டனர். இந்த ஆட்குறைப்புத் திட்டத்தை செயற்படுத்துவதற்கு உலக வங்கி 26- மில்லியன் டாலர்களை வழங்கியது, இது மதிப்பீட்டுச் செலவில் 70- சதவீதமாகும், மீதி 30 சதவீதம் மாநில அரசிடமிருந்து வந்தது.

மின்சாரத்துறை சீர்திருத்தத்தில் ஆந்திர மாநில அரசுக்கு சொந்தமான APEB (Andhra Pradesh Electricity Board) என்கிற ஒருங்கிணைந்த வாரியம், மின்சார உற்பத்தி, அதை எடுத்து செல்வது மற்றும் விநியோகிப்பதென்று மூன்று கம்பெனிகளாக பிரிக்கப்பட்டன. மின்சார உற்பத்தியில் தனியார் போட்டியிடுவதற்கு அனுமதிக்கப்பட்டது. இதன் விளைவாக மின்சாரக்கட்டணங்கள் மிகப்பெரும் அளவில் உயர்த்தப்பட்டன. இது மிகப்பெருமளவில் இரத்தக் களரியளவிற்கு உச்சக்கட்டத்தை அடைந்த பெரும் மோதல்களைத் தூண்டி விட்டது. 2000-ம் ஆண்டு ஜூன் முதல் ஆகஸ்ட் வரை நடைபெற்ற இந்தக் கிளர்ச்சியால் உலக வங்கியும் நாயுடு அரசாங்கமும் பீதியடைந்தன. இந்தக் கிளர்ச்சிகளை பிரதானமாக ஸ்ராலினிசக் கட்சிகள் முன்னின்று நடத்தின, அரசாங்கம் சிறிதளவு கட்டணத்தை குறைத்துக்கொள்ள நிபந்திக்கப்பட்டது, மேலும் மின்சாரக் கட்டண உயர்வு தள்ளிவைக்கப்பட்டது.

உலக வங்கி அறிக்கை அடிப்படையில் TDP - அரசாங்கம், Vision 2020 அறிக்கையை வெளியிட்டது. அண்மையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது BJP வெளியிட்ட ''Vision" அறிக்கைக்கு அதுவே அடிப்படையாக அமைந்தது. ஆந்திர பிரதேசம் பெரும்பாலும் விவசாயத்தை சார்ந்திருப்பது, அதை 2020- வாக்கில் சிங்கப்பூர் போன்ற வளர்ச்சிபெற்ற பொருளாதாரமாக ஆக்கிவிட, அந்த அறிக்கை இலக்கு நிர்ணயித்தது. இந்த மாற்றத்தில் தகவல் தொழில் நுட்பம், உயிரி தொழில்நுட்பம் மற்றும் இதர அறிவியல் சார்ந்த தொழில்கள் முக்கிய பங்காற்ற இருந்தன. இந்தத் திட்டங்களை செயற்படுத்த 20-ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலத்தில் 750- பில்லியனுக்கு மேற்பட்ட டாலர்கள் நிலையான முதலீடுகளாக திரட்டப்பட வேண்டும். இந்தத் தொகை கடந்த தசாப்தங்களில் இந்தியா முழுவதிலும் நேரடியாக முதலீடு செய்யப்பட்டுள்ள வெளிநாட்டு முதலீடுகளைவிட பல மடங்கு அதிகமாகும்.

விவசாயம் இயந்திரமயமாக்கலால் மாற்றியமைக்கப்படும், சிறிய பண்ணைகள் ஒருங்கிணைக்கப் பட்டு தனியார் கம்பெனிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் தரப்படும், விவசாயிகள் வேளாண்மை தொழில்களுக்கு தங்களது நிலத்தை கொடுக்குமாறு நிர்பந்திக்கப்படுவார்கள். தனியார் கார்ப்பரேஷன்கள், விவசாயிகளுக்கு விதைகளையும் இதர இடுபொருட்களையும் வழங்கும். அவற்றை ஒரு குறிப்பிட்டகாலத்திற்குள் அந்த விவசாயிகள் ''திருப்பித்'' தரவேண்டும். அவரது நிலத்தில் விளையும் பொருள்கள் அனைத்தும் அந்தக் கம்பெனிகளுக்கே சொந்தம் தனது உழைப்பிற்கு விவசாயிக்கு ஊதியம் வழங்கப்படும், எனவே அவர் விவசாயத் தொழிலாளியாக மாறுகிறார்.

விவசாயிகள் வர்த்தக ரீதியான விதைகளைச் சார்ந்திருக்க வேண்டும் என்று அறிக்கை மேலும் கூறுகிறது - இதன் மூலம் நாடு கடந்த விதை நிறுவனங்கள் ஆதாயம் அடையும். தற்போது அறுவடை செய்யப்படும் நெல்லில் ஒரு பகுதியை விதைக்காக சேமித்துவைக்கும் நடைமுறை கைவிடப்பட்டு, பன்னாட்டு வித்து நிறுவனங்களை விவசாயிகள் நம்பியிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

இப்படி நாயுடு அரசாங்கம் செயற்படுத்திய வேளாண்மைக் கொள்கைகளால் கடுமையான விளைவுகள் ஏற்பட்டன. கடன் சுமைகளில் மூழ்கிவிட்ட விவசாயிகள் நூற்றுக்கணக்கில் தற்கொலை செய்து கொண்டனர். கிராம வங்கிகள் மூடப்பட்ட நிலையில் பல விவசாயிகள் தனியார் கடன் வழங்குபவரிடம் மாதத்திற்கு 5-சதவீதம் வட்டிக்கு கடன் வாங்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதற்கு முன்னர் மிக அபூர்மாக நடக்கின்ற விவசாயிகள் தற்கொலைகள், அரசாங்கத்தின் கொள்கையாலும் NDA அரசாங்கத்தின் சீர்திருத்தின் கொள்கையாலும் NDA அரசாங்கத்தின் ''சீர்திருத்தங்களாலும்'' நாடு முழுவதிலும் பரவலாக நடைபெற்றன.

இந்த சீர்திருத்தங்கள் பாரம்பரிய கைத்தறித் தொழிலில் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தியது. ஏராளமான கைத்தறி நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பு தருகின்ற, தொழிலாகச் செயற்பட்டு வந்த அந்தத் தொழிலில் ஏற்பட்டுவிட்ட நெருக்கடியின் காரணமாக நூற்றுக்கணகானோர் தற்கொலை செய்து கொண்டனர். விற்பனைக்கும், நவீன தொழில் யுத்திகளுக்கும், இதற்கு முன்னர் மாநில அரசாங்கத்தை நம்பியிருந்தவர்கள், தற்போது அதி நவீன விசைத்தறிகளோடு போட்டிபோட முடியவில்லை. 1998-ல் ஆந்திர மாநில கைத்தறி கூட்டுறவுச் சங்கம் மாநிலத்தின் நெசவாளர்களுக்கு கடன்களை வழங்கியது, விற்பனையில் ஆதரவு தந்தது, அந்த அமைப்பு சிதைந்துவிட்டது, அதில் TDP -அரசாங்கம் தலையிடாதிருப்பதைத் தேர்ந்தடுத்துக் கொண்டது.

நாயுடு தலைமையில் இந்தியாவின் ''சிலிகான் பள்ளத்தாக்கு'' என்றழைக்கப்படும் பெங்களூருக்கு நேரடியாக போட்டி போடும் வகையில் ஆந்திர அரசாங்கம் ஹைதராபாத்தை தகவல் தொழில் நுட்ப காந்தசக்தியாக உருவாக்கியது. இப்போது அந்த நகரம் ''சைபர்பாத்'' (Cyberbad) என்றழைக்கப்படுகிறது. உலக வங்கியின் பிராந்திய தளபதியாக நாயுடு பணிந்து செயற்பட்டதால் சர்வதேச நிதி நிர்வாக சமுதாயத்தின் மிகப்பெரிய சீர்திருத்தக்கரர் என்று பாராட்டப்பட்டார். முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனும், மைக்ரோ சாப்ட் தலைவர் பில்கேட்ஸும் தனிப்பட்ட முறையில் விஜயம் செய்து கொளரவத்தை அளித்தனர்.

நாயுடு மிகப்பணிந்து தனது பங்களிப்பை செய்தாலும், பொருளாதார சீர்திருத்தக் கொள்கை வெற்றி பெறவில்லை. பாரம்பரிய முதலாளித்துவ அளவுகோல்களான வளர்ச்சி விகிதம், மற்றும் நேரடி வெளிநாட்டு முதலீடுகள் (FDI) ஆகிய அளவுகோல்களின்படியே கூட வெற்றிபெறவில்லை. பொருளாதார மற்றும் சமூக ஆய்வுகளுக்கான மையம் (CESS) மேற்கொண்டுள்ள ஒரு ஆய்வின்படி, 1993-1994- மற்றும் 2000-2001- ஆண்டுகளுக்கிடையில் ஆந்திர மாநிலத்தில் ஆண்டு வளர்ச்சி விகிதம் 5.31-சதவீதமாகும். இது தேசிய சராசரியான 6.31- சதவீதத்திற்கும் குறைவுதான். பொருளாதார சீர்திருத்தத்திற்கு முந்திய காலத்தோடு 1980-81- முதல் 1990-91வரை ஒப்புநோக்கும் போது ஒட்டுமொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) 5.50-சதவீதத்திலிருந்து 5.31-சதவீதமாக வீழ்ச்சியடைந்துவிட்டது.

இந்திய தொழில்கள் சம்மேளனம் (Confederation of Indian Industries-Cll) நடத்திய ஆய்வின்படி, நேரடி வெளிநாட்டு முதலீடுகள் வரிசையில் ஆந்திர மாநிலமானது, மஹாராஷ்ரா, தில்லி, தமிழ்நாடு, கர்நாடகம், மற்றும் குஜராத்திற்கு கீழே எட்டாவது இடத்தில்தான் உள்ளது. 1991-2002- வரை நேரடி வெளிநாட்டு முதலீடுகள் 17.32- சதவீதம் மஹாராஷ்டிராவிற்கு வந்தது. அதே நேரத்தில் ஆந்திரா 4.65- சதவீத நேரடி வெளிநாட்டு முதலீடுகளைத்தான் ஈர்க்க முடிந்தது, அதுவும் தகவல் தொழில் நுட்பப்பிரிவில்தான் மிகப்பெரும்பாலான முதலீடுகள் செய்யப்பட்டன.

அண்மையில் நடைபெற்ற மாநில மற்றும் மக்களவைத் தேர்தலில் ஆந்திர மாநிலத்தில் TDPம், BJP ம் படுதோல்வியடைந்தது, மக்களிடையே புதிய தாரளவாத பொருளாதாரக் கொள்கைகளுக்கு நிலவுகின்ற ஆழமான விரோதப் போக்கை எடுத்துக்காட்டுகிறது. இந்தக் கொள்கைகள் அப்பட்டமாக ஒளிவுமறைவின்றி உழைக்கும் மக்கள் மீதும் விவசாயிகள் மீதும் தாக்குதல் தொடுப்பவையாகும். இந்திய உழைக்கும் மக்களின் போராட்டங்களை முதலாளித்துவத்திற்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் சுதந்திரமான உலகரீதியான இயக்கத்துடன் இணைக்கும் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் இந்தியத் தொழிலாளர்களால்தான் இக்கொள்கைகள் எதிர்க்கப்பட முடியும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved