World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கலை விமர்சனம்

ஷிணீஸீ திக்ஷீணீஸீநீவீsநீஷீ மிஸீtமீக்ஷீஸீணீtவீஷீஸீணீறீ திவீறீனீ திமீstவீஸ்ணீறீ 2005றிணீக்ஷீt 1

What should be encouraged

சான் பிரான்சிஸ்கோ திரைப்பட விழா 2005 -- பகுதி 1

எது ஊக்குவிக்கப்பட வேண்டும்

By David Walsh
10 May 2005

Back to screen version

ஏப்ரல் 21ல் இருந்து மே 5 வரை சான் பிரான்சிஸ்கோவோவில் நடைபெற்ற திரைப்பட திருவிழாவை பற்றிய தொடர் கட்டுரைகளில் இது முதலாவது ஆகும்.

சமீப ஆண்டுகளில் நான் பார்த்த மிகச் சிறந்த உருக்கமான படங்களுள், மலேசியாவின் இளவயது இயக்குனரான தீபக் குமரன் மேனனுடைய செம்மண் சாலையும் (The Gravel Road ) ஒன்றாகும். அண்மையில் கீழ்க்காணும் கேள்வியை எழுப்புவதற்கு தக்க ஆதாரங்கள் உள்ளன: உணர்வளவிலோ, நாடக முறையிலோ எந்தத் தவறான போக்கையும் காட்டாத, சரியான முறையில் புகைப்படக் கருவியை பயன்படுத்தி, மிகத் துல்லியமான உணர்வுகளை வெளிக் கொண்டுவருதல், அநேகமாக பிழையில்லாத வகையில் பாத்திரங்களை (பெருந்தேர்ச்சி இல்லாதவர்களுடையது கூட) படம் பிடித்தல், சமூக, தேசிய அடக்குமுறைக்கு எதிராக உள்ளார்ந்த, தொடர்ந்து, ஆழ்ந்து உணரப்பட்ட பாங்குகளை கொண்டுள்ள படம் வந்துள்ளதா? என்பதே அது. அத்தகைய படம் இருக்கிறது. இது வெளிவந்தது பற்றி மகிழச்சி அடையவேண்டியதுதான்.

இது ஒன்றும் உலக சினிமாவின் அனைத்து முடிவும் ஆகிவிடாது. ஒப்புமையில் இது ஒரு சிறிய திரைப்படம், நினைவில் ஆழ்ந்து நின்றதுடன், ஒரு குறிப்பிட்ட இடம், காலம் (1960களில், ஒரு மலேசிய இரப்பர் தோட்டம்) பற்றிய ஒரு மறு உருவாக்கமாக இருந்தது. ஒருவேளை இன்னும் பேரவாவுடன் தற்காலத்திய பிரச்சினைகளை எடுத்துக் கொண்டால் இயக்குனர் தடுமாற்றம் அடையக்கூடும். யார் கண்டது? பொறுத்திருந்து பார்ப்போம். இதற்கிடையில் செம்மண் சாலை அளிக்கும் (கொடுக்கும்) களிப்பு உள்ளது. இக்கடின காலத்தில் தேவைக்கு மேல் பேராசைப்பட வேண்டாம்.

மேனன் (1979ல் கோலாலம்பூரில் பிறந்த) கொடுத்துள்ள ஒரு பேட்டியின்படி, மலேசிய மக்கட்தொகையில் இந்தியர்கள் 8 சதவிகிதத்தினராக உள்ளனர்; அவர்களில் நான்கில் மூன்று பங்கினர் தமிழ் பேசுவபவர்கள். "1940 களில் பிரிட்டிஷார் இந்தியர்களை மலேசியாவிற்கு, இரப்பர் தோட்டங்களில் வேலைக்காக கொண்டுவந்தனர். சீனர்கள் தகரச் சுரங்கங்களுக்காக அழைத்துவரப்பட்டனர். அவர்கள் தகரச் சுரங்கங்களைவிட்டு நீங்கி பல காலமாகிவிட்டது. அவர்கள் நாட்டின் பொருளாதார சக்தியை கட்டுப்படுத்துகின்றனர். மலேய்காரர்கள் நாட்டின் அரசியல் அதிகாரத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுள்ளனர். இந்தியர்கள் எவ்விதத்திலும் சமுதாயத்தில் இணைந்திருக்கவில்லை" என்று மேனன் விளக்கினார்.

அவர் தொடர்ந்தார்: "உண்மையில், மலேசியாவில் இந்தியர்களை பொறுத்தவரை, எதிர்மறையான புள்ளிவிவரங்கள்தாம் நிறைய உள்ளன. குற்றவிகிதங்கள் எங்களிடையே அதிகம், பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்துவது போன்றவை அதில் அடங்கும். Google இல் இந்தியப் புள்ளிவிவரம் பற்றிக் கேட்டால், இவற்றை நீங்கள் காணலாம்."

"ஒரு பாட்டும், நடனமும் இல்லாத இந்தியப் படம்" என்று அதன் விளம்பரத்தை நகைச்சுவையுடன் விவரித்துள்ள இப்படம், இந்திய தோட்டத் தொழிலாளர்களுடைய பங்களிப்பு, கஷ்டங்கள் ஆகியவற்றிற்கு ஒரு முகத்தையும், கெளரவத்தையும் கொடுக்க முற்பட்டுள்ள வகையில் ஒரு பகுதி முயற்சியாகும். இந்த வழிவகையில், இன்னும் கூடுதலான வகையில் இதில் பிரபஞ்சத் தன்மையும் (பொதுவாகப் பொருந்தும் தன்மை) வெளிப்பட்டுள்ளது.

இதன் மையமாக ஒரு குடும்பம் உள்ளது. படத்தயாரிப்பாளரின் தாயாருடைய அனுபவத்தை அடிப்படையாக செம்மண் சாலை கொண்டுள்ளது. உண்மையில், அவரது தாயார்தான் வசனத்தை எழுதினார்! அதைக் "கூடுதலான நம்பிக்கை தரும் வகையில்" அவருடைய கதையில் சில முக்கியமான மாற்றங்களை இயக்குனர் செய்தார். ஆனால் அவரே அதைப் பின்னர் விளக்குவார்.

ஒரு இரப்பர் தோட்டத்தில் தன்னுடைய பெற்றோர்களுடனும், மூன்று சகோதரிகள், ஒரு தம்பியுடனும் சாந்தா வசித்து வருகிறார். அவளுடைய சிற்றப்பா, லாரி ஓட்டுபவரான தேவன் என்பவரும் மகிழ்ச்சியுடன் இருக்கும் தன்னுடைய நண்பர் ஒருவருடன் கதையில் பங்கைக் கொண்டுள்ளார். அவளது வீட்டிற்கு அண்மையில் அமைதியுடன் இருக்கும் நாராயண் என்பவர், ஒரு பணி ஆர்வம் மிகுந்த ஆசிரியர், இவளை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார். ஒரு முறை இவர் கரும்பலகையில், "உறுதியுடன் எவன் செயல்படுகிறானோ, அவன் தன்னுடைய இலக்குகளை அடைவான்" என்று எழுதிவைக்கிறார். சாந்தா இதை ஆர்வத்துடன் எடுத்துக் கொண்டு, ஒரு பல்கலைக் கழகத்தில் படிக்க விரும்புகிறாள். அவளுடைய பின்னணியில் இப்படி ஒருவரும் கேள்விப்பட்டே இருக்க முடியாது.

குடும்பத்தின் நிதிநிலைமை மோசமடைகிறது. பெற்றோர்கள் இருவருமே அதிகப்படியான வேலைகளை செய்ய வேண்டியுள்ளது. சாந்தா நெடுநேரம் படிப்பில் மூழ்குகிறாள். நாராயண் அவளை நயத்துடன் தொடர்கிறார். "நீ பெரியவளாக வளர்ந்த பின்னர், என்னை மறந்து விடுவாயோ?" என்று கேட்கிறார். பெரும் வியப்புடன் இவள் பதில் கூறுகிறாள் "நீங்கள் இல்லாமல் நானா?:" அட்சி என்னும் சீனத் தையற்காரப் பெண்மணியிடம் ஒரு வேலையைப் பார்த்துக் கொண்டு அவள் குடும்பத்திற்கும் உதவியாக இருக்கிறாள். தனக்குத் தெரிந்தது குறைவுதான் என்று சாந்தா விளக்குகையில், அந்தப் பெண்மணி கூறும் பதில், "அப்படியானால் உனக்கு ஊதியமும் குறைவுதான்."

வரதட்சிணைப் பணம் (ஏற்பாடு செய்து நடக்கும் திருமணங்களில் கொடுக்கப்படும்) சாந்தாவின் மூத்த சகோதரிக்காக சேகரிக்கப்பட வேண்டும். தாயார் தன்னுடைய நகைகளை விற்றுவிடுமாறு யோசனை கூறுகிறார். தந்தையார் சைக்கள் ஓட்டும் போது விபத்து ஏற்படுகிறது; பெற்றோர்களின் ஒரே மதிப்புடைய சொத்தான நகைகள் திருட்டுப் போய்விடுகின்றன அல்லது காணாமற் போய்விடுகின்றன. ஒரே காட்சி: அவர்களுடைய சிறிய அறையில், தந்தையார் படுக்கையில் படுத்திருக்கிறார். இவள் அதில் அமர்ந்திருக்கிறாள். அந்நிலைமையின் மனவலியை வெளிப்படுத்துவதற்கு சொற்கள் தேவை இல்லை.

சாந்தா பள்ளி செல்வது பற்றி அழுத்தங்கள் வருகின்றன. எல்லோரும் கேட்கிறார்கள்: இவள் படித்தது போதாதா? அவளுடைய தகப்பனார் அவளுக்கு ஆதரவாகக் கூறுகிறார்: "அவள் விருப்பப்படி அவள் செய்யட்டும்." யாரோ அவரிடம் கூறுகிறார்கள்: "கோபமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்களுக்கு ஒரே ஒரு பையன்தான் இருக்கிறான். வயதான காலத்தில் உங்களை காப்பாற்றுவான்." ஆசிரியர் பல்கலைக் கழகத்தில் சேர ஒரு விண்ணப்ப படிவத்தை கொண்டுவருகிறார். நெருக்கடி முற்றுகிறது. சாந்தாவின் தாயார் அவள் படித்தது போதும் என்று கூறுகிறார். அதற்குப் பெண் பதில் கூறுகிறாள்: "என்னுடைய கனவுகளை நான் மறக்கவேண்டும் என்று சொல்லுகிறாயா? நீங்கள் ஏன் இவ்வளவு குழந்தைகளை பெற்றீர்கள்? [அதாவது இத்தனை பேருக்கு உணவளிக்கும் நிலையில் இருக்க வேண்டும்?]. பெரும் அதிர்ச்சிக்குட்பட்ட வயதான பெண்மணி விஷத்தை அருந்துகிறார்; ஆனால் பின்னர் பிழைத்து விடுகிறார். பெண் தன்னை பற்றித்தான் கவலை கொள்ளுவதாகக் கூறப்படுகிறாள். அதை அவள் மறுத்து, "நான் இந்த தோட்டக் குழந்தைகளை என்னைப் போல் கற்றவர்களாக ஆக்குவேன்." அந்த இரப்பர் தோட்டத்தில் இருந்து பல்கலைக் கழகம் செல்லும் வாய்ப்புப் பெற்ற பெண் அவள் ஒருத்திதான்.

ஒரு சாலை விபத்தையொட்டி, நெருக்கமானவர்களை பெருந்துன்பம் தாக்குகிறது; அவளுடைய சிற்றப்பாவும் சற்று பொறுப்பை ஏற்றுக் கொள்ளுகிறார். தன்னுடைய படுக்கையில் துவண்டு விழுந்து சாப்பிடக் கூட அவள் மறுக்கிறாள். இப்பொழுது அவளுடைய தாயார் வந்து கூறுகிறாள்; நீ உன்னுடைய படிப்பை தொடர். அதற்கு அவள் பதில் கூறுகிறாள். "எனக்குப் பெரும் வருத்தமாக இருக்கிறது; என்னால் படிக்க இயலாது." மூத்த சகோதரி சாந்தாவிற்கு அவளுடைய திருமணத்திற்கான பணத்தை கொடுத்து விளக்குகிறார்: "எனக்கு திருமணத்தில் விருப்பம் கிடையாது. எனக்கு வேறு ஒருவரிடத்தில் ஈடுபாடு உண்டு."

இறுதியில் பல்கலைக் கழகத்தின் முழு உதவித் தொகையுடன் கல்வியைத் தொடர சாந்த முடிவெடுக்கிறாள். அவளுடைய கடைசி சகோதரி பெரும் அதிர்ச்சிக்குள்ளாகிறாள். "உன்னுடன் என்னை அழைத்துச் செல்வேன் என்ற உறுதிமொழியை முறித்துவிட்டாய்." "நான் படித்து முடித்துவந்து உன்னை அழைத்துச் செல்வேன்." "உறுதியாகவா?". "உறுதியாக." கடைசிக் காட்சியில், தூரத்தில் இருந்து எடுக்கப்பட்ட காட்சியில் அவள் பள்ளிக்குப் புறப்படுகிறாள்; குடும்பத்தினர் தங்களுடைய சிறிய வீட்டிற்கு வெளியே நிற்கிறார்கள். சிறுமி இவளிடம் ஓடிவருகிறாள். ஒரு தழுவல். அவள் புறப்படுகிறாள்.

செம்மண் சாலையில் அற்புதமான கணங்கள் உள்ளன. கடைசிப் பெண் "கோரமான வாத்துக் குஞ்சின்" கதையை தன்னுடைய தந்தைக்கு ஆங்கிலத்தில், அவர் சைக்கிள் ஓட்டி வரும்போது, முன்னால் உட்கார்ந்தபடி, கூறுகிறாள் (அதில் பாதியையேனும்). சிற்றப்பனோ, சத்தமில்லாமல், ஒருவருக்கும் தெரியாமல் ஒரு புதிய ஓடுவதற்கு உதவும் காலணிகளை தன்னுடைய தூங்கிக் கொண்டிருக்கும் அண்ணன் பெண்களில் ஒருவருக்கு அருகில் வைத்துவிடுகிறார்; அவளோ முன்பு ஓட்டப்பந்தயத்தில் வெறும் கால்களுடன் ஓடியதில் பாதங்களில் இரத்தக் கசிவைக் கொண்டவள். அந்தத் தீய விபத்திற்கு பின்னர் அதே நபர் துக்கத்தை அடக்கிக் கொள்ள முடியாமல் குடும்பத்தின் சமையலறையில் பெரும் ஏக்கத்துடன் உட்கார்ந்து கொள்ளுகிறார். சாந்தா ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை; ஆனால் அவருக்கு ஒரு கண்ணாடித் தம்ளரில் நீரை ஊற்றுகிறாள்; இது மன்னிப்பும் சமரசமும் இணைந்த செயலாகும்.

பெரிதும் நினைவு வைத்துக் கொள்ளக் கூடிய பாத்திரமாக சீனத் தையற்காரி அட்சி உள்ளார். வாடிக்கையாக, கடுமையாக வேலை வாங்கும் முதலாளிபோல் அவர் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாறாக, அவளுடைய வாழ்க்கையும் கஷ்டங்கள் நிறைந்து, கடின உழைப்பின் ஆதிக்கம் மேலோங்கி நிற்பதுதான் தெரிய வருகிறது. தைக்கும் போதே அவர் பாடவும் செய்கிறார்; பாடல்கள் தொலை தூரத்தில் எங்கோ நிகழ்பவை, அழகுடையவை பற்றியதாக உள்ளன. சாந்தா வேலையைவிட்டு விலகும்போது, அட்சி கடைக்குள்ளே சென்று அவளுக்கு ஒரு ஆடையையும், ஒரு போனஸ் பணத்தையும் கொடுக்கிறார். "நன்றாகப் படி" என்பதுதான் அவள் சொல்லுவதெல்லாம். நமக்குப் புரிகிறது, அவள் என்ன கூறவருகிறாள் என்று; உன்னுடைய வாழ்வு என்னுடையதைவிட மாறுபட்டு இருக்கப்போகிறது. நமக்கு நெஞ்சத்தில் கனக்கிறது. இவ்வளவையும் ஒரு 25 வயதிற்குள் எப்படி ஒருவரால் அறியமுடிந்துள்ளது; நம்முடைய 40, 50 வயதுள்ள அமெரிக்க இயக்குனர்கள் எவருக்கும் எதையும் பயன்படும் வகையில் சொல்லிக் கொடுக்கவோ, கற்றுக் கொள்ளவோ முடியவில்லையே?

உண்மையில் இன்று உலகெங்கிலும் திரைப்படக் கலைஞர்களில் பொரும்பாலானோர் தங்கள் பணியில் ஒரு வீழ்ச்சியில்தான் உள்ளனர்: தன்னைப் பற்றி மனிதகுலம் மேம்பாடு கொள்ளும் வகையில் அறிந்து கொள்ளவும், வாழ்வினை அர்த்தமுடையதாக்கவும் சமூக, உளவியல் உண்மையை அப்பட்டமாக வெளிப்படுத்துதலில் வீழ்ச்சிதான் உள்ளது. பணிக்கும் பணத்திற்கும் முற்றிலும் ஈடுபாட்டைக் கொள்ளுதல் என்பது தற்காலத்திய திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு உள்ள ஒரே பொறி அல்ல; தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளுதல், மிகச் சாதாரண விஷயத்தை ஆழ்ந்து தொடர்தல் அல்லது முழுமையான அறியாமை என்பது பலரையும் மிகவும் தாழ்த்தியுள்ளது.

மேனனுடைய உள்ளுணர்வுகள் நேர்த்தியானவை. முழு உளச்சான்றுடன், நெருக்கமாக, நல்ல உணர்வுடன் கூட வாழ்க்கையை நடத்துவதுடன் அதைப் பிரதிபலிக்கவும் செய்கிறார். மேலும், திரைப்படத்தில் கூடுதலாக காட்டப்பட முடியும், முயற்சி கூடுதலாக மேற்கொள்ளப்பட முடியும்; ஆனால் எது செய்யப்பட்டுள்ளதோ, அது ஒன்றும் குறைவானது அல்ல. ஒரு தொழிலாள வர்க்கக் குடும்பத்தின் வாழ்வு, சமூக சூழ்நிலை, வரலாற்றில் ஒரு கணம், ஆகியவை விரிவாக, அக்கறையுடன், பரிவுணர்வுடன், ஆராயும் கண்களுடன், உண்மையான கலையுணர்வுடன் படைக்கப்பட்டுள்ளன. இது ஒரு சிறிய விஷயம் அல்ல. நிச்சயமாக இக்காலத்தில் சிறு விஷயம் அல்ல. ஸ்காண்டிநேவியா மற்றும் பிரிட்டனில் உதாரணத்திற்கு அரைகுறை வெறித்தனத்துடன் அடக்கப்பட்டவர்களை பற்றி எடுக்கும் படங்களுக்கும் இது ஒரு விடையாக இருக்கிறது; அத்தகைய படங்கள் படம் பார்ப்பவரை இயக்குனரின் சிதைவுப் பார்வை, இறுக்கமான தன்மையை தவிர வேறு எதையும் பார்ப்பதற்கோ, உணர்வதற்கோ விடுவதில்லை.

ஒவ்வொரு படைப்பும் கோட்பாட்டு வாதத்தை கொண்டுள்ளதாகும்; இப்படைப்பும் இன்று தீவிரமாக கருதப்படாத உயிர்களை பற்றி தீவிரமான அணுகுமுறை வேண்டும் என்று வாதிடுகிறது. அதற்கும் மேலாக, சாந்தா இரப்பர் தோட்டத்தை விட்டு அகலுவேன் என்று உறுதிபடக் கூறுதல் சித்தரிக்கப்பட்டுள்ளது, அது அத்தகைய குறுகிய, அடக்கப்பட்ட நிலைமையின் தூண்டுதலுக்கு எதிர்ப்புக் காட்டும் தன்மையாகும். அவள் பல்கலைக்கழகத்திற்கு செல்லுகிறாளா இல்லையா என்பது இரண்டாம் பட்சம்; எது முக்கியம் என்றால் காட்டப்படும் வாழ்க்கை, அதன் பெருந்துன்பம், அதன் சிக்கல்கள் ஆகியவைதான். இயக்குனர் இவற்றை வெளிக் கொணர்வதில் வெற்றியடைந்துள்ளார்.

எங்களுடைய பேட்டியில் தன்னுடைய தாயாரின் வாழ்க்கை, கதையில் தான் ஏற்படுத்திய மாறுதல்களை பற்றி மேனன் விளக்கினார். "அம்மா ஒரு இரப்பர் தோட்டத்தில் இருந்தவர். அவருடைய வாழ்வின் ஒரு பகுதியை நான் மாற்றவேண்டியிருந்தது. உண்மை வாழ்வில் அவரால் பல்கலைக்கழகத்திற்கு செல்ல இயலவில்லை. அவர் இரப்பர் தோட்டத்திலேயே நிரந்தரமாக தங்கிவிட்டார். ஆனால் அவருடைய சாதனை, அவருடைய மனத்திலேயே எப்படியும் தன்னுடைய குழந்தைகள் அனைத்தும் பல்கலைக் கழகத்திற்கு செல்லவேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததுதான். என்னுடைய சகோதரிகளும் நானும், அனைவருமே கல்லூரிப் பட்டம் பெற்றவர்கள். நான் தலைமுறைகளை குறுக்கிக் காட்டியுள்ளேன். இதை ஒரு தொலைக்காட்சி தொடராகவும் செய்யமுடியவில்லை" என்று குறும்புடன் சிரித்துக் கொண்டு அவர் கூறினார்.

அவர் தொடர்ந்தார்: "ஆனால் கூடுதலான நம்பிக்கை தரும் வகையில் படம் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அதைத்தான் நான் உண்மையில் மனத்தில் கருதியிருந்தேன். இந்திய வாழ்வின் மாறுபட்ட ஒரு பகுதியை, மலேசிய சமூகத்திற்கும் இப்படத்தை பார்க்க விரும்பிய மற்ற எவருக்கும், நான் வழங்க விரும்பினேன்."

பார்த்தால் தன்னலம் போல் இருக்கும் சாந்தா தன்னுடைய பல்கலைக் கழக படிப்பை தொடர்வது பற்றிய எண்ணப் பிரச்சினையை நாங்கள் விவாதித்தோம். இயக்குனர் கூறினார்: "இப்பிரச்சினைகளை பற்றி நான் கூறவேண்டியதாயிற்று; ஏனெனில் தோட்டத்து சமூகம் ஒரு தனிச் சமூகமாகும். தோட்டத்தைவிட்டு நீங்கிச் செல்லுவது சரியென ஏற்கப்படவில்லை. தோட்டத்து மக்கள் பலரையும் நான் நிறைய பேட்டி கண்டுள்ளேன். சிலர் தங்கள் வாழ்வைப் பொறுத்தவரையில் மகிழ்ச்சியுடன் உள்ளனர். மற்றவர்கள் அங்கிருந்து நீங்கிவிடவேண்டும் என்று நினைக்கின்றனர்; வெளியேறுவதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்காதா என விரும்புகின்றனர். இவ்விஷயங்களை நான் சமச்சீர் படுத்த வேண்டியதாயிற்று."

நான் கூறினேன்: "இது ஒரு நயமான பிரச்சினை. தொழிலாள வர்க்கத்தில் இருந்து எவரேனும் அப்படியே பல்கலைக் கழகத்திற்கு, மற்றவர்களை மறந்துவிட்டு, செல்கிறார்களா? இப்பெண் கூறுகிறாள், 'நான் மீண்டும் வந்து இங்கு இருக்கும் குழந்தைகளுக்கு கற்பிப்பேன்.'

"மேனன் குறிப்பிட்டார், "என்னுடைய தாயர் ஒரு தமிழ்ப் பள்ளி ஆசிரியை; வாழ்நாள் முழுவதும் ஆசிரியையாகவே இருந்தவர். அவர் அதைத்தான் விரும்பினார். மற்றவர்களுக்கு உதவி செய்வார். தன்னுடைய மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கு பலவிதத்திலும் உதவியுள்ளார். அவருடைய பழைய மாணவர்கள் பலரை நான் சந்தித்துள்ளேன்; அவருக்கு கல்வியை பற்றிய தீவிர ஆர்வம் உண்டு."

"இந்தப் பெண் சுயநலவாதியே அல்ல என்பது தெளிவு." என்று நான் குறிப்பிட்டேன்.

இயக்குனர்: "ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சற்று தன்னலம் உடையவளாக அவள் தோற்றம் அளிக்கிறாள்; ஆனால் பிறருக்கு உதவ வேண்டும் என்றால், முதலில் உங்களுக்கே உதவிக் கொள்ள வேண்டும். நான் பல்கலைக் கழகத்தில், கோலாலம்பூரில் multi-media பற்றிக் கற்பிக்கிறேன். ஒதுக்கீடு முறை இருப்பதால் இந்தியர்கள் பல்கலைக்கழகத்தில் பயில்வது மிகவும் கடினமாக உள்ளது. அது ஒரு பெரும் சவாலாகும். எங்கள் துறையில் நான்தான் முதல் இந்திய ஆசிரியர். ஒரு இந்திய மாணவன் கூட என்னுடைய வகுப்பில் இருப்பது மிகவும் அரிது. 12 வயதிற்குப் பின்னர் இந்தியர்கள் என்ன செய்கிறார்கள்? அவர்கள் 12 வயதை அடைகிறார்கள்; அதற்குள்ளேயே இடைநிலைப்பள்ளிப் படிப்பை முடிப்பது அவர்களுக்கு கடினமாக உள்ளது. அவர்களில் பலரும் முடிப்பதும் இல்லை; அதற்கு நாட்டை விட்டு வெளியேறவேண்டும், இல்லாவிடில் செல்வந்தர்களாக இருக்க வேண்டும்.

"இந்திய சமூகத்திற்குள்ளேயே செல்வந்தருக்கும், ஏழைகளுக்கும் இடையே மிகப் பெரிய இடைவெளி உண்டு. இப்பிளவு பெரிதும் வெளிப்படையானதுதான். உண்மையில் பணக்காரர்களை நீங்கள் காணலாம், உண்மையிலேயே பெரும் செல்வந்தர்கள், ஜவுளி வணிகர்கள், மற்றவர்கள், கோலாலம்பூரிலேயே பெரும் சொத்து அவர்களுக்கு உண்டு; ஆனால் உண்மையிலே பரம ஏழைகளையும் நீங்கள் காணலாம்: இன்னும் இரப்பர் தோட்டங்களிலும், கோலாலம்பூர் புறநகரப் பகுதிகளில் எதையும் அவர்களால் சாதிப்பது என்பது முடியாது.

நான் அட்சியைப் பற்றிக் குறிப்பிட்டேன்: "இது ஒன்றும் ஒரு தேசியவாத படம் அல்ல. சீனப் பெண்மணியின் பாத்திரப்படைப்பு மிக அருமை என்பது என் கருத்து. மிகவும் குறிப்பிடத்தக்க பாத்திரங்களுக்குள் அவளும் ஒருத்தி. பெண்ணுக்கு அவள் விடை கொடுத்தது..."

அவர் விடையிறுத்தார்: "மலேசியாவில் இருக்கும் சீனர்கள் எப்பொழும் கல்விக்கு போராடியவர்கள் ஆவர். எதை வேண்டுமானாலும் தொந்திரவிற்கு உட்படுத்துங்கள்; பள்ளிகளுக்கு தொல்லை கொடுக்காதீர்கள். சீனர்கள் கல்வியைப் பற்றிப் பெரும் ஆர்வம் உடையவர்கள்; அப்படி பயில விரும்புவர்களுக்கு அவர்கள் எப்போதும் ஆதரவைக் கொடுப்பவர்கள். அவள் பாடிக் கொண்டிருக்கும் காட்சி நினைவிருக்கிறதா? பாடலும், ஆடலும் கூடாது என முயன்றேன்; ஆனால் அதைக் காட்ட வேண்டியதாயிற்று."

நான் இனவழி போன்ற ஒரேமாதிரியான கருத்துக்களைப் பற்றிக் குறிப்பிட்டேன்.

"ஒரே மாதிரித் தன்மை ... சரி, நான் படவினியோகஸ்தரிடம் படத்தை அனுப்பினேன்; முதல் ஐந்து நிமிஷங்கள், இருள் சூழ்ந்தவை, அவர்கள் கற்பழிப்புக் காட்சி வரும், அப்படிப்பட்ட காட்சிகள் வரும் என்று நினைத்தனர். நான் விளையாடிக் கொண்டிருந்ததாக நினைத்தனர். மலேயசிய இந்தியர்களை பற்றிய ஒரே மாதிரியான தன்மை பல உள்ளன; அவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என்ற கருத்து போன்றவை. மலேசியாவில் வரும் மலாய் படங்கள் இந்தியர்களை இவ்வாறுதான் சித்திரித்துக் காட்டுகின்றன. நான் மலாய் படங்களில் நடிகராக சிறிய பாத்திரங்களில் நடித்துள்ளேன். அவர்கள் எனக்கு திருடர்கள், வீடுகளை கொள்ளையடிப்பவர்கள் போன்ற பாத்திரங்களை கொடுக்கின்றனர். நான் கேட்டேன்; ஏன் எப்பொழுது பார்த்தாலும் இத்தகைய பாத்திரங்கள். நாங்கள் நல்ல நண்பர்கள் போல், வேறுவிதத்தில் காட்டப்படலாமே?"

"மலாய் படங்கள் பல நேரமும் இந்திய பாத்திரங்களை இவ்வாறு கறுப்பு நிறம் உடைய மலாய் நடிகர்களை கொண்டு சித்தரிக்கின்றனர். ஏற்கனவே இது ஒரேமாதிரியான தன்மை உடையதாகிவிட்டது; அவர்கள் கறுப்பாளாக இருக்கவேண்டும்; முட்டாள்களாக இருக்க வேண்டும். இத்தகைய ஒரே மாதிரத் தனத்தை நாம் பார்த்து விட்டோம்; அப்படி இயக்கிக் கொண்டு போவது எளிது. ஆனால் வழியில் எங்கோ ஓரிடத்தில் அது தவறுகளைத்தான் கொடுக்கும். எனவே நான் படம் எடுத்த போது, இந்தியச் சமூகம் பற்றிய மறுபுறத்தை எந்த அளவிற்குக் காட்ட முடியுமோ, அந்த அளவிற்குக் காட்டியுள்ளேன்."

அவர் தொடர்ந்தார்: "தோட்டத்து மக்களுக்கு திரைப்படம் பெரும் ஆர்வத்தைக் கொடுத்துள்ளது. இந்த [நடிகர்கள்] அனைவரும் இதைத் தொழிலாகக் கொண்டவர்கள் அல்ல. நான் அவர்களை தெருக்களில் இருந்து அழைத்து நடிக்க வைத்தேன். தெருக்களில் இருந்து எவரையும் அழைத்து வந்தால் அவர்களுக்கு தோட்டத்தைப் பற்றி தெளிவான கருத்து இருக்கும்; காரணம் அவர்களுடைய அனுபவம் அல்லது அவர்களுடைய பெற்றோர்களுடைய அனுபவங்கள்". இந்த கோலாலம்பூரில் இருந்து வரும் நடிகர்கள், அவர்களுக்கு அனுபவம் உண்டு. சில இரப்பர் தோட்டங்கள் தேங்காய் எண்ணெய் தோட்டங்களாக மாறிவிட்டன; இரப்பர் இப்பொழுது அதிக இலாபம் தருவதில்லை; மேலும் சில கால்ப்பந்து மைதானமாகிவிட்டன. அவர்களுக்கு இது ஒரு பெரிய நினைவு; அவர்களுடைய வாழ்வின் பெரும் பகுதியாகும். சொல்லப்போனால், நான் என்னுடைய பாட்டியுடன் இரப்பர் தோட்டத்தில்தான் ஒவ்வொரு விடுமுறையும் சென்று சுற்றி வருவேன். பலவும் நினைவுகளாக இப்பொழுது திரும்புகின்றன."

இளைய இயக்குனர் தன்னுடைய குறைந்த இருப்புக்களை, ஆதாரங்களை பற்றிக் கூறினார்: "நான் பெரும்கவனத்துடன் முழுப் படத்தையும் எடுத்தேன். எதையும் வீணடிக்க கூடிய நிலையில் நான் இல்லை. ஏராளமான காட்சிகளை எடுக்க வேண்டியிருந்தது; மிகவும் விரைவாக செயல்பட வேண்டியிருந்தது. நீங்கள் படத்தை பார்த்தால், சில காட்சிகளில் கூடுதலான நடிகர்கள் இருப்பார்கள்; என்னிடம் இரண்டு வயர்கள் இல்லாத ஒலிபெருக்கியும், ஒரு Boom உம் தான் இருந்தன. சூழ்நிலையையோ நான் பிடித்தாக வேண்டும். அனைத்து சப்தங்களும் இயற்கை ஒலிகளாகும்; என்னிடம் ஒலிக்குரல் தயாரிக்க பணச்செலவு செய்ய முடியாது. காட்சிகளை விரைவாகவும் சரியாவும் எடுக்கவேண்டும். விளக்குகள், ஒலிகள் என்று அனைத்தையும் நான்தான் திட்டமிட வேண்டும்.

"நடைமுறையை ஒட்டி பலவும் நிகழ்ந்தன. அப்பாவும், அம்மாவும் இருக்கும் காட்சியில், அறை மிகவும் சிறியதாக இருந்தது; பல கோணங்களையும் அங்கு காட்ட முடியாது என்று நான் நினைத்தான். அது ஒன்றும் ஆழ்ந்த காரணங்களுக்காக என அல்ல. "கோரமான வாத்துக்குஞ்சு" காட்சியையும் நான் பெரிதும் விரும்பினேன். அந்தப்பெண் ஓடி வந்து என்னிடம் அந்தக் கதையை கூறினாள்; நான் அது ஓர் அழகிய கதை என்று நினைத்தேன். அதனுள் ஒரு சிறு பொருளும் உண்டு. இந்தியர்கள், மலேசியாவில் தொந்திரவு கொடுத்து வருவார்கள் என்றால், நாங்கள் விரட்டியடிக்கப்பட்டுவிடுவோம் என்ற உட்குறிப்பைக் கூறினேன். நீங்கள்தான் "கோரமான வாத்துக் குஞ்சு." இதைப் புரிந்துகொண்ட சிலர் கூறினார்கள், ''ஐயோ என் கடவுளே, நீங்கள் என்ன செய்கிறீர்கள்?''

இனத் தன்மை பற்றி இறுதியாக ஒரு கருத்துக் கூறினார்; இது அவருடைய அணுகுமுறையை சுருக்கமாகக் கூறியது போல் இருந்தது. "ஒரு காட்சியில் பேய் இருந்ததல்லவா? அது ஒரு Nyonya பேய் ஆகும். அம்மக்கள் முற்றிலும் அழிந்துபடும் நிலையில் உள்ளனர். சீன, மலேசிய கொஞ்சம் பிரிட்டிஷ் என்ற கலவை. அவர்கள் தங்களுடைய மொழியிலேயே பேசுகின்றனர். அவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது, ஏனெனில் அவர்கள் எந்த முக்கிய பிரிவுகளிலும் இல்லை. அவர்கள் "மற்றவர்கள்" என்ற பிரிவில் உள்ளனர். ஒரு இந்தியப் படத்தில் நீங்கள் இந்திய பேயைத்தான் பார்ப்பீர்கள்; ஒரு சீனப்படத்தில், நீங்கள் ஒரு சீனப் பேயைத்தான் காண்பீர்கள். எனவே நான் நினைத்தேன், ஏன் "ஒரு மற்றொரு இனப் பேயைக் காட்டக்கூடாது? என்னுடைய பட வடிவமைப்பாளர், அவள் ஒரு நியோன்யா." [See the film's Web site: http://www.chemmanchaalai.com/]

மற்றப் படங்கள், மற்ற கேள்விகள்

மற்றொரு மலேசியாவில் இருந்து வந்த படம், Sepet என்பது ஒரு மலாய் இயக்குனர், யாஸ்மின் அஹ்மத்தினால் இயக்கப்பட்டது, அவ்வளவு வெற்றிகரமாக இல்லை; ஆயினும் அதில் சில உயர் கணங்கள் உள்ளன. இனவேறுபாடு உடையவர்களுக்கு இடையே உள்ள உறவை பற்றி, ஒரு மலாய் பெண், ஒரு சீனப் பையன் பற்றிய கதை, இந்தப் படைப்பு வகுப்புவாதம், இனவெறி பற்றிய எதிர்ப்பை கடுமையாகக் காட்டுகிறது. கதைக் கருத்தை நாம் எளிதில் மறந்துவிட மாட்டோம். முதல் காட்சியில், சீனச் சிறுவன் "ஜேசன்" வங்கக் கவிஞரும், நாவலாசிரியருமான ரவீந்திரநாத் தாகூரின் படைப்பில் இருந்து தன்னுடைய தாயாருக்கு படித்துக் காட்டுகிறான். அவர்கள் அது பற்றி விவாதிக்கின்றனர். "அது வேறு பண்பாடு, வேறு மொழி, ஆயினும் கூட அவருடைய உள்ளத்தில் என்ன இருந்தது என்பதை நாம் உணர முடிகிறது."

இதன் நல்லெண்ணத்தில் இருந்து படமே பெருமளவில் Sharifah Amani, ஓர்கெட்டாக (Orked) நடிப்பதின் மூலம் காப்பாற்றப்படுகிறது. இந்த மலேய இளவயதினருக்கு சீனா பற்றி எதுவும் பெரிதும் பிடிக்கும். இப்பெண் பல மொழிகள், அவற்றின் கூட்டுக்களில் பெரும் தேர்ச்சி பெற்றவர். "இங்கு கிடைக்கும் பிரெஞ்சு வறுவல்கள் பிரமாதமானவை!" என்று ஒரு நேரம் ஆங்கிலத்தில் உரத்துக் கூவுகிறாள். மருத்துவ மனையில் ஜேசனுக்கும் அவனுடைய நண்பனும் (அவனும் ஓர்கெட்டைக் காதலிக்கிறான்) வரும் காட்சி நினைவில் நிற்கிறது. அவர்கள் எத்தனையோ நூற்றாண்டுகள் முன்பு இனம் விட்டு இனம் திருமணம் செய்து கொள்ளுதல் நடைமுறையில் இருந்தது என ஒப்புக் கொள்ளுகின்றனர். "பின் ஏன் இப்பொழுது அது கடினமாகப் போய்விட்டது?" ஓர்கெட்டிற்கும் ஜேசனுக்கும் இடையே உள்ள உறவு பல கஷ்டங்களை எதிர்கொள்ளுகிறது. ஒரு குறிப்பிடத்தக்க காட்சியில் ஓர்க்கெட்டும் அவள் தாயாரும் ஒரு காரில் அமர்ந்து காதலின் விதியை நினைத்து அழுகின்றனர்; இனப் பிரிவினை ஏனைய சமூக அழுத்தங்களால் பாதிக்கப்பட்டது போல் அழுகின்றனர். அவர்களுடைய அழுகை நம்பும்படி இருக்கிறது.

ஆற்றங்கரை (The Riverside,) படைத்த, Alireza Amini ஆல் இயக்கப்பட்டுள்ள Letters in the Wind படம், 2002ம் ஆண்டு ஈரானிய படைகளில் இருந்த கட்டாயமாக சேர்க்கப்பட்ட வீரர்களை பற்றியது; இந்தப்படம் தணிக்கை பிரச்சினைகளுக்கு உட்பட்டது; ஈராக்-ஈரானிய எல்லைப் பின்னணி படமான இது அதிர்வை தருகிறது. ஈராக்கிய குர்துக்கள் குழு ஒன்று எல்லையை நோக்கி, அமெரிக்க படையெடுப்பினால் ஏற்பட்டுள்ள பேரழிவில் இருந்து தப்பித்துச் செல்லுகிறது. ஒரு இளம் மணப் பெண், சிகப்பு மறைப்பு அங்கியுடனும் சிகப்புப் பெட்டியுடனும், அவளுடைய திருமணத்தன்றே அக்குழுவுடன் செல்லுகிறாள் அவள் ஒரு நிலக் கண்ணியை மிதித்து விடுகிறாள். அவளுடைய கால்களை எடுத்தால், நிலக் கண்ணி வெடித்துவிடும். அவளுடைய கணவன் அருகில் இருக்கும் கிராமத்திற்கு உதவியை நாடி ஓடுகிறான்.

பலரும் அவளுடைய நிலைக்கு இரங்கி உதவிக்கு வருகின்றனர்: ஒரு மனிதன் இறந்து போன தன்னுடைய இளவயது மகனின் சடலத்தை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டுக் கொண்டு வருபவன், போர் விமானங்களால் பயந்துவிட்ட தனது ஒரே சொத்தான மாடு எங்கோ ஓடிவிட்டது என்பதை அறிந்திருந்து ஒரு பெண்மணி, பலவிதமான ஆயுதங்களை விற்பனைக்கு எடுத்துவரும் ஒரு இளைஞன், முணுமுணுத்த வயதான மனிதனும் அவனுடைய தாகம் நிறைந்த மக்களும் என்று பலர். ஒவ்வொருவரும் தத்தம் கவலையைக் கணநேரம் ஒதுக்கிவைத்துவிட்டு இளம் மணப்பெண்ணின் கொடூரமான நிலையைக் கண்ணுறுகின்றனர். வயதான மனிதன் கூறுகிறான்; "போரினாலும், அரசியலினாலும் நாமெல்லாம் வீடிழந்து நிற்கிறோம்; ஆனால் இந்த மணப்பெண்ணை பார்த்ததில் இருந்து என்னுடைய பிரச்சினைகளை நான் மறந்துவிட்டேன்." அவர்கள் அவளிடம் பேசுகிறார்கள், அவளிடம் பாடிக் காட்டுகிறார்கள், அவளுக்குக் கதை கூறுகிறார்கள். ஆயுதங்கள் கொண்டு இளைஞன் அவளிடம் சிறு கற்களைத் தன்னுடைய பாதங்களில் கொண்டு நிலக்கண்ணி மீது கனத்தை கொடுக்குமாறு கூறுகிறான்.

இப்பகுதியில் உள்ள மக்ளின் மகத்தான கஷ்டங்கள் நன்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில் வாடினாலும், இப்பெண் அந்தப் புறம் செல்லும் மக்கள் அவளிடம் பேசும்போது, மறைவுத் துணியினால் முகத்தை மூடிக்கொள்ளுகிறார்கள்; பின்னர் புலம்புகிறாள், வெறிபிடித்தது போல் கூச்சலிடுகிறாள். இங்கு அடக்கப்பட்ட மனிதகுலம் முற்றிலும் செயலற்ற முறையில், உதவப்படுவதற்காகவோ அல்லது அழிக்கப்படுவதற்காகவோ, காத்திருக்கிறது என்று நாம் உணர்கிறோம். வானொலி அறிக்கைகள் அமெரிக்க படையெடுப்பு பற்றிய செய்திகளை ஒலிபரப்புகின்றன.

இப்படிப்பட்ட கடுமையான அமைப்பு இருந்தும் கூட, திரைப்படம் பரிவுணர்வையும், நகைச்சுவையையும் கூட வெளிப்படுத்தியுள்ளது. நேரம் கழித்து வருபவர்களுடைய பேச்சுக்கள் முற்றிலும் நம்பகத்தன்மையை கொண்டுள்ளன. வயதான மூதாட்டி ஒரு வினோதமான, நீண்ட கதை, தன்னுடைய திருமண விருந்துகளில் திருப்தியடையாமல் தன்னுடைய கணவர்களை விவாகரத்து செய்வதைப் பற்றி கூறுகிறாள். ஒவ்வொரு சாப்பாட்டின்போதும் அவளுக்கு உலர்ந்த ரொட்டியும், ஒரு மீன் தலையும்தான் கொடுக்கப்படுகிறது; அவள் எனவே விவாகரத்து கோருகிறாள்! ஐந்து, ஆறு முறை! கடைசியில் அவள் விட்டுக் கொடுத்துவிடுகிறாள். "நான் என்ன செய்ய முடியும். கணவர்களை மாற்றிவிட்டேன்; விதியை என்னால் மாற்ற முடியாது. அத்துடன்தான் நான் வாழ்ந்தாக வேண்டும்."

இப்படி வழியின்றி ஏற்பதைப் பற்றி இயக்குனரின் அணுகுமுறை என்ன? அகதிகளின் செயலற்ற போக்கைப் பற்றி அவர் குறைகூறகிறார் போலும். "நாம் ஏதேனும் செய்யவேண்டும்" அனைவரும் உடன்படுகின்றனர் ....ஆனால் என்ன செய்வது? அவர்கள் கணவனிடம் நம்பிக்கையை வைக்கிறார்கள்; அவனுடைய ஓடும் கால்கள் ஒன்றைத்தான் நாம் எப்பொழும் பார்க்க முடியும்.

இதற்கு விந்தையான எதிர்வாதமாக மற்றொரு மூதாட்டி இரண்டு பெண்களை தன் முதுகில் சுமந்து கொண்டு கடும் நிலப்பகுதியில் சென்று கொண்டே அவர்களுக்கு மிகச்சிறந்த எதிர்காலம் இருப்பதாக உறுதிமொழி கொடுக்கிறாள். "உலகின் எந்தப் பகுதியும் சிறந்ததுதான், மலைகளாயினும், பாலைவனங்களாயினும். நீங்கள் திருமணப் பெண்கள், அழகிய திருமணப்பெண்கள்." இப்படம் மகிழ்வுடன் முடியவில்லை என்பதைச் சொல்லத் தேவையில்லை.

செக் குடியரசில் இருந்து வந்த Champions என்பது பிழையில்லாத படைப்பு இல்லை; ஆனால் கிழக்கு ஐரோப்பாவில் தற்பொழுது உள்ள வாழ்க்கையை சித்தரிக்கும் முயற்சி போல் தோன்றுகிறது. வறுமையில் வாடும் செக் குழு ஒன்று -- அவர்களில் ஒருவருக்குத்தான் நிரந்தரப் பணி -- எப்படியோ ஒரு சிறுநகரத்தில் வாழ்க்கையை கடத்திக் கொண்டிருக்கிறது. ஆண்களைப் பொறுத்தவரையில் ஐஸ் ஹாக்கி விளையாட்டுத்தான் வாழ்க்கையின் மையத்தானமாக உள்ளது; உண்மையில் அதுதான் முழுவாழ்க்கையும் கூட. அவர்களில் ஒருவருக்கு தன்னையும் மறக்கும் நிலைமையில் குடித்தாலும் விளையாட்டின் முடிவுகளை கணிக்கும் சக்தி உள்ளது. ஒன்றில் இருந்து மற்றொன்று தொடர்கிறது.

தேசியமும் இனவெறியும் பொருளாதார, அறநெறித் திகைப்பில் காலத்தை கடத்துகின்றன. "நம்முடைய வேர்களை நாம்தான் ஊன்ற வேண்டும், ஏனெனில் மற்றவர்கள் அதைச் செய்யமாட்டார்கள்" என்று உள்ளூர்க்காரர் ஒருவர் தெரிவிக்கிறார். செக்குகள் உலக வீரர்கள் விருதை வென்றதும் "நாம்தான் வெற்றியாளர்கள்" "We're the champions", என்ற ஒலி சாராய அறையில் இருந்து வருகிறது. இதன் விந்தையான போக்கு அனைவருக்கும் நன்கு புரிகிறது.

ஸ்ராலின் காலத்திற்குப் பிந்தைய சகாப்தத்தில், (ஒருவேளை முன்பும் இருந்திருக்கலாம்), உள்ளத்தை சோகம் கப்பும், மனிதநேயம் சிறிதுமற்ற திரைப்படங்கள் தயாரிப்பில் ஹங்கேரி தனிக்கவனம் செலுத்துகிறது. ஒரு பெயரற்ற போதைப் பொருள் கடத்தும் வியாபாரியான டீலர் இந்த தன்னுணர்வு நிறைந்த சோகத்தில் இருந்து முற்றிலும் விடுபட்டவர் அல்ல; ஆனால் அவ்வப்பொழுது வாழ்வின் துடிப்பும் காட்டப்படுகிறது. அப்படி ஒன்றும் இழிவான வாழ்வும் அல்ல. பெரும்பாலும் உட்கார்ந்து, கேட்டுக் கொண்டிருக்கும் போதை விற்பனையாளர் வலியைக் கொடுப்பவராகவும் பின் பெருந் தேவையில் இருப்பவர்களுக்கு அதை நீக்குபவராகவும் உள்ளார்.; ஒரு சமயத்தலைவர், உள்வயிறு மிகவும் அதிகமாகப் பெருத்து விட்டது, ஒரு கல்லூரி மாணவர், அவருடைய நண்பர் நாட்கணக்கில் புலம்பிக் கொண்டிருப்பவர், ஒரு பழைய பெண் தோழி, அவளுடைய மகள் போதை விற்பனையாளரின் மகளாகவே இருக்கலாம் அல்லது இல்லாமற்போகலாம், இவருடைய தந்தையார் தன்னுடைய மனைவியின் மரணத்திற்கும் பிறகு துக்கத்தாலும் தனிமையாலும் வாடி தற்கொலை செய்து கொள்ளலாம் என நினைப்பவர். இப்படி நடுக்கடலில், தரையை அடைவோம் என்ற நம்பிக்கை இழந்து, திக்குமுக்காடும் மக்கள் பலரையும் காண்கிறோம்.

உலகில் பலவிதமான போக்குகள் திரைப்படம் எடுப்பதில் உள்ளன. செம்மண் சாலை ஒரு விதத்தைப் பிரதிபலிக்கிறது. பிரெஞ்சு இயக்குனர் Claire Denis இன் The Intruder மற்றொரு போக்கைப் பிரதிபலிக்கிறது. பிந்தைய படைப்பு ஒரு வயதானவர், மாற்று இதய அறுவை சிகிச்சைக்காகக் காத்திருப்பவர் தன்னுடைய கணிச இருப்புக்களை பயன்படுத்தி ஒன்றை விலைக்கு வாங்க முயல்கிறார். அவர் மிகவும் மிருகத்தனமான முறையில் உணர்ச்சியற்றவராக உள்ளார். இயக்குனர் கூறுகிறார்: "அவர் ஒரு அன்பில்லாத மனிதன்; உள்ளமில்லாத மனிதன். பரிவுணர்வற்றவர்; பேராசை பிடித்தவர்; வாழ்க்கையில் இன்னும் வேண்டும், வேண்டும் என்று அலைபவர்" இவரை ஒரு படுக்கையில் ஒரு பெண்ணுடன் பார்க்கிறோம்; ஒரு மனிதனைக் கொலை செய்வதை பார்க்கிறோம்; தென் கொரியாவில் வணிகம் செய்வதை பார்க்கிறோம், இறுதியில் தன்னுடைய மகனை, தெற்கு கடல்களில் இருப்பவனை தேடி, சமரசம் செய்து கொள்ளுவதில் ஈடுபாடு கொண்டவராக பார்க்கிறோம்.

மற்ற டெனிஸ் படைப்புகள் போலவே இந்தப்படமும் என்னை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை. இயக்குனர் இருட்டில் படம் பிடிக்கிறார் என்ற உணர்வு ஏற்படுகிறது; ஏதேனும் முக்கியமான காட்சி வரலாம் என்ற ஊகம்தான் மிஞ்சுகிறது. ஒரு திறனாய்வாளர், "இப்படி எல்லையைக் கடப்பது, பண்பாட்டு வெளியேற்றங்கள், சமூக ஏற்பு அல்லது நிராகரிப்பு என்பது க்ளேர் டெனிசின் படைப்பில் தொடர்ச்சியாக உள்ளது." இருக்கலாம். ஆனால் அவர் இப்படங்களில் இக்கருத்தைப் பற்றி என்ன கூறுகிறார். ஆனால் அத்தகைய மரியாதையற்ற கேள்விகளை ஒருவர் கேட்கக் கூடாது போலும்.

இயக்குனர் தன்னுடைய உணர்வுகளை நன்கு வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் அவற்றைப் பற்றி எவ்வாறு எடுத்துக் கொள்ளுவது என்பது எனக்குப் புரியவில்லை. உலகத்தைப் பற்றி அதிகமாகக் கூறவில்லை; தன்னுடைய உணர்வுகளைப் பற்றி மட்டுமே கூறுகிறார். இவருடைய உணர்வுகள் காண்போர் உலகம் இவற்றுக்கு நடுவே குறுக்கிடுகிறது. டெனிஸ் படம் எடுப்பது, படத்தயாரிப்பில் இவருடைய நிலை பற்றிக் கொண்டுள்ள கருத்து என்பதைப் பற்றி என்ன கருதுகிறார் என்பது எனக்குத் தெரியும் (வசனம் எழுதியவுடன், நான் எந்த இடங்களில் எடுக்க வேண்டும் என்று சிந்திக்கிறேன், அந்த இடங்கள் எதைத் தெரிவிக்கின்றன என்று உணர்கிறேன். நான் பயன்படுத்த இருக்கும் லென்சை பார்க்க முடிகிறது. அனைத்துமே நான் நன்கு அறிந்தவைதான். படம் என்னை வியப்பில் ஆழ்த்தவில்லை; நான் படத்திற்குள் இருக்கிறேன்." இத்தகைய கருத்துக்களினால் யாருக்கு என்ன பயன்?) தான் தீவிரமாகக் கருத்திற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் விழைகிறார். தான் தீவிரக் கலைஞராக வேண்டும் என்று விரும்புகிறார். ஆனால் உலகத்தைப் பற்றி எதுவும் தெரிந்து கொள்ளுவதில்லை; அதுதான் இறுதியில் எல்லாவற்றையும்விட ஆர்வத்தைக் கொடுக்கிறது; பல்வகைச் சுவையுடையது.

இதற்கு எதிராக, சோவியத் திறனாய்வாளரும், இடது எதிர்பாளர்களில் ஒருவருமான அலெக்சாந்தர் வோரொன்ஸ்கியின் சொற்களில், செம்மண் சாலையில், உலகிற்கு தான் சரணடைதலை ஒரு படைப்பாளன் மேற்கொள்ளுவதை நாம் பார்க்கிறோம். வோரான்ஸ்கி எழுதினார்: "ஆனால் கலைஞர் தன்னை உலகத்திற்கு சரணடைவித்தால் மட்டும் தன்னிலையில் போதாது; தத்துவ மொழியில் கூறவேண்டும் என்றால், விஷயத்தை நமக்காக என்பதைவிட, விஷயத்தையே விஷயமாக, அவர் மீண்டும் உற்பத்தி செய்கிறார். உயர்ந்த பகுத்தறிவு உணர்வுகளின் வெள்ளப் பெருக்கிற்கு சரணடைந்துவிடுவதின் மூலம், தன்னை மீண்டும் உருவகப்படுத்திக் கொள்ளுவதின் மூலம், கலைஞர் தன்னுடைய தன்முனைப்பில் இந்த உணர்வுகளை கரைத்துவிடுகிறார்; தன்னுடைய நிலையில் இருந்து தப்பி ஓடுவதற்காக என்றில்லாமல், உலகம் இருப்பதை அந்நிலையிலேயே காண்பதற்கு, அதன் மிக அழகிய, சிறந்த வடிவமைப்புக்களில் காண்பதற்காக." தற்போது செயற்கையான, தன்னுணர்வு நிரம்பியிருக்கும் திரைப்படங்களை காண்கிறோம்; கவர்வதற்காக எடுக்கப்படும் படங்கள், மெக்சிகோவில் இருந்து வந்துள்ள Duck Season, இளவயதுச்சிறுவர் இருவர் தங்கள் முயற்சியிலேயே வீட்டை விட்டு வெளியேறி, The Intruder இல் வருவதுபோல், வரும் நிலை. செம்மண் சாலை, ஆற்றங்கரை போன்ற படங்களையும், சற்று வரம்புடையவையாக இருந்த போதிலும், காண்கிறோம். இவை இரண்டு எதிர்ப் போக்குகள் ஆகும். எப்பொழுதும் பிந்தையதைத்தான் நான் விரும்புவேன், ஒரு நாளைக்கு இருபது தடவை என்றாலும் கூட.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved