World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : ஜப்பான்

Koizumi calls snap election after setback over Japan Post privatisation

ஜப்பான் தபால்துறை தனியார்மயமாக்கல் மீதான பின்னடைவிற்கு பிறகு திடீர் தேர்தல்களுக்கு கொய்ஷூமி அழைப்பு

By James Cogan
12 August 2005

Back to screen version

ஜப்பான் பிரதமர் ஜூனிசிரோ கொய்ஷூமி நாடாளுமன்றத்தின் கீழ்சபையை திங்களன்று கலைத்து செப்டம்பர் 11 அன்று முன்கூட்டியே தேர்தல்கள் நடைபெறும் என்று அறிவித்தார். ஜப்பானின் தபால் துறையை தனியார்மயமாக்கும் அவரது அரசாங்கத்தின் சட்டத்தை நாடாளுமன்ற மேல்சபை புறக்கணித்ததற்கு பதிலளிக்கும் விதமாக கொய்ஷூமி இந்த முடிவிற்கு வந்தார்.

இந்த மசோதாா ஆளும் தாராளவாத ஜனநாயகக் கட்சிக்குள்ளேயே (LDP) ஒரு பிளவை ஏற்படுத்திவிட்டது. 22 தாராளவாத ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் கட்சி மாறி எதிர்க்கட்சியுடன் சேர்ந்து வாக்களித்ததால் அது தோல்வியடைந்தது. சென்ற மாதம் கீழ் சபையில், 37 தாராளவாத ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் சட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர்.

கொய்ஷூமியின் நடவடிக்கை விமர்சனங்களை தோற்றுவித்துள்ளது. பழைமைவாத Yomiuri Shimbun தலையங்கத்தில் நேரடியாக எழுப்பியுள்ள கேள்வியில், மேல்சபையில் நடைபெற்ற வாக்குப்பதிவிற்காக கீழ்சபையை கலைத்ததன் மூலம் "ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்ட அரசியலமைப்பு அரசாங்க நடைமுறையை அவர் மீறிவிட்டாரா?" என்று கேட்டிருக்கிறது.

கொய்ஷூமி நடவடிக்கைகளின் எதேச்சதிகார தன்மை குறித்து பிரதான எதிர்க்கட்சியான ஜப்பான் ஜனநாயகக் கட்சி (DPJ) பொதுச் செயலாளர் டாட்சுவோ காவோபட்டா கவலை தெரிவித்தார், "இந்த மசோதாவிற்கு வாக்களியுங்கள் அல்லது நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கூறுவது மிகக்கடுமையான வழக்கத்திற்கு மாறானவை" என்று நிருபர்கள் மாநாட்டில் தெரிவித்தார்.

செப்டம்பர் 11-க்கு பின்னரும் மேல்சபையின் வேறுபாடுகள் மாறப்போவதில்லை, மீண்டும் அதில் தனியார்மயமாக்கல் சட்டம் தோற்கடிக்கப்படும் என்பதற்கான சாத்தியக்கூறு உண்டு.

இந்த தேர்தல்களை பயன்படுத்தி தனது கட்சிக்குள் எதிரிகளைகளை எடுக்க காய்ஸ்மி பிரதானமாக கருதியிருக்கிறார். தாராளவாத ஜனநாயகக் கட்சி கட்சியிலுள்ள இரண்டு அரசியல் தரகர்களான சிசுகா காமேயும், மிட்சுவோ ஹோருச்சியுமான அந்த கன்னைவாதிகள் அஞ்சல்துறை அதிகாரத்துவத்திடம் இருந்தும் 4,00,000 வலுவான தொழிலாளர்களிடமிருந்தும் கணிசமான நிதிகளையும் அரசியல் ஆதரவையும் பெற்று வருகின்றன, இவர்கள் தனியார்மயமாக்கலை எதிர்த்து வருகின்றன. அவர்கள் இருவரும் அவர்களது கீழ்சபை ஆதரவாளர்களும் இந்த சட்டத்திற்கு எதிராக வாக்களித்தவர்கள், தாராளவாத ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் தகுதியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள். தாராளவாத ஜனநாயகக் கட்சியின் தலைவர் என்ற முறையில் கொய்ஷூமி அவர்களுக்கு எதிராக தனியார்மயமாக்கல்-சார்பு வேட்பாளர்களை நியமிக்க கருதியிருக்கிறார்.

கடந்த 50 ஆண்டுகளில் பெரும்பாலான காலகட்டங்களில் ஜப்பானின் ஆளும்கட்சியாக இருந்து வரும் தாராளவாத ஜனநாயகக்கட்சியை மாற்றியமைப்பதற்கான மேலும் ஒரு பிரதான நடவடிக்கைதான் இந்தக் களையெடுப்பு. 2001ல் பிரதமராக பதவியேற்றதிலிருந்து, கொய்ஷூமி, தாராளவாத ஜனநாயகக் கட்சியின் இறுக்கமான பிணைப்புடன் உள்ளவர்களையும் மற்றும் வேண்டியவர்களுக்கு சலுகை செய்யும் கன்னைகளை சிதைப்பதற்கு நாட்டின் மிகுந்த செல்வாக்குமிக்க நிதியாதிக்க மற்றும் பெருநிறுவன நலன்களின் ஆதரவோடு முயன்று வருகின்றார். தங்களது சொந்த கன்னைவாதிகளின் கட்டளைகளை கைவிட்டுவிட்டு கொய்ஷூமியின் கட்டளைகளுக்கு கீழ்படிந்து நடக்கவேண்டுமென்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தற்பொழுது அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன மற்றும் அவர் மிகப்பெருமளவில் ஜனாதிபதி பாணியிலான தலைமையில் செயல்பட்டு வருகிறார்.

தேசிய பொருளாதார ஒழுங்குமுறையை அடிப்படையாகக் கொண்ட ஒரு கட்சியிலிருந்து தீவிர சுதந்திர சந்தை மறுசீரமைப்பிற்கான ஒரு அரசியல் கருவியாக தாராளவாத ஜனநாயகக் கட்சி மாற்ற வேண்டும் என்பதுதான் பகிரங்கமாக கூறப்பட்டுவரும் நோக்கமாகும். கடுமையான பாதுகாப்பு மற்றும் மானியங்களை சார்ந்திருக்கும் நிலைபெற்றுவிட்ட நலன்களிலிருந்து அவர்கள் அரசியல் ஆதரவை பெறுவதால், தாராளவாத ஜனநாயகக் கட்சி கன்னை தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து உள்எதிர்ப்புகள் வரும் என்பதை காமே மற்றும் ஹோருச்சி (Kamei, Horiuchi) போன்றவர்களின் நிகழ்ச்சிகள் காட்டுகின்றன.

இந்த மறுகட்டமைப்பு செயற்திட்டத்திற்கு ஜப்பான் தபாலை தனியார்மயமாக்குதல் ஒரு அவசியமான ஒன்றென்று ஆளும் வட்டாரங்கள் கருதுகின்றன. அத்துடன் ஜப்பான் ஒரு பூகோள இராணுவ வல்லரசு என்பதை மீண்டும் வலியுறுத்துவதுடன் ஜப்பானிய தேசியவாதத்தை முன்னெடுத்துக்கொண்டு 2001ல் பிரதமராக வந்தது முதல் கொய்ஷூமி இதனை தனது பிரதான கொள்கைத்தளமாக கொண்டு செயல்பட்டு வருகிறார்.

பல தலைமுறைகளாக, ஜப்பான் தபால் பிரதான சேமிப்பு வங்கியாகவும், காப்பீட்டுத்தரகராகவும், மில்லியன் கணக்கான ஜப்பானிய மக்களுக்கு பணியாற்றி வருகிறது மற்றும் இந்த தனியார் சேமிப்புக்களை அரசிற்கு கொண்டு சேர்க்கின்ற ஒரு அமைப்பாகவும் செயல்பட்டுவருகிறது. குறைந்த வட்டி விகிதங்களை தந்து வந்தாலும், எல்லா பணவைப்புகளும் முழுமையாக அரசாங்கத்தின் உத்திரவாதங்களை பெற்றவை மற்றும் நாட்டின் எல்லா இடங்களிலும் 24,000 இற்கு மேற்பட்ட கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது.

தற்போது ஜப்பானின் அஞ்சலக சேமிப்பு கணக்குகளில் மட்டுமே 214 டிரில்லியன் யென்களுக்கு மேல் (1.93 திரில்லியன் அமெரிக்க டாலர்கள்) சேர்ந்துள்ளன, அதே நேரத்தில் அதன் காப்பீட்டு வணிக வைப்புக்கள் 100 டிரில்லியன் யென்களுக்கு மேல் சேர்ந்துள்ளது. இதன் விளைவாக, நான்கு மிகப்பெரிய வங்கிகளின் கூட்டுக்கணக்கையும் மிஞ்சுகின்ற அளவிற்கு, நாட்டிலேயே மிகப்பெரிய நிதி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.

இதர நிதி அமைப்புகளைப்போல் ஜப்பான் தபால் முதலீடு செய்வதற்கு தடைவிதிக்கப்பட்டிருக்கிறது மற்றும் அரசாங்க அதிகாரிகள் வெளியிடுகின்ற கடன் பத்திரங்களை மட்டுமே வாங்குவதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. போருக்கு பிந்திய காலகட்டத்தில், நீர் தேக்கம் போல் சேர்ந்திருந்த இந்த சேமிப்புக்கள் அரசு- உதவியளிக்கும் தொழில்துறையையும், ஜப்பானை முன்னணி பொருளாதார வல்லரசாக உயிர்துடிப்போடு விரைவுபடுத்தவும் பயன்படுத்தப்பட்டன.

என்றாலும், கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக, பொருளாதார மந்த நிலை சூழ்நிலைகளை, பெருமளவிலான வரவுசெலவு திட்ட பற்றாக்குறைகளுக்கு நிதியளிக்க அரசாங்கங்கள் தபால் சேமிப்புக்களை பயன்படுத்த முடிந்தது. அவை பெரும்பாலும் சாலைகள் அமைப்பது, பாலங்கள் கட்டுவது போன்ற பொதுப்பணி திட்டங்களுக்காக பயன்படுத்தப்பட்டன. ஜப்பான் ஆண்டிற்கு 5 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி வரை (GDP) பொதுப்பணிகளுக்காக செலவிட்டு வருகிறது---- இது பிற தொழிற்துறை நாடுகள் செலவிடும் ஒரு 3 சதவீத சராசரியோடு ஒப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்தமாக பொருளாதார நெறிமுறைகளை தளர்த்துவதற்கும், பொது செலவினங்களை வரலாறு காணாத அளவிற்கு குறைப்பதற்கு ஒரு பெரிய தடைக்கல்லாக ஜப்பான் அஞ்சலகத்துறையிலிருந்து மலிவான வட்டி விகிதத்தில் அரசாங்கம் கடன் வாங்குகிற வல்லமை அமைந்திருப்பதாக சுதந்திர சந்தை அறிவுவாதிகள் கருதுகின்றனர். வரவுசெலவு திட்ட வெட்டுக்கள் கொய்ஷூமியின் கீழ் கொண்டு வந்த பின்னரும், அரசாங்கத்தின் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.8 சதவீதம் அளவிற்கு நெருங்கி வருகிறது. பொதுக்கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 164 சதவீதம் அல்லது 700 ரில்லியன் யென்கள் (6.3 ரில்லியன் அமெரிக்க டாலர்கள்) என்ற உயர்ந்த மட்டத்திற்கு சென்றுவிட்டது

ஆகஸ்ட் 10ல் ஜப்பான் டைம்ஸ் தபால்துறை தனியார்மயமாக்கலின் முக்கிய அம்சத்தை தெளிவுபடுத்தியுள்ளது. "சேமிப்புக்களிலும் காப்பீட்டு சேவைகளிலும் கிடைக்கின்ற பணத்தை அரசாங்கம் வெளியிடுகின்ற பத்திரங்களை வாங்குவதற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது... இப்படி புரளுகின்ற பணத்தை வெட்டுவது, அரசாங்கம் கடன் வாங்கி சமாளிப்பதை கட்டுப்படுத்தும் ஒரு முக்கியமான நடவடிக்கை என்று கருதப்படுகிறது மற்றும் அரசாங்கத்தின் நிதி செயல்பாடுகளில் சுய கட்டுப்பாட்டை கொண்டுவருவதற்கும், இந்த நடவடிக்கை தேவை" என்று அது விமர்சித்துள்ளது.

தனியார்மயமாக்கல் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர், கொய்ஷூமி மந்திரிசபை பொதுப்பணி செலவினங்களையும் ஓய்வூதியங்கள் மற்றும் சுகாதார சேவைகளுக்கான அரசாங்க நிதியளிப்பை குறைக்கவும் கருதியிருக்கிறது. 2004ல் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட நிகழ்ச்சிபோக்குகள் தங்களது ஓய்வூதிய நிதிகளுக்கும் மருத்துவ செலவினங்களுக்கும் தனி மனிதர்களே பெரும்பங்கு ஏற்க வேண்டும் என்ற நிலையை உருவாக்கிவிட்டது.

நாடாளுமன்றம் புறக்கணிப்பு செய்திருக்கின்ற திட்டத்தின்படி 2007 வாக்கில் ஜப்பான் தபால்துறை நான்கு பெருநிறுவனங்களாக பிரிக்கப்படும், அவற்றை ஒரு பகுதி அரசிற்கு சொந்தமான ஒரு நிறுவனம் நடத்திவரும். தபால் சேவையிலிருந்து தனியாக பிரிக்கப்பட்டு சேமிப்பு மற்றும் காப்பீட்டு அமைப்புக்கள் இயங்கும், அவை 2017 வாக்கில் முழுமையாக தனியார்மயமாக்குதல் நோக்கமாகும். இந்த நிகழ்ச்சிபோக்கின்படி, பத்தாயிரக்கணக்கான வேலைவாய்ப்புக்கள் வெட்டப்படும், தொலைதூர பகுதிகளில் இயங்கி வருகின்ற இலாபம் தராத கிளைகள் மூடப்படும்.

இதனுடைய நீண்ட கால விளைவு என்னவென்றால், அரசிடமிருந்து தனியார் துறை முதலீட்டிற்கு பில்லியன் கணக்கான டாலர்கள் திருப்பி விடப்படும், ஏனென்றால் தனியார்மயமாக்கப்பட்ட அமைப்புக்கள் அரசாங்க பத்திரத்தைவிட அதிக லாபம் தருகின்ற தனியார் முதலீடுகளில் பணத்தை திருப்பிவிடும். இந்த மாற்றங்கள் உலக சந்தையில் ஜப்பானின் செல்வாக்கை தீவிரமாக்க இரண்டு புதிய நிதி பலிகொடுப்பை மேலும் உருவாக்க கூடும்.

செப்டம்பர் 11 தேர்தல் கொய்ஷூமிக்கு ஒரு பெரிய அரசியல் சூதாட்டமாகும். தனியார்மயமாக்கலும் வரவுசெலவு திட்ட வெட்டு செயற்திட்டத்தையும் தொழிலாள வர்க்கம் பரவலாக எதிர்த்து வருகிறது. ஏனென்றால், அதனால் பத்தாயிரக்கணக்கில் வேலை வாய்ப்புகளை இழக்கின்ற நிலை உருவாகும். சமூக ஏற்றத்தாழ்வுகள் வளர்ச்சியால் ஏற்கனவே பதட்டங்கள் உயர்ந்து கொண்டு வருகின்றன. ஜப்பான் மக்களில் மூன்றில் ஒரு பகுதிக்கு மேற்பட்டவர்கள் தற்போது தங்களை, "கீழ்மட்ட வர்க்கம்" அல்லது ஏழைகள் என்று வர்ணித்துக்கொள்கின்றனர். ஈராக்கிற்கு ஜப்பானிய துருப்புக்களை கொய்ஷூமி அனுப்பியதற்கும், வலதுசாரி தேசியவாதத்தை அவர் வளர்த்து வருவதற்கும், கொய்ஷுமிக்கு பரவலான எதிர்ப்பு வளர்ந்து வருகிறது. அது ஏற்கனவே சீனாவுடன் கூர்மையான பதட்டங்களை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்க்கட்சியான ஜப்பான் ஜனநாயகக் கட்சி "இன்னும் அதிகமான பணிகள் உள்ளன" என்ற முழக்கத்துடன் தேர்தலில் போட்டியிட கருதுகிறது. சென்ற முறை நடைபெற்ற தேர்தலின்போது நாடாளுமன்றத்தின் கீழ்சபையிலும், மேல்சபையிலும் ஜப்பான் ஜனநாயகக் கட்சி ஆதரவு கணிசமாக உயர்ந்துள்ளது, அதன் மூலம் 50 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக தாராளவாத ஜனநாயகக் கட்சி தனது ஆட்சி அதிகாரத்தை இழக்கும் என்ற சாத்தியக்கூறு அதிகரித்துள்ளது. "தாராளவாத ஜனநாயகக் கட்சியிடம் இருந்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு இது நமக்கொரு வாய்ப்பாகும். இரண்டாவது உலகப்போர் முடிந்தவுடன் நடைபெறுகின்ற மிக முக்கியமான பொதுத்தேர்தல் இது." என்று ஜப்பான் ஜனநாயகக் கட்சி தலைவர் கட்சுயா ஒகாடா திங்களன்று அறிவித்தார்.

என்றாலும் ஜப்பான் ஜனநாயகக் கட்சியின் வேலைத்திட்டம், தாராளவாத ஜனநாயகக் கட்சியிடமிருந்து வித்தியாசப்படுத்திப்பார்க்க முடியாததாக உள்ளது. அக்கட்சி சரிசமமான வேகத்தோடு பொதுச் செலவினங்களை வெட்டவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது. மற்றும் சற்று தாமதமாக தபால்துறையை தனியார்மயமாக்க வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறது. அரசியல் மாற்றீடு எதுவும் இல்லாதது இந்தவாரம் Asahi Shimbun நடத்திய கருத்துக்கணிப்பில் எதிரொலிக்கிறது. அது 29 சதவீதம் பேர் தாராளவாத ஜனநாயகக் கட்சியை ஆதரிப்பதாகவும், 15 சதவீதம் பேர் ஜப்பான் ஜனநாயகக் கட்சியை ஆதரிப்பதாவும் மற்றும் 38 சதவீதம் பேர் முடிவு எதுவும் எடுக்க முடியாத நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தது.

செல்வாக்கு மிக்க நிதி, பெருநிறுவன மற்றும் ஊடக அமைப்புக்கள் தாராளவாத ஜனநாயகக் கட்சியின் பின் முடிவு செய்யாத நிலையிலுள்ளவர்களின் இந்த வாக்குகளை திருப்பி அணிதிரட்டுவதற்கு அக்கறை கொண்டு வருகின்றன. கொய்ஷூமி மீண்டும் ஒருமுறை ஒரு துணிச்சலான தீவிரவாதி என்றும் சட்டபூர்வமான நலன்களை முன்னெடுத்தும், மாற்றத்தினை முன்னெடுத்து செல்பவர் என்றும் முன்காட்டப்பட்டு வருகிறார். அதே நேரத்தில் ஒரு அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜப்பான் ஜனநாயகக் கட்சிக்கு வல்லமையுண்டா என்ற கேள்வியை ஊடகங்களில் எழுப்பிக்கொண்டிருக்கின்றன. கொய்ஷூமி தாராளவாத ஜனநாயகக் கட்சியிலிருந்து தனது எதிரிகளை களை எடுப்பதிலும், தேர்தலில் வெற்றி பெறுவதிலும் ஆக இரண்டிலும் வெற்றி பெறுவார் என்ற கண்ணோட்டத்தில் இந்த வாரம் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு டோக்கியோவின் நிக்கி பங்குச்சந்தை குறியீட்டு எண் மிகப்பெருமளவிற்கு உயர்ந்து நின்றது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved