World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

More killings of civilians by US-led forces in Iraq

ஈராக்கில் அமெரிக்கா தலைமையிலான படைகளால் மேலும் குடிமக்கள் கொல்லப்படுகின்றனர்

By James Cogan
14 July 2005

Back to screen version

ஈராக் ஆக்கிரமிப்பை சுற்றி ஒரு தரப்பு செய்தி அறிக்கைகளும், பிரச்சாரமும், பொதுவான முன் தணிக்கை மேகமூட்டமும் சூழ்ந்திருந்தாலும் அதைக் கிழித்துக் கொண்டு அமெரிக்கா தலைமையிலான படைகள் ஈராக்கில் சாதாரண மக்களை கொல்வது தொடர்பான செய்திகள் தொடர்ந்து வெளிவந்துகொண்டுதான் உள்ளது.

மிக அண்மையில் ஜூலை 10 அன்று பாக்தாத்தில் கடுமையான கோடை வெப்பத்தில் 10 பேர் காற்று புகாத அறைக்குள் ஈராக் போலீஸ் அதிரடிப்படை வண்டியில் அடைக்கப்பட்டு மூச்சுதிணறி இறந்தனர். இந்த வழக்கு பற்றிய செய்தி மறுநாள் அல்ஜெசீராவிலும், BBC-யிலும் இதர வலைபின்னல்களிலும் வெளியிடப்பட்டன. மேல் விவரங்கள் அமெரிக்க செய்தி பத்திரிகைகளில் ஜூலை 12-ல் பிரசுரிக்கப்பட்டன. ஈராக் உள்துறை அமைச்சகத்தின் கவனம் ஈர்க்கப்பட்டு ஒரு புலன் விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஆக்கிரமிப்பிற்கு எதிராக வழிகாண முடியாத கிளர்ச்சியும் மக்கள் எதிர்ப்பும் உருவாகியிருப்பதை ஒடுக்குவதற்கு அமெரிக்க மற்றும் ஈராக் அரசாங்கத் துருப்புக்கள் நடத்திவரும் கொலைகள் மற்றும் கைதுகளின் தான் தோன்றித்தனமான தன்மையை சுட்டிக்காட்டுகின்ற வகையில் அந்த கைது செய்யப்பட்ட சூழ்நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.

மேற்கு புறநகர் பகுதியான அமாரியாவில் நடைபெற்ற ஒரு துப்பாக்கி சண்டையில், அது நடைபெற்றதற்கான சூழ்நிலைகள் தெளிவாக இல்லை, அபுகிறைப் புறநகரை சார்ந்த மூன்று ஆண்கள் அருகாமையிலுள்ள கட்டுமான பகுதி ஒன்றில் வேலைக்கு செல்ல முயன்றவர்கள் காயமடைந்தனர். அவர்களுடன் பணியாற்றிய சக தொழிலாளர்களை பாக்தாத்திலுள்ள நூர் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர், அதில் காயமடைந்த ஒருவர் அங்கு இறந்துவிட்டார்.

அதற்கு சற்று பின்னர், போலீஸ் அதிரடிப்படை வீரர்கள் அந்த மருத்துவமனைக்கு வந்தனர். அதிக விவரங்கள் அடங்கிய தகவல் ஒன்றை அந்த மருத்துவமனை இயக்குனர் நியூயோர்க் டைம்சிடம் தெரிவித்தார், அது என்னவென்றால், போலீஸார் அவர்களை அந்தத் தாக்குதலில் சம்மந்தப்பட்டவர்கள் என்று குற்றம் சாட்டினர், அந்தக் கட்டத்தில் அவர்களில் சிலர் ஓடுவதற்கு முயன்றனர். ``இறுதியாக அதிரடிப்படை வீரர்கள் காயமடைந்தவர்கள் உட்பட அனைவரையும் பிடித்தனர் மற்றும் அவர்களை கொண்டு சென்றுவிட்டனர்`` என்று டாக்டர் கூறினார். ``திங்களன்று [ஜூலை 11] பாக்தாத்திலுள்ள யார்மோக் மருத்துவமனையில் அவர்களில் மிகப்பெரும்பாலானவர்களது இறந்த உடல்கள் ஒப்படைக்கப்பட்டதை கேள்விப்பட்டது வரை அதுதான் எங்களுக்குத் தெரியும்.``

மொத்தமாக 12 ஆண்கள் அந்த மருத்துவமனையில் கைது செய்யப்பட்டனர், அவர்களில் ஒருவர் தனது கருவுற்ற மனைவியுடன் இருந்தார் மற்றும் அவர் அதற்கு முந்திய சம்பவத்தில் அங்கு இருக்கவில்லை. அந்தக் கைதிகள் அதிரடிப்படை தலைமையகத்தில் தாக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது மற்றும் அதற்கு பின்னர் 50 பாகை செல்சியஸ் வரை சென்ற வெப்ப நிலையில் காற்றுபுக முடியாத வேனுக்குள் அவர்கள் அடைக்கப்பட்டனர். ஜூலை 11 அதிகாலை 1 மணிக்கு அந்த வேன் திறக்கப்பட்டபோது எட்டு பேர் இறந்து கிடந்தனர் என்று BBC தகவல் தந்தது. மேலும் இருவர் யார்மக் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கும்போது இறந்துவிட்டனர், அங்கு அவர்கள் போலீசாரால் குப்பையில் தூக்கி வீசப்பட்டனர்.

உயிர்பிழைத்த ஒருவர் போலீஸ் அதிரடிப்படை வீரர்கள் தங்களை மின்சார அதிர்ச்சி பாய்ச்சிய பின்னர் அந்த வேனுக்குள் விட்டெறிந்ததாக தன்னிடம் கூறினார் என்று ஒரு மருத்துவர் BBC-க்கு விளக்கம் தந்தார். நூற்றுக்கணக்கான சுன்னி முஸ்லீம் மதபோதகர்களின் மத்திய அமைப்பான முஸ்லீம் அறிஞர்கள் சங்கத்தின் ஒரு பேச்சாளரும் LA Times-ற்கு சொன்னது என்னவென்றால்: ``அவர்கள் (போலீசார்) அவர்களை சித்திரவதை செய்தனர் மற்றும் அவர்களை காற்றுப்புக முடியாத ஒரு அறையில் விட்டுச் சென்றனர், அதனால் 10 பேருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மடிந்தனர்.``

போலீஸ் அதிரடிப்படை வீரர்கள் அந்தக் குற்றச்சாட்டுக்களை மறுத்தனர். என்றாலும், பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு அனாமதேய உள்ளூர் போலீஸ் அதிகாரி நியூயோர்க் டைம்சிடம் ``அபுகிறைபை சார்ந்த அந்த மனிதர்களுக்கு நடந்தது, ஈராக் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட குற்றமாகும். அவர்களது உறவினர்கள் அந்த உடல்களை பெறுவதற்கு வந்த நேரத்தில், போலீசாருக்கு எதிராக அவர்கள் பல தீங்கான சொற்களைக் கூறுவதை நான் கேட்டேன். இதுபோன்ற குற்றங்கள் நடக்கும்போது, ஏன் கிளர்ச்சிக்காரர்கள் போலீஸ்காரரை தாக்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை காண்பதில் சிரமமில்லை. இதைத் தடுத்து நிறுத்த அதிகாரத்தில் இருப்பவர்கள் ஏதாவது செய்தாக வேண்டும்.`` என்று கூறினார்.

உள்துறை அமைச்சக போலீஸ் அதிரடிப்படை வீரர்கள் சம்மந்தப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளில் பரவலாக துஷ்பிரயோகம், சித்திரவதையும் நீதிமன்றத்திற்கு புறம்பான கொலைகளும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன என்று பல்வேறு அறிக்கைகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்ததற்கு பின்னால் இந்த குற்றச்சாட்டுக்கள் வருகின்றன. இந்தப் பிரிவுகள் அமெரிக்க இராணுவத்தால் 2004 இறுதியில் அமைக்கப்பட்டன மற்றும் சதாம் ஹூசேன் ஆட்சியில் பணியாற்றி வந்த சிறப்புப் படைகள் மற்றும் குடியரசுக் காவலர் படையிலிருந்து பிரதானமாக இவர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் தங்களது விசுவாசங்களை அமெரிக்கா நியமித்த அரசாங்கத்தின் பக்கம் திருப்பிக்கொண்டாலும், பாத்திஸ்ட்டுகளுக்கு எதிரானவர்கள் மீது இதற்குமுன்னர் அவர்கள் பயன்படுத்திய அதே பேரச்சமூட்டும் நடவடிக்கைகளை அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

போலீஸ் அதிரடிப்படை வீரர்களின் அட்டூழியங்கள் குறித்து ஒரு விவரமான செய்தியறிக்கையை ஜூன் 27-ல் நைட் ரிட்டர் பத்திரிகையாளர்களான லாசர் ஷாலிகியும், டாம் லெஸ்ஸட்டரும் பிரசுரித்தனர்----அதற்கு மூன்று நாட்களுக்கு பின்னர் ஷாலிகி ஒரு அமெரிக்க சோதனைச்சாவடியை அணுகியபோது ஒரு அமெரிக்க துப்பாக்கி ஏந்திய நபர் என்று சந்தேகிக்கப்பட்டவரால் அவர் கொல்லப்பட்டார் (``ஈராக்கில் அமெரிக்க ஆதரவு கொலைக்குழுக்கள் பற்றி விசாரணை செய்த பின்னர் பத்திரிகையாளர் கொல்லப்பட்டார்`` என்ற கட்டுரையைக் காண்க).

ஜூலை 3-ல் பிரிட்டிஷ் ஒப்சேர்வர் மேலும் அந்த பிரிவிற்கும் ஈராக் அரசாங்கத்தின் உள்துறை அமைச்சகத்துக்கும் எதிரான மேலும் குற்றச்சாட்டுக்களை பிரசுரித்தது (ஈராக்கில் அமெரிக்க ஜனநாயகம்: கொலைக்குழுக்கள், சித்திரவதை மற்றும் பயமுறுத்தல் என்ற கட்டுரையைக் காண்க). அண்மையில் நடைபெற்ற மின்னல் நடவடிக்கையில் பல நீதிமன்றத்திற்கு புறம்பான கொலைகள் நடைபெற்றதாக குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது----- அது 1700க்கு மேற்பட்ட மக்கள் கைது செய்யப்படுவதற்கு வழிவகுத்த பாக்தாத்திலுள்ள ஆக்கிரமிப்புப்படைகளால் எடுக்கப்பட்ட ஒரு பாரியளவான ஒடுக்குமுறை நடவடிக்கையாகும்.

ஒரு சுன்னி மதபோதகர் உட்பட ஞாயிறன்று கைது செய்யப்பட்ட மேலும் 11 பேரை அதிரடிப்படை வீரர்கள் சித்திரவதை செய்ததாகவும், கொன்றதாகவும் AMS ஜூலை 13-ல் குற்றம்சாட்டியது. இரண்டு நாட்களுக்கு பின்னர் பாக்தாத்தின் வடக்கு பகுதியில் அவர்களது உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அமெரிக்கத் துருப்புக்களால் நடத்தப்படும் கொலைகள்

அதிரடி படைப்பிரிவுகளுக்கு எதிராக மட்டற்ற குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டு வருவதுடன் ஈராக் அரசாங்கத்தின் ஐ.நா. தூதரான சமீர் அல் சுமைதியின் 21 வயது மைத்துனரை கண்மண் தெரியாமல் கொன்றதாக அமெரிக்க மரைன்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. கொந்தளிப்பாக உள்ள அல்-அன்பார் மாகாணத்தில் கிளர்ச்சி-எதிர்ப்பு நடவடிக்கைகள் நடைபெற்றபோது இந்த நிகழ்ச்சி நடந்திருக்கிறது. சென்ற நவம்பரில், பல்லூஜா நகரத்தை அமெரிக்க இராணுவம் சிதைத்து குப்பைமேடாக்கிவிட்டது. கொரில்லாக் குழுக்களை கண்டுபிடித்து அழிப்பதற்காக அந்த மாகாணத்தின் தலைநகரான ரமாதியில் திரும்பத்திரும்ப அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

Sumaidaie நண்பர்களுக்கு அனுப்பிய மற்றும் பின்னர் அது அசோசியேட் பிரஸ் செய்தி நிறுவனத்திற்கு தரப்பட்ட ஒரு கடிதத்தின்படி, அவரது உறவினரான பாக்தாத்திலுள்ள தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவரான முஹமது, ஜூன் 25-ல் அவரது கிராமமான அல்-ஷேக் ஹதீதில் உள்ள அவரது குடும்ப இல்லத்தில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அந்தப் பகுதியில் சுற்றிவளைத்துக் கொண்டு அமெரிக்க மரைன்கள் தேடுதல் வேட்டை நடத்திக்கொண்டிருந்த போது அவரது வீட்டில் நுழைய வேண்டுமென்றும், அங்கு ஏதாவது ஆயுதங்கள் மறைக்கப்பட்டிருக்கின்றனவா என்பதைப் பார்க்க வேண்டும் என்றும் கோரினார்கள் அப்போது முஹமது அவர்களை தனது பெற்றோரின் படுக்கை அறைக்கு அழைத்துச் சென்றார், அங்கு தனது சொந்த பாதுகாப்பிற்காக அவரது தந்தை ஒரு துப்பாக்கியை வைத்திருந்தார். அவரது தாயும், சகோதரியும், சகோதரர்களும் அதற்குப் பின்னர் ''பூமியில் மெத்தென விழும் சத்தத்தை'' கேட்டனர் என்று விளக்கினார்.

அதற்கு பின்னர் மரைன்கள் அந்த அறையிலிருந்து வெளியில் வந்தனர் படுக்கையறைக்கு செல்லும் வராண்டாவில் அவரது இளைய சகோதரரை இழுத்து வந்தார்கள், அங்கே அவர் அடிக்கப்பட்டார் மற்றும் கேள்விகள் கேட்கப்பட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டது. குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் வெளியில் சென்று காத்திருக்குமாறு கட்டளையிடப்பட்டது. ஒரு மரைன் தங்களது வாகனத்திற்கு சென்று ஒரு காமிராவுடன் திரும்பி வந்தார். அவர்கள் வெளியேறிச் சென்றபோது அமெரிக்கத் துருப்புக்களோடு வந்திருந்த ஒரு மொழிபெயர்ப்பாளர் அவர்கள் முஹமதை கொன்றுவிட்டதாகக் கூறினார். படுக்கையறையில் அந்த இளைஞர் ஒரே துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்துகிடந்தார்.

``ஆயுதமற்ற ஒரு அப்பாவி குடிமகனை கொடூரமான இரத்தக்களரியில் தோய்ந்து கொலை செய்திருக்கிறார்கள்`` என்று அந்த சம்பவத்தை சுமைதி வர்ணித்தார்----இந்த வழக்கு ஐ.நா. தூதரின் ஒரு குடும்ப உறுப்பினர் சம்மந்தப்பட்டது என்பதால் அது ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது மற்றும் ஆக்கிரமிப்புப் படைகளால் ஒரு பதில் தரப்பட்டது. ஈராக்கில் தற்காலிக அமெரிக்க தூதராக பணியாற்றிக்கொண்டுள்ள அன்னி பேட்டர்சன், ``இந்த பயங்கரமான சூழ்நிலையில் தனது உள்ளப்பூர்வமான இரங்கல்களை தெரிவித்துக்கொள்வதாக`` குறிப்பிட்டதாக கூறப்படுகிறது. மற்றும் ஒரு புலன்விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். வாஷிங்டன் போஸ்ட் சுட்டிக்காட்டியிருப்பதைப்போல், ஒரு அமெரிக்க இராணுவ பேச்சாளர், ``அந்தக் குற்றச்சாட்டுக்கள் கூட்டணிப் படைகள் சம்மந்தப்பட்ட ஒரு சம்பவத்தை தோராயமாக ஒத்துவருவதாக உள்ளது`` என்று மட்டுமே ஒப்புக்கொண்டுள்ளார்.

என்றாலும், மிகப்பெரும்பாலான சம்பவங்களில், பாதிக்கப்பட்டவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் நண்பர்களும் பத்திரிகைகளுக்கு தகவல் தருவதற்கு வசதியில்லாதவர்களாக இருப்பார்களானால் அத்தகைய கண்மூடித்தனமான கொலைகள் செய்தியாகவே வருவதில்லை.

நிரந்தரமாக சிவிலியன்கள் கொலை செய்யப்படுவதும், முறைகேடாக நடத்தப்படுவதும் நடந்துகொண்டிருப்பதால் ஈராக் அரசாங்கத்தின் மீதும் ஆக்கிரமிப்புப் படைகள் மீதும் மகத்தான எதிர்ப்பு உருவாக்கப்பட்டிருப்பதாக ஈராக் செய்தி பத்திரிகையான Azzaman ஆங்கிலப் பதிப்பு ஜூலை 4-ல் தலையங்கம் எழுதியிருக்கிறது.

அந்தப் பத்திரிகை குறிப்பிட்டது: ``ஏறத்தாழ தினசரி ஈராக்கிலுள்ள அமெரிக்க துருப்புக்கள் அப்பாவி ஈராக்கியர்களை கொன்று வருகிறது, ஆனால் நமது ஐ.நா. தூதர் அந்தத் துருப்புக்கள் தனது உறவினர் ஒருவரை கொலை செய்தபின்னர் மட்டுமே பேசியிருக்கிறார். அவர் ஒரு பொது அதிகாரி என்ற முறையிலும் ஒரு நாட்டின் பிரதிநிதி என்ற வகையிலும்,Samir Sumaidaie ஈராக்கின் சாலைகளிலும், நெடுஞ்சாலைகளிலும், கடந்து சென்று கொண்டிருக்கிற அமெரிக்க இராணுவ வாகனத்தை நெருங்கினார்கள் என்பதற்காக மடிந்துவிட்ட ஒட்டுமொத்த குடும்பங்கள், பெண்கள், குழந்தைகள், தாய்மார்கள், தந்தைமார்கள், ஆகியோரது சம்பவங்களை அவர் எடுத்துக்காட்டியிருக்க வேண்டும். அமெரிக்க துருப்புக்களும், அவரது தளபதிகளும், கூறுகின்ற வார்த்தைகள் ''நாங்கள் வருந்துகிறோம்'' அல்லது ''மனப்பூர்வமாக இரங்கல்களை வெளிப்படுத்துகிறோம்'' என்பதாகத்தான் அமைந்திருக்க முடியும் என்று கூறியுள்ளது.

மனித உயிர் தொடர்பான இந்த அலட்சியம் அந்த ஆக்கிரமிப்பின் தன்மையிலிருந்து எழுகிறது. மத்திய கிழக்கில் அமெரிக்காவின் ஒரு காபந்து அரசாக ஈராக்கை மாற்றுவதற்கும், அதன் வளங்களை அமெரிக்க பெருநிறுவனங்கள் மேலாதிக்கம் செலுத்துவதையும் எதிர்த்து நிற்கின்ற உள்ளூர் மக்களை நசுக்குவதை நோக்கமாகக் கொண்டு நடத்தப்படுகின்ற ஒடுக்குமுறை காலனித்துவப்போர் இது. ஒரு அச்சமூட்டி, மிரட்டுகின்ற சூழ்நிலையை நிலைநாட்டுவதற்கு அமெரிக்க இராணுவமும் ஈராக் அரசாங்கத்துருப்புக்களும், கண்மண் தெரியாத வன்முறையை கட்டவிழ்த்துவிட்டிருக்கின்றன. அமெரிக்க துருப்புக்கள் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் உயிர்பறிக்கும் பலாத்காரத்தை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டிருக்கும் அதேவேளை, இந்த ஆக்கிரமிப்பில் பங்கெடுத்துக்கொண்டுள்ள ஆயிரக்கணக்கான தனியார் ஒப்பந்தக்காரர்களுக்கு வழக்குகளில் இருந்து விதிவிலக்கு தரப்பட்டிருக்கிறது.

ஈராக் சிவிலியன்களை சுடுவது தொடர்பாக நிலவும் தண்டனைவிலக்கீட்டு உரிமையானது ஆக்கிரமிப்பு படைகளின் மத்தியில் நிலவும் அச்சத்தால் மேலும் மோசமாகி இருக்கிறது. கண்மண் தெரியாத கொலைகளின் காரணமாக தூபம் போடப்படுகின்ற - எதிர்ப்புகளின் அளவு, எந்த ஈராக்கிய ஆண்களும் அல்லது தனியாக வருகின்ற டிரைவரும் ஒரு கிளர்ச்சிக்காரர் ஆக அல்லது ஒரு தற்கொலை குண்டு வெடிப்பாளராக இருக்கக்கூடும் என்ற எண்ணத்தை துருப்புக்களின் எண்ணத்தில் உருவாக்கிவிட்டது. அச்சுறுத்தக்கூடியது என்று கருதப்படுகின்ற எந்த நடவடிக்கையை ஒரு சிவிலியன் எடுத்தாலும் அல்லது தவறான இடத்தில் தவறான நேரத்தில் இருந்தாலும் அவர் சுட்டுக்கொல்லப்படுவார் அல்லது கைது செய்யப்படுவார்.

பாக்தாத் தெருக்களில் நடைபெறுகின்ற அமெரிக்க ரோந்துப்படை நடமாட்டம் பற்றி ஸ்டார்ஸ் & ஸ்டிரைப்ஸ் ஜூன் 15-ல் முன்மாதிரியான ஒரு கட்டுரையை வெளியிட்டிருக்கிறது. லூசியானாவை சேர்ந்த ஒரு தேசிய காவலர் காலாட்படைப் பிரிவு ``'மெதுவான நாள்`` என்று வர்ணிக்கும் தினத்தைப் பற்றி விவரித்திருக்கிறது ---- அன்றைய தினம் திடீர் தாக்குதல், கார் குண்டு வெடிப்பு துப்பாக்கி சூடு அல்லது பீரங்கித் தாக்குதலால் அவர்கள் வருந்துவதில்லை. அந்தப் பிரிவு மார்ச் முதல் மூன்று பேரை இழந்துவிட்டது.

என்றாலும் ''மெதுவான தினத்தில்'' தங்களது கார்களுக்கு அருகாமையில் வருவதாக அமெரிக்க துருப்புக்கள் நம்புகின்ற ஈராக் சிவிலியன் கார்கள் மீது மூன்று எச்சரிக்கை குண்டுகளை சுட்டார்கள். இறுதி சம்பவத்தை விளக்கிய அந்தக் கட்டுரை, ``மற்றொரு மணி நேரத்திற்கு பின்னர் ஒரு டிரைவர் திடீரென்று (அமெரிக்க டிரக்கிற்கு) ``ஏஜ்`` இணையான தூரத்தில் நின்றார், துப்பாக்கி வீரர் ஒரு எச்சரிக்கை குண்டை வெடித்தார், அது அந்தக் காரின் டிரைவரது டயர்களை வெடிக்கச் செய்தது.``

இந்த சம்பவத்தில், சிவிலியனுக்கு ஏற்பட்ட ஒரே சேதம் ஒரு டயர் பாதிக்கப்பட்டதுதான். ஆனால் இதுபோன்ற சம்பவங்களில் டசின் கணக்கான ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் கொல்லப்பட்டிருக்கின்றனர் அல்லது உடல் ஊனமடைந்திருக்கின்றனர். சென்ற மாதம் மட்டுமே ஆக்கிரமிப்புப் படைகளுக்காக பணியாற்றும் ஒப்பந்தக்காரர்களால் குறைந்தபட்சம் 12 ஈராக் சிவிலியன்கள் கொல்லப்பட்டதாக ஈராக் உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஜூன் 26 முதல், இரண்டு பத்திரிகையாளர்கள் மகா இப்ராஹீம் மற்றும் அஹமது வெயில் பக்கீர் ஆகியோர் இராணுவ வாகனங்களுக்கு ''நெருக்கமாக'' கார்களை ஓட்டி வந்தார்கள் என்பதற்காக அமெரிக்க துருப்புக்களால் பாக்தாத்தில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

சர்வதேச ஊடகங்களில் முக்கிய இடம்பெற்ற ஒரு சில சம்பவங்களில் ஒன்று மே29-ல் 57 வயது பாக்தாத் பள்ளி ஆசிரியர் பர்கத் முஹமத் கினைசா சுட்டுக்கொல்லப்பட்ட நிகழ்ச்சி ஆகும். நைட்ரிட்டர் தந்த ஒரு தகவலின்படி, அந்த பெண் ஆசிரியை தனது காரை ஒரு போக்குவரத்து கட்டுப்பாட்டு வளையத்திற்கு அருகில் ஒட்டிவந்தபோது அவர் ஒரு தற்கொலை குண்டுவெடிப்பாளர் என்று கருதி அமெரிக்கத் துருப்புக்கள் சுட்டன. அவரது தலையில் குண்டுபாய்ந்த காரணத்தினால் ஐந்து நாட்களுக்குப் பின்னர் அவர் இறந்தார். ``இராணுவத்தினர் பரபரப்பு அடைந்தனர்`` என்று நைட்ரிட்டரிடம் லெப்டினட் கர்னல் டேவிட் பங்க் கூறினார்.

அந்த செய்தி நிறுவனத்திடம் தகவல் தெரிவித்த ஒரு ஈராக் போலீஸ் அதிகாரி அமெரிக்க இராணுவ விசாரணை தவிர தனியான விசாரணை எதுவும் நடக்காது என்று தெரிவித்தார். ``புலன் விசாரணையில் அமெரிக்கர்கள் சம்மந்தப்பட்டிருப்பார்களானால் நாங்கள் விசாரிப்பதில்லை. எங்களுக்கு அமெரிக்கர்கள் மீது எந்த அதிகாரமும் இல்லை.`` என்று குறிப்பிட்டார்.

ஆக்கிரமிப்பு தொடங்கியது முதல், அத்தகைய அமெரிக்க விசாரணைகள் குறித்து சிறிதளவு தகவல்கள் மட்டுமே பகிரங்கமாக வெளியிடப்படுகின்றன. அமெரிக்க இராணுவ நீதிமன்றங்கள் துஷ்பிரயோகம், சித்திரவதை மற்றும் ஈராக் சிவிலியன்கள் மரணம் தொடர்பாக வெகுசில இராணுவ வீரர்கள் மீது தாக்கல் செய்யப்படும் வழக்குகளிலும், உறுதியாக குற்றச்சாட்டுக்களை இரத்து செய்துவிடுகின்றன.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved