World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Press statement of Ohio SEP candidate David Lawrence

ஒகியோ SEP வேட்பாளர் டேவிட் லோரன்ஸ் அறிக்கை

By David Lawrence
16 June 2004

Back to screen version

ஒகியோவினுடைய முதலாவது காங்கிரஸ் மாவட்டத்திலிருந்து (சின்சினாட்டி) சோசலிச சமத்துவக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டேவிட் லோரன்ஸ் கீழ்கண்ட பத்திரிகைகளுக்கான அறிக்கையை வெளியிட்டுள்ளார். லோரன்ஸ் ஜூன் 14 ல் வெளியிட்ட அறிக்கையில், காங்கிரஸிற்கு வாக்குச்சீட்டு அந்தஸ்து கோருகின்ற சுயேட்சை வேட்பாளர்கள், முன்கூட்டியே வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டுமென்பதை தடை விதிக்கும் வகையில், மாகாணம் இயற்றியுள்ள தேர்தல் விதியை ரத்து செய்யக்கோரி வழக்கறிஞர்கள் வழக்கு தாக்கல் செய்த பின்னர் இந்த அறிக்கையை வெளியிட்டார்.

நவம்பரில் நடைபெறவிருக்கும் தேர்தலில் எனது பெயரை வேட்பாளராக பதிவு செய்யவேண்டும் என்று கோரி 2600 க்கு மேற்பட்ட வாக்காளர்கள் கையெழுத்திட்டு என்னை ஒகியோவின் (Ohio) காங்கிரஸ் சுயேட்சை வேட்பாளராக முன்மொழிந்திருப்பதற்கு எதிராக, மார்ச் 1 ல் சுயேட்சை வேட்பாளர்களின் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இறுதி நாள் என்று அறிவித்திருப்பது வாக்காளர்களின் ஜனநாயக உரிமைகள் மீது நடாத்தப்பட்ட தாக்குதலாகும். தேர்தல் என்பது உண்மையான அரசியல் கருத்துப் பரிவர்த்தனை அரங்காகும். அடிப்படை பிரச்சனைகளில் எந்தவிதமான வேறுபாட்டையும் காணமுடியாத இரண்டு பெரு வர்த்தகக் கட்சிகள் நடத்துகின்ற நாடக விவகாரமல்ல தேர்தல் என்று நம்புகின்றவர்களை வெளிப்படையாக இழிவுபடுத்துகிற வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

வழக்கறிஞர் ரொபேர்ட் B. நியூமான் (Robert B.Newman) ஆதரவோடு இந்த வழக்கை நாங்கள் தாக்கல் செய்திருக்கிறோம். ஜனநாயகக் கட்சியும், குடியரசுக் கட்சியும் எடுத்துவைக்கிற வெளிநாடுகள் மீதான போர்க் கொள்கைகள் மற்றும் உள்நாட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் கடுமையான நடவடிக்கைகள் ஆகியவற்றிக்கு எதிராக மாற்றுக் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்கின்ற ஒரு கட்சிக்கு வாக்களிக்கும் உரிமையை உழைக்கும் மக்களுக்கு உறுதி செய்து தருவதற்காக இந்த வழக்கை நாங்கள் தாக்கல் செய்துள்ளோம்.

இதற்கு முன்னரும் இதுபோன்று முன்கூட்டியே வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டுமென்று ஒகியோ பிறப்பித்த கட்டளைகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 1983 ல் Anderson vs. Celebrezze ன் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்போது, சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை மார்ச் 20 லிருந்து ஆகஸ்ட் 19 வரை நீடித்தது. இதற்கு முந்திய இறுதிநாள் கெடுவானது, வேட்பாளர்களுக்கும் அவர்களது ஆதரவாளர்களுக்கும் ''அரசியலமைப்பிற்கு முரண்பட்ட சுமையை'' ஏற்படுத்தியிருப்பதாக உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

அந்த வழக்கில் 5 க்கு 4 என்ற பெரும்பான்மையில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில்: ''சுயேட்சை வேட்பாளர்களுக்கு சமத்துவமற்ற ஒரு சுமை அல்லது புதிய அல்லது சிறிய அரசியல் கட்சிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள சமத்துவமற்ற சுமை அதன் இயல்பான தன்மையால், முதலாவது அரசியல் சட்டத்திருத்தம் பாதுகாப்பளித்துள்ள சங்கம் சேரும் உரிமைகளுக்கு ஊறுசெய்வதாகும். அத்துடன், நடைமுறையிலுள்ள அரசியல் கட்சிகளுக்கு அப்பால் செயல்படுகின்ற வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்களது விருப்பத்திற்கு விரோதமாக செயல்படுவதாகும்'' என்று குறிப்பிட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பை அப்பட்டமாக மீறுகின்ற வகையில், ஒகியோ மாகாண சட்டசபை நாடாளுமன்ற வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்வதற்கான தேதியை ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் முன்கூட்டியே நிர்ணயித்து, இரண்டு கட்சிகளின் ஏகபோக அரசியலை காப்பாற்ற வகைசெய்துவிட்டனர். மூன்றாவது கட்சிகளுக்கு வாக்குப்பதிவில் கலந்து கொள்ளும் உரிமையை மறுப்பதன் மூலம், அரசியல் கலைந்துரையாடல்கள் மற்றும் போருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் அரசியல் எதிர்ப்பாளர்களை அடக்குவதற்கும், வேலை அழிப்பு மற்றும் சமூக சமத்துவமின்மைபற்றி மக்களிடையே கேட்கவிடாமல் தடுப்பதற்கும் உத்திரவாதமளிப்பதாகும்.

தற்போது உள்ள விதிகளின்படி, ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிக்காரர்கள் தங்களது வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதற்கு முன்னரே, குளிர்காலத்தின் நடுவில் நாங்கள் மனுச்செய்ய பிரச்சாரத்தை தொடங்க வேண்டும். அரசு அதிகாரத்துவத்தின் தடைகள் எதுவுமில்லாமல் பல்வேறுபட்ட வேட்பாளர்களின் கருத்துக்களை தெரிந்துகொள்வதற்கு வாக்காளர்களுக்கு உரிமை இருக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். அத்தோடு, எல்லா வேட்பாளர்களுக்கும் ஊடகங்களில் தகவல்கள் தருவதற்கு மற்றும் விவாதங்களில் கலந்து கொள்வதற்கு சம உரிமை வழங்கப்படவேண்டும்.

Ballot Access News தகவலின்படி வாக்காளர்களில் 25 சதவீதம் பேர் ஜனநாயக அல்லது குடியரசுக்கட்சி வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ளவில்லை. இப்படி ஏராளமான வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்வதற்கு தகுதியிருந்தும் தங்களது வாக்கு உரிமையை விட்டுவிட தயாராக இருப்பதற்கு காரணம் தங்களது உண்மையான கவலைகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்காத இந்த அமைப்பு முறையில் தங்களுக்குள்ள வெறுப்பை எடுத்துக் காட்டுவதற்காகத்தான் ஆகும். அத்தோடு, மற்றொரு கணிசமான பகுதி வாக்காளர்கள் தங்களது பெயரை பதிவுசெய்து கொள்ளவில்லை.

இப்படி திட்டமிட்டு அமெரிக்கா முழுவதிலும் வாக்குப்பதிவில் கலந்து கொள்ளும் உரிமையை கட்டுப்படுத்தும் சூழ்நிலையை பொருத்திப் பார்க்கவேண்டும். 2000 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் நடைபெற்ற திருட்டு உட்பட முன்கண்டிராத வகையில் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்க தேசபக்த சட்டம், அமெரிக்காவில் குடியேறியுள்ள அரபு மக்கள் மீதான கைது நடவடிக்கை மற்றும் குவாண்டநாமோ வளைகுடாவில் சித்திரவதை முகாம் அமைக்கப்பட்டது ஆகியன இந்த சூழ்நிலையின் கீழ் நடைபெற்றதாகும்.

நான் இந்தப் போட்டியில் கலந்து கொள்வது தொழிலாள வர்க்கத்தின் நலன்களை அடிப்படையாகக் கொண்ட வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்காகும். நாடாளுமன்ற குடியரசுக் கட்சி வேட்பாளர் ஸ்ரீவ் சாபோ (Steve Chabot) அல்லது ஜனநாயகக் கட்சியின் கிரேக் ஹரிஸ் (Greg Harris) எழுப்பாத பிரச்சனைகளை எனது தேர்தல் பிரச்சாரத்தில் முன்வைப்பேன். எனது வேட்புமனு தொடர்பாக பல்லாயிரக்கணக்கான உழைக்கும் மக்களிடையே ஏற்கெனவே முக்கியமான அக்கறை தோன்றியுள்ளது. அவர்கள் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டுமென்று விரும்புகின்றனர். மேலும் அவர்கள், சமுதாய ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து வருவது குறித்தும், வேலைவாய்ப்புக்கள் குறைந்து கொண்டு வருவது தொடர்பாகவும், கல்வி சீர்குலைந்து கொண்டிருப்பது கண்டும் மற்றும் போலீஸ் அட்டூழியங்கள் தொடர்பாகவும் கவலையடைந்துள்ளனர்.

ஆகவே, ஜனநாயக உரிமைகளை ஆதரிக்கின்றவர்கள் மார்ச் 1 தேதி இறுதிக் கெடுவை சட்டவிதிகளிலிருந்து நீக்கவும், எனது பெயர் நவம்பர் வாக்குப்பதிவில் இடம்பெறுவதை ஆதரிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். அத்தோடு, பெரு வர்த்தகர்களின் இருகட்சி ஏகபோக முறைக்கு உண்மையான மாற்றுத்திட்டத்தை விரும்புகின்ற அனைவரும் எனது வேட்புமனுவை ஆதரிக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved