World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Britain: Blair and Hoon plead ignorance of human rights abuses in Iraq

பிரிட்டன்: பிளேயரும் ஹூனும் ஈராக்கில் மனித உரிமைகள் மீறல் தெரியாதென்று மன்றாடுகிறார்கள்

By Julie Hyland
12 May 2004

Back to screen version

பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஊழலும் ஆணவப்போக்கும் மே 10- திங்களன்று நாடாளுமன்றத்தில் முழுமையாக வெளிந்தது. ஈராக் கைதிகளை பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்கப்படைகள் முறைகேடாக நடத்துவதுபற்றிய குற்றச்சாட்டுக்களை புறக்கணித்துவிட்டதாக கூறப்பட்ட புகார்களை பாதுகாப்புத்துறை அமைச்சர் Geoffrey Hoon மறுக்க முயன்றார், ''மிக அண்மைக்காலம் வரை'' தான் அந்த அறிக்கையை படிக்கவில்லை என்று குறிப்பிட்டார்.

உதவியற்ற ஈராக் கைதிகளை அமெரிக்க இராணுவத்தினர் மகிழ்வு பொங்க இழிவுபடுத்துவது மற்றும் சித்திரவதை செய்வது, தொடர்பான படுபயங்கர நிழற்படங்கள் டஜன் கணக்கில் பிரசுரிக்கப்பட்டு வந்ததைத் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மேலாக அரசாங்கம் பதுங்கிக்கிடந்தது.

அமெரிக்க இராணுவத்தில் இடம்பெற்றுள்ள சில கட்டுப்பாடற்ற முரட்டு சக்திகளின் செயல்தான் அந்தநிழற்படங்கள் என்று சித்தரிப்பதற்கு எல்லாவகையான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டதுடன் பிரிட்டிஷ் படைகள் எந்தக்காலத்திலும் அந்த அளவிற்கு தரம் தாழ்ந்துவிடமாட்டார்கள் என்றும் கூறப்பட்டது.

அந்த கூற்றுக்களை பொய்யாக்குகின்ற வகையில் டெய்லி மிரர் பிரிட்டிஷ் படையினர், ஈராக் கைதிகளை முறைகேடாக நடத்துகின்றதாகக் காட்டும் நிழற்படங்களை பிரசுரித்தது.

இந்த நிழற்படங்கள் பாதுகாப்புத்துறை துணை அமைச்சர் Adam Ingram சென்றவாரம் நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்திவிட்டது. கைதிகள் முறைகேடாக நடத்தப்பட்டது குறித்து தனக்கு எந்த அறிக்கையும் கிடைக்கவில்லை என்று அமைச்சர் குறிப்பிட்டார். அதற்கு சர்வதேச செஞ்சிலுவை சங்க குழு (ICRC) மறுப்புவெளியிட்டது. இந்த ஆண்டு ஆரம்பத்திலேயே அரசிற்கு அறிக்கை அனுப்பியதாகவும், அதில் எப்படி கூட்டணிப்படைகள் ஈராக்கில் ஜெனீவா ஒப்பந்தத்தை மீறி செயல்படுகின்றன என்பதை விரிவாக விளக்கியிருந்ததாகவும், கூட்டணிப்படை தலைவர்களுடன் பலமுறை கூட்டங்கள் நடத்தி கூட்டணிப்படைகளின் பொறுப்பிலுள்ள கைதிகள் முறைகேடாக நடத்தப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென்று கேட்டுக்கொண்டதாக ICRC தனது மறுப்பு அறிக்கையில் தெரிவித்தது.

அந்த இரகசிய அறிக்கையின் பெரும்பகுதி இப்போது பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டுவிட்டது. அவை பெரும்பாலும் அமெரிக்கப்படைகளின் முறைகேடுகள் பற்றியவையாக இருந்தாலும் பிரிட்டனின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகள் தொடர்பான குறிப்பிட்ட கண்டனங்களும் இடம்பெற்றிருந்தன. இதில் செப்டம்பர் 13-அன்று பிரிட்டிஷ் படைகள் பாஸ்ரா -வில் கைது செய்த ஒன்பதுபேர் "முழங்கால் இட்டு தொழுகையில் செய்வதைப்போல் கரங்களையும், முகத்தையும் தரையில்படுமாறு வைக்கப்பட்டனர். தங்களது தலையை உயர்த்துகின்ற கைதிகளின் கழுத்தின் பின்பக்கம் பிரிட்டிஷ் போர்வீரர்களின் உதைத்தார்கள்" என்ற குறிப்பு இடம்பெற்றிருந்தது.

அதற்குப்பின்னர் அவர்கள் கூட்டணித் துருப்புக்களால் அவர்கள் கடுமையாக தாக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கை தெரிவித்தது.

''கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் தான் முறைகேடாக நடத்தப்பட்டதைத் தொடர்ந்து இறந்துவிட்டார்...... அவர் இறப்பதற்கு முன் அவருடன் கைது செய்யப்பட்ட மற்றவர்கள் அவர் வேதனையில் கூக்குரல் இடுவதையும், உதவி கோருவதையும் கேட்டார்கள்''

கைது செய்யப்பட்டவர்களில் இரண்டுபேர் "கடுமையான காயங்களுடன்" மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Umm Qasr முகாம் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் படைகளால் கூட்டாக நடத்தப்படுவதாகும், அதில் பயன்படுத்தப்படுகிற விசாரணை முறைகளை அந்த அறிக்கை கண்டித்திருக்கிறது. அந்த முறைகளில் தலைக்கும் கழுத்துக்குமான முக்காடும் கைவிலங்குகளும் அடங்கும்.

சர்வதேச பொதுமன்னிப்பு சபை சென்ற மே மாதம் கைதிகள் சித்திரவதை செய்யப்படுவதாக அராசங்கத்தை எச்சரித்ததாக தெரிவித்திருக்கிறது.

சென்ற ஆண்டு பாதுகாப்பு அமைச்சகத்துக்கு அந்த அமைப்பு அனுப்பிய ஒரு கடிதத்தில், பிரிட்டிஷ் துருப்புக்களில் ஒரு ஈராக் கைதி இறந்தது பற்றி விவரங்களை தெரிவித்திருந்தது. அந்த விவகாரம் தொடர்பாக ஜூனில் சர்வதேச பொதுமன்னிப்பு சபை பிரதிநிதி பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அதிகாரிகளை சந்தித்தார். அத்துடன் ஜூலை மாதம் கைதிகள் முறைகேடாக நடத்தப்படும் விவரங்கள் அடங்கிய மற்றொரு குறிப்பை அனுப்பினார் மற்றும் ஹூன்-க்கு அக்டோபரில் ஒரு கடிதத்தையும் அனுப்பினார்.

அந்த மாதம் அரசாங்கம் அனுப்பிய பதிலில் அந்தக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதாக உறுதியளித்திருந்தது. ஆனால் இந்த "இரகசிய ஆய்வு" பாதுகாப்புப்படைகளின் ஓர் அங்கமான ரோயல் இராணுவ போலீசாரால் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.

அபு கிரைப் சிறைச்சாலையில் நடைபெற்ற சித்திரவதைகள் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள "நினைவு படங்கள்" என்று அழைக்கப்படும் நிழற்படங்களைத் தொடர்ந்து, இத்தகைய தடம் புரண்ட சித்திரவதை நடைமுறைகள் பற்றி பிரிட்டனுக்கு எதுவும் தெரியாது என்ற கூற்றை மேலும் சீர்குலைக்கின்ற வகையில் அப்சர்வர் செய்தி பத்திரிகை தகவல்களை வெளியிட்டிருக்கிறது.

சித்திரவதை பற்றி முதல் தகவல் அறிக்கைகள் அம்பலத்திற்கு வந்த நேரத்தில் பிரிட்டிஷ் இராணுவ புலனாய்வு அதிகாரிகள் அந்தச்சிறைச்சாலையில் இருந்தனர். இந்த ஆண்டு ஜனவரிக்கும் ஏப்ரலுக்கும் இடைப்பட்ட காலத்தில் அந்தச் சிறைசாலையில் மூன்று இராணுவ அலுவலர்கள் இருந்தனர் என்பதை பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியிருப்பதாக அந்த செய்திப்பத்திரிகை தெரிவித்தது. மேலும் புலனாய்வு சேவையான M16 அந்த சிறைசாலைக்கு முறையாக சென்று வந்ததாகவும் தெரிவித்தது.

''இந்த தகவல்கள் வெளிவந்திருப்பது அபு கிரைப் சிறைச்சாலையில் கூட்டணிப் படைகள், கைதிகள் மீது நடத்திய முறைகேடுகள் தொடர்பான சர்வதேச மோசடியில் நடுநாயகமாக பிரிட்டிஷ் அரசாங்கத்தையும் இழுத்துச் செல்கின்ற அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது'' என்று அந்தப் பத்திரிகை கூறியது.

இந்த சூழ்நிலையில் தான் ஹூன் இறுதியாக குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க நாடாளுமன்றத்திற்கு வந்தார். எதுவும் தெரியாதென்று கூறியதன் மூலம், தன்னையும் தனது அரசாங்கத்தையும் தற்காத்துக்கொள்ள முயன்றார்.

ICRC அறிக்கையை அந்த விவரங்கள் பத்திரிகையில் வரும்வரை அவர் அதை படிக்கவில்லை. ஏனெனில் அது ஒரு இடைக்கால ஆவணம் என்று ஹூன் சொன்னார். பெப்ரவரி மாதம் கூட்டணிப்படைகளின் அமெரிக்க தலைவர் போல் பிரேமர் பிரிட்டனுக்கு அந்த இரகசிய அறிக்கையை அனுப்பினார். ஈராக்கிலுள்ள பிரிட்டனின் இராணுவ பிரதிநிதியான Sr jeremy Greenstock- ற்கும் லண்டனிலுள்ள முப்படைகளின் நிரந்தர தலைமையகத்திற்கும் அந்தப் பிரதிகள் அனுப்பப்பட்டன. இந்தப் பிரச்சனைகள் பிரிட்டிஷ் படைகள் சம்மந்தப்பட்டிருப்பதால் அதிகாரிகள் அதன் மீது நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கின்றனர் எனவே அமைச்சர்களுக்கு அது தெரியவேண்டிய அவசியமில்லை என்று அதிகாரிகள் முடிவு செய்ததாக ஹூன் கூறினார்.

பிளேயரும் அதே நிலைப்பாட்டை தான் எடுத்தார். நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது, ''இந்த ஆவணத்தை நான் பார்க்கவில்லை, ஆனால் நான் என்ன புரிந்து கொண்டேன் என்பதை தெளிவுபடுத்திவிட விரும்புகிறேன். ஈராக் கைதிகள் முறைகேடாக நடத்தப்பட்டது தொடர்பான செஞ்சிலுவைச் சங்க ஆவணத்தில் இரண்டு பிரச்சினைகள் எழுப்பப்பட்டுள்ளன. அதில் திட்டவட்டமான வழக்கு சம்மந்தப்பட்ட பிரச்சனை உள்ளது மற்றும் அவை பற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது'' என்று பிளேயர் கூறினார்.

ஹூன் மற்றும் பிளேயர் கூற்றுக்கள் அடிப்படையிலேயே தவறானவை என தெளிவாக தெரிகிறது. சரியாக ஓராண்டிற்கு முன்னர், ஒரு நிழற்பட பிரதி எடுப்பவர் அது சம்பந்தமாக அபாயமணி ஓசை எழுப்பியபொழுது, பிரிட்டிஷ் படையினர் ஈராக் கைதிகளை சித்திரவதை செய்தது பொதுமக்களது கவனத்திற்கு வந்தது. அந்தப் படங்களில் ஒரு ஈராக் கைதி ஒரு டிரக்கின் லிப்டிலிருந்து தொங்கவிடப்பட்டிருப்பதையும் மற்றொரு கைதியை சிறை அதிகாரி முறைகேடாக வாய்வழி பாலியல் நடத்தையில் ஈடுபடுத்தியிருந்ததும் சித்தரிக்கப்பட்டிருந்தது. தாக்குதல் நடத்தியதாக குறைந்த பட்சம் ஆறு பிரிட்டிஷ் படையினர் மீது புலன்விசாரணை நடத்தப்பட்டாலும் இதுவரை எவர் மீதும் குற்றச்சாட்டுக்கள் தாக்கல் செய்யப்படவில்லை.

சென்ற வாரம், 12-ஈராக் குடும்பங்களின் சார்பில் வழக்கறிஞர்கள் லண்டன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருக்கின்றனர். ஆத்திரமூட்டல் சம்பவங்கள் எதுவுமில்லாமல் தனித்தனியாக தங்களது உறவினர்களை பிரிட்டிஷ் ஆயுதப்படைகள் கொலை செய்துவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர். அதற்குப்பின்னர் சர்வதேச பொதுமன்னிப்பு அமைப்பு வெளியிட்டிருக்கின்ற ஒரு அறிக்கையில் 33-வழக்குகளை பட்டியலிட்டிருக்கிறது. அதில் ஈராக்கியர்கள் கொலை செய்யப்பட்டது தாக்குதலில் காயமடைந்தது அல்லது முறைகேடாக நடத்தப்பட்டது போன்ற விவரங்கள் அடங்கியுள்ளன. அதில் ஒரு 8-வயது சிறுமி சுட்டுக்கொல்லப்பட்ட விபரமும் இடம் பெற்றிருக்கிறது.

இத்தகைய பரவலான முறைகேடுகள் பற்றி நாடாளுமன்றத்தில் ஹூன் மறுப்புத் தெரிவித்திருந்தாலும் அவரது நோக்கத்திற்கு அப்பால் பிரிட்டிஷ் துருப்புக்களின் முறைகேடுகளைப் பற்றி அவர் அறிந்திருந்தார் என்பது அவரது அறிக்கையிலேயே தற்செயலாக வெளிப்பட்டிருக்கிறது. செப்டம்பரில் பிரிட்டிஷ் படைகள் சட்டவிரோதமாக ஈராக் கைதிகள் மீது தொலைச்சுமை ஏற்றுகின்ற நடைமுறையை கைவிட வேண்டுமென்று இந்த சட்டவிரோத நடைமுறை 30-ஆண்டுகளாக விதிக்கப்பட்டுள்ள தடையை மீறுவதாகும், என்றும் இராணுவத்திற்கு கட்டளையிட்டிருப்பதாக அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த சம்பவங்களுக்கும் தனக்கும் எந்த சம்மந்தமுமில்லை என்று ஹூன் கை கழுவிவிட்டாலும் மிரர் நிழற்படங்களை வெளியிட்டதாக அந்த பத்திரிகை மீது தாக்குதலைத் தொடுத்ததன்மூலம் அரசாங்கம் மற்றும் ஆயுதப்படைகள் மீதான கவனத்தை திசைதிருப்ப முயன்றிருக்கிறார்.

அந்த பத்திரிகையை தனிமைப்படுத்தி அரசாங்கமும் ஊடகங்களின் பெரும்பகுதியும் தங்களது கண்டனங்களை தொடுத்துவருவது அந்தப் பத்திரிகை நிழற்படங்களை பிரசுரித்ததுடன் சித்திரவதை குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கும் வகையில் பலி இராணுவத்தினரின் பேட்டிகளையும் வெளியிட்டிருப்பதால்தான். ஆனால் ஏறத்தாழ இரண்டு வாரங்களுக்கு பின்னால் அரசாங்கமோ அல்லது இராணுவமோ அந்த நிழற்படங்கள் போலியானவை என்று நிரூபிக்க இயலவில்லை. அல்லது ஹூன் நாடாளுமன்றத்தில் அவ்வாறு செய்ய இயலவில்லை. அவரது முயற்சிகள் குற்றம்சாட்டுபவர்கள் மீதே குற்றச்சாட்டை திருப்பிவிடுகிற வகையில் அமைந்திருக்கிறது. அந்த நிழற்படங்களில் காணப்படும் டிரக் ஈராக்கில் பயன்படுத்தப்பட்டதல்ல, என்பதற்கு வலுவான அடையாளங்கள் இருப்பதாக கூறுகிறார். பின்னர், சேனல் 4-ல் தொலைக்காட்சியில் வற்புறுத்திக் கேட்டபோது ஹூன் அந்த நிழற்படங்கள் போலியானவை என்று திட்டவட்டமாக குறிப்பிட்டார்.

ஹூன் தெளிவில்லாமல் தவிர்க்கும் வகையில் இப்படி கூறியிருப்பது அரசாங்கத்தின் நெருக்கடியை அதிகரித்திருக்கிறது. அவரது மறுப்புக்களை மேலெழுந்தவாரியாக பார்த்தால் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் துருப்புக்களின் நடவடிக்கை குறித்து தெரிவிக்கப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட புகார்களை பிரிட்டிஷ் அதிகாரிகள் வேண்டுமென்றே மூடிமறைத்தார்கள் என்று மட்டுமே பொருள் கொள்ள முடியும். அப்படிச்செய்தால் மீண்டும் ஒரு அடிப்படை நிரூபிக்கப்படுகிறது. போருக்கு செல்வது என்ற முடிவையும், அமெரிக்காவுடன் அதன் உறவையும் தற்காத்து நிற்பதற்கு எந்த நடவடிக்கையையும் சகித்துக்கொள்ள அரசாங்கம் தயாராக உள்ளது என்றுதான் பொருளாகும். இதில் பிரிட்டிஷ் நிர்வாகத்தரப்பின் சில பிரிவுகளுக்கு அதிகம் கவலை தருவது என்னவென்றால், ஈராக் சம்பவங்களில் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லை, அது அமெரிக்கா படையெடுத்ததோடு இழுத்துச்செல்லப்பட்டு ஈராக்கின் இரத்தக்களரி புதைமணலில் சிக்கக்கொண்டது என்பதுதான்.

வாஷிங்டனுடன் உறவு கொண்டிருப்பதன் மூலம் பிளேயரின் கம்பெனி திட்டமிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டது என்பதை மறுத்துவிட முடியாது, ஏனென்றால் அந்தக் குற்றச்சாட்டு அரசாங்க மறுப்பையும் மீறி பிளேயர் அரசின் மீது விழத்தான் செய்யும். அமெரிக்க இராணுவ தலையீட்டிற்கு தான் ஆதரவுதந்தது சரியான நடவடிக்கைதான் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்துவிட்டு, பொதுமக்களது பிரமாண்டமான எதிர்ப்பையும் அலட்சியப்படுத்திவிட்டு, அதற்குப் பின்னரும் தொடர்ந்து நியாயப்படுத்திக் கொண்டிருக்கும் பிரதமரை அவரது நண்பர்களே கூட இன்றைய ஈராக் பேரழிவின் இணை சிற்பி என்று கருதுகின்றனர்.

கடந்த சில நாட்களில் பிளேயர் முன்னாள் தொழிற்கட்சி அமைச்சர் Denis healy யோடு ஒரு பக்கமாக ஒரங்கட்டப்படலாம் என்று ஊகச்செய்திகள் உலாவிக்கொண்டிருகின்றன மற்றும் திரைப்பட இயக்குநர் (மற்றும் பிரதமரின் நெருக்கமான நண்பருமான) புட்னம் பிரபு பிளேயர் பதவிவிலக வேண்டும் என்று கடைசியாக குரல் கொடுத்திருப்பவர்களில் ஒருவராவர்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved