World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

Israel to expand West Bank settlements with US support

அமெரிக்க ஆதரவோடு மேற்குக்கரை குடியிருப்புக்களை விரிவுபடுத்தும் இஸ்ரேல்

By Jean Shaoul
1 September 2004

Back to screen version

சென்ற வாரம் இஸ்ரேல் மேற்குக்கரையில் குடியிருப்புக்களை விரிவுபடுத்தும் திட்டங்களை அறிவித்து காசாவிற்கு துருப்புக்களை அனுப்பியது, பாலஸ்தீன மக்களது வீடுகளை இடித்து முக்கியமான சாலை அமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கிறது. இந்த நடவடிக்கை மூலம் காசாவிலிருந்து வெளியேறுவது என்ற ஷரோனின் திட்டம் அம்பலமாகியது--- இஸ்ரேல் பாலஸ்தீன மோதலில் சமாதான தீர்வு நோக்கிய ஒரு முன் நடவடிக்கை என்று வாஷிங்டனால் பாராட்டப்பட்டது---அவ்வாறு கூறுவது மோசடியானது ஆகும்.

ஷரோனின் ''ஒருதலைபட்சமான வெளியேற்ற'' திட்டத்தின்கீழ் இஸ்ரேல் காசா பகுதியிலிருந்து 8,153- குடியேற்றக்காரர்களை (யூதர்களை) திரும்ப அழைத்துக்கொள்ளும் அதே நேரத்தில் காசா பகுதியின் எல்லைகள் கடற்கரை மற்றும் விமான வழித்தடத்தை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டிலேயே வைத்துக்கொண்டிருக்கும், காசா பகுதியிலிருந்து எந்தத்தாக்குதல் நடத்தப்பட்டாலும் அதற்கு பதிலடியாக இஸ்ரேல் தனது துருப்புக்களை காசாவிற்குள் அனுப்புகின்ற உரிமை பெற்றிருக்கும். மேற்குக்கரையில் தனது பிடியை இறுக்கிக்கொள்வதற்கு இஸ்ரேல் எடுத்துவரும் நடவடிக்கைகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்புகின்ற வகையிலும் பாலஸ்தீனய அரசு முறையாக உருவாவதை ஒழித்துக்கட்டுகின்ற முறையிலும் காசா பகுதிமீது இஸ்ரேல் தனது கவனத்தை செலுத்திவருகிறது.

அரசாங்கம் தனது மேற்குக்கரை சட்டவிரோத குடியிருப்புக்களை விரிவுபடுத்துவதற்கு இரண்டு தனி திட்டங்களை உருவாக்கியுள்ளது. 1000- புதிய வீடுகளை கட்டுப்படுத்துவதற்கான ஒப்பந்தங்களை அரசாங்கம் வெளியிட்டும், சில நாட்கள் கழித்து மேலும் 533 வீடுகளை கட்டுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஜெருசலம் அருகிலுள்ள Har Gilo மற்றும் Haradar -ல் 300- க்கு மேற்பட்ட வீடுகள் மற்றும் ஆதாம் மற்றும் இமானுவேலில் 200 புதிய வீடுகளுக்கான திட்டம் அறிவிக்கப்பட்டது.

எதிர்காலத்தில் பாலஸ்தீனிய அரசு உருவாக முடியாத அளவிற்கு புவியியல் அளவையும் மக்கள் தொகையையும் விரிவுபடுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கையின் ஒரு பாகமாக இஸ்ரேல் குடியிருப்பு வடிவத்தை விஸ்தரிக்க முயலுகிறது. மேற்குக்கரையின் பெரும்பாலான பகுதிகளை இஸ்ரேல் பிடித்துக்கொண்டதை உறுதிப்படுத்தும் வகையிலும் ''உண்மையை நிலைநாட்டும் முறையிலும்'' ஷரோன் தனது கொள்கைகளை தொடர்ந்தும் நிறைவேற்றி வருகிறார்.

பிரதமரின் லிக்குட் கட்சி மாநாடு தொடங்கும் அதே நேரத்தில் இந்த அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. காசாவில் ஒரு குடியிருப்பைக் கூட விட்டுவிடக்கூடாது என்று தீவிர தேசியவாதிகள் எதிர்ப்பையும் விமர்சனம் தெரிவிப்பதையும் தடுத்து நிறுத்தும் ஒரு முயற்சியாகவும், குடியிருப்புக்களின் கடவுளின் தந்தை என்று தன்னை உறுதிபடுத்திக்கொள்ளவும் இந்த நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறார்கள். நடைமுறையில், அகன்ற இஸ்ரேல் திட்டத்திற்கு தான் எதிரானவர் போன்று உறுதியுடன் ஷரோன் காட்டிக்கொள்ள முயலுகிறார். ஒரே ஒரு வேறுபாடு இந்த புறநிலையை நிறைவேற்றுவதற்கு மிகவும் உண்மையான வழியான அமெரிக்காவின் ஆதரவை அவர் நாடி வருகிறார்.

ஷரோனின் விரிவான அரசியல் புறநிலை என்னவென்றால் காசாவில் சலுகை காட்டுவதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி அங்கிருந்து அங்கு குடியேறிய 8100- பேரையும், ராணுவத்தையும் வெளியேற்றியதன் மூலம் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் மேற்குக்கரை நில அபகரிப்பிற்கு ஆதரவைத் திரட்டுவதை நோக்கமாகக் கொண்டது. 2000-செம்டம்பரில் அவர் 1993-ம் ஆண்டு உருவான ஓஸ்லோ ஒப்பந்தத்தை வெளிப்படையாக சிதைக்க ஆரம்பித்தார். ஏனென்றால் மேற்குக்கரை மற்றும் காசா பகுதியில் சிதைவுபட்ட பாலஸ்தீனிய அரசு உருவானால் கூட சர்வதேச சட்டப்படி சட்டவிரோதமான குடியிருப்புக்களை ஒப்படைக்க வேண்டியிருக்கும், அதை ஷரோனால் தாக்கிக்கொள்ள முடியாது. அதே காரணத்திற்காகத்தான் அதே போன்று அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ரஷ்யா மற்றும் ஐ.நா உருவாக்கிய ''சாலை வரைபடத்தை'' சிதைத்தார். ஈராக் படையெடுப்பிற்கு பின் தனது கூட்டணி பங்காளிகளுக்கு உற்சாகம் அளிக்கின்ற வகையில் குறிப்பாக பிரிட்டன் பிரதமர் டோனி பிளேயருக்காக புஷ் சாலை வரைபடத்தை உருவாக்கினார்.

அதற்குப்பதிலாக, ஷரோன் ஏப்ரல் 14-ல் காசாவிலிருந்து தன்னிச்சையாக வெளியேறிச் செல்லும் தனது திட்டத்திற்கு அமெரிக்காவின் ஒப்புதலைப் பெற்றார். ஒஸ்லோ ஒப்பந்தத்தில் கண்டிருந்ததைவிட அதிக அளவில் சிதைந்துவிட்ட பாலஸ்தீன அரசை உருவாக்க அதன் மூலம் வழிசெய்தார். இஸ்ரேல் தொடர்ந்து பாலஸ்தீனப் பகுதிகளில் ராணுவ பொருளாதார மற்றும் அரசியல் கட்டுப்பாடுகளை நிலைநாட்டும். இதற்கெல்லாம் மேலாக 1948-மற்றும் 1967- போர்களில் தங்களது வீடுகளில் இருந்து விரட்டப்பட்ட அல்லது வெளியேறிச்சென்ற பாலஸ்தீன மக்கள் இஸ்ரேலுக்குள்ளே வர உரிமையில்லை என்று அமெரிக்கா ஏற்றுக்கொண்டது. புதிதாக உருவாகும் பாலஸ்தீன அரசிற்குள்ளேயோ மீண்டும் நுழைவதற்கும் அது சம்பந்தமான பேச்சு வார்த்தைக்கும் இடமில்லை.

1967-போரில் ஜோர்தானிடமிருந்தும், எகிப்திடமிருந்தும் இஸ்ரேல் பிடித்துக்கொண்ட மேற்குக்கரை மற்றும் காசா பகுதிகளில் ஆக்கிரமிப்புச் செய்துள்ள அரசு, வீடுகளைக் கட்டுவது நான்காவது ஜெனீவா ஒப்பந்தத்தின் படி சட்டவிரோத நடவடிக்கையாகும். ஐ.நா தீர்மானங்கள் எண்ணற்ற கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால் லிக்குட் கட்சி மே 2-ல் ஷரோனின் வெளியேற்றத் திட்டத்தை ஏற்றுக் கொள்ள மறுத்தது, ஏனென்றால் காசா பகுதியில் சில குடியிருப்புக்களையும், மேற்குக்கரைப் பகுதியில் சில சாவடிகளையும் கைவிடுவதற்கு ஷரோனின் திட்டம் வகை செய்தது. இப்படி லிக்குட் கட்சி அவரது திட்டத்தை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டதால் ஷரோன் தன்னை ஒரு மிதவாத மாற்று என்று சித்தரித்துக்கொள்ள உதவியது. தீவிர தேசியவாதிகள் மற்றும் மதக்கட்சிகள் கூறுவதைவிட அவரது ஆலோசனைகள் குறைந்தபட்சம் சிறப்பாக காணப்பட்டன.

மேலும் ஷரோனுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இரண்டு அமைச்சர்கள் பதவி விலகினர். காசா வெளியேற்றத்திட்டத்தை எதிர்த்ததற்காக மற்றொரு அமைச்சர் நீக்கப்பட்டார், ஆட்டம் கண்டுவிட்ட ஷரோனின் சிறுபான்மை அரசாங்கம் எதிர்கட்சியான தொழிற்கட்சியின் ஆதரவினால் பதவியில் தொங்கிக் கொள்ள முடிந்தது.

வெட்கக்கேடான செயல்களை செய்வதில் ஷரோன் எல்லையற்று செல்பவர். அவரது அரசாங்கம் மேற்குக்கரையிலும், காசா பகுதியிலும் சியோனிச குடியிருப்புக்களை விரிவுபடுத்துவதை அப்பட்டமாக ஏற்றுக்கொள்ள மறுத்த சில வாரங்களுக்குள் புதிய குடியிருப்புக்கள் பற்றிய அறிவிப்பு வருகிறது. இது ''சாலை வரைபடத்தை'' அப்பட்டமாக மீறுவதாகும். அப்போது இஸ்ரேல் ''எல்லா குடியிருப்பு நடவடிக்கைகளையும் கைவிட்டு விடுவதாகவும் 2001- மார்ச்சிற்கு பின்னர் உருவாக்கப்பட்ட குடியிருப்பு சாவடிகளை கைவிட்டு விடுவதாகவும் சம்மதம் தெரிவித்திருந்தது.

சென்ற ஏப்ரலில் காசாவிலிருந்து ''வெளியேறும்'' திட்டத்தை ஷரோன் தாக்கல் செய்தபோது அதை புஷ் ஏற்றுக்கொண்டார்."new realities on the ground" இஸ்ரேல் தனது எல்லா மேற்குக்கரை குடியிருப்புக்களையும், கைவிட்டுவிட முடியாதென்றும் புஷ் குறிப்பிட்டார். தற்போது புஷ் அதற்கு மேலே சென்றிருக்கிறார். வெள்ளை மாளிகை இஸ்ரேல் அறிவித்துள்ள திட்டங்களை விமர்சிக்க மறுத்துவிட்டதால் ''சாலை வரைபடத்தில்'' கண்டுள்ள மிகக்குறைந்த கட்டுப்பாடுகளையும், நீக்கிவிட்டது. அமெரிக்காவின் ஆதரவோடு மேற்குக்கரை குடியிருப்புக்களை தன்கையில் வைத்துக்கொள்ளவும், விரிவுபடுத்தவும் அவற்றை நிரந்தரமாக இஸ்ரேலுக்குள் சேர்த்துக்கொள்ளவும் அமெரிக்கா இணங்கிவிட்டது. மிகக் குறைந்த பாலஸ்தீனிய அரசுத்திட்ட வாய்பைபையும் அவர்களால் கைவிடப்பட்டது.

நியூயார்க் டைம்ஸ் ஒரு அமெரிக்க அதிகாரியின் தகவலை மேற்கோள் காட்டி குடியிருப்புக்களுக்குள் ''இயற்கையான வளர்ச்சியை'' கருத்தில் கொண்டு ''மறைமுகமாக'' மாற்றம் ஏற்பட்டுள்ளது. புஷ் நிர்வாகம் இப்போது ஏற்கெனவே உள்ள குடியிருப்புக்களின் எல்லைகளுக்குள் புதிய கட்டிடங்களுக்கு ''மறைமுக ஆதரவு'' தந்திருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறது.

ஜெருசலம் போஸ்ட் மகிழ்ச்சியுடன் இதை வரவேற்றிருக்கிறது. ''பல ஆண்டுகளாக இஸ்ரேல் குடியிருப்புக்களின் விரிவாக்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்த கொள்கையை இப்போது அமெரிக்கா மறுபரிசீலனை செய்து வருவதாகத் தோன்றுகிறது. அதற்குரிய தருணம் இதுதான். அமெரிக்கா தனது குடியிருப்பு மைக்ரோஸ்கோப்பை புறக்கணித்துவிட்டு குடியிருப்பு பிளாக்குகள் வளருவதை ஆதரிக்கவேண்டும். மேற்குக்கரையின் பத்தில் ஒரு பகுதிக்கும் குறைந்த இடம்தான் அதற்குத் தேவைப்படும். பாலஸ்தீனய அரசு உருவாவதை அது எந்த வகையிலும் தடுக்காது. 'சமாதான முன்னெடுப்புகளுக்கு' தீங்கு செய்வதை விட இந்த மாற்றம் பாலஸ்தீன மக்கள் சமாதானத்திற்கு வர கட்டாயப்படுத்தும்'' என்று எழுதியிருக்கிறது.

ஷரோனுக்கு வாஷிங்டன் ஆதரவு உள்ளது என்பது சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்கா தனது பங்காளிகளுக்குக் கூட தகவல் தராமல் ''சாலை வரைபடத்தை'' ஒருதலைபட்சமாக குப்பை கூடையில் போட்டுவிட்டது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், இந்த நான்கு அமைப்புக்களில் எதுவும் கண்டனம் கூடத்தெரிவிக்கவில்லை, கடமை தவறாமல் அமெரிக்காவை ஆதரித்துள்ளன.

இன்டிபெண்டன்ட் கூறியிருப்பதைப்போல்: ''செவிக்கு உட்படுத்தாமல், கல்லறைக்கு அரவம் காட்டாமல், வாஷிங்டன் இந்த வாரம் சாலை வரை பட சமாதானத்தை மறைத்து அமைதியாக செய்திருக்கிறது. அமெரிக்கா கூடுதல் குடியிருப்புக்களை ஏற்றுக்கொண்டிருப்பது சாலை வரைபடம் பங்காளிகளது கன்னத்தில் அறைவதைப் போன்றிருக்கிறது. புஷ் உள்நாட்டு அரசியல் நிர்பந்தங்களால் இதைச் செய்திருக்கிறார். அவரது அரசியல் தேவைகளை ஒட்டி சாலைவரைபட பங்காளிகள் மவுனம் சாதிக்கின்றனர். இதன் விளைவுகளை எவரும் மறுக்கவில்லை. ஆனால் பகிரங்கமாக எவரும் வாய்திறக்கவில்லை. இஸ்ரேலின் சமாதானத்திட்டம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்களில் மறைக்கப்பட்டுவிட்ட ஒன்று என்று அந்தக் கல்லறையில் வாசகம் பொறிக்கப்பட்டிருக்கிறது.''

வெள்ளை மாளிகை குடியிருப்புக்கள் விரிவாக்கத்திற்கு ஆதரவு தெரிவித்திருப்பது ஷரோனின் ஆட்டம் காணும் கூட்டணி அரசை தாங்கிப்பிடிப்பதற்கு உதவும் என்ற நோக்கத்தில் நடந்திருக்கலாம். ஆனால் இதில் ஒரு முக்கியமான நோக்கம் நவம்பர் ஜனாதிபதி தேர்தல்களில் சியோனிஸ்ட்டுகள் மற்றும் இஸ்ரேலின் பழமைவாத ஆதரவாளர்களது ஆதரவை பெறுவதற்காகத்தான்.

இஸ்ரேல் செய்திப்பத்திரிகை Ha'aretz-TM Yoel Esteron கீழ்கண்ட விளக்கம் தந்திருக்கிறார். ''ஷரோனின் அதிகார (bureau) தலைவர் Dov Weissglas, புஷ்ஷின் ஆலோசகர்களான கொண்டலீனா ரைஸ், மற்றும் Eilot Abrams- இடம் இஸ்ரேல் பிரதமருக்கு ஒரு சிறிது வாய்ப்பளியுங்கள், அதன் மூலம் பிரதிபலன் கிடைக்கும் என்று நம்ப வைத்தார். ஷரோனின் ஜனநாயகக்கட்சி வேட்பாளருக்கு ஆதரவுதர மறுத்தார்.... இது மிகச்சிறிய பண்டமாற்று--- கட்டட குடியிருப்புகளை எடு, ஜான் கெர்ரியின் கன்னத்தில் அறை''

இப்படிப்பட்ட பேரத்தினால் பாலஸ்தீனியர்கள் திக்கற்ற நிலையில் தவித்துக் கொண்டிருக்கின்றனர். அதிர்ச்சியடைந்துள்ள பாலஸ்தீனிய தலைமை கடைசியாக நடைபெற்றுக்கொண்டுள்ள தாக்குதல்களுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறது. அவர்கள் பரிதாபகரமாக கூக்குரல் எழுப்புவதோடு, நின்றுவிட்டார்கள். சியோனிச குடியிருப்பு விரிவாக்கத்திற்கு அமெரிக்காவின் ஆதரவால் பாலஸ்தீன பிரதமர் அஹமது கோரி சமாதான நம்பிக்கை சிதைந்துவிடுமென்று கூறினார். ''தற்போது குடியிருப்பு விரிவாக்கத்தை அமெரிக்கா சரி என்று சொல்வதை என்னால் நம்பமுடியவில்லை. இது சமாதான முன்னெடுப்பை சிதைத்துவிடும்'' என்று அவர் குறிப்பிட்டார்.

ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மேற்குக் கரைப் பகுதியில் புதிய குடியிருப்புக்கள் கட்டப்படும் என்ற அறிவிப்போடு ஷரோன் டாங்கிகளையும், புல்டெளசர்களையும் காசாவிற்குள் அனுப்பியுள்ளார். அவர்கள் 13 வீடுகளை இடித்து 100-பேரை வீடற்றவர்களாக ஆக்கிவிட்டனர். எகிப்திற்கு செல்லும் கடற்கரை சாலையை புல்டெளசர்கள் மூன்று கூறுகளாக சிதைத்ததுடன், காசா பகுதியை மற்றைய பக்கத்து நாடுகளிலிருந்து தனித்தனிக் கூறுகளாகப் பிரித்துவிட்டது.

இந்த நடவடிக்கை உறுதிப்படுத்துவது என்னவென்றால் துருப்புக்கள் விலக்கிக் கொள்ளப்பட்டாலும் கூட, காசா யூதர்கள் பகுதியாகத்தான் இன்னும் விளங்கும், இஸ்ரேலிய படைக்குட்பட்டோ அல்லது இல்லாமலோ தனிநாடு என்று அழைக்கப்படுவது சுதந்திரமாக இருக்காது. அது தென்னாப்பிரிக்க இன ஒதுக்கல் காலத்தில் கருப்பர் இன மக்களுக்கு ஒதுக்கப்பட்ட குடியிருப்புக்களைப் போன்றுதான் அமையும். இஸ்ரேல், காசா பகுதியில் மேலாதிக்கம் செலுத்தும் பாலஸ்தீனய ஆளும் செல்வந்த தட்டு மக்களை அடக்கத் தவறிவிட்டது என்று கருதுமானால் காசா பகுதியை திரும்பப்பிடித்துக்கொள்ளும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved