World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

US and Israel exploit Syrian/Kurdish tensions

அமெரிக்காவும் இஸ்ரேலும் சிரிய / குர்திஸ் பதட்டங்களை சுரண்டிக்கொள்கின்றன

By Steve James
26 March 2004

Back to screen version

சிரியாவின் குர்து மக்களுக்கும் அரசாங்கத்திற்குமிடையே, பக்கத்து ஈராக்கை அமெரிக்கா பிடித்துக் கொண்டதன் பின்விளைவாக பதட்டங்கள் ஒரு புதிய அளவில் உக்கிரமடைந்திருக்கின்றன.

சென்ற வாரங்களில் சிரியாவில் குர்துகள் வாழுகின்ற பகுதிகளிலும், பல்வேறு எதிர்ப்பு பேரணிகளும், கலவரங்களும் நடந்துள்ளன. சிரியா அரசாங்கம் சிரியாவின் குர்துகளுக்கெதிராக கொடூரமான பாரபட்ச நடவடிக்கைகளை நீண்டகாலமாக மேற்கொண்டு வருவது, மற்றும் பக்கத்து நாடான ஈராக்கை மெரிக்கா ஆக்கிரமித்துக் கொண்டதன் பின்னரான அரசியல் தூண்டல் இவை இரண்டிலுமிருந்து எழுகின்றது.

ஈராக்கில் ஆயுதந்தாங்கிய 100,000 அமெரிக்க துருப்புக்கள் காவல் புரிந்து வருவதற்கிடையில் அந்நாட்டு குர்துகள் பிராந்திய தன்னாட்சி உரிமை பெறுவார்கள் என்பதற்கான அறிகுறிகள் குர்து தலைமைக்கு ஏற்பட்டுள்ளது. சிரியாவின் குர்து பகுதி, குர்து ஈராக்கை ஒட்டியுள்ளது. டமாஸ்கஸிலுள்ள பஸ்சார் அஸ்ஸாத்தின் அரசாங்கத்தை தனிமைப்படுத்துகின்ற அமெரிக்க நிர்வாகத்தின் கூட்டு சதி முயற்சியில் நேரடியாக பங்கெடுத்துக் கொள்வது பற்றியும் கூட கருத்துரைக்கப்பட்டு வருகின்றன.

வட கிழக்கு சிரியாவின் காமேஸ்லி ஈராக் எல்லைக்கு அருகிலுள்ள நகரம் அங்கு நடைபெற்ற ஒரு கால்பந்து போட்டியில் அருகாமையிலுள்ள Deir-al Zour பார்வையாளர்களோடு உள்ளூர் குர்து ஆதரவாளர்கள் மோதியதால் இந்தத் தகராறு மூண்டது. Deir-al Zour-லிருந்து வந்த கால் பந்து ரசிகர்கள், பாத் கட்சிககு ஆதரவாகவும், "சதாம் ஹூசைனுக்கு" ஆதரவாகவும் முழக்கமிட்டனர். உள்ளூர் குர்து ரசிகர்கள் ஜோர்ஜ் புஷ்-ன் படத்தை தூக்கிப் பிடித்தனர். கைகலப்பும், துப்பாக்கி சூடும் நடந்ததால், ஏற்பட்ட பீதியில் ஒருவர் மீது ஒருவர் விழுந்தடித்துக் கொண்டு ஓடியதால் பலர் மிதித்துக் கொல்லப்பட்டனர். போலீசாரால் 11 வயது சிறுவன் உட்பட சுடப்பட்டான், கால்பந்து மைதானத்தை சுற்றி வளைத்துக் கொண்டு போலீசார் நின்றனர். பலியானவர்களுள் சிரியாவின் இராணுவ துணைத் தளபதியும் ஒருவர் என சில தகவல்கள் தெரிவித்தன.

அந்த கால்பந்து போட்டியை சிரிய தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்புவதாக இருந்தது. கலவரம் பலநாட்கள் தொடர்ந்து நீடித்தது. குறைந்த பட்சம் 14 பேர் கொல்லப்பட்டதாகவும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததாகவும் உள்ளூர் மருத்துவமனைகள் தெரிவித்தன. காமேசிலியில் பல பொது கட்டடங்களும், இதர உள் நகரங்களில் பொது கட்டடங்களும், காமேசிலி ரயில்வே நிலையமும் தீ வைத்து கொளுத்தப்பட்டன. 100-க்கு மேற்பட்டோர், கொல்லப்பட்டதாகவும், அவற்றில் பெரும்பாலோர் சிரிய போலீஸ் மற்றும் இராணுவ படையினரால் சுடப்பட்டவர்கள் என்றும் குர்து ஆதாரங்கள் தெரிவித்தன. கலவரங்களை ஒடுக்குவதற்காக டாங்கிகள் பயன்படுத்தப்பட்டன, சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தந்துள்ள தகவலின்படி, இறுதிச் சடங்கு ஊர்வலத்தில் இராணுவ ஜீப்புகளிலிருந்து எந்திர துப்பாக்கிகளால் சுட்டிருக்கிறார்கள்.

சிரியன் அரசு செய்தி நிறுவனமான SANA "தாயகத்திற்கும், குடிமக்களுக்கும் பாதுகாப்பிலும் ஸ்திரத் தன்மையிலும், குழப்பம் விளைவிக்க முயலுபவர்கள் மீது கடுமையான தண்டனை விதிக்கப்படும்" என்று எச்சரித்துள்ளது. குர்திஸ் அரசியல்வாதிகள், கால்பந்தாட்ட கலவரத்தில் ''அரசியல் வடிவம் கொண்ட பிரச்சனையாக'' மாற்றிவிட பார்க்கின்றனர், என்று அரசாங்கத்திற்கு நெருக்கமான ஆதாரங்கள் குற்றம் சாட்டின.

கால்பந்தாட்டத்தை தொடர்ந்து, சிரியாவிலும், சர்வதேச ரீதியாகவும் குர்துகள் துப்பாக்கி சூடுகளை கண்டித்து வருகின்றனர். டமாஸ்கஸின் பிரதான சாலைகளில் குர்திஸ் மக்கள் பெருபான்மையினர் வாழ்கின்ற புறநகர் பகுதிகளில் சாலைத் தடைகள் உருவாக்கப்பட்டு, பலர் கைது செய்யப்பட்டனர். டமாஸ்கஸ் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். பலர் சுடப்பட்டதாக கூறப்படுகிறது.

வடமேற்கு சிரியாவிலுள்ள அலேப்போவில் கண்டனப் பேரணிகள் நடத்தப்பட்டன.

துப்பாக்கி சூடுகளையும் ஒடுக்கு முறையையும், பிரஸ்ஸல்ஸ், ஒட்டவா, மற்றும் வாஷிங்டனிலுள்ள குர்துகள் கண்டித்தனர். வடக்கத்திய ஈராக்கிலுள்ள அர்பிலில் ஆயிரக்கணக்கானவர்கள் ஆர்பாட்டம் செய்தனர்.

"இப்போது சிரியாவில் நடந்து கொண்டிருப்பதை, குர்துகள் மீது தொடுக்கப்பட்டுள்ள போர் என்று நீங்கள் உண்மையிலேயே எடுத்துக் கொள்ளலாம்" என்று குர்திஸ் பிரிவினைவாத யிக்கிட்டி குழுவைச் சார்ந்த அப்தேல் பாக்கி யூசேப், ராய்ட்டரிடம் தெரிவித்தார்.

இந்த மோதலை குர்துகளுக்கும் அரபுகளுக்குமிடையிலான இனச் சண்டையாக சித்தரிக்க முயன்றுவரும் சிரிய அரசாங்கத்தை யூசுப் கண்டித்தார். "இந்த மோதல் நாட்டின் அரசியல் அதிகாரிகளுடன் நடைபெற்றதாகும். அரபு தெருக்களில் நடைபெறவில்லை. தெருக்களில் நடமாடும் அரபுக்களும் ஜனநாயக அரபு சக்திகளுமாகிய நாங்கள், ஜனநாயக, அரசியல் மற்றும் பொருளாதார சீர்திருத்தத்தில் உடன்பட்டு நிற்கிறோம்" என்று அவர் கூறினார்.

யிக்கிட்டி கட்சியை சார்ந்த இரண்டு உறுப்பினர்கள் குர்து பிரிவினைவாதத்தை முன்னெடுக்கிறார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டு, அவர்களுக்கு அண்மையில் 14 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சிரியாவின் மக்கள் தொகை 17 மில்லியனில், 2 மில்லியன் குர்து இனத்தவர்களாவர். பக்கத்து நாடுகளைப் போன்று குர்திஸ் மொழி வெளியீடுகள் மற்றும் ஒலிபரப்பிற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. 1962 முதல் 200,000 குர்துகளுக்கு குடிமக்களுக்கான உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்டிருக்கின்றன.

சிரியாவின் சர்வாதிகாரம் பல தலைமுறைகளாக, குர்து இனமக்களுக்கு எதிராக புரிந்து வரும் அதிகார துஷ்பிரயோகங்களின் தன்மைகள், குர்து மக்களின் துயரங்கள் எப்படியிருந்தாலும், அமெரிக்க நிர்வாகம், குர்து இனமக்கள் அஸ்ஸாத்திற்கு தெரிவிக்கும் எதிர்ப்பை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறது என்பதற்கு எல்லாவிதமான அடிப்படைகளும் உண்டு. அமெரிக்கா பிடித்துக்கொண்டுள்ள ஈராக்கிலிருந்து அமெரிக்க புலனாய்வு குழுக்கள், நிலவரத்தை மதிப்பிடுவதற்காக சிரியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளன, அதேவேளை ஈராக்கிலுள்ள குர்து குழுக்கள் சிரியா மீது படையெடுப்பதாக அச்சுறுத்தியுள்ளன.

அமெரிக்க மற்றும் இஸ்ரேல் பத்திரிகைகள், சிரியாவின் குர்து இன பிரச்சனை தொடர்பாக, கணிசமான அளவிற்கு செய்திகளை வெளியிட்டிருக்கின்றன. வலதுசாரி வாஷிங்டன் போஸ்ட்டின் ஒரு தலையங்கம், எடுத்துக்காட்டாக, சிரிய குர்துகள் ''ஈராக்குடைய விடுதலை மற்றும் தாராளமயமாக்கலால் ஊக்கமடைந்திருத்தலை'' கண்டுபிடித்ததாக குறிப்பிட்டிருந்தது.

அந்த தலையங்கம் புஷ் நிர்வாகம், ''குர்து எதிர்ப்பாளர்கள் பக்கம் நிற்க வேண்டுமென்று'' கோரியுள்ளது.

"சிரியாவின் வாழ்வில் அதிகமாக தங்களுக்கு இடம் வேண்டும், தங்களை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று கேட்கின்ற சிறுபான்மையை ஒதுக்கி வைப்பதற்காக கடுமையான ஒடுக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொள்வதை கைவிட வேண்டும்" என்று அமெரிக்க அரசுத்துறை சிரியன் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டிருக்கிறது.

ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷூடைய ''போக்கிரி நாடு'' ஐ காரணம் காட்டி அமெரிக்கா தனது ஆக்கிரமிப்புக்கான இலக்குக்குரிய அரசுகளாக ஈரானோடு சிரியாவையும் சேர்த்து பட்டியலில் முன்னிலையில் வைத்துள்ளது. அமெரிக்காவின் மேலாதிக்கத்தில் மத்திய கிழக்கு நாடுகளின் பூகோள அமைப்பையே மாற்றியமைக்கும் புதிய-பழமைவாத முன்னோக்கிலான ஆட்சி மாற்றத்திற்கு உட்பட வேண்டிய நாடு இது என்று வாஷிங்டன் திட்டமிட்டுள்ளது.

ஈராக் மீது படையெடுப்பு நடந்த பின்னர், சிரியா மீது நிர்பந்தங்கள் அதிகரித்து வருகின்றன. சென்ற அக்டோபரில் சிரியாவிற்குள் கைவிடப்பட்ட ஒரு பயிற்சி முகாமில் இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு வீசி தாக்கின. சிரியா மீது கடந்த 30 ஆண்டுகளில் நடைபெற்ற முதலாம் இஸ்ரேலிய தாக்குதல் அது. டிசம்பரில் அமெரிக்க நாடாளுமன்றம் சிரியாவை பொறுப்பு சாட்டும் சட்டம் இயற்றப்பட்டது. சிரியாவிற்கெதிராக வர்த்தக மற்றும் இராஜதந்திர தடைகளை விதிக்க நிர்வாகத்திற்கு அந்தச் சட்டம் அங்கீகாரமளித்தது. சிரியா பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தருவதற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். லெபனானிலிருந்து தனது துருப்புக்களை விலக்கிக் கொள்ள வேண்டும். ''பேரழிவுகரமான ஆயுதங்கள்" மற்றும் தொலைநோக்கு ஏவுகணைகள் தயாரிப்பு மற்றும் பெறுகின்ற திட்டங்களை கைவிட வேண்டும். ஈராக்குடன் உள்ள எல்லையை பயங்கரவாதிகள் புக இயலாமல் மற்றும் ஆயுதங்கள் கடத்த முடியாதபடி மூடிவிட வேண்டும் என்று அந்த சட்டம் சிரியாவை கேட்டுக் கொண்டது.

இந்த சட்டத்தைப் பற்றி டமாஸ்கஸ், "இது உண்மையிலேயே தவறான சட்டம் சிரியாவிற்கு கேடு விளைவிப்பது. மத்திய கிழக்கில் அமைதிக்கு ஊறுவிளைவிப்பது. அமெரிக்கா சிரியா உறவுகளுக்கும் அமெரிக்கா - அரபு உறவுகளுக்கும் பொதுவாக தீங்கு பயப்பது" என்று வர்ணித்தது.

அமெரிக்க ஊடகங்கள் இந்த சட்டத்தை, ஈராக் எண்ணெய் வருவாயில் பில்லியன் கணக்கான வருவாயையும் பேரழிவு ஆயுதங்களையும் சிரிய தலைவர்கள் கடத்திக்கொண்டு சென்றதாக கட்டுக்கதை கூறி நியாயப்படுத்தின. வெள்ளை மாளிகையின் பேச்சாளர் ஸ்கோட் மெக்லேலன் ''பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் சிரியா தவறான பக்கம் இருப்பதாக'' குறிப்பிட்டார்.

டிசம்பர் கடைசியில், லிபிய அரசாங்கம் அமெரிக்காவுடன் தனது உறவுகளை மீண்டும் நிலைநாட்டிக் கொள்ள ஒப்பந்தம் செய்துகொண்டதைத் தொடர்ந்து சிரியா மேலும் தனிமைப் படுத்தப்பட்டுவிட்டது. லிபியா லாக்கர் பீ குண்டு வெடிப்புக்களுக்கு பொறுப்பை ஏற்றுக் கொண்டு, தன்னிடமுள்ள மிகக் குறைந்த பேரழிவு ஆயுதத் திட்டத்தை அமெரிக்க ஆயுத ஆய்வாளர்களிடம் ஒப்படைத்தது.

சில வாரங்கள் தாமதத்திற்குப் பின்னர், சட்டத்தில் கண்டுள்ள நடவடிக்கைகளை பயன்படுத்தி சிரியா மீது தடைகளை விதிக்க புஷ் நிர்வாகம் முயன்று வருவதாக தெரிகிறது. அமெரிக்க அரசுத்துறை துணைச் செயலர் ரிச்சர்ட் ஆர்மிடேஜ் எந்த தடை விதிக்கப்பட்டாலும் அது ''மிக உறுதியாக'' செயல்படுத்தப்படும் என்றும் அல்கொய்தாவிற்கெதிராக சிரியா ஒத்துழைத்து வந்தாலும், தடைகள் விதிக்கப்படுமென்றும் பெருமையடித்துக் கொண்டார்.

அமெரிக்காவின் தடை நடவடிக்கைகள் சிரிய நாட்டின் மிகச் சிறிய எண்ணெய் தொழிற்துறைக்கு எதிராக செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது 300 மில்லியன் டாலர்கள் சர்வதேச வர்த்தகத்தை பாதிக்கக் கூடும். அமெரிக்காவில், சிரியாவின் விமானமங்கள் இறங்குவதற்கு தடைவிதிக்கப்படலாம். சிரியாவின் சொத்துக்களை முடக்கலாம் மற்றும் இராஜதந்திர தடைகளை விதிக்கலாம். இந்த வாய்ப்புகளும் சட்டத்தில் உள்ளன. ஜெருசலேம் போஸ்ட் பொருளாதாரத்தடை விதிக்கப்படவிருப்பது ''நிர்வாகத்தில் இடம் பெற்றுள்ள வேட்டையாடும் பிரிவுகளுக்கு (கன்னை) வெற்றி'' என்று பாராட்டியுள்ளது. அமெரிக்க நிர்வாக அதிகாரி ஒருவர் "சிரியா மீது நாம் எடுத்துள்ள நடவடிக்கைகளில் மிகக் கடுமையானதாக இது அமையும்.'' ''இதுதான் ஆரம்ப கட்ட நடவடிக்கையாக அமையும்'' என்றும் மற்றைய அதிகாரி குறிப்பிட்டார்.

அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் கொலின் பவல் இந்த மாதம், சிரியா லெபனானில் வைத்திருக்கும் 20,000 முதல் 40,000 வரையிலான தனது துருப்புக்களை விலக்கிக் கொள்ள வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார். 1976 முதல் லெபனானின் பெரும்பகுதியை சிரிய துருப்புக்கள் ஆக்கிரமித்து வருகின்றன.

ஈராக் எல்லைக்கப்பால் 100,000 அமெரிக்க துருப்புக்கள், மேற்கே இஸ்ரேல் இராணுவம் இதற்கிடையே சிக்கிக் கொண்டுள்ள சிரியா அரசாங்கம் இஸ்ரேலையும் அமெரிக்கா ஆக்கிரமிப்பையும் சரிகட்டிச் செல்ல தீவிரமாக முயன்று வருகிறது. வெளிப்படையாக அதை செய்ய முடியவில்லை. முன்னாள் ஆட்சியான சதாம் ஹூசேனைப் போன்று பாத் கட்சி அரசாங்கமான அஸ்ஸாத் ஆட்சி பாலஸ்தீன மக்களை நடைமுறையில் தொடர்ச்சியாக காட்டிக் கொடுத்திருந்த போதிலும், அவர்களைக் காத்து நிற்பதாக வாய் சொல்லிலாவது ஆதரவு காட்டியாக வேண்டும். மார்ச் தொடக்கத்தில் அரசாங்க வானொலி, "சிரியா தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக நிற்கிறது.... ஆக்கிரமிப்பை, மேலாதிக்கத்தை, தாக்குதலை ஏற்க மறுக்கிறது'', என்று அறிவித்தது. அமெரிக்கா சிரியா மீது தடைவிதிக்கும் நடவடிக்கை ''அமெரிக்க வட்டாரத்து குற்றச் செயல்'' என்றும் குறிப்பிட்டது.

சிரியாவின் பாத் கட்சி ஒரு புறம் அரபு மற்றும் விருப்பம் இல்லாத மற்றும் நம்பிக்கை இல்லாத குர்து மக்களுக்கு இடையில் தப்ப முடியாத சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறது. மற்றொரு பக்கம் அமெரிக்க ஏகாதிபத்தியம் நின்றுகொண்டு, அரபு மண்டலத்தை தான் கைப்பற்றுவதற்கு அரசாங்கம் தடைக்கல்லாக நிற்கிறதென்று கருதுகிறது. சிரியா ஐரோப்பிய ஒன்றியத்துடன் (EU) நெருக்கமான தொடர்புகளை வைத்திருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து 55 சதவீத இறக்குமதிகளை செய்து வருகிறது. Euro Med குழுவில் ஒரு உறுப்பினராக இருக்கிறது. ஆனால் ஐரோப்பிய ஒன்றிய உதவிக்கு கோரிக்கை விடுக்குமானால் அது புறக்கணிக்கப்படலாம். பிரிட்டன், ஜேர்மனி மற்றும் நெதர்லாந்து அமெரிக்காவுடன், திரும்பவும் உறவுகளை அமைத்துக் கொள்ள முயன்று வருகின்றன. இவை அண்மையில், WMD-க்கள் பரவுவதை தடுக்க சிரியா போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, சிரிய/EU வர்த்தக ஒப்பந்தத்தை தடுத்து நிறுத்தின.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved