World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Discontent rife in US military ranks

அமெரிக்க இராணுவத்தினரிடையே பரவிவரும் அதிருப்தி

By James Cogan
16 October 2004

Back to screen version

அமெரிக்க தேர்தல் நடப்பதற்கு சிலவாரங்களே இருக்கும் நிலையில் அமெரிக்க ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ள சில செய்திகள், ஈராக்கிலுள்ள அமெரிக்க துருப்புக்களிடையே நிலவுகின்ற அதிருப்தியை கோடிட்டு காட்டுகின்ற வகையில் அமைந்திருக்கின்றன. இளம் இராணுவத்தினர் அவர்களில் பலர் உயர் நிலை பள்ளிப்படிப்பை கூட முடிக்காதவர்கள், ஆத்திரத்தில் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றனர். அமெரிக்க மக்கள் மற்றும் ஈராக்கியர் ஆகிய இருதரப்பினரின் விருப்பத்திற்கு விரோதமாக அந்த நாட்டை கண்காணிக்கும், பணியை மேற்கொள்ளச் செய்யப்பட்டிருப்பதில் அவர்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.

அக்டோபர் 10-ல் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் ஒரு சிறப்பு மிக்க செய்தி அறிக்கை ஒன்று ''கடற்படையினருக்கு ஒரு விரக்தியூட்டும் போர்'' என்ற தலைப்பிட்டு பாக்தாத்திற்கு தென்மேற்கே 50-கி.மீ தொலைவிலுள்ள பெரும்பாலும் சியாக்கள் வாழும் ஸ்கந்தரியா நகரத்தில் பணியாற்றிக்கொண்டுள்ள இரண்டாவது கடற்படை ரெஜிமெண்ட்டின் முதல் பிரிவை சார்ந்த துருப்புக்கள் குழு ஒன்று விமர்சனங்களை தந்திருக்கிறது. அந்தப் பகுதியில் ஆக்கிரமிப்பு எதிர்ப்பாளர்களான மதபோதகர் Moqtadaal Sadr மற்றும் அவரது Mahdi குடிப்படை போராளிகள் மற்றும் இதர எதிர்ப்பு குழுக்கள் கணிசமான அளவிற்கு ஆதரவை பெற்றுள்ளன. ஏறத்தாழ படையெடுப்பு நடந்தது முதல் அப்பகுதியில் தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது.

போரிடுவதில் உள்ள உண்மையான நிலவரம் குறித்து கடற்படையினர் போஸ்டிற்கு சுதந்திரமாக கருத்துதெரிக்கையில், ஈராக்கிய கொரில்லாக்கள் பொதுமக்களது பரந்த ஆதரவை கொண்டிருக்கின்றனர் என்றனர். அமெரிக்காவில் போர் பற்றிய செய்தி வெளியிடப்படும் முறையை அவர்கள் வெறுத்ததோடு, எல்லாவற்றிற்கும் முதலாக ஆக்கிரமிப்பை நியாப்படுத்துவதற்கு கூறப்பட்ட பொய்களையும் அவர்கள் வெறுத்தனர்.

புஷ் நிர்வாகத்தின் பொய்களில் படையினரிடையே மிகுந்த உற்சாகக்குறைவை ஏற்படுத்தியது ஈராக்கில் அவர்கள் ''விடுவிக்க வந்தவர்கள்'' என நடத்தப்படுவார்கள் என்பதுதான், மாறாக அவர்கள் ஆக்கிரமிக்க வந்திருப்பவர்கள் என்று சிவிலியன் மக்கள் கருதுவதை எதிர்கொள்ள வேண்டியயிருக்கிறது. மக்கள் ஆயுதந்தாங்கிய எதிர்ப்பு குழுவிற்கு நிரந்தரமாக ஆட்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Lance Corporal Carlos Perez (வயது-20) கூறினார் ''சில நேரங்களில் நாம் ஏன் இங்கிருக்கிறோம், என்ற காரணமே எனக்குத் தெரியவில்லை....... அல்கொய்தாவை தேடுவதற்காக நாங்கள் இங்கே வந்தோம் என்று கூறப்பட்டது செப்டம்பர் 11- தாக்குதல்களுக்கு அவர்கள்தான் காரணம் என்று கூறப்பட்டது. இதற்கும், இங்கிருக்கும் அணு ஆயுதங்கள் தொடர்பாக காரணங்கள் கூறி போர் தொடக்கப்பட்டது...... நான் கடந்த இரண்டு மாதங்களாகத்தான் இங்கிருக்கிறேன், ஆனால் ஒவ்வொரு முறையும் நான் வெளியே செல்லும்போது மக்கள் முறைத்துப் பார்க்கிறார்கள். ஒவ்வொருவரும் நம்மை சுட்டுவிட விரும்புகிறார்கள் என்பதுபோன்றே தோன்றுகிறது.

Lance Corporal Edward Elston வயது 22 ''முடிவற்ற பல ஆண்டுகளுக்கு இங்கே இருக்கப்போகிறோம் என்ற உணர்வு எனக்கு ஏற்படுகிறது..... பெருமளவிற்கு மோசமாக போகிறது என்று நினைக்கிறேன். பாலஸ்தீன பாணியில் அமைந்துவிடும் என்றே தோன்றுகிறது. இப்போது கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறோம், அதற்குப்பின்னர் ஆக்கிரமிப்புப்பணி நமக்கு வரும்...... நாங்கள் எப்போதுமே இங்கே இருக்கப்போகிறோம்'' எனக் கூறினார்.

Lance Corporal Jonathon Snyder வயது 22- கூறினார்: ''ஒவ்வொரு நாளும் அமெரிக்காவில் நீங்கள் படிப்பது அங்கே நிலவரம் நாளுக்குநாள் சிறப்பாகி கொண்டே வருகிறது'' என்பது ஆனால் நீங்கள் இங்கே இருக்கும்போது ஒவ்வொரு நாளும் நிலமை மோசமாகிக்கொண்டுவருகிறது என்பதை தெரிந்து கொள்கிறீர்கள்''

பிரைவேட் Kyle Maio வயது 19- போஸ்ட் இடம்: ''இங்கே நாங்கள் தோல்வியை சந்தித்துக் கொண்டிருக்கிறோம், ஆனால் அவர்கள் (அரசாங்கமும் ஊடகங்களும்) தோல்வி என்பதை ஒப்புக்கொள்ளமாட்டார்கள் அதில் அவர்கள் சிக்கிக்கொள்ள மாட்டார்கள்'' என தெரிவித்தார்.

போரில் மடிபவர்கள் மற்றும் காயம்படுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்துகொண்டே வருவது இந்த கோபத்தில் ஓர் அம்சமாகும். காலப்போக்கில் பாதிப்பு குறைவதற்கு பதிலாக படையெடுப்பு காலத்தில் கூட இல்லாத அளவிற்கு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் அதிக அளவில் அமெரிக்கர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இரண்டாவது கடற்படையின் முதல் பட்டாலியனில் பணியாற்றும் 1100-பேரில் 4-பேர் கொல்லப்பட்டனர். 102- பேர் காயமடைந்தனர். ஜூலை 28-ல் அவர்கள் வந்த பின்னர் இது நடந்திருக்கிறது. பாதிப்பு விகிதம் 10- சதவீதத்தை நெருங்கிவருகிறது.

2003- மார்ச்சிற்கு பின்னர் ஈராக்கில் குறைந்த பட்சம் 1084- அமெரிக்க துருப்புக்கள், கொல்லப்பட்டிருக்கிறார்கள். 7532- பேர் காயமடைந்துள்ளனர். வெட்டி சிகிச்சையளிக்கின்ற அளவிற்கு காயமடைந்து மற்றும் குறைந்தபட்சம் 200- பேர் கண்பார்வையை இழந்துவிட்டனர். போரில் காயமடைந்தவர்களுக்கு மேலாக மேலும் 15,000- அமெரிக்கத் துருப்புக்கள் போர் அல்லாத வேறு காரணங்களுக்காக ஈராக்கிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். இவர்களில் 1500- பேர் மனநிலை கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்களாவர். வீரியம் குறைந்த யுரேனிய பாதிப்புக்களால் பக்கவிளைவுகளை சந்தித்த அமெரிக்க இராணுவத்தினர் பற்றிய தகவல்களும், உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

தினசரி மரணம் காயம் அல்லது நோய் பாதிப்பை எதிர்நோக்கியுள்ள ஒரு இளம் கடற்படையாள் வாஷிங்டன் போஸ்ட் இன் கேள்வி ஒன்றை மிக அலட்சியமாக புறக்கணித்தார். இப்படி பகிரங்கமாக பேசுவதால் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு இலக்காககூடும் என்று பயப்படவில்லையா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் ''நாங்கள் அதைப்பற்றி பொருட்படுத்தவேயில்லை, எங்களை அவர்கள் என்ன செய்துவிடுவார்கள்? ஈராக்கிற்குத்தானே அனுப்புவார்கள்?''
இதர துருப்புக்களும் கடற்படையினரும், ஈராக்கிய நிலவரம் குறித்து தங்களது கண்டனங்களை செப்டம்பர் 23-ல் கிறிஸ்டியன் சைன்ஸ் மானிட்டர் வெளியிட்டுள்ள ஒரு கட்டுரை தெளிவுபடுத்துகிறது.

நஜாப் பகுதியில் போர் புரிந்து வரும் ஒரு இராணுவ வீரர் கூறினார்: ''நான் பேசிய 10- பேரில் 9-பேர் புஷ்ஷிற்கு எதிராக யார் போட்டியிட்டாலும் அவரை ஆதரிக்கப்போவதாக கூறினார். ஈராக் நிலவரம் தொடர்பாகவும், புஷ்-மீதும் மக்கள் மிகப்பெருமளவிற்கு வெறுப்படைந்துள்ளனர்'' மற்றொருவர் சொன்னார்: ''எனக்குத் தெரிந்த எவரும் புஷ்ஷை விரும்பவில்லை, இந்த போர் முழுவதுமே பொய்யை அடிப்பபடையாகக் கொண்டது''
ஒரு கடற்படையாள் ''நாம் இங்கே வந்திருக்கவே கூடாது, முதலில் இந்த நாட்டின்மீது படையெடுப்பதற்கு எந்தவிதமான முகாந்திரமும் இல்லை இங்கே நாம் வந்தோம், ஏராளமான மக்களை கொன்றோம், மகளிர், குழந்தைகளை கொல்வதில் எனக்கு விருப்பமில்லை, அப்படிப்பட்டவன் அல்ல நான் அத்தகைய இயல்பு என்னிடமில்லை'' எனக் கூறினார்

பல துருப்புக்களும் கடற்படையினரும் மைக்கேல் மூர் இன் பாரன்ஹீட் 9/11 திரைப்படத்தை பார்த்திருக்கின்றனர் அதைப்பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர். ஒரு கடற்படையாள் மானிட்டருக்கு சொன்னார், ''ஒவ்வொருவரும் அந்த திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். புஷ் பற்றிய மதிப்பீட்டை பலரிடம் அது உருவாக்கிக் கொண்டிருக்கிறது.'' மற்றொருவர் அறிவித்தார்: ''புஷ், பின் லேடனை தாக்க விரும்பவில்லை ஏனென்றால், அவர் பின்லேடன் குடும்பத்தோடு வர்த்தகம் செய்து கொண்டிருக்கிறார்''

மூர் -கடைசியாக வெளியிட்டுள்ள நூல் ''அவர்களை மீண்டும் நம்ப முடியுமா?'' என்பது அதில் புஷ் - நிர்வாகத்தை துருப்புக்கள் கண்டிப்பது மற்றும் ஈராக்கிய மக்களுக்கெதிராக அட்டூழியங்களை புரிவதற்கு கட்டளையிடப்பட்டதை கண்டித்தும் கடிதங்களையும் இ-மெயில்களையும் அனுப்புகின்றனர். அந்த தொகுப்புத்தான் அந்த நூல்.

2003- மார்ச் 20-க்கும் அக்டோபர் கடைசிக்கும் இடைப்பட்ட காலத்தில் ஆக்கிரமிப்புப் படைகளின் நடவடிக்கைகளால் 37,000- சாதாரண மக்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஒரு ஈராக்கிய மதிப்பீடு கூறுகிறது. இந்த ஆண்டு ஏப்ரலுக்கும், செப்டம்பருக்கும் இடைப்பட்ட காலத்தில் 3487- ஈராக்கியர் கொல்லப்பட்டதாகவும், 13,720- பேர் காயமடைந்ததாகவும், அமெரிக்கா நியமித்துள்ள ஈராக்கிய சுகாதார அமைச்சகம் மதிப்பீடு செய்திருக்கிறது இதில் 3-ல் 2- பங்கு பாதிப்புக்கள் அமெரிக்க தலைமையிலான ஆக்கிரமிப்பு படைகளால் வந்தது.

2003 மார்ச்சிலிருந்து ஈராக்கில் மொத்தம் 3,50,000 அமெரிக்க இராணுவ பணியாளர்கள் பணி புரிந்திருக்கிறன்றனர். முன்னாள் ஈராக் இராணுவத்தினர் அமைப்புக்களும், இராணுவ குடும்பங்களை சார்ந்தவர்களும், இந்தப் போருக்கு எதிர்ப்பு தெரிவிப்பது, அதிகரித்துக் கொண்டுவருகிறது.

Mike Hoffman ஈராக்கில் பணியாற்றிய முன்னாள் கடற்படை பீரங்கிப்படைவீரர், அவர் ஆகஸ்ட் 2001-ல் இராணுவப்பணியிலிருந்து ஒய்வுபெற்று போருக்கெதிரான முன்னாள் ஈராக் இராணுவத்தினர் அமைப்பை, இணை அமைப்பாளராக இருந்து நிறுவ உதவியிருக்கிறார். இந்த அமைப்பு இந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. (www.ivaw.net) mother Jones கடைசி பதிப்பில் அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: '' இந்தப் போருக்கான காரணங்கள் தவறானவை. அவை பொய்கள். பேரழிவு ஆயுதங்கள் எதுவுமில்லை அல்கொய்தா இல்லை, நான் அந்த மக்கள் மீது ஆயுதபலத்தால் ஜனநாயகத்தை திணிக்கமுடியாது என்பது தெளிவாகத்தெரிந்தது.....

''இத்தகைய நிலவரத்திற்கு காரணமானவர்கள் களத்தில் போர்புரிந்து கொண்டிருக்கவில்லை என்பது உங்களுக்கு தெரியும். முதலில் அவர்கள்தான் உங்களை அந்த நிலவரத்திற்கு கொண்டு வந்தவர்கள், பொய் சொல்லி இருக்காவிட்டால் இந்த நிலவரம் ஏற்பட்டிருக்காது என்பதை நீங்கள் அறிவீர்கள் படிப்படியாக போர்வீரர்கள் அந்த முடிவிற்கு வந்து கொண்டிருக்கிறார்கள் அந்த முடிவு பரவலானது போருக்கான எதிர்ப்பு இன்னும் அதிகமாக வளரவே செய்யும்.''

ஆப்கானிஸ்தான் அல்லது ஈராகில் பலியான இராணுவத்தை சேர்ந்த குடும்பங்கள் பலவற்றை சேர்ந்தவர்கள் உட்பட சுமார் 1700 இராணுவக் குடும்பங்களை சேர்ந்தவர்களது அமைப்புக்களான IVAW உடனே ''அவர்களை அழைத்து வாருங்கள்'' மற்றும் ''இராணுவக் குடும்பங்கள் பேசுகின்றன'' என்பது போன்ற அமைப்புக்களிடையே நெருக்கமான உறவுகள் நிலவுகின்றன. முதலாவது வளைகுடாப்போர் 1991-ல் நடைபெற்ற காலத்திலிருந்து ஈராக்கிய போர் எதிர்ப்பு குழுக்களுக்கும், முன்னாள் இராணுவத்தினர் சங்கங்களுக்குமிடையே நெருக்கமான உறவுகள் நீடிக்கின்றன முன்னாள், அமெரிக்கத் துருப்புக்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோரை, பாதிக்கும் நோய்கள் குறித்து அவர்கள் இன்னமும் விளக்கம் கேட்டுக்கொண்டேயிருக்கிறார்கள்.

முன்னாள் இராணுவத்தினர் மற்றும் இராணுவக் குடும்பங்களிடையே பொதுவாக நிலவுகின்ற உணர்வு உடனடியாக ஈராக் ஆக்கிரமிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்பதுதான். ''ஈராக்கிலிருந்து உடனடியாக அனைத்து ஆக்கிரமிப்புப்படைகளையும் விலக்கிக்கொள்வதன் மூலம் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியுமென்றும், உயிர்களை காப்பாற்ற முடியுமென்றும், அதுதான் தனது நோக்கமென்றும்'' IVAW கூறியுள்ளது. ''இந்த போர்களை தொடக்கிய அரசாங்கங்கள் அவர்களுக்காக போரிட நிர்பந்திக்கப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கடமைப்பட்டவர்கள், அந்த அரசாங்கங்கள் தங்களது இராணுவத்தினர், கடற்படையினர் ஆகியோர் நாடு திரும்பியதும் அவர்களுக்கு சேரவேண்டியதை தந்தாக வேண்டும்'' என்றும் அந்த அமைப்பு அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

இது அவர்களை புஷ் நிர்வாகத்திற்கு எதிராக மட்டுமல்ல, ஜனநாயகக் கட்சி அதன் ஜனாதிபதி வேட்பாளர் ஜோன் கெர்ரி ஆகியோருக்கு எதிராகவும் திருப்பியுள்ளது. ஜோன் கெர்ரி தனது அரசாங்கம் ஈராக் ஆக்கிரமிப்பை நீடிக்கும் என்று திரும்பத்திரும்ப சொல்லியிருக்கிறார். அவர் முதலாவது ஜனாதிபதி தேர்தல் போட்டி கலந்துரையாடலில் ''நான் ஈராக்கிலிருந்து விலகி வருவதுபற்றி பேசவில்லை, வெற்றி பெறுவதுபற்றித்தான் பேசுகிறேன்'' என்று கூறினார்.

போரை எதிர்த்து நிற்கின்ற முன்னாள் இராணுவத்தினர், இராணுவக் குடும்பங்கள் மற்றும் ஆயுதப்படைகளில் பணியாற்றுவோர் சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் அறிக்கையை கடுமையாக ஆராய்ந்து 2004- அமெரிக்கத் தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரத்திற்கு ஆதரவு தரவேண்டும். சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற வேட்பாளர்கள் தான் அவர்களது நியாயமான குரலாக செயல்படும் ஒரே வேட்பாளர்கள்.

சோசலிச சமத்துவக் கட்சி ஒன்றுதான் உடனடியாகவும், நிபந்தனை எதுவுமில்லாமலும், அனைத்து அமெரிக்க மற்றும் வெளிநாட்டு துருப்புக்களும், உடனடியாக விலக்கிக்கொள்ளப்பட வேண்டுமென்றும், தனது போர் குற்றங்களுக்காக புஷ்- நிர்வாகத்தின் மீது வழக்கு தொடர வேண்டும் என்றும் கோரிவருகிறது. இதற்கெல்லாம் மேலாக சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரம் தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை நிலைநாட்டவும் இராணுவ மயமாதல் மற்றும் காலனி ஆதிக்கத்திற்கு அடிப்படையாக உள்ள காரணத்தை தாண்டி வருவதற்கு தேவைப்படும் பரந்த மக்களின் சோசலிச கட்சியை அமைக்கவும் பிரச்சாரம் செய்துவருகிறது.

சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் அறிக்கை சுட்டிக்கட்டியிருப்பதைப்போல்: ''ஒரு அடிப்படையானதும் முற்போக்கு அடிப்படையிலும் அமெரிக்க கொள்கை மாற்றத்திற்கு தேவைப்படுவது வெறும் ஆட்சியாளரில் மாற்றம் மட்டுமல்ல மாறாக ஒரு சமூக புரட்சி, அது அமெரிக்க மக்கள் மீது, கம்பெனி நலன்கள் மிக பிரம்மாண்டமான தனியார் செல்வம் மற்றும் இலாப கட்டுக்கோப்பு முழுவதன் ஆதிக்கத்தையும் ஒழித்துக்கட்டுகின்ற ஒரு சமூக புரட்சியாக உருவாகவேண்டும்''


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved