World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

60 years since the end of World War II

Editorial of Gleichheit, magazine of the Socialist Equality Party (Germany)

இரண்டாம் உலகப் போர் முடிந்து 60 ஆண்டுகளுக்கு பின்னர்

ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியின் சமத்துவம் இதழின் ஆசிரிய தலையங்கம்

By Peter Schwarz
11 May 2005

Back to screen version

ஜேர்மனியில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சியின் (Partei fur Soziale Gleichheit) ஏடான சமத்துவம் மே-ஜூன் இதழில் கீழ்க்கண்ட தலையங்கம் வந்துள்ளது. இந்த சஞ்சிகை உலக சோசலிச வலைத் தளத்தில் வந்துள்ள கட்டுரைகள் சிலவற்றை தேர்ந்தெடுத்தும் வெளியிட்டுள்ளது.

அறுபது ஆண்டுகளுக்கு முன்னர், ஹிட்லரின் "ஆயிரம் ஆண்டுகள் நீடிக்கும் ரைகின்" தலைநகரான பேர்லின் பெரும் அழிவில் சிதைந்து நின்றது. ஏப்ரல் 30-ம் தேதி, சர்வாதிகாரி தற்கொலை செய்து கொண்டார், மே 8-ம் தேதியன்று ஜேர்மனிய படைகளின் உயர் தளபதிகள் நிபந்தனையற்ற சரணாகதி அடைந்தனர். மனித இனத்தின் வரலாற்றிலேயே மிக மிருகத்தனமானதும், குற்றஞ்சார்ந்ததுமான ஆட்சிக்கு இந்நிகழ்வு முற்றுப்புள்ளிவைத்தது. இந்த ஆட்சி ஓர் ஆக்கிரமிப்பு போரை தொடங்கியது; அதில் கிட்டத்தட்ட 70 மில்லியன் உயிர்கள் மடிந்து போயின, அது ஐரோப்பா முழுவதையும் அடக்குமுறைக்கு உட்படுத்தியதோடு, 6 மில்லியன் யூதர்களையும், ரோமாக்களையும் (நாடோடிப் பழங்குடியினரையும்) கொன்று குவித்தது.

போர் முடிவடைந்தது பற்றிய ஆண்டுவிழா மிகப் பெரிய முறையில் பொதுமக்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது; ஏராளமான தொலைக்காட்சி ஆவண திரைப்படங்கள், திரைப்படங்கள், புத்தகங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகள் ஆகியவை இதையொட்டி வந்துள்ளன. இத்தகைய நிகழ்வுகள் இனியும் தோன்றா எனக் கருதப்பட்ட, இதுகாறும் நிலவி வந்த உறுதியான உணர்வு, அண்மைக்காலகட்டத்தில் பெரும் அதிர்விற்கு ஆளாகியுள்ளது.

போருக்குப் பிந்தைய காலத்தில், பாசிசம், போர் மற்றும் இவற்றிற்கு முன்னிருந்த நிலை-----அதாவது பொருளாதார வீழ்ச்சி, வெகுஜனங்களின் வேலையின்மை, வெகுஜனங்களின் வறிய நிலை இவை அனைத்தும், குறைந்தபட்சம் ஒரு தொழிற்துறை உலகத்தில், முடிந்துவிட்ட சகாப்தத்தோடுதான் பொருந்தியிருந்தது என்று கருதப்பட்டது. ஆனால் அது அப்படி இல்லாமற்போயிற்று. மிகப் பெரிய வேலையின்மை நிலை என்பது மீண்டும் வந்துவிட்டது, உலகப் பொருளாதாரம் பெருமளவில் ஸ்திரமற்ற தன்மையை கொண்டுள்ளது; குறைந்த பட்சம் ஈராக் போர் தொடங்கிய பின்னர், வல்லரசுகள், குறிப்பாக அமெரிக்கா, மீண்டும் தங்கள் பொருளாதார, அரசியல் நலன்களை பிறர் மீது சுமத்துவதற்காக இராணுவ பலத்தை நியாயமான வழிமுறை என்று பயன்படுத்தும் என்பது தெளிவாகிவிட்டுள்ளது. எனவே ஒரு மூன்றாம் உலகப் போர் என்பது ஓர் உண்மையான ஆபத்தாகிவிட்டது.

வர்ணனைகளின் அரசியல் தரம் பொதுவாக மிகக் குறைந்துதான் உள்ளது. அவை பெரும்பாலும் தனிப்பட்ட நிகழ்வுகள் மற்றும் காவியங்கள் பற்றிய விரிவான விளக்கங்கள், அக்காலத்தில் வாழ்ந்தவர்களின் சொந்த நினைவுகள், பல நாஜித்தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகள் போன்றவற்றை கொண்டுள்ளன. படிப்பினைகளையும் முடிவுரைகளையும் காண்பதை சாத்தியமாக்கும், வரலாற்று ரீதியாக நாசிசம் மற்றும் இரண்டாம் உலகப் போரை பற்றிப் புரிந்து கொள்ளுதல், அவர்களுடைய அரசியல் மற்றும் கருத்தியல் போக்கு இவற்றின் வேர்களைப் பற்றிப் புரிதல், அவர்களின் சமூக அடித்தளங்கள் மற்றும் வரலாற்றுப் பணி ஆகிய இவையெல்லாம் விடுபட்டுள்ளன.

இத்தகைய விவாதத்தின் மேலெழுந்தவறான தன்மையை, நிகழ்வுகளை பற்றிய புறநிலைரீதியான மற்றும் முறையான அறிதலின் சாத்தியம் எதையும் நிராகரிக்கின்ற பின்நவீனத்துவ வாதம் போன்ற அண்மைய மெய்யியல் போக்கு மற்றும் பாணிகளின் செல்வாக்கால் வெறுமே விளக்கிவிட முடியாது. எல்லாவற்றிற்கும் மேலாக, போருக்குப் பிந்தைய காலகட்டத்தின் அதிகாரபூர்வமான அரசியல் கருத்துருக்களின் தகர்ந்ததால் விளைந்த பொதுக் குழப்பத்தில் விளைவாகும்.

நாஜிசத்தின் வரலாற்றுச் செயற்பாடு, அணிதிரட்டப்பட்ட தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக அடித்து இறுக்கும் கருவியாக நசுக்கப்பட்டிருந்த குட்டி முதலாளித்துவத்தினர் மற்றும் லும்பென் சக்திகளை அணிதிரட்டுவதாக இருந்தது மற்றும் அவர்களை ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் பணியில் இருத்துவதாக இருந்தது. ஹிட்லரின் போர் இலக்குகளான, ஐரோப்பாவை ஜேர்மனிய ஆதிக்கத்தின் கீழ் மறுஒழுங்குசெய்தல், ஜேர்மனியின் கிழக்கு நோக்கிய விரிவாக்கம் என்பவை அடிப்படையில் முதலாம் உலகப் போரில் கைசர் வில்லியத்தால் பின்பற்றப்பட்ட இலக்குகள்தாம். அவற்றை போலவே இவையும் ஜேர்மனிய பெருவணிகத்தின் விரிவாக்க வேட்கைகளுடன் ஒத்திருந்தன.

போர் முடிவடைந்த பின்னர், முதலாளித்துவத்திற்கும் நாஜிசத்திற்கும் ஒரு பரந்த வகையில் புரிதல் இருந்தது. தொழிற்துறை தலைவர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டனர். முதலாளித்துவத்தை அகற்றுவதற்கான அறைகூவல் மிகப் பெரிய வகையில் இருந்து, அது பழமைவாத கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியத்துடைய Ahlen வேலைத்திட்டத்தில்கூட எதிரொலித்திருந்தது. முதலாளித்துவத்தை மீட்பதற்கு நாஜிசத்தில் வேறுவிதமான விளக்கம் தேவைப்பட்டது. அது மற்றவர்கள் எழுத்துக்களில் இருந்ததைப் போல் Hannah Arendt மற்றும் பிராங்க்போர்ட் பள்ளி எழுத்தாளர்களிடையேயும் காணப்பட்டது.

Hannah Arendt, வைமார் குடியரசின் சமூக வாழ்க்கையில் ஆதிக்கம் பெற்றிருந்த சர்வதேச முரண்பாடுகளையும் வர்க்கப் பூசல்களிலிருந்தும் நாஜிசத்தை விளக்கவில்லை, மாறாக இரண்டு அருவமான கோட்பாடுகளான-----முழு சர்வாதிகாரம், ஜனநாயகம் இவற்றிற்கிடையே உள்ள முரண்பாடுகளை கொண்டு விளக்க முற்பட்டார். பிராங்க்போர்ட் பள்ளி அதன் நாஜிசம் பற்றி திறனாய்வை ஒரு மார்க்சிச பூச்சால் கொடுக்க முயற்சித்தது, ஆனால் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு புரட்சிகர பங்கு என்று மார்க்சால் கூறப்பட்டதை உறுதியாக நிராகரித்திருந்தது. "தொழிலாளர்களின் செயலற்ற தன்மை என்பது ஆட்சியாளர்களின் இட்டுக்கட்டுதல் மட்டும் இல்லாமல், தொழிற்துறை சமூகத்தின் தர்க்கரீதியான விளைவும் ஆகும்" இதுதான் அறிவொளியின் இயங்கியல் (Dialectic of Enlightenment) என்ற நூலில் உள்ள முக்கிய பகுதிகளில் ஒன்றாகும்; இது Max Horkheimer, மற்றும் Theodor Adorno ஆகியோரால் எழுதப்பட்டது ஆகும்.

இந்தக் கருத்துருவின்படி, போர், பாசிசம் மற்றும் பிற்போக்குத்தனத்திற்கு எதிரான போராட்டம் என்பது, ஒரு வர்க்கப் பிரச்சினை அல்ல. முதலாளித்துவத்தை தூக்கி வீசுவதற்கு தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டும் பிரச்சினையும் அல்ல. மாறாக, "ஜனநாயகத்தின்" பாதுகாப்பு என்பது அரசால் நிறைவேற்றப்பட வேண்டிய பணியாகும். அதுதான் சமூக முரண்பாடுகள் நிறைந்து வழிந்து "சமூக அமைதியை" ஆபத்திற்கு உட்படுத்தாமல் பாதுகாக்க வேண்டும். வலதின் அச்சுறுத்தல்களையும், தேவையானால் அடக்குமுறையை பயன்படுத்தியேனும் "ஜனநாயகத்தை" பாதுகாக்க வேண்டும்------எல்லாவற்றிற்கும் மேலாக இடதின் அச்சுறுத்தலில் இருந்தும் காக்க வேண்டும். இந்தக் கருத்துருதான் மேற்கு ஜேர்மனியின் அரசியல் சிந்தனையாக போருக்குப் பிந்தைய காலத்தில் சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் CDU வினராலும் ஒரேமாதிரியாக பாதுகாக்கப்பட்டது: அதாவது சமூக சந்தைப் பொருளாதாரம், சமூக பங்ககுதாரர் மற்றும் வலுப்படுத்தப்பட்ட ஜனநாயகம் ஆகியவையாகும்.

சர்வதேச உறவுகள் உறுதியாக இருந்த வரை, பொருளாதாரம் வளர்ச்சியுற்று ஜேர்மனி தன்னுடைய பூகோள நலன்களையும் அமெரிக்க குடையின்கீழ் கவனித்து வந்தது: இது ஓரளவு நடைமுறையில் செயல்பட்டு வந்தது; மற்றும் ஜனநாயக நிலைப்பாடுகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் தன்மையை கொண்டிருந்தது போலவும் இருந்தது. ஆனால் பூகோளமயமாக்கப்பட்ட உற்பத்தி மற்றும் நிதிச் சந்தைகள் வந்த பின்னர், வார்சோ ஒப்பந்தம், மற்றும் சோவியத் ஒன்றியம் பொறிந்த பின்னரும், இறுதியில் அமெரிக்கா ஒரு வன்முறையைக் கையாளும், ஒருதலைப்பட்சமான வெளியுறவுக் கொள்கையை கடைபிடிக்க தலைப்பட்டவுடன், சர்வதேசிய, தேசிய உள்ளடக்கம் அடிப்படையில் மாற்றம் அடைந்திருக்கின்றன. ஓர் ஆழ்ந்த அரசியல் நெருக்கடி அனைத்து அரசியல் முகாம்களிலும் மேலாதிக்கம் செய்கிறது.

வெளியுறவுக் கொள்கையில், இராணுவ வழிமுறைகள் உட்பட, ஜேர்மனி மீண்டும் உலக வல்லரசாக செயல்பட விழைகிறது. சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைக் கட்சி கூட்டணி ஆட்சியில், மறுஐக்கியம் ஏற்படும் வரை பாதுகாப்பிற்கு மட்டுமே என்று மட்டுப்படுத்தப்பட்ட்டிருந்த ஜேர்மனிய இராணுவம் இப்பொழுது உலகில் மூலோபாய முறையில் முக்கியத்துவம் வாய்ந்த பல பகுதிகளிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சர் பீற்றர் ஸ்ட்ரக் வார்த்தைகளை பயன்படுத்துவது என்றால், "ஜேர்மனிய சுதந்திரம், ஹிந்து குஷ்ஷில்" என்பதை பேணுகிறது. ஆனால் எந்த மூலோபாயத்தை ஜேர்மனி ஏற்க வேண்டும், எந்த இலக்கை அது எடுக்க வேண்டும்? கடுமையாக விவாதிக்கப்படும் இந்த வினாக்களில் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை.

ஜேர்மனியின் வெளியுறவுக் கொள்கை பற்றிய தனது புதிய புத்தகத்தில், பழைமைவாத, தற்கால வரலாற்றாளர் Hans-Peter Schwarz, "பேர்லினுடைய வெளிநாட்டுக் கொள்கையில் தற்பொழுது இருக்கும் நிலையற்ற போக்கிற்கு காரணமாக சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைக் கட்சிக் கூட்டணியை மட்டுமே குற்றம்சாட்டி" குறிப்பிடுவது என்பது சரியாக இருக்காது என்று கூறியுள்ளார். உண்மையில் அனைத்துக் கட்சிகளுமே நோக்குநிலையற்றுள்ளது என்று அவர் கூறியுள்ளார். இதன் பின்னர் விடைகாணப்படவேண்டிய "முக்கியமான கேள்விகளை" அவர் ஒரு பட்டியல் இட்டுக் கூறியிருக்கிறார்: "அமெரிக்கா எந்த அளவிற்கு ஆபத்து வாய்ந்தது? நமக்கு அது தவிர்க்க முடியாமல் எந்தவிதத்தில் உள்ளது? ஐரோப்பிய ஒன்றியத்தின் தன்மையை ஒட்டி பொதுப்பாதுகாப்பு எழுகிறது என்பது சாத்தியமா? அல்லது நாம் விரைவில் 'மைய, முக்கியத்துவம் கொண்ட ஐரோப்பா' என்ற கருத்தை விரைவில் இலக்கிட முடியாதா? அமெரிக்கா போலவே, பிரான்சும் பிரச்சினை கொடுக்கக் கூடிய நாடு அல்லவா? இதுகாறும் இருந்ததைப் போல் ஐரோப்பிய ஒன்றியம். தன்னுடைய வரம்புகளை விரிவாக்கி, துருக்கியையும் சேர்த்துக் கொள்ள வேண்டுமா? உண்மையிலேயே மிக நெருக்கடியும், சிக்கலும், வெடிமருந்துக் கிடங்குகளும் நிறைந்து, 1914-க்குப் பல தசாப்தங்கள் முன்பு இருந்த பால்கன்களை போல் இப்பொழுது இருக்கும் மத்திய கிழக்கு பகுதிக்கு ஜேர்மனி தள்ளப்பட வேண்டுமா?... பொதுவாகப் பேசும்பொழுது, வரவிருக்கும் காலத்தின் தன்னுடைய நன்கு புரிந்துகொண்ட நலன்களை தேசிய, ஐரோப்பிய, பூகோள அர்த்தத்தில் எவ்வாறு வரையறுத்துக் கூற முடியும்?"

ஜேர்மனிக்குள், பூகோளமயமாக்கப்பட்ட விளைவுகள், ஐரோப்பிய ஒன்றியம் கிழக்குப் புறம் விரிவடைந்ததின் விளைவுகள் மற்றும் தீவிரமான சர்வதேசப் போட்டிகள் ஆகியவை சமூக சமநிலைக் கொள்கைகளை கீழறுத்துள்ளன. ஷ்ரோடர்-பிஷர் அரசாங்கம் கடந்த ஆறு ஆண்டுகளில், முன்கண்டிராத வகையில் சமூக நலன்களை அழித்து, பெருவணிகத்திற்கான வரிகளையும் மிகப் பெரிய அளவில் குறைத்துள்ளது. வணிகர்கள், தங்கள் பங்கிற்கு, தொழிற்சங்கங்களின் துணையோடு ஊதியங்களில் பெரும் வெட்டை உருவாக்கி, வேலைநேரத்தையும் அதிகப்படுத்தியுள்ளனர்.

இந்த நடவடிக்கைகள் விளைவை கொடுத்துள்ளன. அமெரிக்கா போல் அன்றி, உற்பத்திச் செலவினங்கள் கடந்த எட்டு ஆண்டுகளில் மிக மெதுவாகத்தான் வளர்ந்துள்ளன. உலக வர்த்தகத்தில் 10 சதவீதம் என்றுள்ள நிலையில், ஜேர்மனி ஏற்றுமதியில் முதலிடத்தை கொண்டுள்ளது. ஆயினும் கூட பொருளாதார நிலைப்பாட்டில் மேல்நோக்கிச் செல்லும் போக்கு காணப்படவில்லை. அரசாங்கத்தின் ஹார்ட்ஸ் சீர்திருத்தங்கள் சுமத்தப்பட்ட நடவடிக்கைகளின் பெரும் தீமை நிறைந்த சமூக விளைவுகளுக்கு பின்னரும் பயன் அளிக்காமல் உள்ளன. பெருவணிகத்தின் பிரதிநிதிகள் கூடுதலான, இன்னும் கடுமையான சீர்திருத்தங்களை கோருகின்றனர், அவை இப்பொழுதுள்ள ஆளும் வடிவங்களின்படி, சுமத்தப்பட முடியாதவையாகும்.

பொருளாதார ஆலோசகர் ரோலன்ட் பெர்கர் ஊதியம் அல்லாத தொழிலாளரின் செலவு தற்போதைய 42 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாக குறைய வேண்டும், அது வணிகத்தின் ஒட்டுமொத்த வரிப் பளுவில், செல்வந்தர்கள் 40 சதவீதத்திலிருந்து அதிகமாக 25 சதவீதம் குறைக்கப்பட வேண்டும் என்றும், பொது உள்கட்டமைப்பு பரந்தளவில் தனியார்மயமாக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இந்த நோக்கத்திற்காக ஜனநாயகத்தை ஒரு தற்காலிகமாக தூக்கிவிடுவது என்று அவர் முன்மொழிந்தார். ''ஆரம்பத்தில், ஒரு பரந்த கூட்டணியல்லாமல் இது சாத்தியமாகாது,'' என்று அவர் குறிப்பிட்டார். அதன் விளைவாக, அரசியல்வாதிகள் ஒரு வேலைத்திட்டத்திற்கு அங்கீகரிக்க முடியும் ''இரண்டு வருடத்திற்குள் அதை அவர்கள் அமுல்படுத்துவார்கள், அதை தொடர்ந்து அவர்கள் ஒரு தேர்தலில் மீண்டும் தனியாக போட்டியிடவேண்டும்.''

சமூக சந்தைப் பொருளாதாரம், சமூக பங்குதாரர்முறை மற்றும், காக்கப்பட்டுள்ள ஜனநாயகம் என்ற கருத்துருக்கள், இதுவரை மூன்றாம் ரைகின் பேரழிவில் இருந்து பெற்ற படிப்பினைகள் என்று அறிவிக்கப்பட்டிருந்த உத்தியோகபூர்வமான சிந்தனைப் போக்குகளும் தோல்வியுற்றுவிட்டன என்பது தெளிவு. எனவேதான் போரின் முடிவு பற்றிய விவாதத்தில் பேச்சிழந்த தன்மை ஏற்பட்டுவிட்டது. எனவேதான் "முதலாளித்துவ விமர்சனம் பற்றிய" திறனாய்வு என்பதுடன் புறப்பட்ட சமூக ஜனநாயகக் கட்சித்தலைவரான Klaus Müntefering-ஆல் கோரமான கேலிக்கூத்து தற்போது நிகழ்த்தப்பட்டது. மூலதனம் தன்னுடைய சமூகப் பொறுப்பைக் கவனிப்பதில்லை என்ற குற்றச் சாட்டுடன், அவர் கடந்த காலத்தின் உணர்வுகளை எழுப்பி, மக்களுடைய சீற்றத்திற்கு உட்பட்டதால் தன்முனைப்பை இழந்து நிற்கும், கடும் சோதனைக்குட்பட்டுள்ள கட்சி தலைவர்களுக்கு ஆறுதல் கூற முற்பட்டுள்ளார். ஆனால் "சமூகப் பங்காளித்தனம்" மீண்டும் புதுப்பிக்கப்பட முடியாது. Munterfering இன் கடிந்துரைகள் கடந்த ஆறு ஆண்டுகளில் சமூக ஜனநாயகக் கட்சி செய்த அனைத்திற்கும் கடுமையாய் முரண்பட்ட நிலையில் இருக்கிறது. சிகப்பு-பசுமைக் கட்சி கூட்டணி அனைத்துச் சட்டங்களையும் நிறைவேற்றியுள்ளது என்பது தெரிந்ததே; அதன் விளைவுகள் இப்பொழுது மிகக் கசப்பான முறையில் சமூக ஜனநாயகக் கட்சி தலைவரால் புலம்புதலுக்கு ஆளாகியுள்ளது. Muntefering இன் அறிக்கைகள் சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் முதலாளித்துவ அரசியல் முழுவதையும் பீடித்துள்ள மகத்தான நெருக்கடியின் வெளிப்பாடு ஆகும்.

இந்த நெருக்கடியை எதிர்கொள்ளும் தொழிலாள வர்க்கம் எவ்வாறு அதன் சமூக, ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்து, போர், காட்டுமிராண்டித்தனம் இவற்றைத் தடுக்க முடியும்?

இப்பொழுது தொடரப்படும் கொள்கைகளுக்கு மிகப் பரந்த அளவில் எதிர்ப்பும் சீற்றமும் ஏற்பட்டுள்ளன. ஆனால் இந்தச் சீற்றம் மற்றும் அழுத்தத்தினால் உருவாக்கப்பட்ட தன்னியல்பான எழுச்சி, ஆளும் செல்வந்த தட்டுகளிடத்தில் அழுத்தத்தை கொடுத்து சமூக, அரசியல் பிரச்சினைகளை தீர்க்கும் என்று நினைப்பது தவறாகிவிடும். தொழிலாள வர்க்கத்தின் சார்பில் தயாரிக்கப்படும் தாக்குதல் தத்துவார்த்தரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் இருக்கவேண்டும். தொழிலாளர்களுக்கு சுயாதீனமான அரசில் நோக்குநிலை தேவை. இதற்கு சர்வதேச நிலைமை மற்றும் வரலாற்றின் படிப்பினைகள் பற்றி நன்கு தெரிந்திருத்தல் வேண்டும். நான்காம் அகிலத்தாலும் அதன் அனைத்துலகக் குழுவாலும் நன்கு காத்திடப்பட்ட, மார்க்சிச தொழிலாளர் இயக்கத்தில் உள்ள சர்வதேச, சோசலிச மரபுகள், புதுப்பிக்கப்படவேண்டும் என்பது இதற்கு ஒரு முன்நிபந்தனை ஆகும். சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் அதன் சர்வதேச அங்கமான உலக சோசலிச வலைத் தளத்தின் வேலையின் மையத்தில் இப்பணி உள்ளது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved