World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Bush administration escalates confrontation with Iran

ஈரானுடன் மோதல்போக்கை உக்கிரப்படுத்தும் புஷ் நிர்வாகம்

By Peter Symonds
25 September 2004

Back to screen version

சென்ற வாரம் வியன்னாவில் நடைபெற்ற சர்வதேச அணுசக்தி ஏஜென்சி (IAEA) கூட்டத்தில் அமெரிக்கா ஈரானோடு அந்நாட்டின் அணுத்திட்டங்கள் தொடர்பாக மோதல் போக்கை தீவிரப்படுத்தி மற்றொரு இராணுவ அதிரடி நடவடிக்கைக்கு அடித்தளம் அமைப்பதற்கு எண்ணியிருக்கிறது என்பதற்கான அறிகுறிகள் மீண்டும் ஒரு முறை தோன்றின.

வாஷிங்டனைப் பொறுத்தவரை அந்தக்கூட்டத்திற்கு ஒரே ஒரு நோக்கம்தான் இருந்தது. இந்த நோக்கம் ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுப்பது அந்நாடு தனது அணு தொடர்பான நடவடிக்கைகளை நிறுத்திவிட வேண்டும் அல்லது ஐ.நா பாதுகாப்பு சபைக்கு தண்டனை நடவடிக்கைகளுக்காக தானாகவே பரிந்துரை செய்யப்படுவதை எதிர்கொள்ள வேண்டும். திட்டவட்டமான சான்று எதையும் தருவதற்கு தவறிவிட்டாலும் டெஹ்ரான் ஏறத்தாழ 20- ஆண்டுகளாக இரகசிய அணு ஆயுதங்கள் திட்டங்களை நிறைவேற்றிவருகிறது என்று அமெரிக்கா கூறிவருகிறது.

ஈரான் தன்னிடம் அணு ஆயுதங்கள் தயாரிக்கும் திட்டம் எதுவும் இல்லையென்று தொடர்ந்து மறுத்துவருவதுடன், தெற்குத்துறைமுக நகரமான Bushehr-ல் அணுமின்சார நிலையத்தில் உருவாக்கவிருக்கிற அணு மின்சார உலைக்காக செறிவூட்ட யுரேனியத்தை தயாரித்து வருவதாகவும் கூறிவருகிறது. அணுபரவல் தடுப்பு ஒப்பந்தப்படி அணு எரிபொருள் தயாரிக்கும் அனைத்து அம்சங்களிலும் யுரேனியத்தை செறிவூட்டுவது உட்பட தனக்கு உரிமை இருப்பதாக டெஹ்ரான் பிடிவாதமாக வாதிட்டு வருகிறது.

பிரிட்டன், பிரான்ஸ், மற்றும் ஜேர்மனி தலைமையில் ஐரோப்பிய ஒன்றியம் ஓரளவிற்கு ''மென்மையான'' அணுகுமுறையை தாக்கல் செய்தது. அதில் ஈரான் யுரேனியம் செறிவூட்டத் திட்டத்தை முடக்கிவைக்க முடிந்தவரை ஊக்குவிப்புக்களை தருவதும் அடங்கும். என்றாலும், அதே நேரத்தில், முக்கிய பிரச்சனையில் - ஈரான் தன்னிடம் அணு ஆயுதத்திட்டங்கள் எதுவுமில்லை என்று நிரூபிக்க வேண்டும் அல்லது விளைவுகளை சந்திக்க வேண்டும் என்பதில், வாஷிங்டனோடு மோதிக்கொள்ள ஐரோப்பிய ஒன்றியம் தயாராக இல்லை.

தனது மிகப்பரவலான எல்லைக்குள் எங்கும், எந்த அணு ஆயுதத்திட்டமும் இல்லையென்று நிரூபிக்க இயலாத காரியத்தை ஈரான் நிரூபிக்க வேண்டுமென்று அமெரிக்கா வலியுறுத்துகிறது. அமெரிக்காவின் கோரிக்கைளை திருப்திப்படுத்த ஈரான் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியும் அலட்சியமாக புறக்கணிக்கப்பட்டு வருகிறது. தவிர்க்கமுடியாத அளவிற்கு புதிய குற்றச்சாட்டுக்கள் டெஹ்ரான் மீது நெருக்குதலை நிலைநாட்டுவதற்காக எந்தவிதமான சான்றுமில்லாமல் அல்லது சொற்ப சான்றுகளுடன் கூறப்பட்டு வருகின்றன.

கடைசியாக நடைபெற்ற IAEA கூட்டநடவடிக்கைகளில் புதியதொரு குற்றச்சாட்டு தலை காட்டியிருக்கிறது. அமெரிக்க முன்னாள் ஆயுதங்கள் ஆய்வாளர் David Albright ஒரு தொழிற்துறை வளாகத்தின் செயற்கைகோள் நிழற்படத்தை வெளியிட்டிருக்கிறார். அது Parchin தொழில் வளாகமாகும். அதனைத்தான் அணு ஆயுதத்தை வெடிக்கச்செய்வதற்கு தேவைப்படுகிற உயர் வெடிப்புத்திறன் கொண்டு இயந்திர பாகங்கள் தயாரிக்கப்படும் "ஒரு பொருத்தமான இடம்" என்று அவர் கூறுகிறார். மேலும் எந்த சான்றும் தரப்படவில்லை. ஆனால் இந்த அலுத்துப்போன குற்றச்சாட்டு IAEA உறுப்பினர்கள் ஒரு கடுமையான நிலையை எடுக்குமாறு மிரட்டுகின்ற அதன் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு பயன்பட்டிருக்கிறது.

சென்ற சனிக்கிழமையன்று ஈரான் தொடர்பாக உருவாக்கப்பட்ட இறுதி ''சமரச'' தீர்மானம் அமெரிக்கக கோரிக்கைகளை ஏற்றுகொள்வதாக இல்லை. ஈரான் உடனடியாக யுரேனியம் செறிவூட்டத்திட்டத்தை "உடனடியாகக் கைவிடவேண்டும்" என்று கேட்டுக்கொண்ட தீர்மானம், அப்படிச் செய்யாவிட்டால் ஐ.நா-வின் முடிவிற்கு விடப்படும் என்று தானாகவே குறிக்கப்பெறும் பிரிவும் மற்றும் IAEA நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்கு நவம்பர் 25- வரை காலக்கெடுவை நீட்டிப்பது என்பதும் சேர்க்கப்படவில்லை. ஆனால் அமெரிக்க வெளியுறவுத்துறை துணைச்செயலாளர் John Bolton வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி: ''தீர்மானத்தின் தெளிவான வாசகங்கள் எதுவாகியிருந்தாலும் நவம்பர் மாதம் நடைபெறும் IAEA வாரிய கூட்டத்தில் ஐ.நா- பாதுகாப்பு சபைக்கு விடுவது தொடர்பான தீர்மானம் வரும் மற்றும் அனைவருக்கும் இது தெரியும்" என்பதாகும்.

IAEA-நடவடிக்கைகள் தொடர்பாக வாஷிங்டன் இறுமாப்பிற்கு பின்னர் இருப்பது என்னவென்றால் புஷ் நிர்வாகம் தன்னிச்சையாக இராணுவத்தை பயன்படுத்துவது உட்பட தீடீர் நடவடிக்கைகள் எடுப்பதற்கு உரிமை படைத்தது என்று வலியுறுத்தி வருவதுதான். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கொலின் பவல் இந்த வாரம் இந்த அம்சத்தை வலியுறுத்திக் கூறியுள்ளார். உடனடியாக ஈரான் மீது தாக்குதல் நடத்தும் திட்டமில்லை என்று கூறினாலும், ''ஒவ்வொரு வாய்ப்பும், தொடர்ந்து பரிசீலனையில் உள்ளது'' என்று கூறினார்.

பவல் மறுப்புக்களை தெரிவித்திருந்தாலும், இராணுவ நடவடிக்கை குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது என்பதற்கு பல்வேறு குறிகாட்டல்கள் உள்ளன. சென்ற வாரம் பைனான்சியல் டைம்ஸ் -ல் வந்துள்ள தகவலின்படி: ''அணு ஆயுதத்தை தன்வசம் வைத்திருக்கும் ஈரானை "சகித்துக்"கொள்ளாது என்று புஷ் நிர்வாகம் எச்சரிக்கைகளை விடுத்திருப்பதைத் தொடர்ந்து அந்த இஸ்லாமிய குடியரசின் அணு திட்டத்திற்கெதிராக இராணுவத்தாக்குதல்களை நடத்துவதன் சிறப்பு குறித்து வாஷிங்டனில் தீவிரமான விவாதம் துவக்கப்பட்டிருக்கிறது. இராணுவ நடவடிக்கைகள் பற்றி ஆய்வுகள் நடத்தப்பட்டாலும், அமெரிக்கா உண்மையான தாக்குதலை நடத்துவதற்கு முடிவு செய்துவிட்டது என்று சுட்டிக்காட்டுவது என்ற கட்டத்திற்கு வந்துவிடவில்லை என நிர்வாகத்திற்கு நெருக்கமான ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். ''

நியூஸ் வீக் செப்டம்பர் 27- இதழில் வெளியிட்டுள்ள தகவலின்படி: ''சென்றவாரம் அமெரிக்க மற்றும் இஸ்ரேல் அதிகாரிகள் இராணுவ நடவடிக்கையின் சாத்திய கூறு பற்றி விவாதித்தனர். (ஈரான் விரும்பினால்) அது அணு ஆயுதத் தயாரிப்பிற்கு செல்வதைத்தடுப்பதற்கான காலம் கடந்துவிட்டதாகவும் சிலர் நம்பினர்...... CIA- வும், DIA- ம் இணைந்து ஈரான் அணுத்திறன் வசதிகள் மீது முன்கூட்டி திடீர்த்தாக்குதல் நடத்தினால் அதனுடைய விளைவுகள் என்னவாக இருக்கும் என்பது குறித்து போர் பயிற்சி நடத்தியதாக நியூஸ் வீக் அறிந்திருக்கிறது. அதனுடைய விளைவுகளை எவரும் விரும்பவில்லை. "போர்ப் பயிற்சிகள் சண்டை முற்றுவதை தடுப்பதில் வெற்றிபெறவில்லை" என்று ஒரு விமானப்படை வட்டாரம் தெரிவித்தது.

1981-ல் ஈராக்கின் Osirik அணு உலைமீது தாக்குதல் நடத்தியதைப்போல் ஈரான் அணு வசதிகள் மீதும், இஸ்ரேல் இராணுவத்தாக்குதல் நடத்தக்கூடும் என்று ஏற்கனவே கோடிட்டுக்காட்டியுள்ளது. இப்படி இஸ்ரேல் தாக்குதல் நடத்துகின்ற சாத்தியக்கூறுகளை அதிகரிக்கின்ற வகையில் இந்த வாரம் அமெரிக்கா இஸ்ரேலுக்கு 500 ''bunker buster" குண்டுகளை ஆயிரக்கணக்கான இதர துள்ளிய தாக்குதல் தளவாடங்களுடன் விற்க எண்ணியிருப்பதாக செய்திகள் வந்திருக்கின்றன. தெளிவான ஈரான் இலக்குகளில் ஒன்று அணுசக்தி அமைப்புக்கள் ஆகும், அவற்றில் பல பூமிக்கடியில் உள்ளவை, விமானக்குண்டு வீச்சுத்தாக்குதலில் இருந்து காப்பதற்கு கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டவை.

ஈரானின் ஆவேச பதில்

அமெரிக்காவின் பெருகிவரும் போர்வெறி ஆபத்துக்குறித்து ஈரான் ஆவேசமாக பதிலளித்துள்ளது தனது மண்ணில் எந்த இராணுவத்தாக்குதல் நடந்தாலும் அதற்கு பதிலடி கொடுப்பதாக டெஹ்ரான் திரும்பத்திரும்ப எச்சரித்திருக்கிறது. இந்த மாதத் தொடக்கத்தில் கட்டாரிலிருந்து இயங்கும் அல் ஜெசிரா தொலைக்காட்சி அலைவரிசைக்கு ஈரானின் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் அலி சம்்ஹானி அளித்த பேட்டியில், தனது நாடு திடீர்தாக்குதல் நடத்தும் என்று கூறியுள்ளார். ''மற்றவர்கள் எங்களுக்கு என்ன செய்வார்கள் என்று நாங்கள் காத்துக்கொண்டிருக்க முடியாது. அமெரிக்கா பேசிக்கொண்டிருக்கிற திடீர்த்தாக்குதல் அவர்களுக்கே ஏகபோக உரிமையல்ல, தற்காப்பு நடவடிக்கைகள் எடுப்பது குறித்துசில ஈரான் தளபதிகள் தெளிவாக ஒரு நிலை எடுத்திருக்கின்றனர்'' என்று அறிவித்தார். இந்த வாரம் டெஹ்ரானில் நடைபெற்ற ஆண்டு நிறைவு இராணுவப் பேரணியில் நெடுந்தொலைவு இலக்கு ஏவுகணைகள் காட்சி அணிவகுப்பில் கலந்து கொண்டன. அவற்றின்மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான முழக்கங்கள் பொறிக்கப்பட்டிருந்தன.

IAEA தீர்மானத்தை, தான் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று டெஹ்ரான் அறிவித்திருக்கிறது, அதன் தீர்மானம் "சட்டவிரோதமானது" என்று கண்டித்திருக்கிறது. செவ்வாயன்று ஈரான் வெளியிட்ட அறிவிப்பில் 37- டன் யுரேனியம் ஆக்ஸைடை அல்லது "மஞ்சள் கேக்கை" செறிவூட்ட யுரேனியம் தயாரிப்பதற்கு தேவையான மூலப்பொருளாக யுரேனியம் ஹெக்சாபுரோரைடு வாயுவாக மாற்றுவதற்கு தொடங்கியிருப்பதாக விளக்கியது. IAEA, நவம்பரில் ஐ.நா பாதுகாப்பு சபைக்கு தனது நாட்டின் நடவடிக்கைகளை பரிசீலனைக்கு விடுமானால் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்திலிருந்து ஈரான் விலகிக்கொள்ளும் என்று ஈரான் அதிகாரி ஹசன் ரூஹாணி தெரிவித்தார்.

அதன் அணுத்திட்டங்கள் குறித்து வாஷிங்டன், பிரான்ஸ், ஜேர்மனி, மற்றும் பிரிட்டனும் மேற்கொண்டுள்ள அப்பட்டமான கபடநோக்கு அணுகுமுறையை ஈரான் சட்டபூர்வமாக சுட்டிக்காட்டியுள்ளது. ஈரானை ராஜதந்திர ரீதியில் தனிமைப்படுத்தி விடுவதாகவும், பொருளாதார தடைகள் மற்றும் இராணுவத்தாக்குதல் குறித்து மிரட்டிக்கொண்டிருக்கிறவர்கள், இஸ்ரேலிடம் அணு ஆயுதங்கள் உள்ளன என்பதை தெரிந்தவர்கள் தான், அதில் இரகசியம் ஒன்றுமில்லை, அப்படியிருந்தும் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இஸ்ரேல் கையெழுத்திட வேண்டுமென்றோ, அல்லது அதன் அணுவசதிகளை IAEA ஆய்விற்கு உட்படுத்த வேண்டுமென்றோ எத்தகைய நிர்பந்தமும் தரப்படவில்லை.

வாஷிங்டன் கூற்றுக்களுக்கு மாறாக, ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்கிறது என்று நிரூபிக்கப்படவில்லை. ஈரான் மிகப்பெரிய அளவிற்கு அணுமின்சாரத்திட்டத்தை உருவாக்கியுள்ளது. 2020-ம் ஆண்டு வாக்கில் அணுமின்சார நிலையங்கள் மூலம் 7000- மெகாவாட்கள் அல்லது நாட்டின் மின்சாரத் தேவையில் 10- சதவீதத்தை உற்பத்தி செய்துவிட வேண்டுமென்று திட்டமிட்டிருக்கிறது. அதில் முதல் கட்டமாக 2006- வாக்கில் Bushehr அணுமின்சாரத்தை தயாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில் Natanz பகுதியில் ஈரான் யுரேனிய செறிவூட்ட தொழிற் கூடத்தை உருவாக்கிவருகிறது. -அந்த இரகசியம் இரண்டாண்டுகளுக்கு முன்னர் அம்பலத்திற்கு வந்தது. யுரேனியம் செறிவூட்ட நடவடிக்கைக்கு அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தம் தடைவிதிக்கவில்லை என்றாலும் அத்தகைய நடவடிக்கைகள் அனைத்தையும் IAEA விற்கு தெரிவித்து விடவேண்டும். இந்தத்தகவல் வெளிவந்ததும் வாஷிங்டன் அதைப் பிடித்துகொண்டது. ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்கும் நோக்கங்களை உறுதிப்படுத்துவதாக அந்தத்தகவல் அமைந்திருப்பதாகக் கூறி IAEA நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று வாஷிங்டன் கோரியது. என்றாலும், அந்த சான்று திட்டவட்டமான முடிவுசெய்ய முடியாததாக உள்ளது. IAEA தலைவரான முஹமது El Baradei அண்மையில் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில், ''அணு ஆயுதங்கள் தயாரிப்புத்திட்டம் பற்றிநாங்கள் எந்தவிதமான திட்டவட்டமான ஆதாரத்தையும் பார்க்கவில்லை. எல்லாமே சமாதான பணிகளுக்காகவே என்று நாங்கள் கூறிவிட முடியுமா? இந்தக்கட்டத்தில் அப்படி நாங்கள் கூறிவிட முடியாது என்று தெளிவு'' என்று குறிப்பிட்டிருக்கிறார்.

என்றாலும், ஈரான் தனது அணுமின்சார நிலையங்களுக்கு தேவைப்படும் எரிபொருள் அளவிற்கு 3.5 சதவீத அளவிற்கே செறிவூட்டலை கட்டுப்படுத்திக்கொள்ள IAEA தெரிவிக்கிற எந்த ஆலோசனையும் ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக அறிவித்தது. இந்த வாரம் ஆசியா டைம்ஸ் வலைத் தளத்தில் வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையில், இரண்டு முதல் 5 ஆண்டுகளுக்குள் அணு குண்டை தயாரிப்பதற்கு அந்த சாதனங்களை பயன்படுத்த முடியுமென்று அமெரிக்காவும், இஸ்ரேலும் கூறியிருப்பது மித மிஞ்சிய எல்லையற்ற கற்பனை என்று ஈரான் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ''ஒரு அணுகுண்டை தயாரிப்பதற்கு 64,000-திற்கு மேற்பட்ட நவீன சென்டிரிஃபியூஜ்களும் இதர கருவிகளும் 24-மணிநேரமும் தொடர்ந்து இயங்க வேண்டும். ஆனால் எங்களுக்கு தெரிந்தவரை ஈரானிடம் 164- முன்னோடி சென்டிரிஃபியூஜ்கள் மட்டுமே உள்ளன'' என்று ஒரு நிபுணர் கூறினார்.

இரகசியமாக யுரேனிய செறிவூட்ட தொழிற்கூடத்தை ஈரான் அமைத்து வருவது ஒப்பந்தத்தை மீறிய செயலாக இருக்கக்கூடும் அதேவேளை, அதை பகிரங்கமாக அறிவிக்காததற்கு ஈரானிடம் வலுவான காரணங்கள் உள்ளன. 1979-ம் ஆண்டு அமெரிக்காவிற்கு ஆதரவான ஈரான் மன்னர் ஷா முகமது ரேஜா பல்லவி வீழ்ச்சிக்குப்பின்னர், வாஷிங்டன் ஈரானின் இராணுவ அல்லது சிவிலியன் அணு திட்டம் எதையும் நாசப்படுத்துவதை நோக்கமாகக்கொண்டு செயல்படுவருகிறது. 1970-களில் Bushehr அணுமின்சார உலை கட்டுமானம் தொடங்கியது. வாஷிங்டன் வற்புறுத்தலால் ஜேர்மனியின் பொறியியல் நிறுவனமான Siemens AG அந்தத்திட்டத்திலிருந்து விலகிக்கொண்டது. ரஷ்ய நிறுவனமொன்று அதை கட்டிமுடிக்க ஒப்பந்தம் செய்துகொண்ட பின்னர்தான் 1995-ம் ஆண்டு மீண்டும் அந்த திட்டம் செயல்படத்துவங்கியது. அந்த ஒப்பந்தத்தை கைவிட்டு விடுமாறு ரஷ்யாவிற்கு தொடர்ந்து அமெரிக்கா நிபந்தனைகளைக் கொடுத்து வருகிறது.

இறுதி ஆய்வில், ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்குமானால் அதற்கு தெளிவான நோக்கங்கள் இருக்கின்றன. 2002-ல் புஷ் ஈரானை ஈராக் மற்றும் வடகொரியாவுடன் இணைத்து ''தீங்கின் அச்சுநாடுகள்'' என்று முத்திரை குத்தினார். அமெரிக்காவின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதற்கு மேற்கொள்ளப்பட்ட எல்லா முயற்சிகளும், ஈராக் மீது இராணுவ படையெடுப்பு நடத்தி அந்த நாட்டை படித்துக்கொண்டதை தடுக்க முடியவில்லை என்பது ஈராக்கிலிருந்து கிடைத்திருக்கின்ற தெளிவான படிப்பினையாகும். அமெரிக்காவிடம் மிக உயர்ந்த நுட்பமான ஆயுதங்கள் உள்ளன. மிகப்பெருமளவில் அணு ஆயுதங்கள் உள்ளன. ஈரானின் எல்லைகளில் உள்ள ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைகளில் அமெரிக்கப்படைகள் உள்ளன. இத்தகைய வலிமைமிக்க அமெரிக்காவை ஈரான் எதிர்கொள்கிறது. ஈரான் மிகச்சிறிய வளர்ச்சியடையாத நாடு. டெஹ்ரானிலுள்ள மதவாத அடிப்படை ஆட்சிக்கும் உலக சோசலிச வலைத் தளம் எந்த வகையிலும் முட்டுக்கொடுக்கவில்லை என்றாலும், அந்த நாடு தன்னிடம் கிடைக்கும் எந்த வசதியையும் பயன்படுத்தி தன்னை தற்காத்துக்கொள்ள உரிமை படைத்ததது என்பதை நிலைப்பாடாகக் கொண்டிருக்கிறது.

மத்திய ஆசியாவிலும், மத்திய கிழக்கிலும், எண்ணெய் வளம்மிக்க பிராந்தியங்களில் அமெரிக்கா தனது மேலாதிக்கத்தை நிலைநாட்ட வேண்டுமென்ற விரிவான நோக்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக புஷ் நிர்வாகம் மீண்டும் ஒருமுறை ஒரு சாக்குப்போக்கை உருவாக்கிவருகிறது. ஈரானிடம் மிகப்பெருமளவில் எண்ணெய் மற்றும் எரிவாயு வளம் நிறைந்திருப்பதுடன் அது பாரசீக வளைகுடா மற்றும் மத்திய ஆசியாவில் மூலோபாய முக்கியத்துவப்பகுதியாக உள்ளது. ஐரோப்பிய நாடுகள் வாஷிங்டன் நடவடிக்கைகளுக்கு மந்தமான எதிர்ப்பு தெரிவிப்பது ஈரானுடன் நடைபெறும் எந்த மோதலும் டெஹ்ரானுடன் ஐரோப்பிய நாடுகள் கொண்டிருக்கும் விரிவான வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை சீர்குலைத்துவிடும் என்ற கவலையிலிருந்துதான் கிளைத்தெழுகிறது.

ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ஜோன் கெர்ரி ஈரான் தொடர்பாக புஷ் - நிர்வாகம் மேற்கொண்டுள்ள போர் வெறிப்போக்கை கண்டிக்கவில்லை. உண்மையிலேயே கெர்ரி, புஷ்ஷை கண்டிப்பது அவர் இந்தப் பிரச்சனையை புறக்கணித்துவிட்டார், போதுமான அளவிற்கு கடுமையான நிலை எடுக்கவில்லை என்பதுதான். ஆகஸ்ட் மாதக்கடைசியில் அவரது துணை ஜனாதிபதி வேட்பாளர் சகா ஜோன் எட்வார்ட்ஸ் ஈரானும், வடகொரியாவும் "தங்களது அணுத்திட்டங்களை முன்னெடுத்துச் சென்றுகொண்டிருக்கும் போது" புஷ் ஓரத்தில் ஒதுங்கி நின்று கொண்டிருந்தார் என்று ஒரு உரையில் குறிப்பிட்டிருந்தார். ஈரானுடன் "பெரிய பேரம்" ஒன்றை செய்வதற்கு வலியுறுத்திய அவர் இராணுவ நடவடிக்கை வாய்ப்பையும் ஒதுக்கிவிடவில்லை.

IAEA கூட்டத்தின் முடிவு ஈரான் மீது உடனடி நடவடிக்கையை நவம்பர் 26- வரை ஒத்திவைத்திருப்பதாக தோன்றுகிறது, அதாவது அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிந்தபின்னர் ஆகும். ஆனால் புஷ் நிர்வாகம் திட்டவட்டமாக தோல்வியை நோக்கிச்சென்று கொண்டுருப்பதால் ''அக்டோபர் வியப்பு'' நடவடிக்கையையும் தவிர்த்துவிட முடியாது. அத்தகைய வியப்பூட்டும் அதிரடி நடவடிக்கை ஈரான் மீது அமெரிக்கா அல்லது அதனுடைய நட்பு நாடான இஸ்ரேல் ஆத்திரமூட்டும் இராணுவ தாக்குதல் நடத்தும் வடிவை எடுக்கலாம். அதன்மூலம் மத்திய கிழக்கு முழுவதிலும் வெடித்துச்சிதறும் விளைவுகள் ஏற்படுகின்ற சாத்தியக்கூறுகள் உண்டு.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved