World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

What the September 11 commission hearings revealed

Part three: The CIA and Al Qaeda

செப்டம்பர் 11 விசாரணைக்குழு எவற்றை வெளிப்படுத்தியது

முன்றாம் பகுதி: CIA-வும் அல்கொய்தாவும்

By Patrick Martin
27 April 2004

Back to screen version

வாஷிங்டன் டி.சி.யில், செப்டம்பர் 11, 2001 உலக வர்த்தக மையம், மற்றும் பென்டகன் மீதான தாக்குதல்கள் பற்றிச் சமீபத்திய விசாரணைகளை ஆராயும் தொடர்கட்டுரைகளில் இது மூன்றாம் பகுதியாகும். முதல் பகுதி ஏப்ரல் 22-லும், இரண்டாம் பகுதி ஏப்ரல் 26-லும் (ஆங்கிலந்தில்) வெளியிடப்பட்டன.

செப்டம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதல்கள் பற்றிய தேசிய விசாரணைக்குழுவின் முன், இம்மாதம் அளிக்கப்பட்ட சாட்சியம், கடத்தப்பட்ட விமானங்கள் பேரழிவுகரமான ஆயுதங்களாகப் பயன்படுத்தப் படமுடியும் என்று "எவரும் கற்பனை கூடச் செய்திருக்க முடியாது" என்ற புஷ் நிர்வாகத்தின் நீண்ட காலக் கூற்றுக்களுக்கு முற்றிலும் முரணாக உள்ளது.(CIA அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷிற்கு ஆகஸ்ட் 6-ம் தேதி, உலக வர்த்தக மையமும் பென்டகனும் தாக்கப்படுவதற்கு ஆறு வாரங்கள் முன்பு, ஒசாமா பின்லேடன் அமெரிக்காவிற்குள்ளேயே பயங்கரவாதத் தாக்குதல் நடத்தத் திட்டம் கொண்டுள்ளார் என்ற தகவல் கொடுத்திருந்தது வெளிவந்தவுடன் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் கோண்டலீசா ரைஸ் இக்கூற்றை மே 2002 ல் வெளியிட்டார்.)

1995-லும் 1997-லும், CIA தேசிய உளவுத்துறை மதிப்பீடுகள் (National Intelligence Estimates- NIEs) என்பவற்றை வெளியிட்டது; இதில் அமெரிக்காவில், வாஷிங்டனிலும், நியூயோர்க் நகரத்திலும் முக்கியமான இடங்கள் சில தாக்குதலுக்கு உட்படுத்தப்படும் என்றும், அவற்றிற்கு கடத்தப்பட்ட விமானங்கள் பயன்படுத்தப்படும் என்றும் எச்சரிக்கைகள் இருந்தன. CIA அதிகாரிகளை 9/11 விசாரணைக்குழு அதிகாரிகள் ஒரு அறிக்கையின் வரைவில் விமர்சித்ததை அடுத்து CIA அதிகாரிகள் செய்தி ஊடகத்திடம் இந்த உண்மையை வெளியிட்டனர்.

1995-ம் ஆண்டு மதிப்பீடு, அல்கொய்தாவின் பெயரைக் கூறவில்லை; ஆனால், மத்திய கிழக்கில் அமெரிக்கர்கள் இருப்பதை விரும்பாத இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் அச்சுறுத்தல்கள் வரக்கூடும் எனத் தெரிவித்திருந்தது. பெயர் கூறப்படாத ஒரு "மூத்த அமெரிக்க உளவுத்துறை அதிகாரி", அசோசியேட்டட் பிரஸ்ஸில் மேற்கோளிடப்பட்டு 1997 NIE "பில் லேடனையும் அவரைப் பின்பற்றுபவர்களையும் அடையாளம் காட்டியது என்றும், அவர்கள் அச்சுறுத்தல்கள் விடுக்கின்றனர் என்றும், தாக்குதலுக்குத் தயாரித்துக் கொண்டிருக்கின்றனர் என்றும், அவை அமெரிக்காவிற்குள் நடத்தப் படும் என்றும்" கூறினார் எனத் தெரிவித்துள்ளது.

AP உடைய தகவல் கூறுகிறது; "1995 உளவுத்துறை மதிப்பீடு பின் லேடனையோ அல்லது அல்கொய்தாவையோ பெயரிட்டுக் கூறாவிட்டாலும், மிகத் தெளிவாக இஸ்லாமிய பயங்கரவாதிகள் அமெரிக்காவிற்குள் செப்டம்பர் 11, 2001 தாக்கப்பட்ட இலக்குகள் போல், குறிப்பிட்ட இலக்குகளைத் தாக்குவதில் தீவிரமாக இருந்தனர் என்று தெளிவாக எச்சரிக்கப்பட்டிருந்தது என்று உளவுத்துறை அதிகாரி கூறினார். இந்த அறிக்கை குறிப்பாக சிவில் விமானத்துறைக்கு எச்சரிக்கை விடுத்தது. வாஷிங்டனில் முக்கிய இடங்களான வெள்ளை மாளிகை, அமெரிக்க சட்ட சபை, வால் ஸ்ரீட் கட்டிடங்களை இஸ்லாமியத் தீவிரவாதிகளின் தாக்குதலால் பெரும் அபாயத்தை எதிர் நோக்கின என்று அந்த அதிகாரி குறிப்பிட்டிருந்தார்."

1997 மதிப்பீடு, 1996 ல் சுடானிலிருந்து ஆப்கானிஸ்தானத்திற்கு அல்கொய்தா குழுவினர் தலைமையிடத்தினை மாற்றிய பின், அதிலிருந்து நீங்கிய பில்லேடனின் உயர்மட்ட உதவியாளர் ஒருவருடைய குறிப்புக்களைக் கொண்டு துல்லியமாக கணிக்கப்பட்டிருந்தது. பழைய பயங்கரவாதி, அப்பிராந்தியத்தில் இருந்த ஓர் அமெரிக்கத் தூதரகத்திற்குத் தானே முன்வந்து ஏராளமான வெளியீடு தகவல்களைக் கொடுத்திருந்தார்.

CIA உடைய துணை இயக்குனர் ஜான் மக்லெளலின், 1997 மதிப்பீடு, "பின்லேடனுடன் தொடர்புடையவர்கள் அமெரிக்காவிலுள்ள பல அமைப்புகளைக் கண்காணிக்கிறார்கள் என்ற தகவலையும் கொண்டிருந்ததால், அமெரிக்காவை அவர் தாக்கக்கூடும் வாய்ப்பு அதிகம் என்ற முடிவிற்கு நாங்கள் வந்தோம். அதுதான் 1997 NIE" உடைய முக்கியத்துவம் ஆகும்." என்று 9/11 விசாரணைக்குழுவிடம் தெரிவித்தார்.

ஆப்கான் முஜாகிதீன்

அல்கொய்தாவுடைய துவக்கங்களே, காபூலில் சோவியத் ஆட்சிக்கு எதிராக CIA அமைத்திருந்த இஸ்லாமிய அடிப்படைவாதமான முஜாகிதீன்களால்தான் இருந்திருந்தது என்பதால், CIA உடைய இன்னும் நீண்டகால அல்கொய்தாவுடனான தொடர்பு பற்றி விசாரணைக்குழு அதிகம் விசாரிக்கவில்லை. ஜனநாயகக் கட்சி உறுப்பினரும், முன்னாள் வாட்டர்கேட் விசாரணை வக்கீலுமான ரிச்சர்ட் பென்-வெனிஸ்டே, CIA இயக்குனர் ஜார்ஜ் டெனெட்டுடன் இவ்விடயம் பற்றி சுருக்கமாகக் கருத்துப்பறிமாற்றம் செய்திருந்தார். அது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பென் வெனிஸ்டே: நம்முடைய விரோதியின் விரோதி நம்முடைய நண்பராகக் கூடும் என்ற கருத்தில், ஆப்கானிஸ்தானில் சோவியத்திற்கு எதிராகப் போராடிவந்திருந்த முஜாகிதீனுக்கு CIA பெரும் உதவிகளை அளித்தது. ஜோர்ஜ், எனக்கு எது குழுப்பத்தையும் கவலையையும் ஏற்படுத்துவது இதுதான் : அடிப்படைப் போர்த் தீவிரம் உடையவர்களுடைய தன்மையை நன்கறிந்தும்கூட , அவர்களுக்குத்தான் CIA ஆயுதமும் பயிற்சியும் அளித்தது, இந்த அமைப்புக்களில் ஊடுருவி, என்ன நடக்கிறது என்பது பற்றி ஆப்கானிஸ்தானத்தில் முயற்சி கைவிட்ட பிறகு, ஏன் கவனத்துடன் கருத்தாயப்படவில்லை?

டெனெட்: நல்லது, முதலில், ஒருவருக்கு ஒருவர் பயன்படுவர் என்ற எண்ணத்தில், நம் அனைவருக்கும் பொது விரோதி இருந்ததால், சிலவற்றில் ஒத்துப்போகும் தன்மை இருந்தது. உண்மையில் சில ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தவற்றை, நம் திட்டத்தை ஆராய்ந்தோமானால், நமக்காக வேலை செய்தவர்கள், மீண்டும் நம்முடைய தொடர்புகளின் பகுதியாயினர் என்பது தெரிய வரும். அதேபோல் நம்மை எதிர்த்தவர்கள், தீவிர அடிப்படைப் போர்வாதிகளாக மாறிய நிலையும் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானில் நம்முடன் இன்று போராடிக் கொண்டிருப்பவர்களை நாம் பலகாலம் முன்னரே ஆப்கானிஸ்தான் மக்களாக நம்முடைய நண்பர்களாக அவர்கள் இருந்திருந்தபோதே அறிவோம். நான் என்ன கூறவிரும்புகிறேன் என்றால், தளத்தில் உள்ள அனைவரையுமே அறிந்திருந்த அளவில் நமக்குச் சில நன்மைகள் இருந்தன; அவர்கள் யார், அவர்களுடைய தொடர்புகள் என்ன என்பது தெரிந்திருந்தது; எனவே அவை நன்மையாக இருந்தன. ஆனால் ரஷ்யர்களை நாம் விரட்டிய பின்னர், அடிப்படையில் அதற்குப்பின் அமெரிக்கர் ஆப்கானிஸ்தானைவிட்டு நீங்கிய பின்னர், தலிபன் எழுச்சியுற்று, நாட்டைத் தம் பிடிக்குள் கொண்டுவந்துவுடன் ஒரு பயங்கரவாத அமைப்பு ஆட்சி செய்வதற்கு அனுமதிக்கப்பட்டது. எனவே வரலாறு பலபுறத்திலிருந்தும் வியப்பை ஊட்டுகிறது.

பென்-வெனிஸ்டே: பேரழிவு முறைகளில் பயிற்சி பெற்றவர்கள், முஸ்லிம் நாடுகளில் அயல்நாட்டினர் இருப்பதை வெறுத்தவர்கள் என்ற உண்மை நிலை இருக்கும்போது, அவர்கள் ரஷ்யரை வெளியேற்றவே அதுதான் முயற்சியெடுக்க உந்துதலாக இருந்த போது, ஓசாமா பின் லேடன் உட்பட இவர்களில் சிலரை இன்னும் திறமையாகக் கண்காணித்திருக்கக்கூடும் என்று நீங்கள் நினைக்கவில்லையா?

டெனட் : நல்லது ரிச்சர்ட், நாமோ அவருக்குப் பயற்சி கொடுக்கவில்லை. ஆனால் இப்பொருளின் கருத்து என்னவென்றால் மசூத் போன்றவர்வர்களுடன் (வடக்குக் கூட்டணியின் தலைவராக இருந்து, 2001 செப்டம்பர் 9 அன்று, படுகொலை செய்யப்பட்டிருந்த மொகம்மது ஷா மசூட்), இப்போரின்போது நாம் தொடர்பு கொண்டு, தொடர்ந்து பணியாற்றினோம்; இவர்களில் சிலரோடு தொடர்பு இருந்தது. ஆனால் அனைவருடனும் தொடர்பு இல்லை. அவர்களில் பலர் இப்பொழுது உலகம் முழுவதும் மதப் போருக்காகப் போராளிகளாக வெளிப்பட்டுள்ளனர்.

பென் வெனிஸ்டேயின் கேள்விகேட்கும் முறை மேம்போக்காக இருந்தது; டெனட்டின் விடைகள், இன்னும் கூடுதலான கேள்விகளை எழுப்பினவே ஒழிய, விடைகளாக அமையவில்லை. அல் கொய்தாவில் பெருமளவு ஊடுருவியிருக்க வாய்ப்புக்கள் இருந்தன என்பதை ஒப்புக் கொள்கிறார்; குறிப்பாக, 1980-களில் அப்பொழுது CIA இயக்குநராக இருந்த வில்லியம் கேசி காலத்தில் ஆட்களைத் தேர்வு செய்தபொழுது அதன் ஆப்கானிஸ்தான் தளத்தில், கம்யூனிச எதிர்ப்பு நிறைந்திருந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகளாக இருந்தவர்களுடன் நீண்டகாலத் தொடர்பு இருந்ததால் அது முடிந்திருக்கக்கூடும்.

ஆனால்,டெனட்டுடைய விட்டுக்கொடுத்தலுக்கு பிறகு "தளத்தில் இருந்த நபர்கள் அனைவரையும் பற்றி, அவர்கள் யார், அவர்கள் தொடர்பு என்ன என்பதைப் பற்றிய தகவல் இருந்தது நமக்கு நன்மையைக் கொடுத்தது" என்று கூறிய அளவில், விசாரணைக்குழு இந்த விஷயத்தை விட்டுவிட்டது.

ஆனால் இந்தக் கருத்துரை, அல்கொய்தா முகாமிற்குள் CIA உடைய "இருப்புக்கள்" இல்லை என்பதால் செப்டம்பர் 11 தாக்குதல்கள் தவிர்க்கப்பட்டிருக்க முடியாது என்ற கூற்றைப் பொருளற்றதாக்குகிறது. பின்லேடனையும் அவர் சகாக்களையும் பற்றி நன்கு அறிவதற்கும், அவர்களுடைய செயல்கள், நடைமுறைகள் இவற்றை அறிவதற்கும் அவர்களுடைய முடிவுகளைச் செல்வாக்கிற்கு உட்படுத்துவதற்கும் கூட, உலகின் மற்ற பகுதிகளில் இருக்கும் அமெரிக்க உளவுத்துறை தொடர்புகளைவிட இங்கு கூடுதலான வாய்ப்புக்கள் இருந்தன. விசாரணைக்குழுவினால் கேட்கப்படாத கேள்வி, பொதுவிலும் கூறப்படாத கருத்து, எப்பொழுது அல்லது இப்பொழுதாவது CIA தன்னுடைய உற்ற நண்பராகிய பின்லேடனுடன் பிரிந்ததா என்பதே ஆகும்.

தகுதியின்மையா அல்லது தடையா?

விசாரணைக்குழு அதிகாரிகளின் அறிக்கைகளில் ஆவணங்களாக வந்தவை, தொலைக்காட்சி, பெரிய சாட்சியங்களைக் கேள்வி கேட்டது, இவற்றின் மூலம் CIA, அல்கொய்தாவைப் பற்றிய விசாரணையைத் தொடரத் தவறியது, ஒரு ''தவறு'' என விளக்கம் அளிக்க முற்படும் மதிப்பீட்டிற்குத் தேவையான வடிவத்தின் பின்னணி மேலே கொடுக்கப்பட்டுள்ளது. திறமையற்ற தன்மை என்று முத்திரையிடுவதைவிட, இந்த நிகழ்வுகள், அல்கொய்தா ஒற்றர்களுக்கு எதிராகத் தீவிர நடவடிக்கைகள் எடுக்கும் முயற்சிகள் தடைசெய்யப்பட்ட முறையான வடிவத்தைத்தான் புலப்படுத்துகின்றன.

* 1999-லேயே CIA க்கு, உலக வர்த்தக மையத்தைத் தாக்கிய இரு விமானங்களில் ஒன்றாகிய, United Airlines Flight 175 உடைய விமானி என்று கருதப்பட்ட மர்வான் அல்-ஷேகி உடைய முதல் பெயரும், தொலைபேசி எண்ணும் கொடுக்கப்பட்டிருந்தன. ஜேர்மனிய உளவுத்துறைப் பணி, பெயரையும் தொலைபேசி எண்ணையும் கொடுத்திருந்தது; ஆனால் அல்-ஷேகியைக் கண்டுபிடிக்க முடியவில்லை; ஆனால் தாக்குதல்களுக்கு முன்பு இந்த எண்ணைத்தான் அவர் பயன்படுத்தி வந்திருந்தார்.

* 2000 த்தின் முற்பகுதியில், இத்தொடரின் முன்பகுதியில் குறிப்பிட்டிருந்தபடி, இரு வருங்காலக் கடத்தல்காரர்களான Khalil al-Mihdhar மற்றும் Nawaf al-Hawazmi இருவரும் மலேசியாவில் அல்கொய்தா கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டனர் என்று CIA இக்கு தெரிவிக்கப் பட்டு இருந்தது. al-Mihdhar-டைய ஒட்டல் அறையில் இரகசியமாகக் சோதனையிடப்பட்டபோது, அவருடைய புகைப்படம், அமெரிக்காவிற்குள் அனுமதிக்கும் விசா முத்திரையுடன் இருந்தது தெரியவந்தது. இருவரும் பாங்கோக்கிற்கு(Bangkok) பறந்து சென்றபோது, ஒரு மூன்றாம் அல்கொய்தா உறுப்பினரும் இருந்தார்; இதை CIA குறித்த காலத்தில் பாங்கோக்கிற்கு, சந்தேகத்திற்குரிய பயங்கரவாதி அமெரிக்க விசாவுடன் இருப்பதைக் கண்காணிக்குமாறு கேட்டுக் கொள்ளத் தவறிவிட்டது. நிகழ்விற்குப் பின்தான் அது al-Mihdhar-ரும், al-Hawazmi-யும் பாங்கோக்கிலிருந்து லாஸ் ஏஞ்சல்சிற்கு விமானப்பயணம் செய்தனர், அவர்கள் இறுதியில் சேரவேண்டிய இடம் நியூயோர்க் நகரம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது என உளவுத்துறை கூறுகிறது.

* ஆகஸ்ட் 2001 வரை அமெரிக்கப் போலீசிற்கொ அல்லது பாதுகாப்பு அமைப்பு எதற்குமோ, CIA இரண்டு சந்தேகத்திற்குரிய அல்கொய்தா பணியாளர்கள் அமெரிக்காவிற்கு 2000-லேயே வந்துவிட்டனர் என்ற தகவலைக் கூறவில்லை. இக்காலக்கட்டத்தில், al-Mihdhar-ரும் al-Hawazmi-யும் சான் டீயாகோ தொலைபேசிப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டு, al-Hawazmi விமானம் ஓட்டும் பயிற்சி பெற்று, al-Mihdhar அமெரிக்க அரசுத் துறையிடமிருந்து மீண்டும் அமெரிக்கா வருவதற்கு விசா பெற்று, இவ்வளவும் நிகழ்ந்தன. அரசுத் துறையும் இவருடைய பெயரை பயங்கரவாதக் கண்காணிப்புப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று கோரப்படவில்லை. இரண்டு நபர்களின் பெயர்களும் லாஸ் ஏஞ்சலஸ் FBI அலுவலகத்திற்கு செப்டம்பர் 11, 2001 அன்று, இருவரும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் பிளைட் 77 விமானம் கடத்தப்பட்டுப் பென்டகனில் வீழ்ந்த சில மணி நேரம் கழித்துத்தான் அடைந்தன.

CIA உடைய மற்ற கடத்தல்காரர்களுடனான தொடர்புகள் பற்றிய குற்றச்சாட்டு ஐரோப்பிய செய்தி ஊடகத்தில் எழுப்பப் பட்டுள்ளன; ஆனால் அவை அமெரிக்க ஊடகத்திலோ அல்லது 9/11 விசாரணைக்குழுவிலோ தொடரப்படவில்லை. ஜேர்மன் நாட்டு பொதுத் தொலைக்காட்சி வலைபின்னலான ARD, மற்றும் பிரிட்டனின் செய்தித்தாள் Guardian இரண்டும் 2001 பிற்பகுதியில், மொகம்மத் அட்டா என்ற விமானக்கடத்தல் தலைவனுடைய நடவடிக்கை அமெரிக்க உளவுத்துறையினால் பல மாதங்கள் 2000-த்தில் கண்காணிப்பிற்கு உட்பட்டிருந்தன என்றும் அக்காலகட்டத்தில் அவர் ஹாம்பர்க்கிற்கும், பிராங்க்பர்ட்டிற்கும் பலமுறை பயணித்து மிகப்பெரிய அளவு இரசாயனப் பொருட்கள் வெடிமருந்துகளுக்காக வாங்கியதாகவும் தெரிவித்துள்ளன. ஆயினும்கூட 2001ல் முதல் சில மாதங்கள் அட்டா அமெரிக்காவிற்குள் பலமுறை வந்துபோனபின்னரும், அவருடைய சுற்றலா விசா காலாவதி ஆகியிருந்தபோதிலும், ஒருமுறை கூட குடியேற்ற அதிகாரிகளால் நிறுத்தப்படவில்லை

மீண்டும், ஜகாரியஸ் மெளசவியின் விசித்திரமான வழக்கு

செப்டம்பர் 11 விசாரணைக்குழுவில் CIA உடைய பங்கு பற்றி மிக முக்கியமாக வெளிவந்துள்ள தகவல் ஜகாரியஸ் மெளசவி(Zacarias Moussaoui) பற்றிய முழு விவரம் ஆகும்; இவர் அல்கொய்தாவின் ஆதரவாளர், இப்பொழுது பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பை ஒட்டி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இவர் 2001, ஆகஸ்ட் 13 அன்று, இவருடைய நடவடிக்கை, ஒரு மின்னியாபோலிஸ் பயிற்சிப் பள்ளியில் சந்தேகத்தை ஏற்படுத்திய பின்னர் அதிகாரிகளால் குடியேற்ற விதிகளை மீறியதற்குக் கைது செய்யப்பட்டார். ஒரு போயிங் 747 பயிற்சி பெற வேண்டும் என்று கூறினார். இவருடைய பயற்சியோ சிறிய விமானங்களை இயக்குவதற்கும் திறனற்று இருந்தன. இவர் உரத்த குரலில் பேசுவதும், பொறுமின்மையும் கொண்டிருந்தார். இவர் காசு மூலமாகப் பயற்சிக் கட்டணத்தைச் செலுத்தியிருந்தார்.

மின்னியாபோலிஸ் FBI அதிகாரிகள் Moussaoui வழக்கு ஆற்றல் வாய்ந்த பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று அங்கீகரித்தனரர் என்பது இப்பொழுது நன்கு தெரிய வந்துள்ளது. அவர்கள் வாஷிங்டனில் இருந்த FBI தலைமை அலுவலகத்திற்கு இவருடைய கணினியும், மற்ற நிலைப்பாடு உடையச் சோதனை நடவடிக்களைகளுக்கும் ஒரு வாரண்டைக் கோரினர்; ஆனால் ஒரு FBI மேற்பார்வையாளரான டேவிட் பிராஸ்கா அந்தக் கோரிக்கையை நிராகரித்து விட்டார். உயர்மட்ட FBI , நீதித்துறை அதிகாரிகள் அவர்கள் இந்தக் கோரிக்கையைப் பற்றி கேட்டிருக்கவில்லை என்று செப்டம்பர் 11-க்குப் பிறகு கூறிவிட்டனர்.

ஆனால் 9/11 குழுவிற்கு வந்துள்ள சாட்சியத்தின்படி, இதே தகவல் CIA-க்கு அனுப்பப் பட்டு உயர்மட்டம் வரை சென்றிருக்கிறது. மெளசவி விவகாரம், இரட்டை நகர செயற்குழு CIA அதிகாரிகளுக்கு கூட்டாக FBI-CIA உளவு எதிர் நடவடிக்கையினருக்கு தெரிந்தவுடன் அவர்கள் வெகு விரைவில் கட்டுப்பாட்டு உயரலுவலர்களுக்கு, முதலில் Director of Operations James Pavitt, பின்னர் Deptuy CIA இயக்குனர் மக்லெளலின் இவர்களுக்கும் மெளசவி கைது செய்யப்பட்ட பின்னரும், அதற்குப்பின் ஆகஸ்ட் 23 அல்லது 24 ல் டெனெட்டிற்கும் தகவல் அனுப்பியிருந்தனர்.

9/11 விசாரணைக்குழுவிடம் டெனெட், அவர் மெளசவி பற்றி "இஸ்லாமியத் தீவிரவாதி பறக்க கற்றுக்கொள்கிறார்'' என்ற தலைப்பில் ஒரு தகவலைப் பெற்றதாகக் கூறினார். இந்த அசாதாரண ஆவணமும்--இது இருந்ததும் இதன் தலைப்பும் முன்னர் அறிவிக்கப் பட்டிருக்கவில்லை--இதைவிட அசாதாரணமான செயலற்றதன்மையைத்தான் காட்டின. CIA உடைய இயக்குனர், அல்கொய்தா பயங்கரவாதிகள் தாக்குதல்கள், விமானக்கடத்தல், விமானங்கள் ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படல் என்று தசாப்தங்களாகத் தொடர்ந்த எச்சரிக்கைகளுக்குப் பின்னரும், இந்த அறிக்கையைப் படித்த பின்னர் ஒன்றுமே செய்யவில்லை.

விசாரணைக்குழுவின் அதிகாரிகள் அறிக்கை கூறுகிறது: "ஆகஸ்ட் கடைசியில் மெளசவி கைது DCI (Director of Central Intelligence, அதாவது டெனெட்டிற்கும்) மற்ற CIA உயர் அதிகாரிகளுக்கும் "இஸ்லாமியத் தீவிரவாதி பறக்கக் கற்றுக்கொள்ளுகிறார்" என்ற தலைப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தகவல் மூலம் எச்சரிக்கைகள் பற்றி எந்த முயற்சிகளையும் ஏற்படுத்தவில்லை.

ஒருவாரம் கழித்து, ஆகஸ்ட் 31 அன்று, டெனெட் ஜனாதிபதி புஷ்ஷிடம் பயங்கரவாதத் தாக்குதல்களை பற்றித் தகவல் கொடுக்கும்போது, மெளசவி விவகாரம் பற்றி ஏதும் குறிப்பிட வில்லை. செப்டம்பர் 4-ம் தேதி வெள்ளை மாளிககையில் அமைச்சரவை மட்ட "முக்கியஸ்தர்கள்" கூடி பயங்கரவாதம் பற்றிய புதிய தேசியப் பாதுகாப்பு முடிவு வழிகாட்டி என்பதற்கு ஒப்புதல் அளிக்க இருந்தபோதும் இதுபற்றிப் பேசவில்லை.

தான் இதுபற்றி ஏதும் கூறாமல் இருந்ததற்கு, "இந்த விஷயம் வெள்ளை மாளிகை முன் உளவு எதிர்நடவடிக்கைப் பாதுகாப்புக்குழு, ரிச்சர்ட் கிளார்க்கின் தலைமையில் இயங்குவது, இதுபற்றிக் கூறும் என்று நினைத்ததால்" என்று டெனெட் கூறினார். FBI க்கு ஆகஸ்ட் 26-ம் தேதி பிரெஞ்சு உளவுத்துறை, மெளசவி, அல்கொய்தாவுடன் தொடர்பு உடையவர், இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் செச்சனியாவில் ரஷ்யாவிற்கு எதிரான போருக்காகத் தேர்ந்தெடுக்கப் பட்டவர் என்ற தகவலைக் கொடுத்திருந்தாலும்கூட உண்மையில் கிளார்க்கிற்கு இதுபற்றிக் கூறப்படவில்லை.

காலக் கணக்கும், இந்த நிகழ்வுகளின் அரசியல் பின்னணியும், டெனெட் இந்த நிகழ்ச்சி பற்றிக் குறிப்பிடாததற்கு பெரும் வியப்பை ஊட்டுகின்றன. புஷ் நிர்வாகத்தின் சாட்சியங்களின்படி, டெனெட் நேரிலேயே புஷ்ஷிடம் குறைந்தது 40 தடவைகளாவது பயங்கரவாத அச்சுறுத்தல்கள் பற்றிய முதல் உளவுத்தகவல்கள், 2001 ஜனவரிக்கும் ஜூலைக்கும் இடேயே கொடுத்துள்ளார். இந்தத் தகவல் கொடுத்தல்கள் புஷ் பயங்கரவாத அச்சுறுத்தல் பற்றித் தீவிர கவனம் கொண்டிருந்ததைக் காட்டுகிறது என்று அவருக்கு வக்காலத்து வாங்கியவர்கள் கூறியுள்ளனர்; இது ரிச்சர்ட் கிளார்க்கும் மற்றவர்களும், புஷ் நிர்வாகம் ஈராக்மீதான போர் பற்றிய தயாரிப்பில் ஆழ்ந்திருந்ததால் அல்கொய்தா தாக்குதலின் ஆபத்தை நன்கு உணரவில்லை என்ற குற்றசாட்டிற்கு மறுப்புக் கொடுப்பது போல் ஆகும்.

ஆகஸ்ட் 6, 2001 அன்று, புஷ்ஷின் பிரத்தியேகமான வேண்டுகோளின்படி, CIA தயாரித்து, டெனெட் ஒப்புதல் கொடுத்திருந்த ஜனாதிபதிக்கு அன்றாடத் தகவல் கொடுத்தலில் "பின் லேடன் அமெரிக்காவிற்குள் தாக்க முடிவு செய்துள்ளார்" என்பது சேர்க்கப்பட்டதுடன், இதில் நியூயோர்க், வாஷிங்டன் இரண்டும் விமானக்கடத்தலை ஒட்டிய தாக்குதல்களுக்கு உட்படக்கூடும் என்ற முக்கிய எச்சரிக்கை இருந்தது. மூன்று வாரங்களுக்குள், டெனெட் "இஸ்லாமிய அடிப்படைவாதி பறக்கக் கற்றுக் கொள்ளுகிறார்" என்ற தலைப்பில் ஒரு அறிக்கையைப் பெறுகிறார். (ஒரு மினியாப்பொலிஸ் FBI முகவர், மெளசவி ஒரு 747 விமானத்தை உயர்ந்த கட்டிடத்தின்மீது செலுத்தும் தன்மையை உடையவர் என்று எச்சரித்துக் கூறியிருந்ததும் அவர் அறிவாரா என்பது தெரியவில்லை.)

9/11 குழு விசாரணையின் பொது, 1994-லில் இருந்த கடத்தப்பட்ட விமானங்கள் ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படக்கூடும் என்ற எச்சரிக்கைகளைத் தொடர்ச்சியாக 1994 லிருந்து கேட்டு வருவதாக டெனெட்டே ஒப்புக்கொண்டுள்ளார்; இதில் Air France ஜெட் ஒன்றைக் கடத்தி அதை Eiffel Tower மீது செலுத்தும் முயற்சிகள் பற்றியும் குறிப்பு இருந்தது; அதேபோல் லாங்லே, வர்ஜினியாவில் CIA தலைமையகத்தையே ஒரு விமானம் நிறைய வெடிகுண்டுகள் வைத்துத் மோதும் திட்டமும் இருந்திருந்தது.

விசாரணைக் குழு உறுப்பினர் திமோதி ரேமர் டெனெட்டை அவர் ஏன் இந்தப் பிரச்சினையை செப்டம்பர் 11 க்கு முன் எழுப்பவில்லை என்றும், கடத்தப்பட்ட விமானங்கள் உலக வர்த்தக மையத்தைத் தாக்கிவிட்டன என்று தெரிந்தவுடன், டெனெட் இது மினியப்போலிஸ் பயிற்சிப்பள்ளி கைதுடன் தொடர்பு உடையதாக இருக்குமோ எனக் குறிப்பிட்டதையும், அவருடைய மனத்தில் மெளசவி வழக்கு இருந்ததையும் பற்றிக் கேட்டார்.

ரேமர்: நீங்கள், வுட்வர்ட் புத்தகத்தில் குறித்துள்ளபடி, 9/11 தாக்குதல்களைப் பற்றி அறிந்த உடன், இது அல்கொய்தா வேலைதான் என்று கருதினீர்கள்; பயிற்சிப் பள்ளியில் ஒருவரைப் பற்றியும் குறிப்பிட்டீர்கள். நீங்கள் ஏன் அவ்வாறு கருதவேண்டும்...?

டெனெட்: ஏனென்றால் அனைவரும் பயங்கரவாதிகள்...

ரேமர்: இது ஏன் முக்கியஸ்தர்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை? பயங்கரவாதம் பற்றி ஏழு மாதங்களுக்குப் பிறகு இதுதான் முக்கியஸ்தர்களுடைய முதல் கூட்டம். விவாதத்தில் இது கவனத்தைக் கொள்ளும் என்ற கருத்தை ஏன் நீங்கள் கொள்ளவில்லை?

டெனெட்: அன்று காலை நாங்கள் கொண்டிருந்த விவாதத்தின் தன்மை கொள்ளையடிப்பது பற்றியது, அது எவ்வாறு பறக்கும், நாங்கள் ...

ரேமர்: ஆனால் அது அல்கொய்தாப்பற்றிய கொள்கை விவாதம், எவ்வாறு அல்கொய்தாவை எதிர்ப்பது என்பது பற்றி.

டெனெட்: நன்று, ஆனால் அது அவ்வாறு அல்ல, எக்காரணத்தாலோ. நான் இங்கு கூறக்குடியதெல்லாம் அது உரிய இடமன்று. இதைவிடக் கூடுதலாக நான் சொல்ல இயலாது.

இந்தக் கேள்விக்குட்பட்டிருந்த காலத்தில் டெனெட் கசிந்துகொண்டிருந்த ஞாபகசக்தியைத்தான் கொண்டிருந்தார். ஒரு தயார் செய்திருந்த அறிக்கையுடனும், புஷ் நிர்வாகத்தின் உள்விவாதங்கள் பற்றி செப்டம்பர் 11க்கு முன் நிகழ்வுகளைப் பற்றியும் கேட்கப்படாலாம் என்று எதிர்பார்த்து வந்ததாலும், ஆகஸ்ட் மாதம் இருமுறை புஷ்ஷிடம் தகவல் கொடுத்ததை "மறந்துவிட்டதாகவும்" டெனேட் ஜனாதிபதியை அந்த மாதம் பார்க்கவில்லை என்றும் கூறிவிட்டார்.

மேலும், ஆகஸ்ட் 6, 2001 பில் லேடன் பற்றிய தகவல் அளிப்பின்போது கோண்டலீசா ரைசும் இருந்தார் என்று கூறினார்; இதுவோ புஷ்ஷின் டெக்சாஸ் பண்ணையில் ஒரு CIA தகவல் அதிகாரியால் கொடுக்கப்பட்டது, அப்பொழுது ரைஸ் வாஷிங்டனில் இருந்தார். PDB-யில் குறிப்பிட்டிருந்த FBI அமெரிக்கா முழுவதும் 70-ற்கும் மேலான பின்லேடன் பற்றிய முழுத்தள விசாரணைகளைக் கொண்டிருந்தது பற்றிய கூற்றும் அவரால் சரியாக விளக்கப்படவில்லை. இந்தக் கூற்று FBI அதிகாரிகளாலேயே ஐயத்திற்குட்படுத்தப்பட்டுவிட்டது. இறுதியாக, CIA மெளசவி பற்றிய தகவல் கிடைத்தபின்னர் CIA என்ன செய்தது என்பது பற்றியும் ஞாபகம் இல்லை என்று கூறிவிட்டார்.

9/11 விசாரணைக்குழு தன்னுடைய வரைவு அறிக்கையில், ஆகஸ்ட் 2001 ல் மெளசவி கைது செய்யப்பட்டதை அறிவித்து, அவர் விமானத்தைக் கடத்தும் நோக்கத்தைக் கொண்டிருந்ததை பிரச்சாரம் செய்திருந்தால் அதனால் வெளிவந்திருக்கக்கூடிய உணர்வு கிட்டத்தட்ட 3000 பேர் இறந்திருந்த நிகழ்ச்சிகளின் "சதித்திட்டத்தை தகர்ப்பிற்கு உட்படுத்தியிருக்கக் கூடும்" என்று முடிவுவுரையாகக் கூறியுள்ளது. விசாரணைக்குழுவின் தலைவரான தோமஸ் கீன், இக்கருத்து நிகழ்விற்குப் பின் உளவியில் ரீதியாக கடத்தல்காரர்கள் எவ்வாறு "பெரும் நிதானத்துடனும் அதேநேரத்தில் விரைவில் குழுப்பமடையும் தன்மையைக் கொண்டிருந்தனர்" என்பதை அடிப்படையாகக் கொண்டுள்ளது என்று கூறினார்.

"கூடுதலான அமெரிக்க முயற்சி, Moussaoui விசாரித்ததில் காட்டப்பட்டிருந்தால், அயல்நாட்டு அரசாங்கங்களின் ஒத்துழைப்பின் மூலம் ஒருகால் அவருடைய ஹாம்பர்க் பிரிவின் தொடர்பும் வெளிவந்திருக்கும்" என்று அதிகாரிகள் அறிக்கை தெரிவிக்கிறது.

கூட்டாட்சியின் விமான நிர்வாகத்துறை செப்டம்பர் 4-ம் தேதி மெளசவியின் நடவடிக்கைகள் பற்றி எச்சரித்திருந்தது; ஆனால் இது விமான நிறுவனங்களுக்கு அல்லது பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை.

9/11 விசாரணைக்குழுவில் மெளசவியத்தைப் பற்றிய சாட்சியத்தில் மேலும் ஒரு முரண்பாடு உள்ளது. இந்த விவகாரத்தில், மற்ற சாட்சியங்கள் போல் டெனெட்டும், FBI CIA இடமிருந்து, வெளிநாட்டு உளவுத்துறைக் கண்காணிப்பு நடவடிக்கை ஒட்டி, பிடிவாரண்டிற்காக, மெளசவியைப் பற்றிய உளவுத் தகவலைக் கேட்டது; இது சிறப்பு FISA நீதிமன்றத்தால்தான் கொடுக்கப்படமுடியும்; இதுதான் அத்தகைய விசாரணைக்கு அதிகாரம் அளிக்க முடியும் என்று கூறினார்.

ஆனால் தலைமை வக்கீல் ஜான் ஆஷ்கிரோப்ட் தன்னுடைய சாட்சியத்தில் FBI ஒரு சாதாரண குற்றவியல் வாரண்டை மெளசவியின் கணினியைச் சோதனையிடுவதற்கு கேட்டது என்று கூறினார். FISA வின் கீழ் வாரண்ட் கேட்கப்படவில்லை என்று அவர் கூறினார். இது FBI அதிகாரிகளால், பின்னர் FISA விருப்பமுறைமூலம் தேவையானால் பயன்படுத்திக் கொள்ளுவதற்காக, நிராகரிக்கப்பட்டது.

இந்தச் சட்டபூர்வ வேறுபாடு குன்றிய தன்மை உடையது; ஆனால் இது எழுப்பும் மோதல் முக்கியத்தவம் வாய்ந்தது. மீண்டும் 9/11 விசாரணையில் பல கட்டங்களில் காணப் பட்டதைப் போல், இரண்டு உயர் அமெரிக்க அதிகாரிகள், இதைப் பொறுத்தவரையில் CIA இயக்குனரும், தலைமை வக்கீலும் முற்றிலும் மாறுபட்ட கருத்துக்களை ஒரு பிரச்சினையைப் பற்றிக் கூறியுள்ளனர். ஆனால் விசாரணைக்குழுவின் எந்த உறுப்பினரும் இந்த முரண்பாட்டைச் சுட்டிக் காட்டவும் இல்லை; டெனேட் அல்லது ஆஷ்கிரோப்ட் இருவரில் எவர் பொய் கூறுகிறார் என்பதை உறுதி செய்யவும் இல்லை.

தொடரும்


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved