World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India: Stalinists to promote Congress power bid

இந்தியா: காங்கிரஸ் ஆட்சிக்கு வர ஸ்ராலினிஸ்டுகள் ஊக்குவிப்பு

By Nanda Wickremasinghe & Kieth Jones
13th May 2004

Back to screen version

இந்தியாவின், பொதுத் தோத்தல் முடிவுகளின்படி, தொங்கு பாராளுமன்றம் உருவாகுமானால், காங்கிரஸ் கட்சி கூட்டணி அரசு அமைப்பதற்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்) ஆதரிக்கும். இந்தியாவின் பொருளாதார மற்றும் அரசியல் செல்வந்தத்தட்டின் பாரம்பரிய கட்சியான, காங்கிரஸ் கட்சி, இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின், "தாராள மயமாக்கல்" செயற்பட்டியலை உற்சாகமாக, ஆதரிக்கின்ற கட்சியாகும். அது தனியார்மயம், பொருளாதாரக் கட்டுப்பாடுகள் தளர்வு, சமூக நலத்திட்டங்களில் வெட்டுக்கள், சிறிய விவசாயிகளுக்கான, காப்பு வரி பாதுகாப்புக்கள் ரத்து, தொழிலாளர் உரிமைகளை பறிப்பது, ஆகிய நடவடிக்கைகள் மூலம், வெளிநாட்டு முதலீடுகளை கவர்ந்திழுக்கும் ஒரு காந்தமாக ஆக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பல கட்டங்களாக நடைபெற்ற வாக்குப்பதிவில் இன்றைய தினம், வாக்குகள் எண்ணிக்கை தொடங்குகிறது. என்றாலும், அரசாங்கம் அமைப்பது பற்றி தெளிவான நிலை உருவாவதற்கு, வாரக்கணக்கில், பல நாட்கணக்கில் ஆகலாம். இந்து மேலாதிக்க, பாரதிய ஜனதாக் கட்சி (பிஜேபி) தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி (NDA) யான ஆளும் கூட்டணி தெளிவான பெரும்பான்மை பெறாது என்று வாக்கெடுப்பிற்கு பிந்திய கருத்துக்கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. அப்படியிருந்தும் அது, தன்னால் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுவிட முடியும் என்று எதிர்பார்க்கிறது. ஆந்திர மாநிலத்தில் பொதுத் தேர்தலுடன் சட்ட சபைக்கு ஒரே நேரத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை வாக்குகள் எண்ணப்பட்டன. கலைக்கப்பட்ட, நாடாளுமன்றத்தில் பிஜேபி-ன் மிகப்பெரிய சகாவான தெலுங்கு தேசக் கட்சி அந்த மாநிலத் தேர்தலில் மிகப்பெரிய தோல்வி கண்டிருக்கிறது. அதைப் பற்றி முதலாளித்துவ ஊடகங்களே கூட தெலுங்கு தேசக் கட்சி (TDP) உலக வங்கி திணித்த, பொருளாதார சீரமைப்புத் திட்டங்களை, மேற்கொண்டதால் தான், மக்களால் அக்கட்சி பதவியிலிருந்து, தூக்கி எறியப்பட்டிருப்பதாக விமர்சனம் செய்துள்ளன. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு கிடைத்த 226 இடங்களுடன் ஒப்பிடுகையில், தெலுங்கு தேசக் கட்சிக்கு வெறும் 47 இடங்களே கிடைத்திருக்கின்றன.

தொங்கு நாடாளுமன்றம் ஏற்படும் என்றும் தேர்தலுக்குப் பின்னர், அரசியலில் பேரம் பேச ஆரம்பித்துவிடுவார்கள் என்றும் எதிர்பார்த்து சிபிஐ(எம்) காங்கிரஸ் தலைமையிலான, அரசாங்கத்தை அமைப்பதற்கு பல்வேறு பிராந்திய மற்றும் ஜாதி அடிப்படையிலான, எதிரும் புதிருமான, கட்சிகளை ஒன்று சேர்த்து, காங்கிரசிற்கு ஆதரவு திரட்டும் முயற்சியில் இறங்கியிருக்கிறது. செவ்வாய்க்கிழமையன்று சிபிஐ(எம்) பொதுச் செயலாளர் ஹர் கிரிஷன் சிங் சுர்ஜீத், காங்கிரஸ் தலைவரும், பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதற்கான வாய்ப்புடையவருமான சோனியா காந்தியை சந்தித்துப் பேசினார்.

சிபிஐ(எம்) மூத்த தலைவர்கள், மூன்றாவது அணியை அதாவது பிஜேபியும் அல்லாத காங்கிரசும் அல்லாத அணியை அமைப்பதற்கு சாத்தியக்கூறில்லை, என்று அறிக்கைகளை வெளியிட்ட பின்னர், செவ்வாய்க்கிழமை இச்சந்திப்பு நடந்திருக்கிறது.

தனது தேர்தல் அறிக்கையில் சிபிஐ(எம்) தனது பிரதான குறிக்கோள் "பிஜேபி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை முறியடிப்பது" என்று அறிவித்திருந்தது, இதன் மூலம், தேர்தலுக்கு பிந்திய நாடாளுமன்ற உறுப்பினர் கணிப்பு அனுமதித்தால், காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தை கொண்டுவருவதற்கு தான் தயாராகயிருப்பதாக தேர்தல் அறிக்கையிலேயே சமிக்கை காட்டியது. மேலும் சிபிஐ(எம்) பெரு வர்த்தக நிறுவனக் கட்சியான காங்கிரசிற்கு வெளிப்படையாக வாக்களிப்பதற்கு, கீழ்கண்ட சூத்திரத்தின் கீழ் உழைக்கும் மக்களை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டது: ``இடதுசாரிக் கட்சி, பிரதான சக்தியாக இல்லாத மாநிலங்களில் பிஜேபி -க்கும், காங்கிரசிற்கும் மட்டுமே, பிரதான போட்டி என்ற நிலையிருக்குமானால், அந்த மாநிலங்களில் கட்சியானது ஒரு குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே போட்டியிடும் மற்றும் பிஜேபி கூட்டணியின் தோல்விக்கான பொது பிரச்சார அழைப்பை விடுக்கும்.``

பிஜேபி-ஐ விட காங்கிரஸ், "தீங்குகள் குறைந்த" அமைப்பு என்ற கருத்தை முன்னிலைப்படுத்தும் அதேவேளை, ஸ்ராலினிஸ்ட்டுகள் சிபிஐ(எம்) தலைமையில், மூன்றாவது அணியை உருவாக்குவது தொடர்பாகவும் கூறப்பட்டது. அந்த அணியில், பல்வேறு பிராந்திய, ஜாதிக் கட்சிகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. அவற்றில் சில, காங்கிரசுக்கு "முற்போக்கான" மாற்று என பிஜேபி-ன் நேசக் கட்சிகளாக இருந்தவை.

இந்த இரு வழித்தட கொள்கையை அக்கட்சி கடைபிடிப்பதற்கு காரணம், சிபிஐ(எம்)-ன் சொந்த வாக்காளர்கள் உள்பட ஒருபுறம் உழைக்கும் மக்கள் காங்கிரசிற்கு பகை பாராட்டி வருவதும், மற்றொருபுறம், அந்தக் கட்சியின் பக்குவமில்லா தேர்தல் மதிப்பீடுகளும் தான் காரணம். மேற்கு வங்காளம், கேரளம் மற்றும் திரிபுராவில் சிபிஐ(எம்) மிக வலுவான அடிப்படையில் இயங்கி வருவதால், அதன் பிரதான தேர்தல் எதிரி காங்கிரஸ் தான்.

என்றாலும், தேசிய ஜனநாயக முன்னணி நாடாளுமன்ற மெஜாரிட்டி பெற முடியாது என்ற நிலை ஏற்பட்டதும் சிபிஐ(எம்) காங்கிரஸ் ஆட்சிக்கு வருவதற்கு தேவையான உறுப்பினர்கள் எண்ணிக்கையை திரட்டுவதற்கு நடவடிக்கையில் இறங்கிவிட்டது.

காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி வரிசையில் இருந்து எட்டாண்டுகளுக்குப் பிறகு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் தனது ஆர்வத்தை தெளிவுபடுத்திவிட்டது. 1996 முதல் 1998 வரை காங்கிரஸ் அல்லாத பிஜேபி அல்லாத அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு, தனித்து ஆட்சிக்கு வர முடியும் என்ற நம்பிக்கையில் ஆதரவு அளித்து வந்தது. அது போன்று இனி காங்கிரஸ் தலைமை நடந்துகொள்ளாது என்பதை காங்கிரஸ் உறுதிபட அறிவித்துவிட்டது. காங்கிரஸ் தலைமையின் இந்த நிலைப்பாட்டை பெரு வர்த்தக ஊடகங்கள் ஆதரித்து நின்றன. மூன்றாவது அணியைக் கண்டித்து தலையங்கங்களை தீட்டின. பொருளாதார சீர்திருத்தம் தடைப்படும் என்றும் சிறிய கட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் தரக்கூடாது என்றும் அந்தத் தலையங்கங்கள் வலியுறுத்தின.

காங்கிரசிற்கு பின்னால் சிபிஐ(எம்) அணிவகுத்து நிற்பது, சுதந்திரத்திற்கு பிந்தைய தேசிய செயல் திட்டம் தோல்வியடைந்த சூழ்நிலையில் மற்றும் முதலாளித்துவ பூகோளமயமாக்கலினால் உண்டுபண்ணப்பட்ட அதிகரிக்கும் சமூக மற்றும் பொருளாதார நெருக்கடியினால் உண்டுபண்ணப்பட்ட சமூகப் பேரழிவின் கீழ் இந்திய தேசிய முதலாளித்துவத்தின் வரலாற்று ரீதியான கட்சியோடு உழைக்கும் மக்களை முடுச்சுப்போடும் முயற்சியாகும்.

இந்தியா சுதந்திரம் பெற்று முதல் 40 ஆண்டுகளில் மூன்றாண்டு நீங்கலாக காங்கிரஸ் கட்சி தான் ஆட்சியில் இருந்தது. காங்கிரஸ் கட்சி தனது தேசிய வளர்ச்சி திட்டங்களை நியாயப்படுத்துவதற்கு சோசலிச சொற்றொடர்களைப் பயன்படுத்தியது. அது தேசிய முதலாளித்துவத்தின் ஆட்சியை உறுதிப்படுத்திய அதேவேளை இந்திய மக்கள் வறுமையிலும் பின்தங்கிய நிலையிலும் தள்ளப்பட்டனர், சாதீய ஒடுக்குமுறையும், நில பிரபுத்துவ முறையும் தீவிரம் குறைந்த வடிவங்களிலாவது நீடித்தது. அதற்குப் பின்னர் 1991-ல் முதலாளித்துவ பூகோளமயமாக்கல் மற்றும் சோவியத் ஒன்றியத்தின் பொறிவுக்கு பதில்கொடுக்கும் முகமாக, இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியான காங்கிரஸ் கட்சி தனது போக்கை தலைகீழாக மாற்றிக்கொண்டு வெளிநாட்டு முதலீடுகளை இந்தியாவிற்கு கவர்ந்து இழுக்க முடியும் என்ற நம்பிக்கையில் இந்தியாவில் தேசிய அளவில் நெறிமுறைப்படுத்தப்பட்டிருந்த பொருளாதாரத்தை சிதைத்தது. இந்தியாவின் புதிய ஏற்றுமதி அடிப்படையிலான வளர்ச்சி மூலோபாயத்தின் கீழ் இந்திய முதலாளித்துவ வர்க்கம் உலகப் பொருளாதாரத்தில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துக்கொண்டு அதன் மூலம் நாடுகடந்த நிறுவனங்களுக்கு மலிவு ஊதிய தொழிலாளர்களை வழங்குவதற்கு முயன்று வருகின்றது.

நரசிம்மராவ் காங்கிரஸ் அரசாங்கம் 1991 முதல் 1996 வரை கடைப்பிடித்து வந்த பொருளாதார சீர்திருத்தங்களை அதற்குப் பின்னால் வந்த எல்லா அரசாங்கங்களும் -1990-களின் நடுவில் நடைபெற்ற சிபிஐ(எம்) ஆதரவு பெற்ற ஐக்கிய முன்னணி ஆட்சி மற்றும் அதற்குப் பின்னர் பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி ஆகிய இரண்டுமே, தொடக்க நிலையிலுள்ள ஆனால் பரந்த மக்களின் எதிர்ப்பிற்கு மத்தியில், பின்பற்றி வந்தன.

இப்போது நடந்து முடிந்துள்ள தேர்தல் பிரச்சாரத்தில் மிக கவனமாக காங்கிரஸ் கட்சி, ஏழ்மை பொருளாதார பாதுகாப்பின்மை, சமூக ஏற்றத்தாழ்வுகள் ஆகியவை பற்றிய பொதுமக்களது அதிருப்திக்கு வேண்டுகோள் விடுத்தது. எடுத்துக்காட்டாக இந்தியா ஒளிர்கிறது என்ற பிஜேபி-ன் கூற்றை எள்ளி நகையாடியது. ஆனால் காங்கிரஸ் கட்சி பெரு வர்த்தக நிறுவனங்களுக்கு தனது நிலைப்பாட்டை தெளிவாகவே உணர்த்தியது. அடுத்த அரசாங்கத்தை அது அமைக்குமானால், தொழிலாளர்களை பணி முடக்கம் செய்ய, ஒப்பந்தமுறையில் வேலைக்கமர்த்தல் மற்றும் ஆலை மூடல் இவற்றுக்கு எளிதாக வழிவகை செய்யும் தொழிலாளர் சட்டங்களைத் திருத்துதல் உள்பட பொருளாதார சீர்திருத்தங்களை மேலும் முன்னெடுத்துச் செல்லும் என தெளிவுபடுத்தியுள்ளது.

இந்தக் கருத்தை வலியுறுத்துகிற வகையில், காங்கிரசில் இணைந்துள்ள தொழிற்சங்க கூட்டமைப்பு சென்ற பெப்ரவரி மாதம் அழைப்பு விடுக்கப்பட்ட ஒரு நாள் வேலை நிறுத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. 2,00,000-ற்கு மேற்பட்ட அரசாங்க ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை ஒடுக்குவதற்காக தமிழ்நாடு, மாநில அரசாங்கம் எடுத்த நடவடிக்கையை ஆதரிக்கின்ற வகையில் 2003 ஜூலை மாதம் இந்திய உச்சநீதிமன்றம், ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்வதற்கு அடிப்படை உரிமையில்லை என்று அளித்த காட்டுமிராண்டித்தனமான தீர்ப்பிற்கு எதிராக அந்த ஒரு நாள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

முதலாளித்துவ பத்திரிகைகளே கூட, பிஜேபி - தேஜமு மற்றும் காங்கிரஸ் சமுதாய பொருளாதார கொள்கைகளுக்கிடையே குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இல்லை என்று ஒப்புக்கொண்டிருக்கின்றன. அப்படியிருந்தும் சிபிஐ(எம்), பொதுமக்களது நிர்பந்தங்களுக்கு காங்கிரஸ் ஆட்சி கட்டுப்படும் என்று நிலைபேணுகிறது. எனவே தான் அதன் தேர்தல் அறிக்கையில், ஏதோ இந்த முதலாளித்துவக் கட்சி இந்தியாவின் உழைக்கும் மக்களது நலனுக்கு பாடுபடும் கொள்கைகளைப் பின்பற்றுவது போல, "கடந்த காலத்திலிருந்து, காங்கிரஸ் பாடம் படித்துக்கொள்ளவில்லை" என்று குறிப்பிட்டிருக்கிறது.

என்றாலும், சிபிஐ(எம்) எடுத்து வைக்கின்ற வாதம் என்னவென்றால், பிற மத பழிப்பு இந்துவாத பிஜேபிக்கு "மதச்சார்பற்ற" மாற்று காங்கிரஸ், எனவே ஆதரிக்கிறோம் என்று கூறுகிறது.

ஸ்ராலினிஸ்ட்டுகளை பொறுத்த வரை உழைக்கும் மக்கள் தங்களது ஜனநாயக உரிமைகளை தற்காத்து நிற்பதற்கு பாரம்பரிய இந்திய ஆளும் வர்க்கத்தின் கட்சியை ஆதரிப்பது தான் ஒரே வழி என்று கூறுகிறார். அந்தக் கட்சி திரும்பத் திரும்ப, வகுப்புவாத நடைமுறைகளை பின்பற்றி வந்திருக்கின்றது. (பிஜேபி தலைமையில் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதைப் போன்று) காங்கிரஸ் கட்சியும் வகுப்புவாத நடைமுறைகளை மேற்கொண்டிருக்கின்றது, வகுப்புவாதத்தை வளர்த்திருக்கிறது, (1984-ல் காங்கிரஸ் தலைவர்கள் தலைமையில் சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்கள் நடைபெற்றன) 1947-ல் பிரிட்டிஷாரோடும், மூஸ்லீம் லீக்குடனும் சேர்ந்துகொண்டு இந்திய துணைக் கண்டத்தை மத அடிப்படையில் துண்டாடுவதற்கு சம்மதித்தது.

தொழிலாள வர்க்கமும், உழைக்கும் மக்களும் காங்கிரசுக்கூடாக பிஜேபியை எதிர்த்துப் போராட முடியாது, பிஜேபியை தோல்வியடையச் செய்வது ஒரு பக்கம் இருக்கட்டும், காங்கிரஸ் கட்சி BJP-யை போன்று சமுதாயத்தில் கொந்தளிப்பை கிளறிவிடுகின்ற பொருளாதார திட்டங்களை மேற்கொள்ளுமானால், அதை எதிர்த்து நிற்பதற்கு முற்போக்கான முதலாளித்துவ எதிர்ப்பு வேலைத்திட்டம் இல்லாத சூழ்நிலையில் எல்லா வகையான பிரிவினை, குறுகியவாத, பிற்போக்குத்தனமான, ஜாதிய அரசியல் செழித்து வளரும் பூமியாகவே இந்தியா மாறிவிடும்.

கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாகவே பிஜேபி-ம் பல்வேறு இதர, பிற்போக்குத்தனமான மாநில ஜாதிய அமைப்புக்களும், அரசியல் கட்சிகளும் உருவானதற்கு காரணம், தொழிலாள வர்க்கம் அரசியல் செயலிழந்த தன்மையின் விளைவுதான், இதில் சிபிஐ(எம்) முதன்மை பொறுப்பாளியாகும்.

பல தலைமுறைகளாக ஸ்ராலினிஸ்டுகள் தொழிலாள வர்க்கத்தை தொழிற்சங்க போர்க்குணத்தோடு மட்டுப்படுத்திய அதே நேரத்தில், அவர்களை ஏதாவதொரு முதலாளித்துவக் கட்சிக்கு, அல்லது கட்சிகளின் கூட்டணிக்கு கீழ்ப்படியச் செய்துவிட்டனர்.

இந்த நடவடிக்கைகளில், மிகக் கேவலமானவகையில் இந்திரா காந்தியின் அவசர நிலைப் பிரகடனத்தின்போது கொந்தளித்து சிதறும் கிளர்ச்சி ஏற்பட்டுவிடுமோ என்ற சூழ்நிலையில் பிஜேபி-ன் முன்னோடியான ஜனசங்கத்தோடு கூட்டணி வைத்துக் கொண்டதும் அடங்கும்- பிஜேபியுடன் கூட கூட்டணி சேர்ந்ததும் இதில் அடங்கும்.

கடந்த காலத்தில் சிபிஐ(எம்), ஏகாதிபத்தியத்தை அல்லது நிலப்பிரபுத்துவ பிற்போக்குத்தனத்தை எதிர்த்துப் போராடுதல் என்ற பெயரில் முதலாளித்துவ வர்க்கத்தின் "முற்போக்கு" பிரிவோடு கூட்டு வைத்தலை நியாயப்படுத்தி வந்தார்கள். இன்றைய தினம், மதச்சார்பின்மையை உயர்த்திப் பிடிப்பதற்காக அதேபோல் செய்கிறார்கள். பிஜேபிக்கும் அண்மையில் தேசிய ஜனநாயக முன்னணியிலிருந்து இப்பொழுதுதான் வெளியேறிய கட்சிகளை மதச்சார்பற்ற கூட்டாளிகள் என அது திரும்பவும் அரவணைத்துக்கொள்ளும் "ஜனநாயக மதச்சார்பற்ற" சக்திகளுக்கும் இடையில் ஸ்ராலினிஸ்டுகள் வரைந்துள்ள வேறுபாடு அந்த அளவு கந்தலாகிப் போயிருக்கிறது. இதற்கு மிக மோசமான உதாரணம் தமிழ்நாட்டில் சிபிஐ(எம்) இதற்கு முந்திய தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.வுக்கு அளித்த ஆதரவாகும். அரசாங்கம் பதவிக்கு வந்ததும், 2003 ஜூலையில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை முறியடிப்பதற்காக கருங்காலிகளை அமர்த்தல் மற்றும் பரந்த அளவில் பணிநீக்கம் செய்தல் ஆகியனவற்றைப் பயன்படுத்தியது.

முதலாளித்துவ ஆட்சிக்கு சிபிஐ(எம்) ஒரு முண்டுகோல்

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு நாடாளுமன்ற கொறடாவாக சிபிஐ(எம்) வடிவெடுத்திருப்பது இந்திய முதலாளித்துவ வர்க்க அரசியல் கட்டுக்கோப்பில் இடதுசாரி தோற்றத்தை உருவாக்குவதே தவிர வேறு ஒன்றுமில்லை.

1999-ல் நடைபெற்ற அகில இந்திய தேர்தலில் சிபிஐ(எம்) மக்களவையில் 32 உறுப்பினர்களுடன் 5.4 சதவீத வாக்கைப் பெற்று மூன்றாவது பெரிய கட்சியாக வெற்றி பெற்றது. 1977 முதல் மேற்கு வங்காளத்தில் சிபிஐ(எம்) தலைமையிலான இடதுசாரி முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கேரளத்திலும், திரிபுராவிலும், திரும்பத் திரும்ப மாநில அரசுகளை அமைத்திருக்கிறது. ஆனால், இந்திய நிர்வாக கட்டுக்கோப்பில் சிபிஐ(எம்)-ன் முக்கியத்துவம், அதன் தேர்தல் ஆதரவிற்கும் அப்பால் நீண்டு கொண்டே போகிறது. காங்கிரசும், அதன் எதிரிகளும் பல்வேறுபட்ட எதிரும் புதிருமான குழுக்களாக சிதைந்து சின்னாபின்னமாகிவிட்ட பின்னர், ஸ்ராலினிஸ்டுகள் அரசியல் அரசியல் செல்வந்தத் தட்டிற்கிடையே அன்றாடம் பேரம் பேசுவதற்கு முக்கியமான தரகர்களாக உருவானார்கள். ஆயினும், சிபிஐ(எம்) கட்சிக்குரிய பிரதான முக்கியத்துவம், தொழிலாள வர்க்கத்தின் அதிகாரபூர்வமாக அனுமதிக்கப்பட்ட பிரதிநிதி என்ற கற்பனை மிகப்பெரிய கட்சி என்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ)-ன் மரபுரிமை என்ற கூற்றை நெருங்கிக்கூட வர முடியவில்லை.

1917-ல் அக்டோபர் புரட்சி நடைபெற்றதைத் தொடர்ந்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) உருவாக்கப்பட்டது. புரட்சிகர சோசலிசத்தின் பிரதிநிதி என இந்திய புத்திஜீவிகள், விவசாயிகளின் பகுதிகள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் பகுதிகள் கருதியதால் அது ஆழமாக வேரூன்றியது. ஆனால் ரஷ்ய புரட்சியின் படிப்பினைகளை கிரகித்துக்கொள்ளும் முன்னர், குறிப்பாக, ஜனநாயக புரட்சியின் அல்லது, ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தின் தலைமையை முதலாளித்துவ வர்க்கத்தின் கரங்களிலிருந்து பிடுங்குவதற்கு இடையறாத போராட்டம் நடத்த வேண்டியதன் அவசியத்தை மற்றும் சோசலிசத்திற்கான உலகப் போராட்டத்தில் இணைய வேண்டியதன் அவசியத்தை படிப்பினையாக உள்ளீர்த்துக்கொள்வதற்கு முன்னர் சோவியத் ஒன்றியத்தில் உருவாகிக்கொண்டிருந்த ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் அரசியல் பாதுகாப்புக்குள் சிபிஐ வீழ்ந்துவிட்டது.

இந்திய ஸ்ராலினிசத்தின் முடைநாற்றமெடுக்கும் வரலாற்றை நினைவுப்படுத்த இது இடமல்ல. ஆனால் ஒன்றைப்பற்றிக் குறிப்பிட வேண்டும். காங்கிரஸ், ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தை கருச்சிதைத்ததிலும் இந்தியாவை பிளவுப்படுத்தியதிலும் சிபிஐ உடந்தையாக செயல்பட்டிருக்கிறது. இரண்டாவது உலகப்போரின் போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியை ஆதரித்தது மற்றும் முஸ்லிம் லீக்கின் பாக்கிஸ்தான் கோரிக்கையையும் ஆதரித்தது. அதற்குப் பின்னர், 1945-46-ல் இந்தியாவே தொழிலாளர்- விவசாயிகளின் போராட்டத்தால் கொந்தளித்தபோது காங்கிரசோடும், முஸ்லிம் லீக்கோடும் இணைந்து நின்று தனது கோரிக்கையை விடுத்தது. ஏற்கனவே அவர்கள் ஒருவர் மீது ஒருவர் பகைமை பாராட்டி வந்தனர், அந்நிலையில் "ஏகாதிபத்திய எதிர்ப்பு அணியில்" சேருமாறு சிபிஐ இரண்டு கட்சிகளையுமே கேட்டுக்கொண்டது.

சிபிஐ-ன் நிலைப்பாடு மிக மோசமாக சென்றுகொண்டிருந்ததால், 1960களின் தொடக்கத்தில் சீனாவிற்கும் சோவியத் யூனியனுக்கும் பிளவு ஏற்பட்டபோது சிபிஐ-ன் பெரும்பாலான உறுப்பினர்கள் அதிலிருந்து பிரிந்து சிபிஐ(எம்) கட்சியை உருவாக்கினார்கள். ஆனால், இந்த புதிய கட்சி, ஸ்ராலினிசத்தின் அடிப்படை அரசியலை நிலைநாட்டி வந்தது. தேசிய புரட்சியை பூர்த்தி செய்வதற்காக முதலாளித்துவ வர்க்கத்தின் முற்போக்கு பிரிவிற்கு தொழிலாள வர்க்கம் ஆதரவு தர வேண்டும் என்று பிரகடனப்படுத்தியது. அக்கட்சி தொடக்கப்பட்ட சில ஆண்டுகளுள், தவறான வழிகாட்டுதலில் இயங்கி வந்த நக்சல்பாரி விவசாயிகளின் எழுச்சியை இந்திய அரசு ஒடுக்குவதில் சிபிஐ(எம்) தீவிரமாக உடன் பங்கெடுத்துக்கொண்டது.

கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக சிபிஐ(எம்) மேற்கு வங்காளத்திலும், கேரளத்திலும் தனது அரசாங்க பங்களிப்பின் மூலம், மத்திய அரசாங்கத்திடமிருந்து ஆதரவையும், மானியங்களையும் பெறுவதற்கு நடைபெற்று வருகின்ற போராட்டங்களில், குறிப்பாக 1991-க்கு பின் வெளிநாட்டு முதலீடுகளுக்காக இந்திய குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் பிராந்தியப் பகுதிகளின் அதிகாரப்பூர்வமான பிரதிநிதியாகவே உருவாகிவிட்டது.

மேற்கு வங்காளத்தில் சிபிஐ(எம்) அரசாங்கமே பொருளாதார சீர்திருத்தத்தை தழுவிக் கொண்டது. அப்போது சீனாவின் "சோசலிச" முன்மாதிரியை பின்பற்றுவதாக கூறிக் கொண்டது. இந்த நோக்கத்திற்காக, பால்ட்டா மற்றும் சால்ட் லேக் பகுதிகளில் சிறப்பு பொருளாதார மண்டலங்களை உருவாக்கியது. அந்தப் பகுதிகளில் குறைந்தபட்ச பணிப் பாதுகாப்பு மற்றும் பணி நிலைகள் தொடர்பான தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்கள் செயல்படுத்தப்படமாட்டா. ஸ்ராலினிச எந்திரம் மிகப்பெருமளவில் சர்வதேச முதலீடுகளோடு உறவுகளை வளர்த்துக்கொண்டிருக்கிறது. அண்மை மாதங்களில் ஜோதிபாசுவும், அவரது வாரிசான மேற்கு வங்காள முதலைைமச்சர் புத்ததேவ் பட்டாச்சாரியாவும், மேற்கு வங்காளம், முதலீடுகளை பெறவேண்டுமென்றால் தொழிலாளர்கள் ஒழுங்கை கற்றுக்கொள்ள வேண்டும் மற்றும் வேலை நிறுத்தத்தை கைவிட வேண்டும் என்று, தொழிற்சங்கங்களை தாக்கியுள்ளனர்.

தனது தேர்தல் அறிக்கையில், சிபிஐ(எம்) பிஜேபி-ஐ அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் மூலோபாயக் கூட்டுக்கு முயன்று வருவதாக அடிக்கடி மிகக் கடுமையான வார்த்தைகளில் கண்டித்திருக்கிறது. என்றாலும், இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் பாரம்பரிய "தேசிய நலன்களை" கருத்தில் கொண்டு அவ்வாறு கண்டனங்களை தெரிவித்திருக்கிறது. ஈராக்கிலிருந்து எல்லா வெளிநாட்டுத் துருப்புக்களும் நிபந்தனையில்லாமல் விலக்கிக்கொள்ள வேண்டுமென்ற கோரிக்கையை விடுக்கவில்லை. அதற்குப் பதிலாக "அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் ஈராக்கை பிடித்துக் கொண்டிருப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றும், நாடுகளுக்கிடையே உருவாகின்ற எல்லாத் தகராறுகளையும் தீர்த்து வைப்பதற்கு ஐ.நா. போன்ற பன்னாட்டு அரங்குகளை வலுப்படுத்த வேண்டுமென்றும்" கோரியுள்ளது. இதற்கு "ஐ.நா. பாதுகாப்பு சபையையும், ஐ.நா. அமைப்பையும் ஜனநாயக மயமாக்க" வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்திருக்கிறது.

சிபிஐ(எம்)-ன் நிலைப்பாடு, பிஜேபி மிகப்பெரும் அளவில் கண்மண் தெரியாமல், சென்று கொண்டிருக்கின்ற அமெரிக்க ஏகாதிபத்தியத்தோடு அதிக நெருக்கம் கொண்டிருப்பதாகவும், புது தில்லி அதிக தன்னாட்சி உரிமையோடு தன்னிச்சையாக இதர ஏகாதிபத்திய மற்றும் வல்லரசுகளோடு ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யா மற்றும் சீனாவோடு கூட்டணிகளை உருவாக்கிக்கொள்ள வேண்டுமென்றும் இந்திய செல்வந்தத் தட்டின் கவலைகளை எதிரொலிப்பதாகவே அமைந்திருக்கிறது.

இந்தியா சமுதாய கொந்தளிப்பு காலத்தை எதிர்நோக்கிக்கொண்டிருக்கிறது. இந்திய முதலாளித்துவ வர்க்கம், மிகுந்த ஆசைகளோடு இந்தியாவை உலக வல்லரசாக மாற்றுவதற்கு முயன்று வருகிறது. சர்வதேச முதலீடுகள் பயன்படுத்திக்கொள்வதற்காக இந்தியாவை மலிவுவிலை உழைப்பு அலுவலகமாகவும், ஆய்வுக்கூடமாகவும், பணிப்பட்டறையாகவும் மாற்றி, அணு ஆயுதங்கள் உட்பட இராணுவ வலிமையை இடையறாது பெருக்கவும் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. இந்த இரண்டு நோக்கங்களுமே உழைக்கும் மக்களை சுரண்டுவதை மிக வேகமாக நடத்துவதன் மூலமும் அரசாங்கத்தின் சர்வாதிகார அதிகாரங்கள் உருவாக்கப்படுவதன் மூலமும் மட்டும்தான் அடையப்பட முடியும்.

இந்தத் திட்டத்திற்கு மக்களது ஆதரவு அடித்தளத்தை உருவாக்க இயலாத காரணத்தினால், இந்திய முதலாளித்துவ வர்க்கம் மிகப்பெரும் அளவில் வளர்ந்துகொண்டு வருகின்ற பிற்போக்குத்தனமான பிளவுபடுத்துகின்ற, வகுப்புவாத, சாதிய மற்றும் வட்டார உணர்வு அரசியல் நோக்கித் திரும்புகிறது

முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு, இந்திய தொழிலாள வர்க்கம் இருபதாம் நூற்றாண்டின் இராட்சதப் போராட்டங்களிலிருந்து மூலோபாய படிப்பினைகளைப் பெற வேண்டியது அவசியமாகும், இவற்றில் துணை கண்டத்தையே அதிர வைத்த படிப்பினைகளும் குறைவானதல்ல. நிரந்தரப் புரட்சி மூலோபாய அடிப்படையில் ஒரு புதிய புரட்சிக் கட்சி தொழிலாள வர்க்கத்தாலும் ஒடுக்கப்பட்ட மக்களாலும் உருவாக்கப்பட வேண்டும். இதுதான் ஏகாதிபத்தியத்திற்கெதிரான போராட்டம் பற்றிய மற்றும் முதலாளித்துவ காலத்திற்கு முந்திய சுரண்டல்கள் அனைத்தும் தடம் தெரியாமல் துடைத்தெறியப்பட வேண்டும் என்பது பற்றிய புரிதலாகும். அத்தகைய நடவடிக்கை எப்போது சாத்தியமென்றால் தொழிலாள வர்க்கமானது முதலாளித்துவ வர்க்கத்திலிருந்தும் அதனை முதலாளித்துவ வர்க்கத்தோடு முடிச்சுப்போடும் சிபிஐ(எம்) போன்ற கட்சிகளுடனும் அரசியல் ரீதியாக தம்மை முறித்துக்கொண்டு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தலைமையாக தன்னையே இருத்திக் கொண்டு, உலக முதலாளித்துவத்திற்கு எதிரான சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்துடன் அதன் போராட்டத்தை இணைக்கும் போதுதான் ஆகும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved