World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Respect-Unity coalition in Britain: a marriage of Labourism and Islamism Part 1

இங்கிலாந்தில் ரெஸ்பக்ட்-யூனிட்டி கூட்டணி: தொழிற்கட்சி வாதத்திற்கும் இஸ்லாமிசத்திற்கும் ஒரு திருமணப் பிணைப்பு

பகுதி 1

By Chris Marsden and Julie Hyland
18 April 2005

Back to screen version

இது ஓர் இரு-கட்டுரைகள் தொடரின் முதல் கட்டுரையாகும்

மே 5ம் தேதி நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தல்களில் தொழிற்கட்சிக்கு மாற்றீடாக ஒரு சோசலிசக் கருத்தை முன்வைப்பதாகக் கூறிக்கொண்டு மிக அதிகமான வேட்பாளர்களை நிறுத்தும் அமைப்பாக ரெஸ்பக்ட் (Respect) யூனிட்டி கூட்டணி உள்ளது. ரெஸ்பெக்டை பொறுத்தவரை, குறிப்பாக அது ஈராக்கின் மீதான படையெடுப்பு ஆக்கிரமிப்பு இவற்றிற்கான எதிர்ப்பை வலியுறுத்துகிறது. எவ்வாறாயினும், இதனுடைய தேர்தல் பிரச்சாரம் இக்குழுவின் தன்மையின் அரசியல் சந்தர்ப்பவாதத்தை எடுத்துக்காட்டுகின்றது.

பொதுத் தேர்தல்களுக்கான அறிவிப்பு வரவிருந்த நேரத்தில் ``தொழிற் கட்சி உறுப்பினர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் ஓர் அழைப்பு`` என்ற அறிக்கையை ரெஸ்பெக்ட் வெளியிட்டது. ரெஸ்பெக்டிற்கு வாக்களிப்பதன் மூலம் எதிர்ப்பு வாக்கை பதிவுசெய்து பிரதம மந்திரி டோனி பிளேயருக்கான எதிர்ப்பை வெளிப்படுத்துவதுடன் மற்றும் அப்போதும் கட்சிமீதுள்ள விசுவாசத்தை வெளிப்படுத்தலாம் என தொழிற்கட்சி ஆதரவாளர்களை நம்ப வைக்கும் முயற்சியில் இந்த ஆவணம் ஈடுபட்டுள்ளது.

மனச்சாட்சி இடர்பாட்டிற்குள்ளான தொழிற் கட்சியினருக்கு ஆறுதல் கொடுக்கும் வகையில் பார்ப்பதற்கு இடதுபுறம் சாயும் போக்கு உடைய தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் ஒரு செயல்முறை கூட்டணியை அமைக்கும் நோக்கத்தை ரெஸ்பக்ட் கொண்டுள்ளது; இதில் அது தொழிற்கட்சிக்கு புத்துணர்ச்சி தருவதற்கும், தொழிலாள வர்க்கத்திடம் மீண்டும் ஆதரவை தொழிற்கட்சி கட்டியெழுப்பலாம் என்ற நம்பிக்கையை அது கொண்டுள்ளது. தொழிற்கட்சிக்கு எதிரான உண்மையான மாற்றீடு என்ற நிலையில் இருந்து ரெஸ்பக்ட் அப்பாற்பட்டுள்ளதுடன், இஸ்லாமிய அடிப்படைவாதிகளுடன் ஓர் அரசியல் முகாமை அமைத்துள்ள நேரத்திற்கு ஏற்றமாதிரி செயல்பட்ட தொழிற்கட்சி அமைப்பாளர்களின் தற்காலிக புகலிடமாகத்தான் ரெஸ்பக்ட் உள்ளது. இதன் முக்கிய பிரிவு போக்கான சோசலிச தொழிலாளர் கட்சி (SWP) என்ற வாகனத்தின் மூலம் தொழிற்கட்சி அதிகாரத்துவத்துடன் உறவுகளை வளப்படுத்திக்கொள்ள இது முயல்கிறது.

ஈராக் போரின் பின்விளைவாக உடனடியாக ரெஸ்பக்ட் அமைக்கப்பட்டது. மரியாதை, சமத்துவம், சோசலிசம், அமைதி, சூழல்காப்பு, சமுதாயம், தொழிற்சங்கவாதம் (Respect, Equality, Socialism, Peace, Environment, Community and Trade Unionism) என்ற பொருள் கொண்ட சொற்களின் முதலெழுத்துத் தொகுப்பு இதுவாகும். முன்னாள் தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினராகயிருந்த ஜோர்ஜ் காலோவேயின் தலைமையில் இது இயங்குகிறது மற்றும் சோசலிச தொழிலாளர் கட்சியின் பெரும் ஊக்கத்தால் இது தோற்றுவிக்கப்பட்டது. பெப்ரவரி 200ல் இலண்டன் தெருக்களுக்கு இரண்டு மில்லியன் மக்களை கொண்டு வந்த அரசியல் வாகனம் எனவும், அதன் வெகுஜன எதிர்ப்பு உணர்வை இதனூடாக வெளிப்படுத்தப்பட்டதாகவும் ரெஸ்பக்ட் அறிவித்தது.

உண்மையில், தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாக கொண்டு எந்த சோசலிச கட்சி அமைக்கப்படுதலும், வெளிப்படையாக நிராகரிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில்தான் இது நிறுவப்பட்டதாகும். போர் எதிர்ப்பு போராட்டங்களின்போது போரை நிறுத்துக என்ற கூட்டணி (Stop the War Coalition) அமைப்பிற்குள் இயங்கி வந்த ரெஸ்பக்டின் நிறுவனர்கள் மிகச் சிறிய எண்ணிக்கையில் இருந்த போர் எதிர்ப்பு தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், தாராளவாத ஜனநாயகவாதிகள், மற்றும் அரசியல்ஸ்தாபன பிரமுகர்கள் உள்ளம் புண்படும்படி ஏதும் பேசவோ, செய்யவோ கூடாது என்று வலியுறுத்தியிருந்தனர். சோசலிச தொழிலாளர் கட்சியை பொறுத்தவரை, அனைத்து வர்க்கத்தினருக்கும் அழைப்புவிடுதலில் தங்கியிருந்தததே ஒழிய, சாத்திமான ஆதரவை அந்நியப்படுத்திக்கொள்ளும் எவ்வித கோரிக்கைகளையும் எழுப்ப அது விரும்பவில்லை. இத்தகைய போக்கு, போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஈராக்கிற்கு எதிரான சட்ட விரோதப்போரில் பிரித்தானியாவை ஈடுபடுத்திவிட்ட தொழிற்கட்சிக்கும், அதன் தொழிற்சங்க அதிகாரத்துவ கூட்டணியினரும் எதிராகவும் மிகவும் பொதுவான எழுச்சியாக மாறுவதை தடுத்து நிறுத்தியது.

இதேபோன்ற அரசியல் கருத்துக்கள்தான் ரெஸ்பக்டின் தன்மையையும், வேலைதிட்டத்தையும் உருவாக்கியது. ஒரு சில குறைந்தபட்ச சமூக சீர்திருத்தங்களுக்காக ரெஸ்பக்ட் வாதாடினாலும், அவற்றிற்கு மேல் ஏதும் கேட்கப்படக்கூடாது என்ற கருத்தைக் கொண்டது; ஏனெனில் போரை எதிர்க்கும் மற்றவர்களை அது மனமுறிவு அடையச்செய்யும் என்றும் தொழிற்கட்சி அரசாங்கம் ஏற்படுத்தியுள்ள ``ஜனநாயக குறைபாடுகளை`` சரி செய்ய வேண்டும் என்று கருதுபவர்களையும் பாதிக்கும் என்ற கருத்தினாலும் அது அத்தகைய நிலைப்பாட்டை கொண்டது.

ரெஸ்பக்ட்டை நிறுவதல், முன்னாள் தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜோர்ஜ் காலோவேயை அதன் பெயரளவுத் தலைவராக ஏற்றல் என்று முடிவெடுத்த முறையில், சோசலிச தொழிலாளர் கட்சி, தொழிற்கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்துடனான தனது வரலாற்று நிலைநோக்கை தொடர்ந்து வெளிப்படையாக சோசலிசமற்ற அரசியல் வாகனத்தை தோற்றுவிக்கும் விருப்பத்தைத்தான் வெளிப்படுத்தியுள்ளது.

எத்தனையோ தசாப்தங்கள் உறுப்பினராக இருந்திருந்தபோதிலும் ஈராக் போருக்கு எதிராகக் குரல் எழுப்பியதற்காக காலோவே தொழிற்கட்சியில் இருந்து வெளியேறும் நிலை தோன்றியது. ஆனால் சமரசத்திற்கு இடமில்லாத வகையில் மார்க்சிசத்திற்கு விரோதப்போக்கு காட்டுபவராகத்தான் அவர் இருந்து வந்துள்ளார், பலவிதமான அரேபிய முதலாளித்துவ ஆட்சிகளுடனும் முக்கிய நபர்களுடனும் அவர் நீண்ட காலமாக அரசியல் சந்தர்ப்பவாத முறையில் உறவுகளை கொண்டுள்ளார். தன்னுடைய பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தொடர்ந்து பெறுவதற்கும் அவர் ரெஸ்பெக்டை பயன்படுத்த உள்ளார்.

காலோவே மற்றும் அதிருப்தியடைந்த தொழிற்கட்சி மற்றும் தொழிற்சங்க அலுவலர்கள் ஆகியோருடனும், அதே நேரத்தில் அது வழமையாக எப்பொழுதும் குறிப்பிடும் `முஸ்லிம் சமூகத்திற்கு` ஏற்ப அடிபணிந்து நடக்கவும் வேண்டும் என்ற கருத்தை சோசலிச தொழிலாளர் கட்சி கொண்டுள்ளது. ரெஸ்பக்ட்டில் இது கொண்டுள்ள மற்றொரு தோழமை அமைப்பு பிரித்தானிய முஸ்லிம் சங்கம் (Muslim Association of Britain-MAB) ஆகும்.

எகிப்தில் உள்ள முஸ்லீம் சகோதரத்துவ அமைப்பின் (Muslim Brotherhood) கிளையாக தோன்றிய இந்த குட்டி முதலாளித்துவ அமைப்பு இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் ஒரு பிரிவை ஆதரிப்பதுடன், பிரிட்டனில் இதற்கு ஆதரவு மிகக் குறைவுதான். ஆனால் பிரித்தானிய முஸ்லிம் சங்கத்துடனான நட்புக் கூட்டணியின் அரசியல் நல்லெண்ணம் மற்றும் தொடர்புகளை பயன்படுத்தி சோசலிச தொழிலாளர் கட்சி பல இமாம்களின் ஆதரவையும், ``சமூக தலைவர்கள்`` என்று அழைக்கப்படுகின்றவர்களின் ஆதரவையும் பெற்று பிரிட்டனில் உள்ள முஸ்லீம்களின் கணிசமான பிரிவினரின் வாக்குகளை பெறலாம் என்று நம்புகிறது. சில உள்நகரபிரிவு தொகுதிகளில் இந்த ஆதரவு பிளேயரின் போர் வெறிக்கு விரோதம் காட்டும் வாக்குகளின் மூலம் தொழிற்கட்சியுடைய இழப்பில் வெற்றிபெறலாம் என்ற நம்பிக்கையும் இதற்கு உள்ளது. அதிலும் குறிப்பாக குறைந்த அளவு வாக்காளர்களே வாக்குப்பதிவு செய்ய வருவர் என்ற நிலையில் இத்தகைய முஸ்லீம் வாக்கு வெற்றிக்கு கூடுதலான வாய்ப்பை தரக்கூடும் என்று இது நம்புகிறது.

சோசலிச தொழிலாளர் கட்சி இனவாத அரசியலுக்கு சந்தர்ப்பவாத ரீதியாக அடிபணிந்ததற்கு எதிராக உலக சோசலிச வலைத் தளம் வலியுறுத்திக் கூறியதாவது: ``எந்தக் குழுவும் முஸ்லீம் `சமூகத்தின்` பிரதிநிதி என்று கூறிக்கொள்ள முடியாது; ஏனெனில் அப்படிப்பட்ட சமூகம் நடைமுறையில் இல்லை. மற்ற சமயத்தினரை போலவே முஸ்லீம்களும் வர்க்கங்களாக பிரிக்கப்பட்டுள்ளனர். சமய அடையாளத்தை வர்க்க நலன்களுக்கும் மேலாக உயர்த்துவது என்பது ஒவ்வொரு விடயத்திலும் பிரிவினை தன்மையைத்தான் காட்டுகிறது. முதலாவதாக, சமய குருமார்களின் கருத்துக்களை முஸ்லீம் இளைஞர்கள், தொழிலாளர்கள் ஆகியோரிடம் பரப்புதலை இது நியாயப்படுத்துகிறது; அவர்களில் பெரும்பாலானவர்கள் (ஒரு சோசலிச தொழிலாளர் கட்சி தலைவர் ஜோன் போல்) ரீஸ் ஒப்புக்கொள்ளுவது போல் பிரித்தானிய முஸ்லிம் சங்கத்துடைய அடிப்படைவாத நோக்கினை பகிர்ந்துகொள்ளுவதில் இருந்து அந்நியப்பட்டே உள்ளனர். இரண்டாவதாக, இப்படி இஸ்லாமியத்துடன் அணைத்துக்கொண்டு செல்வது இந்துக்கள், சீக்கியர்கள், யூதர்கள் மற்றும் சிறுபான்மை சமயத்தினருடன் விரோதப் போக்கை ஏற்படுத்திவிடுவதுடன், மேலும் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்திற்குள் பிளவுகளை இது விதைத்துவிடும்.

``முக்கியமான ஜனநாயக உரிமையான வழிபாட்டு சுதந்திரத்தை நிலைநிறுத்துதல் என்று வரும்போது, எந்தச் சமயமும் மற்ற சமயத்தைவிடக் கூடுதலான முக்கியத்துவம் கொடுக்கப்படக்கூடாது என்ற கடுமையான சமயசார்பற்ற அணுகுமுறை இருக்கவேண்டும். மாறாக, தன்னுடைய புதிய ஜனநாயகமுறை மாறுதலை அறிவித்துள்ள சோசலிச தொழிலாளர் கட்சி இஸ்லாமியத்திற்கு ஒரு அரசியல் பாதுகாப்பை அளிப்பதற்கு சமாதானம் கூறும் வகையில் மிக அதிகமான ஈடுபாட்டைத்தான் காட்டியுள்ளது, ஏனெனில் பிரித்தானிய முஸ்லிம் சங்கமும், உள்நாட்டு இமாம்களும் பிரிட்டனில் உள்ள ஒன்றரை மில்லியன் வாக்குகளையும் முழுமையாக ரெஸ்பக்டுக்கு வாக்களிக்குமாறு செய்து விடுவர் என்று கணிப்பிட்டுள்ளது (See: Britain: The Respect-Unity coalition and the politics of opportunism)

இப்படி ரெஸ்பக்டை பற்றிய ஆய்வு மிகச் சரியானதுதான் என்பதை 2005 மே பொதுத்தேர்தலில் அதன் பிரச்சாரம், மற்றும் அது தொழிற்கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்களுக்கு விடுத்துள்ள அழைப்பின் மூலம் நன்கு புலனாகியுள்ளது.

ஒரு புதிய கட்சிக்கு ஆதரவு கோரும் அழைப்பு, அப்படி வாக்களிப்பது கட்சியின் முக்கிய அரசியல் விரோதிக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்று வாக்கு போடக்கூடியவர்களுக்கு உறுதியளிக்கும் சந்தர்ப்பங்கள் மிக குறைவாகத்தான் இருக்கமுடியும். ரெஸ்பக்டின் ''அழைப்பு'' முக்கியமாக தொழிற்கட்சியில் மறைந்து வரும் இடதுபிரிவிற்கு விசுவாச பிரமாணம் போல்தான் அமைந்துள்ளது.

இது ரெஸ்பெக்டின் தொழிற்கட்சி சார்புடைய அரசியல் சான்றிதழ்களை பறையறிவிக்கும் வகையில் தொடங்குகிறது. ``முந்தைய தேர்தல்களில் எங்களில் பெரும்பாலானவர்கள் உங்களைப் போலவே எப்பொழுதும் தொழிற் கட்சிக்குத்தான் வாக்கு அளித்து வந்தோம். உண்மையில், எங்களில் பெரும்பாலானவர்கள் தொழிற் கட்சி தோன்றிய காலத்தில் இருந்து தொழிற் கட்சிக்கு வாக்குப் போட்ட தொழிற் குடும்பங்களில் இருந்துதான் வந்திருக்கின்றோம். எங்களில் சிலர் தொழிற் கட்சியில் பதவிகளில் இருந்திருக்கிறோம் அல்லது தொழிற்கட்சி வேட்பாளர்களாகக்கூட இருந்திருக்கிறோம்.``

தொழிற்கட்சி இனி தொழிலாளர்களுக்கு ``இயல்பான இருப்பிடம்`` போல் இராது என்று வாதிட்ட பின், ரெஸ்பக்ட்டிற்கு வாக்களிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்து, மேலும் அழைப்பு விளக்கிக் கூறியது: ``பல தொழிற்கட்சி ஆதரவாளர்கள் ரெஸ்பக்ட் போன்ற கட்சியை ஆதரிப்பது தொழிலாளர் இயக்கத்தின் ஐக்கியத்தை முறிக்கும் என்று உணரலாம்.``

அத்தகைய கவலைகளுக்கு விடையிறுக்கையில், இடது தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக தேர்தலில் நிற்கும் விருப்பம் தனக்குக் கிடையாது என்றும், ``பரந்த அளவிலான தொழிற்சங்கம், போர் எதிர்ப்பு இயக்கத்தில்`` அவர்களுடன் விசுவாசத்துடன் இணைந்து செயல்படும் என்றும் கூறியுள்ளது. ரெஸ்பக்ட்டிற்கு ஆதரவு கொடுத்தலின் இறுதி விளைவு ``தொழிற் கட்சிக்குள் இடதுபிரிவினருக்கு வசதியாக அமையும் முறையில் இருக்கும்`` என்று கூறுகிறது. தொழிலாள வர்க்கத்தின் வாக்குகள் தனக்கேதான் என்பதுபோல், தற்பொழுது இடதின் ஆதரவு தனக்கே என்று பிளேயர் எடுத்துக்கொள்ளுகிறார். ரெஸ்பக்ட்டிற்கு கணிசமான வாக்கு கிடைக்குமானால் ''முழு அரசியல் பிரிவுகளும் இடதுபக்கம் நகரும் நிலை ஏற்படும்`` என்று அது கூறியுள்ளது.

இன்னும் முழுமையான தெளிவைக் காட்ட வேண்டும் என்ற முறையில், சமீபத்தில் காலோவே தன்னுடைய கட்சி ``கடந்தகால தொழிற்கட்சியின் ஆவி போன்றது, தொழிற்கட்சியுடைய ஆதரவாளர்கள் எப்படி அது இருக்க வேண்டும் என விரும்புகின்றனரோ அப்படி உள்ள கட்சி இது `` என்று சிறிதும் வெட்கம் இன்றி விளக்கம் கொடுத்தார்.

தொழிற்கட்சியின் இடதுபிரிவின் நற்பெயருக்கு ஊக்கம் கொடுக்கும் தன்மையை கொண்டுள்ள ரெஸ்பக்ட்டின் முயற்சிகள், அரசியல் உண்மை நிலைக்கு முற்றிலும் எதிரானவை ஆகும். தன்பார்வையில் யார் ``போர் எதிர்ப்பு`` அல்லது தொழிற்கட்சி இடதாக உள்ளனர் என்பதை ரெஸ்பக்ட் இன்று வரை துல்லியமாகவோ, தெளிவாகவோ வரையறுத்து கூறவில்லை. இருந்தபோதிலும்கூட இந்த விடயம் பெயரளவு சோசலிஸ்ட் அல்லது இடதுபுற சார்பு உடைய ஏராளமான குழுக்கள், மற்றும் தனி நபர்களிடையே உள்ளத்தில் சிந்தனையில் நிறைந்துள்ளது; இவர்களில் சிலர் ரெஸ்பக்டிற்கு ஆதரவு கொடுத்து ''போர் எதிர்ப்பு வாக்கிற்கும்'' அழைப்பு விடுத்துள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானவர்களும் ஈராக்கிய போருக்கு எதிராக முதலில் வாக்களித்த 140 தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களில் 34 பேர்தான் இப்பொழுதும் போர் எதிர்ப்பு நிலைப்பாட்டை கொண்டும், தொழிற்கட்சியின் சமூக பொருளாதார கொள்கைகள் பற்றி சில விமர்சனங்களை கொண்டும் உள்ளனர் என்பதை ஒப்புக்கொள்ளும் கட்டாயத்தில் இருக்கின்றனர்.

தன்னுடைய முன்னணிக் குழுவினுடைய பணியின் அடிப்படையை வெளிப்படையாக விளக்குவதில் சோசலிச தொழிலாளர் கட்சி பெரும் கஷ்டங்களை எதிர்கொண்டுள்ளது; ஏனெனில், காலோவேயையோ, பிரித்தானிய முஸ்லிம் சங்கத்தினையோ எதிர்த்துக்கொள்ள முடியாத நிலையில் பல பிரச்சினைகள் இருக்கின்றன. எனவே தொழிற்கட்சியின் இடதுபிரிவின் வெற்றியை நியாயப்படுத்தி பேசும் ரெஸ்பக்ட்டின் ஒரு சிறிய வெளிக்குழுவாக இயங்கும் கிரேட் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சி (CPGB) இன் முயற்சி தெளிவான ஒரு உதாரணமாக விளங்குகிறது. தொழிற்கட்சி இடதுபிரிவு, ஒரு பெரும்பாலான தொழிலாள வர்க்க பிரிவின் விசுவாசத்தை பெறக்கூடிய வளரும் சக்தி என்றும் முழு தொழிற் கட்சியையும் அரசியல் மறு சீரமைக்கும் அடிப்படையையும் பெற்றுள்ளது என்பதும் CPGB உடைய கூற்று ஆகும்.

வீக்லி வேர்க்கர் ஏப்ரல் 9 பதிப்பில் CPGB தைரியமாக வலியுறுத்திக் கூறியிருப்பதாவது: ``தொழிற்கட்சி ஒரு முதலாளித்துவ தொழிலாளர் கட்சியாக உள்ளது என்பது தெளிவு; இப்பொழுது எந்த விதிவிலக்குமில்லாது முதலாளித்துவம் தூய்மையான, சாதாரணமானது என்று நியாயப்படுத்துதல் அரசியலில் தவறான நிலைப்பாடு ஆகும். ஆம் வினோதமான அந்த அரசியல் கலவையில் முதலாளித்துவ முனை (Pole) அமைப்பின் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் மேலாதிக்கம் கொண்டதாக தெரிகிறது. அதே நேரத்தில் சமூக பலம் மற்றும் போர் எதிர்ப்பு உணர்வின் அரசியல் வலிமையை ஆதரவாக கொண்டு ஊக்கம் பெற்ற நிலையில் தொழிலாள வர்க்க முனையும் இந்தத் தேர்தலில் தன்னை மறுபடியும் வலுவுடன் அமைத்துக்கொள்ளும் நிலையை போருக்கு எதிரான தொழிற்கட்சி மூலம் வெளிப்படையாக போர் எதிர்ப்பு தொழிற்கட்சி வேட்பாளர்கள் மூலமும் அடையாளம் காட்டி இருப்பதையும் நாம் காண்கின்றோம்.``

''தொழிலாள வர்க்க அரசியல்வாதிகளின் முக்கிய கடமை (இயக்கத்தின் வர்க்க சக்திகளில் இப்பொழுதுள்ள சமநிலையையும், நம்முடைய பலவீனங்களையும் கருத்திற்கொண்டு) இந்த தொழிலாள வர்க்க முனைக்கு ஆதரவு கொடுக்கும் கடமையை பெற்றுள்ளனர்...``

தொழிற் கட்சியை ``முதலாளித்துவ தொழிலாளர் கட்சி`` என்று வர்ணித்துக் கூறுவது 1900ம் ஆண்டில் தொழிற்கட்சி அமைக்கப்பட்டவுடன் வெளிவந்த மார்க்சிஸ்டுகளின் ஆய்வில் இருந்து எடுக்கப்பட்ட கருத்து ஆகும். தொழிற்சங்கங்களுடன் அப்பொழுது தொழிற்கட்சி கொண்டிருந்த உறவு அதை ஒரு தொழிலாளர்களின் கட்சி என்று வரையறுத்தலுக்கு அடிப்படையைக் கொடுத்தது; அதற்குக் காரணம் தொழிலாள வர்க்க சொந்த வெகுஜன அடித்தளத்தை தொழிற்சங்கங்கள் கொண்டிருந்ததாகும். ஆனால் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் தூண்டுதலில் அமைக்கப்பட்ட கட்சியோ ஒரு முதலாளித்துவ சீர்திருத்தவாத முன்னோக்கைத்தான் கொண்டிருந்தது. தொழிற்கட்சியின் போலித் தோற்றங்களை தோலுரித்து தொழிலாளர்களுக்கு காட்ட வேண்டும் என்பதுதான் சோசலிஸ்டுகளின் பணியாக இருந்தது, மேலும் தொழிற்கட்சி ஓர் உண்மையான சோசலிஸ்ட் கட்சியாக மாறும் என்ற தவறான போலிக் கருத்திற்கு ஊக்கம் அளிக்காமல் செய்வதும் ஒரு பணியாக இருந்தது.

இன்று தொழிலாள வர்க்கம் பெருவணிகத்திற்கு எதிராக தங்களுடைய நலன்களை காக்க கொண்டுள்ள முயற்சிகள் தொழிற்கட்சி மற்றும் தொழிற்சங்கங்களின் கிட்டத்தட்ட வெளிப்படையான விரோதப்போக்கைத்தான் எதிர்கொள்ளுகின்றன; ஏனெனில் இவை இரண்டும் சீர்திருத்தவாத கொள்கை என்ற போலி தோற்றத்தைக்கூட கைவிட்டுவிட்டன. பெருநிறுவன ஆணைகளை தொழிலாள வர்க்கத்தின் மீது அவை சுமத்துகின்றன; தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவ சுரண்டலின் பாதிப்பில் இருந்து குறைந்த வகையிலேனும் காப்பாற்ற வேண்டும் என்ற முயற்சியை அவை கொள்ளவில்லை.

இதன் விளைவாக மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் இந்த அமைப்புக்களில் இருந்து பரந்தளவில் ஒதுங்கியே நிற்கும் நிலைமை வந்துவிட்டது. எனவேதான் சோசலிச தொழிலாளர் கட்சி போன்ற குழுக்களும், காலோவே போன்ற தனி நபர்களும் தொழிற்கட்சி அணிக்கு வெளியே நின்று செயலாற்றும் தேவை ஏற்பட்டுள்ளது; ஆனால் இவர்களுடைய உண்மையான நோக்கம் தொழிலாளர்களை அதிகாரத்துவத்தினரின் பிடியில் மீண்டும் சிக்க வைப்பதுதான், அதற்காக இடது பிரதிநிதிகள் என்ற வேடம் புணைந்து அவை செயல்படுகின்றன.

இது தொடர்பாக, இடதுபிரிவின் எழுச்சியின் வெளிப்பாடு என்று Weekly Worker ஆல் புகழப்படும் Labour Against the War உடைய முயற்சிகள், ஈராக்கிய போருக்கு எதிராக வாக்களித்த 31 தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் இடங்களை காப்பாற்றும் வகையில் அவர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய அழைப்புவிடுவது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

(தொடரும்)


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved