World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Indian election

The BJP's "India Shining" campaign: myth and reality

இந்தியத் தேர்தல்

பிஜேபி-ன் "இந்தியா ஒளிர்கிறது" பிரச்சாரம்: கற்பனையும் உண்மையும்

By Parwini Zora and Daniel Woreck
7 May 2004

Back to screen version

ஆளும் இந்து மேலாதிக்கவாத பாரதீய ஜனதாக் கட்சி (BJP) நடத்தி வருகின்ற நடப்பு தேர்தல் பிரச்சாரத்தின் முக்கியமான உட்கூறு என்னவென்றால், "இந்தியா ஒளிர்கிறது" என்ற விளம்பரமாகும், அது இந்திய பொருளாதாரத்தின் வெற்றிகளை புகழ்ந்து பாராட்டுவதாகவும், மன நிறைவோடு நன்றாக, வாழுகின்ற நடுத்தர வர்க்கத்தினரை முன்னிலைப்படுத்திக் காட்டுவதாகவும் அமைந்திருந்தது.

பெப்ரவரி மாதம் தொடங்கி, பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி (NDA) அரசாங்கம், எல்லா மொழிகளிலும், தொலைக்காட்சி அலைவரிசைகளில் தனது சாதனைகளை, விளம்பரப்படுத்தும், "இந்தியா ஒளிர்கிறது" விளம்பரங்களுக்காக, 20 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு செலவிட்டுள்ளது. செய்தி பத்திரிகைகளிலும் விளம்பரங்கள் வெளியிடப்பட்டன மற்றும் பல வண்ண பளபளப்பான சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டன.

அந்த முன்னிலைப்படுத்தலின் நறுஞ்சுவை, "இதைப் போன்றதொரு சிறப்பாக ஒளிர்கின்ற காலத்தை, நீங்கள் எப்போதும் கண்டதில்லை" என்ற வாசகத்துடன், மஞ்சள் வண்ண சேலை உடுத்திய புன்னகை சிந்தும் பெண்கள், கிரிக்கெட் விளையாடுவதை போன்று ஒரு சுவரொட்டியால் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. வசதி மிக்க இந்தியர்களுக்கும், வறுமையில் வாடும், மிக அடிப்படையான வசதிகள் கூட இல்லாத, இந்தியர்களுக்குமிடையே நிலவுகின்ற தெளிவான அப்பட்டமான இடைவெளியை, பல விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டுவரும், பொருளாதார சீரமைப்பினால், வெளிநாட்டு முதலீடுகள் பெருகி குறிப்பாக, நாட்டின் பெருகிவரும் தகவல் தொழில் நுட்பம் மற்றும் சேவைத் தொழில்களில், பெருமளவிற்கு முதலீடுகள் செய்யப்பட்டதால், பயனடைந்த சமுதாய பிரிவினரின் ஆதரவைப் பெறுவதற்கு பிஜேபி தெளிவாக முயற்சிசெய்து கொண்டிருக்கிறது. சர்வதேச நிறுவனங்கள் தங்களது பரவலான பணிகளை தொலைத்தொடர்பு நிலையங்களில் இருந்து ஆய்வுக் கூடங்கள்வரை, உருவாக்கி இருப்பது, இந்திய மத்தியதர வர்க்கத்தில் வசதியாக வாழ்கின்ற ஒரு புதிய அடுக்கை உருவாக்கியிருக்கிறது.

மிக முக்கியமாக, "இந்தியா-ஒளிர்கிறது" பிரச்சாரம் பெரு வர்த்தக நிறுவனங்களுக்கு உதவுவதாக அமைந்தது. நடப்பு உயர்ந்த வளர்ச்சி மட்டங்களையும் பங்குச் சந்தை பூரிப்பையும் சுட்டிக்காட்டி, பிஜேபி தலைவர்கள் பொருளாதார வெற்றிகளுக்கு தாங்கள்தான் பொறுப்பு என்று கூறிக்கொள்வது மட்டுமல்லாமல், எந்தவிதமான தொய்வும் இல்லாமல் பகிரங்க சந்தை பொருளாதார சீர்திருத்த திட்டம் தொடர்ந்து கடைபிடிக்கப்படும் என கம்பெனி தலைவர்களுக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் உறுதியளிக்கின்றனர்.

குறிப்பாக, காங்கிரஸ் மற்றும் ஸ்ராலினிசக் கட்சிகளான, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (CPI), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPI (M)) உள்ளடங்கலான எதிர்க்கட்சிகளின் பதில், அமுக்கி வாசிப்பதாகவே அமைந்திருக்கிறது. "இந்தியா ஒளிர்கிறது" பிரச்சாரத்திற்காக அரசாங்க நிதியாதாரங்களில் பிஜேபி வெட்கக்கேடான முறையில் தேர்தல் நோக்கங்களுக்காக பயன்படுத்தியது என்று அவர்கள் கண்டித்தனர். நூற்றுக்கணக்கான மில்லியன் இந்திய மக்கள் வறுமையில், வாடுவதை அவர்களும் கூட வெளிச்சம்போட்டுக் காட்டினர் மற்றும் நிலைமையை சீரமைக்க, வெற்று உறுதிமொழிகளை செய்தனர்.

ஆனால், இந்தக் கட்சிகள் எதுவும் மாற்றுக் கொள்கைகளை முன்வைக்கவில்லை. 1990 களின் தொடக்கத்தில், இந்திய பொருளாதாரத்தை வெளிநாட்டு முதலீடுகளுக்கு திறந்துவிட்டதற்கு காங்கிரஸ் கட்சிதான் பொறுப்பு, அக்கட்சி தனது, தேர்தல் பிரச்சாரத்தில், அந்த அம்சத்தை விளக்கிக் காட்டியது. சிபிஐ(எம்) மேற்கு வங்காளத்திலும், கேரளத்திலும் இடதுசாரி கூட்டணியின் ஓர் அங்கமாக செயல்பட்டு வருவதால், அந்த மாநிலங்களுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக அதே போன்ற கொள்கைகளை பின்பற்றி வருகிறது.

தங்களது கண்டனங்கள் அனைத்திலும், இந்தக் கட்சிகள் தங்களது கருத்துக்களில் "இந்தியா ஒளிர்கிறது" பிரச்சாரத்திற்கு அடிப்படையாக அமைந்திருக்கின்ற மைய கற்பனைகளை ஏற்றுக்கொள்பவைதான்: சந்தை சீர்திருத்தம் மூலம் பொருளாதார வளர்ச்சிப் பாதை காண்பது; மக்களில் வளர்ந்து வரும் பிரிவினருக்கு இந்த வளர்ச்சி, வேலை வாய்ப்புக்களையும், சிறந்த வாழ்வையும் தரும்; மற்றும் இறுதியாக, பொருளாதாரப் பயன்கள் மக்களில் பரம ஏழை பிரிவினருக்கும் சென்று சேரும் என்பதுதான். உண்மையிலேயே, பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு பதிலாக 10 ஆண்டுகளுக்கு மேலாக, அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் மேற்கொண்ட பொருளாதார சீரமைப்பினால் ஏழை இந்தியர்களுக்கும், பணக்காரர்களுக்குமிடையே சமுதாய, ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துள்ளன.

மலிவான கூலி உழைப்புக்கான சர்வதேச கம்பெனிகளின் கோரிக்கையால் இந்தியர்களில் ஒரு அடுக்கு பயனடைந்திருக்கிறது என்பது உண்மைதான். உலகிலேயே மூன்றாவது பெரிய கல்விகற்ற, தொழிலாளர் குவியல் இந்தியாவில் உள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில், படித்தவர்களுக்கு தரப்படும் ஊதியத்தில், பத்தில் ஒரு பகுதி ஊதியத்தில் இந்தியாவில், படித்தவர்களை பணியில் அமர்த்திவிட முடியும். இந்திய நிலவரத்தோடு ஒப்பிடும்போது, வெளிநாட்டுக் கம்பெனிகளில் பணியாற்றும் இளம் ஊழியர்களுக்கு இந்தியாவின் பொதுத்துறைகளில் பணியாற்றும் அதிகாரியின் சம்பளத்தைவிடவும் ஐந்து மடங்கு அதிகமாக ஊதியம் வழங்கப்படுகிற சூழ்நிலையில், பொருளாதாரத்தின் பலாபலன்கள் முக்கியத்துவம் வயாந்தவையாக இருக்கின்றன.

பெங்களூரிலுள்ள நார்விக் யூனியன் கால் சென்டரில், வாடிக்கையாளர் ஆலோசகராக பணியாற்றி வருபவர், 22 வயதான, செல்வி. சம்பத், அவர் BBC -க்கு மிக உற்சாகமாக அளித்துள்ள பேட்டியில், "ஊதியம் மிக அற்புதமானது, கற்பனைக்கு எட்டாதது... இந்தியாவில் கால் சென்டர்கள் மிக வேகமாக, வளர்ந்து வருகிற தொழில்களில் ஒன்று. நீங்கள் சாதனை புரிந்தால், ஏராளமாக, சம்பாதிக்க முடியும்" என்று கூறியிருக்கிறார். அந்தப் பெண்ணின் ஊதியம், ஒரு பிரிட்டன் ஊழியர் அதே வேலையை செய்வதற்கு வழங்கப்படும் ஊதியத்தில் ஆறில் ஒரு பகுதிதான், ஒரு இந்திய ஆசிரியருக்கு வழங்கப்படும் ஊதியத்தை விட இரண்டு மடங்காகும், முழு தகுதி பெற்ற ஒரு இந்திய மருத்துவருக்கு இணையான ஊதியம் ஆகும்.

ஆனால் அத்தகைய பணிகளைப் பெறுகின்ற இந்தியர்கள் மிகக் குறைந்த அளவினர்தான் - தகவல், தொழில்நுட்பம் தொடர்புடைய தொழில் முழுவதிலும் பல்லாயிரக் கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். இந்தப் பணிகளை பெறுவதற்கான போட்டி மிகக் கடுமையாக உள்ளது. பணிப்பழு, மிகக் கடுமையானது, மன அழுத்தத்தை தரக் கூடியது. இத்தகைய கால் சென்டர்களில் ஆண்டு மொத்த பணிகள் 50 சதவீதம் வரை உயர்வாக உள்ளன. மேலும் இந்த புதிய தொழில்களால், இந்திய நடுத்தர வர்க்கத்தின் ஒரு பிரிவு இலாபம் பெற்றாலும் மற்றவர்கள் பொதுத்துறைத் தொழில்களில் கடுமையான ஆட்குறைப்பினாலும், தொழிற்சாலைகளில் சில பிரிவுகளை மூடுவதாலும் வேலையிழப்பையும், அரசு சேவைகளையும் தொழிற்சாலைகளையும் தனியார் மயமாக்குவதால் வேலையிழப்பையும் சந்திக்கிறார்கள்.

சமுதாயச் சீரழிவு

தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப் பகுதிகளில் வாழ்கின்ற மிகப் பெரும்பாலான மக்கள் வாழ்வில் உருவாகியுள்ள சமுதாய தாக்கம் மிகக் கடுமையானது. மார்ச் மாதம் நியூயோர்க் டைம்ஸ் குறிப்பிட்டிருந்தது: "இந்தியாவின் ஒரு பில்லியனுக்கு மேற்பட்ட மக்களில் மிகப் பெரும்பாலோர், இன்னமும் கிராமங்களில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு, அவுட் சோர்சிங் பற்றி கேள்விப்பட்டதும் இல்லை அதனால் பயனடையவும் இல்லை. இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் அமெரிக்காவை விட மிக அதிகமாக இருக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளில் இது மிக அதிகமாகும். அதிகாரபூர்வமாக, வேலையில்லாத் திண்டாட்டம் 7 சதவீதம் என்று மதிப்பிடப்பட்டிருந்தாலும், 40 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் வேலை தேடிக்கொண்டிருக்கின்றனர் என்பது சென்ற ஆண்டு நிலவரம் ஆகும். உண்மையான, வேலையில்லாத் திண்டாட்ட விகிதம் மூன்று மடங்கு அதிகம் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்."

உலக அளவில் போட்டி போட்டு தாக்குபிடிக்க முடியாத தொழில்களில் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்திருக்கின்றனர். மேலும், நாட்டின் தொழிலாளர் சட்டங்களில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றங்களால் தொழிலாளர்களை வேலையில் இருந்து நீக்குவது தொழில் அதிபர்களுக்கு எளிதாக ஆகிவிட்டது மற்றும் தேசிய முன்னணி அரசாங்கம் இதை மேலும் எளிதாக்க முயன்று வருகிறது. இதனுடைய விளைவு, இந்தியாவின் பாரம்பரிய தொழில் மையங்களில் அழிவுகரமாக இருக்கிறது.

மார்ச்-12 ஃபிரண்ட் லைன் இதழில், "இந்தியா ஒளிர்கிறது" என்ற பாசாங்கை அம்பலப்படுத்துகின்ற வகையில் அதன் அட்டைப்பட விளக்க பிரதான கட்டுரையை ஒதுக்கப்பட்டிருந்தது. பொருளாதார சீரமைப்பினால், பம்பாயில் அல்லது இப்போது மும்பை என்று அதிகாரபூர்வமாக அழைக்கப்படும் பகுதியில் ஏற்பட்டுள்ள பொருளாதார தாக்கத்தை அந்தக் கட்டுரை எடுத்துரைத்தது. அந்த நகரத்தில் ஜவுளி ஆலைகள், வேதியியல், பொறியியல் மற்றும் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மிகப் பரபரப்போடு இயங்கி வந்தன. ஆனால்," ''புதிய பொருளாதாரத்தால்' பாதிக்கப்பட்டவர்கள்" என்ற தலைப்பில் அந்தக் கட்டுரை விளக்கியிருப்பதாவது:

"கடந்த பத்து ஆண்டுகளில், தொழில் துறை வளர்ச்சிப் போக்கு உற்பத்தித்துறையிலிருந்து சேவைத் தொழிலுக்கு மாற்றப்பட்டுவிட்டது, அதன் மூலம் மில்லியன் கணக்கானோர் வேலையிழந்தனர். மும்பையில் ஜவுளி ஆலைத் தொழிலாளர் படுமோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 1981-ல் ஜவுளி ஆலைகளில், 250,000 தொழிலாளர்கள் பணியாற்றிய பலமான உழைக்கும் பகுதியைக் கொண்டிருந்தது, தற்போது 20,000- ஆக குறைந்து விட்டது. நகரப் பொருளாதாரத்தில் முதுகெலும்பாக விளங்கிய ஜவுளி ஆலைகள், குடியேறும் பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாகவும் விளங்கியது. இன்றைய தினம் மிகப் பெரும்பாலான ஜவுளி ஆலைகள், ஊழியர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய பாக்கித் தொகைகள் தரப்படாமலே மூடப்பட்டுவிட்டன."

வேலை நிலைமைகளும் திடீரென்று மாறிவிட்டன. "1960-களின் தொடக்கத்தில், மும்பையில் 51சதவீதப் பணிகள் ஒழுங்கமைக்கப்பட்ட உற்பத்தித் துறைகளில் கிடைத்தன. அந்த ஊழியர்களுக்கு நிரந்தரப் பணி, சட்டப்படி விடுப்புக்கள் மற்றும் வருங்கால வைப்பு நிதி போன்ற உறுதிப்பாடுகள் இருந்தன. இன்றைய தினம் மும்பையில் சுமார் 67சதவீதப் பணிகள் ஒப்பந்த அடிப்படையில் நடைபெறுகின்றன."

இந்திய மக்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரு பகுதியினர் வாழுகின்ற கிராமப் பகுதிகள் சீரழிந்து விட்டன. பொருளாதார "சீர்திருத்தங்களால்", பாசன, உரம், மின்சாரம் மற்றும் இதர வேளாண்மை இடு பொருட்களுக்கு வழங்கப்பட்டு வந்த அரசாங்க மானியங்கள் மற்றும் உதவித் தொகைகள் கடுமையாக வெட்டப்பட்டுவிட்டன. பருவமழை தவறி விளைச்சல் வீழ்ந்து விட்டதால், விவசாயப் பொருட்களுக்கு மிகக் குறைந்த விலை தரப்படுவதால், தங்களது வாழ்க்கையில் ஏற்பட்ட நெருக்கடிகளில் சமாளிக்க வழி தெரியாமல் கடுமையான கடன் சுமையினால் பாதிக்கப்பட்ட கிராமப் பகுதி விவசாயிகள் பல இடங்களில் தற்கொலை செய்து கொண்டனர்.

அடிப்படை உணவுப் பொருட்களான உணவு தானியங்கள் மற்றும் காய்கறிகள், ஆகியவற்றில் அரசாங்க ஏகபோக கொள்முதல் நடவடிக்கை கைவிடப்பட்டு விட்டதால், விலைவாசிகள் உயர்ந்து வசதி படைத்த சில விசாயிகளுக்கே லாபம் கிடைத்தது. ஆனால் நுகர்வோரை அது கடுமையாக பாதித்தது. மிகப் பெரும்பாலான விவசாயிகளுக்கு வாய்ப்புக்கள் அருகிவிட்டன. அரசாங்கத்திற்கு சொந்தமான வங்கிகள் கடன் வழங்கும் நடைமுறைகளை கடுமையாக்கி விட்டதால், கிராமப்புற விவசாயிகள் உயர்ந்த வட்டி விகிதங்களில் கடன் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது.

கிராமப்புற ஏழைகளுக்கு அன்றாட வாழ்வு நடத்துவதே பெரும்பாடாகி விட்டது. பசியும் பட்டினியும் பரவலாகி விட்டது. இந்த ஆண்டு பருவ மழை உரிய நேரத்தில் வந்தாலும் - அதுதான் பொருளாதார வளர்ச்சி விகிதம் அதிகமானதற்கு காரணம் - பல பகுதிகளில் நாட்டில் அண்மை ஆண்டுகளில் ஏற்பட்ட வறட்சியால் கடும்பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஃபிரண்ட்லைன் பேராசிரியை உஸ்தா பட்நாயக் ஐ மேற்கோள் காட்டியுள்ளது. அவர் தனது ஆய்வின் முடிவுரையில், "ஒரு சராசரி குடும்பம் ஐந்தாண்டுகளுக்கு முன்னர் இருந்ததை விட இன்றைய தினம் ஆண்டிற்கு 100-கிலோ கிராம் குறைவாக உணவு தானியங்களை புசித்து வருகிறது. இது, இந்திய வரலாற்றில் கடந்த நூறு ஆண்டுகளில் எப்போதும் நடந்திராத அளவிற்கு மகத்தான வீழ்ச்சியாகும் என்று கூறியிருக்கிறார். பேராசிரியை பட்நாயக் தந்துள்ள தகவலின்படி, 2002-03 ஆண்டில், இந்தியாவில் நபர்வாரியாக கிடைக்கும் உணவு - 1943 வங்காள பஞ்சத்தில் 1.5 முதல் 3-மில்லியன் மக்கள் மடிந்ததாக மதிப்பிடப்பட்ட காலத்தில் கிடைத்ததை விட, மிகக் குறைவாகவே இருப்பதாக விளக்கியிருக்கிறார்.

உலகிலேயே மிக அதிகமான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் இந்தியாவில் உள்ளனர். பட்டினி கிடப்போரில், உலகில் பாதிப்பேர் இந்தியர்கள். 15 வயது முதல் 49 வயது வரையிலான கருவுற்ற 10 பெண்களில் 9-பேர், ஊட்டச்சத்துக் குறைவினாலும், இரத்த சோகையினாலும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 5 வயதுக்கு குறைந்த குழந்தைகளில் பாதிப்பேர் மிதமான அல்லது கடுமையான ஊட்டச்சத்துக் குறைவு அல்லது வளர்ச்சி குறைவினால் பாதிக்கப்பட்டவர்கள்.

இந்தியப் பொருளாதாரம் பூரிப்பு அடைந்து வருகின்ற காலத்திலேயே ஐ.நா மனிதவள மேம்பாட்டு குறியீட்டு எண்ணில் இந்தியா 124-வது வரிசையிலிருந்து 127-வது வரிசைக்கு தாவி விட்டது. அத்தியாவசிய சேவைகளான பொது சுகாதாரம், கல்வி, மற்றும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளான தூய்மையான குடிநீர், சாலைகள் அமைப்பு மின்சாரம் ஆகியவற்றிற்கான அரசு செலவீனங்கள் வெட்டப்பட்டுவிட்டதால், ஏற்பட்ட பாதிப்பு இது. பொது சுகாதாரத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP), வீதக் கணக்கில் 1991-92-ல் 1.4 சதவீதத்திலிருந்து 2001-02-ல் 0.9 சதவீதமாக குறைந்து விட்டது. இதனால், குடும்பங்கள் பெருமளவில், தனியார் மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டதால், கிராமப்புற குடும்பக் கடன் அளவு மிகவேகமாக வளர்ந்து கொண்டிருக்கின்ற இரண்டாவது பெரிய செலவீனமாக சுகாதாரம் அமைந்துவிட்டது.

வாட்டும் வறுமை, நிரந்தர வேலைவாய்ப்பின்மை, அல்லது சரியான வேலை கிடைக்காத நிலை ஆகியவற்றின் காரணமாக, மில்லியன் கணக்கான மக்கள் வேலை தேடி, நகரப் பகுதிகளுக்கு, இடம் பெயர்ந்து கொண்டிருக்கின்றனர். இதன் விளைவாக 30 மில்லியன் மக்கள் மிகக் கடுமையான, நெருக்கடி மிக்க பெரிய நகரங்களை சுற்றியுள்ள, குடிசைப் பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்.

பொருளாதார பலவீனம்

"இந்தியா ஒளிர்கிறது" என்பது வறுமையில் வாடுகின்ற மக்களை நோக்கி நடத்தப்பட்டதல்ல. அதற்கெல்லாம் மேலாக, வெளிநாட்டு முதலீடுகள் இந்தியாவிற்குள் பெருகி வருவதாலும், முக்கியமான சேவைகளில், இந்தியா உலகளவில் கேந்திர அடிப்படையாக மாறும் என்ற கண்ணோட்டத்தாலும், ஆளும் வட்டாரங்களில் தற்போது ஏற்பட்டுள்ள, நம்பிக்கை அம்சத்தின் வெளிப்பாடுதான் இந்த பிரச்சாரம். சென்ற ஆண்டு வளர்ச்சி விகிதம் 7 சதவீதம். இந்த ஆண்டு இது 8 சதவீதமாகும் என்று கணிப்பிடப்பட்டிருக்கிறது. சீனாவிற்கு அடுத்து இதுதான், மிகப்பெரிய வளர்ச்சி விகிதமாகும்.

மும்பை பார்க்லேஸ் வங்கியைச் சேர்ந்த அமித் பன்சால், நிதி வட்டாரங்களில் நிலவுகின்ற உணர்வுகளை எடுத்துரைத்தார். "தேர்தலைச் சுற்றியுள்ள, நிச்சயமற்ற நிலை முடிவிற்கு வந்தவுடன், முதலீடுகளில், அதிக மனநிறைவு ஏற்படும், மே மாதம் மிகப் பெருமளவிற்கு வெளிநாட்டு, முதலீடுகளும், வங்கிகளுக்கு வரத்தும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக" அவர் குறிப்பிட்டார்.

ஏப்ரல் 23 வாக்கில், இந்த ஆண்டு இந்தியப் பங்குகளில் 4.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள், இந்தியப் பங்குகளில் வந்து குவிந்தன. சென்ற ஆண்டு முழுவதும் முதலீடுகளில் குவிந்த அமெரிக்க, டாலர்களின் அளவில் இது ஏறத்தாழ மூன்றில் இரண்டு பங்காகும். Bloomberg.com மதிப்பீட்டின்படி, அமெரிக்க டாலருக்கு எதிராக மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்ற உலகின் தலைசிறந்த மூன்றாவது நாணயம் இந்தியாவின் ரூபாய் நாணயமாகும் மற்றும் சீனாவிற்கு அடுத்து இந்தியா மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிற பொருளாதாரமாகும்.

இந்த விமர்சனங்கள், இந்திய ஆளும் தட்டு குறிப்பிட்ட சாதனைகள் மூலம் வெறியூட்டப்பட்ட நிலையில் இருப்பதையே எடுத்துக் காட்டுகின்றது. உலக மக்கள் தொகையில் 6-ல் 1 பகுதியினர் இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். சர்வதேச பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்களிப்பு 2 சதவீதம் மட்டுமே ஆகும், உலக வர்த்தகத்தில் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே, இந்தியா பங்களிப்பு செய்கிறது. தகவல் தொழில் நுட்பத் துறையில் கூட இந்தியா மிகச் சிறிய பங்களிப்பையே செய்துவருகிறது. தொழில் நுட்பம் மற்றும் சந்தைகளுக்கு ஐரோப்பிய நாடுகளையும், அமெரிக்காவையும்தான் நம்பியிருக்கின்றது. இந்திய பொருளாதாரத்தின் எதிர்காலம், இந்த பெரிய பொருளாதாரங்களின் நிச்சயமற்ற எதிர்காலத்தோடு முடிச்சு போடப்பட்டு வருவது பெருமளவில் அதிகரித்து வருகின்றது.

நடப்பு புள்ளி விபரங்கள், இந்திய பொருளாதார நீர்க்குமிழியின் பலவீனமான அம்சத்தை எடுத்துக் காட்டுகின்றன. 1990-களின் கடைசியில் ஏற்பட்ட ஆசிய பொருளாதார நெருக்கடியை போன்றதொரு நிலை இப்போது உருவாகியுள்ளது. மிக உயர்ந்த அளவிற்கு லாபம் தருகின்ற தகவல் தொழில் நுட்பம் மற்றும் அதனோடு தொடர்புடைய தொழில் துறைகளில் முதலீடுகள் குவிந்து வருகின்றன. இதனால் இந்திய பங்கு சந்தைகளில் ஊக பேரங்கள் நடைபெற்று வருகின்றன, நாட்டின் இதர பொருளாதாரத் துறைகள் தேங்கி கிடக்கின்றன. தொழில் கட்டமைப்பு வசதிகள் மோசமாக இருப்பது, கம்பெனி சட்டங்கள் பொதுமான அளவிற்கு இல்லாதநிலை, மற்றும் சர்வதேச அளவிலான கம்பெனிகள் இந்தியாவில் சகித்து கொள்ளப்பட முடியாத "சிகப்பு நாடா" நிர்வாக முறை - தொழிலாளர் சட்டங்கள், காப்பு வரி விகிதங்கள், அரசாங்க நெறி முறைகள், மற்றும், அதிகாரத்துவ ஊழல் ஆகியவற்றால் வெளிநாட்டு முதலீடுகள் தடைபடுகின்றன.

முதலாளித்துவ சந்தையின் தர்க்கங்கள் தவிர்க்க முடியாதவை. உலகம் முழுவதிலும் உள்ள அரசாங்கங்கள் போல், 1980-களிலும், 1990-களிலும் சர்வதேச அளவில் உருவான மிகப் பெரிய உற்பத்தி பெருக்கத்தால் புதுதில்லியும், தனது முந்தைய தேசிய பொருளாதார ஒழுங்கு முறைகளைத் தளர்த்தி வெளிநாட்டு முதலீடுகளுக்கு பாதை திறந்துவிட நிர்பந்திக்கப்பட்டு விட்டது. "சர்வதேச அளவில் போட்டி மிக்கதாக" வும், தொடர்ந்து வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவும், தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும், புதிய அரசாங்கம் பொருளாதார சீரமைப்பை முடுக்கி விட நிர்பந்திக்கப்படும், அதன் மூலம் மக்களது சமுதாய நிலைப்பாடு மேலும் பாதிக்கப்படும்.

"இந்தியா ஒளிர்கிறது" என்ற பல வண்ண விளம்பர பிரச்சாரத்தால், ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும் இடையே ஆழமாகி வருகின்ற சமுதாய ஏற்றத்தாழ்வு வெடித்துச் சிதறும் அரசியல் தாக்கங்களைக் கொண்டது என்ற உண்மையை மறைத்துவிட முடியாது. இதுவரை முதலாளித்துவ வர்க்கம் வகுப்பு வாதத்தை மக்களை பிளவுபடுத்துவதற்காக குறிப்பாக பிஜேபியால் வளர்த்து விடப்பட்ட வகுப்பு வாதத்தில் தங்கியிருந்தது மற்றும் சிபிஐ மற்றும் சிபிஐ(எம்) போன்ற "இடது சாரி" கட்சிகள் பலவற்றின் துரோகத்தை பயன்படுத்திக் கொண்டது. ஆளும் வர்க்கத்தின் ஏதாவது ஒரு பிரிவின் நலன்களுக்காக, உழைக்கும் வர்க்கங்களின் நலன்களை இதுபோன்ற இடதுசாரி கட்சிகள் தாரை வார்த்து வந்தன. இப்போது தேவைப்படுவது என்னவென்றால், தனது சொந்த வரலாற்று நலன்களுக்காக, துணைக் கண்டம் முழுவதிலும் மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாளர்களோடு ஐக்கியப்படுவதில், தனது சொந்த வரலாற்று நலன்களுக்காக போராடுவதற்கு தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சோசலிசக் கட்சியைக் கட்டுவதாகும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved