World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Germany: conflicts in the Foreign Ministry over past fascist links

ஜேர்மன்: கடந்தகால பாசிச தொடர்புகள் பற்றி வெளிநாட்டு அமைச்சில் முரண்பாடுகள்

By Martin Kreickenbaum and Peter Schwarz
23 April 2005

Back to screen version

மிக உயர்ந்த தூதரக படிநிலையில் உள்ள ஒரு அதிகாரியை பதவிநீக்கம் செய்தது, ஜேர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சக தூதர்கள், அலுவலர்கள் ஆகியோர் பாசிச தொடர்பை கடந்த காலத்தில் கொண்டிருந்தது பற்றிய மோதல்களை மிகவும் உயர்மட்டத்திற்கு கொண்டுவந்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன், வெளியுறவு மந்திரி ஜோஷ்கா பிஷ்ஷர் கோரியதின்பேரில், ஜனாதிபதி கோர்ஸ்ட் கோலர் ஜேர்மனியின் தூதூராக ஸ்விட்சர்லாந்தில் இருந்த பிராங்க் எல்பவை உடனடியாக கட்டாய ஓய்வு பெறுமாறு உத்தரவிட்டார். ஹிட்லரின் நாஜிக்கட்சியில் உறுப்பினர்களாக (NSDAP) இருந்த தூதர்களுக்கு நினைவுப் பாராட்டு விழாக்கள் நடத்துவதை பிஷர் தடை செய்திருந்ததை ஒரு கடிதத்தில் பிராங் எல்ப ஜேர்மனிய வெளியுறவு மந்திரியை கடுமையாக தாக்கியிருந்தார்.

எல்பவின் கடிதமும் வேண்டுமென்றே ஒரு அவதூறை கிளப்பிவிட வேண்டும் என்ற கருத்தைத்தான் கொண்டிருந்தது. வெளியுறவு அமைச்சகம் மிக மோசமான முறையில் நெருக்கடி நிர்வாகத்தை செயல்படுத்துவதாக அவர் குறை கூறினார்; "அதிகாரத்துவ மெத்தனமும், உறுதியற்ற அரசியல் உணர்வும்தான் இதற்குக் காரணம்" என்றும் அவர் தெரிவித்தார். அவருடைய அறிக்கைகள் உடனடியான பரபரப்பு செய்திதாளான Bild இலும் இன்னும் பல வலதுசாரி ஏடுகளிலும் வெளிவந்தன.

மே மாதம் 64 வயது நிரம்பும் பிராங் எல்ப, நீண்ட கால அரசியல் வாழ்வை கொண்டவராவார். தாராளவாத ஜனநாயகக் கட்சியின் (FDP) உறுப்பினராக பல ஆண்டுகள் இருந்ததுடன் வெளியுறவு மந்திரியாக Hans Dietrich Genscher (FDP) இருந்தபோது, அலுவலக தலைமைப் பொறுப்பையும் கொண்டிருந்தார். வெளியுறவு அமைச்சகத்தில் அதிகாரிகள் பதவி பற்றித் திட்டமிடும் பொறுப்பை அவர் கொண்டிருந்ததோடு, தாராளவாத ஜனநாயகக் கட்சி ஆட்சிக்கு வந்தால் மந்திரியாகவோ அல்லது துணை வெளிநாட்டு மந்திரியாகவோ வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தார். பிஷ்ஷர் இவரை பேர்னில் உள்ள அவ்வளவு முக்கியத்துவம் இல்லாத ஸ்விஸ்நாட்டு தூதரகத்திற்கு அனுப்பி வைக்கப்படுவதற்கு முன், புது டெல்லி, டோக்யோ, வார்சோ ஆகிய இடங்களில் தூதராக பணியாற்றியுள்ளார்.

இரண்டு ஆண்டுகளாகவே வெளியுறவு அமைச்சகத்தில் மறைந்த தூதர்களின் நினைவை பாராட்டும் வழக்கம் பற்றி கடுமையான வாதங்கள் நிகழ்ந்து, கிட்டத்தட்ட வெளியுறவு மந்திரிக்கு எதிரான எழுச்சியையே தோற்றுவித்துள்ளன. "கசப்புணர்வு, நம்பிக்கையற்ற தன்மை, சூழ்ச்சி ஆகிய நிலைமை காணப்படுகிறது; நீண்ட காலமாக பணியாற்றிய தூதர்கள் கூட இப்படிக் கண்டதில்லை" என்று Der Spiegel பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. பொறுப்பில் இருக்கும் நபர் "அதிகாரம் விரைவில் பறிபோய்விடுமோ என்ற உணர்வில் உள்ளார்; தன்னுடைய அமைச்சகத்தில் கட்டுப்பாட்டை இழக்கும் அபாயத்தை அவர் வெளிப்படையாக கொண்டுள்ளார்; பெருகிய அளவில் கண்ணி வைக்கப்பட்டுள்ள நிலத்தைப் போல் அலுவலகம் உள்ளது."

ஜேர்மனியின் உயர்தூதுவராலய அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற பிரன்ஸ் நூஸ்லைன் பற்றிய இரங்கற் குறிப்பில் இருந்து இந்த வாதங்கள் தொடங்கின; அவை முதலில் அமைச்சரக உள்ளேடான internAA இல் வந்தது. வெளியுறவு அமைச்சகத்தின் ஊழியர் ஒருவர் நூச்லைனின் வாழ்க்கை குறிப்பு பற்றியும் அவர் NSDAP யில் இருந்தது பற்றி பிஷரின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். செப்டம்பர் 2003 இலேயே பிஷ்ஷர் NSDAP இல் உறுப்பினர்களாக இருந்த தூதர்களுக்கு வெளியுறவு அமைச்சகத்தின் உள் ஏட்டில் இரங்கற் குறிப்பு கொடுத்து மதிப்புக் கொடுக்கக் கூடாது என்று முடிவெடுத்தார்.

இது ஒரு முன்னோடியாகவே போயிற்று; அக்டோபர் 2004ல் முன்னாள் NSDAP உறுப்பினரும் ஓய்வு பெற்ற தூதருமான பிரன்ஸ் கிராப் மரணம் அடைந்த பின் உள் ஏடான internAA யில் அவர் இறந்த பின் கொடுக்கப்படும் பாராட்டுக் குறிப்பு அளிக்கப்படவில்லை.

முதலில் முன்னாள் தூதர்கள், துணைச்செயலர்கள் மட்டுமே எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் நூறு பேருக்கும் மேலானவர்கள் இரங்கற் குறிப்பு ஒன்றை Frankfurter Allgemeine நாளேட்டில் வெளியிட்டு, மறைந்த NSDAP உறுப்பினருக்கு தங்களுடைய "பெருமதிப்புடன் நினைவு கூருதலை" குறிப்பிட்டனர். Die Welt, Frankfurter Allegemeine Zeitung மற்றும் வலதுசாரி பரபரப்பு ஏடான Bild போன்றவை முன்னாள் தூதர்கள் சிலரை மேற்கோளிட்டு இந்தத் தகவல்களை வெளியிட்டன.

ஓர் ஓய்வு பெற்ற தூதரான போல் வீர்பீக், Frankfurter Allgemeine பத்திரிகையில் ஒரு ஜேர்மனிய வெளியுறவு மந்திரி என்னும் முறையில், பிஷ்ஷர் "வரலாற்று அறிவு போதாத தன்மை மற்றும் சிந்தனையில் குருட்டுத் தன்மை இவற்றை வெளிப்படுத்திய வகையில்" உள்ளார் என்று கூறினார். ஓய்வு பெற்ற தூதர்கள் கிராப் உடைய கடந்த காலத்தை நன்கு அறிவர்; ஏனெனில் அவர்களும் NSDAP யின் உறுப்பினர்களாகத்தான் இருந்துள்ளனர்.

"விசா விவகாரத்தில்" பிஷ்ஷர் வருத்தத்துடன் தன்னுடைய பிழைகளை ஒப்புக் கொண்டது போல், இந்த விவகாரத்திலும் வெளியுறவு மந்திரி தன்னுடைய எதிரிகளை நோக்கி ஓரடி வைத்தார். (See "Germany: Foreign Ministry under fire in visa affair"). மார்ச் 17 அன்று அவர் வெளியுறவு அமைச்சகத்தின் அலுவலர்களுக்கு அனுப்பி வைத்த குறிப்பாணையில், வருங்காலத்தில் internAA இல் இரங்கற் குறிப்புக்களை வெளியிடாமல் அலுவலர்கள், முந்தைய அலுவலர்கள் ஆகியோரின் இறப்பு பற்றிய தகவலை வெளியிடலாம் என்று தெரிவித்தார்.

இந்தக் குறிப்பு பணியாற்றும் தூதர்களை தங்களுடைய மேலதிகாரிக்கு எதிரான பிரச்சாரத்தில் பகிரங்கமாக பங்கு கொள்ள ஊக்குவித்தது. 70 தூதர்கள், மற்றும் பல வெளியுறவு அமைச்சரக அதிகாரிகளும் ஒரு பகிரங்கக் கடிதத்தில் கையெழுத்திட்டனர்; அதில் புதிய கொள்கைக்கு எதிர்ப்புக் கூறப்பட்டு, பிஷ்ஷர் "திமிர்த்தனமாக தன்னுடைய திறன்களை பற்றி உயர்மதிப்பு கொண்டுள்ளார்" என்று கூறப்பட்டது. இந்தக் கடிதம் internAA வில் வரவேண்டியது; ஆனால் இன்னும் வெளியிடப்படவில்லை.

பிஷருக்கு எல்ப எழுதிய கடிதம், இன்னும் 40 பேர்களுக்கும் அவரால் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது; இதன் பின் முழுப் பூசலும் பகிரங்கமாயிற்று. ஒரு சில தினங்களுக்கு முன்பு தாராளவாத ஜனநாயக கட்சியின் பாராளுமன்ற பிரிவுத் தலைவர் வொல்வ்ஹாங் ஹெகார்ட் தூதர்களிடம் பிஷ்ஷரின் கொள்கையில் தாங்கள் கொண்டிருந்த அதிருப்தியை வெளியிடுமாறு கேட்டுக்கொண்டார்.

வெளியுறவு அமைச்சகத்தின் பாசிசத்தின் தொடர்ச்சி

எல்பவின் கடிதம், மிக உயர்ந்த முறையில் மறைந்த தூதர் கிராப் இனை பாராட்டி அவருக்காகப் பரிந்துரைத்து பேசியது. அவர் ஒரு "பெரும் மதிப்பிற்குரிய சக ஊழியராள இருந்தார்" என்றும் "இவருக்கு அவருடைய அலுவலகத்திலும், ஜேர்மனியக் கூட்டரசுக் குடியாட்சியிலும் தக்க முறையில் நினைவு கூறல் மறுக்கப்பட்டுள்ளது" என்றும் அவர் குறைகூறியிருந்தார்.

இதன் பின்னர் ஒரு பெரும் வியப்பை அளிக்கும் பந்தி உள்ளது. எல்ப கூறுகிறார், "மேலைநாட்டு மரபின்படி இறந்தவர்களை பெருமைப்படுத்தவேண்டும், என்றும் அவர்களை பற்றி எந்தக் கெடுதலும் கூறப்படக்கூடாது என்றும் உள்ளது"; பிஷ்ஷரின் குறிப்பு "நாம் கெளரவமானவர்களுக்கும், சமரசத்திற்குட்பட்டுவிட்ட என கூறப்படும் வெளியுறவு அமைச்சரக அலுவலகர்களுக்கு இடையேயான வேறுபாட்டை காணமுடியாமற் போய்விட்டோமோ என்ற சந்தேகங்கள் எழுந்துவிட்டன.

சமரசமாகிவிட்டனரோ என்று ''கூறப்படும்'' வெளியுறவு அமைச்சரக ஊழியர்களா? எல்பயின் கருத்தின்படி உண்மையில் எவருமே சமரசத்திற்கு உட்பட்டுவிடவில்லை, எனவே நாம் அவர்களைப் பற்றி "எந்தக் கெடுதலும் கூறக்கூடாது." இது இந்த விவகாரம் முழுவதற்கும் எரியூட்டிய பிரன்ஸ் நூஸ்லைனுக்கும் பொருந்துமா என்று அவர் கூறவில்லை.

உண்மையில் பாசிச தொடர்ச்சியின் ஒரு அடித்தளமாகத்தான் வெளியுறவு அமைச்சகம் இருந்து வருகிறது. "வேறு எந்த அமைச்சரகமும், நாஜி மரபுகளை வெளியுறவு அமைச்சரகம் தொடர்ந்தது போல் தொடரவில்லை" என்று Sueddeutsche Zeitung பத்திரிகையில் ஹரிபேர்ட் பிரண்ட்ல் எழுதியுள்ளார். "இங்கு தேசியவாத உயர்குடியினர் மட்டும் இல்லாமல் பாசிச மரபுகளும் இணக்கமாக உள்ளன. நீண்டகாலமாகவே தூதரகப் பணி பற்றி அமைதியாக வைக்கப்பட்டிருந்தது. மிகப் பெரிய தனியார் நிறுவனங்கள் வரலாற்று ஆய்வுக்குழுக்களை நியமித்து மூன்றாம் குடியரசின் (பாசிச ஆட்சி) காலத்தின் அந்த நிறுவனம் என்ன செய்திருந்தது என்பதை நிரூபித்த அளவில், வெளியுறவு அமைச்சகம் இது தேவையில்லை என்பதுபோல்தான் நடந்து கொண்டுள்ளது."

நாஜி அமைப்பில் தனிப்பட்ட முறையில், ஏராளமான வெளியுறவு அமைச்சரக அலுவலர் ஆதிக்கத்தின் கீழ் இருந்தனர் என்பது மட்டும் இல்லாமல், இந்தத் துறையின் கடந்த காலமே தீவிரமான முறையில் ஆராய்ந்து முடிவு காணப்படவில்லை. NSDAP உடைய முன்னாள் உறுப்பினர்கள் மட்டும் இதில் இருந்திருக்கவில்லை. தாராளவாத ஜனநாயக கட்சியினை சேர்ந்த வெளியுறவு மந்திரிகளான வோல்ட்டர் ஸீல, ஹன்ஸ் டீற்ரிஷ் ஹென்ஸர் ஆகியொரும் நாஜிக் கட்சியிலேயே இருந்திருக்கின்றனர்.

1952ம் ஆண்டு, வெளியுறவு அமைச்சரகத்தின் அரசியல் கடந்த காலம் பற்றி ஒரு கடுமையான விவாதம் ஏற்பட்டது. அப்பொழுது கூட்டரசின் அதிபராக இருந்த கோன்ராட் அடிநோர் (CDU), மூன்றில் இருபங்கு உயர் அதிகாரிகள் முன்னாள் NSDAP உறுப்பினர்களாக இருந்தவர்கள் என்பதை ஒப்புக் கொள்ள நேரிட்டது; இது மற்றய அமைச்சரகங்களை விட அதிகமாகும் என்று வரலாற்று ஆசிரியர் ஹன்ஸ் ஜோர்கன் டொஷ்ஷர் கண்டுபிடித்துள்ளார். ஐந்து உட்பிரிவு தலைவர்களில் நான்கு பேர் நாஜிக்களுக்கு பணிபுரிந்திருக்கின்றனர்.

1951ல் அமைச்சரகத்தின் கட்டமைப்பு முறை 1936ல் இருந்ததைவிட ஒன்றும் அதிகமான மாற்றத்தை கொண்டிருக்கவில்லை. 1939ல் அமைச்சரக அலுவலர்களில் இருந்த NSDAP முன்னாள் உறுப்பினர்களின் எண்ணிக்கை, 1945க்குப் பின்னர் இன்னும் அதிகமாக போயிற்று. முன்னாள் நாஜிக்கள் தங்களுடைய தூதரகப் பணிகளை தொடர்ந்து கொண்டதில் எந்தச் சிக்கலும் இல்லை; பிரிட்ஸ் கோல்பே போன்றவர்கள் நேச நாடுகளின் கவனத்திற்கு கொண்டுவருவதற்காக Auschwitz இனக் கொலை பற்றிய ஆவணங்களை உயிரைப் பணயம் வைத்துத்தான் ஸ்விட்சர்லந்துக்கு எடுத்துச் சென்றிருந்தனர்; இவர்கள் அமைச்சரகத்தின் கறைபடிந்ந துணிகளை பகிரங்கமாக துவைப்பவர்களாக கருதப்பட்டனர்; அவர்களுக்கு வேறு எந்தவிதமான பணியும் தூதரக அமைச்சரகத்தில் கொடுக்கப்படவில்லை.

Financial Times Deutschland இடம் டொஷ்ஷர் முன்னாள் நாஜிக்களை கோன்ராட் அடிநோர் பெரிதும் நம்பினார்; ஏனெனில் அவர்கள் விரைவில் செயல்படும் ஒரு அமைச்சரகத்தை நிறுவி, தீவிர கம்யூனிச எதிர்ப்புக்கொண்ட பழைய NSDAP உறுப்பினர்களை நம்பி, மேலைநாடுகளில் புதிய ஜேர்மன் கூட்டாட்சி குடியரசின் கொள்கைகளை நன்கு பிணைக்க உதவுவார்கள் என்ற கருத்தை அவர் கொண்டிருந்தார்.

வெளியுறவு அமைச்சரகம் தன்னுடைய வடிவமைப்பிலேயே "கடந்த காலத்துடன் எப்படி சமரசம் செய்து கொள்ளுவது" என்பது பற்றி அறிந்து செயல்பட்டது; தன்னுடைய மண்ணிறத்தோலை (பாசிசநிறம்) அது இந்நிலையில் மறைத்துக் கொள்ளப் பார்க்கிறது. வரலாற்றாளர் உல்றிஜ் ஹேர்பேர்ட் உடைய நூலை மேற்கோளிட்டு ஹெரிபேர்ட் பிராண்ட்ல் பின்வருமாறு தெரிவிக்கிறார்: "பல ஆண்டுகளும் வெளியுறவு அமைச்சரகம் முந்தைய நாஜிக்களை வெளிநாட்டு சிறைகளில் இருந்து கொண்டுவருவதற்கும், வெளிநாட்டில் இருக்கும்போது சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுவிட்ட நாஜிக் குற்றவாளிகளுக்கு முன்எச்சரிக்கை விடுக்கும் கருவியாகவும் செயல்பட்டு வந்தது."

2003ம் ஆண்டில் internAA ஆல் பெருமைப்படுத்தப்பட்ட பிரன்ஸ் நூஸ்லைன் உண்மையிலேயே நாஜிக் குற்றங்களில் ஜேர்மனிய தூதர்கள் தொடர்பு கொண்டிருந்ததற்கு தெளிவான உதாரணம் ஆகும். ஆனால் அவருடைய நிலைப்பாடு ஒன்றும் தனிப்பட்ட நபரின் விவகாரம் அல்ல.

NSDAP யில் இளவயதிலேயே பிரன்ஸ் நூஸ்லைன் சேர்ந்திருந்தது மட்டும் இல்லாமல் பிராக்கிலும் (செக் நாடு), ஜேர்மன் பிரதிபாதுகாவலரும், நாஜிப்படையின் உயர்குழுத்தலைவரான இருந்த றைன்ஹார்ன் ஹைடிரிஜ் இன் தலைமையின் கீழ் ஜேர்மனியின் பாதுகாப்பிற்குட்பட்ட பொகீமியாவிலும் மோராவியாவிலும் மூத்த அரசாங்க வக்கீலாகவும் இருந்தார். செக் நாட்டின் பழைய ஆவணக் காப்பகங்களில் நூற்றுக்கணக்கான மரணதண்டனை உத்தரவுகள் இவருடைய கையெழுத்தை தாங்கி உள்ளவை.

NSDAP தலைமை அலுவலகத்திற்கு எழுதிய கடிதம் ஒன்றில், ஹிட்லருடன் நெருங்கி ஒத்துழைத்தவர்களில் ஒருவரான மார்ட்டின் போர்மான் வலியுறுத்திக் கூறினார்: "இராணுவச் சட்டத்தை செயல்படுத்தும்போதும், அரசியல் குற்றங்கள் பற்றிய சட்டங்களை செயல்படுத்தும்போதும், டாக்டர் நூஸ்லைன் சட்டத்தை முறிக்கும் மற்றும் நாட்டின் விரோதிகள் என்று தங்களைக் காட்டிக் கொள்ளுபவர்கள் என்பவர்களுக்கு எதிராக எப்படி உறுதியுடன் போராட்டம் நடத்த வேண்டும் என்பதை நன்கு உணர்ந்திருந்தார்." இக்கடிதம் ZDF தொலைக்காட்சி நிகழ்வு Frontal21 இல் மேற்கோளிடப்பட்டது.

நூஸ்லைன் வெளிப்படையாக தன்னுடைய உயரதிகாரி றைன்ஹார்ன் ஹைடிரிஜ் இடம் விசுவாசமாக இருந்தார். 1941ல் இறக்கும் வரை அவர் யூதர்களைத் திட்டமிட்டு அழிக்கும் பணியுடன்தான் தொடர்பு கொண்டிருந்தார். அவர்தான் போலந்து யூதர்களை சேரிக்குள் தள்ளி, சோவியத் ஒன்றியத்தில் கம்யூன்ஸ்டுகள் ஏராளமானோர் படுகொலை செய்யப்படுவதற்கும் திட்டம் போட்டிருந்தார்.

இரண்டாம் உலகப் போருக்கு பின்னர், நூஸ்லைன் அமெரிக்காவில் செக்கோஸ்லேவாக்கியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்; அங்கு அவர் 20 ஆண்டுகள் சிறை தண்டனையை போர்க்குற்றங்களுக்காக 1948ல் பெற்றார். ஆனால் 7 ஆண்டுகளுக்கு பின்னர் அவர் விடுதலை பெற்று மேற்கு ஜேர்மனிக்கு அனுப்பப்பட்டார்; அங்கு அவர் சிறையில் இருந்ததற்காக இழப்பீட்டுத் தொகையை பெற்றார்; தனக்கென ஒரு புதிய வேலையை வெளியுறவு அமைச்சரகத்தில் கொண்டார். பின்னர் பார்சிலோனாவில் உயர்தூதரகா அதிகாரியாக பொறுப்பேற்றார்; இதற்கு பாசிச பிராங்கோ ஆட்சியின்பால் சிந்தனையளவில் அவர் கொண்டிருந்த நெருக்கம் அதிக உதவியைத்தான் கொடுத்திருந்தது.

எல்பவினால் பெரிதும் புகழப்பட்ட பிரன்ஸ் கிராப் கூட "மண்ணிறத்தோல்" வாழ்க்கை சரித்திரத்தை கொண்டவர்தான். 1936ம் ஆண்டுதான் அவர் NSDAP உறுப்பினராகச் சேர்ந்தார் என்றாலும், SS(நாஜிப்படை) இல் மே 1933ல் இருந்தே சேர்ந்திருந்தார். 1938ல் வெளியுறவு பணியில் அவர் நுழைந்த போது, அவர் தாக்குதல்படை துணை அதிகாரியாக (SS Untersturmfuehrer) என்ற அந்தஸ்திற்கு உயர்த்தப்பட்டு, SS-பாதுகாப்பு அமைப்பின் "அதிகாரபூர்வமற்ற" உளவாளியாகத்தான் இருந்தார். SS-பாதுகாப்பு அமைப்பு மத்திய அரசின் பாதுகாப்பு அலுவலகத்துடன் பிணைக்கப்பட்டு இருந்தது; இது நாஜிகளின் அச்சுறுத்தும் ஆட்சியின் முக்கிய கருவியாக இருந்தது. 1940ல் இருந்து 1945க்குள்ளாக கிராப் ஒரு தூதரக செயலாளராகவும் டோக்கியோவில் இருந்த ஜேர்மன் தூதரகத்தின் அலுவலராகவும் இருந்து உளவுத்துறைக்கு தகவல் கொடுக்கும் பணியையும் செய்து வந்தார்.

வரலாற்று ஆசிரியரான உல்றிஜ் ஹேர்பேர்ட் Frontal21 இடம் கூறியதாவது: "SS உறுப்பினர்கள், அதுவும் இந்த குதிரைப்படை (Reiter SS) ...ஒரு குறிப்பிட்ட சிறப்பைக் கொண்டு ஆட்சிக்கு நெருங்கிய வகையில் செயலாற்றியது."

ஆனால் நாஜிக் குற்றங்களில் கிராப்பின் பங்கு முறையாக மறுக்கப்பட்டுள்ளது. Bild ல் கட்டுரைகள் எழுதும் ஹிராப் நேஹவுஸ் Reiter-SS இல் கிராப்பின் பங்கை, பெரிதும் குறைத்த வகையில் அவர் இந்தக் குறிப்பிட்ட கிளைக்கு மாற்றப்பட்டதற்கு காரணம் அவர் குதிரையேற்றத்தை பெரிதும் விரும்பியதால்தான் என்று கூறுகிறார். Frankfurter Allgemeine தூதர்களின் பிஷ்ஷர் மீதான தாக்குதல்களுக்கு ஆதரவு கொடுத்து, கிராப்பின் கடந்த காலம் முழுவதையும் முற்றிலும் வெள்ளையடித்துள்ளது. ஒரு செய்தி அறிக்கையில், கிறிஸ்தவ ஜனநாயக யூனியன்/ கிறிஸ்தவ சமூக யூனியன் (CDU/CSU) பாராளுமன்ற குழு இவருடைய யுத்தத்திற்கு முந்திய சேவையை புகழ்ந்து, நாஜிக் குற்றங்களின் பங்கை "இளவயதுப் பாவங்கள்" என்று ஒதுக்கித் தள்ளியுள்ளது. போருக்குப் பின்னர் நடுநிலைக் குழு இவரை "முற்றிலும் தவறற்றவர்" எனக் கூறியதையும் அது சுட்டிக்காட்டியுள்ளது.

உண்மையில், கிராப் மிகக் குறுகிய காலத்தில் 1945க்குப் பின்னர் ஒரு தொழிலை ஏற்படுத்திக் கொண்டார். 1950ம் ஆண்டு வெளியுறவு அமைச்சரகத்தில் சேர்ந்த பின்னர், அவர் முதலில் அரசியல்துறைக்கு நியமிக்கப்பட்டு ஜேர்மன் நேட்டோ தூதராக நிரந்தரப் பொறுப்பேற்றார். இறுதியில் அவர் ஜேர்மனியின் தூதராக அமெரிக்காவில் இருந்தார்; வெளியுறவுத் துறை இரண்டாம் பிரிவின் அரசியல் தலைவராக இருந்ததுடன், பின்னர் டோக்கியோவில் தூதராக (இரண்டாம் உலகப் போரில் இருந்தது போலவே இருந்து), 1971இல் இருந்து 1976 வரை நேட்டோவிலும் தூதராகவும் இருந்தார்.

பிரச்சனையின் பின்னணி

ஜோஷ்கா பிஷ்ஷர் 1998ல் வெளியுறவு மந்திரியாக வந்தபோது, அவர் இந்த அமைச்சரகத்தின் பாசிச கடந்த காலம் பற்றி முற்றிலும் உணர்ந்திருந்தார். 1968 எதிர்ப்பு இயக்கத்தின்போது உருவாகிய பசுமைக் கட்சி இந்த விடயம் பற்றி விரிவான அறிவை கொண்டிருந்தது. ஆனால் தனக்கு முன்பு பதவியில் இருந்தவர்கள் போலவே பிஷ்ஷரும் கடந்த காலத்தின் மண்ணிறத்தோல் கறைகளை அகற்றுவதில் அதிக கவனத்தைச் செலுத்தவில்லை. மாறாக, அந்தஸ்து உணர்வு பெரிதும் கொண்டிருந்த தூதரகதட்டின் நம்பிக்கையைப் பெறுவதற்குப் பெரிதும் முயன்றிருந்தார்.

ஜேர்மன் குடியரசு 1871ல் ஏற்படுத்தப்பட்ட பல தசாப்தங்களுக்கு பின்னரும் தூதரக அலுவலகம் தன்னுடைய உறுப்பினர்களை கிட்டத்தட்ட பிரஷிய பெருங்குடியினரிடம் (பிரபு குடும்பங்கள்) இருந்தே தேர்ந்தெடுத்து வந்தது. வைமார் குடியரசை இது வெறுத்ததுடன், தன்னுடைய உலக அதிகாரத்தின் தேவைகளை திருப்திப்படுத்திக் கொள்ளுவதற்காக, ஹிட்லரின் காலடிகளில் விழுந்து வணங்கியது. இப்பொழுது பிரபுத்துவ குடும்பங்களின் பெயர் தாங்கிய தூதர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டபோதிலும் கூட, வெளியுறவுத்துறை இன்னும் ஒப்புமையில் ஒரேமாதிரியான சிந்தனைப் போக்கு உடையவர்களைத்தான் கொண்டிருக்கிறது.

கூடியிருந்த தூதர்கள் முன்பு ஆற்றிய தன்னுடைய முதல் உரையில், பிஷ்ஷர் அவர்களை பாராட்டும் வகையில், தான் கற்றுக் கொள்ள விருப்பம் உடைய ஒரு மனிதன் என்று கூறிக் கொண்டார். அமைச்சரகத்தின் அனுபவம் என்ற பெரும் செல்வத்தை பயன்படுத்திக் கொள்ளத் தான் உவகை அடைவதாகவும், அவரைப் பொறுத்தவரையில் ஒருவருடைய உலகப் பார்வை முக்கியமல்ல, ஆனால் "திறமையும், விசுவாசமும்தான்" முக்கியம் என்று குறிப்பிட்டார். "இங்கு பசுமைக்கட்சியின் வெளியுறவுக் கொள்கை ஒன்றும் இல்லை; ஜேர்மனிய நாட்டின் வெளியுறவுக் கொள்கைதான் இருக்கிறது" என்று பிஷ்ஷர் களிப்புடன் கூறிய சொற்றொடரும் அக்காலத்தியதுதான்.

மேலும், பழைமைவாத தூதரின் காலடிகளை தொடர்ந்தால் தன்னுடைய கடந்த கால வாழ்க்கையான அராஜக தெருச்சண்டைக்காரர் என்பது இரகசியமாக வைத்திருக்கப்படாதோ என்ற அச்சத்தையும் பிஷ்ஷர் கொண்டிருந்தார். முதலில் அவர் பதவிக்கு வந்தபோது அத்தகைய முயற்சிகள் இருந்தன, அதனால் தக்க விளைவையும் பெற்றன. உதாரணமாக, Der Stern பிஷ்ஷர் தன்னுடைய கடந்த காலத்தில் இருந்திருக்கலாம் என்று கருதப்பட்ட முகமூடி அணிந்த ஆர்ப்பாட்டக்காரரின் புகைப்படங்களை வெளியிட்டது. ஒரு போலீஸ்காரை கொல்லும் முயற்சியிலும் பிஷ்ஷர் தொடர்பு கொண்டிருந்தார் என்ற வதந்திகள் வந்திருந்தன. ஆனால் இவையெல்லாம் ஜேர்மனிய மரபு முறையிலான இராஜதந்திர வழியில் அமைச்சரகத்தை பிஷ்ஷர் வழிநடத்திச் சென்றபோது நாளடைவில் மறைந்து விட்டன.

பிஷ்ஷரின் கடந்த காலத்தைப் பற்றிய குறிப்புக்கள் மீண்டும் வந்துள்ளன. Der Spiegel இன் கூற்றின்படி, தங்களுடைய பகிரங்கக் கடிதத்தில் தூதர்கள் இந்தச் சொற்றொடரை வனப்புரையாக கூறியுள்ளனர்: "உங்களில் எவர் பாவம் செய்யாமல் இருந்திருக்கிறீர்களோ, அவர் முதல் கல்லை எறியட்டும்." கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் பாராளுமன்ற உறுப்பினர் மைக்கல் ஹென்றிஸ், "இன்றைய வெளியுறவு மந்திரி ஒரு போராளித்தன கடந்தகாலத்தைக் கொண்டுள்ளவர். ஆனால் மந்திரியோ தொடர்ச்சியாக பிறருடைய கடந்தகாலத்தை சுட்டிக்காட்டுகிறார்." என்று கூறியுள்ளார்.

வெளியுறவு அமைச்சரகத்தில் ஏற்பட்டுள்ள எழுச்சியும் இப்பொழுது வெளியே அனுப்பப்பட்டுள்ள தூதரான எல்ப வெளியுறவு மந்திரியின்மீது கொண்டுள்ள அசாதாராண தீவிரத் தாக்குதலும், தூதரகத்தில் பெரும்பிரிவு பிஷ்ஷர் மற்றும் ஷ்ரோடர் அரசாங்கத்திற்கு ஆதரவைக் கொடுக்கவில்லை என்பதை காட்டுகின்றன. "இந்தத் தாக்குதல் திட்டமிட்டுச் செய்யப்பட்டுள்ளது எனக் கொள்ளலாம்; இது ஒன்றும் இரங்கற் குறிப்புக்களை பற்றி மட்டும் அல்ல" என்று Sueddeutsche Zeitung எல்பவின் கடிதத்தை பற்றிய வர்ணனையில் கூறியுள்ளது. "நீண்ட காலமாகவே வெளியுறவுத்துறை பிளவுபட்டுள்ளது; ஏனெனில் பல தூதர்களும் ஷ்ரோடரின் அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையை எளிதில் ஏற்கவில்லை... எல்ப பல விளக்கங்களை தெளிவாக்க விரும்பவில்லை; தன்னுடைய பதவிக்காலம் முடியும் தறுவாயில், அவர் ஓர் அரசியல் செய்தியை கொடுக்க விரும்பினார்: இது ஜேர்மனிய வெளியுறவுக் கொள்கையின் தன்மையை காட்டிக் கொடுப்பதாக இருக்கிறதே ஒழிய ஒரு தனி தூதரின் உளைச்சலைப்பற்றி அல்ல."

முன்னாள் NSDAP உறுப்பினர்கள் நினைவுநாள் பற்றிய பூசல், விவகாரத்தில் மேம்போக்கான காரணத்தைத்தான் கொண்டுள்ளது. கடந்த காலத்தைப் பற்றிப் பேசுவது இவ்வளவு முக்கியமானதாகப் போய் இருக்கிறது என்பது ஜேர்மனிய வெளியுறவுக் கொள்கையின் அடிப்படை மாறுதல்கள் ஏற்பட்டுள்ளதின் விளைவு ஆகும். ஜேர்மனி மறுபடியும் 1990ல் ஒன்றுபட்டபின்னர், ஈராக் போருக்குப் பின்னர் இன்னும் தெளிவான முறையில், ஜேர்மனியின் வெளியுறவுக் கொள்கை சர்வதேச நிகழ்வுகளில் தனிப்பட்ட உலக சக்தி என்னும் முறையில் குறுக்கிட வேண்டும் என்பதாக உள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் குழுவில் நிரந்தர இடத்திற்கான கோரிக்கை விடுத்தல், முன்பு இரகசியமாகத்தான் கூறப்பட்டது, இப்பொழுது வெளிப்படையாக உரத்துக் கூறுப்படுகிறது. ஜேர்மனிய படையினர் முன்பு நாட்டுப் பாதுகாப்பு ஒன்றிற்கு மட்டும் பயன்படுத்தப்பட்டவர்கள் இப்பொழுது உலகெங்கிலும் செயலாற்றுவதை காணமுடிகிறது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோவிற்குள் ஜேர்மனி தன்னுடைய நலன்களை பெரும் தன்முனைப்புடன் தொடர்கிறது.

இப்படி ஆக்கிரோஷமாக ஜேர்மனிய நலன்களை தொடர்வது ஓர் எதிர்-அழுத்தத்தையும் கொடுக்கிறது. இச்சூழ்நிலையில், கடந்த காலத்தில் இருந்து தீர்வு காணப்படாத வினாக்களை எழுப்புதல் நெருக்கடி கொடுக்கும் வெளிநாட்டுக் கொள்கை பிரச்சினையாக உருவாகலாம். இதுதான் முன்னாள் நாஜி அடிமைத் தொழிலாளர்களுக்குக் கொடுக்கப்படவேண்டிய இழப்புத் தொகை பற்றிய பூசலுக்கு வகை செய்தது; சீனாவில் இடம்பெற்ற அண்மைய ஜப்பான் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இரண்டாம் உலகப்போரில் ஜப்பானிய கொடுமைகளை குறைத்துக் கூறியதை அடுத்து இப்பிரச்சினை எரியூட்டப்பட்டது. (See: "Japan stokes tensions with China"). எனவேதான் திடீரென்று பிஷ்ஷர் முன்னாள் NSDAP உறுப்பினர்கள் பற்றிய இரங்கற் குறிப்பு பற்றிய தடைசெய்வது ஆகும்; அவர் அலுவலகத்தில் நுழைந்தபோதே வெளியுறவு அமைச்சரகத்தின் தாழ்வாரங்களின் அவர்களுடைய புகைப்படங்கள் இருந்ததைப் பார்த்தபோதே அவருக்கு இதைப் பற்றி நன்கு தெரிந்திருக்க வேண்டும்.

தூதரக தட்டினரைப் பொறுத்தவரையில் அது ஒன்றும் ஆக்கிரோஷமான வெளியுறவுக் கொள்கைக்கு விரோதப்போக்கை காட்டும் தன்மையை பெற்றிருக்கவில்லை. ஆனால் ஷ்ரோடர்-பிஷ்ஷர் அரசாங்கத்தின் போக்கை அது நிராகரிப்பதற்கு சில காரணங்கள் உண்டு.

முதலில், வெளியுறவுக் கொள்கை ஆரம்ப முயற்சிகளை அதிபர் ஷ்ரோடர், வெளியுறவு அமைச்சரகத்தைக் கலந்து கொள்ளாமல், பெருகிய முறையில் தானே எடுத்துக் கொண்டுள்ளார். பிஷ்ஷருக்கு எதிரான குற்றச் சாட்டு ஒன்று (கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் வெளியுறவுக் கொள்கை வல்லுனர் Wolfgang Schaeuble சொற்களில்) தன்னை "அதிகாரமில்லாமல் செய்வதற்கு" அவர் ஷ்ரோடருக்கு அனுமதி கொடுத்து விட்டார் என்பதேயாகும்.

சான்ஸ்லர் மிக நெருக்கமான முறையில் பெரு நிறுவனங்கள், வணிகச் சங்கங்கள் இவற்றின் தலைவர்களுடன் ஒத்துழைக்கிறார்; அவர்கள் இவர் கணக்கிலடங்காமல் வெளிநாடு செல்லும்போதெல்லாம் தொடர்ந்து கூடவே செல்லுகின்றனர். அவருடைய வெளியுறவுக் கொள்கை பொருளாதார நலன்களுடன் நெருக்கமாகப் பிணைந்து பலமுறையும் குறைகூறுதலுக்கு உட்படுகிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் கொண்டுள்ள நெருக்கமான நட்பும் சிலரால் ஏற்கப்படவில்லை; அதுபோலவே சீனாவிற்கு எதிராக இருந்த ஆயுத விற்பனை தடையை அவர் நீக்கும் முயற்சிகள் அமெரிக்காவுடன் நேரடி மோதல் போக்கை ஏற்படுத்தியுள்ளது.

இப்பொழுது ஜேர்மனி பிஸ்மார்க் மரபில், பெருகிய முறையில் உலக வல்லரசு என்று நடந்து கொள்ளுவதால், பொருளாதாரப் பிரதிநிதிகளை சற்று இகழ்வுடன் கொண்டு தன்னுடைய உரிய இடம் வேண்டும் என்று இராஜதந்திர பிரிவு கோருகிறது. எல்பவின் கடிதம் வெளிப்படையாக இந்தத் தூதர்களின் உணர்வுகளை முறையீடு செய்கிறது; அது தற்கால சொற்றொடரில் இதனை "பெருநிறுவன அடையாளம்" என்று தெரிவிக்கிறது.

"வெளியுறவு பணியில் பிரிவுகள் பொறுத்துக் கொள்ளமுடியாதவை. அதன் உறுப்பினர்கள் அடிக்கடி நெருக்கடி நிலைமைக்கு தள்ளப்படுகின்றனர்; இதற்கு நெருங்கிய ஒத்துழைப்பு தேவையாகும். "பெரு நிறுவன அடையாளம்" வெளியுறவு அமைச்சரகத்தில் இலாபத்தை கருத்திற் கொண்ட வணிக முயற்சியைவிட கூடுதலாக செல்கிறது. ஒத்துழைப்பு என்பது தனிநபர், தொழிலின் தன்மையில் பெற்றுள்ள சாதனை இவற்றின் அடிப்படையில் மதிப்பைக் காணவேண்டும்" என்று அவர் எழுதியுள்ளார்.

"விசா விவகாரம் இன்னும் வெளியுறவு மந்திரியின் அதிகாரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளது. தன்னுடைய பதவியின் முதல் ஆண்டுகளில் பிஷ்ஷர் பெரியஅளவில் பணியிலுள்ள தூதர்களால் ஏற்கப்பட்டிருந்தார். ஆனால் விசா விவகாரம் பற்றிய பிரச்சினை, பல அதிகாரிகளிடம் அவர் மதிப்பை இழக்குமாறு செய்துள்ளது.

இந்த நேரடிக் காரணங்களை தவிர, பொதுவான நெருக்கடித்தன்மையும், குழப்பமான பார்வையும் ஜேர்மன் வெளியுறவுக் கொள்கைக்கு இருப்பதும் ஒரு காரணமாக சேர்க்கப்படலாம். அது பல பூசல்களையும், அழுத்தங்களையும் தோற்றுவிக்கிறது; அனைத்து அரசியல் நிறுவனங்கள், கட்சிகளிலும் இது ஊடுருவி நிற்கிறது.

தன்னுடைய சமீபத்திய புத்தகமான திசைகாட்டும் கருவியில்லாத ஒரு குடியரசு (A Republic without a Compass) என்பதில், பொன் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக இருக்கும் ஹன்ஸ் பீட்டர் சுவாட்ஸ், ஜேர்மன் வெளியுறவின் நெருக்கடி நிலை பற்றிக் குறிப்பிடுகையில் எழுதுகிறார்; "மேற்கு சிதைந்து கொண்டிருக்கிறது; அத்துடன் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கூட்டமைப்புக் குடியரசிற்கு (ஜேர்மனிக்கு) உறுதியளித்திருந்த கட்டமைப்புக்களும் சரிந்து வருகின்றன. அமெரிக்காவின்மீது உள்ள நம்பிக்கை அதிர்விற்கு உட்பட்டுவிட்டது; பழைய நேட்டோ என்பது ஒரு வரலாற்று நினைவுக் குறிப்புத்தான். ஆனால் பரந்து விரியும், இப்பொழுது 25 உறுப்பினர்களை கொண்டுள்ள கலவையான, சமநிலை இல்லாமல் இருக்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு, ஜேர்மனி ஒரு பாதுகாப்புக் கொடுக்க எதிர்பார்க்கப்படுகிறது."

"தற்போதைய பேர்லினின் வெளியுறவுக் கொள்கையில் உள்ள சிதைவு" வெறும் சமூக ஜனநாயகக் கட்சி- பசுமைக்கட்சி அரசாங்கத்தை பற்றியது இல்லை என்பது சுவாட்சின் கருத்து. "உண்மையில் அனைத்துக் கட்சிகளுமே திகைத்து நிற்கின்றன'' என்கிறார்.

இதற்குப் பின் அவர் பட்டியல் இடுகிறார்: "இந்தப் பெரிய வினாக்களுக்கு 'ஏதேனும் ஒரு முறையில்' விடை காணப்பட வேண்டும். "அமெரிக்கா எந்த அளவிற்கு ஆபத்தானது? ஒரு புதிய பாதுகாப்பான சமூகத்தின் எழுச்சிக்கு ஐரோப்பிய ஒன்றியம் உதவுமா? அல்லது நாம் விரைவில் "மைய ஐரோப்பா" என்ற நிலைப்பாட்டை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோமா? ஆனால், அமெரிக்காவை போலவே, பிரான்சும் நமக்கு ஒரு பிரச்சினையாக இல்லையா? ஐரோப்பிய ஒன்றியம் முடிவில்லாமல் முன்பு போல், துருக்கியையும் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்ற வகையில் படர வேண்டுமா? மத்திய கிழக்கு என்ற சிக்கல் வாய்ந்த நெருக்கடியான பகுதியில் உண்மையில் ஜேர்மனி நுழைய வேண்டுமா; அங்கு வெடிமருந்துகள் எங்கும் தூவப் பெற்றுள்ளன; 1914க்கு முந்தைய சதாப்தங்களில் பால்கனில் இவ்வாறுதான் .... பொதுவாக இருந்தது. எப்படி, எப்பொழுது ஜேர்மனி எதிர்காலத்தில் தன்னுடைய இயல்பாய் அமையப்பெற்ற நலன்களை வரையறுத்துக் கூறும்: தேசிய முறையிலா, ஐரோப்பிய முறையிலா அல்லது உலகளாவிய முறையிலா?"

இந்த வினாக்கள் தவிர்க்க முடியாமல் கடுமையான மோதல்களுக்கு இட்டுச் செல்லும்; அதிலும் வெளியுறவு அமைச்சரகத்தில் புறப்பட்டுள்ள பூசல்களின் பின்னணியில் அனைத்து முகாம்களும் அடிப்படை நோக்கத்திற்கு ஒன்று சேரும்: அதுதான் ஜேர்மனியின் ஏகாதிபத்திய நலன்கள் இன்னும் ஆக்கிரோசத்துடன் தொடரப்பட வேண்டும் என்பதாகும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved