World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்

Huygens probe lands on Titan: a scientific leap for mankind

டைடானில் ஹைஜென்ஸ் ஆராய்ச்சிக் கருவி இறங்குகிறது: மனித குலத்திற்கு ஒரு அறிவியல் முன்னேற்றம்

By Robert Stevens
14 February 2005

Back to screen version

"நான் இன்னும் கூடுதலாகப் பார்த்துள்ளேன் என்றால், அது பேராற்றல் வாய்ந்தவர்களின் தோள்கள்மீது ஏறி நின்று பார்த்ததால்தான்." -- சேர் ஐசாக் நியூட்டன்

NASA, ESA (ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்), இத்தாலிய விண்வெளி நிறுவனம் மூன்றும் இணைந்து இயக்கிய ஹைஜென்ஸ் ஆய்வுக்கலம் சனிக்கிரகத்தின் மிகப் பெரிய சந்திரனாகிய டைடானின் பரப்பில் இறங்கியது. தாய் சுற்றுக் கலமான காசினியில் இருந்து டிசம்பர் 25, 2004 அன்று ஹைஜென்ஸ் பிரிந்து "கடலோரப் பிரிவு" என்பதை ஒத்துள்ள டைடானில் ஒரு பகுதியான- க்சாநாடு (Xanadu) என்ற இடத்தில் வெற்றிகரமாக இறங்கியது; (நீருக்குப் பதிலாக மீத்தேன் இருந்தபோதிலும்) இப்பகுதி கிட்டத்தட்ட பூமியை ஒத்திருந்தது. ஒருகாலத்தில் வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட மாறுதலில் "Creme Brulee" போன்றிருந்த பகுதியில் இது இறங்கியுள்ளதாக ஒரு விஞ்ஞானி கூறியுள்ளார்.

காசினி-ஹைஜென்ஸ் முதலில் 1997, அக்டோபர் 15ம் தேதி அமெரிக்காவில் உள்ள கானவெரல் முனையில் இருந்து செலுத்தப்பட்டது. 17ம் நூற்றாண்டு ஐரோப்பிய வானியல் ஆராய்ச்சியாளர்களின் பெயர்கள் இதற்குக் கொடுக்கப்பட்டது. இத்தாலியில் பிறந்து, தன் வாழ்வின் பெரும்பகுதியை பிரான்சில் கழித்திருந்த, ஜீன் டாமினிக் காசினி (1625-1712), சனிக்கிரகத்தின் வளையங்களைப் பற்றி ஆராய்ந்து, அவற்றிற்கிடையே இருக்கும் இடைவெளியைக் கண்டறிந்து முதன்முதலாக இந்த வளையங்கள் மிகச்சிறிய துகள்களால் ஆனது என்ற கருத்தை முன்வைத்தார். ஹாலந்து நாட்டின் (டச்) இயற்பியல் (Physicist) வல்லுனரான கிறிஸ்டியன் ஹைஜென்ஸ் (1629-1695), டைடானைக் கண்டுபிடித்திருந்ததோடு, காசினியுடன் பல வானியல் ஆய்வுத் திட்டங்களை மேற்கொண்டிருந்தார்.

22 ஆண்டுகளுக்கும் மேலான தயாரிப்பைக் கொண்டிருந்த இப்பணி, சனிக் கோளின் அமைப்பு பற்றிய ஆய்வு, அதன் தனிச்சிறப்பு வாய்ந்த வளையங்கள், டஜன் கணக்கில் இருக்கும் அதன் சந்திரன்கள் பற்றிய உண்மைகளை அறிதல் போன்ற பல அறிவியல் இலக்குகளை மையமாகக் கொண்டுள்ளது. டைடானை அங்கு இறக்குவது என்பது அத்திட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். அந்தச் சந்திரனின் பரப்பில் இப்பொழுதுதான் முதல் தடவையாக மனிதன் தயாரித்த ஒரு பொருள் இறங்குகிறது; இதுகாறும் இத்தனை தொலைவில் இருந்து கட்டுப்பாட்டிற்குள் இறக்கப்பட்ட பணி ஏதும் நடந்ததில்லை.

ஜனவரி 21ம் தேதி, ஹைஜென் முதலில் அனுப்பிய விவரங்கள், அவற்றில் இருந்து பெறப்படும் தகவல்கள் ஆகியவை பாரிசில் உள்ள ESA வின் தலைமை அலுவலகத்தில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கோடிட்டுக்காட்டப்பட்டன. இந்த இறக்கத்தின் மகத்துவத்தை நன்கு அறிந்திருந்த ESA உடைய அறிவியல் இயக்குனரான பேராசிரியர் டேவிட் செளட்வுட், ஜோன் கீட்ஸ் எழுதிய ("On First Looking into Chapman's Homer") "முதன் முதலில் சாப்மனுடைய ஹோமரைக் கண்ணுற்றபோது" என்ற பாடலில் இருந்து, ஒரு புதிய உலகத்தைக் கண்டுபிடித்த பெரும் களிப்பைச் சுருக்கமாக எடுத்துரைத்தார்.

விண்வெளி ஆய்வில் சர்வதேச ஒத்துழைப்பின் விளைவுதான் காசினி-ஹைஜென்ஸ் ஆகும்; மற்ற துறைகளில் சர்வதேச உறவுகளில் பெருகிவரும் அழுத்தங்கள், நெருக்கடிகள் இவற்றிற்கு முற்றிலும் எதிரான வகையில் ஒன்றுபட்டு இயங்கும் முயற்சியாகும் இது. ESA, ஜெர்மனியின் Darmstadt என்ற இடத்தில் இருக்கும் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து, ஹைஜென் ஆய்விற்குப் பொறுப்பைக் கொண்டுள்ளது; NASA உடைய கலிபோர்னியாவின் பசடேனாவில் இருக்கும் Jet Propulsion Laboratory காசினி விண்கலத்தை வடிவமைத்து, பாகங்களை ஒன்று சேர்த்து, உருவாக்கியது. ஜெட் உந்துதல் ஆய்வகத்தின் கீழ் இயங்கும் Deep Space Network ஆழ் விண்வெளி இணையம், காசினி சுற்றுக் கலம் மூலம் தொடர்பு முறைகளுக்குப் பொறுப்புக் கொண்டு, பின்னர் அந்தத் தகவல்களை ESA உடைய கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பிவைக்கிறது. காசினி சுற்றுக் கலத்தில் உள்ள மிகச் சிறந்த ஆன்டெனாவும், காசினிக் கலத்தில் உள்ள சில முக்கியமான கருவிகளும், இத்தாலிய விண்வெளி நிறுவனத்தால் அமைக்கப்பட்டவை ஆகும். ஹைஜென்ஸை அனுப்பிவைப்பது என்பதே பல நிறுவனங்களில் இருந்து ஐரோப்பிய விஞ்ஞானிகள் அடங்கிய குழு மற்றும், NASA உடைய கூட்டுச் செயல்பாடு ஆகும்.

காசினி-ஹைஜென்சின் வெற்றி டைடானிலேயே மிகச் சரியாக கலத்தை இறக்கிய சிறந்த செயற்பாட்டினால் மட்டும் இன்றி, கிட்டத்தட்ட கலத்தில் உள்ள எல்லா அறிவியல் கருவிகளும் மிகச் சரியான முறையில் இயங்குவதிலும், தகவல்கள் பூமிக்கு அனுப்பப்படுவதில் இருந்தும் நன்கு அறியப்படலாம்.

டைடானில் கலம் இறங்கியது மக்களுடைய பெரும் ஆர்வத்தை ஈர்த்துள்ளது. ஹைஜென்ஸ் ஆய்வின் போக்கு பற்றிய செய்திக்காக, மில்லியன் கணக்கில் உலகெங்கிலும் மக்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். ஜனவரி 15ம் தேதி மட்டும் ESA உடைய வலைத்தளத்திற்கு 919,000 வெளிப்பார்வையாளர்கள் வந்திருந்து 6.8 மில்லியன் பக்கங்கள் பார்வைக்கு உட்பட்டன. ஜனவரி 14ல் இருந்து ஜனவரி 21க்குள் வலைத்தளத்திற்கு வந்திருந்தவர்கள் 6 டெராபைட்டுக்கள் தகவலைத் தங்கள் கணினிக்கு எடுத்துக் கொண்டனர். உச்சக்கட்டத்தில், தளத்திற்கு வினாடிக்கு 3,000 பேர் வருகை என்று இருந்தது. காசினி-ஹைஜென்ஸ் திட்டத்தைத் துவக்கித் தக்கவைக்கும் சர்வதேச ஒத்துழைப்பு உணர்வின் பிரதிபலிப்பாக ESA பொதுமக்கள் அனுப்பிவைக்கும் பல மின்னஞ்சல் செய்திகளையும் வரவேற்கிறது.

சனிக்கோளை அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு காசினி விண்கலம் சுற்றிவந்து பெரும் மதிப்பு நிறைந்த சனிக் கோள் அமைப்பு பற்றி பூமிக்கு அவ்வப்பொழுது தொடர்ந்து தகவல்களை அளித்துவரும்.

ஜூலை 22, 2004 அன்று நாசா, காசினியால் எடுக்கப்பட்ட சனிக்கோளின் வளைவுகளைப் பற்றிய முதல் வியத்தகு படங்களை வெளியிட்டது. "கண்ணைப் பறிக்கும்" கடைசி ஒற்றை சனி மற்றும் அதன் வளையங்களின் தோற்றம் மிகக் குறுகிய தொலைவில் இருந்து காசினி இந்த வளைவுகளை நோக்கிச் சென்ற போது எடுக்கப்பட்ட படங்களை, http://en.wikipedia.org/wiki/Image:Saturn-cassini-March-27-2004.jpg. என்ற தளத்தில் காணலாம்.

இன்னும் கூடுதலான படங்களை http://saturn.jpl.nasa.gov/multimedia/images/index.cfm. என்ற தளத்தில்காணலாம்.

சனிக்கோளிற்குச் செல்லும் வகையில் காசினி-ஹைஜென்ஸ், சூரிய மண்டலத்திலேயே பெரிய கோளான வியாழனைக் கடந்து சென்றது; அதில் இருந்தும் புதிய அறிவியல் தகவல்களை ஏராளமாகத் திரட்டியதுடன் மிகச் சிறப்பான, இதுகாறும் இல்லாத வகையில், ஏராளமான விவரங்கள் அடங்கிய வியாழன் கோளின் வண்ணப் புகைப்படங்களையும் எடுத்தது. (பார்க்க: http://en.wikipedia.org/wiki/Image:PIA04866_modest.jpg)

இந்த ஹைஜென்ஸ் ஆய்வுப் பணி சிறப்புத் தன்மை வாய்ந்தது ஆகும். ஆறு பன்முக அறிவியல் கருவிகளைக் கொண்டுள்ள இது டைடானின் மேற்பரப்பில் இறங்குவதற்கும், சேகரித்த தகவல்களை மீண்டும் பூமிக்கு அனுப்பவுதற்கும் தேவையான வடிவமைப்பைக் கொண்டுள்ளது ஆகும். குறைந்த மின்சக்தி ஆயுளைத்தான் இது கொண்டிருப்பதால், விஞ்ஞானிகள் 90 நிமிஷங்கள்தான் அதிகபட்சமாக, இக்கருவி டைட்டானில் இருந்தாலும் கூட, செயல்படும் என்று எதிர்பார்த்திருந்தனர். ஆனால், ஆய்வோ சிறிதும் தடையின்றிச் செயல்பட்டு அதன் கடைசி 700 மைல் சுற்றுச் சூழல் வழியே 2 மணி நேரம் ஆன கடக்கும் நேரம், மற்றும் மேற்பகுதியில் இறங்கிய பின்னர், 60 நிமிஷங்களுக்குமாகக் காசினிக்குத் தகவலை அனுப்பிவைத்தது.

மற்ற சனிக்கோளின் 30 சந்திரன்களையும் விட டைடான் இந்த இறக்கத்திற்காகத் தேர்த்தெடுக்கப்பட்ட காரணம், இது ஒன்றுதான் சூரிய மண்டலத்திலேயே தன்னுடைய சிறப்பான சூழ்நிலையைக் கொண்டுள்ளது. டைடானுடைய சுற்றுச் சூழல் 94 சதவிகிதம் நைட்ரஜனைக் கொண்டு, பூமியைத் தவிர சூரிய மண்டலத்தில் நைட்ரஜன் அடர்த்தியைக் கொண்டுள்ள பகுதியாகவும் உள்ளது. எஞ்சியிருக்கும் சுற்றுச் சூழலில் மீதேன், ஈதேன், டயாசிடிலின், மெதிலாசிடைலின், சயனோஅசிடிலின், அசிடிலின், ப்ரோபேன், கார்பன் டையாக்சைட், கார்பன் மோனாக்சைட், சையனோஜென், ஹைட்ரோஜென் சயனைட் மற்றும் ஹீலியம் இவற்றின் கலவைகளில் ஒரு ஹைட்ரோ கார்பன்களின் தொகுப்பு உள்ளது.

முன்பு டைடானில் கண்டுபிடிக்கப்பட்டிருந்த இரசாயனக் கலவைகள் நம்முடைய பூமியில் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் அதன் துவக்க காலத்தில் இருந்திருந்த கலவைகளை ஒத்துள்ளது. ஒரு சில தன்மைகளில் இது ஆழ்ந்த உறைநிலையில் பூமி ஏற்படும்போது இருந்த நிலையைக் கொண்டுள்ளது. பணியின் துவக்க ஆய்வுகளும் இப்பொழுது நடைபெற்று வரும் பகுப்பாய்வும், பின்னர் விஞ்ஞானிகளுக்கு எவ்வாறு விண்மீன்கள் அமைகின்றன, எவ்விதமான இராசயன, நுண்ணுயிர் கலவைகள் உயிர் என்பதற்கு அடிப்படைப் பொருட்களைக் கொடுக்கின்றன, எவ்வாறு உயிர் சூரியமண்டலத்தின் மற்ற பகுதிகளில் வளர்ச்சியடையக்கூடும் என்பது பற்றித் தெரிந்து கொள்ளுவதற்குப் பெரிதும் உதவும்.

வானியல் ஆராய்ச்சியாளர்களை அது கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் இருந்தே டைடான் பெரிதும் ஈர்த்துள்ளது. தன்னுடைய முன்னோடிப் பணியில், காஸ்மாஸ் (Cosmos) என்ற நூலில் அமெரிக்க விண்வெளிவீரர் கார்ல் சாகன், இருபது ஆண்டுகளுக்கு முன்பே எழுதினார்: "ஏராளமான உயிர் மூலக்கூறுகளைத் தன் பரப்பிலும், சுற்றுச் சூழலிலும் கொண்டிருக்கும் டைடான், சூரிய மண்டலத்திலேயே குறிப்பிடத்தகுந்த, தனிச் சிறப்பு உடைய சந்திரனாகும்." அவர் மேலும் குறிப்பிட்டார்: "டைடானில் உயிர் உள்ளது அல்லது இல்லை என்பதற்கான வலுவான ஆதாரம் ஏதும் இல்லை. ஒருகால் இருக்கக் கூடும். இந்தக் கேள்விக்கு, டைடானியப் பரப்பில் இறங்கும் கலங்கள் தக்க ஆய்வுக் கருவிகளுடன் ஆய்வு நடத்தும் வரையில், நாம் விடை காண்பதற்கில்லை." (Cosmos, Book Club Associates, 1981, p.162).

இந்தப் பணியில் கண்டுபிடிக்கப்பட்டவை

இந்த ஆய்வில் சேகரிக்கப்பட்டுள்ள பெரும்பாலான தகவல்கள் விஞ்ஞானிகளால் அடுத்த வாரங்கள், மாதங்கள், ஆண்டுகள் எனக்கூட நன்கு பரிசீலிக்கப்படும்; ஆனால் கலத்தின் நிழற்படக் கருவியின் மூலம் எடுக்கப்பட்டு வந்துள்ள நிழற்படங்கள் வடிவமைப்பாளர்கள் நினைத்ததைவிட சிறந்த தரத்தை உடையனவாக இருக்கின்றன. டைடானின் நிலப்பரப்பின் தன்மை, அதன் புவியியலின் தன்மை ஆகியவை 2.2 பில்லியன் மைல்கள் தொலைவில் உள்ள இவ்வுலகைப் பற்றி அறியப் பெரிதும் உதவும்.

Descent Imager-Spectral Radiometer (DISR), இறங்கு நிலைச் சிறப்பு ஒளிவகைத் தோற்றப்பதிவு முறை என்னும் கலத்தில் உள்ள முறை, மேற்பரப்பில் இருக்கும் நிலை பற்றி 350 உயர் தெளிவு களொண்ட நிழற்படங்களைக் கொடுத்துள்ளது; இவை பூமியின் வானிலை மற்றும் புவியியல் தன்மைக்கு மிகப் புதிரான வகையில் ஒத்துள்ளன.

பொதுமக்களுக்குக் கிடைத்துள்ள முதல் தோற்றப்படங்கள், கூடுதலான வண்ணம் உடைய உயர்ந்த இடங்களுக்கும், சற்றே குறைவான வண்ணம் உடைய "தாழ்வுப் பகுதிகளுக்கும்" இடையே இருக்கும் நன்கு பிணைக்கப்பட்ட குறுகிய கழிவுப் பகுதியைப் புலப்படுத்தியுள்ளன. இவை, ஏரிப்பரப்பு போன்ற பகுதிகளில் பாய்ந்து நிற்பதற்கு முன்பு, "ஆறு" போன்ற அமைப்புக்களில் இணைகின்றன என்ற தோற்றத்தைக் காட்டுகின்றன. இவற்றிற்குள் கரையை ஒட்டிய "தீவுகள்", "திட்டுக்கள்" என்று கூறக்கூடிய வகையில் பகுதிகள் இருக்கின்றன. இந்தப்பகுதிகள் வறண்டதாகத் தோன்றினாலும் வாயுநிலை அறியும் கருவி, மற்றும் அடர்த்தி ஸ்பெக்ட்ரோமீட்டர், (Gas Chromatograph and Mass Spectrometer CGMS, Surface Science Package SSP), நிலப்பரப்பு அறிவியல் தொகுப்புக் கருவிகள் போன்றவற்றில் இருந்து கிடைக்கும் தகவல்கள், மீத்தேன் திரவம் டைடானின் -170 C என்ற நிலப்பரப்பு குளிர்தன்மையில் ஓடக்கூடும் எனப் புலப்படுத்துகின்றன. SSP தகவல் மூலம் நிலப்பரப்பின் அடர்த்திக்குக் கீழே "அடிமண்" சிதறலாக இருக்கும் மண்போன்ற தன்மையைக் கொண்டிருப்பதுபோல் தோன்றுகிறது. அவ்வாறு இருந்தால் மீத்தேன் திரவம் நிலப்பரப்பில் சொல்லமுடியாத பழைமைக் காலம் தொட்டு கீழே விழுந்து கொண்டு வருகிறது என்ற கருத்தை ஆதரிப்பதாகத்தான் அமையும்.

DISR என்ற டைடானின் மேற்பரப்பில் காணப்படும் கறுப்பான பொருள் துவக்கத்தில் அதிக தட்டுக்கள் நிறைந்திருந்த சுற்றுச் சூழலில் இருந்து முதலில் வந்திருக்கக்கூடும். ஹைஜென்ஸ் நிழற்படங்களில் இருந்து வெளிவந்துள்ள ஒரு கோட்பாட்டின்படி, கறுத்த பொருள் பின்னர் மீத்தேன் மழையினால் உயரிடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் வடிகால் ஓடைகளிலும், ஆற்றுப்படுகைகளிலும் துகள்களின் அடர்த்தியாக இறங்கி, நிழற்படங்களில் காணப்படும் இருண்ட பகுதியின் தோற்றத்திற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.

DISR உடைய தலைமை ஆராய்ச்சியாளரான டாக்டர் மார்டின் டோமஸ்கோ, இந்தப் நிழற்படங்களைப் பற்றிக் கூறியுள்ளதாவது: "டைடானுடைய நிலப்பரப்பு எவ்வாறு உருவாக்கப்பட்டிருக்கலாம் என்பதற்கு நம்மிடம் இப்பொழுது ஒரு திறவுகோல் உள்ளது. மழைபொழிவு, அரிப்பு, இயல்பான முறையில் மேடுபள்ளங்கள் மற்றும் குழம்புகளின் செயற்பாடுகள் இவற்றைக் காணும்போது வடிவமைப்பு எவ்வாறு பூமியில் இருந்ததோ அதேபோல் டைடானில் தோன்றியதாகக் கூறமுடியும். என்னுடைய பூர்வீக இடத்தில் காணப்படும் வறண்ட ஆற்றுப் படுகைகள் போலவே, இந்த வடிகால் ஓடைகளும் மீண்டும் மீண்டும் சுற்றுச் சூழலில் இருந்து மீத்தேன் பொழியும்போது நிரம்பி கடற்கரையின் கடலோரப்பகுதிகளை நிரப்பியிருக்கக்கூடும்."

டைடானுடைய அடர்த்தியான வளிமண்டலம், சூரியனுடைய புறஊதா ஒளியினால் டைடானில் மேற்புறச் சூழலில் மீத்தேன் சிதைந்ததின் விளைவாகத் தோன்றிய ஹைட்ரோகார்பன்களின் இயல்பினால் ஏற்பட்டிருக்கக் கூடும். இந்த அடர்த்தியான வளிமண்டலம் கிட்டத்தட்ட டைடானின் பரப்பில் சூரிய ஒளி ஊடுருவுதலையே கிட்டத்தட்ட தடை செய்துவிட்டது; ஹைஜென்ஸ் ஆய்வும், இந்தச் சந்திரனின் பரப்பை அடையும்போது, சூரியனின் திசையைக் கண்டுபிடிக்க முடியாமல் போயிற்று. இதன் பிம்பங்கள் மூன்று ராடர் மற்றும் அகச் சிகப்பு காமெரா லென்சுகள் பல கோணங்களில் இருந்து எடுத்துப் பின்னர் சுழல் ஏணிப்படி வகையிலான அமைப்பு கொண்ட நிழற்படத்தைக் கொடுத்துள்ளன.

மீத்தேன் சிரவம் மற்றும் அங்க்கக் கூட்டுப்பொருள் இதன் பரப்பில் அவ்வப்பொழுது மழைபோல் பொழிகின்றன என்பதையும் ஹைஜென்ஸ் எடுத்துக் கொடுத்துள்ள தகவல்களும், நிழற்படங்களும் தெரிவிக்கின்றன. டைடானின் பரப்பில் சில பகுதிகள் ஒருகால் தோலின் என்று அழைக்கப்படும் நுண்ணுயிர்த்திரட்டின் மென்களி அடுக்கினால் மூடப்பட்டிருக்கக் கூடும் என்று விஞ்ஞானிகள் ஊகிக்கின்றனர். மேலும் வளிமண்டலத்தில் அர்கன் 40 என்ற பொருளும் இருப்பதை ஹைஜென்ஸ் கண்டுபிடித்துள்ளது. நீர், பனிக்கட்டி, அம்மோனியா இவற்றின் கலவையைத் தோற்றுவிக்கும் எரிமலைச் செயல்பாடான (cryovolcanism) பனிமலைவெடிப்பு போன்ற செயற்பாட்டிற்கு இது ஒரு சான்றாக இருக்கக் கூடும்; இது பூமியில் கொதிக்கும் எரிகுழம்பு வெளிவருவதற்கு முற்றிலும் எதிரான முறையாகும். நெப்டியூனின் மிகப் பெரிய சந்திரனான டிரைடானும், இதேபோல் எரிமலைச் செயல்பாடு முறைப் பொருட்களைக் கொண்டுள்ள துணைக்கோள் ஆகும்.

NASA உடைய ஜெட் உந்துதல் ஆய்வகத்தின் டொரென்ஸ் ஜோன்சன் இவை பற்றிக் கூறுகையில், "இப்பொழுது அங்கு ஓர் ஆய்வுக்கூடத்தைக் கொண்டுள்ளோம்; இயற்கை அங்கு ஓர் உலகத்தை ஏற்படுத்தியுள்ளது; அங்கு மலைகள் இல்லை; ஆனால் பனிக்கட்டி உள்ளது ... நீர் இல்லை, ஆனால் மீத்தேன் திரவம் இருக்கிறது. இது மோஜாவ் பாலைவனம்(Mojave Desert ) போல் காட்சியளிக்கிறது" என்றார்.

மற்ற கருவிகள் காற்றின் வேகத்தை மணிக்கு 150 மைல் வரை கண்டறிந்துள்ளன; ஒலிப்பதிவுக் கருவிகள் புயல்களின் எழுச்சி, சீற்றம் போன்ற ஒலிகளைப் பதிவு செய்துள்ளன. பெப்ருவரி 10ம் தேதி வெளிவந்துள்ள தகவல்களின்படி, காற்றின் மிக அதிக வேகம் சுமார் 120 மைல் ஒரு வினாடிக்கு (430 கி.மீ மணிக்கு) என்று 120 மீட்டர். உயரத்தில் இருந்ததாகத் தெரிகிறது. இந்தக் காற்றின் வேகம் நிலப்பரப்பை அடையும்போது, வலுவிழந்து, 60 கி.மீ. உயரத்தில் மெதுவாக வேகத்தை அடைகின்றது..

காசினி-ஹைஜென்ஸில் ஆய்வுப் பணியில் இருந்து கிடைக்கும் தோற்றங்களை ESA web site. ல் காண முடியும்.

நீர் இல்லாமல் உயிரா?

டைடான், மற்றும் சூரிய மண்டலத்தில் உள்ள மற்ற கோள்களைப் பற்றிய பெரும் சிக்கல் வாய்ந்த கோட்பாடுகளில் இந்த வினா எழுகிறது: உயிர் வாழ்வதற்கு தண்ணீர் திரவ வடிவில் இருக்க வேண்டியது இன்றியமையாத தன்மையா? இதற்குப் பல விஞ்ஞான வகைக் கருத்துக்களும், கருதுகோள்களும் விடையாகக் கூறப்படுகின்றன. ஹைஜென்ஸ் ஆய்வுப்பணியிலிருக்கும் விஞ்ஞானிகளில் ஒருவரான பிரான்சுவா ரெளலின் என்பவர் கூறுவதாவது: "உயிர் முற்றிலும் இருக்கவே முடியாது என்று கூறுவதற்கு இல்லை. ஆனால் மேற்பரப்பில் உயிர் இருப்பதற்கான வாய்ப்புக்கள் இலை; ஏனெனில் இது மிகவும் குளிர்ந்த தன்மையைக் கொண்டுள்ளது; மேலும் திரவ வடிவில் நீரும் இல்லை."

ஆனால், டைடானுடைய உட்புற மாதிரிகள் மேற்பகுதிக்கு 300 கி.மீ.க்கு கீழே 100 கி.மீ. ஆழத்தில் ஒரு கடல் இருப்பதாகக் காட்டுகிறது. திரவ வடிவு நீர் உள்ளது; உயிரணுக்கள் அதிக தொலைவில் இல்லாமற் போகலாம் எனக் கூறுவதற்கு இல்லை; டைடானில் உயிர் தோன்றுவதற்குத் தேவையான அனைத்தும் உள்ளன."

இயற்கை- ஜனவரி 31ம் தேதி இதழில் வந்துள்ள கட்டுரை ஒன்றில் எழுத்தாளர் பிலிப் பால் இத்தகைய முன்கருத்து தெளிவானது எனக் கூறுவதற்கில்லை என்று வாதிட்டுள்ளார். "பூமியில்கூட நீர் இல்லாமல் உயிர் தொடர்புடைய பல இரசாயனக் கிரியைகள் நடந்துவருகின்றன; இவற்றை ஊக்குவிக்கும் முறையில் என்சைம்கள் உள்ளன; அவை நீர்-எதிர்ப்புப் பகுதிகளில் உள்ளன. பல என்சைம்களும் எண்ணைய் போன்ற, நீரற்ற சூழ்நிலையில் செல் சுவர் போன்ற அமைப்பிற்குள் செயலாற்றிவருகின்றன."

ஸ்டீவென் பென்னெர் மற்றும் அவருடைய சக ஊழியர்கள், புளோரிடா பல்கலைக் கழகத்தின் இரசாயனத்துறையில் இருப்பவர்கள் செய்துள்ள ஆராய்ச்சியை பால் மேற்கோளிட்டுக்காட்டியுள்ளார்: அவர்கள் (Chemical Biology) வேதி உயிரியல் என்ற ஏட்டில் தற்பொழுதைய கருத்து என்ற பகுதியில் நீரற்ற சூழல்கள் மற்ற உலகங்களில் உயிர் தோன்றுவதற்குத் தேவையான முன் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடும் என்ற கருத்தாய்வை முன்வைத்துள்ளனர்.

பூமியில் அடிப்படை உயிரியல் வாழ்வு வடிவங்கள் நீருடன் தொடர்பு கொண்டபோது ஏன் அழிக்கப்படவில்லை என்பது பற்றி புரிந்துகொள்ள இன்னும் ஆய்வு நடத்தி வருகின்றனர். பின்விளைவு கொடுக்கக் கூடிய கூறுபாடு என்ற முறையில் நீர் மிக நுட்பமான இரசாயன வழிவகைகளில் தலையிடக் கூடும்.. நீரற்ற ஹைட்ரோகார்பன் திரவங்களில் ( டைடானில் பாய்வதாகக் கூறப்படும் மீத்தேன் திரவத்தில்), உயிர் வாழ் இனங்கள் வளர்ச்சி பெறுவது அத்தகைய தடையைப் பெறாது என்ற கருத்தைத்தான் பென்னர் வாதிடுகிறார்.

"இராசயன பின்விளைவுத்தன்மையில் உயிர் என்பது பொதிந்த பொருளானால், பின் உயிர் என்பது டைடானில் இருக்கவேண்டும். சில நிமிஷங்கள் மட்டுமே செயல்படக்கூடிய கலம் என்றில்லாமல், சில வாரங்கள் நிலைத்திருக்கக் கூடிய இறங்கு கலத்தை நாம் பயன்படுத்தவேண்டும்."

டைடான் ஆய்வாளர்களை குவிப்படையச் செய்துள்ள மற்றொரு நிகழ்வு அதன் வளிமண்டலத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் மீத்தேனுடைய ஆதாரம் எங்கிருந்து வந்தது என்பதாகும். மீத்தேன் என்பது, புறஊதா ஒளியால் எப்பொழுதும் இடையறாமல் அழிக்கப்படும் பொருள் ஆகும்; எனவே சூழலில் இதை மீண்டும் மீண்டும் புதிப்பிக்கக்கூடிய பொருள் என்னவாக இருக்கும் என்பதுதான் டைடான் பற்றிய ஆராச்சியில் நிலை நிறுத்தப்பட வேண்டியது ஆகும். பொதுவாக மீத்தேன் 300 ஆண்டுகளில் மறைந்துவிடும் எனவே அது மீண்டும் தோன்றுவதற்கான பொருள் டைடானில் இயல்பாகவே இருக்க வேண்டும்.

ஹைஜென்ஸ் கலத்தில் இருக்கும் கருவிகளுள் ஒன்றான GCMS, இந்தச் சிக்கலைத் தீர்க்கும் வகையில் தகவலைத் தருவதற்கு வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

கிறிஸ்டியன் ஹெஜென்ஸின் முக்கியத்துவம்

கிறிஸ்டியன் ஹைஜென்ஸினால் 300 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட டைடானில் ஹைஜென்ஸ் ஆய்வுக் கலம் இறங்கியுள்ளது வானியல், மற்றும் பொதுவான அறிவியலில் முக்கியமான மைல் கல்லாகும். இந்தப்பணி மிக உயர்ந்திருந்து ஹைஜென்ஸினுடைய பெயரை மக்களுடைய சொற்புழக்கத்தில் மீண்டும் கொண்டுவந்துள்ளது.

வானியல் ஆராய்ச்சித் துறையில் ஹைஜென்சின் பெயர் மிக முக்கியமானது ஆகும்; இவர் மற்ற பல வியத்தகு அறிவியல் கண்டுபிடிப்புக்களையும், பங்களிப்புக்களையும் வழங்கியுள்ளார். இவ்விதத்தில் இவர் லியோனார்டோ டா வின்சியை ஒத்திருந்தார்.

டென் ஹாக்கில் பிறந்த ஹைஜென்ஸ், ஹாலந்து நாட்டின் அறிவார்ந்த, பண்பாட்டுச் சுதந்திரச் சூழ்நிலையில் வாழ்ந்து பணியாற்றியவர் ஆவார். சாகன் விளக்கியுள்ளபடி, "ஹாலந்து ஒரு ஆய்வுப்பணியை மேற்கொண்ட வலிமையான நாடு என்பதற்கும் அதன் அறிவார்ந்த பண்பாட்டு, மையத் தன்மைக்கும் இடையே உள்ள தொடர்பு மிக வலிமையானது. பாய்மரக் கப்பல்களில் கொண்டுவந்த முன்னேற்றங்கள் அனைத்துத் தொழில்நுட்பத்துறைகளிலும் ஊக்கத்தை அளித்தன. மக்கள் தங்கள் கைகளின்மூலம் உழைப்பதைக் களிப்புடன் ஏற்றனர். கண்டுபிடிப்புக்களுக்கு வெகுமதிகள் வழங்கப்பட்டன. தொழில்நுட்ப முன்னேற்றத் தேவைக்கு, அறிவைப் பெருக்க அனைத்து முயற்சிகளும் தடையற்ற முறையில் இருக்க வேண்டும் என்பதால், ஹாலந்து ஐரோப்பாவின் முக்கிய நூல் பதிப்பு செய்து, விற்பனை செய்யும் நாடாக இருந்தது; மற்ற மொழிகளில் வெளிவந்த நூல்கள் பலவும் இங்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்டன; மற்ற இடங்களில் வெளியிடப்பட்ட நூல்கள் இங்கே வெளியிடுவதற்கும் அனுமதிக்கப்பட்டன.

இந்தச் சூழ்நிலையில் வளர்ந்த இளைஞன் கிறிஸ்டியன் ஹைஜென்ஸ் ஒரே நேரத்தில் மொழிகள், ஓவியம், சட்டம், அறிவியல், பொறியியல், கணக்கு மற்றும் இசையில் பெரும் புலமை பெற்றிருந்தார். அவருடைய அக்கறைகளும், உணர்வுபூர்வ நம்பிக்கைகளும் பரந்திருந்தன. "உலகம்தான் என்னுடைய நாடு. அறிவியல்தான் என்னுடைய சமயம்" என்று அவர் கூறினார் (Cosmos, p.142)

அறிவியல் மறுமலர்ச்சிக் காலத்தின் விளைவான டெஸ்கார்டெஸ், ஹைஜென்சைப் பற்றிக் கூறியதாவது: "தனி ஒரு மனது இவ்வளவு பொருட்களைப் பற்றிச் சிந்தித்து அவற்றைப் பற்றி அனைத்தையும் தெரிந்து கொள்ளும் வகையில் தன்னைத் தயாரித்துக் கொள்ள முடியும் என்று என்னால் நம்பமுடியவில்லை."

தொலைநோக்கு ஆடியைப் பயன்படுத்திய அறிவியலின் பரப்பை அதிகப்படுத்தும் வகையில் கலிலியோவின் பணியைப் பெருக்கும் முறையில் ஹைஜென்ஸ் தன்னுடைய 5 மீட்டர் நீளத் தொலைநோக்குக் கருவியை அமைத்தார். ஒளிவிலகல் பற்றிய கோட்பாட்டிற்குத் தன் பங்கைக் கொடுத்தார்: இவருடைய ஒளியின் அலைத் தன்மை பற்றிய கருத்தைத் துணை கொண்டு இவர் லென்ஸ்களுக்குள்ளேயே ஒளிச் சிதறலின் தன்மையைக் கணக்குச் செய்ய முடிந்ததுடன், குறைவான நிறம் மற்றும் கோள விலகல்களை உண்டுபண்ணும் வகையில் ஒளி விலகல் ஊடகங்களை உருவாக்கினார்.

மற்றொரு கோளின் அளவைக் கணித்த முதல் நபராக ஹைஜென்ஸ் இருந்தார்; மேலும் இவர்தான் செவ்வாய்க் கோளின் மேற்பகுதியைத் தன்னுடைய ஆய்வுக் கணிப்பின் மூலம் கண்டறிந்து படமாக எழுதினார். சனிக் கோள் பற்றிய முறையான அளவெடுப்பையும் இவர்தான் நடத்தினார் (1659-ல் வெளியிட்ட தன்னுடைய Systema Saturnium என்ற நூலில் இது உள்ளது); மேலும் கோளைத் தொடாமல் வளையங்கள் சனிக் கிரகத்தைச் சுற்றியுள்ளன என்பதையும் கண்டறிந்தார். (ஏற்கனவே சனியின் வளையங்களைக் கலிலியோ கண்டறிந்தாலும் அவை கோளைத் தொட்டுக் கொண்டிருந்தன என்று அவர் கருதினார்.) வியாழன் கோளின் முனை, மற்றும் மத்தியரேகைப் பகுதியின் விட்டத்தை சுட்டிக்காட்டியதுடன், ஓரியன் விண்மீன் படலத்தின் ஒளிப்பகுதிகளின் உட்பகுதிகளையும் அவற்றின் நட்சத்திரங்களையும் ஆராய்ந்து இருப்பிடங்களை வரைந்தார். விண்மீன் படலத்தின் அந்தப்பகுதிதான் ஹைஜென்ஸ் பகுதி என்று அழைக்கப்படுகிறது. எல்லையில்லா வியத்தகு திறமையைக் கொண்டிருந்த ஹைஜென்ஸ், தன்னுடைய கண்டுபிடிப்புக்களில் பெரும்பாலானவற்றைச்செய்தபொழுது அவருக்கு இன்னும் இருபது வயதுதான் ஆகி இருந்தது..

கடல் வழிவகைப் போக்குவரத்து அறிவியலிலும் பல சாதனைகளை இவர் செய்தார்; "வெடிமருந்து எஞ்சின்" என்ற இவருடைய கண்டுபிடிப்புத்தான் பின்னர் நீராவி இயந்திரம் கண்டுபிடிக்கப்படுவதற்குப் பெரிதும் பயன்பட்டது. பகடைக் காய்கள் விளையாட்டைப் பற்றிய இவருடைய ஆய்வுதான் பின்னர் "probabilistics", "நிகழ்தகவுகள் பற்றிய ஆய்வுக் கோட்பாடுகள்" நிறுவனராக இவரைப் புகழடையச் செய்தது.

ஹைஜென்ஸின் சமகாலத்தவரும் அவரைப் பெரிதும் மதித்தவருமான சர் ஐசக் நியூட்டனுடைய சொற்களில் காசினி-ஹைஜென்ஸ் ஆய்வுப் பணியைப் பற்றிக் கூறவேண்டும் என்றால், இது "பேருருக் கொண்டவர்களின் தோள்மீது உயர்ந்து நிற்கிறது" எனலாம்; இது மனிதகுலம் சர்வதேச வகையில் ஒத்துழைத்து அறிவியல் முன்னேற்றம் கொண்டுவருவதற்கு வியத்தகு சான்றாகும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved