World Socialist Web Site www.wsws.org


India: BJP responds to unfavorable polls by highlighting its Hindu supremacism

இந்தியா: சாதகமற்ற தேர்தல் கணிப்பிற்குப் பதிலாக இந்து மேலாதிக்க வாதத்தை முன்னிலைப்படுத்தும் பிஜேபி

By Keith Jones
6 May 2004

Back to screen version

இந்தியாவில் ஆளும், தேசிய ஜனநாயக முன்னணியில் மேலாதிக்க பங்காளியான, பாரதீய ஜனதா கட்சி, இந்தியாவில் தற்போது பல கட்டங்களாக நடைபெற்றுவரும் வாக்குப் பதிவுகளில், வாக்குப் பதிவு முடிந்ததும் நடத்தப்படும் கருத்துக் கணிப்புகளில் சாதகமற்ற சூழ்நிலைகளை சந்தித்த பின்னர், தற்போது, தனது இந்து மேலாதிக்க, செயல் திட்டத்தை முன்னிலைப்படுத்தி வருகிறது. முஸ்லீம்களுக்கு எதிராக வன்முறையை தூண்டி விடுவதில் பங்களிப்புச் செய்ததில் இழிபுகழ் பெற்ற குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி மற்றும் மத்திய பிரதேச முதலமைச்சர் உமா பாரதி இருவருக்கும் B.J.P தேர்தல் பிரச்சார இயக்கத்தில், குறிப்பாக உயிர்நாடியான, உத்திரபிரதேசத்தில், அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையே, பிஜேபி காரியாளர்கள் பலரை பெரிய அளவில் வழங்கியுள்ள இந்து தேசியவாத சேவை மற்றும் குடிப்படையின் நிழல் அமைப்பான, ராஷ்டிரிய சுயம் சேவக் சங்க் (RSS), இப்போது, கட்சியின் தேர்தல் இயக்கத்தை தனது நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

அண்மையில், நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பும், வாக்குப் பதிவிற்கு பிந்திய மதிப்பீடுகளும், தேசிய ஜனநாயக முன்னணி (NDA) 545 மக்களவை தொகுதிகளில் பெரும்பான்மையைப் பெறுவது, போதாத அளவுக்கு இருக்கும் என்று தெரிவிக்கின்றன. 273 தொகுதிகளைப்பெற்று, பெரும்பான்மை, இடத்தைப் பிடிக்க தேசிய ஜனநாயக முன்னணி தவறிவிடலாம். தே.ஜ.மு ஒரு டஜன் அல்லது அதற்கு சற்று அதிகமான இடங்கள் பற்றாக் குறையுடன் வருமானால், குறுகிய கால அளவிற்கு, குறைந்தபட்சம் பதவியில் ஒட்டிக் கொள்ள முடியும். அதனுடைய இடங்கள் பற்றிய கணக்கீடு 260க்கும் கீழாகக் குறையுமானால் பெரும்பாலும் தொங்கு பாராளுமன்றம் வரலாம். இந்தியாவின் பாரம்பரிய ஆளும் கட்சியான, காங்கிரஸ் தலைமையிலான எதிர் கூட்டணியான தே.ஜ.மு பெறுகின்ற இடங்களை, மிஞ்சுகின்ற அளவிற்கு வெற்றி பெறாது என்று கருதப்படுவதால் அரசியல் அதிகாரத்தின் அச்சாணி ஜாதி அடிப்படையில், மற்றும் பிராந்திய அடிப்படையில், செயல்படும் கட்சிகள் கையில் போய்விடும். தொங்கு நாடாளுமன்றம் உருவாகும் சந்தர்ப்பத்தில் தீவிரமான அரசியல் பேரங்கள் புதிய ஆளும் சேர்க்கையை உருவாக்குவதற்கு நடைபெறும், அப்போது அந்த அரசாங்கத்தை, பிஜேபி அல்லது காங்கிரஸ், அல்லது அவை இரண்டுமே இல்லாமல் நடத்தினாலும், அதனுடைய வாழ்வு ஆரம்பத்திலிருந்தே, இழுபறி நிலைக்குச் சென்றுவிடும்.

பாக்கிஸ்தானுடன் சமரச முயற்சிகளால் ஏற்பட்ட செல்வாக்கை, காங்கிரசில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் குவிந்ததால் தூண்டப்பட்ட பொருளாதார, முன்னேற்றத்தால், மற்றும் சென்ற ஆண்டு அமோக அறுவடையினால் உருவான சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று நம்பி பிஜேபி தேர்தலை முன் கூட்டியே நடத்த ஏற்பாடு செய்தது.

ஏற்கனவே, தனக்கு பெரு வர்த்தகர்களிடமிருந்து கிடைத்த வலுவான ஆதரவை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக பிஜேபி ஆரம்பத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு, அதாவது, பொருளாதார கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவது மற்றும் தனியார் மயமாக்குதலை -அது இந்து மேலாதிக்கத்தின், செயல்திட்டத்தில் இல்லாதது- தனது தேர்தல் பிரச்சாரத்தின் அச்சாணியாக எடுத்துக் கொண்டது. 2020 வாக்கில் தே.ஜ.மு அரசாங்கத்தின், புதிய தாராளவாத கொள்கைகளாலும், அணு ஆயுதங்கள் உட்பட இராணுவ வலிமையினாலும், பெரிய வல்லரசாக, மாற இருக்கிறதென்று பிஜேபி கூறி வந்தது, இந்தியாவில் அதிகம் சலுகை பெற்ற சமுதாயங்களுக்கு அப்பால் எதிரொலிக்கவில்லை. உண்மையிலேயே பிஜேபி -ன் "இந்தியா ஒளிர்கிறது" என்ற சொல் அலங்காரம், மிகப் பெரும்பாலான இந்திய மக்களது நிலைப்பாடு குறித்து அதன் அலட்சியப் போக்கையே காட்டுவதாக அமைந்தது. இந்தியாவில், தேசிய அடிப்படையில் பாதுகாக்கப்பட்ட பொருளாதாரத்தை சீர்குலைப்பது, மிக பெரும்பாலான இந்திய மக்களுக்கு வறுமையைப் பெருக்குவதாகவும் பொருளாதார பாதுகாப்பற்ற நிலையை உருவாக்குவதாகவும் அமைந்தது.

ஏறத்தாழ மூன்று மாதங்களுக்கு மேலாக, நடைபெற்றுவரும் தேர்தல் பிரச்சார இயக்கத்தில், கருத்துக் கணிப்புகளுக்கும், வாக்குப் பதிவிற்கு பிந்திய மதிப்பீடுகளும், படிப்படியாக பிஜேபிக்கும் அதன் கூட்டணிகளுக்கும் ஆதரவு சீராக வீழ்ச்சியடைந்து வருவதை சுட்டிக்காட்டி இருக்கிறது. இந்தச் சரிவை தடுத்து நிறுத்துவதற்காக பிஜேபி, அதன், இந்துத்துவா அல்லது இந்து மேலாதிக்க செயற்திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கத்தொடங்கியது. பிஜேபி-ன் "முன்னறிதிறன்" அறிக்கையும், தே.ஜ.மு -வின் தேர்தல் அறிக்கையும், அயோத்தி பிரச்சனை என்று கூறப்படுவதற்கு முக்கியத்துவம் தருகிறது. (1990களின் தொடக்கத்தில் அயோத்தியில் இந்து கடவுளான ராமருக்கு கோயில் கட்டுவதற்கான, கிளர்ச்சியை பிஜேபி தலைமை தாங்கி நடத்தியது, அதன் விளைவாக பாபர் மசூதி இடித்து, தரைமட்டமாக்கப்பட்டது. 1947-ல் இந்திய, துணைக்கண்ட பிரிவினைகளுக்கு பின்னர் நடைபெற்ற படுமோசமான வகுப்புக் கலவரமாகும்.) பிஜேபி மற்றும் தே.ஜ.மு கொள்கை ஆவணங்கள், இந்தியர் அல்லாதவர் உயர் பதவிக்கு வருவதை தடுக்க சட்டம் இயற்றவும் உறுதியளித்திருக்கின்றன. இத்தாலியில் பிறந்த கத்தோலிக்கரான, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி என்பதை இதனுடன் இணைத்துப் பார்க்கவும்.

இப்போது பிஜேபி தனது பாக்கிஸ்தானுக்கு எதிரான போர் வெறிக் கூச்சலைக் கைவிட்டு விட்டதால், கலவரம் அடைந்துள்ள இந்து பிற்போக்குவாத பிரிவுகளை தனது அணியில் திரட்டுவதற்கான முயற்சியில் மோடியையும் பாரதியையும் நாடியுள்ளது, மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் இதர வாய்ப்புக் குறைவுகள் மீதான பொது மக்களது அதிருப்தியை, முஸ்லீம்களுக்கும் இதர சிறுபான்மையினருக்கும், எதிராக திருப்பிவிட முடியும், என்ற நம்பிக்கையிலும் பிஜேபி இவ்வாறு செய்திருக்கிறது. 2002 பெப்ரவரி - மார்ச் குஜராத் கலவரங்களை, தூண்டிவிடுவதில் மோடி முக்கிய பங்களிப்புச் செய்தவர், அதன் விளைவாக 2000 முஸ்லீம்கள் மடிந்தனர், மேலும் பல்லாயிரக்கணக்கானோர் வீடிழந்தனர். அயோத்தி கிளர்ச்சியில் முன்னணித் தலைவர்களில் ஒருவர் பாரதி ஆவார். "எங்களது வேட்பாளர்களது வெற்றி வாய்ப்புகளை, மேம்படுத்த நல்ல கூட்டத்தை திரட்ட வேண்டியது அவசியமாகும். இப்படி நடக்க வேண்டுமென்றால், நமது ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை பெருமளவில் திரண்டு வரச் செய்ய வேண்டும். மற்றும் மோடி, அவர்களுக்கு அவர்கள் வசமுள்ள, அனைத்தையும் உற்சாகமூட்ட முடியும்" என்று ஒரு மூத்த பிஜேபி தலைவர் இந்து நாளிதழுக்கு தெரிவித்தார்.

தேர்தல் முடிவில் ஒரு சிறுபான்மை அரசாங்கம், குறிப்பாக தொங்கு நாடாளுமன்றம் உருவாகும் என்ற சாத்தியக் கூறு வர்த்தக வட்டாரங்களில் கவலையை ஏற்படுத்தியது. பம்பாய் பங்குச் சந்தை விலைகள் ஏப்ரல் 27-ல் 3.6 சதவீதம் வீழ்ச்சியடைந்து விட்டது. சென்ற வாரம், நடந்து முடிந்த சுற்று வாக்குப் பதிவிற்குப் பின், வெளியிடப்பட்ட மதிப்பீடுகளின்படி அடுத்த நாடாளுமன்றத்தில் பிஜேபி தலைமையிலான தே.ஜ.மு பெரும்பான்மை பெறத்தவறிவிடும் என்ற தகவலை தொடர்ந்து, கடந்த மூன்றாண்டுகளுக்கு மேல் எப்போதும், நடந்திராத அளவிற்கு, பங்குகள் விலை, கடுமையாக வீழ்ச்சியடைந்தது.

எல்லா கட்சிகளுமே, பிஜேபி-ல் தொடங்கி, சிவ சேனை வரையிலான தீவிர வலதுசாரிகள் வரை, ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட்டுக் கட்சி (மார்க்சிஸ்ட்), ஆகிய அனைத்துக் கட்சிகளுமே பொருளாதார சீர்திருத்தங்களை ஆதரித்திருக்கின்றன என்பதை மிகக் குறிப்பான, முதலாளித்துவ விமர்சகர்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். அவர்களது கவலை என்னவென்றால், பல்வேறுதரப்பட்ட கட்சிகள், பதவிக்காக போட்டி போடும்போது பலவீனமான அரசாங்கம் உருவாகும், அந்த அரசாங்கம் மக்கள், ஏற்காத நடவடிக்கைகளை, மேற்கொள்ள முடியாது என்பதுதான். தொழிலாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பது மீதான கட்டுப்பாடுகளை நீக்குதல், கம்பெனிகள் தொழிலாளர்களுக்கு வேலை இன்றி கதவடைப்பு செய்வதையும் தொழிற்சாலைகளை மூடுவதையும் எளிதாக செயல்படுத்த வகை செய்வதன் மூலம் தேஜமு இந்தியாவின் தொழிலாளர் சட்டங்களை "சீர்திருத்துவதாக" உறுதியளித்துள்ளதை செய்யுமாறு வர்த்தக வட்டாரங்கள், NDA தொடக்கப்பட்டதிலிருந்து பத்தாண்டுகளாக வலியுறுத்தி வருகின்றன.

Indian Express ஏப்ரல் 30-ல் ஒரு தலையங்கத்தில் அறிவித்திருந்ததாவது, "சந்தைகளின் கவலையெல்லாம் பிஜேபி தலைமையிலான கூட்டணிக்குப் பதிலாக காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி பதவிக்கு வந்துவிடும் என்பதல்ல. மாறாக இரண்டு தேசிய கட்சிகளுமே கூட்டணியில் தலைமை வகிக்க முடியாத நிலை ஏற்படும் என்பதுதான். எனவேதான் காங்கிரஸ் கட்சியின் பேச்சாளர் ஜெயராம் ரமேஷ் உறுதியளிக்கின்ற வகையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்கட்சியின், தலைமையிலுள்ள மூன்று முன்னாள் நிதியமைச்சர்களான -பிரணப்முகர்ஜி, மன்மோகன்சிங் மற்றும் ப. சிதம்பரம் ஆகியோர் சீர்திருத்தத்திற்கு ஆதரவானவர்கள் என்று குறிப்பிட்டிருப்பது இன்றைய நிலவரத்திற்கு, ஏற்புடையது அல்ல. தெளிவான, வெற்றி காண்கின்ற அணியில்லாத நிலையில், நடைபெறுகின்ற பேரங்களில் -அந்தக் குதிரைகள் நம்மை மன்னிப்பார்களாக! - விளிம்பு நிலை அரசியல்வாதிகளுக்கு, அவர்களது தகுதிக்கு மிதமிஞ்சிய முக்கியத்துவம் தரம்படும்போது அவர்கள் குறிப்பிட்ட பிரிவுகளில், கொள்கைகளை வேறு திசை வழிகளில் கொண்டு செல்லும்போது வாக்களிக்கும் இதர மக்களைப் பாதிக்காவிட்டாலும் முதலீட்டாளர்களைப் பாதிக்கும்."

ஸ்ராலினிச கட்சிகளை பொறுத்தவரை, திடீரென்று நடவடிக்கையில் இறங்கிவிட்டன. பிஜேபி தலைமையிலான தேஜமு கூட்டணிக்குப் பதிலாக ஒரு மாற்று அரசாங்கத்தை அமைக்கும் முயற்சிகளில் தங்களுக்கு, முக்கிய பங்களிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கின்றனர்.

தேர்தல் பிரச்சாரம் தொடங்குவதற்கு முன்னரே, ஸ்ராலினிச கட்சிகள், தங்களது பிரதான குறிக்கோள், பிஜேபி தலைமையிலான அரசாங்கத்தை தோற்கடிப்பதுதான் என்பதை தெளிவுபடுத்திவிட்டன. பிஜேபி -க்கு எதிரான போராட்டத்தில், காங்கிரஸ் ஒரு "மதச்சார்பற்ற" சகா என்று அக்கட்சிகள் கருதுகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை கணக்கு அனுமதித்தால், காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் பதவிக்கு வருவதற்கு தேவைப்படுகின்ற வாக்குகளை வழங்கப்போவதாக அறிவித்துவிட்டன. அதே நேரத்தில் அந்தக் கட்சிகள் மிக வலுவாக செயல்பட்டு வருகின்ற, மூன்று மாநிலங்களில், (மேற்கு வங்காளம், திரிபுரா மற்றும் கேரளத்தில்) பிரதான தேர்தல் எதிராளியான காங்கிரசிலிருந்து விலகியே நிற்கின்றன. மதச் சார்பற்ற கட்சிகளின் மூன்றாவது அணியை உருவாக்க பாடுபட்டு வருவதாக ஸ்ராலினிஸ்டுகள் அந்த மூன்று மாநிலங்களில் கூறி வருகின்றனர்.

1996-க்கும் 1998-க்கும் இடைப்பட்ட காலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சிபிஐ(எம்) -ஒட்டுப்போட்டு உருவாக்கப்பட்ட ஒரு அரசியல் கூட்டணியான ஐக்கிய முன்னணி புதுதில்லியில் பதவியில் இருந்தது, பதவியில் நீடிக்க காங்கிரசின் வாக்குகளை நம்பி இருந்தது. ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் சிபிஐ(எம்) மந்திரி சபையில் இடம் பெறவில்லை, அதற்காக பின்னர் பல சிபிஐ(எம்) தலைவர்கள் வருந்தியதும் உண்டு. அப்படியிருந்தாலும் அக்கட்சி, அரியணைக்குப் பின்னாலிருந்து இயக்கி வந்தது, ஐக்கிய முன்னணி அரசாங்கத்திற்கு கொள்கைகளையும் அரசியல் விவாத அடிப்படைகளையும் அக்கட்சி வழங்கிக் கொண்டிருந்தது. ஐக்கிய முன்னணியை வலதுசாரி அணிக்கு எதிரான அரண் என்று ஸ்ராலினிஸ்ட்டுகள் கூறினார்கள். ஆனால் ஐக்கிய முன்னணி அரசாங்கம் பெருவர்த்தக அமைப்புகளின் பொருளாதார "சீர்திருத்த" செயல்திட்டத்தை கடைபிடித்து வந்தது. அந்த ஐக்கிய முன்னணியில் இடம் பெற்றிருந்த மாநிலக் கட்சிகளை ஸ்ராலினிஸ்டுகள், மதச்சார்பற்றவர்கள் என்று ஆசீர்வாதங்களை வழங்கினர். 1998 அல்லது 1999 தேர்தல்களுக்குப் பின்னர் அக்கட்சிகள் முகாம்களை மாற்றிக்கொண்டன, பிஜேபி தலைமையிலான தே.ஜ.மு கூட்டணியில் இணைந்துவிட்டன.

மீண்டும் ஸ்ராலினிஸ்டுகள் மூன்றாவது அணியில் தீவிரம் காட்டிவருகின்றனர், அப்படி ஒரு மூன்றாவது அணி அரசாங்கத்தை அமைக்க முடியும் என உரிமை கோருவதற்கு குறைந்த வாய்ப்பே உள்ள நிலையில், அவர்கள் எதிர்பார்க்கக் கூடிய அதன் எதிர்கால உறுப்பினர்களான (முன்னாள் தீண்டத்தகாதவர்களுக்காக குரல் கொடுப்பதாகக் கூறிக்கொள்ளும்) பகுஜன் சமாஜ் கட்சி, (தற்போது உத்திரப் பிரதேசத்தை ஆண்டு கொண்டிருக்கின்ற முன்னாள் சோசலிஸ்டுகளில் மிச்சம் மீதம் இருப்போரைக் கொண்டிருக்கும்) சமாஜ்வாதிக் கட்சி ஆகியன தங்களது கோஷ்டி மோதல்களை விட்டு விடுவார்களா என்பதும் ஒருபுறம் நிச்சயமில்லாதிருக்கிறது.

ஆனால், மூன்றாவது அணியைப் பற்றி ஸ்ராலினிஸ்டுகள் பேசிவருவது காங்கிரசிற்கு, மாற்றை உருவாக்க வேண்டும் என்ற அவர்களது கூற்றுக்களை ஊக்குவிக்கவும், அதே நேரத்தில் காங்கிரஸ் தலைமையில் நடக்கும் அரசாங்கத்தை ஆதரிக்கத் தயாராக இருக்கும் நிலைக்கும் ஊக்குவிப்பாக அமைகிறது. ஏனென்றால், எதிர்காலத்தில் காங்கிரசோடு பேரம் பேசுவதற்கு அதனுடைய கரத்தை, அத்தகைய முயற்சி வலுப்படுத்தும் என்று கருதுகிறது. இந்த வகையில் கட்சிகளுக்கிடையிலான சமரசப் பேச்சு வார்த்தைகளை நடத்தி வரும், சிபிஐ (எம்) பொதுச் செயலாளர், ஹர்கிஷன் சிங் சுர்ஜித் காங்கிரசை இடதுசாரி பக்கம் நெருக்குதல் கொடுத்து கொண்டு வந்துவிட முடியும் என்று குறிப்பிட்டுள்ள கருத்து முக்கியமாக கவனிக்கத்தக்கது. பல முதலாளித்துவ விமர்சகர்கள், அடிப்படைப் பொருளாதாரம் மற்றும் புவிசார் அரசியல் பிரச்சனைகளில், பிஜேபி -க்கும் காங்கிரசிற்கும் ஒரே மாதிரியான அடிப்படை அணுகுமுறைகள்தான் உள்ளன என்பதை உண்மை என ஒப்புக் கொண்டாலும், சுர்ஜித் இந்து-விற்கு பேட்டியளிக்கும் போது, "தனது பழைய பொருளாதார கொள்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது என்ற உணர்வு காங்கிரசிடம் ஏற்பட்டிருக்கின்றது என்பதை தான் உணர்வதாக கூறினார். காங்கிரஸ் மதச்சார்பற்ற கூட்டணியின் ஒரு அங்கமாக ஆகுமானால் இதர கூட்டணிக் கட்சிகளின் கருத்துக்களுக்கும் மதிப்புக் கொடுத்து அவற்றின்படி செயல்பட வேண்டிவரும்..." என்றார்.

பின்னணியில் அரசியல் பேரங்களை உருவாக்குவதில் சிங் பிரபலமானவர். இதைப் பற்றி இந்திய பத்திரிகைகளில் அவரை, நையாண்டி செய்கின்ற வகையில் ஓர் விமர்சனம் வெளிவந்திருக்கிறது. "இந்திய அரசியல் கொதிக்கின்ற உலையாகும். அது சுவையான சாப்பாடல்ல, 88 வயதான தாடிக்கார, மார்க்சிச நிபுணரான தலைமை சமையல்காரர், ஒரு தேறலை உருவாக்க கலவைகளையும் நயந்து பேசுதலையும் போட்டு கலக்குகிறார்."

தொழிலாள வர்க்கத்தின் மிகத் தீவிரமான எதிரி பிஜேபி என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை, ஆனால் காங்கிரஸ் அல்லது பிற முதலாளித்துவக் கட்சிகள் மூலம் அக்கட்சியை எதிர்க்க முடியாது. மாறாக, ஸ்ராலினிஸ்டுகள் பல, தலைமுறைகளாக தொழிலாள வர்க்கத்தை ஏதாவது ஒரு வகையில் முதலாளித்துவ கட்சிக்கு அடிபணியச் செய்துவிட்டார்கள்; அவர்கள் அவ்வாறு ஏகாதிபத்திய எதிர்ப்பு, நில பிரபுத்துவ எதிர்ப்பு அல்லது மதசார்பின்மை, என்ற பெயரால் நடத்தி வந்த, இந்த அணிமாறும் அரசியல், அரசியலில் பிற்போக்கு வளர்வதற்கு வழிவகுத்துக் கொடுத்து விட்டது. இதற்கு முன்னர் எப்போதும் நடந்ததைவிட, உழைக்கும் மக்களின் எந்தவிதமான எதிர்த்தாக்குதலுக்குமான அடித்தளம் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் அணி திரட்டலாகவே கட்டாயம் இருக்கவேண்டும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved