World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா

Extent of tsunami destruction along African coast slowly emerges

ஆபிரிக்க கடற்கரை பகுதியில் ஏற்பட்ட சுனாமி பேரழிவு பற்றி மெதுவாக வெளிவருகிறது

By Barry Mason
12 January 2005

Back to screen version

இந்தோனேஷியாவின் கடற்கரைக்கு அப்பால், கடலுக்கடியில் டிசம்பர் 26ல் ஏற்பட்ட பூகம்பத்தினாலும், அதனால் உருவான சுனாமி கடலலைக் கொந்தளிப்பினாலும், ஆபிரிக்காவின் வடகிழக்கு கடற்கரையில் சாவும் பேரழிவும் நிகழ்ந்துள்ளது. ஆசிய நாடுகள் அனுபவித்த அளவிற்கு இல்லாமல் மிகக் குறைந்த அளவிற்கே நடைபெற்றதால், ஊடகங்கள் அவைபற்றி தகவல் தராததோடு, மேற்கு நாடுகளின் தொலைக்காட்சிகளில் எந்த விபரமும் இடம்பெறவில்லை.

பத்திரிகைகளில் வந்துள்ள செய்திகளின்படி ஷேஷல்சில் ஒருவரும் கென்யாவில் ஒருவரும் டான்சானியாவில் 13 பேரும் கொல்லப்பட்டனர், படுமோசமாக பாதிக்கப்பட்டது சோமாலியாவாகும். BBC செய்தி வலைத் தளம் தந்துள்ள தகவலின்படி அங்கு ஏறத்தாழ 300 பேர் மடிந்துள்ளனர்.

டான்சானியாவில் இராட்சத அலையினால் பெரும்பாலும் குழந்தைகள்தான் மடிந்தாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தங்களது மீன்பிடி படகுகளை சுனாமி புரட்டியதால் 3 மீனவர்களும் கடலில் மூழ்கி இறந்தனர். சுனாமி ஏற்பட்டது முதல் மீனவர்கள் கடலுக்கு செல்ல தயங்கிக் கொண்டிருக்கின்றனர், அதனால் மீன்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு மீன்களின் விலை இரு மடங்கு அல்லது மும்மடங்காக உயர்ந்து விட்டது. டான்சானியாவின் கடற்கரையை ஒட்டி வாழ்கின்ற மக்களுக்கு மீன் மட்டுமே பிரதான புரதச்சத்தாக கிடைக்கிறது.

பூகம்பம் கருக்கொண்டது 3,000 மைல்களுக்கு அப்பால் என்றாலும் சுனாமி அலைகள் இந்துமா சமுத்திரத்தை கடந்து வந்து தாக்கியிருக்கிறது. சுனாமி தோன்றி அது ஆபிரிக்க கரையை அடைவதற்குள் ஏற்பட்ட கால அவகாசத்தை கென்ய அதிகாரிகள் பயன்படுத்தி எல்லா கடற்பகுதிகளையும் மூடி உயிர் சேதத்தையும், காயப்படுவதையும் குறைத்திருக்கின்றனர். என்றாலும் சேஷல்ஸ் நாட்டில் உள்கட்டமைப்பு சேதமடைந்துள்ளது, மடகாஸ்கர் நாட்டில் 1,000 இற்கு மேற்பட்டோர் வீடிழந்துவிட்டனர்.

சோமாலியாவில் பகுதி சுயஆட்சி பிராந்தியமான பண்ட்லேன்ட் வடகிழக்கு கடற்கரையிலுள்ளது, அங்கு 85 சதவீத உள்கட்டமைப்பு வசதிகள் சேதமடைந்துள்ளன. குறிப்பாக Hafun தீபகற்பம் பாதிக்கப்பட்டுள்ளது, நாட்டோடு அந்த தீபகற்பத்தை இணைக்கின்ற ஒரு சாலைப்பாலம் சுனாமியினால் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. பண்ட்லேன்ட் பிராந்தியத்தில் பண்தர், முர்தயோ, ராஸ் கேசியர், பர்குல் ஆகிய நான்கு பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

அண்மையில் பிரிட்டனின் செய்தி பத்திரிக்கையான கார்டியன் பிரசுரித்துள்ள செய்தியில் Hafun மேயர் Abshir Abdi Tangi பேட்டியளிக்கும்போது, 51 மீன்பிடி படகுகள் நாசப்படுத்தப்பட்டுவிட்டன, மற்றும் டசின் கணக்கான படகுகளை காணவில்லையென்று கூறினார். பல சோமாலி மக்கள் தற்காலிக மீனவர் குடியிருப்புக்களில் தங்கியிருக்கின்ற உச்சகட்ட மீன்பிடிப்பு பருவத்தில் சுனாமி தாக்கியிருக்கிறது. பெரும்பாலான சம்பவத்தில் மீனவர்கள் தங்களது உபகரணங்களையும், வாழ்வதற்கான வழிவகைகளையும் இழந்துவிட்டனர்.

சில பகுதிகளில் கடல் அலை உள்ளே இரண்டு மைல் வரை புகுந்து ஆற்றுப்படுகைகள் வரை சென்றுள்ளது. மீன்பிடி படகுகள் மற்றும், உபகரணங்கள் அழிக்கப்பட்டதுடன் உப்புத் தண்ணீர் மேய்ச்சல் புல்வெளிகளையும் கிணறுகளையும், நீர் தேக்கங்களையும் கெடுத்துவிட்டது. எனவே இப்போது தூய்மையான குடிதண்ணீர் கிடைப்பதில் சங்கடம் எழுந்துள்ளது. நிமோனியா, வாந்தி பேதி உட்பட மக்களது, உடல்நலத்தை பாதிக்கின்ற தொற்று நோய்களும் பரவிக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

சுமார் 54,000 மக்கள் அல்லது 18,000 வீடுகள் நேரடியாக பாதிக்கப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடு மனித நேய விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் கூறியது. ஐ.நா விமானம் மூலம் வடகிழக்கில் ஆய்வு நடத்தியது, என்றாலும், பாதிக்கப்பட்ட பகுதி தொலைதூரமாகவும் கரடுமுரடாகவும் கடக்க முடியாததாகவும் அமைந்திருப்பதால், விமான ஆய்வு ஒரு முழுமையான மதிப்பீட்டை தர முடியவில்லை. ஏறத்தாழ 1,200 வீடுகளும், 2,400 படகுகளும் அழிக்கப்பட்டுவிட்டதாக ஐ.நா மதிப்பீடு செய்திருக்கிறது.

சோமாலியாவிடம் சேதத்தை மதிப்பிடுகின்ற உள்நாட்டு அமைப்புக்களோ திறமையோ இல்லாததால் ஐ.நா வும் அதனுடன், ஒத்துழைப்பவர்களும் சேதத்தை மதிப்பிடுகின்ற பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளனர். என்று சோமாலியாவிற்கான ஐக்கிய நாடு வளர்ச்சி திட்ட இயக்குநர் El-Balla Hagona விளக்கினார்.

"ஏற்கனவே உள்ள பிரச்சனைகளை, சுனாமி கடுமையாக்கிவிட்டது. ''உடனடியாக, நாம் செயல்படவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது" என்று ஐ.நா உலக உணவுத் திட்ட மற்றும் திட்டமிடல் அதிகாரியான தோமஸ் தோம்ஸன் தெரிவித்தார். இந்த சுனாமி அந்தப் பகுதியில் சீரழிவை ஏற்படுத்திய மூன்றாவது இயற்கை சீற்றமாகும். 4-ஆண்டு வறட்சிக்கு பின்னர் கனமழை பொழிந்து வெள்ளம் வந்தது, வறட்சியில் உயிர் பிழைத்து நின்ற பல ஆடுமாடுகள் மடிந்துவிட்டன.

ஒட்டுமொத்த சுனாமி உதவி நிதியான 997 மில்லியன் டாலரில் ஒரு பகுதியாக, சென்ற வாரம் சோமாலியாவிற்கு 10 மில்லியன் டாலர், நிதி திரட்டும் திட்டத்தை ஐ.நா தொடக்கியுள்ளது. "ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மீது சுனாமி மேலும் தாக்குதலைத் தொடுத்து விட்டது" என்று ஐ.நா அறிவித்தது. குடி தண்ணீர், உணவு, மருந்துகள், மற்றும் அவசர கால குடியிருப்புக்கள் உடனடியாகத் தேவைப்படுகின்றன.

வறட்சியின் காரணமாக ஏற்கனவே, சோமாலியாவில் ஐ.நா உலக உணவுத் திட்டம் இயங்கி வருகிறது. 12,000 மக்களுக்கு உணவு வழங்கி வருவதாக கூறியது, ஆனால் 30,000 மக்களுக்கு மேல் உடனடியாக உணவு தேவை என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறது.

சோமாலியாவில் கடந்த 13 ஆண்டுகளாக, மத்திய அரசாங்கம் எதுவுமில்லாமல், சண்டையிட்டுக் கொண்டுள்ள போர் குழுக்களின் தலைவர்களின் கையில் ஆட்சி இருப்பதால் உதவிப் பொருட்களை முறையாக, மக்களுக்கு கிடைக்கச் செய்வதில் சங்கடங்கள் ஏற்பட்டுள்ளன. பேரலையால், உள்கட்டமைப்பு பெருமளவிற்கு சேதமடைந்துள்ளன. பண்ட்லேன்ட் பிராந்தியத்திற்கு, சோமாலியாவின் செங்கடல் துறைமுகமான Bossaso விலிருந்து உணவுப் பொருட்களையும் இதர உதவிப் பொருட்களையும் மிகக் கடுமையான சங்கடமான பாதைகளில் ஏறத்தாழ 300 மைல் பார ஊர்திகளில் கொண்டுவர வேண்டியிருக்கிறது.

ஒரு தேசிய அரசாங்கத்தை மீண்டும் கொண்டுவருவதற்கு இரண்டாண்டு சமாதான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது அருகாமையிலுள்ள கென்யா நாட்டின் தலைநகரான நைரோபியில் ஜனாதிபதியும் அவரது அமைச்சரவையும் செயல்பட்டு வருகிறது. இன்னும் சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திடாத போர் குழுக்களின் தலைவர்களுடன் நடைபெற்று வரும் பேச்சு வார்த்தைகள் தேங்கி கிடப்பதால், சோமாலியாவின் தலைநகரான Mogadishu விற்கு அரசாங்கத்தை இன்னும் மாற்ற முடியவில்லை.

ஜனாதிபதி அப்துல்லாஹியும் அவரது அமைச்சரவையும் Mogadishu விற்கு திரும்பும் முன்னர் ஆபிரிக்க யூனியன் விரைவில் படைகளை அனுப்பவிருக்கிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved