World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Germany: why is the "Left Party" winning growing support in the opinion polls?

ஜேர்மனி : கருத்துக்கணிப்புக்களில் "இடது கட்சிக்கு" வெற்றிபெறுகின்ற ஆதரவு வளர்வது ஏன்?

By Ulrich Rippert
15 August 2005

Back to screen version

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஜனநாயக சோசலிச கட்சியின் (PDS) முன்னாள் தலைவர் கிரிகோர் கீசியும் முன்னாள் சமூக ஜனநாயகவாதி ஒஸ்கார் லாபொன்டைனும் பிரதான வேட்பாளர்களாக நிறுத்தப்படவுள்ள, அண்மையில் உருவாக்கப்பட்டுள்ள தேர்தல் மாற்று (WASG) மற்றும் ஜனநாயக சோசலிச கட்சி (PDS) இணைந்த ஒரு தேர்தல் அணியான "இடது கட்சி" க்கு கருத்துக்கணிப்புகளில் மதிப்பீடு பெருகிக் கொண்டு வருகிறது

அண்மையில் Forsa நடத்திய கருத்துக்கணிப்பின்படி, இடது கட்சி வாக்காளர்களில் 12 சதவீதத்தினர் ஆதரவை பெற்றிருக்கிறது. இது சுதந்திர ஜனநாயகக் கட்சி (FDP) மற்றும் பசுமைக்கட்சி ஆகியோர் தலா பெற்றிருந்த 7 சதவீத வாக்குகளையும் மிஞ்சுவதாக அமைந்திருக்கிறது. செப்டம்பரில் நடைபெறவிருக்கின்ற மத்திய நாடாளுமன்ற தேர்தலில் இதே வாக்குப்பதிவு உறுதிப்படுத்தப்படுமானால், ஜேர்மனியின் மூன்றாவது வலுவான கட்சியாக இடது கட்சி வரும்.

முன்னாள் கிழக்கு ஜேர்மனியில் அது மிக வலுவான கட்சியாக ஏற்கனவே கருதப்படுகிறது. கிழக்கில், முன்னாள் ஆளும் ஸ்ராலினிச கட்சியிலிருந்து உருவான ஜனநாயக சோசலிச கட்சி ஏற்கனவே சமூக ஜனநாயகக் கட்சியை விட வலுவாக உள்ளது. என்றாலும், தற்போது 30 சதவீத ஆதரவோடு இடது கட்சி கிறிஸ்தவ ஜனநாயக யூனியனை (CDU) மிஞ்சிவிட்டது, அது முன்னாள் கிழக்கு ஜேர்மனியில் 29 சதவீத ஆதரவைப் பெற்றுள்ளது. மேற்கிலுள்ள சார்லாந்தில், லாபொன்டைன் நீண்ட காலமாக மாநில பிரதமராக பணியாற்றியுள்ளார். இங்கு ஜூலை நடுவில் வெளியிடப்பட்ட ஒரு முன்கூட்டியே கணக்கீட்டில் இடதுசாரிக் கட்சிக்கு 20 சதவீதம் கிடைத்தது. இப்படி மக்கள் கருத்துக்கணிப்புக்களில் உயர்ந்த சதவீதங்கள் மதிப்பீடு செய்யப்பட்டிருப்பது நிச்சயமாக லாபொன்டைனுக்கும் கீசிக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ள எல்லாக் கட்சிகளுமே இந்த வளர்ச்சிக்கு பதட்டமும் அரசியல் அவதூறு கூடிய கலவையுடன் பிரதிபலித்தன. ஆளும் சமூக ஜனநாயகக் கட்சி அரசியல்வாதிகள் லாபொன்டைன் "வெறுப்பை விதைத்து" சமூகத்தில் பொறாமையை ஊக்குவிப்பவர் என்று கூறியுள்ளனர். "ஜேர்மனிக்கு ஒரு இடதுகட்சி தேவையா?" தேவையில்லை மற்றும் மீண்டும் தேவையில்லை" என்ற பதிலையும் தந்திருக்கிறது. அதே பதிப்பில் எழுதியுள்ள Liane von Billerbeck, லாபொன்டைன் இரண்டு முகம் கொண்ட ரோம கடவுளான ''Janus figure" ஆவார். ஒரு முகம் "சார்லாந்திலுள்ள ஒரு சொகுசு மாளிகையில் வாழ்கிறது, Bild செய்தி பத்திரிகையிலிருந்து பணம் பெறுகிறது, மற்றது பின்னால் இங்கே வந்து வாயினால் முழக்கமிடுகிறார்".

லாபொன்டைனுக்கு எதிரான பிரதான விமர்சனம் என்னவென்றால் அவர் மக்களை கவருகின்ற வாய்ச் சொல் வீரர், அவர் பொதுமக்களது கருத்தை வெளியிடுகிறார். லாபொன்டைன் அரசாங்கத்தின் ஹார்ட் IV தொழிலாளர் சீர்திருத்தங்களையும், செயல்திட்டம் 2010இன் நலன்புரி வெட்டுக்களையும் தாக்குகின்ற வகையில் வாய்வீச்சுக்களை வெளியிடுகிறார். சமுதாயத்தின் தலைமையிலுள்ளவர்கள் பணக்காரர்கள் ஆகையில் பொதுமக்களில் பரந்த பிரிவினர்கள் அதிகரித்தளவில் படுமோசமான வாழ்வை நோக்கி வீழ்ந்து கொண்டிருப்பதாக கண்டிக்கிறார். பல அரசியல்வாதிகளும் பத்திரிகையாளர்களும் மக்களை அவர்கள் ''அரசியல் ரீதியாக இறையாண்மை'' கொண்டவர்கள் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ''மக்கள் பிரதிநிதிகள்'' என்றும் கூறுகின்றபோதிலும் இந்தப்போக்கை புனிதமானவற்றை கொள்ளையிடுதல் என்று கருதுகின்றனர்.

என்றாலும், அவர்களது தாக்குதல்கள் அவர்கள் விரும்புகின்ற விளைவுகளை ஏற்படுத்தவில்லை. ஸ்தாபனத்தில் இருப்பவர்கள் எந்த அளவிற்கு லாபொன்டைனையும் கீசியையும் வலுவாக கண்டிக்கிறார்களோ அதைவிட அதிகமாக இடதுகட்சிக்கு பொதுமக்களது ஆதரவு பெருகிக் கொண்டு வருகிறது.

யதார்த்தத்திலேயே, அரசியல்வாதிகள் மற்றும் ஊடகங்கள் நடத்தி வருகின்ற ஆத்திரமூட்டும் தாக்குதல்கள், பல தசாப்தங்களாக அரசியல் கட்டமைப்பினுள் பணியாற்றிய மற்றும் அனைவருக்கும் தெரிந்த தகமைகளை கொண்ட இடதுகட்சியின் முன்னணி அரசியல்வாதிகளுக்கு அப்பால் ஏதோ ஒன்றை குறிவைத்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. லபொன்டைனோ அல்லது கீசியோ தற்போதுள்ள முதலாளித்துவ சமூகக் கட்டுக்கோப்பை எந்தவிதமான நிபந்தனையும் இல்லாமல் ஆதரித்து நிற்பவர்கள் என்ற உண்மையை எப்போதுமே மறைக்கவில்லை. அதைவிட மிகவும் அடிப்படையான ஏதோ ஒன்று ஆளும் செல்வந்தத்தட்டினருக்கு கவலை தருவதாக அமைந்திருக்கிறது. இடது கட்சிக்கு மக்கள் கருத்துக்கணிப்புக்கள் அதிகரித்துக்கொண்டு வருவது ஒரு உண்மையை அம்பலப்படுத்துகிறது. அது சமூக ஏற்றத்தாழ்வுகள் பெருகிவருவதை மக்களின் பரந்த பிரிவுகள் எதிர்த்து வருவதுடன் அவர்கள் அரசியல்ரீதியாக இடது பக்கம் திரும்பிக்கொண்டிருக்கிறார்கள் என்பதே.

அண்மைய கட்டுரையில், வழக்கமான பழைமைவாத Welt am Sonntag இந்த வளர்ச்சியை சுட்டிக்காட்டியுள்ளது. "இடதுசாரி அரசியலில் ஆர்வம்" என்ற தலைப்பில் அந்த பத்திரிகை எழுதியது: "மக்களை கவரும் வாய்வீச்சு மட்டுமே கிரிகோர் கீசியையும் ஒஸ்கர் லாபொன்டைனையும் வெற்றி பெறச் செய்யவில்லை. நாடு மாறிவிட்டது, மற்றும் சமூக ஜனநாயகக் கட்சியிடம் தீர்வு இல்லை".

அப்பத்திரிகை மேலும் "முதலாளித்துவம் செல்வாக்கை இழந்துவிட்டது" என்று அறிவித்திருக்கிறது. ஏறத்தாழ 5 மில்லியன் பேர் வேலையில்லாதிருக்கின்றனர், ஓய்வூதியம் பெறுவோர் உட்பட சமூகபாதுகாப்பு வலைப்பின்னலில் ஆழமான வெட்டுக்கள் கொண்டுவரப்பட்டிருப்பதாலும் உண்மையான வருவாய் வீழ்ச்சியடைந்து, வெளிநாடுகளிலிருந்து ''மலிவான போட்டி'' அச்சத்தினால் ''வெளிப்படையாக இடதுசாரி அரசியலின் அவசியம்'' குறித்து மீண்டும் உயிர்துடிப்பு ஏற்பட்டிருக்கிறது என்று குறிப்பிடுகிறது.

அதற்கு பின்னர் அந்த செய்தி பத்திரிகை பீலபெல்ட் பல்கலைக்கழக ஆய்வு ஒன்றிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளது, அதில் 90 சதவீதத்திற்கு மேற்பட்ட ஜேர்மனியர்கள் ''பணக்காரர்கள் எப்போதுமே பணக்காரர்களாக ஆகிக்கொண்டிருக்கின்றனர், ஏழைகள் பரம ஏழைகளாக ஆகிக்கொண்டிருக்கின்றனர் என்று நம்புவதாக தெரிவித்திருக்கிறது. அந்த ஆய்வு அறிக்கையின்படி ஜேர்மனியின் மேற்குப் பகுதியை சேர்ந்த 25 சதவீத பெரும் பணக்காரர்களின் சொத்துக்களின் மதிப்பு 1993 முதல் 2004 வரை நாட்டில் 27.5 சதவீதம் உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் பரம ஏழைகளாக இருக்கின்ற 25 சதவீத மக்களது சொத்துக்களின் மதிப்பு 50சதவீதம் வீழ்ச்சியடைந்திருக்கிறது. கிழக்கு ஜேர்மனியில், மிகப்பெரும் பணக்காரர்களான 25சதவீதம் பேரின் செல்வம் 86 சதவீதம் உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் பரம ஏழைகளாக உள்ள 25சதவீத மக்களது சொத்து மதிப்பு 21 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்த புள்ளிவிவரங்கள் அண்மை ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட தீவிர நலன்புரி வெட்டுக்களின் பாதிப்புக்களை தெளிவாகக் காட்டுகிறது. பரவலாக பாராட்டப்பட்ட ஜேர்மனி நலன்புரி அரசின் அனைத்து முனைகளிலும் வெட்டுக்கள் விழுந்திருக்கின்றன, சுகாதாரம் மற்றும் முதியோருக்கான சலுகைகள் தீவிரமாக மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன. வேலையில்லாதிருப்போர் மற்றும் குறைந்த வருமானக்காரர்கள் விரிவான கூடுதல் ஊதிய தேவையை செய்யமுடியவில்லை. குறிப்பாக கிழக்கு ஜேர்மனியில், சகித்துக்கொள்ள முடியாத அளவிற்கு நிலவரம் சென்றுகொண்டிருக்கிறது. வேலை செய்யும் வயதில் மக்கள் பலர் தங்களது குடும்பங்களோடு இடம் பெயர்ந்திருக்கின்றனர் அல்லது மேற்கு ஜேர்மனியில் அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தில் பணியாற்றி வருகின்றனர். அப்படியிருந்தும் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ள வேலையில்லாதிருப்போரின் எண்ணிக்கை மேற்கில் உள்ளதைப்போல் கிழக்கிலும் இரண்டு மடங்கு உயர்ந்து 20 சதவீதமாக உள்ளது.

மக்களில் பலர் கசப்புணர்வு கொண்டிருக்கின்றனர் மற்றும் முழுமையாக ஏமாற்றப்பட்டுவிட்ட உணர்வுடன் உள்ளனர். 1990-ல் முன்னாள் அதிபர் ஹெல்முட் கோல் (CDU) "கிழக்கில் செழித்துகுலுங்கும் பூமி" என்று தந்த உறுதிமொழி வெறும் நாடகமாக ஆகிவிட்டது, கிழக்கு ஜேர்மனி மக்களில் பலர் ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் பசுமைக்கட்சியுடன் சமூக ஜனநாயகக் கட்சி தலைமையிலான ஒரு கூட்டணி அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்தனர். மிகப்பெரும்பாலும் கிழக்கு ஜேர்மனி வாக்காளர்களின் உதவியோடு ஹெகார்ட்்்் ஸ்ரோடர் (SPD) 1998 தேர்தலில் வென்றார். ஆனால் பதவியேற்ற அவரது அரசாங்கம் பொருளாதார மற்றும் சமூக வீழ்ச்சியை விரைவுபடுத்தியது.

சென்ற ஆண்டு லைப்சிக், செம்னிட்ஸ், மக்டபேர்க் மற்றும் பல பிற கிழக்கு ஜேர்மன் நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் தெருக்களில் அணிவகுத்து வந்து Hartz-IV தொழிலாளர்கள் சீர்திருத்தங்களுக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்தனர். சமூக வெட்டுக்களுக்கு மாற்றீடு எதுவுமில்லை என்று ஷ்ரோடரும் ஜோஸ்கா பிஷ்ஷரும் (பசுமைக்கட்சி) பதிலளித்தனர். தற்போது, பலவாக்காளர்கள் லாபொன்டைனும் இடது கட்சியும் தங்களது துயர நிலைக்கு ஆறுதலாகவும், தங்களது சமூக துன்பங்களுக்கு எதிரான கண்டனத்திற்கு ஏதோ ஒரு அர்த்தத்தில் தீர்வு வழங்குபவர்களாக நம்புகின்றனர். என்றாலும் பொதுமக்களது பெருகிவரும் எதிர்ப்புணர்வை இடது கட்சியின் அரசியல் குறிக்கோள்களோடு சமன்படுத்திப் பார்ப்பது தவறானது. எதிரும் புதிருமான திசைகளில் நடைபெற்று வருகின்ற இரண்டு வேறுபட்ட வளர்ச்சிகளை அவைகள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

பல வாக்காளர்கள் ஷ்ரோடர்-பிஷ்சர் அரசாங்கத்தின் சமூகவிரோத கொள்கைகளுக்கு எதிராக கண்டனங்களை நடத்துவதற்கு முடிந்த அளவிற்கு சாத்தியக்கூறுகளை பயன்படுத்திக் கொண்டிருந்தாலும் மற்றும் தங்களது அன்றாட வாழ்வில் உண்மையானதொரு மேம்பாட்டை எதிர்பார்த்துக் கொண்டு நின்றாலும் லாபொன்டைன் சிலநேரங்களில் மத்திய அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வருவது தன்னை அந்த கண்டனங்களுக்கு தலைவனாக ஆக்கி அந்தக் கண்டனங்களை கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, தீங்கற்ற ஒரு திசை வழியில் திருப்பி விடுவதை நோக்கமாக கொண்டது.

எனவேதான் தனக்கு கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர் தேர்தல் மாற்றீடும் ஜனநாயக சோசலிச கட்சியும் இணைய வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறார், அவை ஏற்கனவே பலர் "நினைத்துப் பார்த்திட முடியாத அளவிற்கு அதிக சாதனைகளை" செய்திருப்பதாக சென்ற ஞாயிற்றுக்கிழமை அவரை வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா இடது கட்சியின் முன்னணி வேட்பாளராக ஏற்றுக்கொண்ட மாநில மாநாட்டில் ஆற்றிய உரையில் குறிப்பிட்டார்.

சமூக ஜனநாயகக் கட்சியும் பசுமைக் கட்சிக்காரர்களும் தங்களது தேர்தல் வேலைத்திட்டத்தில் "மிகத் தெளிவானதொரு, இடதுசாரி தொனியை" மேற்கொண்டிருப்பதாக லாபொன்டைன் அறிவித்தார் மற்றும், செயல்திட்டம் 2010ல் கண்டுள்ள கடுமையான ஏற்றதாழ்வுகளை எதிர்த்தார். லாபொன்டைன் கருத்துப்படி, அவ்வாறு அவர்கள் குறிப்பட்டிருப்பது ஒரு வெற்றி என்றும், ஒரு வலுவான இடதுசாரி எதிர்க்கட்சி நாடாளுமன்றத்தில் எப்படிப்பட்ட ''அரசியல் சக்தியாக" இருக்கும் என்று காட்டுவதாகவும் குறிப்பிட்டார்.

இந்த இரண்டு அறிக்கைகளுமே தவறானவை. சமூக ஜனநாயகக் கட்சி இடதுசாரி பக்கம் சாயவில்லை, அல்லது நாடாளுமன்றத்தில் லாபொன்டைன் மற்றும் கீசி தலைமையிலான ஒரு எதிர்ப்பு மேலும் சமூக வெட்டுக்கள் ஏற்படாது தடுக்க முடியாது.

அதிபர் ஷ்ரோடரும், சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவர் முன்டபெயரிங்கும் சமூக வெட்டுக் கொள்கையில் உறுதியாக நிற்பதாக தெளிவுபடுத்தியுள்ளனர். இந்தக் காரணத்தினால்தான் நாடாளுமன்ற தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படுகிறது. செயல்திட்டம் 2010 இற்கு எதிர்ப்பு வளர்ந்து கொண்டு வந்தாலும் ஷ்ரோடர் புதியதொரு மக்கள் கட்டளையை நாடினார் அல்லது தேர்தல் நடத்துவதற்கு மாற்றாக அதே நடவடிக்கைகளை இன்னும் தீவிரமாக முன்னெடுத்துச் செல்கின்ற வகையில் அரசாங்கத்தின் பொறுப்பை கிறிஸ்தவ ஜனநாயகவாதிகள் மற்றும் சுதந்திர ஜனநாயகவாதிகள் கையில் ஒப்படைப்பதற்கு தயாராக இருந்தார்.

உண்மையிலேயே, ஒட்டுமொத்த அரசியல் நிர்வாகமும் வலதுசாரி பக்கம் சாய்ந்திருக்கிறது. இந்த இடது கட்சி எதுவிதமான கருத்தும் கூறாத ''பயங்கரவாதத்தின் மீதான போர்'' என்ற பெயரால் அரசாங்கத்திற்கு அதிக அதிகாரங்கள் மிக வேகமாக குவிக்கப்பட்டு வருகின்றன.

சமூக ஜனநாயகக் கட்சி தேர்தல் பிரச்சார நோக்கங்களுக்காக சில மேற்பூச்சு கொள்கை திருத்தங்களை கொண்டு வந்திருப்பது நகைப்பிற்குரியது. கோடீஸ்வரர்களுக்கு வரி விதிப்பு என்று கூறி ஓராண்டிற்கு 5,00,000 யூரோக்களுக்கு மேல் ஊதியம் ஈட்டுவோருக்கு கூடுதலாக மூன்று சதவீத வரி விதிக்க வேண்டுமென்று கோருவது, 1998ல் நிலவிய மிக உயர்ந்த வரிவிகிதத்தை கூட மீண்டும் கொண்டுவருவதாக இல்லை, மற்றும் புதிதாக பதவிக்கு வருகின்ற அரசாங்கம் அத்தகைய உறுதிமொழிகளை நிறைவேற்றவேண்டும் என்ற கடமையில்லை. இதை லாபொன்டைன் மிக நன்றாகவே அறிவார், ஏனென்றால் 1998ல் நாடாளுமன்ற தேர்தல்களில் ஷ்ரோடர் வெற்றி பெறுவதற்கு காரணமாக அமைந்த தேர்தல் திட்டங்களை வகுப்பதற்கு இவரே காரணமாக இருந்தார்.

அத்தகையதொரு மோசடியை "ஒரு இடதுசாரி வளர்ச்சி" என்று லாபொன்டைன் கூறுகின்ற அந்த உண்மை, சமூக ஜனநாயகக் கட்சியை விட அவரை அதிகமாக வெளிச்சம் போட்டு காட்டுகிறது. உயர்ந்த வருமானக்காரர்களுக்கு ஒரு துணை வரிவிதிப்பது, சமூக நீதியையும் சமச்சீர் நிலையையும் நிலைநாட்டுவதாக தோன்றினாலும். அது ஒரு மோசடியாகும்.

இடது கட்சி ஒரு நாடாளுமன்ற எதிர்க்கட்சி அல்லது எதிர்காலத்தில் சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைக் கட்சியுடன் கூட்டணி சேர்கின்ற ஒரு பங்கை வகிக்கும் என்பது பற்றி ஊகிக்க அவசியமில்லை. பேர்லின் மற்றும் மெர்க்லன்பேர்க் பொமரோனியாவை பார்த்தாலே போதுமானது, அங்கு இடதுகட்சி மாகாண சட்டமன்றத்தில் சமூக ஜனநாயகக் கட்சியுடன் ஒரு கூட்டணி ஆட்சியை நடத்துகிறது, அல்லது சாக்சோனி, சாக்சோனி அன்ஹால்ட் மற்றும் பிரான்டன்பேர்க்கில் அது மாநில பாராளுமன்றத்தில் மிகப்பெரிய எதிர்க்கட்சி குழுவாக செயல்படுகிறது.

இந்த மாநிலங்களில் பொதுமக்களது வாழ்க்கை தரம் உயர்ந்திருக்கிறதா? எதுவுமில்லை. சமூக வெட்டுக்கள் ஏதாவது தடுக்கப்பட்டிருக்கின்றதா? ஒன்றுமில்லை. எங்கெல்லாம் தற்போது இடது கட்சி என்று மீண்டும் முத்திரை குத்தப்பட்டுள்ள ஜனநாயக சோசலிச கட்சி (PDS) ஆட்சி அதிகாரத்தை செலுத்துகிறதோ, அதன் மூலம் அரசியல் பொறுப்பை ஏற்றிருக்கிறதோ, அங்கெல்லாம் அது அதே சமூக விரோத கொள்கைகளை மிகக் கொடூரமாக நிறைவேற்றி வருகிறது. இதர கட்சிகளிலிருந்து அது எங்கே வேறுபடுகிறது என்றால், இந்த முன்னாள் கிழக்கு ஜேர்மன் மாநில கட்சியின் பல தலைவர்கள் அகந்தைபோக்கும், தன்னைத் தானே ஏமாற்றிக்கொள்ளும் போக்கும் கொண்டவர்களாக இருப்பதுதான் மற்ற கட்சிகளிலிருந்து இக்கட்சியை வேறுபடுத்திக்காட்டும் உண்மையாகும்.

மத்திய கூட்டாட்சி மட்டத்தில் இடது கட்சி ஒரு பிராந்திய அடிப்படையில் ஜனநாயக சோசலிச கட்சி எந்தளவிற்கு செயல்படுகிறதோ அதே பங்களிப்பை செய்யும் என்பது ஏற்கனவே தெளிவாகியுள்ளது. சர்வதேச அளவில் செயல்பட்டுக்கொண்டுள்ள பெரு நிறுவனங்கள் மற்றும் பூகோள நிதிச் சந்தைகள் ஆகியவை ஒவ்வொரு அரசாங்கத்திற்கும் அந்த அரசாங்கங்களின் செயல்திட்டங்களுக்கு கட்டளைகளை பிறப்பித்துக் கொண்டிருக்கின்ற நேரத்தில் அவர்களது முதலாளித்துவ அடிப்படை வலிமைக்கு எதிராக சவால் விடுகின்ற அளவிற்கு அதற்கு எதிராக பரந்த உழைக்கும் மக்களது இயக்கத்தை அணிதிரட்டாமல் எதிர்க்க இயலாது. மிகுந்த இறுமாப்போடு, வர்த்தக பத்திரிகைகளும் பல்வேறு "பொருளாதார நிபுணர்களும்" அதிக சமூக வெட்டுக்கள் தேவை என்று கேட்டுக்கொள்வது சமூக சமரசங்கள் மற்றும் சலுகைகளுக்கான சகாப்தம் இறுதியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது என்பதையே எதைக் காட்டுகிறது.

ஆனால் இடது கட்சி பொருளாதார மற்றும் அரசியல் அதிகாரத்தை கையில் வைத்திருப்பவர்களுடன் ஒரு பகிரங்க மோதலை தவிர்த்து வருகிறது. ஆறு ஆண்டுகளுக்கு முன்னரே அது தெளிவாகத் தெரிந்தது, அதிபர் ஆதரவோடு முதலாளிகள் சங்கங்கள் கொண்டு வந்த அழுத்தங்களை எதிர்நோக்கிய சமூக ஜனநாயகக் கட்சி தலைவரும் நிதியமைச்சருமான லாபொன்டைன் தனது பதவிகளை இராஜினாமா செய்தார். அவர்களை எதிர்த்து நிற்க அவர் தயாராக இல்லை. மற்றும் எந்தவிதமான காரணமும் கூறாமல் இராஜினாமா செய்தார்.

அந்த நேரத்தில், அவர் ஒரு பகிரங்க போராட்டத்தில் இறங்கியிருப்பாரானால் சமூகத்தின் விரிவான தட்டுக்களை அவர் திரட்டியிருக்க முடியும். ஆனால் அப்படி செய்வதை லாபொன்டைன் விரும்பவில்லை, அவர் அப்போது ஜேர்மனியின் மிகப்பெரிய மிக மூத்த சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவர் மற்றும் ஷ்ரோடர் அரசாங்கத்தில் அதிக செல்வாக்கோடு இருந்த அமைச்சர். இன்றைய தினம் அவர் கோருகின்ற அனைத்தையும் அந்த நேரத்தில் அவரே செய்திருக்க முடியும். அதற்கு மாறாக அவர் தனது துண்டை தெருவில் உதறி எறிந்துவிட்டார்.

அதே போன்று மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், கீசி பேர்லின் மாகாண சட்ட மன்றத்திலிருந்து இராஜினாமா செய்தார். மிக இற்றுப்போன விளக்கம் என்று சொல்லத்தக்க ஒரே காரணத்தையும் குறிப்பிட்டார். கிறிஸ்தவ ஜனநாயக யூனியனும் சமூக ஜனநாயகக் கட்சியும் ஒரு வங்கி மோசடியில் வலுவாக சிக்கிக் கொண்டிருந்த நேரத்தில் அவர் மாநிலத் தேர்தல்களில் முன்னணி வேட்பாளராக இருந்தார். தேர்தல் முடிந்த பின்னர், சமூக ஜனநாயகக் கட்சியுடன் ஜனநாயக சோசலிச கட்சி ஒரு கூட்டணி அரசாங்கத்தில் சேர்ந்தது. சமூக ஜனநாயகக் கட்சி பேர்லினிலுள்ள அந்த வங்கியை காப்பாற்றுவதற்காக பில்லியன் கணக்கில் பணத்தை வாரி இறைத்தது. அதே நேரத்தில் சமூக செலவினங்களையும் பொது சேவைகளையும் வெட்டிய பாரியளவு வேலைதிட்டத்தை அமுல்படுத்தியது.

இப்படிப்பட்ட பேர்லின் மாநில சட்டமன்றத்தின் கொள்கைகளோடு தான் மிகவும் நெருக்கமாக இருந்தால் தான் பெரிதும் இழிவுபடுத்தப்பட்டு தேசிய அரசியலில் தனது எதிர்கால பங்களிப்பு பாதிக்கப்படும் என்று கருதி தெளிவாக பீதி கொண்டு தேர்தல் முடிந்து ஒரு சில மாதங்களில் கீசி இராஜினாமா செய்தார்.

இலாப நோக்கு முறைக்கு எதிராக உலகம் தழுவிய உழைக்கும் மக்களை ஐக்கியப்படுத்துகின்ற ஒரு சோசலிச முன்னோக்குதான் இப்போது தேவைப்படுகிறது. அத்தகையதொரு முன்னோக்கை லாபொன்டைன் கீசி மற்றும் இடது கட்சி தீவிரமாக புறக்கணிக்கின்றனர். அவர்கள் திட்டவட்டமாக அறிவிப்பது என்னவென்றால் முதலாளித்துவம் தொடர்ந்து நீடிப்பதை அவர்கள் ஆட்சேபிக்கவில்லை, ஆனால் 1970களில் நடந்ததைப்போல் தேசிய கட்டுக்கோப்பிற்குள் சமூக சமரச இணக்க கொள்கைக்கு திரும்ப வேண்டும் என்று கோருகின்றனர்.

என்றாலும், பூகோளமயமாக்க காலத்தில் அது சாத்தியமற்றதாகும். ஒரு தேசிய எல்லை கட்டுக்கோப்பிற்குள் வேலை வாய்ப்பு ஊதியங்கள் மற்றும் சமூக சலுகைகளை தற்காத்து நிற்பது மாயை மட்டுமல்லாமல், அது ஒரு முற்றிலும் பிற்போக்கு திசையில் இட்டு சென்றுவிடும். இதை லாபொன்டைன் விடுத்திருக்கும் அழைப்பிலிருந்து தெளிவாக பார்க்க முடியும், அவர் கூறுவது என்னவென்றால், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது வேலைகளுக்கு குறைந்த ஊதியங்களை பெற்று செயல்பட்டு வருவதால், "தந்தைகளும் பெண்களும் வேலையில்லாத நிலைக்கு தள்ளப்படுவதை" தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லாபொன்டைன் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இந்த தேசியவாதம்தான் அவரை கீசியோடும் ஜனநாயக சோசலிச கட்சியோடும் இணைத்திருக்கிறது என்பதுதான் வலியுறுத்தி கூறுவதுதான் எஞ்சியிருக்கிறது. 1946ல் கிழக்கு பேர்லினில் ஜனநாயக சோசலிச கட்சியின் முன்னோடியான சோசலிஸ்ட் ஐக்கிய கட்சி நிறுவப்பட்டு 15 ஆண்டுகளுக்கு பின்னர் பேர்லின் சுவர் எழுப்பப்பட்டது வரை இந்தக் கட்சி அப்போதைக்கப்போது தனது பெயரை மாற்றிக்கொண்டு வந்திருக்கிறது. இன்றைய தினமும் அது ஸ்ராலினிச தேசியவாதத்தின் குறும்பார்வைமிக்க வடிவங்களை தனக்குள் அடக்கிக்கொண்டிருக்கிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved