World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Iran's presidential election a harbinger of social and political convulsions

ஈரானிய ஜனாதிபதி தேர்தல் சமூக மற்றும் அரசியல் கொந்தளிப்புக்களின் ஒரு முன்னறிகுறி

By Ulrich Rippert and Keith Jones
1 July 2005

Back to screen version

ஈரானின் ஜனாதிபதி தேர்தல் அந்த நாட்டின் வணிக, அரசியல் மற்றும் மத செல்வந்த தட்டினருக்கு மக்களிடையே ஆழமாக நிலவுகின்ற எதிர்ப்பை அம்பலப்படுத்தியுள்ளது----அந்த வெறுப்பு வெகுஜன வேலையில்லாத நிலை, பெருகிவரும் சமூக சமத்துவமின்மை மற்றும் முல்லாக்களால் நிர்வகிக்கப்படும் பெரும் அரசியல் மற்றும் சமூக அதிகாரத்திற்கான எதிர்ப்பால் உருவானது. பொருளாதாரக் கொள்கை, அமெரிக்காவுடனான நாட்டின் உறவுகள், அரசியல் அதிகாரத்தில் பிளவு மற்றும் அதன் ஆட்சி முறைகள் தொடர்பாக ஈரானின் ஆளும் வர்க்கம் கடும் பிளவுற்றிருக்கிறது என்பதையும் இந்தத் தேர்தல் காட்டியுள்ளது.

மேற்கு நாடுகளின் பத்திரிகைகள் மற்றும் ஈரானிய ஸ்தாபனத்தின் பெரும்பகுதி ஆகியவற்றிற்கு வியப்பளிக்கின்ற வகையில், ஜூன் 24-ல் நடைபெற்ற அடுத்த ஈரானின் ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் தெஹ்ரானின் மேயர் மஹ்முது அஹ்மதினெஜாத் வெற்றி பெற்றிருக்கிறார்.

தனது ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்திற்கு முன்னர் அஹ்மதினெஜாத்தை தெஹ்ரானுக்கு வெளியில் எவருக்கும் தெரியாது, அவர் தன்னை ஏழைகள் மற்றும் உரிமைகள் பறிக்கப்பட்டவரின் நீதிபதியாக காட்டிக்கொண்டதன் மூலமும், மற்றும் ஈராக் மீது அமெரிக்கா ஆக்கிரமிப்பு செய்ததற்கு நிலவும் எதிர்ப்போடு தன்னை அடையாளப்படுத்திக் கொண்டதன் மூலமும், மற்றும் ஈரான் தனது அணுத்திட்டத்தை கைவிடச் செய்வதற்கு வாஷிங்டன் மேற்கொண்ட மிரட்டல் முயற்சியை எதிர்ப்பதுடன் அடையாளப்படுத்திக்கொண்டதன் மூலமும் அவர் வலுவான ஆதரவு பெற்ற முன்னாள் ஜனாதிபதி அயத்தொல்லா அல் அக்பர் ஹசேமி ரஃப்சஞ்சானியை தோற்கடித்தார்..

அஹ்மதினெஜாத் தனது எளிமையான பூர்வீகத்திற்கு ஏற்றபடி எளிய உடை உடுத்தி----தன்னை ''ஒரு தெரு கூட்டுபவராகவும், சிறிய பணியாளராகவும்'' பிரகடனப்படுத்திக் கொண்டார் ---அவர் ஒரு கருமானின் மகன்--- மக்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் ஊழலை ஒழிக்கவும் ஓய்வின்றி உழைக்கப்போவதாகவும் அறிவித்தார். "எண்ணெய் மாஃபியாவின்" ''கைகளை வெட்டுவதாக'' திரும்பத் திரும்ப அவர் உறுதியளித்தார்.

அந்த ''மாஃபியா'' யாரை பிரதிநிதித்துவப்படுத்துகிறார் என்பதை அஹ்மதினெஜாத் சொல்ல மறுத்துவிட்டாலும், அந்தச் சொல் அர்த்தப்படுத்துவது மற்றும் தெளிவாக அர்த்தப்படுத்துவது, ஈரானில் எண்ணெய் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள கூடுதல் செல்வத்தின் பெரும்பங்கை ஒதுக்கிக் கொண்டவர்களை ஆகும், அதாவது, நாட்டின் வணிக மற்றும் அரசியல் செல்வந்தத் தட்டினரை ஆகும்.

சமூக நீதியை நிலைநாட்டுவதில் தனது உறுதிப்பாட்டையும், ஈரானின் செல்வந்தத்தட்டினரை எதிர்கொள்வதற்கு தயாராக இருப்பதையும் சான்றாக காட்டுகின்ற வகையில், அஹ்மதினெஜாத் டெஹ்ரான் மேயர் என்ற முறையில் வெகுஜன வேலையில்லாதோர் மற்றும் பெருகிவரும் விலைவாசிகளால் ஏற்பட்டுவிட்ட பாதிப்பையும் மட்டுப்படுத்துவதற்கு எடுத்த நடவடிக்கைகளை அவர் சுட்டிக்காட்டினார். அவற்றில் பணக்காரர்கள் மீது விதிக்கப்பட்ட புதிய நகரசபை வரியும் அடங்கும், அந்த நிதி உதவியின் மூலம் குறைந்த செலவிலான வீடுகள் கட்டப்பட்டன மற்றும் தெஹ்ரானுக்கு தெற்கிலுள்ள குடிசைப்பகுதிகளில் மேம்பட்ட உள்கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டன.

அஹ்மதினெஜாத் ஒரு வெளியார் என்று காட்டிக்கொள்வதும் தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் நண்பர் என்பதும் வெறும் வாய்வீச்சாகும். அவர், ஈரான் புரட்சிகர காவலர் படையில் ஒரு முன்னாள் அதிகாரி மற்றும் basiji என்கிற குடிப்படையின் ஆலோசகர் ஆவார், அந்தக் குடிப்படை ஈரானின் அதிதீவிர இஸ்லாமிய தார்மீக நெறிமுறையை செயல்படுத்திய ஒன்றாகும், அஹ்மதினெஜாஷாவின் இரத்தக்களரியில் தோய்ந்த அமெரிக்காவின் ஆதரவு ஆட்சியை விரட்டிய புரட்சியை தொடர்ந்து தொழிலாள வர்க்கத்தையும் இடதுகளையும் கொடூரமாக ஒடுக்குவதன் மூலம் தன்னை திடப்படுத்திக் கொண்ட மதகுருமார்கள் தலைமையிலான முதலாளித்துவ தேசியவாத ஆட்சியின் தீவிர ஆதரவாளர் ஆவார்.

2003-ல் தெஹ்ரான் மேயர் பதவிக்கு நாட்டின் மிக உயர்ந்த அரசியல் தலைவர் அயத்துல்லா அலி-காமினி, அஹ்மதினெஜாத்தை தேர்ந்தெடுத்ததாக கூறப்படுகிறது. அவரது ஜனாதிபதி பிரச்சாரம் மதகுருமார் ஸ்தாபனத்தின் பெரும்பகுதி ஆதரவை பெற்றது, சிறப்பாக காமினியின் முன்னோடியான அயத்துல்லா கோமேனி 1979 புரட்சியை தொடர்ந்து உருவாக்கிய அரசியல் சட்ட கட்டுக்கோப்பில் எந்த மாற்றத்தையும் எதிர்க்கின்ற பிரிவின் ஆதரவை அவர் பெற்றிருக்கிறார். அந்த அமைப்புமுறை முல்லாக்களுக்கு ஒரு சலுகைமிக்க பங்களிப்பையும் அரசியல் அதிகாரத்தில் பெரும்பங்கையும் தருகிறது.

அஹ்மதினெஜாத் காவலர்கள் சபையின் ஆதரவை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது, அல்லது அதன் ஒரு டசின் உறுப்பினர்களில் பலருடைய ஆதரவைப் பெற்றிருக்கிறார். அந்த சபை அரசியல் பதவிகளுக்கான வேட்பாளர்களை முடிவு செய்யும்போது, அவர்கள் உண்மையான முஸ்லீம்களா என்று சோதித்துப் பார்க்கிறது (தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிடுவதற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஈரானியரது உரிமைகளை அது மறுத்திருக்கிறது) இஸ்லாமிய போதனைகளுக்கு ஏற்ப அமைந்திருக்கவில்லை என்று அந்தக் குழு கருதுமானால் ஈரான் பாராளுமன்றத்தில் எந்தச் சட்டத்தையும் இரத்து செய்கின்ற அதிகாரமும் கூட அதற்கு உண்டு.

ஒரு basij ஆசிரியர் என்ற பாத்திரத்திற்கு ஏற்ப, அஹ்மதினெஜாத் டெஹ்ரான் மேயர் என்ற முறையில் தனது அதிகாரங்களை சமூக மற்றும் கலாச்சார உரிமைகளை கட்டுப்படுத்துவதற்கு பயன்படுத்தினார். ஆனால் தனது ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரத்தின்போது, ஆட்சியின் கண்டிப்பான இஸ்லாமிய நடைமுறை விதிகளை செயல்படுத்துவார் என்ற அச்சங்களை போக்குவதற்கு முயன்றார், தன்னை ஒரு மிதவாதி என்று அறிவித்துக்கொண்டார், "நாட்டின் உண்மையான பிரச்சனை வேலைவாய்ப்பும், வீட்டு வசதியும் தான்" என்று வலியுறுத்திக் கூறினார்.

ரஃப்சஞ்சானியும் ''சுதந்திர சந்தை'' சீர்திருத்தங்களும்

ரஃப்சஞ்சானியை சரியானவகையில் தோற்கடிக்க வளர்ந்து வரும் வறுமை மற்றும் சமூக ஏற்றத்தாழ்வின் மீது பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியை சுரண்டிக்கொள்ளவும், திசை திருப்பிக் கொள்ளவுமான மக்களை கவரும் பிரச்சாரத்தை அஹ்மதினெஜா கொண்டிருந்தார்.

1989 முதல் 1997 வரை ஈரானின் ஜனாதிபதியாக பணியாற்றிய, ரப்சஞ்சானி புரட்சிக்கு-பிந்தைய மதகுருமார்-அரசியல் ஸ்தாபனத்தில் நன்றாக தெரிந்த பிரதிநிதியாவார். அவர், இதர முன்னணி முல்லாக்களைப்போல், தனிப்பட்ட முறையில் ஏராளமான செல்வத்தை குவித்தார் என்றும் எண்ணெய், விமானப்பயணம், கார், வங்கித்தொழில் மற்றும் உணவு விடுதி நிறுவனங்களில் நலன் கொண்டவர் என்றும் பரவலாக வதந்திகள் நிலவுகின்றன.

அவரது முந்திய எட்டாண்டு பதவிகாலத்தில் அவர் அமுல்படுத்திய ''சுதந்திர சந்தை'' சீர்திருத்தங்களை அவர் நீடித்து செயல்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பில் ராப்சஞ்சானி மீண்டும் ஜனாதிபதி பதவியை பிடிப்பதற்கான முயற்சியில் நாட்டின் வணிக செல்வந்தத்தட்டினரின் பெரும்பகுதியினர் ஆதரித்தனர். இதில் 1979 புரட்சிக்கு பின்னர் தேசிய மயமாக்கப்பட்ட பல வணிக நிறுவனங்களை தனியார் மயமாக்குதலும், அரசாங்க செலவினங்களில் கணிசமான வெட்டுக்களை கொண்டு வருவதும் அடங்கும்.

குறிப்பாக, புரட்சியின் தாக்கத்தின் கீழ் தொழிலாளர் சட்டங்களை ராப்சஞ்சானி இரத்து செய்வார் என்று பெரிய வணிகங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தன, அவை கதவடைப்பிற்கு நீண்ட கால முன்னறிவிப்புக் கொடுப்பது, ஆட்குறைப்பிற்கு கணிசமான ஊதியம், முறையான ஊதிய உயர்வு அதேபோல் மானியங்களை குறைப்பது----அதாவது, விலைகள் ஏற்றம்----எரிவாயு, மின்சாரம், தண்ணீர், அடிப்படை உணவு பொருட்கள் ஆகியவற்றுக்கு மானியங்களை குறைப்பதாகும்.

அஹ்மதினெஜாத்திற்கு மேலாக ரஃப்சஞ்சானியை ஈரானின் வர்த்தக செல்வந்தத்தட்டின் மிக வலுவான பிரிவுகள் ஆதரித்ததற்கு மேலும் ஒரு காரணம் ரஃப்சஞ்சானி அமெரிக்காவுடன் ஒரு சமரசத்திற்கு வரவேண்டும் என்று கூறினார். அத்தகையதொரு சமரசம் ஏற்படும் சந்தர்ப்பத்தில், ஈரானிய முதலாளித்துவவாதிகள் பெருகும் அமெரிக்க முதலீட்டால் இலாபம் அடையமுடியும் என்று எதிர்பார்த்தனர், மற்றும் அமெரிக்க சந்தைகளும் திறந்து விடப்படும். ஈரானின் அரசாங்கம்-- மற்றும் மதகுருமார்கள் கட்டுப்பாட்டிலுள்ள கம்பெனிகளை தனியார்மயமாக்க அழுத்தம் கொடுக்கும் ஒரு கூட்டணியாக வாஷிங்டன் இருக்க முடியும் என்றும் அவர்கள் கணித்தனர்.

ரஃப்சஞ்சானி தனது தோல்விக்கு காரணம் என்ன என பதிலளிக்கும்போது தனது பெயரை இழிவு படுத்துவதற்கும், மக்களை மிரட்டுவதற்கும் ஒரு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட பிரசாரத்தினால் தான் பாதிக்கப்பட்டுவிட்டதாக குற்றம் சாட்டினார், basji யைத் அணிதிரட்டி தனது எதிரிக்கு வாக்களிக்க செய்ததாக கூறினார். "தேர்தலில் சட்டவிரோதமாகவும் திட்டமிட்டும் தலையிடுவதற்காக ஆட்சியின் எல்லா வழிவகைகளும் பயன்படுத்தப்பட்டன'' என்று அவர் அறிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மேலும் கூறுகையில் தான் தேர்தல் முடிவுகளை ஆட்சேபிக்கப் போவதில்லை என்றும் ஏனென்றால் பாதுகாவலர்கள் சபையில் தமக்கு நம்பிக்கையில்லை என்றும் குறிப்பிட்டார். "ஒரு புகாரை நீதிபதிகளுக்கு தாக்கல் செய்ய நான் கருதவில்லை ஏனென்றால் அவர்கள் எதையும் செய்ய முடியாது அல்லது எதையும் செய்ய விரும்பாதவர்கள். இதை நான் இறைவனிடம் விட்டுவிடுகிறேன்".

பதவி விலகும் ஜனாதிபதி முஹமத் கட்டாமி ஏற்பாடு செய்துள்ள ஒரு அரசியல் குழுவான ''சீர்திருத்தக்காரர்களின்'' முன்னணி வேட்பாளர் முதல் சுற்று வாக்குப்பதிவு முடிந்தவுடன் வெளியிட்ட கருத்துக்களையே ரஃப்சஞ்சானி எதிரொலித்திருக்கிறார்.

என்றாலும், அதிகாரபூர்வமான புள்ளிவிவரங்களின்படி அவரை எதிர்த்த அஹ்மதினெஜாத் 17 மில்லியன் வாக்குகளுக்கு எதிராக 10 மில்லியன் வாக்குகளைப் பெற்ற ரஃப்சஞ்சானியின் தோல்வியோ, அல்லது சீர்திருத்தக்காரர்களோ, மதகுருமார்- அரசியல் ஸ்தாபனத்தில் இடம்பெற்றுள்ள அவர்களது எதிரிகளின் ஜனநாயக விரோத சூழ்ச்சிகள் என்றோ மிக சாதாரணமாக அல்லது பிரதானமாக விளக்கிவிட முடியாது.

வேலையில்லாதோர், பணவீக்கம், வீட்டு வசதியின்மை மீது உருவான பொதுமக்களது ஆத்திரத்தை அஹ்மதினெஜாத் பயன்படுத்திக்கொண்டார் என்று மேற்கு நாட்டு பத்திரிகைகளே கூட ஒப்புக்கொள்கின்றன மற்றும் அதன் விளைவாக அவர் தெற்கு தெஹ்ரானிலும் இதர தொழிலாள வர்க்க மையத்திலும், கிராம ஏழைகளிடமும் ஏராளமான வாக்குகளை வென்றெடுக்க முடிந்தது.

ஒரு முன்னாள் ஜனாதிபதி என்ற முறையிலும் ஒரு அயத்துல்லா என்ற வகையிலும் ஒரு பணக்கார மற்றும் சிறந்த தொடர்புகள் உள்ள வணிகர் என்ற வகையிலும் ஈரானின் பல வணிக நிறுவனங்கள் ஆதரவைப் பெற்றவர் என்ற வகையிலும் ரஃப்சஞ்சானி தன்னிடம் வலுவான வசதிகள் இல்லாதவர் என்று கூறிவிட முடியாது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஊடகங்கள் ''சீர்திருத்தக்காரர்கள்'' என்று குறிப்பிடும் பிரிவைப் பொறுத்தவரை அவர்கள் தங்களது தொழிலாள வர்க்க மற்றும் அதைவிட அதிகமாக மிக அதிகமாக என்று இல்லாவிட்டாலும் தங்களது மத்தியதர வர்க்க ஆதரவை இழந்துவிட்டனர், அதற்குக் காரணம் கட்டாமி எட்டு ஆண்டுகளாக ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அவர்கள் நடந்து கொண்ட முறைதான் காரணமாகும்.

அவர்கள் விமர்சித்து வந்தாலும் எப்போதாவது, பழமைவாத முல்லாக்களுக்கு எதிராக செயல்பட்டாலும், ஜனநாயகவிரோத அரசியல் ஒழுங்கு நெடுநாள் பேணுவதைவிடவும் எந்த உண்மையான பொதுமக்களது போராட்டத்திற்கும் சீர்திருத்தக்காரர்கள் பயப்படுகின்றனர். இவ்வாறு அவர்கள் திரும்ப திரும்ப சமரசம் செய்து கொண்டனர், மற்றும் மத கடின போக்கினர் எதிர்க்கட்சிகாரர்களை சிறையில் அடைத்தபோது மற்றும் தாராளவாத செய்தி பத்திரிக்கைகளை மூடியபோது, அவர்கள் பின்வாங்கினர்.

சீர்திருத்தக்காரர்களே ஈரானின் ஆளும் செல்வந்தத்தட்டின் ஒரு பகுதியினர்தான் என்பதை மேலும் எடுத்துக்காட்டுகின்ற வகையில் அவர்களது சமூக பொருளாதார கொள்கைகள் அமைந்திருக்கின்றன. இந்த உள்ளடக்கத்தில் ''சீர்திருத்தம்'' என்று சொல்வது தனியார்மயமாக்கலையும், இதர சந்தை சார்பு கொள்கைகளையும் குறிப்பதாகும், அவை ஈரானின் தொழிலாள வர்க்கம் மற்றும் விவசாயிகளின் நிலையை மோசமாக்கவே பயன்படுகின்றன, மற்றும் சமூக சமத்துவமின்மையை விரிவடையச் செய்கின்றன.

ஜூன் 17-ல் முதல் சுற்று வாக்குப்பதிவு நடந்தபோது பிரதான சீர்திருத்த வேட்பாளர் முஸ்தபா மோயின் ஐந்தாவது இடத்திற்கு வந்தார், சீர்திருத்த முகாம் ரஃப்சஞ்சானியை தழுவிக்கொண்டது, அவரை அதுவரை மதகுருமார் அரசியல் ஸ்தாபனத்தின் ஒட்டுமொத்த அடிப்படைப் பிரதிநிதி என்று அவர்கள் கண்டித்து வந்திருந்தனர்.

சமூக துருவமுனைப்பும் அரசியல் நெருக்கடியும்

ரஃப்சஞ்சானியும் சீர்திருத்தக்காரர்களும் வாக்காளர்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டனர், அதற்கு காரணம் பொதுமக்களது உள்ளத்தில் அவர்கள் ஈரானின் ஆழமாகிக்கொண்டு வரும் சமூக துருவமுனைப்போடு மிக நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்தார்கள். ஒரு சிறிய ஆளும் செல்வந்த தட்டு செல்வத்தில் உருண்டாலும் ஆடம்பரமாக வாழ்ந்தாலும்----1999 முதல் நாட்டின் எண்ணெய் வருவாய்கள் மும்மடங்காகிவிட்டன-----மிகப்பெரும்பாலோர் பெருகிவரும் பொருளாதார பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர், ஏறத்தாழ 20 சதவீத பணவீக்கம் நிலவுகிறது, மற்றும் தொற்றுநோய் போல் வேலைகளுக்கான நெருக்கடி தோன்றியுள்ளது.

அதிகாரபூர்வமாக, வேலையில்லாதோர் 16 சதவீதம் என்று நிர்ணயிக்கப்படிருந்தாலும், பல பார்வையாளர்கள் அது 30 அல்லது 35 சதவீதத்திற்கு நெருக்கமாக இருக்குமென்று கூறுகின்றனர். 25 வயதிற்கு குறைந்தவர்களிடேயே வேலையில்லாதவர்கள் விகிதம் 42 சதவீதமாக உள்ளது. அதிகாரபூர்வமற்ற மதிப்பீடுகளின்படி நாட்டின் மக்கள் தொகையில் நாற்பது சதவீதம் பேர் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்கின்றனர்.

1978-79-ல் ஷாவிற்கு எதிராக மில்லியன் கணக்கான மக்களை தெருக்களில் வரச்செய்த சமூக நீதி மற்றும் சமத்துவம் பற்றிய உறுதிமொழிகளுக்கு புத்துயிர் ஊட்டுவதற்கு அஹ்மதினெஜாத் வாய்வீச்சுக்கள் நீண்ட காலத்திற்கு உண்மையை மறைக்க முடியாது. அது என்னவென்றால் ஈரானில் நிலவுகின்ற அப்பட்டமான செல்வம் மற்றும் வருவாய் சமச்சீரற்ற விநியோக முறையை சவால்செய்வதற்கு அவரிடம் எந்த திட்டமும் இல்லை மற்றும் இஸ்லாமிய வலதுசாரிகளின் குற்றேவல் செய்பவரான அவர் சுதந்திரமான தொழிலாள வர்க்க மற்றும் சோசலிச அமைப்புக்களை புரட்சிக்கு பின்னர் மிகக்கொடூரமாக ஒடுக்கிய சக்திகளின் சமகால தலைவர் ஆவார்.

அசோசியேட் பிரஸ் அறிக்கையின்படி, ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் தனது உரைகளில் தனியார்மயமாக்கல், மற்றும் முதலீடு போன்ற சொற்களை பயன்படுத்தி பெருவர்த்தகங்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்காக காரத்தை சேர்க்க தொடங்கியிருக்கிறார்.

இதற்கிடையில், அயத்துல்லா காமேனி நாட்டின் அரசியலில் ஒரு தீவிர பங்களிப்பை தொடர்ந்து தருமாறு ரஃப்சஞ்சானியை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டிருக்கிறார். "எல்லா வேட்பாளர்களுக்கும் நான் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன், குறிப்பாக ஹாசேமி ரஃப்சஞ்சானி புரட்சிக்கான ஒரு ஆதாரமாவார் மற்றும் அவர் ஒரு முன்னணி தலைவர், எனது அன்பிற்குரிய சகோதரர் முக்கியத் துறைகளில் எப்போதுமே இருப்பார் என்று நான் நம்புகிறேன்". என்று காமெனி கூறியுள்ளார்.

காமேனியின் இந்த அழைப்பிற்கு பின்னால், ஈரானின் ஆளும் செல்வந்தத் தட்டிற்குள் நடைபெறுகின்ற மோதல்கள், கீழிருந்து வருகின்ற வெகுஜன அதிருப்திகள் மற்றும் அதிகரித்து வரும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அழுத்தத்தை எதிர்கொள்கையில் அது கடுமையாக பலவீனப்பட்டுவிடும் என்ற அச்சம் நிலவுகிறது

ஆனால் ஈரானின் ஆளும் செல்வந்தத் தட்டிற்குள் நிலவுகின்ற மோதல்கள் ஆழமாக சென்று கொண்டிருக்கின்றன அவற்றை விரும்பம்போல் விரட்டிவிட முடியாது. ஈரானுக்கு முன்னேறிய தொழில்நுட்பம் அவசியம் தேவைப்படுகிறது. என்றாலும், முதலாளித்துவ வல்லரசுகள் பெரும் சலுகைகளை பெறுவதற்கு உறுதியுடன் உள்ளன, அவற்றில் காப்புவரி விகிதங்கள் குறைப்பும் தனியார்துறை அல்லாத துறைகளை (அரசு மற்றும் மதபோதகர் கட்டுப்பாட்டிலுள்ள) வர்த்தகங்களை தனியார் மயமாக்கி தொழில்நுட்ப மாற்றங்களை பதிலியாக பெறுவதும் அடங்கும். அத்தகைய மாற்றங்கள் பல ஈரானியருக்கு சொந்தமான நிறுவனங்களை அச்சுறுத்துவதாகவும் முல்லாக்களின் அரசியல் ஆதிக்கத்தையும் செல்வத்தையும் அச்சுறுத்துவதாகவும் அமையும்.

புரட்சி நடந்து கால் நூற்றாண்டு காலத்தில், ஈரான் ஐரோப்பா ஜப்பான் மற்றும் ரஷ்யாவுடன் நெருக்கமான பொருளாதார உறவுகளை வளர்த்துக் கொண்டிருக்கிறது. அஹ்மதினெஜாத் காமெனியிடமிருந்து தனது கருத்துருவைப் பெற்றுக் கூறுவது என்னவென்றால், சீனாவுடனும் இந்தியாவுடனும் இந்த உறவுகள் மற்றும் தொடர்புகள் வளர்ந்து கொண்டு வருகின்றன, அவை இரண்டும் ஈரானின் எண்ணெய் எரிவாயு கையிருப்புக்களை பயன்படுத்துவதில் ஆர்வம் கொண்டு செயல்பட்டு வருகின்றன, ஈரான் அமெரிக்காவுடன் நெருக்கமான உறவுகளை வளர்க்க வேண்டியதில்லை.

ரஃப்சஞ்சானியும் ஈரானின் ஆளும் செல்வந்தத்தட்டிற்குள் இடம் பெற்றுள்ள இதர முக்கிய தலைவர்களும் வாதிடுவது என்னவென்றால், குறைந்தபட்சம் அமெரிக்காவுடன் ஒரு சமரசம் காண்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும், ஏனெனில் அதனால் ஏற்படுகிற எதிர்கால பொருளாதார பயன்களையும் கருதிப் பார்க்க வேண்டும் மற்றும் வாஷிங்டன் தனது மோதல் போக்குக் கொள்கையில் விடாப்பிடியாக நீடிக்குமானால் அது ஆட்சிமாற்றங்கள் பற்றிய அச்சுறுத்தல்கள் நிறைந்தது, மற்றும் இராணுவ நடவடிக்கை அச்சுறுத்தல்களையும் கொண்டது, அந்த ஆபத்துக்களையும் கருதிப்பார்க்க வேண்டும்.

அதற்கு பின்னர் நாட்டின் சமூக அரசியல் வாழ்வில் முல்லாக்களின் பங்களிப்பு தொடர்பாக பிளவுகள் நிலவுகின்றன. கடந்த இரண்டரை தசாப்தங்களுக்கு மேலாக பாரம்பரியமாக பஜார் வியாபாரிகளுடன் நெருக்கமாக ஒத்துழைத்து, பணியாற்றிய முல்லாக்கள் தங்களது செல்வத்தை பெருமளவில் பெருக்குவதற்கும் தங்களது வலைபின்னல் போன்ற கல்வி மற்றும் சமூக வேவை அமைப்புக்களையும் விரிவாக்கி கொள்வதற்கும் மற்றும் தங்களது வட்டாரங்களுக்குள் முக்கியமான பொருளாதார நடவடிக்கைகளை கொண்டு வருவதற்கும், அவற்றை ஒரு பெரிய பொருளாதார மற்றும் அரசியல் சக்தியாக இரண்டு வகையிலும் மாற்றுவதற்கு தங்களது அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தினார்கள்.

அதே நேரத்தில், மதகுருமார்களில் சில பிரிவினர் உட்பட வாதிடுவது என்னவென்றால், மதகுருமார்-அரசியல் ஸ்தாபனத்தின் கடுமையான கட்டுப்பாட்டை தார்மீக நெறி, கலாச்சார, ஆகியவற்றில் தளர்த்த வேண்டும் என்றும் கருத்துக்களையும் தகவலையும் பரவலாக்க வேண்டுமென்று வாதிடுகின்றனர், அவர்களது நம்பிக்கைகள் என்னவென்றால் ஆட்சியை பெறுமளவிற்கு பொது மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பது, மற்றவர்கள் வாதிடுவது என்னவென்றால், எந்த கணிசமான சீர்திருத்தமும் பொதுமக்களது எதிர்பார்ப்புக்களை தூண்டிவிடக் கூடும், மற்றும் விரைவில் அந்த சீர்திருத்தங்களை கொண்டு வந்தவர்களது கட்டுப்பாட்டிலிருந்து தப்பி ஓடிவிடும், குறிப்பாக மதகுருமார்களது மேலாதிக்கத்தின் கீழும் சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளினாலும் தத்தளித்துக் கொண்டிருக்கிற மக்களது உணர்வுகளை உசுப்பிவிட்டது போன்ற 1979 புரட்சிகால உணர்வுகள் அதே அளவிற்கு நிலவுகின்றன.

ஜனாதிபதி தேர்தல் மாபெரும் சமூக பொருளாதார போராட்டங்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளன. பல காரணிகளில் ஈரானை ஒரு புதிய கொந்தளிப்பிற்கு உந்தித் தள்ளும் காரணிகளில் வாஷிங்டன் மற்றும் வோல் ஸ்டீரீட்டின் சூறையாடும் அபிலாஷைகள் எந்தவகையிலும் முக்கியத்துவம் குறைந்ததல்ல. புஷ் நிர்வாகம் ஈரான் ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை உடனடியாகக் கண்டித்தது. "நாங்கள் எதையும் பார்க்கவில்லை''. ''எங்களை எங்களது கருத்திலிருந்து மாற்றுவதற்கு எதுவும் நடந்துவிடவில்லை, அந்த பிராந்தியத்தின் இதர நாடுகளைவிட ஈரான் அத்துமீறி நடந்துகொள்கிறது. தற்போது ஈராக் ஆப்கானிஸ்தான் மற்றும் லெபனானின் வெளிப்படையாக காணப்படும் சுதந்திரம் அங்கு இல்லை,'' என்று வெளியுறவுத்துறை பெண் பேச்சாளர் ஜோஆன் மூர் கூறினார்.

ஈரானுடைய செல்வந்த தட்டை அல்லது சாதாரண ஈரானியர்களை அது இழந்தாலும், மூரின் பட்டியலில் இடம்பெற்றுள்ள மூன்று நாடுகளில் இரண்டு நாடுகள் தற்போது அமெரிக்காவின் ஆக்கிரமிப்பில் உள்ளன.

ஈரான் மீது அமெரிக்கா ஒரு படையெடுப்பு நடத்துவது, ஈராக் மீது முற்றுகையிட்டதைவிட மிகவும் இரக்கமற்ற மற்றும் பூகோள ஸ்திரமற்ற அதிரடி நடவடிக்கையாக அமையும். அப்படியிருந்தாலும், புஷ் நிர்வாகத்திற்கு உள்ளேயும் வெளியிலும் இருப்பவர்கள் பலர் அஹ்மதினெஜாத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை வரவேற்றிருக்கின்றனர் என்பதில் இரகசியம் எதுவுமில்லை. அதன் மூலம் நம்புவது என்னவென்றால் தெஹ்ரானிலுள்ள ஆட்சியை பூதாகரமாக சித்தரிக்கும் தங்களது முயற்சிக்கு அது உதவுமென்றும் தனது அணுத்திட்டத்தை இடைவிடாது கடைபிடித்துவரும் ஈரானை தண்டிப்பதற்கு அமெரிக்கா நடத்திவரும் ஒரு பிரசாரத்திற்கு சர்வதேச ஆதரவை திரட்டுவதற்கு உதவும் என்றும் நம்புகின்றனர்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved