World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

A legal sham: first charges laid against Saddam Hussein

ஒரு சட்ட மோசடி: சதாம் ஹூசேனுக்கு எதிராக முதலாவது குற்றச்சாட்டுக்கள் அமைக்கப்பட்டுள்ளது

By Peter Symonds
20 July 2005

Back to screen version

பதவியிலிருந்து விரட்டப்பட்ட ஈராக் அதிபர் சதாம் ஹூசேனுக்கு எதிராக முதலாவது குற்றச்சாட்டுக்களை தாக்கல் செய்வது என்று ஜூலை 17-ல் முடிவு அறிவிக்கப்பட்டது, இந்த ஆண்டு பிற்பகுதியில், ஒரு அரசியல் நாடகம் என்று கூறத்தக்க விசாரணைக்கு ஆரம்பக் கட்டத்தை உருவாக்கியுள்ளது. ஆழமான பொதுமக்களது எதிர்ப்பு மற்றும் கடுமையான ஆயுதந்தாங்கிய கிளர்ச்சியை எதிர்கொண்டுள்ள அமெரிக்க அதிகாரிகளும், பிரதமர் இப்ராஹீம் அல்-ஜபாரி தலைமையிலான பொம்மை ஆட்சியும் ஹூசேனை விசாரணைக்கு உட்படுத்த முடிவு செய்திருக்கின்றனர், அது பொதுமக்களுடைய எதிர்ப்பை அச்சுறுத்தி அடக்கவும், பாத்திஸ்ட் சர்வாதிகாரத்தின் கீழ் மிகப்பெரும் அளவிற்கு துன்பத்தை அனுபவித்த ஷியைட் மற்றும் குர்திஸ் சமுதாயங்களின் ஆதரவை திரட்டுவதற்குமான இருவகை முயற்சியாகும்.

நியூயோர்க் டைம்ஸ் இப்படி செய்தியை வெளியிடுகிற அளவிற்கு அப்பட்டமான அரசியல் சதிகள் நடைபெற்றுள்ளன. "அழுத்தங்களின் ஒரு நீர்ச்சுழலை நாங்கள் எதிர்கொண்டோம், அது மிகவும் வெளிப்படையான அரசியலாகும் என்று நீதிமன்ற அதிகாரிகள் தெரிவித்தனர். டிசம்பரில், ஈராக்கியர்கள் ஒரு முழு ஐந்தாண்டுகால அரசாங்கத்திற்கு வாக்களிக்க தேர்தல்கள் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது, அதற்கு முன்னர், ஹூசேன் விசாரணையை சந்திக்க வேண்டுமென்று சில அதிகாரிகள் வலியுறுத்தி வருவதாக கூறினர். அவர்களது அனுமானம் என்னவென்றால், நீதிமன்றத்தில் ஹூசேனின் அட்டூழியங்களை விரிவாக மீண்டும் எடுத்துரைப்பது ஷியைட்டுக்களுக்கும், குர்திஸ் தலைவர்களுக்கும் பின்னால் மக்களது ஆதரவை உறுதிப்படுத்தவும், சுன்னி, அரபு கடினப்போக்கினரை தனிமைப்படுத்தவும் உதவுமென்று அந்த நீதிமன்ற அதிகாரிகள் கூறினர்."

ரயீது ஜுஹி 35 வயது நீதிபதி இந்த பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார், அவர் ஊடகங்களுக்கு கூறும்போது, 1982-ல் துஜெயில் ஷியைட் கிராமத்தில் 150-க்கு மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக ஹூசேன் விசாரிக்கப்படுவார் என்று கூறினார். முன்னாள் ஈராக் ஜனாதிபதி பிடிக்கப்பட்டதை தொடர்ந்து அமெரிக்க ஆக்கிரமிப்பு அதிகாரிகளால் 2003 டிசம்பரில் ஈராக் சிறப்பு நீதிமன்றம் ஸ்தாபிக்கப்பட்டு, அதன் தலைமை புலனாய்வு நீதிபதியாக ஜூஹி நியமிக்கப்பட்டார். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், ஹூசேன் தூக்குத் தண்டனையை எதிர் கொள்வார்.

வெளியில் தெரியாத துஜெயில் படுகொலையை தேர்ந்தெடுத்திருப்பது தற்செயலாக நடந்துவிட்டதல்ல. பாக்தாத்திற்கு வடக்கே சுமார் 80 கி.மீ அப்பாலுள்ள அந்த கிராமம் பெரும்பாலான சுன்னி பகுதிகளில் வாழ்கின்ற ஷியைட்டுக்களின் ஒரு சமுதாயமாகும், மற்றும் ஜாபரியின் சொந்த இஸ்லாமிய அடிப்படைவாத, தாவாக்கட்சியின் ஒரு கோட்டை என்று நீண்டகாலமாக கருதப்பட்டு வருகிறது. அந்தப் பகுதி வழியாக சதாம் ஹூசேனின் கார்கள் சென்ற நேரத்தில் 1982 ஜூலை 8-ல், பல தாவாக்கட்சியை சேர்ந்த துப்பாக்கி ஏந்திய நபர்கள் படுகொலை செய்ய முயன்றனர்.

ஷியைட் மக்களையும் அரசாங்கத்திற்கு-எதிரான கொரில்லா தாக்குதல்களில் ஈடுபட்டிருந்த தாவாக்கட்சியையும் அச்சுறுத்துகின்ற ஒரு முயற்சியாக துஜெயிலில் ஹூசேன் ஆட்சி கொடூரமான அடக்குமுறைகளை கையாண்டது. படுகொலை முயற்சி நடைபெற்று சிலமணி நேரத்திற்குள், ஹெலிகாப்டர் குண்டுவீச்சு விமானங்கள், அந்த கிராமத்தில் குண்டுகளை வீசி தாக்குதல்களை நடத்தின மற்றும் ஆண்கள், பெண்கள் குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கில் அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் கைது செய்யப்பட்டனர். இருபதுகள் கணக்கில் வீடுகள் அழிக்கப்பட்டன மற்றும் பயிர்கள் விளைந்திருந்த அதிகமான நிலமும் தோட்டங்களும் புல்டோசர்கள் மூலம் அழிக்கப்பட்டன.

சவுதி அரேபியாவின் எல்லையருகிலுள்ள பிரிட்டிஷார் கட்டிய ஒரு கோட்டையில் இருக்கும் நுக்ரா-அஸ்-சல்மான் சிறையில் மிகக்கொடூரமான சூழ்நிலைகளில் சுமார் 1500 கிராமவாசிகள் அடைக்கப்பட்டிருந்தனர். அரசாங்கத்திற்கு எதிரான குற்றங்களை புரிந்ததாக நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்ட 140-க்கு மேற்பட்ட ஆண்களும், சிறுவர்களும், 13 வயதான இளைஞர்களும் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஹூசேனின் ஒன்று விட்ட சகோதரரும் மற்றும் முன்னாள் புலனாய்வு தலைவர், பர்சான் டிக்கிரிடியும், முன்னாள் துணை ஜனாதிபதி, தாஹா யாசின் ரமதானும் மற்றும் துஜெயில் விசாரணையை நடத்திய நீதிபதியான முன்னாள் தலைமை நீதிபதியான அவாத் ஹமன் பந்தர் சதூனும், அந்த சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றனர்.

ஜாஃபரி மற்றும் தாவாக்கட்சி அதற்காக அழுத்தம் கொடுத்து வருகிறது, மற்றும் அரசியல் ரீதியாக சுரண்டிக்கொள்ள முடியும் என்று நம்புகிறது, எனவேதான் துஜெயில் படுகொலை தொடர்பாக குற்றச்சாட்டுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன, ஆனால், புஷ் நிர்வாகத்தின் ஒப்புதல் இல்லாமல் இந்த வழக்கு நடைபெற்றிருக்க முடியாது. ஜீஹி பெயரளவிற்கு இந்த விசாரணைக்கு பொறுப்பேற்றிருந்தாலும், வாஷிங்டன்தான் கட்டளையிடுகிறது என்பதில் எந்த சந்தேகத்திற்கும் இடமில்லை. ஈராக்கின் சிறப்பு நீதிமன்றத்திற்கு அமெரிக்க நீதித்துறை ஊதியம் வழங்குகிறது, மற்றும் ஒரு பெரிய அமெரிக்க வக்கீல்கள் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் அடங்கியகுழு, அமெரிக்க தூதரகத்தில் அமைந்துள்ள ஆட்சியின் குற்றங்கள் ஒருங்கிணைப்பு அலுவலகம் என்றழைக்கப்படுவதில் இடம் பெற்றுள்ளது. அந்த ஒருங்கிணைப்பு அலுவலகம், புஷ் நிர்வாகத்தால் நேரடியாக நியமிக்கப்பட்ட Greg Kehoe தலைமையில் இயங்கி வருகிறது.

புஷ் நிர்வாகத்தை பொறுத்தவரை, வேறுபல குற்றச்சாட்டுக்களைவிட, துஜெயில் படுகொலை மீது குற்றம் சாட்டுவது அரசியல்ரீதியாக பாதுகாப்பாக இருக்கக்கூடும். 1980 களின் கடைசியில் குர்துகள் ''இன சுத்திகரிப்பு செய்வதற்கு'' ஹூசேன் நடவடிக்கை எடுத்ததற்கு எதிராகவும், 1988-ல் ஹலாப்ஜா குர்திஸ் கிராமத்தில் இரசாயன புகைவீச்சு நடத்தியது தொடர்பாகவும், மற்றும் 1991 ஷியைட்டுகள் மற்றும் குர்துகளின் எழுச்சிகளின்போது, அவற்றை நசுக்குவதற்கு நடவடிக்கைகள் எடுத்தது தொடர்பாகவும், வழக்குகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த வாரம் ஈரான் அரசாங்கம் ஈரான்-ஈராக் போரை தொடக்கியதற்காகவும், ஹூசேன் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளது. ஆனால், இந்த வழக்குகள் அனைத்திலுமே, அமெரிக்காவின் கடந்தகால மற்றும் இன்றைய உயர் அதிகாரிகள் ஆழமாக உடந்தையாக செயல்பட்டிருக்கின்றனர்.

சிறப்பு நீதிமன்றத்தால் ஹூசேனுக்கு எதிராக தயாரிக்கப்பட்டுவரும் மிகப்பெரும்பாலான குற்றச்சாட்டுக்கள் அவரது ஆட்சி அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து ஆதரவு வளர்ந்து அனுபவித்த காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் சம்மந்தப்பட்டவை. 1970-களின் இறுதியிலும் 1980-களின் தொடக்கத்திலும் ஹூசேன் வலதுசாரி பக்கம் பெருமளவில் திரும்பிக் கொண்டிருந்த காலத்தில் வாஷிங்டனின் உறவுகள் சதாம் ஹூசேனோடு வலுப்படுத்தப்பட்டன, அப்போது ஈராக்கில் இடதுசாரி சக்திகள் மீது நடைபெற்ற தாக்குதல்கள் குறிப்பிடத்தக்கவை, மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இரத்தக்களரி ஒடுக்குமுறையை தொடர்ந்து 1979-ல் ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி அரசாங்கப் பதவிகளில் இருந்து தூக்கி எறியப்பட்டது.

முன்னாள் யூகோஸ்லாவிய ஜனாதிபதி சுலோபோடான் மிலோசேவிக்கைப் போன்று ஹூசேன் அவரது விசாரணையை அமெரிக்காவிற்கு சங்கடம் கொடுப்பதற்காக பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதை புஷ் நிர்வாகம் நன்றாகவே அறிந்திருக்கிறது. எடுத்துக்காட்டாக, அவர் அன்றைய ஜனாதிபதியின் சிறப்புத் தூதர், டொனால்டு ரம்ஸ்பெல்ட் பாக்தாத்திற்கு 1983 மற்றும் 1984-ல் ஈராக் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்திய பின்னரும் அந்த சர்வாதிகாரத்துடன் அமெரிக்க உறவுகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக மேற்கொண்ட இரண்டு விஜயங்களையும் அவர் நன்றாகவே அறிவார். ஈரானுடன் ஈராக் போரிட்டபோது அமெரிக்கா இராணுவ உதவி அளித்ததையும் மற்றும் ஈராக் மேற்கொண்ட இரசாயன மற்றும் உயிரியல் ஆயுத திட்டங்களில் உதவிய ஐரோப்பிய ஒன்றிய மற்றும் அமெரிக்க நிறுவனங்களின் விவரங்களையும் அவர் அறிந்தேயிருக்கிறார். ஏன் வாஷிங்டன் அந்த விசாரணை அமெரிக்காவின் உறுதியான கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் மாறாக சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்கு செல்லக்கூடாது என்று வலியுறுத்துகின்ற காரணங்களில் இந்த அரசியல் கண்ணி வெடிகளும் ஒன்றாகும்.

இந்த ஒட்டுமொத்த நிகழ்ச்சிப்போக்கில் நிலவுகின்ற பாசாங்குத்தனத்தை வலியுறுத்துகின்ற வகையில் ஈராக்கின் நீதி அமைச்சர் அப்துல் ஹூசேன் சாண்டல் சென்ற மாதம் அமெரிக்க அதிகாரிகள் சதாம் ஹூசேனை புலன் விசாரணை செய்வதற்கு ஈராக் மேற்கொண்டுள்ள முயற்சிகளை அமெரிக்கா தாமதப்படுத்தி வருவதாக குற்றம் சாட்டினார். "அவர்கள் மறைக்க விரும்புகின்ற ஏராளமான இரகசியங்கள் இருப்பதாக தோன்றுகிறது" என்று அவர் கூறினார்.

ஒரு ஆழமான களங்கமான நிகழ்ச்சிப்போக்கு

புஷ் நிர்வாகமும் பாக்தாத் ஆட்சியும் நீதி நிலைநாட்டப்படுகிறது என்று கூறிக்கொண்டிருந்தாலும் ஒட்டுமொத்த நடைமுறையும் ஆழமாக களங்கங்கள் அடங்கியது என்ற உண்மையை எவரும் மறைக்க முடியாது. பல குற்றங்களுக்கு ஹூசேன் பொறுப்பானவர் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. ஆனால் ஒரு நாட்டின் மீது (ஈரான்) படையெடுத்தார் என்பதற்காக, ஆயுதந்தாங்கிய கிளர்ச்சியை கொடூரமாக ஒடுக்கினார் என்பதற்காக, நிராயுதபாணிகளான சிவிலியன் மக்களுக்கு எதிராக கொலைவெறி பதிலடி நடவடிக்கை எடுத்தார் என்பதற்காக, நீதியை தடம்புரளச் செய்தார் என்பதற்காக அவர் மீது விசாரணை நடத்தப்பட வேண்டுமென்றால், இந்த குற்றங்கள் அனைத்திற்கும் தனது சட்டவிரோதமான படையெடுப்பு மற்றும் ஈராக்கை அடிமைப்படுத்தியதற்கான குற்றத்தை புஷ் நிர்வாகமும் செய்திருக்கிறது, மற்றும் அதன் மீதும் வழக்கு தொடரப்பட வேண்டும்.

துஜெயில் படுகொலை பற்றிய ஒரு விளக்கத்திலிருந்து பெயர்களையும் தேதிகளையும் நீக்கிவிடுவோமானால் அது ஈராக்கில் நடைபெற்றுள்ள எண்ணிறைந்த அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளை எளிதாக விளக்குவதாக அமையும். ஒரு இராணுவ கவச வாகனப்படை தாக்குதலுக்கு இலக்காகிறது, ஹெலிகாப்டர் குண்டு வீச்சு விமானங்கள் அந்த இடத்திலும் அருகாமையிலுள்ள புறநகர் பகுதிகளிலும் குண்டு வீசி தாக்குதல்களை நடத்துகின்றன, பலத்த ஆயுதந்தாங்கிய துருப்புக்கள் குழு நூற்றுக்கணக்கில் சந்தேகிக்கப்படும் ''பயங்கரவாதிகளை'' கொல்கிறது, அல்லது கைது செய்கிறது மற்றும் கைது செய்யப்பட்டவர்கள் சிறைகளில் எந்தவிதமான விசாரணையும் இல்லாமல் காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர் மற்றும் சித்திரவதை செய்யப்பட்டிருக்கின்றனர்.

துஜெயில் நடைபெற்ற அட்டூழியங்களின் அளவை மங்கச் செய்கின்ற அளவிற்கு ஒப்பு நோக்கும்போது அமெரிக்க இராணுவம் பல்லூஜாவை சிதைத்துள்ளது அதில் நூற்றுக்கணக்கான அப்பாவி சிவிலியன்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 3,00,000 மக்கள் அகதிகளாக மாற்றப்பட்டனர்.

மற்றொரு இணையான சம்பவமும் உள்ளது. துஜெயில் 143 ஆண்களையும் சிறுவர்களையும் கொல்வதற்கான விசாரணை அரசியல் நோக்கங்களுக்காக மோசடியாக ஜோடிக்கப்பட்டது அதன் உண்மையை அடிப்படையாக கொண்டுதான் ஹூசேன் மீதான அரசுதரப்பு வழக்கு நிற்கிறது. ஆனால் அதே குற்றச்சாட்டு ஹூசேன் விசாரணையிலும் உண்மையாக உள்ளது. அவர் மீது விரைவாக விசாரணை நடத்தப்பட்டு அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று அரசாங்க வட்டாரங்கள் ஒரு கூக்குரலை எழுப்பியுள்ளன. அவரது தரப்பு வக்கீல்கள் குழு திரும்ப திரும்ப அடிப்படை சட்ட நடைமுறைகள் பகிரங்கமாக மீறப்படுகின்றன என்று புகார்களை கூறி வருகிறது. தங்களது கட்சிக்காரரை பார்ப்பதற்கு அல்லது அவருக்கு எதிரான சாட்சியத்தை விசாரிப்பதற்கு அவர்களுக்கு எந்த அனுமதியும் கிடைக்கவில்லை. 2003 டிசம்பர் முதல் அவர்களது கட்சிக்காரர் இதுவரை எந்தவிதமான குற்றச்சாட்டும் தாக்கல் செய்யப்படாமல் எவருடனும் தொடர்பு கொள்ளமுடியாமல் சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார்.

அமெரிக்காவை தளமாகக்கொண்டுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு (HRW) 2003 டிசம்பரில் ஒரு நீண்ட ஆவணத்தை தயாரித்தது, அதில் சிறப்பு நீதிமன்ற அமைப்பு சட்டத்தில் பல பகுதிகள் சர்வதேச சட்டம் வகை செய்துள்ள தரத்தை நிலைநாட்ட தவறிவிட்டது என்று எடுத்துக்காட்டியுள்ளது. சிக்கலான மனித உரிமைகள் வழக்குகளை விசாரிப்பதற்கு தேவையான அனுபவம் அல்லது விசாரணை நடத்தும் நீதிபதிகள் சுதந்திரமான மற்றும் நடுநிலையாக செயல்படுபவர்கள் என்று அது உறுதியளிக்கவில்லை. சித்திரவதை மூலம் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்கள் செல்லாது என்று அது அறிவிக்கவில்லை, பதிலளிக்க மறுத்து அமைதியாக இருக்கும் உரிமையை உறுதி செய்து தரவில்லை, அல்லது குற்றம் நியாயமான சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட வகையில் நிரூபிக்கப்பட வேண்டும் என்பதற்கு உறுதி செய்து தரவில்லை.

மிக அடிப்படையாக, ஈராக் மீது அமெரிக்கா முற்றுகையிட்ட சட்டவிரோதமான தன்மை அந்த நீதிமன்றம் அமைக்கப்பட்டது சட்டபூர்வமானதுதானா? என்ற சந்தேகத்ததை எழுப்புகிறது. பிப்ரவரி மாதம் Al-Ahram Weekly-ல் ஹூசேனின் வக்கீல்கள் குழுவைச் சார்ந்த குர்திஸ் டோப்ளர் வெளியிட்ட விமர்சனம் வருமாறு: "ஈராக்கின் அதிபர் சதாம் ஹூசேன் தலைமையிலான ஈராக் அரசாங்கத்தின் எந்த ஒரு உறுப்பினர் மீதும் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டு விசாரணைக்கு நிறுத்தப்படும் முன்னர் ஈராக் மக்களுக்கு எதிராக அமெரிக்கா பலாத்காரத்தை பயன்படுத்தியதன் சட்டபூர்வமான நிலைகுறித்து ஒரு முடிவு செய்தாக வேண்டும். ஈராக்கியர்களுக்கு எதிராக ஆக்கிரமிப்பு செய்தவர்கள் அவர்களது நடவடிக்கைகளுக்கு பொறுப்பு சாட்டப்படும் முன்னர் ஈராக்கின் மக்கள் தலைவர்களை விசாரணைக்கு உட்படுத்துவது படுமோசமான பழிவாங்கும் நடவடிக்கையாகும். இந்த பழிவாங்கும் நடவடிக்கை சர்வதேச சட்டத்தை மீறுவதாகவும் வரும் பல தசாப்தங்களில் சட்டத்தின் ஆட்சியை கடுமையாக எள்ளி நகையாடும் வகையிலும் சேதப்படுத்துவதாக அமைந்திருக்கிறது".

அதன் ஆக்கிரமிப்பு செயலை நியாயப்படுத்துவதற்கு தான் கூறி வந்த அனைத்து பொய்களையும் பாதுகாத்து நிற்பதைத்தான் புஷ் நிர்வாகம் தனது இறுதிக் கடமையாகக் கொண்டிருக்கிறது. இந்த விசாரணை பாக்தாத்தில் நடக்கும் என்று வற்புறுத்துவதால் வெள்ளை மாளிகை அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு ஒரு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்காக ஆகாதவாறு உறுதி செய்து கொண்டுவிட்டது. ஜாபரி அரசாங்கத்தில் இடம் பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளும் ஈராக்கை அமெரிக்கா அடிமைப்படுத்தியதில் உடந்தையாக செயல்பட்டிருக்கின்றன மற்றும் ஒட்டுமொத்த ஈராக் நீதிமன்ற முறையும் கவனமாக சோதனையிடப்பட்டிருக்கிறது. ஹூசேனின் வக்கீல்கள் அனுமதிக்கப்பட்டு அந்த நீதிமன்றத்தின் அதிகார வரம்புகளை பற்றி கேள்விகளை எழுப்புகின்ற நேரத்தில் அந்த கேள்விகள் முறையானவை அல்ல என்று நீதிபதிகள் அறிவித்துவிடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

இந்த கங்காரு நீதிமன்றம் அமைக்கப்பட்டிருக்கின்ற அப்பட்டமான முறையை அமெரிக்க ஆக்கிரமிப்பை நெருக்கமாக ஆதரிப்பவர்களும் ஆட்சேபித்துள்ளனர். வாஷிங்டன் அடிப்படை ஜனநாயக உரிமைகளை நசுக்குகிறது என்பது தொடர்பாக ஈராக்கிலும் மத்திய கிழக்கு முழுவதிலும் ஏற்கனவே ஒரு பரவலான சந்தேகமும் வெறுப்பும் உருவாகியுள்ளது. ஹூசேன் வழக்கு பரவலாக ஒரு நாடக விசாரணை என்று சரியாக கருதப்படுகிறது. எனவே அதன் விளைவு ஒரு அரசியல் பேரழிவாக ஜாபரி நிர்வாகத்திற்கு அமையுமே தவிர அதற்கு ஒரு வெற்றியாக அமையாது. இந்த நீதிமன்ற விசாரணைகள் தொடர்பாக ஈராக்கின் இறையாண்மையை வலியுறுத்தும் ஒரு பயந்தாங்கொள்ளி முயற்சியாக, இந்த வாரம் இடைக்கால தேசிய நாடாளுமன்றத்தின் துணைத் தலைவரான ஹூசேன் ஷாரிஸ்ட்டானி இந்த விசாரணைகள் தொடங்குவதற்கு முன்னர் சிறப்பு நீதிமன்றத்தை சட்டபூர்வமான அமைப்பாக மாற்றுவதற்கு ஒரு சட்டத்தை நாடாளுமன்றம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அமெரிக்காவிலிருக்கும் சர்வதேச சட்டநிபுணர் எம். ஷெரீப் பசெளரி ஜாபரிக்கு விடுத்த ஒரு நினைவூட்டுக் கடிதத்தில் கடுமையான செய்தி ஒன்றை அனுப்பியிருக்கிறார் மற்றும் அது இந்த மாதம் வெளியுறவுக்கொள்கை வலைத் தளமான foreignpolicy.com-ல் வெளியிடப்பட்டிருக்கிறது. ஈராக்கின் சட்டக்கல்வியை மறுசீரமைப்பதில் பசெளரி சம்மந்தப்பட்டிருக்கிறார். அதிக நம்பகத்தன்மையுள்ள மேல்பூச்சை இந்த நீதிமன்றத்திற்கு உருவாக்குவதற்கு பல ஆலோசனைகளை சொல்லியிருக்கிறார் மற்றும் அவர் எச்சரித்துள்ளார்: "துரதிருஷ்டவசமாக சதாம் மற்றும் அவரது நண்பர்கள் மீது நடத்தப்பட்டு வருகின்ற விசாரணைகள் ஈராக் மக்களுக்கும் மற்றும் பரவலான அரபு மற்றும் முஸ்லீம் உலகங்களுக்கும் சட்டபூர்வமற்றவை என்று தோன்றுகின்ற ஒரு கடுமையான ஆபத்தில் சிக்கிக்கொண்டிருக்கிறது. சதாம் மீதும் இதர ஆட்சியின் உயர் அதிகாரிகள் மீதும் விசாரணை நடத்தவிருக்கின்ற ஈராக் சிறப்பு நீதிமன்றம் கடுமையான சட்ட, அரசியல் மற்றும் மக்கள் தொடர்பு குறைபாடுகளை கொண்டவை. அரபு வரலாற்றில் மிக முக்கியமானதாக கருதப்படக்கூடிய ஒரு வழக்கு இப்போது ஒரு அமெரிக்க நாடக வழக்கு மற்றும் வென்றவர் வழங்குகின்ற நீதி என்ற அளவினையும் விட அதிகமாகிவிட்டது."


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved