World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

Mahmoud Abbas and the degeneration of the Palestinian national movement

மஹ்மூத் அப்பாசும் பாலஸ்தீனிய தேசிய இயக்கத்தின் சீரழிவும்

பகுதி 1

By Jean Shaoul and Chris Marsden
16 February 2005

Back to screen version

இரு-கட்டுரை தொடரின் முதல் பகுதி கீழே பிரசுரிக்கப்பட்டுள்ளது.

எகிப்திய சுற்றுலாத்தலமான ஷரம் எல் ஷேக்கில் இஸ்ரேலிய பிரதம மந்திரி ஏரியல் ஷரோன் மற்றும் பாலஸ்தீனிய ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் இருவராலும் அறிவிக்கப்பட்ட போர் நிறுத்த அறிவிப்பு, அப்பாஸ் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சில வாரங்களுக்குள்ளேயே வந்துள்ளது. இவருடைய ஏற்றம் எந்த அளவிற்கு ஆளும் பத்தா பிரிவுடன் பிணைப்பைக் கொண்டுள்ளது மற்றும் வாஷிங்டன், டெல் அவீவின் கோரிக்கைகளுக்கு எந்தவித எதிர்ப்பையும் பாலஸ்தீனிய நிர்வாகம் கைவிட்டுள்ளது என்பதையும் இது விளக்கிக்காட்டுகிறது.

போர்நிறுத்தம் ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷின் "சாலை வரைபடம்" தொடக்கப்படுதல், பின்னர் ஒரு பாலஸ்தீன நாடு நிறுவப்படுதல் இவற்றின் தொடக்கம் என்று விளம்பரப்படுத்தப்படுகிறது. ஆனால் பாலஸ்தீனிய நாட்டின் "இறுதி நிலை" பற்றி எப்பொழுது பேச்சுவார்த்தைகள் தொடங்கப்படும் என்பது பற்றி இன்னமும் உடன்பாடு கிடையாது; கிழக்கு ஜெருசலம் மற்றும் திரும்பி வருவதற்கான பாலஸ்தீனிய அகதிகளின் உரிமைகள் என்ற சிக்கல் வாய்ந்த பிரச்சினைகள் பற்றியும் எந்தத் தகவலும் இல்லை.

வெள்ளை மாளிகையிலிருந்து வந்த அழுத்தத்தின் கீழ், ஷரோன் அனைத்து இராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்திவைக்கவும், மேற்குக்கரை மற்றும் காசா பகுதிகளின் பாதுகாப்பை பாலஸ்தீனிய நிர்வாகத்திற்கு மாற்றவும், அடுத்த மூன்று மாதத்திற்குள் இஸ்ரேலிய சிறையில் உள்ள 900 கைதிகளை விடுவிப்பதாகவும், "நம்பிக்கையை வளர்க்கும்" நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆனால் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கொண்டலிசா ரைஸ், காசா மற்றும் மேற்குக்கரையில் உள்ள நான்கு புறக் காவல் பகுதிகளில் இருந்தும் குடியேற்றக்காரர்களை வாபஸ்பெறுவதற்கு "விடுவித்தல் திட்டம்" முற்றுப் பெறும் வரையில், இன்னும் கூடுதலான சலுகைகளை இஸ்ரேல் வழங்குவதற்கு வாஷிங்டன் அழுத்தம் தராது என தெரிவித்துள்ளார். இதையும்விட முக்கியமாக, மற்ற நடவடிக்கைகள் பற்றி, இஸ்ரேலுக்கு காட்டப்பட்டு வரும் ஆயுதமேந்திய எதிர்ப்புக்கள் அனைத்தையும் நசுக்குவதையும், போர்க்குணம்மிக்க இஸ்லாமிய குழுக்களை கட்டுப்படுத்துவதையும், பல பாதுகாப்பு சேவைகளையும் தன் கட்டுப்பாட்டிற்குள் அப்பாஸ் கொண்டுவருவதையும் பொறுத்துத்தான் முடிவெடுக்கப்படும். பாலஸ்தீனிய பாதுகாப்புப் படைகளின் சீர்திருத்தத்தை மேற்பார்வை இடுவதற்காக முன்னாள் அமெரிக்க தளபதி ஒருவரை வாஷிங்டன் நியமிக்கும் என்றும் கூட ரைஸ் கூறினார்.

இஸ்ரேலை சமாதானப்படுத்துவதற்கு அப்பாஸ் ஏற்கனவே கடுமையான முயற்சிகளை செய்துள்ளார். ஜனவரி 9ம் தேதி பதவிக்கு வந்ததிலிருந்து, ஹமாஸ், இஸ்லாமிய ஜிகாத், அல் அக்சா தியாகிகள் படை ஆகியவற்றை அவை இஸ்ரேலுக்கு எதிராக குண்டுவீச்சுக்களை நிறுத்தவேண்டும் என்று இணங்கவைக்க முயற்சித்து வருகிறார். ஜூலை மாதம் பாராளுமன்றத் தேர்தல்கள் நடத்தி அரசியல் அதிகாரத்தில் பங்கு பெறும் வாய்ப்பை ஹமாசிற்குத் தருவதாகவும், மேற்குக்கரை, காசா இவற்றில் நடந்த உட்தேர்தல்களில் பெற்ற வெற்றியின் தன்மையைக் கருத்திற்கொண்டு, பாலஸ்தீனிய சட்டமன்றக்குழுவில் அரசியல் பிரதிநிதித்துவம் அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். அதேநேரத்தில், இஸ்ரேலிய இலக்குகள் மீது ஏவுகணை தாக்குதலை தடுக்கவும், தற்கொலை படைகளை கைதுசெய்யவும் காசாப் பகுதியில் 8,000க்கும் மேற்பட்ட போலீசாரை நிறுத்திவைத்துள்ளார்.

பலகாலமும் பாலஸ்தீனிய விடுதலை இயக்கத்தின் (PLO) நீண்டகால தலைவர் யாசர் அரஃபாத் தடைசெய்திருந்த, தன்னுடைய மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை, வாஷிங்டனுடைய ஆதரவை வளர்ந்தெடுக்கும் வகையில், அப்பாஸ் மேற்கொண்டாலும், இவருடைய தற்போதைய நடவடிக்கை பாலஸ்தீனிய தேசிய இயக்கம் ஒட்டுமுழுவதன் சீரழிவை முற்றிலுமாக வெளிப்படுத்துகின்றது: இந்த சீரழிவு பாலஸ்தீனிய விடுதலை இயக்கத்தின் முதலாளித்துவ தன்மையிலேயே வேரூன்றியுள்ளது.

பாலஸ்தீனிய அரசு ஒன்றை நிறுவுவதற்கான பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் அடிப்படை முன்னோக்கானது எப்பொழுதுமே ஏகாதிபத்தியத்துடன் ஓர் உடன்பாட்டைக் காணுவதைத்தான் அடிப்படையாகக் கொண்டுள்ளது. இருவழிமுறைகளில் இந்த இலக்கு தொடரப்பட்டது: பேச்சு வார்த்தைகளின் மூலம், மற்றும் ஆயுதமேந்திய போராட்டம் என்பவையே அவை. தோற்றப்பாட்டில் எதிரிடையாகத் தோன்றினாலும், இவை அடிப்படையில் பூர்த்தி செய்ய உதவுகின்றதாகவே எப்போதும் இருந்து வருகின்றன. ஆயுதமேந்திய போராட்டத்தின் இறுதி நோக்கம் ஏகாதிபத்தியத்துடன் பேச்சு வார்த்தைகள் மூலம் உடன்படிக்கை காணவேண்டும் என்றே எப்போதும் இருந்து வருகிறது, தொழிலாள வர்க்கத்தையும், விவசாய பரந்துபட்ட மக்களையும் சுயாதீனமாய் அணிதிரட்டுவதாய் ஒருபோதும் இருந்ததில்லை. வேறுவிதமாகக் கூறினால், அப்பாசாலும் பாலஸ்தீன விடுதலை இயக்க தலைமையாலும், போர்நிறுத்தம் ஏற்கப்பட்டமை, மற்றும் அது திணிக்கப்பட்டமை என்பது ஆயுதப் போராட்டத்தின் தர்க்கத்தோடு முரண்படவில்லை, மாறாக அதில் இருந்தே அமைப்புரீதியாக எழுகின்றது.

பாலஸ்தீன விடுதலை இயக்கம் இஸ்ரேலுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தை பயன்படுத்த வேண்டும் என்று உறுதியுடன் வாதிட்டதால், பாலஸ்தீனிய மக்களின் பரந்த பகுதிகளிடையே பரந்த மக்கள் தளத்தை நிறுவியது மற்றும் தேசிய இயக்கங்களிலேயே பெரிதும் தீவிரப் போக்கினதாக விளங்கியது. ஆனால் சாராம்சத்தில் அதன் தலைமை பாலஸ்தீனிய முதலாளித்துவத்தையும் அதன் நலன்களையும் பிரதிநிதித்துவம் செய்ததே அன்றி, அது வெளிப்படையாயக் கூறிக்கொண்டது போல் சாதாரண மக்களுடைய நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்யவில்லை. எவ்வளவு தீவிரமாய் இருந்தாலும், தேசிய முதலாளித்துவ அமைப்புக்கள் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஒரு முற்போக்கான மற்றும் ஜனநாயகப் பாதையில் சுயாதீனமான போராட்டத்தை தொடர்ச்சியாக நடத்துவதற்கு இயல்பாகவே முடியாத நிலையில்தான் இருக்கும்; ஏனெனில் அவற்றின் நலன்கள், இறுதிப்பகுப்பாய்வில், தொழிலாள வர்க்கம் மற்றும் விவசாயிகள் ஆகியோரின் நலன்களுக்கு முற்றிலும் எதிரிடையானது ஆகும்.

1948ல் திருடப்பட்ட நிலத்தை மீண்டும் கைப்பற்ற வேண்டும், ஏகாதிபத்தியம் சியோனிசம் இவற்றின் அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும், என்ற கண்ணோட்டத்தில் பாலஸ்தீனிய தொழிலாள வர்க்கமும் விவசாயிகளும், ஒரு தேசிய அமைப்பாக நிறுவப்படுவதை கண்ணுற்றாலும், இஸ்ரேலுக்கு எதிரான மோதலில், பாலஸ்தீனிய முதலாளித்துவ வர்க்கத்தின் அடிப்படை நோக்கம் தன்னுடைய வர்க்க ஆட்சியை நிறுவுவதாகும், அதாவது தொழிலாள வர்க்கத்தைச் சுரண்டுவதற்கு அதன் உரிமையை ஆட்சியின் முக்கிய இடமாகக் கொள்வதாகும். அந்தவாறாக, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான அதன் எதிர்ப்பானது, நிபந்தனைகள் கூடியதும், பாரபட்சம் உடையதாகவும்தான் எப்போதும் இருக்கிறது. ஏகாதிபத்திய மேலாதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பது அதன் இலக்காக அல்லாமல், உலகப் பொருளாதார ஒழுங்கில் ஆதிக்கம் செலுத்துகின்ற பெரிய ஏகாதிபத்திய சக்திகளுடன் தனது சொந்த உறவுகளை ஏற்படுத்துவதேயாகும். எல்லா நேரங்களிலுமே, இது முதலாளித்துவ ஆட்சியின் அடிப்படையை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கும், தொழிலாள வர்க்கத்தால் மேற்கொள்ளப்படும் எந்தவித சுயாதீனமான அரசியல் நடவடிக்கையையும் எதிர்ப்பதை குறியாய்க் கொண்டிருந்தது. எனவே அதன் மிகவும் தீவிரமான காலகட்டத்தில்கூட, பாலஸ்தீன விடுதலை இயக்கம் "பாலஸ்தீனிய மக்களுடைய ஒரே சட்டபூர்வ பிரதிநிதியாக" அங்கீகரிக்கப்பட்டுள்ளது தான்தான் எனக் கூறியதுடன், முதலாளித்துவ சொத்துடைமை உறவுகளின் அடிப்படையில் ஒரு பாலஸ்தீனிய அரசை நிறுவும் அதன் முன்னோக்கு சவாலுக்கு உட்படுத்தப்பட முடியாது என்றும் வலியுறுத்தி வந்தது.

இந்த அடிப்படையில், தேசிய ஒடுக்கு முறை, சமுதாய சுரண்டல் ஆகிய பிரச்சினைகளை தீர்த்துவைத்தல் என்பது ஒருபோதும் சாத்தியமில்லாதது. காலனித்துவ ஆட்சியை தூக்கி எறியும் மற்றும் அது எண்ணெய் வளத்தை அடையக்கூடியதை தடுக்கும், நாடுகடந்த வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு முடிவுகட்டும் அல்லது தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற ஏழைகளின் துயர்நிறைந்த சமூக நிலைமைகளை மட்டுப்படுத்தும் தேசிய புரட்சிகர இயக்கங்கள் உள்ள அரசுகள் ஒன்று கூட மத்தியகிழக்கில் கிடையாது. இதற்கு மாறாக அவை தங்களுடைய காலனித்துவ எஜமானர்கள் அல்லது கைப்பாவை அரசர்களுக்கு பதிலாக வங்குரோத்தான உள்நாட்டு முதலாளித்துவ கும்பல்களைத்தான் பதவியில் அமர்த்தியுள்ளன. இவ்விதத்தில் பாலஸ்தீன விடுதலை இயக்கமும் விதிவிலக்காக இருந்து விடவில்லை

பாலஸ்தீனிய மக்களை ஒடுக்குதல் என்பது இஸ்ரேலிய இராணுவ வலிமையின் விளைவினால் அல்ல மாறாக அரேபிய முதலாளித்துவ வர்க்கத்தின் காட்டிக்கொடுப்பினால் ஆகும். பல அரேபிய ஆட்சிகளின் உதவியுடன் ஒரு பாலஸ்தீனிய நாட்டை அடையவேண்டும் என்ற அதன் மூலோபாயத்தின் நேரடி விளைவாக, அரஃபாத்தும் பாலஸ்தீன விடுதலை இயக்கமும் அவற்றிடம் இருந்தோ, அவர்களுடைய ஏகாதிபத்திய ஆதரவாளர்களிடம் இருந்தோ, எந்தச் சுதந்திரத்தையும் பெறமுடியவில்லை.

ஆதரவை நாடி அரஃபாத், சோவியத் ஒன்றியத்தின் ஸ்ராலினிச ஆட்சியாளர்களை நம்பியிருந்ததும் இதேபோல் எந்த வெற்றியையும் கொடுக்கவில்லை. ஒரு குறிப்பிட்ட காலத்தில் மாஸ்கோ மற்றும் வாஷிங்டன் மத்திய கிழக்கு மீதான தமது மேலாதிக்கத்திற்காக போட்டியிட்டுக் கொண்டமை பல அரேபிய முதலாளித்துவ ஆட்சிகளுக்கும் சில விஷயங்களில் சற்று பேரம் பேசும் ஆற்றலை வழங்கியது. இத்தகைய உதவியும் கூட, ஏகாதிபத்திய சக்திகளுடனான ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் கொள்கையற்ற சூழ்ச்சிக்கையாளல்களின் ஆணைகளாலும், மற்றும் என்னவிலை கொடுத்தும் சமூகப் புரட்சியைத் தடுப்பதற்கான அதன் சொந்த முயற்சிகளாலும், எப்போதும் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இறுதியில், கோர்பச்சேவ் மற்றும் ஜெல்ட்சின் ஆகியோரின் கீழ் முதலாளித்துவத்தை மீட்பதற்கான ஸ்ராலினிச முயற்சிகளின் காரணமாக, சோவியத் ஒன்றியம் பொறிவிற்கு ஆளானதால், இறுதியில் அரஃபாத் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் ஒரு பேரத்திற்குப் போகுமாறு நிர்பந்திக்கப்பட்டார். இந்த முக்கியமான பேச்சுவார்த்தைகளின்போது அப்பாஸ்தான் அரஃபாத்திற்கு நெருக்கமாக இருந்தார்.

யார் இந்த மஹ்மூட் அப்பாஸ்?

பாலஸ்தீனிய முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களை மிகவும் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்ததுதான் அப்பாஸின் அதிகார உயர்விற்கு காரணமாகும். தற்போது வடக்கு இஸ்ரேலில் இருக்கும் சபெட் என்னும் இடத்தில் 1935ல், ஒரு செல்வம் கொழிக்கும் வணிகக் குடும்பத்தில் அவர் பிறந்தார். அப்போது ஐ.நாவின் பாதுகாப்பிற்குட்பட்டு பிரிட்டனால் ஆளப்பட்டு வந்த பாலஸ்தீனிய பகுதி ஒன்றில் ஒரு சியோனிச நாட்டை நிறுவுவதற்கு ஐ.நா. வாக்களித்த பின்னர், 1948ல் அரபு-இஸ்ரேலிய போர் மூண்டபொழுது, பாலஸ்தீனத்தை விட்டு வெளியே துரத்தப்பட்ட 750,000 மக்களில் இவருடைய குடும்பமும் அடங்கும். இவருடைய சலுகைகள் பெற்றிருந்த சமூக நிலைமை டமஸ்கஸ் பல்கலை கழகத்தில் சட்டம் படிப்பதற்கு இவருக்கு வாய்ப்பை கொடுத்து, பெரும்பொருள் ஈட்ட உதவிய தனது சொந்த வணிகத்தை நிறுவும் முன்னர் அவர் கட்டாரில் ஆட்சிப் பணித்துறையில் வேலை பார்க்க அனுமதி பெற்றார்.

அந்த நேரத்தில் வளைகுடா பகுதியில், சிறப்புப் பயிற்சி பெற்று வேலையில் இருந்த பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் அரஃபாத்தின் பாலஸ்தீனிய தேசிய விடுதலை இயக்கம் என்று கூறப்பட்ட அல் பத்தாவுடன் தொடர்பைக் கொண்டனர்: இந்த அமைப்புத்தான் பின்னர் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் பிரதான பகுதி ஆயிற்று. பாலஸ்தீனிய முதலாளித்துவ தேசிய இயக்கத்தின் மிக தீவிர பகுதியை அல் பத்தா பிரதிநிதித்துவம் செய்தது. இஸ்ரேலால் கைப்பற்றப்பட்ட நிலத்தை மீண்டும் கொண்டுவரல் மற்றும் ஜனநாயக மற்றும் மதசார்பற்ற பாலஸ்தீனத்தை அமைத்தல் ஆகிய அதன் வெளிப்படையாய் அறிவிக்கப்பட்ட நோக்கம், ஆயுதப் போரட்டத்தின் மூலம் நிறைவேற்றப்பட இருந்தது மற்றும் தொழிலாள வர்க்கம் மற்றும் விவசாயிகள் மத்தியில் ஒரு பரந்த செல்வாக்குத் தளத்தை ஈர்த்தது. ஆனால் அது எப்பொழுதும் ஒரு முதலாளித்துவ பாலஸ்தீன அரசுக்கு ஆதரவாக ஒரு சோசலிச முன்னோக்கை எதிர்த்தது. இந்த வர்க்க நோக்குநிலைதான் அப்பாஸ் போன்ற மிக சலுகைமிக்க தட்டினரின் ஆதரவை வென்றெடுப்பதில் அல்பத்தாவை இயலச்செய்தது.

பத்தாவிற்கு நிதி திரட்டுபவராய் அப்பாஸ் ஆனார்; மேலும் அரேபிய ஆட்சிகளுடன் தொடர்புகளை கொள்ளுவதற்கும் அவர்தான் பொறுப்பை கொண்டிருந்தார். அராபிய தலைவர்கள், மற்றும் உளவுத் துறையின் தலைவர்கள் உள்பட சக்திமிக்க தொடர்புகளின் வலைப்பின்னலை அவர் அமைத்திருந்தார். அராபிய ஆட்சிகளின் சட்டபூர்வ தன்மையை, பாலஸ்தீன விடுதலை இயக்கம் ஏற்றதாலும், பாலஸ்தீனிய போராட்டத்தை அரபு மக்களுக்கும் அவர்களை ஆண்டு வந்த சர்வாதிகாரிகள், மற்றும் அரை நிலப்பிரபுத்துவ பரம்பரை ஆட்சிக்கும் எதிரான அரபுமக்களின் போராட்டத்திலிருந்து பிரிக்க உடன்பட்டதாலும், அவரால் இதனைச்செய்ய முடிந்தது.

அப்பாஸ் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் நிதிப்பொறுப்பை நிர்வகித்து வந்தபோதிலும்கூட, அவர் பத்தாவின் வலதுபுறத்தில் இருந்தார்: அவர், அரஃபாத், அபு இயத், அபு ஜிகாத் ஆகியோரின் தலைமையில் இருந்த பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் உள்வட்ட உறுப்பினராக இருந்ததில்லை. அரஃபாத்துடன் உட்புகையும் தொடர்பைத்தான் இவர் கொண்டிருந்தார்; பல சமயங்களில் நீண்ட கால அவகாசங்கள் இவர்கள் பேசிக் கொள்ளுவதுகூடக் கிடையாது. பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினுடைய பயங்கரவாத நடவடிக்கைகளில் இருந்து தன்னை தொலைவில் இருந்திக்கொண்டதுடன், ஜோர்டன் மன்னர் ஹூசைன் கறுப்பு செப்டம்பர் 1970 என்ற நடவடிக்கையில் மிருகத்தனமாக பாலஸ்தீனியர்களை ஒடுக்கி, பின்னர் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை ஜோர்டானில் இருந்து வெளியேற்றி, அவர்கள் லெபனான் செல்ல நிர்பந்திக்கப்படும் வரை, அவர் சிரியாவில்தான் இருந்தார்.

இஸ்ரேலுக்கு அங்கீகாரம் கொடுத்த முதல் பாலஸ்தீன விடுதலை இயக்க அதிகாரிகளில் அப்பாசும் ஒருவராவார்; ஒரு சிறிய பாலஸ்தீனிய நாடு இஸ்ரேலை ஒட்டி நிறுவப்படும், இரு-நாடுகள் தீர்வு என அழைக்கப்பட்டிருந்ததற்கு இவர் ஆதரவு கொடுத்திருந்தார். 1970 களின் கடைசியில் அவர் பாலஸ்தீனியர்கள் மற்றும் இஸ்ரேலிய சமாதானக் குழுக்களுக்கு இடையே உறவை ஏற்படுத்துவதற்கு உதவியாக இருந்தார். 1980ல் இருந்து அவர் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினுடைய தேசிய, சர்வதேச உறவுத் துறையின் தலைவராக இருந்தார்.

பாலஸ்தீனிய பிரதம மந்திரி அஹ்மத் குரேயும், அவரும் 1988ல் தான் அராபத்திற்கு நெருங்கியவர்களாக ஆயினர். அந்த ஆண்டு அப்பாஸ், பாலஸ்தீன விடுதலை இயக்க நிர்வாகக் குழுவின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் புகழடைந்ததற்கு, பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தீவிரப்போக்குடைய தலைவர்களை இலக்கு வைத்த கொள்கையை இஸ்ரேல் கொண்டிருந்ததும் ஒருவகையில் காரணமாகும். அபு ஐயத் மற்றும் அபு ஜிகாத் இருவரும் 1988ல் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளினால் கொலையுண்டனர். இந்தக் கொலைகள், அப்பாஸ், குரே இருவராலும் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட ஃபத்தாவின் வலதுசாரிப் பிரிவுக்கு அதிகாரத்தை மாற்றுதற்கு அரங்கை அமைத்துக் கொடுத்தன.

இன்னும் அடிப்படையாக, பாலஸ்தீன விடுதலை இயக்கம், வாஷிங்டனுடைய கரங்களுக்குள் தள்ளப்பட்ட இரண்டு பெரிய அரசியல் மாற்றங்களில் அப்பாஸ் ஆதாயம் அடைந்தார்.

முதலாவதாக, ஸ்ராலினிச அதிகாரத்துவம் சோவியத் ஒன்றியத்தை தகர்த்து தன்னுடைய வெளியுறவுக் கொள்கையை அமெரிக்காவுடன் இயைந்து நடத்த தலைப்பட்டது என்பது, ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையே சூழ்ச்சிக்கையாளல் மூலம் ஓரளவேனும் தங்களுக்கு சாதகமாக நடத்திக் கொள்ளலாம் என்றிருந்த சிறு வாய்ப்பையும் பிஎல்ஓ இழந்துவிட்டது என்பதை அர்த்தப்படுத்தியது. சோவியத் ஒன்றியத்தின் பொறிவு, இதுகாறும் முன்னோடியில்லாத வகையில் உலக ஆதிக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கு அமெரிக்காவிற்கு ஒரு வாய்ப்பை கொடுத்துவிட்டது. மத்திய கிழக்கின் உள்ளடக்கத்தில், இது மூத்த ஜோர்ஜ் புஷ் 1991ல் ஈராக்கின் மீதான வளைகுடா போரைத் தொடுக்க இயலக்கூடியதாய் ஆக்கியது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவை எதிர்ப்பதற்கு ஒரு தளத்தை உத்திரவாதப்படுத்த இறுதி முயற்சியை மேற்கொண்டிருந்த சதாம் ஹுசைனுக்கு ஆதரவைக் கொடுத்திருந்த, பிஎல்ஓ முற்றிலும் தனிமைப்பட்டுவிட்டது.
இரண்டாவதாக, இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு எதிரான பாலஸ்தீனிய தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் தன்னியல்பான எழுச்சியான இன்டிபதா டிசம்பர் 1987ல் வெடித்தது, அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு நீடித்தது. அது இஸ்ரேலையும், வாஷிங்டனையும் அதிர்ச்சிக்கு உட்படுத்தியதோடு மட்டும் அல்லாமல், பரந்து பட்ட மக்களின் புரட்சிகர இயக்கம் பாலஸ்தீனத்திலும், எண்ணெய் வளம் நிறைந்த ஏனைய பல மத்திய கிழக்கு நாடுகளிலும் கட்டுப்பாட்டை மீறிச் சென்றுவிடும் என்ற அச்சத்திற்கு பாலஸ்தீனிய முதலாளித்துவ வர்க்கத்தையும் ஆளாக்கியது. அப்பாஸ் பிரதிநிதித்துவப்படுத்தும் புலம்பெய்ர்ந்திருந்த பாலஸ்தீனிய முதலாளித்துவ வர்க்கத்தினர் தங்களுடைய பொருளாதார, சமூக அபிலாஷைகளுக்கு இதனை ஒரு பெரிய அச்சுறுத்தலாக பார்த்தனர்.

போர்க்குணமிக்க இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களை உள்நாட்டில் எதிர்கொண்ட நிலையில், பாலஸ்தீனிய முதலாளித்துவ வர்க்கம் தன்னுடைய ஆட்சியை எப்பொழுதேனும் நிறுவ வேண்டும் என்றால் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவு தேவை என்ற முடிவிற்கு வந்தது. இந்தக் காரணிகள்தான் புதிதாய் மறுசீரமைக்கப்பட்டிருந்த பிஎல்ஓ தலைமையை வெள்ளை மாளிகை புல்வெளியில் ஆயுதமேந்திய போராட்டதை கைவிடுவதாக அறிவிக்கச் செய்தது. அது, மத்திய கிழக்கின் அடிப்படை வர்க்கப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் பாலஸ்தீனிய பிரச்சினையை தான் தீர்த்து வைக்க முடியும் என்ற பிஎல்ஓவின் பெரும் கற்பனை கருத்திற்கு, ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதை குறித்தது.

இந்த நிகழ்வுகள்தான், இஸ்ரேலுக்கு நிபந்தனையற்ற முறையில் சரணடைவதற்கும், எந்தவித பாலஸ்தீன அரசின் எதிர்கால வடிவத்திற்குமான விதிகளை பிஎல்ஓ விற்கு கட்டளையிடவும் அமெரிக்காவினை இயலச்செய்தன. 1991 மாட்ரிட் மாநாடு, ஓஸ்லோவில் நடைபெற்ற இரகசிய பேச்சுவார்த்தைகள் இரண்டிலுமே முக்கிய பங்கு பெற்றிருந்த அப்பாஸ்தான், இஸ்ரேலுடன் கேடுபயக்கும் 1993 ஓஸ்லோ உடன்படிக்கைகளில் பிஎல்ஓ சார்பில் கையெழுத்திட்டு, பாலஸ்தீனிய சுதந்திர நாடு உருவாகுவதற்கு முதல் கட்டத்தை அமைத்தார்.

தொடரும்...


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved