World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா

Conflict over Sudan on United Nations Security Council

சூடான் தொடர்பாக ஐக்கிய நாடு பாதுகாப்பு சபையில் மோதல்

By Brian Smith
28 February 2005

Back to screen version

சூடான் பிரச்சனை தொடர்பாக, அமெரிக்க, ஐரோப்பிய வல்லரசுகள் மற்றும் சீனா இவற்றுக்கிடையே ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் (UNSC) அதிகாரப் போராட்டம் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது.

பல மாதங்களாக, புஷ் நிர்வாகம் சூடானில் டர்புர் பிராந்தியத்தில் இனப்படுகொலையை ஆதரித்து வருவதாக அரசாங்கத்தின் மீது குற்றம் சாட்டி இராணுவத் தலையீட்டுக்கு கோரியும், கார்ட்டூம் ஆட்சிக்கு எதிராக தடைகளை விதிக்க வேண்டும் என்று கோரியும் வருகிறது.

சென்ற அக்டோபரில் அன்றைய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கொலின் பவல் "டர்புரில் இனப்படுகொலை செய்யப்பட்டு வருவதாக", அறிவித்தார், அந்தக் குற்றச்சாட்டானது ஐக்கிய நாடுகள் சபை அதை விசாரிப்பதற்கு ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட வக்கீல்கள் குழுவை அமைப்பதற்கு இட்டுச்சென்றது.

டர்புர் மக்கள் ஒரு பாரிய அளவிற்கு மனிதநேய பேரழிவை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதிலோ அல்லது சூடான் தேசிய இஸ்லாமிய முன்னணி (NIF) அரசாங்கம் மேற்கு சூடானில் பாதுகாப்பற்ற குடிமக்கள் மீது Janjaweed குடிப்படை வன்முறை தாக்குதல்களை நடத்துவதை ஆதரிக்கிறது என்பதிலோ சந்தேகத்திற்கு இடமில்லை. கடைசியாக கிடைத்துள்ள தகவல்கள் இந்த மோதலினால் வடக்கு டர்புர் மாநிலத்தில் கிராமங்கள் மீது அரசாங்க போர்விமானங்கள் குண்டு வீசி தாக்குதல்களை நடத்துகின்றன என்றும் நாடு முழுவதிலும் உணவுப் பற்றாக்குறை பெருகிக்கொண்டு வருகிறதென்றும் கோடிட்டுக் காட்டுகின்றன.

என்றாலும், டர்புரில் நடைபெறுகின்ற வன்முறைகளை பவல் ''இனப்படுகொலை'' என்று சிற்ப்புப்பெயரிடுவது, சூடான் மக்களின் கதியைப் பற்றிய உண்மையான கவலைகளினால் அல்ல. ''இனப்படுகொலை'' என்ற சொல் அரசியல்ரீதியாக அழுத்தம் கொடுக்கப்படுகிறது. டர்புர் நிலவரத்தை மிகக் கொடூரமான வார்த்தைகளில் சித்தரிப்பதன் மூலம், அமெரிக்க ஏகாதிபத்தியம்----ஈராக்கிலும் கொசோவாவிலும் செய்ததைப்போன்று மனிதநேய பாசாங்கை பயன்படுத்தி வடக்கு ஆபிரிக்காவிலும் மற்றும் அந்தக் கண்டம் முழுவதிலும் தன்னை கட்டுப்படுத்தும் சக்தியாக ஸ்தாபித்துக் கொள்ளும் முயற்சிகளை நியாயப்படுத்துவதற்காகத்தான். 1948-ல் உருவாக்கப்பட்ட இனப்படுகொலை குற்றத்தைத் தடுப்பது மற்றும் தண்டிப்பது தொடர்பான ஒப்பந்தத்தின் 8-வது பிரிவுப்படி, இனப்படுகொலை என்று வடிவமைக்கப்படும் எதுவும் ஐக்கிய நாடு இராணுவ அடிப்படையில் தலையிடுவதைத் தூண்டும்.

அமெரிக்கா பொருளாதாரத்தடையை விதிக்கக் கோருவது சூடானில் தான் மேலாதிக்கம் செலுத்தும் நலன்களை உறுதி செய்து கொள்வதற்குதான்.

சூடான் மிகப்பெரிய எண்ணெய் இருப்புகள் கொண்ட, ஒரு புவியியல் மூலோபாய பகுதியில் அமைந்துள்ளது, 660 மில்லியன் முதல் 1.2 பில்லியன் பீப்பாய்கள் வரை எண்ணெய் வளம் இருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் சீனா தற்போது நாட்டின் எண்ணெய் துறையில் 40 சதவீதம் தன்வசம் வைத்திருக்கிறது, ரஷ்யாவிற்கும் பிரான்சிற்கும் கூட கணிசமான பிடிப்புக்கள் உள்ளன. எனவே எந்தத் தடைகள் விதிக்கப்பட்டாலும் அவை அமெரிக்காவின் பிரதான போட்டியாளர்களை குறிப்பாக பாதிக்கும்.

இந்தக் குறிக்கோளோடு புஷ் நிர்வாகம் மேற்கொண்ட முயற்சிகள் இதுவரை தோற்கடிக்கப்பட்டு வருகின்றன. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை இதற்கு முன்னர் சூடானுக்கு எதிராக தடைவிதிக்க மறுத்துவிட்டது, டர்புர் நிலவரத்தை எந்தவகையிலும் இனப்படுகொலை என்று முத்திரை குத்துவதை பிரான்ஸ் தள்ளுபடிசெய்தது.

இதற்கு முன்னரான பொருளாதாரத்தடைகளை முன்மொழியும் அமெரிக்க ஆதரவு தீர்மானத்தை பாதுகாப்பு சபையில் சீனா, பிரான்ஸ் மற்றும் ரஷ்யா நிறைவேறாது தடுத்து நிறுத்தின. அதற்குப் பின்னர் அமெரிக்கா, மேற்கு நாடுகளின் கட்டுப்பாட்டில், அவற்றின் செலவில், பெரிய ஆபிரிக்க ஒன்றிய (AU) படையை அந்த பிராந்தியத்திற்கு அனுப்ப வேண்டுமென்று இராணுவத் தலையீட்டு யோசனையை தெரிவித்தது-----இந்த முன்மொழிவை பிரிட்டனும் ஆஸ்திரேலியாவும் ஆதரித்தன.

சென்ற மாதம், இத்தாலிய நீதிபதி Antonio Cassese தலைமையில் சூடான் மீது விசாரணை மேற்கொண்ட ஐந்து உறுப்பினர்கள் கொண்ட ஐ.நா குழு அளித்த அறிக்கையின் வார்த்தைகள் அமெரிக்காவின் இராணுவத் தலையீடு கோரிக்கையை கீழறுக்க சேவை செய்தது.

கார்ட்டூம் படைகளும் ஜன்ஜாவீத் படைகளும் டர்புரில் குடிமக்களை கொல்வது, சித்திரவதை, கற்பழிப்பு, சூறையாடல், காணாமல் போகச் செய்துவிடுவது, கிராமங்களை அழிப்பது கட்டாயப்படுத்தி வெளியேற்றுவது போன்ற கண்முடித்தனமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அந்த அறிக்கை குறிப்பிட்டது. என்றாலும், ஒரு குறிப்பிட்ட இனக்குழுவை தீர்த்துக்கட்டுவதற்கான கொள்கை, கார்ட்டூம் அரசாங்கத்திடம் இருந்தது என்பதை நிரூபிக்கும் சான்று எதுவும் இல்லை என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது. எனவே, கடந்த இரண்டு ஆண்டுகளாக டர்புரில் நடந்து வரும் வன்முறைகள், இனப்படுகொலை அல்ல என்று அது முடிவு செய்திருக்கிறது, ஆனால் அங்கு நடைபெற்றவை "இனம் சார்ந்த மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள்" என்று குறிப்பிட்டிருக்கிறது.

ஹேக்கை தளமாகக்கொண்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) இந்த அட்டூழியங்களுக்கு பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று அந்த அறிக்கை ''சக்திவாய்ந்த'' முறையில் பரிந்துரை செய்திருக்கிறது. அந்த அறிக்கையின் இணைப்பில் 51 சூடான் அதிகாரிகள், குடிப்படையினர் மற்றும் கிளர்ச்சித் தலைவர்கள் இதில் மறைமுகமாய் சம்மந்தப்பட்டிருப்பதாக பட்டியலிட்டு குற்றம் சாட்டியுள்ளது. வழக்கு தொடர்வதற்கு போதுமான சான்று உள்ளது என்று ஒரு நீதிமன்றம் முடிவு செய்கின்றவரை அந்தப் பட்டியல் இரகசியமாகவே இருக்கும்.

அந்த விசாரணைக் குழு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்திருப்பது அமெரிக்காவின் அபிலாஷைகளுக்கு எதிராக விழுந்த மற்றொரு அடியாகும்.

வளர்ந்து வரும் ஆக்கிரமிப்பு மற்றும் சட்டவிரோத ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு போரில் அவர்களது பங்களிப்பிற்காக அமெரிக்க அதிகாரிகள் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரிக்க பயன்படுத்தப்பட முடியும் என்ற அச்சத்தில், புஷ் நிர்வாகமானது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை அங்கீகரிக்க மறுத்து வருகிறது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு நிதி வழங்கும் மற்றும் அமெரிக்காவின் தன்னிச்சையான அபிலாஷைகளை கட்டுப்படுத்துவதற்கு அதனைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று நம்பும் ஐரோப்பிய வல்லரசுகளின் நிலைப்பாட்டை ஐ.நா கமிஷனின் அறிக்கை எதிரொலிக்கிறது.

சென்ற வாரம் அமெரிக்கா முன்னெடுத்து வைத்துள்ள ஒரு நகல் தீர்மானத்தினால் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் மேலும் பிளவுகள் தோன்றியுள்ளன, டர்புர் மீது ஆயுத தடைவிதிக்க அந்தத் தீர்மானம் கேட்டுக்கொள்கிறது. ஆதரவு இல்லாவிட்டாலும், நிலவரம் மோசமடைந்தால், எண்ணெய் தடைகள் விதிக்கவும் அது மேலும் அச்சுறுத்துகிறது. அந்த பிராந்தியத்து வன்முறைகளுக்கு பொறுப்பானவர்கள் மீது பயணம் செய்ய தடைவிதிக்கவும் அவர்களது சொத்துக்களை முடக்கவும் அந்த நகல் தீர்மானம் மேலும் கேட்டுக் கொள்கிறது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினைக்காட்டிலும், 1994-ல் ருவண்டாவில் இனப்படுகொலை தொடர்பாக, ஒரு சிறப்பு நீதிமன்றம் விசாரணை செய்ததைப் போன்று சூடானில் போர்க்குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது விசாரணை நடத்த வேண்டுமென்று அமெரிக்கா தற்போது முன்மொழிந்துள்ளது. உண்மையிலேயே, போர்குற்றங்களுக்கான அமெரிக்க தூதர் Peiere Rechard Prosper, இதற்கு முன்னர் அமெரிக்கா விமர்சித்திருந்தாலும், தான்சானியாவிலுள்ள Arusha நீதிமன்றத்தை பயன்படுத்தி விசாரணை நடத்தலாம் என்று கருத்துரைத்திருக்கிறார். அவரது நிலையை விளக்குகையில், Prosper மொட்டையாக "சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை சட்டபூர்வமானதாக ஆக்குவதில் நாங்கள் ஒரு தரப்பாக இருக்க விரும்பவில்லை" என்றார்.

அண்மையில் ஐரோப்பிய சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபொழுது அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கொண்டலிசாரைஸ் இந்த நிலைப்பாட்டை உறுதிப்படுத்தினார். "சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பற்றிய அமெரிக்க கருத்துகள் மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தொடர்பான ஆபத்துக்களும் மாறவில்லை. அதற்கான தரப்பாக நாங்கள் இல்லை," நாங்கள் எண்ணிலடங்கா பிராசிகியூட்டர்கள் பற்றியும் எண்ணிறைந்த வழக்குகள் பற்றியும் கவலைப்படுகிறோம்" என்று அவர் சொன்னார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை எதிர்ப்பதற்கு பாதுகாப்பு சபையில் அமெரிக்கா தனது இரத்து அதிகாரத்தை பயன்படுத்தும் என்று கருதப்படுவதால், டர்புர் அட்டூழியங்களில் சம்மந்தப்பட்டவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்வது நடக்காமல் போகலாம் என்று தோன்றுகிறது. அமெரிக்கா கூட்டத்தில் கலந்து கொள்ள மறுத்துவிட்டாலும் அல்லது ஒரு மாற்று நீதிமன்றம் தொடர்பாக ஒரு சமரச உடன்படிக்கைக்கு வந்தாலும் கூட, அதற்கு பின்னரும் சீனா தனது இரத்து அதிகாரத்தை பயன்படுத்திக் கொள்ளக் கூடும் இதற்கு விரிவான எண்ணெய் நலன்கள் உண்டு, கார்ட்டூம் ஆட்சியோடு நெருக்கமான உறவுகளை அது வைத்திருக்கிறது. பத்திரிகை செய்திக் குறிப்பில், அமெரிக்காவும் ஐரோப்பாவும் எதிர்க்கின்ற சூடான் நீதிமன்றங்களிலேயே விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சீனா அழைப்பு விடுத்திருக்கிறது மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கோ அல்லது அமெரிக்கா முன்மொழிந்துள்ள தான்சானியா நீதிமன்றத்திற்கோ விசாரணைக்கு விடுவதை சீனா சிபாரிசு செய்யவில்லை.

டர்புர் தொடர்பாக பெரிய வல்லரசுகளுக்கிடையே ஏற்பட்டுள்ள பிளவுகளின் மேலும் கூடிய விளைவு என்னவென்றால் சென்ற கோடைக்காலத்தில் உடன்பாட்டிற்கு உள்ளான ஆபிரிக்க யூனியன் இதுவரை பிரான்ஸ் அளவிற்கு பரந்து விரிந்து கிடக்கும் அந்த பிராந்தியத்தில் ரோந்துபணிகளில் ஈடுபடுவதற்கு 900 துருப்புக்களை மட்டுமே திரட்ட முடிந்திருக்கிறது, மேற்கு நாடுகளிலிருந்து குறைந்த நிதியுதவியே வந்துகொண்டிருக்கும் நிலையில் ஆபிரிக்க நாடுகள் துருப்புக்களை அனுப்ப தயங்கிக்கொண்டிருக்கின்றன.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் இறுமாப்பான சூழ்ச்சிகளின் விளைவுகள் எதுவாக இருந்தாலும், டர்புர் நெருக்கடியைத் தீர்த்து வைப்பதற்கு எந்த மேற்கு நாட்டின் மீதும் நம்பிக்கை வைக்க முடியாது. சூடான் மக்கள் எதிர்கொள்கின்ற பேரழிவு நிலைமைகளிலிருந்து ஒரு தீர்வு, உண்மையிலேயே ஆபிரிக்கா முழுவதும் எதிர்கொள்ளுகின்றவற்றுக்கு தீர்வு, பத்து மில்லியன் மக்கள் தற்போது பெருமளவில் போருக்கும், பயங்கர வறுமை நிலைமைக்கும் ஆளாவதற்கு நேரடிப் பொறுப்பாக இருக்கும் கொடூர சுரண்டலை உருவாக்கும் ஏகாதிபத்தியம், வங்கிகள் மற்றும் பன்னாட்டு பெருநிறுவனங்கள் இவற்றிற்கு எதிரான ஒரு போராட்டத்தில் மட்டுமே காணப்பட முடியும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved