World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

US demands Iraq's new government repudiate "de-Baathification"

ஈராக்கின் புதிய அரசாங்கம் "பாத்திஸ்டுகளை அகற்றலை" கைவிடுமாறு அமெரிக்கா கோருகிறது

By James Cogan
4 May 2005

Back to screen version

அமெரிக்க இராணுவத்தால் ஈராக்கிய உள்நாட்டுப் பாதுகாப்பு படைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சதாம் ஹுசைனின் பாத்திஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் உறுப்பினர்கள் அவர்களுடைய பதவிகளில் இருந்து அகற்றப்பட்டுவிடக் கூடாது என்ற தொடர்ச்சியாக வலியுறுத்தப்படும் அமெரிக்க கோரிக்கைகளால், பிரதம மந்திரி இப்ராஹிம் அல் ஜாபாரியின் ஷியைட் மேலாதிக்கம் செய்யும் புதிய ஈராக் அரசாங்கம் எதிர்ப்பை எதிர்கொண்டு இருக்கிறது.

ஏப்ரல் ஆரம்பத்தில் பாதுகாப்பு மந்திரி டோனால்ட் ரம்ஸ்பெல்ட் ஈராக்கிற்கு வந்திருந்தபோது, அமெரிக்க நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார். பாத்திஸ்டுகளை அகற்றும் எந்த முயற்சியும் வாஷிங்டனின் எதிர்ப்பிற்கு உட்படும் என்று ரம்ஸ்பெல்ட் ஜாபாரிக்கு எச்சரிக்கை கொடுத்தார். கடந்த வாரம், ஜாபாரியின் மந்திரிசபை அறிவிப்பை வரவேற்ற ஜனாதிபதி புஷ்ஷும் அதையே இன்னும் தெளிவான முறையில் திரும்பவும் தெரிவித்தார்.

"ஈராக்கில் அரசியல் நிலைபெறும் போது ஏற்படக்கூடிய பல ஆபத்துக்களில் ஒன்று, குடிமக்கள் அரசாங்கம் நாங்கள் உதவி செய்து வளர்த்தெடுத்துள்ள இராணுவ கட்டமைப்பை அப்படியே வைத்துக் கொள்ளுமா இல்லையா என்பது ஆகும். ஈராக்கியரின் அரசாங்கத்திற்கு நாங்கள் கூறிவருவதெல்லாம் 'உறுதியைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; கொடுத்துள்ள பயிற்சிக்கு இடையூறு ஏதும் செய்துவிடாதீர்கள்' என்பதுதான்" என்று புஷ் அறிவித்தார்.

United Iraqi Alliance (UIA) என்னும் புதிய அரசாங்கத்தின் முக்கிய பிரிவிற்கு அமெரிக்க கோரிக்கை முற்றிலும் விரும்பத்தகாத வகையில் இருக்கிறது. இது பல ஷியைட் கட்சிகள், குழுக்கள் இவற்றின் உறுதித்தன்மையற்ற கூட்டணியாகும்; இவை அனைத்துமே பாதிஸ்டுகளால் அடக்கப்பட்டிருந்தவையாகும். அவற்றுள் தொடர்ச்சியாக அமெரிக்கப் படைகளுடன் ஈராக்கில் ஒத்துழைத்து வந்துள்ள ஷியைட்டின் அடிப்படைவாத தாவா கட்சி, SCIRI எனப்படும் ஈராக்கிய இஸ்லாமிய புரட்சியின் தலைமைக் குழு என்பவை மட்டும்ல்லாமல், கடந்த ஆண்டு ஆக்கிரமிப்பிற்கு எதிராக எழுச்சி செய்திருந்த ஷியைட் மதகுரு மொக்தாதா அல் சதரின் ஆதரவாளர்களும் இருக்கின்றனர்.

முன்னாள் CIA நிதியத்தில் செயல்பட்டிருந்த அஹமத் சலாபியின் ஈராக்கியத் தேசியக் காங்கிரஸும் (INC), இந்தக் கூட்டணியில் உள்ளது; பாதிஸ்டுகள் அகற்றப்படவேண்டும் என்ற கொள்கையை வலியுறுத்தியதின் விளைவாக அவர் அமெரிக்க ஆக்கிரமிப்பு அதிகாரிகளுடன் பிளவை கொண்டார்; இந்த அகற்றுதல் என்பது ஈராக்கி அரசாங்கத்தில் இருந்து ஹுசைனுடைய கட்சியின் மூத்த உறுப்பினர்கள் அனைவரையும் ஒதுக்கிவிடுதல் என்பதாகும்.

இந்தக் குழுக்கள் அனைத்தையும் பொறுத்தவரையில், பாதிஸ்டுகளை அகற்றுதல் பிரச்சினை எளிதில் புறக்கணிக்கக்கூடியது அல்ல. ஷியைட் முதலாளித்துவ வர்க்கத்தினரின் அவாக்களைப் பிரதிபலிக்கும் முறையில், அவர்கள் அமெரிக்க ஆக்கிரமிப்பை நீண்ட நாட்களாக நடைபெற்றுவரும் சுன்னி ஆளும் செல்வந்த தட்டுக்களுக்கு பதிலாக தாங்கள் உயர் நிலையை அடையவேண்டும் என்று விரும்புகின்றனர்; முக்கியமான அரசியல் அதிகாரத்தை முதல் உலகப் போருக்குப் பின்னர் ஒட்டோமன் பேரரசில் இருந்து ஈராக் உருவாக்கப்பட்டதில் இருந்து உயர்பதவிகளில் தொடர்ந்து சுன்னிப் பிரிவுதான் இருந்து வந்திருக்கின்றனர்.

1968ம் ஆண்டு அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர், சுன்னியை தளமாகக் கொண்ட பாத் கட்சி ஈராக்கிய தொழிலாளர் இயக்கம், வடக்கில் குர்டிஷ் மக்கள், இன்னும் பல நேரங்களில் ஷியைட் சாதாரண மங்கள், சமயகுருமார்கள், வணிகச் செல்வந்தர் அடுக்குகள் இவற்றிற்கு எதிராக அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டதன் மூலம் சுன்னி அமைப்பின் செல்வத்தையும், சலுகைகளையும் காக்கும் வகையில் செயல்பட்டனர்.

அமெரிக்கரின் ஈராக்கிய ஆக்கிரமிப்பிற்கு ஷியைட் கட்சிகள், அலி அல் சிஸ்தானி போன்ற முன்னணி சமயகுருமார்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரவு கொடுத்தது, பெருமளவில் புஷ் நிர்வாகம் தங்கள் ஒத்துழைப்பிற்கு நன்றிக்கடனாக பாத்திஸ்டுகளை அப்புறப்படுத்தி, அரசு நிறுவனத்தின் முக்கிய பதவிகளை ஷியைட்டு அமைப்புக்கு மாற்றிக் கொடுத்துவிடுவர் என்ற நம்பிக்கையிலிருந்து கிளைத்தெழுகிறது. இந்த அரசியல் அதிகாரம் பின்னர் சுன்னி உயர் குழுவினர் மற்ற துறைகளில் கொண்டுள்ள ஆதிக்கத்தை முறிக்கப் பயன்படுத்தப்படலாம் என்றும் அவர்கள் கருதினர்.

தாவா, SCIRI மற்றும் சிஸ்தானி அனைவருமே ஈராக்கை அமெரிக்கா எடுத்துக் கொள்ளுவதற்கு எதிரான ஷியைட் மக்களால் நடத்தப்படும் எந்த போராட்டத்தையும் எதிர்ப்பதற்குத் தங்கள் செல்வாக்கை பயன்படுத்தியவர்கள். தங்களுடைய அரசியல் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்ளுவதற்காக, ஒரு ஷியைட் தலைமையிலான அரசாங்கம் ஈராக்கிய மக்களுக்கு எதிராக பாத்திஸ்டுகள் இழைத்த கணக்கிலடங்கா குற்றங்களுக்கு அவர்களைப் பொறுப்புக் கூறவைக்கும் என்றும் ஷியைட்டுப் பெரும்பான்மைக்கு ஜனநாயக உரிமைகள் வழங்கப்படுவதற்கு உதவும் என்றும் கருதினர்.

பல விதங்களிலும், அமெரிக்க ஆக்கிரமிப்பின் ஆரம்பக் கட்டங்கள் ஷியைட் அமைப்பால் எதிர்பார்க்கப்பட்ட வகையிலேயே சென்று கொண்டிருந்தது. அமெரிக்க இராணுவம் சிறு எதிர்ப்பை எதிர்பார்த்திருந்த சூழ்நிலையில், அமெரிக்கக் கட்டுப்பாட்டில் இருந்த ஈராக்கிய ஆட்சி ஈராக்கிய இராணுவத்தை கலைத்து சலாபியை பல்லாயிரக்கணகான பாதிஸ்டுக்களை ஈராக்கிய அரசாங்கம், பாதுகாப்புப் படைகள், ஆட்சித் துறைப் பணிகள் இவற்றில் இருந்து நீக்கும் பணியை மேற்பார்வையிடுமாறு நியமித்தது. முந்தைய ஆட்சி மற்றும் ஆளும் வர்க்கத்தின் நூற்றுக்கணக்கான முக்கிய உறுப்பினர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஆக்கிரமிப்பு படைகளுக்கு எதிராக நாடெங்கிலும் வளர்ச்சியடைந்த கிளர்ச்சிஎழுச்சி, அமெரிக்க கொள்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. நவம்பர் 2003ல் அமெரிக்கப் படைகளை எதிர்ப்பவர்கள் பழைய ஆட்சிக்கு விசுவாசத்தின் பேரில் அவ்வாறு செய்யவில்லை என்பது நன்கு தெரிந்தது. எழுச்சியில் மேலாதிக்கம் செய்த உணர்வு அமெரிக்காவால் நாட்டை எடுத்துக் கொண்டதற்கு எதிரான தேசிய மற்றும் சமய நோக்கு கொண்ட எதிர்ப்பு ஆகும்.

பாக்தாதிலும் தெற்கு ஈராக்கிலும், அமெரிக்காவிற்கு எதிரான ஆதிக்கம் நிறைந்த குரல் சதர் ஷியைட்டின் அடிப்படைவாத இயக்கத்தின் குரலாகும்; இது இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஹுசைனின் முக்கிய எதிரியாக இருந்து வந்துள்ளது. பல்லூஜா, ரமாடி போன்ற சுன்னி மையங்களில் எழுந்த எழுச்சி பெரும்பாலும் சமய குருமார்களாலும், சுன்னி இஸ்லாத்தின் வாகாபிப் போக்கின் அடிப்படை வாதிகளாலும் நடத்தப்பட்டது; அவர்களும் பாத்திஸ்டுகளால் துன்புறத்தப்படிருந்தனர்.

அமெரிக்க கொள்கையில் மாற்றம்

இதற்கு விடையிறுக்கும் வகையில் புஷ் நிர்வாகம் அமெரிக்கப் படைகளை கட்டமைத்து பல்லூஜாவிலும் சதரின் இயக்கத்திற்கு எதிராகவும் ஏப்ரல் 2004ல் தாக்குதலை நடத்தியது. அதே நேரத்தில் பாத்திஸ்டுகளை அகற்றும் முயற்சி கைவிடப்பட்டது. இந்தக் கொள்கை மாற்றத்திற்கு காரணம் எளிதான கணக்கு முறைதான். முதலில் பாத்திஸ்டுகள் ஈராக்கிய மக்களை அடக்குவதில் நீண்டகால அனுபவம் உடையவர்கள். இரண்டாவதாக அமெரிக்க ஏகாதிபத்தியம் அவர்களுடைய பொருளாயத நிலைக்கு உறுதி கொடுத்திருந்தனர்; சதாம் ஹுசைனுடைய முன்னாள் ஆதரவாளர்களுக்கு எழுச்சிக் குழுக்களுடன் சேர்வதற்கு நோக்கம் ஏதும் கிடையாது; ஏனெனில் அவை எந்த அளவிற்கு ஆக்கிமிப்பை எதிர்த்தனவோ, அந்த அளவிற்கு பாத்திஸ்ட் எதிர்ப்பையும் கொண்டிருந்தன.

அமெரிக்க கொள்கையில் மாற்றம் ஒருகாலத்தில் வாஷிங்டனில் ஈராக்கில் கைப்பாவை தலைவராக இருக்கக் கூடியவர் எனக் கருதப்பட்ட சலாபியை, அரசியல் ரீதியாக ஒதுக்குவதற்கு வகை செய்தது. பாத்திஸ்டுகளை அகற்றும் குழுவின் தலைவராக அவரை அகறுறம்பொருட்டு அவர்மீது ஊழல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது, ஈரானுக்காக ஒற்று அறிகிறார் என்ற குற்றச் சாட்டும் முன்வைக்கப்பட்டது. INC அலுவலகங்கள் ஈராக்கிய போலீஸ் மற்றும் அமெரிக்கப் படைகளால் மே 2004ல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவருடைய இடத்தில் முன்னாள் பாத்திஸ்டான இயத் அல்லாவி இருத்தப்பட்டார்; இவர் அமெரிக்க நிதி உதிவி பெற்ற ஈராக்கிய தேசிய உடன்பாட்டின் (INA) தலைவராக இருந்து, கடந்த ஜூன் மாதம் இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்த மாதங்களில், CIA மற்றும் அமெரிக்க இராணுவம் அல்லாவியுடன் சேர்ந்து கொண்டு முன்பு சதாம் ஹுசைனுடைய அடக்குமுறை எந்திரத்தில் இருந்த ஆயிரக்கணக்கான நபர்களை தேர்ந்தெடுத்து அமெரிக்க நிதியுதவி, பயிற்சி பெறும் ஈராக்கியப் பாதுகாப்புப் படையில் தேர்ந்தெடுத்தனர். 2004ம் ஆண்டு பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கியமான பாத்திஸ்ட் பிரிவு 10,000 பேர் கொண்ட சிறப்பு போலீஸ் அதிரடிப் படைப்பிரிவு (Special Police Commandos force) ஆகும்; இது உள்துறை அமைச்சரகத்தின் கட்டுப்பாட்டின் கீழ், அமெரிக்க ஆலோசகர்களின் மேற்பார்வையில் செயல்படுகிறது.

இந்த அதிரடிப் படையினர் முந்தைய பாத்திஸ்ட் சிறப்புப் படையில் இருந்தும், மிக உயர் செல்வாக்குப் பெற்றிருந்த குடியரசுக் காவலர் படையில் இருந்தும், பிரத்தியேகமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். இதற்கு தலைமை தாங்குவதற்கு முன்னாள் ஈராக்கிய உளவுத்துறை அதிகாரியாகவும் அல்லாவியின் சக அலுவலருமாக 1996ல் ஹுசைனுக்கு எதிராக நடத்தப்பட்டு தோல்வியடைந்த CIA ஆதரவு ஆட்சிக் கவிழ்ப்பில் பங்கேற்றவருமான தளபதி ரஷீத் ப்ளை இருந்தார். அவர் 1991ல் ஹுசைனின் பாதுகாப்புத் தலைவராக நசீரியாவில் பொறுப்பக் கொண்டிருந்து, முதல் வளைகுடாப் போருக்குப் பின்னர் அப்பகுதியில் தோன்றிய ஷியைட்டு கிளர்ச்சியை இரத்தம்தோய்ந்த முறையில் ஒடுக்குவதற்குத் தலைமை தாங்கியிருந்தவர் ஆவார்; பின்னர் அவர் ஒரு படைப்பிரிவுத் தலைவராக நியமனம் பெற்றார்.

மே 1ம் தேதி நியூயோர்க் டைம்ஸ் ஏடு, இந்தப் பிரிவுடன் பணியாற்றும் முக்கிய அமெரிக்க ஆலோசகர், 1980களில் எல் சால்வடாரில் வலதுசாரி கொலைக்குழுவுடன் இணைந்து செயலாற்றிய அமெரிக்க ஆலோசகர்கள் குழுவின் கட்டுப்பாட்டுத் தலைவராக இருந்த, ஜேம்ஸ் ஸ்டீல் என்று கூறியுள்ளது. ஸ்டீலுடைய அனுபவம் இப்பொழுது ஈராக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது; இங்கும் அதிரடிப்படையினரின் முக்கிய செயற்பாடு சால்வடோரியப் பிரிவுகள் கொண்டிருந்த அதே நோக்கத்தையும், செயற்பாட்டையும்தான் கொண்டுள்ளன. மிகக் கவர்ச்சிகரமான ஊதியம், மற்றும் கடந்த காலக் கொடுமைகள் ஹுசைனின் ஆட்சியின் போது நிகழ்ந்தவற்றில் இருந்து பாதுகாப்பு இவற்றிற்கு கைமாறாக இந்தச் சிறப்புப் படையினர் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றனர். இதுவரை, அவர்கள் சமாரா, மோசூல், ரமாடி மற்றும் பாக்தாத்தின் சில பகுதிகள் ஆகிய இடங்களில் மக்களுக்கு எதிராக உபயோகிக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.

அதே நேரத்தில் CIA உம் அல்லாவியும் ஹுசைனின் முன்னாள் இரகசிய போலீஸ் முகவர்களையும் நூற்றுக் கணக்கில் உள்துறை அமைச்சரகத்தில் நியமித்துள்ளனர். ஒரு UIA தலைவரான ஹுசைன் ஷாகிரிஸ்டானி வாஷிங்டன் போஸ்ட்டிடம் ஏப்ரல் மாதம் கூறினார்: "உட்துறையில் பெரும்பாலான மூத்த அதிகாரிகள் முந்தைய உளவுத்துறையில் இருந்து, முன்பு ஈராக்கிய மக்களை அடக்கியவர்கள் என்பதை நாங்கள் அறிவோம்." இதையும் தவிர, புதிய ஈராக்கிய இராணுவத்தின் அதிகாரிகளில் 70 சதவிகிதத்தினர் ஹுசைனின் முந்தைய படைப் பிரிவுகளின் தலைவர்கள் என்றும் நம்பப்படுகிறது.

ஜனவரி 31 தேர்தல்களில் தேசிய சட்ட மன்றத்தில் 285 இடங்களில் 140 பெரும்பாலான இடங்களை UIA கைப்பற்றியது. ஆனால் அது வெற்றியை கொண்டாடிக் கொண்டிருக்கும்போதே, பாதுகாப்புப் படைகளில் பாத்திஸ்டுகளின் பரிமாணம் பெருகுவது அணிகளிடைய பெரும் ஆபத்துணர்வை தூண்டியது. மார்ச், ஏப்ரலில் ஷியைட் சட்ட மன்ற உறுப்பினர்கள் அல்லாவி மற்றும் அமெரிக்க இராணுவம் தேர்தல் முடிவுகளுக்கு கொடுத்த விடை முன்னாள் பாதிஸ்ட்டுக்களை அதிகமாக தேர்ந்தெடுத்தல் என்பதாயிற்று எனக் குற்றம்சாட்டினர்.

இதில் குறிப்பாக SCIRI புதிய அரசாங்கத்தின் முதல் செயற்பாடுகளில் ஒன்றாக பாத்திஸ்டுகளை அகற்றுதல் இருக்கும் என்று பலமுறை அறிவிப்புக்களை கொடுத்துள்ளது; அவர்களுக்கு பதிலாக ஷியைட் அடிப்படைவாத (Badr Corp militia) பதர் குடிப்படை குழுவினர் நியமிக்கப்படுவர் என்றும் கூறியது. அமெரிக்க அழுத்தத்திற்கு தலைவணங்கி, பாத்திஸ்டுகளை அகற்றுவதில் இருந்து பின் வாங்கினால் சாதாரண ஷியைட்டு மக்கள் மில்லியன் கணக்கில் இவர்கள் பால் கொண்டுள்ள ஓரளவு நம்பகத்தன்மையும் சிதறிப்போய்விடும் என்று UIA கட்சிகள் பயப்படுகின்றன.

ஜனவரி மாதம் 31 அன்று ஏராளமான எண்ணிக்கையில் ஷியைட்டுக்கள் வாக்குப் பதிவு செய்ய இரண்டு முக்கிய காரணங்களுக்காக வந்திருந்தனர். UIA கட்சிகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அனைத்து அமெரிக்க, வெளிநாட்டுப் படைகளை ஈராக்கில் இருந்து வெளியேற்றும் என்று வலியுறுத்தியிருந்தன. மேலும் பாத்திஸ்டுகளை அகற்றுவதாகவும் அவர்கள் கூறியிருந்தனர். சிஸ்தானி தன்னை UIA உடன் அடையாளம் காட்டிக் கொண்டு, ஷியைட்டுக்களை அமெரிக்க ஆணையில் அரசியல் வழிவகையில் பங்கு பெறுமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

ஜாஃபரியும் UIA வும் ஏற்கனவே, அமெரிக்கா திரும்பிச்செல்வதற்கு ஒரு குறிப்பிட்ட கெடுவை குறிக்காத வகையில், தங்கள் அடித்தளத்தை விரோதப்படுத்தி கொண்டுவிட்டனர். ஷியைட்டுக்களின் அரசாங்கம் பாத்திஸ்ட்டுக்கள் உள் பாதுகாப்பை இயக்கட்டும் என்று அழைப்பு விட்டால், ஜாஃபரியும் சிஸ்தானியும் அமெரிக்க கைப்பாவைகள்தான் என்ற உணர்வை உயர்த்திக் காட்டுவதோடு, ஷியைட்டுக்களின் அரசியல் சார்பை சதர் இயக்கத்திற்கு மாற்றிவிடும்.

சதரின் ஆதரவாளர்கள் ஜாஃபரியின் மந்திரிசபையில் மூன்று அமைச்சுக்களை கொண்டிருக்கும்போது, சதரிஸ்டுகளின் பாராளுமன்றத்திற்கு வெளியேயான செயல்பாடு ஷியைட்டு மக்களின் விருப்பங்களுக்காக போராடத் தயங்கும் தன்மையை காட்டுவதாக உள்ளது என்று அரசாங்கத்தை கண்டனத்திற்கு உட்படுத்துவதாக இருக்கிறது. ஏப்ரல் 9ம் தேதி, ஹுசைன் ஆட்சி வீழ்ந்த இரண்டாம் ஆண்டு நிறைவின்போது, அவர்கள் தங்களுடைய அரசியல் பரிமாணத்தை மிகப் பெரிய ஆக்கிரமிப்பு எதிர்ப்பு, பாத்திஸ்ட் எதிர்ப்பு அணி ஒன்ற பாக்தாத்தின் பிர்டோஸ் சதுக்கத்தில் நடத்தியதின் மூலம் வெளிப்படுத்தினர்.

UIA வை ஷியைட் நிராகரிக்கும் முயற்சியையும் அமெரிக்க ஆக்கிரமிப்பை அகற்றுவதையும் தடுக்கும் முயற்சி, ஏப்ரல் 7ம் தேதி அவர் பிரதம மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து, "தேசிய ஒற்றுமைக்கான அரசாங்கத்" திற்கான அமெரிக்க கோரிக்கையும் ஜாஃபரியின் இயலாத தன்மையில் பிரதான காரணி ஆகும்.

அல்லாவியுடைய INA யின் உள்துறை அமைச்சரகம் வேண்டும் என்ற வேண்டுகோளை, அவர் தொடர்ந்து பாதிஸ்டுகளை தேர்ந்தெடுப்பார் என்று கருதி UIA நிராகரித்தது. மேலும் பல சுன்னிப் பிரிவுகளின் சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்புத் துறை, துணைப் பிரதமர் பதவி ஆகியவை தரப்படவேண்டும் என்பதை, அவர்கள் ஹுசைனின் ஆட்சிக் காலத்தில் மூத்த பதவிகளில் இருந்திருக்கின்றனர் என்ற அடிப்படையில் மறுக்கும்படி அது நிபந்திக்கப்பட்டது. இதற்கு விடையிறுக்கும் வகையில், முந்தைய ஷியைட் கூட்டணியில் பங்கு பெற்றிருந்த மூன்று சுன்னிகள், அதில் இருந்து விலகி விட்டனர்; எனவே இப்பொழுது தேசிய சட்ட மன்றத்தில் இதன் எண்ணிக்கை 137 ஆகத்தான் உள்ளது.

நேற்று பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட மந்திரிசபை அல்லாவியின் ஆதரவாளர்களை ஒதுக்கி வைப்பதோடு ஒரு சுன்னி உறுப்பினருக்கும் முக்கியப் பொறுப்பை கொடுக்கவில்லை. ஜாஃபரி இன்னும் பாதுகாப்பு மந்திரி, ஒரு சுன்னி துணைப் பிரதமர் அல்லது இதர ஐந்து மந்திரிகள் யாவர் என்று பெயரிடவில்லை. இன்னும் நியமனம் செய்யப்படாத துறைகளில் எண்ணெய் அமைச்சகமும் உள்ளது; இதை குர்திஷ் கட்சிகள் விரும்பியிருந்தன. ஈராக்கின் எண்ணெய் தொழிலின் வருங்காலத்தைப் பற்றி UIA வும் குர்திஷ் கட்சிகளும் மிகப் பெரும் கருத்து வேறுபாடுகளை கொண்டுள்ளன; அதிலும் குறிப்பாக வடக்கில் இருக்கும் எண்ணெய் வயல்கள் பற்றி குர்துகள் இவற்றை குர்திய வட்டார வட பகுதி அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

ஓர் அரசாங்கத்தை உடனடியாக அமைக்கும் அழுத்தத்தை அமெரிக்காவிடம் இருந்து கொண்டிருக்கும் நிலையில், என்ன ஏற்பட்டுள்ளது என்றால் அனைத்து முக்கிய பிரிவுகளும் UIA உறுப்பினர்களின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் அமைச்சரவை வந்துள்ளது. ஜாஃபரி இடைகாகால பாதுகாப்பு மந்திரியாக இருப்பார்; அதேவேளை சலாபி எண்ணெய்த் துறை மந்திரியாக இருப்பார். Baqir Solagh Jabr என்னும் SCIRI உறுப்பினர் உள்துறை மந்திரியாக நியமிக்கப்பட்டார், அதனுடன் இதர UIA உறுப்பினர்கள் தேசிய பாதுகாப்பு மற்றும் நீதித்துறை பொறுப்புக்களை எடுத்துள்ளனர்.

புதிய ஆட்சி உடனடியாக ஓர் அரசியல் நெருக்கடியை எதிர்கொள்ளுகிறது. ஷியைட்டுக்கள் அமெரிக்க ஆக்கிரமிப்பால் அதிகாரத்தில் உயர் நிலை எய்துதல் என்ற அவர்களின் முன்னோக்கை அடைந்துள்ளனர்; ஆனால் அவர்கள் ஷியைட்டு தொழிலாள வர்க்கமும், ஏழைகளும் தங்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்யக் கூடிய கொள்கையை கடைப்பிடிக்குமாறு வாஷிங்டனால் உத்திரவிடப்பட்டுள்ளனர்.

பாத்திஸ்டுகளை அகற்றுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கத்தவறியதன் காரணமாக நேற்று தேசிய சட்டமன்றத்தில் ஜாஃபாரியின் உரை அமெரிக்காவிற்குத் தாழ்ந்து நடத்தலை வெளிப்படுத்துகிறது என்று ஏற்கனவே விளக்கம் காணப்படுகிறது. ஷியைட் சட்டமன்ற உறுப்பினர்களுள் ஒருவரான அலி அல் லமி எச்சரிக்கை விடுத்தார்: "இந்த அரசாங்கம் மக்களுடைய நம்பிக்கையை இழக்கப் போகிறது. ஈராக்கிய தெருக்களில் பெரும் மக்கள் எழுச்சியை பார்க்கவுள்ளோம். இது ஜாஃபாரியின் ஈராக்கிய அமெரிக்க ஆலோசகர்கள் வழியே நடக்கும் அமெரிக்கத் தலையீடு ஆகும்."


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved