World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா

Europe and US approve all-African military force

அனைத்து ஆப்பிரிக்க இராணுவப் படைக்கு ஐரோப்பா மற்றும் அமெரிக்கா ஒப்புதல்

By Brian Smith
13 April 2004

Back to screen version

ஐரோப்பிய ஒன்றியமானது (EU) அமெரிக்கா மற்றும் G8 குழுவைச் சார்ந்த தொழிற்துறை நாடுகளுடன் சேர்ந்து ஆப்பிரிக்க துணைப் படைக்கு (ASF) ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தப் படையை உருவாக்குவதற்கு 250 மில்லியன் யூரோக்களை வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றியம் உறுதியளித்துள்ளதுடன், கண்டத்தில் மோதல்கள் நடக்கும் பகுதிகளில் இந்தப் படை தலையிடுவதற்கு உத்தேசிக்கப்பட்டிருக்கிறது.

ASF ஆப்பிரிக்க நாடுகள் தலைமையிலான முயற்சி என்று சித்தரிக்கப்படுவதால், அது ஆப்பிரிக்க யூனியனுக்கே (AU) கட்டுப்பட்டதாகும். ஆனால் பயிற்சி மற்றும் நிதி ஆதரவிற்கு மேற்கு நாடுகளையே இது சார்ந்திருக்கவேண்டும். ஆதலால், ஏகாதிபத்திய அரசுகள் கண்டத்தின் வளங்களை சுரண்டிக் கொள்வதற்கு இந்தப் படை கருவியாக செயல்படும்.

அதிகாரப்பூர்வமாக, ''தொந்தரவுள்ள கண்டம்'' இறுதியாக ஆப்பிரிக்கா ''தன்னை சரிசெய்து'' கொண்டு ''மோதல்களை தீர்த்து'' வருகிறபோது, முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமைதியும், பாதுகாப்பும், ஜனநாயமும் தேவை என்று கருதுகிறது. அதன் காரணமாய் ASF பிராந்திய மோதல்களில் தலையிடுவது மற்றும் இனப் படுகொலைகளை தடுப்பதற்கு பயன்படுத்தப்படும் எனவும், 10 ஆண்டுகளுக்கு முன்னர் ருவாண்டாவில் நடைபெற்ற இனப் படுகொலைகள் இந்தப்படை உருவாகுவதற்கு ஒரு பாகமாக இருந்துள்ளது எனவும் கூறப்படுகிறது.

ஏகாதிபத்திய வல்லரசுகள் ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள இயற்கை வளங்களையும், பாதுகாப்பு மூலோபாய நிலைகளையும் கைப்பற்றுவதற்கு மேற்கொண்ட முயற்சிகளின் நேரடி விளைவுகள்தான் ருவாண்டா இனப் படுகொலை உட்பட சகல மோதல் பிரச்சனைகளுக்கும் உண்மையான காரணமாக இருக்கின்றது.

லைபீரியாவிற்கு, நைஜீரியா துருப்புக்கள் அனுப்பப்பட்டுள்ளன. புரூண்டிக்கு தென்னாப்பிரிக்கத் துருப்புக்கள் அனுப்பப்பட்டுள்ளன. இவை எதிர்காலத்தில் எப்படி இந்தப்படை பயன்படுத்தப்படும் என்பதற்கு எடுத்துக் காட்டுகளாகும். பிரிட்டன் சியாரா லியோனில் தான் தலையிட்டதை நல்ல முன் மாதிரியாகக் கருதுகிறது. இராணுவம், போலீஸ் தலைமை அலுவலகம் மற்றும் முன்னணி சிவில் அதிகாரிகள் பிரிட்டனை சேர்ந்தவர்களாக இருப்பதால் அது மீண்டும் காலனியாதிக்கத்தை உண்மையிலேயே நிலைநாட்டுவதாக அமைந்துள்ளது.

2005 ஆண்டில் செயல்படவிருக்கும் இந்த இராணுவப் படையானது, துவக்கத்தில் படையினர், போலீசார் மற்றும் கண்காணிப்பாளர்களைக்கொண்டு சுமார் 15,000 பேர் அடங்கிய ஐந்து படைப் பிரிவுகளாக இயங்கும். இந்த ஒவ்வொரு பிரிவும் ''நம்பகத்தன்மை'' கொண்ட தென்னாப்பிரிக்கா, நைஜீரியா, கென்யா மற்றும் எகிப்து போன்ற நாடுகளிலிருந்து செயல்படும். மேற்குலகின் நன்கொடைகளைப் பொறுத்து இந்தப் படைப்பிரிவு அமைக்கப்படுவதால், எதிர்காலத்தில் தேவைக்கேற்ப இந்தப் படைப்பிரிவின் எண்ணிக்கையை உயர்த்திக் கொள்ள முடியும்.

மேற்குலகின் ஆதரவைப் பெற்றுள்ள பல இராணுவ முகாம்களில் இப்படையினர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். தகவல் தொடர்புகள், புலனாய்வு மற்றும் கண்காணிப்பு பயிற்சிகள் என்பன அங்கு தரப்படும். அமெரிக்கா, கனடா, ஜேர்மனி மற்றும் பிரிட்டனின் ஆதரவோடு கானா நாட்டில் கோபி அன்னானினால் (Kofi Annan) புதிதாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள சர்வதேச சமாதான பயிற்சி நிலையமானது, இப்படைப்பிரிவின் ஒருங்கிணைப்பு நடவடிக்கையில் ஈடுபடும்.

ஆப்பிரிக்க இராணுவப் படையை ஸ்தாபிப்பதற்கு ஏகாதிபத்திய வல்லரசுகள் அக்கறை கொண்டிருப்பதற்கான காரணம், தங்களது சொந்தப் படைகளை களத்தில் இறக்கி அதனால் ஏற்படும் ஆபத்துக்களை தவிர்ப்பதற்காகும். 1989 முதல் அமைதிகாப்பு நடைவடிக்கைகளில் ஆப்பிரிக்க நாடுகளின் துருப்புக்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருவது குறித்து ஐ.நா சிந்தித்ததினால் இந்த மாற்றம் உருவாகியுள்ளது.

ஆப்பிரிக்க ஒன்றியமானது முந்திய ஆப்பிரிக்க ஒற்றுமை அமைப்பின் (OAU) ஒரு வாரிசாகும். ஆப்பிரிக்கா கண்டத்து முதலாளித்துவ அரசாங்கத்தின் சேவையுடன், அங்குள்ள இயற்கை வளங்களை ஏகாதிபத்தியம் சுரண்டுவதற்கு உதவுகின்ற ஒரு அமைப்புதான் இது. இந்த அமைப்பின் தலைமை அலுவலகம் எத்தியோப்பியாவிலுள்ளது. சமாதானம் மற்றும் பாதுகாப்பு சபை (Peace and Security Council - PSC) என்று அழைக்கப்படும் தலைமை அலுவலகமானது, ASF ஐ தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். 45 ஆப்பிரிக்க நாடுகள் அடங்கிய 265 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு நாடாளுமன்றமும், மனித உரிமைகளை நிலைநாட்டும் ஒரு நீதிமன்றமும் இதில் இடம்பெற்றுள்ளது. PSC ஐ.நா பாதுகாப்பு சபையை முன்மாதிரியாகக் கொண்டு அமைக்கப்பட்டிருந்தாலும், அதற்கு ரத்து அதிகாரம் எதுவும் கிடையாது.

ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான போட்டி

ஈராக்கிற்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்ட போர் சர்வதேச உறவுகளில் நச்சுத்தன்மையை பரப்பி ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான போட்டிகளை மேலும் முடுக்கிவிட்டுள்ளது. சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்த பின்னர் இந்த சக்திகள் மீண்டும் வலுவாக தலைதூக்கியுள்ளன. அமெரிக்க ஆளும் செல்வந்த தட்டின் பிரிவினர், பிரான்ஸ் மற்றும் இதர ஏகாதிபத்தியங்களின் பங்களிப்பு நீண்ட கால அவசியத்திற்கு இனித் தேவயில்லை என்று முடிவுக்கு வந்துள்ளனர். ஏனென்றால் நீண்டகாலம் எதிர்கொண்ட ''சோவியத் அச்சுறுத்தல்'' இனி இல்லை என்பதினாலாகும்.

இரண்டாவது உலகப்போரின் போது பிரான்சை, போருக்கு பிந்தைய ஏகாதிபத்திய வரைபடத்திலிருந்து நீக்கிவிட அமெரிக்கா கருதியது. இருந்தபோதிலும், சுதந்திர இயக்கங்களும், கிளர்ச்சிகளும் காலனித்துவ உலகம் முழுவதையும் சூழ்ந்துகொண்டதால் குளிர்யுத்த நிலைமைகளும் உருவாயிற்று. இதனால், அமெரிக்கா தனது முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எனவே பிரான்ஸ் ஓரளவிற்கு, குறிப்பாக அதன் ஆப்பிரிக்க காலனித்துவ செல்வாக்கை நிலைநாட்டிக்கொள்ள அனுமதிக்கப்பட்டது. ஆனால் இந்த ஏற்பாடுகள் எப்போதும் மகிழ்வாக இருந்ததில்லை. நிலைமை இப்போது முற்றிலும் மாறிவிட்டது.

மறுகாலனித்துவ நிகழ்ச்சிப் போக்கானது, -- ஆப்பிரிக்காவில் புதிய போட்டிகள் -- சந்தைகள் மற்றும் இயற்கை வளங்களை கைப்பற்றுவது மற்றும் மூலோபாய நிலைப்பாட்டை தமது போட்டியாளர்களுக்கு மேலாக நிலைநாட்டுவது ஆகிய நடவடிக்கைகள் என்பன அடிப்படையில் ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான மோதல்களை உண்டுபண்ணியுள்ளன. வரலாற்று அடிப்படையில் பிரான்சின் செல்வாக்கு மையமான பகுதிகளில் அமெரிக்கா ஊடுருவி வருவதால், பிரான்ஸ் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறது. ஆகவே, இந்த இரண்டு அரசுகளும் ஆத்திரமூட்டல் நிலைமைகளையும், மோதல்களையும் ஆப்பிரிக்கா முழுவதிலும் உருவாக்கிக் கொண்டுள்ளன. தமது ஆதிக்கத்திற்காக போட்டியிடும் போது, தங்களது நலன்களை பாதுகாக்கின்ற உள்ளூர் போட்டிப் பிரிவுகளை இரண்டு அரசுகளும் ஆதரித்து வருகின்றன.

ஆப்பிரிக்கா கண்டத்தில் அண்மையில் நடந்துவரும் மோதல்கள் என்பன ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான, குறிப்பாக பிரான்சிற்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான யுத்தங்களாக இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, புரூண்டி உள்நாட்டுப்போரில் அமெரிக்கா வரலாற்று அடிப்படையில் டுட்சி இனத்தை ஆதரித்து வருகிறது. ஆனால், பிரான்ஸ் அங்கிருக்கும் ஹுட்டு இனத்தை ஆதரிக்கிறது. இதே நிலவரம்தான் அயல் நாடான ருவாண்டாவிலும் நீடிப்பதால், அதே போன்ற துயர விளைவுகள் சுலபமாக அங்கும் ஏற்படலாம்.

இந்தப் பிரிவுகள் அயல்நாடான கொங்கோ ஜனநாயக குடியரசிலும் செயல்பட்டு வருகின்றன. தங்க மற்றும் வைரச் சுரங்கங்களின் கட்டுப்பாட்டிற்காக புரூண்டியைச் சேர்ந்த டுட்சி இனத்தவர்கள் கொங்கோ அரசாங்கத்துடன் போரிட்டு வருகின்றனர். கொங்கோ அரசாங்கத்திற்கு அங்கோலா மற்றும் ஜிம்பாப்வே முதலிய தனது நட்பு நாடுகள் மூலம் பிரான்ஸ் ஆதரவு தந்து வருகிறது. எனவே கொங்கோ அரசாங்கம் அமெரிக்கா மற்றும் அதன் இளைய பங்காளியான பிரிட்டனோடு மோதிக் கொண்டுள்ளது.

சாட் நாட்டிற்கும் மத்திய ஆப்பிரிக்க குடியரசிற்கும் இடையே நடைபெற்று வருகின்ற மோதலில், வரலாற்று அடிப்படையில் பிரான்சின் கூட்டணி நாடாகவுள்ள சாட்டில் பிரெஞ்சுப் படைகள் நிலை கொண்டுள்ளன. மத்திய ஆப்பிரிக்க குடியரசை உகாண்டாவை சேர்ந்த அமெரிக்க ஆதரவுபெற்ற டூட்சி இனத்தவர் ஆதரிக்கிறார்கள். இந்த பிராந்தியத்து எண்ணெய்க் குழாய் இணைப்பு வழித்தடத்தின் ஒரு பகுதியாக சாட் உள்ளதால், மிக அண்மையில் அல்ஜீரியாவின் அடிப்படைவாத இஸ்லாமியர்களுக்கு எதிராக சாட்டிற்கு அமெரிக்கா ஆதரவு தந்துள்ளது.

பிரெஞ்சு ஜனாதிபதி ஜாக் சிராக் ஓராண்டிற்கு முன்னர் ஆப்பிரிக்க உச்சி மாநாட்டை நடத்தினார். ஏறத்தாழ எல்லா ஆப்பிரிக்க அரசுகளின் தலைவர்களும் கலந்து கொண்ட இந்த மாநாட்டில், சிராக் பிரான்சின் செல்வாக்கை ஆப்பிரிக்காவில் வளர்க்க முயன்றார். அத்துடன், இந்த மாநாட்டில் வழக்கத்திற்கு மாறான ஒரு நடவடிக்கையாக, ஈராக்போர் தொடர்பாக அமெரிக்காவின் நிலைப்பாட்டை கண்டிக்கும் பிரகடனம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இதன் பின்பு, பிரான்சின் நிர்பந்தத்தால் இந்தப் பிரகடனத்தில் தாங்கள் கையெழுத்திடுவதற்கு "வழி இழுக்கப்பட்டதாக'' சில நாடுகள் மறைமுகமாய் சுட்டிக்காட்டின.

பெருகிவரும் இராணுவவாதம்

அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் இராணுவவாதமானது, அதன் போட்டியாளர்களைவிட மிகவும் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மற்றும் எல்லா ஏகாதிபத்தியங்களுமே எதிர்கால மோதல்களுக்காக தயாராகி வருகின்றன. ஜேர்மனியும், ஜப்பானும் போருக்கு பின்பு உருவாக்கப்பட்ட தங்களது அரசியலமைப்பை மாற்றி, வெளிநாடுகளுக்கு படைகளை அனுப்புவதற்கு ஏற்பாடு செய்து வருகின்றன. ஜப்பான் ஈராக்கிற்கு துருப்புக்களை அனுப்பியிருப்பதால், ஆப்பிரிக்காவில் முக்கிய முன்னுரிமை கவனம் செலுத்தப்படும் என்று அறிவித்துள்ளது. அனைத்து ஏகாதிபத்தியங்களில், ஜப்பான் மட்டுமே இயற்கை வளங்களில் முடக்கப்பட்ட நிலையில் குறிப்பாக எண்ணெய் வளத்தில் பிற நாடுகளை எதிர்பார்க்கும் நிலையில் உள்ளது.

சிறிது காலமாக அமெரிக்க இராணுவம் ஆப்பிரிக்க நாடுகளில் புதிய இராணுவத் தளங்களை அமைப்பதற்கான திட்டங்கள் குறித்து பகிரங்கமாக விவாதித்து வருகிறது. குறிப்பாக கினே வளைகுடாப் (Gulf of Guinea) பகுதியில் இராணுவத் தளம் அமைக்கப்படுவது பற்றி விவாதித்து வருகிறது. அங்கு ஆழ்கடல் பகுதியில் கிடைக்கின்ற எண்ணெய் வளத்தை எடுப்பதற்கான தொழில் நுட்பம் வளர்ந்திருக்கிறது. எடுத்துகாட்டாக மேற்கு ஆப்பிரிக்க கரையை ஒட்டியுள்ள சாஓ டொமே மற்றும் பிரின்சிப் (ஷிஏஷீ ஜிஷீனீங ணீஸீபீ Principe) என்ற சிறிய தீவில் ஒரு கடற்படைத் தளம் அமைக்கப்படலாம். அந்தப் பகுதியில் நைஜீரியாவுடன் சேர்ந்து 11 பில்லியன் பீப்பாய் எண்ணெய் வளம் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. அந்த தீவுகளுக்கு அமெரிக்க அரசுத்துறை செயலர் கொலின் பவல் விஜயம் செய்ததைத் தொடர்ந்து 2003 ல் ஒரு இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு நடைபெற்றது.

ஆப்பிரிக்க துணைக் குழுவின் தலைவரும், அமெரிக்க குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான எட் ரொய்ஸ் (Ed Royce) அண்மையில் ஆப்பிரிக்கா ''பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் மிருதுவான அடிவயிற்றுப்பகுதி'' என்று வர்ணித்தார்.

கடந்த பல மாதங்களாக அமெரிக்காவின் ஆதரவுபெற்ற மேற்கு ஆப்பிரிக்க சாகெல் (Pan-Sahel) பிராந்திய நாடுகளான மொரிட்டானியா, சாட், மாலி மற்றும் நைஜர் ஆகியவற்றிக்கு பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சி தருவதற்காக அமெரிக்காவின் சிறப்பு துருப்புக்கள் அனுப்பப்பட்டுள்ளன. அத்துடன், நேரடியாக வடக்கேயுள்ள மாக்ரெப் (Maghreb) பிராந்தியத்திலுள்ள மொராக்கோ, அல்ஜீரியா மற்றும் துனீஷியாவுடன் இராணுவ ஒத்துழைப்பும் அதிகரித்திருக்கிறது. மாக்ரெப் பிராந்தியமானது மத்தியதரைக் கடல் எல்லையை தொட்டுக்கொண்டிருக்கிறது. இது மத்திய கிழக்கிற்கும், மத்திய கிழக்கிலிருந்து எண்ணெய் மற்றும் இராணுவ போக்குவரத்துக்கும், மூலோபாய புவியியல் முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழித் தடமாக அமைந்துள்ளது.

மேற்கு ஆப்பிரிக்காவில் அல்கொய்தா செயல்பட்டு வருவதாகவும், அங்கு தளங்களை ஸ்தாபித்திருப்பதாகவும் அமெரிக்கா கவலைகளைத் தெரிவித்துக் கொண்டிருந்த நிலையில், இந்த ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்க இராணுவம் சாவோ டோமே பாதுகாப்பு நிறுவனங்களுக்கு பயிற்சி கொடுக்க தொடங்கியிருக்கிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போட்டியாளர்களில் குறிப்பிடத்தக்க ஒன்றான ரஷ்யாவிற்கு எதிராக, அமெரிக்காவிற்கு பயன்தருகின்ற வகையில் நேட்டா விஸ்தரிப்பும் நடந்து கொண்டிருக்கிறது. அதே நேரத்தில், ஐரோப்பிய ஒன்றியமும் சொந்த இராணுவப் படையின் தேவையை ஒட்டி விழிப்புணர்வுடன் இருப்பதால், இது நேரடியாக நேட்டோவின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக உள்ளது.

அமெரிக்க இராணுவத்தின் ஐரோப்பிய தலைமையைச் சேர்ந்த பல தளபதிகள் ஆப்பிரிக்க நாடுகளுக்கு வழக்கமான பயணங்களுக்கு மேற்பட்ட நிலையில் விஜயம் செய்திருக்கின்றனர். இந்த அதிகாரிகளில் கடற்படைத் தளபதி ஜெனரல் ஜேம்ஸ் L. ஜோன்ஸ் மற்றும் விமானப்படை துணைத் தளபதி ஜெனரல் சார்ல்ஸ் வாட் ஆகியோர் அடங்குவர்.

ஜெனரல் வாட் பயங்கரவாதத்திற்கு எதிரான போரை, பொருத்தமில்லாமல் நியாயப்படுத்தும் அறிக்கை ஒன்றை வெளியிட்டு, எப்படி இந்த அச்சுறுத்தல் மக்களை பசைபோல் ஒட்டிக்கொள்கிறது என்று விளக்கினார். ''மக்கள் ஸ்திரமற்ற நிலைபற்றியும் அடிப்படைவாதம் பற்றியும் கவலையடைந்துள்ளனர். மற்றும் பயங்கரவாதம் பற்றிய அச்சுறுத்தல் என்பது பயங்கரவாதத்தைப் போன்று மிகவும் மோசமானதாகும். எனது வாழ்நாளில், நாம் எதிர்கொண்டதில் இது மிக மோசமானதாகும். இந்தக் குழுவினருக்கு எல்லைகளில்லை. இவர்கள் தலைகீழாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இவர்களை எதிர்த்துப் போரிடுவதற்கு ஒரு ஸ்திரத்தன்மையும், போரிடும் வல்லமையும் வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

அல்-கொய்தாவிற்கும் ஹிஸ்புல்லாவிற்கும் தொடர்புள்ளதென்றும், இந்த இரு அமைப்புக்களும் வைர வியாபாரத்தில் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள் என்றும், ஆப்பிரிக்காவில் மோதல் நடக்கும் பகுதிகளில் குறிப்பாக ''ரத்த வைரங்களில்'' அவர்கள் வியாபாரம் செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன் தெளிவான உட்பொருள் என்னவென்றால், அமெரிக்காவின் பயங்கரவாத்திற்கு எதிரான போரானது, மிக விரைவில் மோதல்களுக்கு இலக்காகும் பகுதிகளில் உள்ள வைரச் சுரங்கங்களை ''பாதுகாப்பதற்கு'' எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது என்பதாகும். பயங்கரவாத்திற்கு எதிரான போர் என்பதை எங்கு வேண்டுமானாலும் வசதியான ஒரு கருவியாக கட்டவிழ்த்துவிட்டு, அந்த அச்சுறுத்தலை மோதல்களாக தூண்டிவிட்டு அதற்குப்பின்னர் முக்கிய இயற்கை வளங்களை கைப்பற்றிக்கொள்வதுதான் அமெரிக்காவின் நோக்கமாக இருக்கின்றது.

''2002 ஆம் ஆண்டில் ஆப்பிரிக்கா கண்டம் ஸ்திரமான எண்ணெய் வள நிலைகளோடு இருந்தது. இந்த மதிப்பீட்டின் மூலம், ஆப்பிரிக்க எண்ணெய் வளத்தை கையகப்படுத்தப்பட வேண்டும் என்ற அமெரிக்காவின் உள்நாட்டு நிர்பந்தங்கள் என்பன ஒரே நேரத்தில் அதிகரித்தது. அதே நேரத்தில் அமெரிக்காவின் எண்ணெய் தேவைகளுக்கு ஏற்ப அல்கொய்தா அச்சுறுத்தலும் கணிசமான அளவிற்கு வளர்ந்தது'' என்று ஏசியா டைம்ஸில் ரிட் கோல்ட்ஸ்ரைன் (Ritt Goldstein) என்பவர் எழுதியுள்ளார். குறிப்பாக உலக வர்த்தக மைய கட்டிடத்தின் மீது பயங்கரவாத தாக்குதல் நடந்த பின்னர், தேவைப்பட்டால் தலையிடுவது என்ற அச்சுறுத்தல்களை மிகைப்படுத்தும் பொதுக்கொள்கையையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த தாக்குதலுக்குப் பின்னர், அமெரிக்க பெரிய நிறுவனங்களும் பழமைவாத கொள்கை குழுக்களும் எரிவாயு, சக்தி வளங்களை பாதுகாப்பதற்காக மத்திய கிழக்கிலும், அதற்கு வெளியிலும் தலையிட வேண்டுமென கூச்சலிட்டு வருகின்றன. ஆப்பிரிக்க எண்ணெய் வளத்தைப் பெறுவதில் எந்தவிதமான அச்சுறுத்தலுக்கும் இடமில்லை என்பதை ஒப்புக்கொண்டாலும், ''அப்படியே நீடிக்கும் என்பதை உறுதிப்படுத்துவதில்'' புஷ் நிர்வாகம் தனது அறிக்கையில் அசையா உறுதிகொண்டுள்ளது

பிரிட்டனின் நிதி சஞ்சிகையான எக்னோமிஸ்ட் 2002 ல் ''ஆப்பிரிக்காவில் அமெரிக்காவின் நலன் எண்ணெய்தான்'' என்று குறிப்பிட்டுள்ளது. 2015 வாக்கில் அமெரிக்கா தனது எண்ணெய், எரிவாயுத் தேவைகளில் 25 சதவீதத்தை ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதுடன், எண்ணெய் வள மற்றும் எரிவாயு வளமாக இந்தக் கண்டம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. 2002 ல் செவ்ரோன் (Chevron) நிறுவனம் முந்திய 5 ஆண்டுகளில் 5 பில்லியன் டாலர்களை முதலீடு செய்திருப்பதாகவும், அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 20 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யப்போகவதாகவும் அறிவித்துள்ளது.

Global Policy Forum நிர்வாக இயக்குனரான ஜிம் போல் என்பவர், எண்ணெய் தொழிற்துறை மிதமிஞ்சிய லாப நோக்கோடு செயல்பட்டு வருவதாகக் கருதுகிறார். ஒவ்வொருவரும் ''இதே நோக்கில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் சந்தைகளில் நெறிமுறைப்படுத்தும் போக்கு இல்லாததால் எண்ணெய் தொழிற்துறை எங்கு இடம் பெயர்ந்தாலும், அதனுடன் போர் மற்றும் லஞ்ச ஊழல் என்பன தாண்டவம் ஆடுகிறது'' என்று கூறியுள்ளார்.

ஈராக்கிற்கு அடுத்து எண்ணெய் வளப்போர் ஆப்பிரிக்காவில்தான் என்று Resource Wars என்ற பத்திரிகையின் ஆசிரியர் மிக்கேல் கிளார் (Michael Klare) கூறுகிறார்.

பொருளாதாரத் தாக்குதல்

ஆப்பிரிக்காவை மீண்டும் மறுகாலனித்துவமாக மாற்றுவது என்பதானது, பிராந்தியத்தில் பழைய காலனித்துவத்தை புத்துயிர் செய்வதாகும். எடுத்துக்காட்டாக மார்ச்சில், கிழக்கு ஆப்பிரிக்க சமுதாயம் மீண்டும் பிறவி எடுத்தது. கென்யா, தான்சானியா மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளின் 94 மில்லியன் மக்கள் திறந்த சந்தைக்கு வரும் நிலை உருவாகியுள்ளது. இது பழைய பிரிட்டிஷ் கிழக்கு ஆப்பிரிக்காவை நினைவுபடுத்தும் வகையில் உள்ளது. மேற்கு ஆப்பிரிக்க பொருளாதார சமுதாயம் இந்த ஆண்டு முதல் தனது 16 உறுப்பு நாடுகளுக்குமான ஒரே கடவுச்சீட்டை வழங்கத் தொடங்கியுள்ளது.

இந்த அமைப்புக்கள் எத்தகைய ஒற்றுமையை எடுத்துக்காட்ட விரும்பினாலும், பன்னாட்டு நிறுவனங்கள் மிக எளிதாக தொழிலாளர்களையும், பிராந்திய வளத்தையும், சந்தைகளையும் சுரண்டிக்கொள்ள முடியும். அத்துடன் ஒரே நாணய மண்டலங்களையும் மற்றும் வரிவிதிப்பு சமச்சீர் நிலையையும் உருவாக்க அவை விரும்புகின்றன.

ஆப்பிரிக்க ஒன்றியம், ஆப்பிரிக்க வளர்ச்சிக்கான புதிய பங்குதார (New Partnership for African Development - NEPAD) பொருளாதார அரங்கை மேற்கொள்கிறது. இது உலகப் பொருளாதாரத்துடன் முழுமையான ஒருங்கிணைப்பிற்கு வகைசெய்வதால், G-8 நாடுகளும் இதற்கு ஆதரவு காட்டுகின்றன. பெரிய நிறுவனங்கள் இடைவிடாது வர்த்தகப் போர்களில் ஈடுபட்டிருக்கும் போது, கண்டத்தை தங்கள் வசதியான நெம்புகோல் சந்தையாக இவர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

உலகில் மிகவும் ஏழ்மையான நாடுகள், தமது வெளிக்கடன்களை குறைத்துக் கொள்வதை உறுதியளிக்கவும், ''சீர்திருத்தங்களை'' அரசுத் துறைகளில் குறிப்பாக சுகாதாரத் திட்டங்கள், கல்வி மற்றும் பயன்பாட்டு சேவைகளில் மேற்கொள்ளவும் மேற்கு நாடுகளால் வற்புறுத்தப்பட்டு வருகின்றன. (பன்னாட்டு நிறுவனங்கள் பயன்பெறும் நிலையில்தான் இத்துறைகள் தனியார்மயமாக்கப்படும்)

அத்தோடு, புஷ் நிர்வாகத்தின் ஆப்பிரிக்க எய்ட்ஸ் (AIDS) உதவித்திட்டம் என்பது சிடுமூஞ்சித்தனமான, தமது நலன்களைக் கொண்டுள்ள திட்டமாகும். இது அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்ட மருந்துக் கம்பெனிகள் மற்றும் ஏனைய நாடுகடந்த நிறுவனங்களின் நலன்களுக்காக போட்டிகளுடன் வலிந்து செயற்படுத்துவதற்கான திட்டமாக இருக்கின்றது.

NEPAD ன் மற்றொரு அம்சமான "Peer Review" என்ற அமைப்பை ஏகாதிபத்தியவாதிகள் வரவேற்றுள்ளார்கள். இதன்படி, அயல்நாடுகளின் (மேற்கின் வங்கிகள்) பரிசீலனைக்கு நிதி, கொள்கைகள் மற்றும் செயல்திட்டங்களை திறந்துவிட ஆப்பிரிக்க ஆட்சிகள் சம்மதித்துள்ளன. இதே போன்று நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்தை நிலைநாட்டினால் அதிகமான முதலீட்டாளர்கள் கவரப்படுவார்கள் என்று சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவை ஏகாதிபத்தியவாதிகள் சார்பில் வலியுறுத்திவரும் ''வெளிப்படை'' நடைமுறையின் விரிவாக்கமாக உள்ளது.

வளர்ந்துவரும் நாடுகளுக்கு எதிராக மேற்கு அரசுகள் பயனடையும் வகையில் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்களும் செய்யப்பட்டுள்ளன. மேற்கு நாடுகளின் பெரும் துண்டுவிழும் தொகை காப்புவரிகளை வளர்முக நாடுகள் தாக்குப்பிடிக்க முடியாது.

அத்தோடு, உதவி மற்றும் கடன் என்பனவற்றை உலகவங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றினூடாக ஏகாதிபத்தியம் நிர்வகிப்பதுடன், இவற்றினூடாக ஏழை ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதாரத்தை கட்டுப்படுத்துகின்றன. இந்த நாடுகள், தமது கடன்களைத் திருப்பிச் செலுத்தும் அளவானது, புதிதாகப் பெறும் உதவியைவிட அதிகமாக உள்ளது. அதே நேரத்தில், மேற்குலகின் வங்கிகளுக்கு சப்-சஹாரா ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து (sub-Saharan Africa) தினசரி 250 மில்லியன் டாலர்கள் சென்று கொண்டிருக்கின்றன.

பல சப்-சஹாரா நாடுகளில் உள்நாட்டு உற்பத்தியைவிட (GDP) வெளிநாட்டுக் கடன்களின் அளவு 6 மடங்குகள் அதிகமாக உள்ளன. இவற்றில் சில நாடுகள் தங்களது ஏற்றுமதி வருவாயில் 80 சதவீதத்தை தங்களது கடன்களை அடைப்பதற்கே செலவிட்டு வருகின்றன. மிகப்பெரும்பாலான நாடுகள் ஒன்றிரண்டு பொருட்களின் ஏற்றுமதியை மட்டுமே நம்பியுள்ளன. அத்துடன், அவற்றின் விலைவாசிப் போக்குகளும் வீழ்ச்சியடைந்துள்ளன.

ஆகவே, ஆப்பிரிக்கத் துணைப்படை என்பது ஏகாதிபத்தியத்திற்காக, ஆப்பிரிக்க கண்டத்து வளங்களைக் கட்டுப்படுத்துவதற்காகவே ஒழிய, அதனால் வேறொன்றும் செய்ய முடியாது. இந்தப் படைப்பிரிவானது, சுரங்கங்கள், எண்ணெய் வயல்கள், தண்ணீர் மற்றும் இதர ஆதார வளங்களை ஏகாதிபத்திய மற்றும் பன்னாட்டுக் கம்பெனிகளின் இலாபத்திற்கான சேவையை செய்யும். பூகோள முதலாளித்துவம், பூகோள ரீதியாக சந்தைகளைத் தேடி அலைவதால், அது பெருமளவில் இராணுவ வழிமுறைகளை நாடுகின்றது. ஆதலால், பொருளாதார வளங்கள் மற்றும் மூலோபாய நிலைப்பாடுகளுக்கான போட்டிகள் கடுமையாகும்போது உள்நாட்டுப்போர்கள், சமூக குழப்பங்கள், வறுமை மற்றும் கடன்சுமை என்பன தவிர்க்கமுடியாதபடி உருவாகின்றன.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved