World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

SEP presidential candidate Bill Van Auken condemns US-backed assassination of Hamas leader

"A savage act by a criminal regime"

சோசலிச சமத்துவக் கட்சி ஜனாதிபதி வேட்பாளரான பில் வான் ஓகென், அமெரிக்க ஆதரவுடனான ஹமாஸ் தலைவர் படுகொலையை கண்டிக்கின்றார்.

'கிரிமினல் ஆட்சியின் காட்டுமிராண்டிச்செயல்'

24th March 2004

Back to screen version

கீழிறக்கம் செய்து விநியோகிப்பதற்கு கீழ்க்கண்ட அறிக்கை PDF வடிவிலும் கிடைக்கிறது

பாலஸ்தீன இஸ்லாமிய குழுவான ஹமாஸின் ஆன்மீகத்தலைவர் ஷேக் அஹமது யாசின் மார்ச்22-ல் கொலை செய்யப்பட்டதை சோசலிச சமத்துவக்கட்சி திட்டவட்டமாக கண்டிக்கிறது. 67 வயதான

பார்வையற்ற, நடமாடமுடியாத, உடல் ஊனமுற்ற அந்த மதபோதகர் காசா தெருக்களில் சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்தபோது இந்த கொடூரமான கொலையை அரசாங்கம் செய்திருக்கிறது. குற்த்தன்மை வாய்ந்த இஸ்ரேல் ஆட்சியின் கடுமையான காட்டுமிராண்டி செயல் இது.

இஸ்ரேல் பிரதமர் ஏரியல் ஷரோனின் அரசாங்கத்தின் சார்பில் குரல்தரவல்ல அதிகாரி யாசின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை திட்டமிட்டு பிரதமரே மேற்பார்வையிட்டார் என்று பெருமையடித்துக் கொண்டிருக்கிறார். இதற்கு முன்கூட்டியே இஸ்ரேல் மந்திரிசபை தனது ஒப்புதலை தந்திருக்கிறது. மாஃபியா கும்பலைச்சேர்ந்தவர்கள் தங்களது இலக்குகளை, "குறிவைத்து தாக்குவதற்கு" கட்டளையிடுவதை போன்ற நிலைக்கு மந்திரிசபை கீழே இறங்கி வந்துவிட்டது.

ஹமாஸ் தலைவர்கள் குற்றம்சாட்டியிருப்பதைப்போல், அரைகுறை மனதோடு வெள்ளைமாளிகை மறுப்புகளை தெரிவித்திருந்தாலும் யாசின் கொலை செய்யப்பட்டது புஷ் நிர்வாகத்தின் வெளிப்படையான ஒத்துழைப்போடுதான் நடத்தப்பட்டிருக்கிறது என்று நம்புவதற்கு அனைத்து அடிப்படைகளும் உள்ளன. புஷ் நிர்வாகம் இந்த கோழைத்தனமான குற்றத்தில் பங்கெடுத்துக்கொள்கிறது.

யாசின் மற்றும் ஒன்பதுபேர் படுகொலை செய்யப்பட காரணமாகயிருந்த Apachi ஹெலிகாப்டர்கள் மற்றும் Hellyire ராக்கெட்டுகளை அமெரிக்க அரசாங்கம்தான் பணம் செலுத்தி வாங்கி இஸ்ரேலுக்கு கொடுத்தது என்பது மறுப்பதற்கில்லை. வாஷிங்டன் பச்சைக்கொடிகாட்டாமல் இந்தக் குற்றத்தை செய்தது என்பதை சாதரணமாக நம்பிவிடமுடியாது. ஏனெனில் இஸ்ரேல் ஆட்சி தனது பொருளாதார மற்றும் இராணுவ உதவிக்கு முற்றிலும் அமெரிக்காவை நம்பி இருக்கிறது.

உலகம் முழுவதிலும் அரசாங்கங்கள் கண்டன அறிக்கைகளை விட்ட பொழுதும் கூட, இந்த கொலையை நியாயப்படுத்தும் முயற்சிகளை இந்நிர்வாகம், பலமணிநேரம் செலவிட்டு, மேற்கொண்டது. அதிகாரபூர்வமான அமெரிக்க எதிர்வினை ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு என்று அறிவிக்கும் கூற்றுக்களுடன் "அமைதி" மற்றும் "கட்டுப்பாடு" இவற்றுக்காக போலி நடிப்புக் கொண்ட வேண்டுகோள்களை வெளியிட்டது, இது யாசினுக்கு சரியான தண்டனைதான் கிடைத்திருக்கிறது என்று தெளிவாக உறுதிப்படுத்துகின்ற அறிக்கையாகும்.

சக்கரநாற்காலியில் ஏறத்தாழ செவிடாகவும், பாதிகுருடாகவும் நடமாடுகிற ஒரு முதியவர் கொல்லப்பட்டதன் மூலம் பயங்கரவாத அச்சுறுத்தல் குறைக்கப்பட்டுவிட்டதாக யாராவது நம்பமுடியுமா? அதற்கு மாறாக, பரம ஏழைகளாகவும், ஒடுக்கப்பட்ட நிலையிலும் வாழ்ந்துகொண்டிருக்கின்ற பாலஸ்தீன மக்களிடையே தற்கொலை குண்டுவீச்சுக்கள் மற்றும் இதர நடவடிக்கைகளில் தங்களது உயிரையும் தியாகம் செய்ய முன்வருகின்ற புதிய இளைஞர் பட்டாளங்களைத்தான் இந்தக் குற்றச்செயல் உருவாக்கும். இஸ்ரேல் அரசாங்கமே எடுத்துவரும் கொலை நடவடிக்கைகளுக்கு வாஷிங்டன் ஆதரவு தருவதன் மூலம் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அமெரிக்க குடிமக்கள் மீது மேலும் தாக்குதல்களை நடத்துவதற்கு உசுப்பிவிடும் செயலாகவே அமையும்.

இவை, ஷரோன் ஆட்சியின் நடவடிக்கைகளால் தற்செயலாக உருவாகிவிட்ட விளைவல்ல. ஷரோன் ஆட்சி பயங்கரவாதத்தாலேயே வளர்ந்து கொண்டிருக்கின்ற நிர்வாகமாகும். மேலும் ஒடுக்குமுறைகளுக்கும், நிலத்தை பிடித்துக்கொள்வதற்கும் ஒரு சாக்குப்போக்கு அதற்கு கிடைக்கச்செய்யும் வகையில் திட்டமிட்ட புதிய பயங்கரவாத தாக்குதல்களை அது தூண்டிவிடுகிறது. பல ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்ட எல்லைப் பகுதிகளில் குழப்பத்தை உருவாக்கி அதன்மூலம் தனது சொந்த இராணுவ தலையீடுகளை நியாயப்படுத்தி வருகிறது மற்றும் சரியான பாலஸ்தீன நாடோ அல்லது தலைமையோ உருவாக முடியாமல் தடுத்து வருகிறது.

அதேபோன்று இஸ்ரேலிய சிவிலியன்களை பயங்கரவாதிகள் கொலைசெய்வது, ஷரோனின் வலதுசாரி நிர்வாகத்திற்கு உள்அரசியல் நலன்களுக்கு பயன்படுவதாக அமைந்திருக்கிறது. "இலக்குவைத்து கொலை செய்வது" என்பது மேலும் தற்கொலை குண்டுவீச்சுக்களை கிளப்பிவிடும் என்பதில் அவரது நிர்வாகம் முழு நனவுடன் இருக்கிறது.

அதேபோன்று புஷ் நிர்வாகமும் புதிய பயங்கரவாத நடவடிக்கைகளை வரவேற்கிறது மற்றும் அவற்றை உருவாக்குவதற்கு இஸ்ரேல் மேற்கொண்டுள்ள ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளை அப்படியே ஏற்றுக்கொள்கிறது. சர்வதேச அளவில் "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்ற பிரகடனத்தின் மூலம் புஷ் நிர்வாகம் ஆத்திரமூட்டல் எதுவுமில்லாமல் ஈராக்மீது போர்தொடுத்து, அதைப் பிடித்துக்கொண்டது, அமெரிக்காவிற்கு உள்ளேயே அடிப்படை சிவில் உரிமைகளை ரத்து செய்தது மற்றும் அமெரிக்க உழைக்கும் மக்களிடமிருந்து நிதியாதிக்க செல்வந்த தட்டிற்கு மிகப்பெருமளவில் செல்வத்தை மாற்றித்தந்தமை ஆகியவை உட்பட தனது அனைத்து கொள்கைகளையும் நியாயப்படுத்துதலாக பூகோள அளவிலான "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்பதை அது கொண்டு வந்திருக்கிறது. ஒரு "போர் ஜனாதிபதி" என்று காட்டிக்கொள்வதன் அடிப்படையில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு, புஷ்ஷூக்கு வன்முறையின் புதிய நடவடிக்கைகள் தேவை.

இஸ்ரேலின் சமீபத்திய படுகொலை முடிவுற்ற அரசாங்க ஒடுக்குமுறையின் ஒரு அங்கம்தான் இது. பாலஸ்தீன மக்களை இழிவுபடுத்தவும், எதிர்ப்பது பயனற்றது என்பதை நம்பவைக்கவும் நோக்கமாகக்கொண்டது. 60 ஆண்டுகளுக்கு முன்னர் நாஜிக்கள் ஐரோப்பாவில் முன்னோடியாக நின்று, ஆக்கிரமித்த பகுதி மக்களிடையே உளவியல் அடிப்படையில் பயங்கர உணர்வுகளை ஏற்படுத்தும் நுட்பநடைமுறைகளை சியோனிச அரசு செம்மையாக்கம் செய்திருக்கிறது.

யாசின் வரலாறு அவரது தலைமுறையைச் சார்ந்த பல்லாயிரக்கணக்கான மக்களது வாழ்வைப்போன்றதுதான். 1936-ல் பிறந்த அவர் தனது 12 வயதில், அவரும் அவரது குடும்பத்தினரும் சியோனிச படைகளிடமிருந்து தப்பி உயிர்பிழைப்பதற்காக வெளியேறும்படி நிர்பந்திக்கப்பட்டார்கள். அவர்களது பாலஸ்தீன கிராமத்தை அடையாளம் எதுவுமேயில்லாமல் புல்டோசர்களைக்கொண்டு இடித்து தரைமட்டமாக்கிவிட்டார்கள். அவரும், அவரது சக அகதிகளும் காசா பகுதியில், குறுகலான எல்லையில் வாழவேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டனர். அந்தப்பகுதி ஏழ்மை மற்றும் ஒடுக்குமுறைக்கு உலகின் கவனத்தை கவரும் பகுதிகளில் ஒன்றாக அமைந்துவிட்டது.

இஸ்ரேல் அதிகாரிகள் அவரை ஒரு பயங்கரவாதத்தலைவர் என்று சித்தரித்துக்காட்டினாலும், வரலாற்றில் யாசினுடன் அவர்கள் கொண்டிருந்து உறவு வேறுகதையை சொல்வதாக, அமைந்திருக்கிறது. 1983ம் ஆண்டு இரகசிய அமைப்பை உருவாக்கினார் என்ற குற்றச்சாட்டின்கீழ் ஆயுதங்களை வைத்திருந்ததாக கூறி இஸ்ரேல் அவரை சிறையில் அடைத்தது, ஆனால் இரண்டு ஆண்டுகள் கழித்து அவரை விடுதலை செய்தது. அதற்குப்பின்னர் பல ஆண்டுகள் சியோனிச ஆட்சி யாசினின் இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கத்திற்கு மறைமுகமான ஆதரவுதந்தது. பாலஸ்தீன விடுதலை அமைப்பை சார்ந்த மதச்சார்பற்ற தேசியவாதிகளுக்கு எதிரான பயனுள்ள அமைப்பாக அதன் வளர்ச்சியைப் பார்த்தது.

1989-ல், முதலாவது இண்டிபஃதா வெடித்ததும், இஸ்ரேல் அரசாங்கம் யாசினை தேடிக் கண்டுபிடித்து, கைது செய்து அவருக்கு ஆயுள்தண்டனை விதித்தது. அம்மானில் பாலஸ்தீன தலைவரை கொலை செய்வதற்கு முயன்றார்கள் என்பதற்காக ஜோர்தானில் பிடிபட்ட இரண்டு மொசாத் ஏஜெண்டுகளின் விடுதலைக்கு பதிலாக 1997-ல் யாசின் விடுதலை செய்யப்பட்டார்.

பாலஸ்தீன தலைவர்களிடையே யாசின் மிதவாத சக்தி என்று கருதப்பட்டார். மேற்குக்கரை மற்றும் காசா பகுதிகளில் இஸ்ரேல் ஆக்கிரமித்துக்கொண்டுள்ள பகுதிகளிலிருந்து வெளியேறுமானால் அந்நாட்டுடன் சமாதானம் செய்து கொள்வதாக அண்மையில் அவர் ஆலோசனை கூறினார். இதில் உடன்பட்டு பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கு தமது விருப்பத்தையும் தெரிவித்திருந்தார். ஷரோன் அரசாங்கத்திற்கு அத்தகைய தீர்வு அல்லது பேச்சவார்த்தைகளில் எந்தவிதமான அக்கறையுமில்லை.

இஸ்ரேலிய அரசு பயங்கரவாதத்திற்கு தொடர்ந்து வந்த அமெரிக்க நிர்வாகங்கள் உதவின மற்றும் உடந்தையாக செயல்பட்டன. இஸ்லாமிய பயங்கரவாதமும் அரபு பிராந்தியம் முழுவதிலும் அமெரிக்காவிற்கு எதிரான உணர்வுகளும் காளான்களைப்போல் கிளம்பியிருப்பதற்கு பிரதான காரணங்களில் இது ஒன்றாகும். அரபு நாடுகள் அனைத்திலும், இஸ்லாமிய உலகம் முழுவதிலும் வாழ்கின்ற நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள், வாஷிங்டனின் நிபந்தனையற்ற ஆதரவு இல்லாமல் பாலஸ்தீனத்தின் 3.2 மில்லியன் மக்களை இஸ்ரேல் கொடூரமாக அடக்கி ஒடுக்கமுடியாது என்பதை அறிந்திருக்கிறார்கள்.

ஈராக்கில் போர் போன்று, 2004 தேர்தலிலும் அமெரிக்க மக்கள் இஸ்ரேலுக்கு அமெரிக்கா தருகின்ற ஆதரவு அதனால் ஏற்படக்கூடிய எதிர்கால கொடூரமான விளைவுகள் குறித்து தங்களது கருத்துக்களை தெரிவிப்பதற்கான உரிமை மறுக்கப்படும். புஷ்-ன் ஜனநாயகக்கட்சி எதிர்ப்பாளரான மசாஸூஸெட்சை சார்ந்த செனட்டர் ஜோன் கெர்ரி யார் சியோனிச ஆட்சிக்கு கொத்தடிமைத்தனமாக காவல்புரிந்து நிற்பவர் என்பதில் புஷ் உடன் போட்டிபோட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

அண்மைய வாரங்களில், பாலஸ்தீன தலைவர் யாசிர் அரபாஃத்தை கெர்ரி "நாடுகடத்தப்பட்டவர்" என்று வர்ணித்தார். அதேநேரத்தில் இஸ்ரேல் பிரதமர் ஏரியல் ஷரோனை "சமாதானத்தை நிலைநாட்டும் நடவடிக்கையை எடுக்கக்கூடியவர்" என்று கூறியுள்ளார். ஷரோன் நீண்ட கொலைகள் மற்றும் சதிக்கொலைகள் பட்டியலைத் தொடர்ந்து கொண்டிருப்பவர் பாலஸ்தீன தலைவர்களையும் போராளிகளையும் அரசாங்கம் கட்டளையிட்டு கொலைகளை செய்யும் கொள்கையை அவர் ஆதரித்து வருகிறார் மற்றும் இஸ்ரேல் சுவர் அமைத்து அதிகமான பாலஸ்தீன எல்லைப் பகுதிகளை நடைமுறையில் இணைக்கக் கூடிய அதேவேளை சுமார் 1.2 மில்லியன் பாலஸ்தீனியர்களை வசிக்க முடியாத ஒதுக்கி வைக்கப்பட்ட பகுதிகளில் சிக்கவைப்பதையும் அவர் ஆதரிக்கிறார்.

மூத்த புஷ் நிர்வாகத்தில் குடியரசுக் கட்சியினர் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன எல்லைப்பகுதியில் சட்டவிரோத சியோனிச குடியிருப்புக்கள் விரிவடைவது குறித்து கவலைகள் தெரிவித்தபோது கெர்ரி அவர்களை வலது புறத்திலிருந்து கண்டித்தார்.

அவர், இதர ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை சகாக்களைப்போன்று, குடியரசுக் கட்சிக்காரர்களுடன் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் இஸ்ரேல் அரசாங்கத்திற்கு மூன்று முதல் நான்கு மில்லியன் டாலர்கள் வரை அமெரிக்க உதவிகளை வழங்கிவருகிறார்கள். கடன்களுக்கான உத்தரவாதம் என்ற வடிவத்தில் மேலும் பல மில்லியன் டாலர்கள் வழங்கப்படுகின்றன. இந்தப்பணம் கிரிமினல் கொள்கையை வளர்ப்பதற்கு செலவிடப்படுகிறது. சட்டவிரோதமான குடியிருப்புகளை நிலைநாட்டுவதற்கு இஸ்ரேல் மிகப்பெருமளவிற்கு நிதிஒதுக்கீடு செய்கிறது, இது இஸ்ரேலின் பொருளாதாரத்தை வற்றச்செய்வதைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது மற்றும் பாலஸ்தீனியர்களை கொல்வதற்கும் முடமாக்குவதற்கும் மிகப்பெருமளவில் இராணுவ நிர்வாகத்தை ஆக்கிரமித்த பகுதிகளை விரிவுபடுத்துவதற்கு பெருந்தொகையை செலவிட்டு வருகிறது.

தென்னாபிரிக்க இன ஒதுக்கல் ஆட்சியில் நடைபெற்றது போன்ற கடுமையான சமூக பாரபட்சம் மத அடிப்படையிலான புறக்கணிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மில்லியன் கணக்கான பாலஸ்தீன மக்களது ஜனநாயக உரிமைகளை இஸ்ரேல் மறுத்துவருகின்ற போதிலும் கூட, புஷ்-ஐ போன்று கெர்ரியும், இஸ்ரேல் ஜனநாயகத்தின் முன்மாதிரி என்று தொடர்ந்து வலியுறுத்தி கூறிவருகிறார். அமெரிக்க மக்கள் செலுத்துகின்ற வரிப்பணம் அணுஆயுதங்களை வைத்திருக்கும், சர்வதேச சட்டத்தை மீறும், கொலையை அரசாங்க கொள்கையாகக் கொண்டு இருக்கும் பாலஸ்தீன மக்கள் அனைவரையும் கொன்று குவிப்பது அல்லது வெளியேற்றி விடுவதென்ற முடிவில் செயல்பட்டு வருகின்ற ஒரு நாட்டை ஊக்குவிப்பதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இஸ்ரேல் ஆட்சிக்கு நிதியுதவி வழங்குவதை உடனடியாக அமெரிக்கா நிறுத்த வேண்டுமென்று சோசலிச சமத்துவக் கட்சி கோருகிறது. ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சியைப்போல் அல்லாது, நமது கட்சி 2004 தேர்தலில் கடந்த 50ஆண்டுகளாக இஸ்ரேலுக்கு இராணுவ உதவியும் பொருளாதார உதவியும் தந்துவரும் அமெரிக்க அரசியல் நிர்வாகக்கொள்கையை பகிரங்கமாக எதிர்க்கும். பாலஸ்தீன மக்களை ஒடுக்குவதற்கு அமெரிக்கா ஆதரவு தந்து வருவது, தார்மீக நெறிப்படி நியாயமற்றது சமாதானம் கூறமுடியாதது, அமெரிக்க உழைக்கும் மக்களுக்கு மற்றும் இஸ்ரேல் உட்பட மத்தியகிழக்கு முழுவதிலும் உள்ள உழைக்கும் மக்களது நலன்களுக்கு விரோதமானது.

நடப்புக்கொள்கையை அமெரிக்கா விடாப்பிடியாக நிலைநாட்டுமானால் மத்திய கிழக்கில் இராணுவ மோதல் கொந்தளிப்பை உருவாக்கும் மற்றும் அமெரிக்காவிற்கு உள்ளேயும், சர்வதேச அளவிலும் உழைக்கும் மக்களுக்கு எதிராக புதிய பயங்கரவாத அட்டூழியங்களை உருவாக்கும் அச்சுறுத்தலை செய்கிறது என நாங்கள் எச்சரிக்கிறோம்.

இப்படி பலாத்கார ஒடுக்குமுறை, பழிக்குப்பழி வாங்குவது மற்றும் தண்டிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதில் உலகிலேயே தலைசிறந்த நிபுணராக விளங்குகின்ற ஷரோனை தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான தலையீட்டின் மூலமே தடுத்து நிறுத்தியாக முடியும். அமெரிக்க ஏகாதிபத்தியமும் சியோனிசமும் உருவாக்கியுள்ள இரத்தக்களரி நெருக்கடியை போக்குவதற்கு ஒரேவழி முதலாளித்துவத்திற்கு எதிரான மற்றும் சோசலிச சமுதாயத்தைக் கட்டி எழுப்புவதற்கான பொதுப் போராட்டத்தில் அரபு மற்றும் யூத தொழிலாளர்களை ஒன்றுபடுத்துவதில் தான் அடங்கியுள்ளது. இது மத்திய கிழக்கில் காலனி ஆதிக்கம் விட்டுச்சென்ற பாரம்பரியமான மற்றும் பொருளாதார ரீதியில் அறிவுக்குப்புறம்பான நாட்டு எல்லைகளை கிழித்தெறிவதை தவிர்க்க முடியாததாக்குகிறது. அத்தகைய இயக்கத்திற்கு சர்வதேச அளவிலும் அமெரிக்காவிலும் மிகப்பரவலான ஆதரவை உருவாக்குவதற்கு சோசலிச சமத்துவக் கட்சி இப்பிரச்சாரத்தின் மூலம் முயலும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved