World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா

The death of Mandela's son and the ANC's AIDS policy

மண்டேலாவின் மகனுடைய மரணமும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் எயிட்ஸ் கொள்கையும்

By Patrick O'Keeffe
22 January 2005

Back to screen version

ஜனவரி 6 இல் பலவீனமான துக்கம் தோய்ந்த நெல்சன் மண்டேலா தனது மகன் மக்காத்தோ மண்டேலா எய்ட்சினால் இறந்து விட்டதாக அறிவித்தார். 54 வயதான மக்காத்தோ, மண்டேலுடன் வாழ்ந்து கொண்டிருந்த ஒரே மகன். மண்டேலா சிறையிலிருந்த நேரத்திலேயே 1969-ல் நடைபெற்ற ஒரு வாகன விபத்தில் அவரது மூத்த மகன் மடிபா தேம்பேகையில் இறந்துவிட்டார்.

ஊடகங்களுக்கு ஒரு அறிக்கை தந்த தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ''நாம் HIV/AIDS-க்கு விளம்பரம் தரவேண்டும் மற்றும் அதை மறைக்கக் கூடாது, ஏனென்றால் அப்படிச் செய்தால்தான் அது காசநோய், புற்றுநோய் போன்ற சாதாரண நோயாக வெளிவந்து HIV/AIDS இனால் ஒருவர் இறந்துவிட்டார் என்று நாம் சொல்ல முடியும். மற்றும் மக்கள் அதை ஏதோ ஒரு அசாதாரண நோயாகக் கருதமாட்டார்கள்" என கூறினார்.

HIV/AIDS தொற்று நோய் குறைந்தபட்சம் 5 மில்லியன் தென்னாபிரிக்க மக்களை பாதித்திருக்கிறது.

2004 டிசம்பரில் மக்காதோவின் உடல் நிலை திடீரென்று மோசமடைந்து விட்டது, அப்பொழுது மண்டேலா மிகவும் ஆபத்தான நிலையிலுள்ள தனது மகனை பார்க்க விரைந்து சென்றுள்ளார் என்ற முதல் செய்தி வெளியாயிற்று. அந்த நேரத்தில் மக்காதோவின் நோயின் தன்மை என்ன என்பது பகிரங்கமாக அறிவிக்கப்படவில்லை.

எயிட்ஸ் தொற்று நோய் நேரடியாக தங்களது வாழ்வையே பாதித்த முன்னணி பிரமுகர்களில் நெல்சன் மண்டேலாவும் சேர்ந்து கொள்கிறார். சென்ற ஆண்டு மே மாதம், இன்காத்தா சுதந்திரகட்சி தலைவரான Mangosuthu Buthelezi தனது இரண்டு குழந்தைகளை எயிட்ஸ் நோயினால் இழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்ட செய்தி வெளிவந்தது.

2003ல் ஒரு முன்னணி ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் அரசியல்வாதியும், எயிட்ஸ் இல்லையென்று மறுத்து வந்தவருமான பீட்டர் மொகாபா அந்த நோயின் காரணமாகத்தான் மடிந்தார் என்ற ஊகங்கள் நிலவின. 2000தில் தென்னாபிரிக்க ஜனாதிபதி Thabo Mbeki-ன் தகவல் தொடர்பு இயக்குநர் Parks Mankahlana திடீரென்று காலமானார், அவர் எயிட்ஸினால் பாதிக்கப்பட்டவர் என்ற ஊகங்கள் நிலவின, என்றாலும் ஜனாதிபதியின் பேச்சாளர்கள் அவர் இரத்தசோகையினால் இறந்ததாக சமாளித்தனர்.

அமெரிக்காவில் 2003இல், Mbeki எவரும் எயிட்ஸினால் இறந்ததாக தனக்கு தனிப்பட்ட முறையில் தெரியாது என்று கூறினார்.

மக்காத்தோ மண்டேலா ஒரு வக்கீல் அவர் ஜோன்னஸ்பேர்க்கின் லிங்ஸ்பீல்ட் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்ற வசதி படைத்தவர். ஆனால் HIV பாதிப்பிற்கு இலக்கான மில்லியன் கணக்கான தென்னாபிரிக்கர்கள் அரசு தருகின்ற மருத்துவ சேவைகளைத்தான் நம்பியிருக்கிறார்கள்.

தென்னாபிரிக்க சுகாதாரத்துறையின் விரிவான HIV மற்றும் எயிட்ஸ் சிகிச்சை திட்டம், நிர்வாகம் மற்றும் மருத்துவ சிகிச்சையின் கீழ் (சிகிச்சை திட்டம் என்று நீண்ட தாமதத்திற்கு பின் 2003 நவம்பரில் அறிவிக்கப்பட்டது. இந்த செயலுக்கிடையில், HIV ஒரு குறிப்பிட்ட கட்டத்தை அடைந்துவிட்ட நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு மருந்துகளை வழங்குவதற்கு அந்தத் திட்டம் வகை செய்கிறது.

சிகிச்சை திட்டம்

இந்தத் திட்டம் 50,000 மக்களுக்கு 2002 மார்ச் வாக்கில் சிகிச்சை தருவதற்கு ஆரம்ப குறிக்கோளாக கொண்டு அறிவிக்கப்பட்டது. என்றாலும், 2004 அக்டோபர் வாக்கில் 15,000 பேருக்கு குறைந்தவர்களே சிகிச்சை பெற்றனர். சிகிச்சை நடவடிக்கை பிரச்சாரத்தை (TAC), ஒரு அரசு சாரா அமைப்பு நடத்தி வருகிறது இந்த எயிட்ஸ் சிகிச்சை பிரச்சாரத்திற்கு ஆதரவாக அரசாங்கம் நிதியுதவி அளித்து வருகிறது. அண்ணளவாக 400,000 மக்களுக்கு அவர்களது உயிரை காப்பாற்ற உடனடி சிகிச்சை தேவைப்படுகிறது என்று அது சுட்டிக்காட்டியுள்ளது.

சிகிச்சை திட்டம் 2003 நவம்பரில் வெளியிடப்பட்டது, அந்த திட்டத்தின் பிரதான ஆவணத்தில் இரண்டு இணைப்புகள் அல்லது பிற்சேர்க்கைகள் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. அவை, முறையே ''திட்டம் அமுல்படுத்துவதற்கு-முந்திய காலத்திற்கு வாராவாரம் பிரதான மையப்படுத்தப்பட்ட பகுதிகளில் மருந்துகளை வழங்குவது தொடர்பான'' மற்றும் விரிவான அமுல்படுத்தப்பட்ட திட்டமுமாகும். இந்த இரண்டு இணைப்புகளும், ஆட்சியை பொறுப்பு சாட்டுவதற்கு முக்கிய தகவல்கள் அடங்கியவையாகும். இவற்றை பிரதான ஆவணத்தில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.

2004 பிப்ரவரி 20ல் சுகாதாரத் துறை அமைச்சரிடமிருந்து TAC அந்த இணைப்புகளை கோரியது, ஆனால் பதில் எதுவுமில்லை. மார்ச் 2ல், TAC தகவல் சேகரிப்பு சட்டத்தின்படி இந்த ஆவணங்கள் தேவையென்று முறையாக மனுச்செய்தது. இந்த கோரிக்கையை சுகாதாரத்துறை எளிய முறையில் புறக்கணித்தது. அந்தச் சட்டப்படி உள் மேல்முறையீட்டிற்கு TAC வக்கீல்கள் மனுச் செய்தனர். இதுவும் கூட புறக்கணிக்கப்பட்டது.

ஏழு வாரங்கள் தாமதமாக செப்டம்பர் 29ல், சுகாதாரத்துறை அமைச்சர் ஒரு பதில் வாக்குமூலத்தை தாக்கல் செய்தார். செயற்திட்டத்தில் அந்த இணைப்புகள் சேர்க்கப்பட்ட குறிப்பு தவறான அடிப்படையில் சேர்க்கப்பட்டுவிட்டதென்றும், அங்கீகரிக்கப்பட்ட இணைப்புகள் எதுவுமில்லை என்றும் குறிப்பிட்டார். சிகிச்சை திட்டம் குறிப்பிடுகின்ற இணைப்புகள் கிளின்டன் அறக்கட்டளை நிபுணர்கள் தயாரித்த காலக்-கேடு குறிப்பிடுகளாகும். அவற்றை மந்திரி சபை எப்போதுமே அங்கீகரிக்கவில்லை.

அவை ''நகல்கள்'' அல்லது ''செயல்பாட்டு வழிகாட்டி நெறிமுறைகள்'' என அவர் குறிப்பிட்டவை பகிரங்கமாக கிடைக்ககூடியவை எனவும், அதேபோல் காலரீதியான இணைப்பு ஒன்றை உருவாக்குவதற்கு எந்த கட்டாயமும் இல்லையென்றும் அமைச்சர் சாதித்தார்.

இந்த ஆவணங்களின் நிலவரம் குறித்து TAC இற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் உடனடியாக அவர்கள் சுகாதார அமைச்சருக்கு ஒரு கடிதம் எழுதினர், "இப்படி ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி முதலில் TAC தகவல் கோரிக்கை மனுவை தாக்கல் செய்கிற அளவிற்கு ஒட்டு மொத்த கவனக்குறைவாகவும், அரசியல் சட்டத்திற்கு முரணாகவும் செயல்பட்ட [சுகாதாரத்துறை] அதற்கு பின்னரும் பத்து மாதங்கள் வரை திரும்பத்திரும்ப கோரிக்கைகள் விடுவிக்கப்பட்ட பின்னரும் உண்மையான நிலவரங்களை தெளிவுபடுத்த தவறிவிட்டதால் அதற்கான செலவுத்தொகையை தரவேண்டுமென்று" அந்தக் கடிதத்தில் கோரியிருந்தது.

நவம்பர் 4ல் இந்த வழக்கு பிரிட்டோரியா உயர்நீதிமன்றத்திற்கு சென்றது. TAC இற்கு ஆதரவாக தீர்ப்பளிக்கப்பட்டு, அதற்கு அமைச்சர் சட்டபூர்வமான செலவினங்களை செலுத்தவேண்டுமென்று கட்டளையிட்டது.

அதற்கு பின்னர் விரைவாக, 2001 முதல் 5 மில்லியன் ராண்டுகள் (ஆபிரிக்க நாணயம்) செலவு ஆகின்ற அளவிற்கு வழக்குகளை தொடுத்துக்கொண்டிருந்த TAC மீது பழிபோட்டு ஒரு அறிக்கையை சுகாதரத்துறை வெளியிட்டது "HIV மற்றும் எய்ட்ஸ் நோய் குறியோடு உள்ள மக்கள் உட்பட எல்லா தென்னாபிரிக்கர்களின் சுதாதாரத்தை மேம்படுத்துவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட குறைந்த வளங்களை TAC தாக்கல் செய்த சட்ட மோதல்களை தீர்த்து வைப்பதில் செலவிட வேண்டிய அளவிற்கு ஒரு நிலை உருவானது வருந்தத்தக்கது." என அதில் குறிப்பிட்டது.

இதற்கு பதிலளிக்கின்ற வகையில் TAC "சுகாதார அமைச்சர் தனது அரசியல் சட்ட கடமைகளை அமுல்படுத்துவதற்கு கட்டாயப்படுத்துகின்ற வகையில் அவருக்கு எதிராக TAC வழக்கு தாக்கல் செய்யவேண்டிய நிலவரம் ஏற்பட்டது உண்மையிலேயே வருந்தத்தக்கது" என்று குறிப்பிட்டிருந்தது.

இந்த நிகழ்வு தெளிவாக சுட்டிக்காட்டுவது என்னவென்றால் விரிவான ஒரு திட்டம் எப்போதுமே நிகழக்கூடியதாக இருந்ததில்லை என்பதைத்தான். 2003 நவம்பரில் வெளியிடப்பட்ட சிகிச்சை திட்டம் 2004 பொதுத்தேர்தல்களுக்கு முன்னர் பொதுமக்களுக்காக வெளியிடப்பட்டதாகும். தேர்தல்கள் முடிந்ததும் சிகிச்சை திட்டத்தில் கண்டுள்ள குறைந்தபட்ச நடவடிக்கைகளை கூட அமுல்படுத்த வேண்டிய அரசியல் செயல் நோக்கம் மறைந்துவிட்டது.

சிகிச்சை நடவடிக்கை பிரச்சாரத்தை ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தாக்குகிறது

TAC நீதிமன்றத்தில் சுகாதாரத்துறை அமைச்சருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ததை தொடர்ந்து TAC மற்றும் அதன் கூட்டணியினருக்கெதிராக ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தலைமையில் ஒரு முனைப்பான தாக்குதல் நடத்தப்பட்டது.

நவம்பர் 5ல் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் வலைத் தளத்தில் TAC உம் Witwatersrand பல்கலைக்கழக எயிட்ஸ் சட்டத்திட்டத்தையும் தாக்கி ஒரு கட்டுரை வெளியிடப்பட்டது, அது சுகாதாரத் துறையின் தொடக்க அறிக்கையில் விவரிக்கப்பட்டிருக்கிறது மற்றும் இந்த தொற்று நோயைச் சமாளிப்பதற்கு ஆட்சி மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு தடையாக TAC செயல்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

மருந்துகள் கட்டுப்பாட்டு கவுன்சிலுக்கும், TAC க்கும் எதிராக மற்றொரு தாக்குதலை மத்தியாஸ் ராத் மருந்து தொழிற்சாலை (Matthias Rath Inc) உரிமையாளரும், அதிக விலையுள்ள வைட்டமின் மருந்துகளை தயாரிப்பவருமான மத்தியாஸ் ராத்தும் தாக்குதல்களை தொடுத்தார். அவர் தன்னை ஒரு இயற்கையான மருந்து தயாரிப்பவர் என்று முன்னிலைப்படுத்திக் கொள்கிறார், செயற்கையாக மருந்துகளை தயாரிக்கும் நிறுவனங்கள் ஊழலான முறையில் செயல்படுவதாக குற்றம்சாட்டினார். இவற்றிற்கும் மேலாக, தன்னுடைய மருந்து பொருட்கள் புற்று நோயை தீர்த்து வைக்கும் என்று கூறுகிறார். தென்னாப்பிரிக்க சுகாதார அமைச்சர் Manto Tshabalala-Msimang-யை ஆதரிப்பதாகவும் பாரம்பரிய மருத்துவர்கள் சங்கத்தில் தன்னை சேர்த்துக் கொண்டிருப்பதாகவும் ராத் குறிப்பிட்டார்.

Mail & Guardian செய்தி பத்திரிகையில் மருந்துகள் கட்டுப்பாட்டு கவுன்சில் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் கைகளுக்குள் இருப்பதாக குற்றம் சாட்டும் பல்வேறு விளம்பரங்களை ராத் வெளியிட்டார், "MCC -ல் முடிவு எடுக்கின்ற உறுப்பினர்கள் அனைவரும் நேரடியாக அல்லது மறைமுகமாக மருந்து தொழிற்துறையிலிருந்து முறைகேடாக பணம் பெறும் பட்டியலில் இடம் பெற்றிருக்கின்றனர்." TAC "ராக்பெல்லர் அறக்கட்டளையால் நிதியுதவி அடிப்படையில் வளர்க்கப்படுகிறது" என்று உறுதியாக கூறினார். மற்றும் அது "எயிட்ஸ் மருந்துகளின் பயன்ற்ற தன்மை மற்றும் உடல்நலத்தை சீரழிக்கின்ற பக்கவிளைவுகளை கண்டிக்கிற அனைவரது வாயையும் மூட"" முயன்று வருகிறது. TAC யை கலைத்துவிட வேண்டும் என்று ராத் கூறுகிறார்.

MCC அவரது விளம்பரங்களுக்காக ராத் மீது அவதூறு வழக்கு தொடர முயன்றபோது சுகாதாரத்துறை அமைச்சர் தலையிட்டு கவுன்சில் நடவடிக்கை எடுக்காது தடுத்தார்.

அரசாங்கத்திற்கு கூட்டணியினராக உள்ள அமைப்புகளில் NAPWA என்ற அமைப்பு சுகாதார துறையின் நிதியைப் பெறுகின்றது, அந்த அமைப்பு எயிட்ஸ் தொற்றுநோய் கட்டுப்பாட்டில் திட்டவட்டமாக நடவடிக்கை எடுக்க மறுக்கிறது. Sowetan சேர்ந்த Lucky Mazibuko, NAPWA மற்றும் அதன் மறைமுகமான பங்களிப்பை அம்பலப்படுத்தும் கட்டளை ஒன்றை எழுதியிருக்கிறார். Mazibuko தந்துள்ள தகவலின்படி "HIV மற்றும் எயிட்ஸ் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு அதற்குரிய மருந்துகளைப் பயன்படுத்தி சிகிச்சையளிக்க மறுத்துவரும் சுகாதாரத்துறையின் நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்கும் சட்டபூர்வமாக ஆட்சியின் நிலைப்பாட்டிற்கு நம்பகத்தன்மையை மீட்டுத் தரவும் NAPWA ஒரு சிறந்த வசதியான நம்பிக்கை மீட்பாளராக செயல்பட்டுவருகிறது." "சுகாதாரத்துறையின் மதிப்பிழந்த செல்வாக்கை.... முலாம்பூசும் அதிகாரபூர்வமற்ற மோசடி பிரசார முகமூடியாக NAPWA பயன்பட்டு வருகிறது" என்றும் Mazibuko குறிப்பிட்டார்.

டிசம்பர் 17-ல் TAC மீது தாக்குதல் தொடுக்கும் மற்றொரு கட்டுரை ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் வலைதளத்தில் பிரசுரிக்கப்பட்டது "Nevirapine மருந்துகளும் ஆப்பிரிக்க மருத்துவ சோதனை பன்றிகளும்" என்ற தலைப்பில் தென்னாப்பிரிக்காவில் தாயிடமிருந்து குழந்தைக்கு HIV நோய் கிருமிகள் பரவுவதைத் தடுப்பதற்கான திட்டத்தில் பயன்படுத்தப்படும் பிரதான மருந்தான Nevirapine மருந்தின் பாதுகாப்பையும் பயனையும் கண்டிக்கிற வகையில் அந்தக்கட்டுரை அமைந்திருக்கிறது மற்றும் பன்னாட்டு பெரிய மருந்து நிறுவனங்களின் ஒரு கருவியாக TAC பயன்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.

TAC இந்தக் கட்டுரைக்கு ஒரு மறுப்பை வெளியிட்டது, ''Nevirapne மருந்துக்களை பயன்படுத்துவோரிடையே எயிட்ஸ் மருந்துகளுக்கு ஒவ்வாமை தோன்றுவது சிறிதுகாலமாக தெரிந்ததுதான். என்றாலும் தாயிடமிருந்து குழந்தைக்கு நோய்க்குறி பரவுவதை தடுப்பதில் Nevirapine மருந்தின் பயனோடு ஒப்பிடும்போது இந்த சிறிய குறைபாடு பொருட்படுத்த வேண்டியதில்லை. தாய்க்கு ஒரு மாத்திரையும் குழந்தைக்கு சில சொட்டுகளும் Nevirapine தந்தால் அதுவே போதுமானது'' என்று TAC குறிப்பிட்டுள்ளது.

மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மலிவுவிலை பாதுகாப்பான பயனுள்ள மருந்துகளை தரவேண்டும் என்று போராடுகின்ற நீண்ட வரலாறு படைத்த பன்னாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனங்களோடு கூட்டு சேர்ந்து செயல்படுகின்ற எந்த நிறுவனத்தையும் பார்த்ததில்லை என்றும் TAC கூறியுள்ளது.

Nevirapine மருந்துகளையும் மாத்திரைகளையும் HIV/AIDS நோயாளிகளுக்கு குறிப்பாக HIV நோய் குறியுள்ள கருவுற்ற தாய்மார்களுக்கும் பிறக்கும் குழந்தைகளுக்கும் தருவதை தாக்கும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் பற்றி கவலைக்குரியதாக உள்ளது. இப்போது ஆட்சி கொள்கையின்படி கருவுற்ற தாய்மார்களுக்கு மற்றும் பிறந்த குழந்தைகளுக்கு ஒரே தடவை (Single-dose) Nevirapine மருந்துகள் தரப்படுகின்றன, இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தோன்றியிருப்பது இதில் வேறு ஏதோ உள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

விரிவான செயல்திட்டம் இல்லாத நிலையில் ரப்பர் உறைகள் (Condom) வினியோகத்தோடு இந்தத்திட்டம்தான், இந்த தொற்று நோய்கான ஆட்சி நடவடிக்கையின் முக்கிய அம்சமாக உள்ளது. பல மருந்துகள் பயன்படுத்தும் திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டால் இப்போது Nevirapine ஒரு மருந்து என்ற நிலை நீக்கப்படுமானால் ஏற்கனவே சிகிச்சை பெற்று வருகின்ற சிலரும் குறையும். இதனுடைய விளைவு பல்லாயிரக்கணக்கான மக்கள் மடிகின்ற நிலையைத் தோற்றுவித்துவிடும்.

TAC மீது Tshabalala-Msimang ஆதரவாளர் மத்தியாஸ் ராத், சுகாதார துறை மற்றும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தொடுத்து வருகின்ற தாக்குதல்கள் TACயை களங்கப்படுத்துவது சேற்றைவாரியிறைக்கும் ஒரு திட்டவட்டமான முயற்சி என்பதோடு HIV/AIDS நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு சர்வதேச அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் மருந்துகளை பயன்படுத்துவது தொடர்பாக பொதுமக்களிடையே குழப்பத்தை விதைப்பதுமாகும்.

கடந்த ஒராண்டிற்கு மேலாக நடைபெற்றக்கொண்டிருக்கின்ற சம்பவங்களின் தன்மையை பார்க்கும்போது ஒரு சிகிச்சை திட்டம் பிரசுரிக்கப்பட்ட பின்னரும் 2002 முதல் எயிட்ஸ் சிகிச்சை தொடர்பாக ஆட்சியின் நிலைப்பாடு மாறவில்லை என்பதை கோடிட்டுக் காட்டுகிறது. அப்போது அரசியல் சட்டநீதிமன்றம் தாயிலிருந்து குழந்தைக்கு நோய் பரவுவதைத் தடுக்க Nevirapine மருந்துகளை பயன்படுத்த கட்டளையிட்டது. அந்த சிகிச்சை திட்டம் ஒரு தேர்தலை கையாளும் தந்திரமாக பயன்படுத்தியதாக தோன்றுகிறது.

தனது மகன் எயிட்ஸ் நோயினால் இறந்தார் என்று மண்டேலா அறிவித்திருப்பது இந்த தொற்று நோய் தொடர்பாக அவரது அணுகுமுறையோடு ஒட்டியதாகவே உள்ளது. Mbeki யை போல் மண்டேலா எப்போதுமே எயிட்ஸ் நோயே இல்லை என்ற முகாமில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டவரும் அல்ல. அவர் இந்த தொற்று நோய் தொடர்பாக பகிரங்கமாக வெளியிட்டு வரும் அறிக்கைகள் மற்றும் எயிட்ஸ் நோய் தடுப்பு சங்கங்கள் மற்றும் அறக்கட்டளைகளோடு தன்னை சம்பந்தப்படுத்திக் கொண்டிருக்கிறமுறை ஆகியவை ஆபிரிக்க தேசிய காங்கிரஸிலும், ஆட்சியிலும் சில சக்திகள் கொண்டிருக்கிற கருத்துக்களுக்கு பரவலாக வேறுபட்டதாகும்.

மண்டேலா எதிர்கருத்துகளை கூறிவந்தாலும் அவரது கருத்துக்களை ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் பகிரங்கமாக விமர்சிக்கவில்லை, அல்லது மண்டேலா பகிரங்கமாக Mbeki யையோ அல்லது சுகாதார அமைச்சரையோ விமர்சிக்கவில்லை. என்றாலும் அவர் ஆட்சியின் அணுகுமுறைக்கு மக்களிடையே நிலவுகின்ற எதிர்ப்பையும் முன்னெச்சரிக்கையற்ற முறையையும் உணர்ந்து கொள்ளத்தவறவில்லை. இந்த தொற்றுநோயினால் தென்னாபிரிக்காவிற்கும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் அரசியல் எதிர்காலத்திற்கும் ஏற்படுகின்ற ஆபத்தையும் அவர் உணர்ந்துகொள்ளத் தவறவில்லை.

தென்னாபிரிக்காவின் சமூக பொருளாதார உறவுகளின் ஸ்திரத்தன்மையில் எயிட்ஸ் தொற்று நோயால் ஏற்படுகின்ற பாதிப்பு தொடர்பாக தென்னாபிரிக்க அரசியல் ஸ்தாபனத்திற்குள் நிலவுகின்ற கவலையை மண்டேலா தனது பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் அறிக்கைகள் மூலம் எடுத்துக்காட்டுகிறார். தென்னாபிரிக்காவில் அடுத்த பொதுத் தேர்தல்கள் 2009ல் நடைபெறவிருக்கின்றன. அதற்குள் தென்னாபிரிக்கா காப்புறுதிகணிப்பீட்டு அமைப்பு தந்துள்ள மதிப்பீட்டின்படி 1.4 மில்லியன் தென்னாபிரிக்கர்களுக்கு HIV நோய்குறி தடுப்பு வைத்தியம் தேவைப்படும் என குறிப்பிட்டுள்ளது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved