World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

The siege of Fallujah

America on a killing spree

பல்லுஜா முற்றுகை

ஒரு கொலை வெறியாட்டத்தில் அமெரிக்கா

By Bill Van Auken
18 November 2004

Back to screen version

பல்லூஜாவில் உள்ள ஒரு மசூதியில் காயம்பட்டு ஆயுதம் எதுவும் இல்லாமலிருந்த ஒரு ஈராக்கியரை ஒரு அமெரிக்க சிப்பாய் தனது துப்பாக்கியால் அருகிலிருந்து சுட்டுக் கொன்றார். தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பப்பட்ட அந்த வீடியோ காட்சி மத்திய கிழக்கு முழுவதிலும் ஆத்திரத்தை தூண்டிவிட்டிருக்கிறது. அதே நேரத்தில் அமெரிக்க இராணுவத்திற்கு ஒரு புதிய நெருக்கடியையும் உருவாக்கியிருக்கிறது.

இந்தக் கொலை ஒரு போர்க் குற்றமாக ஆகுமா என்பது குறித்து பென்டகன் அதிகாரப்பூர்வமான விசாரணையைத் தொடக்கியிருப்பதால், அந்த சிப்பாய் அவர் பணியாற்றிய பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருக்கிறார்.

''ஆயுதந் தாங்கிய மோதல் விதியை நாங்கள் பின்பற்றுகிறோம், மிக உயர்ந்த பொறுப்பேற்கும் தரத்தை நாங்கள் பெற்றிருக்கிறோம்'' என்று 1 வது கடற்படை அதிரடிப்படைப்பிரிவின் தளபதியான லெப்டினட் ஜெனரல் ஜோன் சட்லர் (John Sattler) குறிப்பிட்டார்.

தளபதி அவர்களே! தயவுசெய்து நாங்கள் சொல்வதற்கு சற்று செவிகொடுங்கள். இந்தக் கொலை குறிப்பிடத்தக்கதாக ஆகியிருப்பதற்கு காரணம் இராணுவத்தோடு இணைக்கப்பட்டுள்ள ஒரு நிருபரின் காமிராவில் அது ''பதிவாகியிருக்கிறது'' என்பதால்தான். பல்லூஜா முற்றுகை முழுவதிலும் இதேபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. அங்கு போருக்குரிய விதிகள் மீறப்பட்டு ''எது நகர்ந்தாலும் அதைக் கொன்றுவிட வேண்டும்'' என்ற அடிப்படையில் அமைந்திருக்கிறது.

மீண்டும் ஒருமுறை----அபு கிரைபில் ஈராக் கைதிகள் சித்திரவதை செய்யப்பட்டதை ஒட்டி எழுந்த நெருக்கடியைப் போன்று------பென்டகன் இராணுவத்தின் பட்டியலில் உள்ள ஒரு இளைஞனை ஒரு பலிக்கடாவாக ஆக்குகின்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இந்த ஒரு துப்பாக்கிச் சூடு அம்பலத்திற்கு வந்ததைத் பயன்படுத்தி பல்லூஜாவில் ஒட்டுமொத்த நடவடிக்கைகளின் உண்மையை மூடிமறைக்க அவர்கள் சகலதையும் பயன்படுத்துவார்கள். அமெரிக்க ஆளும் நிறுவனங்களின் ஒவ்வொரு பிரிவினரின் மறைமுக ஆதரவோடும் அல்லது தீவிர ஆதரவுடனும் வெள்ளை மாளிகையின் கட்டளையின்படியும் போரினை முன்னெடுப்பது ஒரு பாரியளவிலான போர்க் குற்றமாகும்.

பல்லூஜாவை தரைமட்டமாக்கியது, அமெரிக்க இராணுவத்தின் அசிங்கமான முகத்தை உலகிற்கு அம்பலப்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் அமெரிக்க சமுதாயத்தின் தன்மைபற்றிய கலவர மூட்டும் கேள்விகளும் எழுந்துள்ளன.

சென்ற ஏப்ரலில் அந்த நகரத்தில் அமெரிக்கக் கூலிப்படையினர் நான்கு பேர் கொல்லப்பட்டதற்கு பழிவாங்க வேண்டும் என்ற புஷ் நிர்வாகத்தின் வெறியோடு சேர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அத்துடன், ஈராக்கை அமெரிக்கா தொடர்ந்து ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதை எதிர்ப்பவர்கள் அனைவரையும் அச்சுறுத்தும் நோக்கத்துடன், அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டுமென்ற இரத்தக்களரி நடவடிக்கையாகவும் இது இருக்கிறது

பல்லூஜா இப்போது சிதைந்து கிடக்கிறது. அமெரிக்க இராணுவம் 2,000 ''கிளர்ச்சிக்காரர்கள்'' வரை கொன்றிருப்பதாகக் கூறிக்கொண்டாலும், அவர்களது எண்ணிக்கை இறந்தவர்களது அடையாளங்கள் மிக எளிதாக கண்டுபிடிக்க முடியாதவையாக உள்ளன. வீடுகளிலும் இதர இடங்களிலும் இருந்து துப்பாக்கிகள் போன்ற சிறிய ஆயுதங்களால் சுடப்பட்டதற்கு பதிலளிக்கிற வகையில் அமெரிக்கப் படைகள் பீரங்கிகளால் சுட்டுத் தள்ளியிருக்கின்றன. 2000 ம் இறாத்தல் குண்டுகளையும், ராக்கெட்டுக்களையும் விமானப்படை விமானங்கள் மூலம் வீசியிருக்கின்றன. அதே நேரத்தில் டாங்கிகளும் குண்டுமாரி பொழிந்திருக்கின்றன. வீடுகள், மாடிக் குடியிருப்புக்கள் மற்றும் நகரின் 120 மசூதியில் ஏறத்தாழ பாதி அழிக்கப்பட்டுவிட்டன அல்லது இந்த முறையில் கடுமையாக சேதமடைந்துள்ளன.

தெருக்களில் மனித உடல்கள் சிதறிக்கிடப்பதாகவும் பட்டினி கிடக்கும் நாய்கள் அவற்றை தின்று கொண்டிருப்பாதகவும் நேரில் கண்டவர்கள் தகவல் தந்திருக்கின்றனர். காயமடைந்த தங்களது குழந்தைகள் மடிவதை காண்கின்ற துயரக் காட்சிக்கு பெற்றோர்கள் கட்டாயப்படுத்தப்பட்டு அதற்குப்பின்னர் அவர்களது உடல்களை தங்களது தோட்டங்களில் புதைத்திருக்கின்றனர். ஒரு நம்பகத்தன்மையுள்ள தகவலின்படி, அமெரிக்கத் துருப்புக்களிடமிருந்து தப்பி ஓடி யூப்ரடிஸ் ஆற்றைக் கடந்து விடலாம் என்று முயன்ற ஒரு ஐந்து பேர்களைக் கொண்ட குடும்பத்தையே எந்திரத் துப்பாக்கிகளால் சுட்டுக்கொன்றிருக்கின்றனர்.

பல்லூஜாவில் மீதமிருந்த சிவிலியன்கள் தங்களது வீடுகளுக்குள்ளேயே 24 மணிநேர ஊரடங்கு உத்தரவின்கீழ் பதுங்கிக் கிடக்க வேண்டும், அல்லது அமெரிக்கத் துருப்புக்களின் கையில் சாவை நெருங்கும் ஆபத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கப்பட்டனர். இப்படி வீடுகளுக்குள் பதுங்கிக் கிடந்தவர்களது கதி என்ன? அமெரிக்க குண்டு வீச்சுக்கள் 10 கட்டடங்களில் ஒன்றை தரைமட்டமாக்கிவிட்டதாக ஊடகங்கள் தகவல் தந்திருக்கின்றன. இப்படி இடிந்துபோன கட்டடங்களின் இடிபாடுகளுக்கிடையில் எத்தனை உடல்கள் கிடக்கின்றன என்பதை அறிந்துகொள்வதற்கு ஒரு வழியுமில்லை. அமெரிக்கத் துருப்புக்கள் வீடுகளுக்குள் சடலங்கள் கிடந்தால் அவற்றைக் கண்டுபிடிக்கும் thermal sights கருவிகளை வைத்திருந்ததாகவும் தவகல்கள் கூறப்படுகின்றன. அத்தகைய கருவிகள் மூலம் உள்ளே ''கிளர்ச்சிக்காரர்கள்'' பதுங்கியிருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டதும் அந்த வீட்டின் மீது மிகக்கொடூரமான குண்டு மழை பொழியப்பட்டன.

அமெரிக்க குண்டுகள், ராக்கெட்டுகள் மற்றும் பீரங்கிக் குண்டுகளால் காயமடைந்தவர்கள் அப்படியே கிடந்து காயத்தில் துடித்து மடிகின்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். இந்த முற்றுகையின் முதல் இலக்குகள் அந்த நகரத்தின் மருத்துவமனைகள்தான். நகரத்தின் பிரதான மருத்துவமனையை சிறப்புப்படைத் துருப்புக்கள் பிடித்துக் கொண்டன. அதே நேரத்தில் நகரத்தில் இருந்த ஒரு தனியார் மருந்துவ மனையின் (clinic) மீது குண்டுவீசி தாக்கியதில் டசின்கணக்கான மருத்துவ ஊழியர்களும் நோயாளிகளும் கொல்லப்பட்டனர்.

ஒரு மனிதநேய பேரழிவு

அந்த நகரத்தில் மீதமிருந்த மக்கள் ஒரு வாரத்திற்கு மேலாக தண்ணீரோ அல்லது மின்சாரமோ இல்லாமல் மற்றும் உணவு பற்றாக்குறைக்கு ஆட்பட்டிருந்தனர். சுருக்கமாக சொல்வதென்றால், பல்லூஜா ஒரு மனிதநேய பேரழிவை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலவரங்கள் குறித்து அமெரிக்க வெகுஜன ஊடங்களில் எந்தவிதமான செய்தியும் வராமல் ஒரு கடுமையான இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கிறது. அமெரிக்க இராணுவத் தாக்குதல் 200,000 மக்களை வீடற்ற அகதிகளாக்கியிருக்கிறது. இந்த மக்கள் படும் துயரம் பற்றி ----ஈராக்கை அமெரிக்கா ''விடுவித்ததில்'' பயனடைவதாக வாதிடுபவர்கள்---- செய்தி ஊடகங்களில் மிகக்குறைந்த அளவிற்கு கூட அக்கறை காட்டவில்லை.

இத்தகைய இரக்கமற்ற கொடூரமான படுகொலைக்கு இலக்காவதற்கு பல்லூஜா மற்றும் இதர பகுதி ஈராக் மக்கள் என்ன தவறு செய்தார்கள்? தங்களது சொந்த நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிற ''குற்றத்திற்காக'' அமெரிக்க இராணுவம் அவர்களை கொன்று குவிப்பதில் எதை நியாயப்படுத்தமுடியும்?

அந்த நகரத்திற்குள் அனுப்பப்பட்ட அமெரிக்கத் துருப்புக்களுக்கு ஈராக் மீதான ஆக்கிரமிப்பு என்பது ''பயங்கரவாதத்தின் மீதான போரின்'' ஓர் அங்கமென்று போதனை செய்யப்பட்டது. 2001 செப்டம்பர் 11 ல் நியூயோர்க் நகரத்தின் மீதும் வாஷிங்டன் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக நாட்டின் மக்களுக்கு நியாயப்படுத்துகின்ற வகையில் வன்முறைத் தாக்குதல், மிகவும் பாதிக்கும் அளவிற்கு தயாரிக்கப்பட்டன.

இதனுடைய முடிவு ஒரு இரத்தக் களறியாகும். பிரிட்டனின் மருத்துவ சஞ்சிகையான The Lancet ல் பிரசுரிக்கப்பட்டுள்ள அண்மை ஆய்வு ஒன்றில், அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமித்த 20 மாதங்களில் 100,000 மேற்பட்ட வன்முறைச் சாவுகள் நிகழ்ந்திருக்கின்றன என்று குறிப்பிட்டிருக்கிறது. அமெரிக்க மக்கள் தொகையில் பத்தில் ஒரு பங்கிற்குக் குறைவான மக்கள் வாழ்கின்ற ஒரு நாட்டில் இது ஒவ்வொரு ஒன்றரை வாரத்திற்கும் ஒரு முறை நடக்கின்ற ஒரு செப்டம்பர் 11 தாக்குதலாகும்.

செப்டம்பர் 11 க்கும் ஈராக்கிற்கும் எந்தவிதமான சம்மந்தமும் இல்லை என்பதை பன்முக அமெரிக்க அரசாங்க அறிக்கைகளும், புலனாய்வுகளும் அதிகாரப்பூர்வமாக உறுதிபடுத்தியுள்ளன.

ஈராக் பற்றிய பொய்களை தள்ளி வைத்துவிட்டு பார்த்தால் கூட, ''பயங்கரவாதத்தின் மீதான போர்'' என்பதே ஒரு மோசடியாகும். நீண்டகாலமாக திட்டமிட்ட இராணுவ நடவடிக்கையை மேற்கொள்வதற்கு ஒரு சாக்குப்போக்காக வாஷிங்டன் இதனைக் கண்டுபிடித்தது. செப்டம்பர் 11 சதியானது பாக்தாத்திலிருந்து கிளம்பவில்லை. மாறாக, அமெரிக்க புலனாய்வு என்கிற சேற்று உலகிலிருந்தும், ஆப்கானிஸ்தானில் சோவியத் துருப்புக்களுக்கு எதிரான போரில் இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்களை அது செயலாற்றியதிலிருந்தும் கிளம்பியதாகும்.

பயங்கரவாதத்திற்கு எதிராக பழிவாங்கும் முறையில் ஈராக்கியர்களை கொல்ல வேண்டுமென்று அமெரிக்கத் துருப்புக்களுக்கு சொல்லப்பட்டாலும், 9/11 தாக்குதல்களை நடத்தியவர்களை தூண்டிவிட்ட அரசு ஏற்பாட்டாளர்கள் சவுதி அரேபியாவிலும், பாக்கிஸ்தானிலும் ஆட்சியில் அமர்ந்திருக்கின்றனர். அவர்கள் ''பயங்கரவாதத்தின் மீதான போரில்'' வாஷிங்டனுக்கு நெருக்கமான நண்பர்களாக இருக்கிறார்கள். மற்றும் புஷ் நிர்வாகத்திற்கு நெருக்கமான நண்பர்களாகவும் இருக்கிறார்கள்.

எங்கும் நிறைந்திருக்கும் பயங்கரவாத அச்சுறுத்தல் என்று கூறப்படுவது, அமெரிக்கா தனது புவியியல் மூலோபாய நலன்களை பின்தொடர்வதற்கும், முக்கியமான பூகோள எண்ணெய் இருப்புகளில் மேலாதிக்கம் செலுத்துவதற்கும், தனது இராணுவ வலிமையை பயன்படுத்துவற்கு ஒரு சாக்குப்போக்காக அமைந்துவிட்டது. இந்த ஏகாதிபத்திய நோக்கம் உலகம் முழுவதிலும் தெளிவாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.

அத்துடன், ஒரு தனிப்பட்ட மற்றும் தீயெண்ணம் கொண்ட ஒரு அம்சமும் இந்த அமெரிக்க கொள்கை செயல்படுத்தப்படுவதில் அமைந்திருக்கிறது. உலகின் இதர பகுதிகள் மீது ஒரு பொதுவான ஆத்திரத்தில் அமெரிக்கா உள்ளதுடன், உலகின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு படிப்பினையைத் தருவதற்காக தனது பலாத்காரத்தை ஈராக் மீது பயன்படுத்துகிறது. அந்த வகையில், வாஷிங்டனிலிருந்து உலகின் இதர பகுதிகளுக்கு இந்த படிப்பினை தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவினுடைய தற்காப்புப் போரின் தத்துவமானது, அது என்ன சொல்கிறதோ அதுவே பொருள் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கிறது; அது, நாங்கள் விரும்புகின்ற நேரத்தில் உங்களில் எவர்மீதும் அதே நடவடிக்கையை நாங்கள் எடுப்போம் என்பதாகும்.

அமெரிக்க தொலைக்காட்சி செய்தி அறிக்கைகளில் மீண்டும் ஓய்வுபெற்ற இராணுவத் தளபதிகளும் மற்றும் ''பதிக்கப்பட்ட'' (embedded) நிருபர்களும் இடம்பெற்றிருப்பதுடன், அவர்கள் போரில் உள்ள பிரிவுகளுக்கு உற்சாகமூட்டும் தலைவர்களாக செயல்படுகின்றனர். அவர்கள் இந்த கோப உணர்வை நியாயப்படுத்தி மிகப்பெருமளவிற்கு பலாத்காரத்தை பயன்படுத்துவதற்கு சப்பைக்கட்டாக செயல்படுவதுடன் அதனால் உற்சாகத்தையும் பெறுகின்றனர்.

5000 மைல்களுக்கு அப்பால் உள்ள ஒரு அப்பாவி மக்களை கொன்று குவித்து, தேசிய ஒற்றுமையை வளர்ப்பதற்கு ஒருவழி என்று சுட்டிக்காட்டி பொது மக்களது உற்சாகத்தை தூண்டுவதானது, இடைவிடாது சமூகப் பாதிப்பு மற்றும் ஆழமான சீரழிவிற்குள்ளாவதை எடுத்துக்காட்டுகிறது.

ஐரோப்பா கண்டத்திலேயே கலாச்சார அடிப்படையிலும், மிகவும் தொழில்நுட்ப அடிப்படையிலும் வளர்ச்சியடைந்த ஜேர்மனியில் ஹிட்டலுருடைய ஆட்சி தோன்றுவதற்கு என்ன அடிப்படைக் காரணமாக இருந்தது என்பதை கண்டுபிடிப்பதற்கு கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாகவே வரலாற்று ஆசிரியர்கள் ஆழமாக முயன்று வருகின்றனர். அவர்களில் ''கெட்ட ஹிட்லர்'' தத்துவத்தைச் சொல்பவர்களிடையே ஒரு கேள்வி எழுந்தது: ஐரோப்பாவிற்கெதிராக நாசிசம் கொலைவெறி ஆத்திரத்தை உருவாக்கிகொள்வதற்கு ஜேர்மன் சமுதாயத்திற்குள் எத்தகைய ஆழமான முரண்பாடுகள் நிலவின?

ஹிட்லருடைய ஆட்சி புரிந்த அட்டூழியங்கள் ஒரு வேறுபட்ட அளவுகோலைக் கொண்டதாக இருந்தாலும், தற்போது புஷ் நிர்வாகம் மேற்கொண்டுவரும் அட்டூழியங்களோடு அவற்றை புரிந்து கொள்ளத்தக்க ஒற்றுமைகள் இருக்கின்றன. Wehrmacht ஐரோப்பா முழுவதையும் சூறாவளி போல் பாதித்த வரலாற்றிற்குப் பின்னர் இன்றைய தினம் உலகம் காண்பது என்னவென்றால், ஒரு பெரிய ஏகாதிபத்திய அரசு எந்தவிதமான ஆத்திரமூட்டலும் இல்லாமல் ஒரு ஆக்கிரமிப்புப்போரை துவக்கி, ஒரு ஒட்டுமொத்த மக்கள் கூட்டத்தை தனது இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் கொண்டுவந்து பொதுமக்களுக்கு எதிராக கூட்டு மற்றும் முன் உதாரண படிப்பினைத் தண்டனையை வழங்கி வருகிறது என்பதாகும். அத்தகைய கொடூரமான நடவடிக்கைகள் அமெரிக்காவின் சொந்த சமூக முரண்பாடுகளில் வேர்விட்டிருக்க வேண்டும்.

இந்த யுத்தம் அமெரிக்க மக்கள் மீது பொய்கள் அடிப்படையில் சூழ்ச்சியால் திணிக்கப்பட்டது என்பது மறுக்கவியலாததுதான். அதேபோல இந்த மோசடியில் ஊடகங்கள் அப்பட்டமாக உடந்தையாக செயல்பட்டிருக்கின்றன.

அரசியல் சூழ்நிலையையும் ஊடகங்களின் பங்களிப்பையும் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்க்கும் போது 56 மில்லியன் மக்கள் வாக்குப்பதிவில் கலந்து கொண்டார்கள் என்ற உண்மையை ஆய்வுகளில் புறக்கணித்துவிடக்கூடாது -------மொத்த வாக்காளர்களில் பாதிக்கும் சற்று குறைந்தவர்கள்தான்------ தேர்தல் தினத்தில் புஷ்ஷிற்கு எதிராக வாக்களிக்கவேண்டுமென்ற உணர்வை உள்ளத்தில் தேக்கிக்கொண்டும் ஈராக் போருக்கெதிராகவும் மக்கள் வாக்களிக்கச் சென்றனர்.

கெர்ரி ஆக்கிரமிப்பை நீடித்து ஈராக்கில் ''வெற்றிபெறுவோம்'' என்று பிரகடனங்களை வெளியிட்டுக் கொண்டிருந்தாலும், அவருக்கு வாக்களித்தவர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் இந்தப் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்ற அடிப்படையிலேயே வாக்களித்தனர். இந்த பொதுமக்களது உணர்வு அசாதாரணமானது. இந்த உணர்வை ஜனநாயகக் கட்சியின் எந்த ஒரு பெரிய தலைவரும் அல்லது ஊடகங்களின் எந்த ஒரு புதிய தலையும் தழுவி நிற்கவில்லை.

புஷ்ஷிற்கு வாக்களித்த 59 மில்லியன் மக்களிடையே, போர் தொடர்பாக இருமணப்போக்கு உள்ளது. அவ்விடத்தில் கணிசமான குழப்பமும் நிலவவே செய்கிறது. ஈராக்கில் இல்லாத பேரழிவுகரமான ஆயுதங்களுக்கும் 9/11 தொடர்புகளுக்குமிடையில் நிர்வாகம் பொய் சொல்லியது என்பதை கணிசமான பெரும்பான்மையினர் ஏற்றுக்கொள்கின்றனர் என்பதை கருத்துக்கணிப்புக்கள் தெளிவுபடுத்துகின்றன.

இராணுவவாதத்தின் சமூக வேர்கள்

இரக்கமற்ற விதத்தில் ''பயங்கரவாதத்தின் மீதான போரை'' பூகோள ரீதியாக நடத்துவது அமெரிக்க மக்கள் எதிர்நோக்கியுள்ள மிக முக்கியமான பிரச்சனை என்று சித்தரிக்க குடியரசுக் கட்சிக்காரர்களும், ஜனநாயகக் கட்சிக்காரர்களும் இடைவிடாது மேற்கொண்ட முயற்சிகளுக்கு தெளிவான தாக்கம் கிடைத்திருக்கிறது. ஆனால், அமெரிக்க மக்களில் பரம ஏழைகளாக இருக்கின்ற தட்டினர் உட்பட அமெரிக்க இராணுவவாதத்தை குழப்பமான அடிப்படையில் அவர்கள் ஏற்றுக்கொண்டிருப்பதற்கு, வலுவான சமூக மற்றும் சித்தாந்த வழி சக்திகளின் வேலைகள் சம்மந்தப்பட்டிருக்கின்றன.

முதலாவதாக, அமெரிக்க சமுதாயத்தில் மேலாதிக்கம் செலுத்தும் நிதி ஒரு சிலவராட்சியின் (financial oligarchy) நலன்கள் உள்ளன. அமெரிக்காவின் பெரும் செல்வம்படைத்த மில்லியனர்கள் மற்றும் பில்லியனர்கள் பிரிக்கமுடியாத வகையில் வாஷிங்டனின் சர்வதேச மேலாதிக்க முயற்சியோடு, உலகப் பொருளாதாரத்தில் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு இராணுவ உரிமையை பயன்படுத்துகின்றனர். இந்த சமூகத் தட்டுக்களது நலன்களை அடிப்படையாகக் கொண்டுதான் பிரதான அரசியல், தத்துவ மற்றும் மதக் கருத்துக்கள் பொதுமக்களுக்கு பல்வேறு வகைப்பட்ட ஊடகங்கள் மூலம் தகவல்களாக மற்றும் கலாச்சாரமாக தரப்படுகின்றன.

இதன் பின்பு, அமெரிக்க சமுதாயத்திற்குள் இராணுவமயமாதல் ஒரு பங்களிப்பு செய்கிறது. அமெரிக்காவில் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னர் தலைமை தளபதியாக பணியாற்றிவந்த ஜெனரல் வெயிட் ஐஸ்நோவர் (Dwight Eisenhower) ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெறுவதற்கு முன்னர் விடுத்த ஒரு எச்சரிக்கையில் ''இராணுவ-தொழில்துறை வளாகங்கள் தேவையற்ற செல்வாக்குப் பெறுவதை'' கடுமையாக சாடியிருந்தார். அதற்குப்பின்னர் கடந்த 43 ஆண்டுகளில் ஐஸ்நோவரின் படுமோசமான அச்சங்களுக்கும் மேலாக இந்த வளாகம் வளர்ந்துவிட்டது. அமெரிக்க இராணுவ பட்ஜெட் அரை திரில்லியனை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்தத் தொகை அடுத்த 20 பெரிய இராணுவ அரசுகளின் ஒட்டுமொத்த பட்ஜெட்டிற்கும் அதிகமாகும்.

2.5 மில்லியனுக்கு மேற்பட்ட செயலாற்றும் துருப்புக்கள் மற்றும் ரிசர்வ் படைகளுக்கு மேலாக ஆயுதத் தொழிற்துறையை நேரடியாகச் சார்ந்திருக்கும் நூறாயிரக்கணக்கானவர்களும் இதில் உள்ளனர். இத்தொழிற்துறை அமெரிக்கப் பொருளாதாரத்தில் அதிக லாபம் தரும் ஏற்றுமதிப் பிரிவுகளில் ஒன்றாக இருப்பதுடன், பென்டகனின் அடங்காப் பசிக்கு இது தீணி போட்டுக்கொண்டிருக்கிறது.

* இத்துடன் இப்போது ''உள்நாட்டு பாதுகாப்பு'' இலாகா என்றழைக்கப்படும் துறையில் பணியாற்றுவோரையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதில் அனைத்து மத்திய, மாநில, உள்ளூர் போலீஸ் மற்றும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள ஒன்றரை மில்லியன் அமெரிக்கர்களை கண்காணிக்கும் இராணுவ சிறைக்காவலர்களும் அடங்குவர். இவர்களது சமூக பங்களிப்புக்கள் இந்த கணிசமான தரப்பினர் ''பயங்கரவாதத்தின் மீதான போர்'' தொடர்பான பொய்கள் மற்றும் அனைத்தையும் தழுவிக்கொள்கிற வகைகளைச் சார்ந்தவர்களாக உள்ளனர்.

ஆனால், அதில் கண்ணுக்கு அதிகம் புலப்படாத இன்னொரு அம்சமும் சம்மந்தப்பட்டிருக்கிறது. மற்றும் அது மிகப்பெருமளவிற்கு முரண்பாடுகளையும் கொண்டுள்ளது. முதலாளித்துவ இராணுவவாதத்தின் முதன்மைப் பணிகளில் ஒன்று சமூக கொந்தளிப்புக்களை திசைதிருப்புவதில் அடங்கியுள்ளது. தங்களது சமூக வாழ்வு குறித்து பொதுமக்களது ஆத்திரம் வெளிப்படும் போது, அதனை திசை திருப்பிவிடுவதற்காக வெளிநாட்டு எதிரிகள் உண்மையாகவோ அல்லது செயற்கையாகவோ உருவாக்கப்படுவர்.

இத்தகைய கொந்தளிப்பானது, ஆழத்தின் ஒரு பரிணாமமாகவும் மற்றும் அந்தக் கொந்தளிப்பை வெளிப்படுத்த எந்தவிதமான அரசியல் வாய்ப்புக்கள் இன்றியும், மிகப்பெருமளவிற்கு உலக அரங்கில் அமெரிக்க இராணுவவாதத்தால் வெடித்துக் கிளம்பியிருக்கும் ஆத்திரத்தன்மையை வெளிப்படுத்துகிறது.

உலகிலேயே மிகப்பெருமளவில் எந்தவிதமான கட்டுத்திட்டம் இல்லாமல் வளர்ந்த சுதந்திர சந்தையின் ஒரு தயாரிப்புத்தான் அமெரிக்க சமூகம் ஆகும். இது முதலாளித்துவ நாகரீகத்தின் மிகுந்த முன்னேறிய வடிவமாகும். அல்லது நாகரீகத்திற்கே புறம்பான வடிவமாகும். உயிர் வாழ்வதற்கே போராடுகின்ற டார்வின் தத்துவம், வாழ்வின் எல்லா அம்சங்களிலும் கொடி கட்டிப்பறக்கிறது. அதே நேரத்தில், உலகின் எந்த பிற முதலாளித்துவ நாட்டிலும் காண முடியாத அளவிற்கு ஒரு பணக்கார செல்வந்த தட்டிற்கும் மற்றும் உழைக்கும் மக்கள் அடங்கிய வெகுஜனத்திற்குமிடையில் பாரிய துருவமுனைப்பு நிலவுகிறது.

தொழிலாளர்கள் தேவையற்ற பண்டங்களைப் போன்று தூக்கிவீசுகின்ற அளவிற்கு மதிக்கப்படுகின்றனர். தொழிற்சாலைகள் குறுகிக்கொண்டு வருவது இடைவிடாமல் நடைபெற்று வருகிறது. ''ஆட்குறைப்புக்களும்'' நிற்கவில்லை. அதே நேரத்தில் பெருநிறுவனங்களின் நிர்வாகத்தில் உச்சாணியில் இருப்பவர்கள் பல மில்லியன் டாலர்களை ஊதியமாக அறுவடை செய்து கொண்டிருக்கின்றனர். சமூகத்திலுள்ள ஒவ்வொரு பார்வையும் மற்றும் ஒவ்வொருவரும் இந்த இலாப வேட்டை முயற்சிக்கு கீழ்படிந்து செல்ல வேண்டியுள்ளது.

இரண்டு முதலாளித்துவக் கட்சிகள் ஆதிக்கம் செலுத்தும் ஒரு அரசியல் முறைக்குள், அந்தக் கட்சிகள் அடிப்படையிலேயே பெருநிறுவனங்கள் மற்றும் நிதியாதிக்க தட்டுக்களை தாங்கி நிற்பதில் ஐக்கியப்பட்டு நிற்கின்றன. இந்த அடிப்படையில், இவர்களிடம் சமூக மனக்குறைகளை எடுத்துரைப்பதற்கு எந்தவிதமான வழிவகைகளோ மற்றும் வழங்குவதற்கு மாற்றீடுகளோ இல்லை. இதற்கு முந்திய ஒரு காலத்தில் அத்தகைய ஒரு பங்களிப்பை செய்த அமைப்புக்கள் ---தொழிற்சங்கங்கள், குடியுரிமை அமைப்புக்கள் முதலியவை---- இப்போது வெறுங் கூடுகளாக ஆகிவிட்டன. அல்லது இருக்கின்ற சமூகக் கட்டுக்கோப்பை பாதுகாக்கின்ற அமைப்புக்களாக நேரடியாக மாற்றப்பட்டுவிட்டன.

இரண்டாவது உலகப்போருக்கு பிந்திய காலம் முழுவதிலும், கம்யூனிச எதிர்ப்பை அரச கருத்தாக்குவதற்கு அரசாங்கமும் ஊடகங்களும் பணியாற்றின. அவைகள் தொடர்ந்தும் சோசலிசக் கருத்துக்கள் மீது உண்மையிலேயே ஒரு தடையை நிலைநாட்டி வருகின்றன. மிகப்பரவலான பெரும்பான்மை உழைக்கும் மக்களை சுரண்டி ஒரு சிறிய செல்வந்த தட்டினர் செல்வம் குவிப்பதை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூகத்திற்கு எந்தவித மாற்றீடும் இல்லை என்றே அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தச் சூழ்நிலைகளில் அவதிப்படும் மற்றும் குழப்பத்திலுள்ள ஏராளமான மக்கள், அமெரிக்காவின் பிரச்சனைகளுக்கு அமெரிக்காவிற்கு வெளியிலுள்ள எதிரிகள்தான் மூலாதாரம் என்று கிளப்பிவிடப்படும் தேசியவாத அருவருப்பான பிரச்சாரத்திற்கு எளிதில் இரையாகிவிடும் தன்மை கொண்டவர்களாக உள்ளனர். இந்தப் பிரச்சாரம் மக்களை குருடர்களாக்குவதற்கு சேவை செய்கிறது. இந்த மக்களது பெயரால் வெளிநாடுகளில் நடாத்தப்படும் கொடூரமான குற்றங்கள் மற்றும் தங்களது சொந்த உள்நாட்டு சூறையாடும் நிதி நலன்களுக்கு வசதியான வகையில் ஆளும் செல்வந்த தட்டினர் தேசியவாதத்தை திறமையாக கையாளுகின்றனர்.

இராணுவவாதத்திற்கு பொதுமக்களது ஆதரவைத் தேடும் விஷக் கருத்துக்களில் அடங்கியுள்ள ஆழமான சமூக முரண்பாடுகள், ஒரு முற்றிலும் எதிர்ப்பான அரசியல் முன்னோக்கு எழுதுவதற்கு வழிசெய்திருக்கிறது. இந்த முன்னோக்கானது இப்போதுள்ள சமூக கட்டுக்கோப்பில் நிலவுகின்ற சமூக சமத்துவமின்மை, சுரண்டல் மற்றும் பாரியளவிலான பலாத்காரத்தை எதிர்த்து நிற்பதாக அமைந்திருக்கிறது.

இந்த எதிர்ப்பு அமெரிக்காவில் தற்போதுள்ள அரசியல் கட்டுக்கோப்பில் வெளிப்படுத்தப்படுவதற்கு வழியில்லை. மாறாக, சர்வதேச அளவில் சமுதாய மாற்றத்திற்கான ஒரு சோசலிச மற்றும் சர்வதேசிய வேலைத்திட்டத்தோடு ஒன்றுபடுவதன் மூலம்தான் அதை முன்னெடுத்துச்செல்ல முடியும்.

ஆகவே, உழைக்கும் மக்களைக் கொண்ட வெகுஜனங்களுக்கு நனவுபூர்வமான ஒரு பாதையை கண்டுபிடிப்பதற்கான ஒரு முன்னோக்கு முதிர்ச்சியடைவதற்கான சூழ்நிலைகள் மிக வேகமாக அரும்பிக் கொண்டிருக்கின்றன. அந்த முன்னோக்கு தங்களது சொந்த சமூக நலன்களை அடைவதற்கான ஒரு நியாயமான வழியைத் தருவதுடன், அமெரிக்க இராணுவவாதத்திற்கு இனி எழவே முடியாத அளவிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வழியையும் காட்டுகிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved