World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Germany: tribunal hears case of victimised Opel worker

ஜேர்மனி: ஓப்பல் தொழிலாளர் பழிவாங்கப்பட்டது பற்றிய நீதிமன்ற விசாரணை

By Andreas Kunstmann and Wolfgang Weber
13 May 2005

Back to screen version

சென்ற ஆண்டு நடைபெற்ற ஒரு வார வேலை நிறுத்தத்தை தொடர்ந்து இரண்டு ஓப்பல் தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டது குறித்து ஏப்ரல் இறுதியில் Bochum நகரிலுள்ள தொழிற்துறை நீதிமன்றம் விசாரணையை ஆரம்பித்தது. அந்த இருவரும் பண்டசாலை தொழிலாளிகளான Richard K மற்றும் தொழிற்சாலை தொழிலாளர்குழு உறுப்பினர் Turhan Ersin உம் ஆவர்.

ஓப்பல் நிர்வாகம் அந்த இரண்டு தொழிலாளர்களும் இதர தொழிலாளர்களை அச்சுறுத்தியதாகவும், வேலைநிறுத்தத்தில் பங்கெடுத்துக்கொள்ள கட்டாயப்படுத்தியாகவும் குற்றம்சாட்டியது. பாதிக்கப்பட்ட இருவரும் அந்தக் குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளனர்.

2004 அக்டோபர் 14ல் ஆயிரக்கணக்கான ஓப்பல் தொழிலாளர்கள் Bochum தொழிற்சாலையை ஆக்கிரமித்துக்கொண்டதுடன் உற்பத்தியையும் முற்றிலுமாக நிறுத்திவிட்டனர். அந்த வேலைநிறுத்தம் நடப்பதற்கு சற்று முன்னர், ஜெனரல் மோட்டார்ஸ் தொலைக்காட்சி மற்றும் வெகுஜன ஊடகங்களை பயன்படுத்தி தொழிற்சாலையை மூடிவிடுவதாகவும் ஐரோப்பா முழுவதிலும் குறிப்பாக ஜேர்மனியில் ஆட்குறைப்பு மற்றும் ஊதிய வெட்டுக்களை செயல்படுத்தப் போவதாகவும் அறிவித்தது. ''தேவையான மறுசீரமைப்பு நடவடிக்கைகள்'' மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கோரியது.

நிறுவனம் இப்படி பகிரங்கமாக போர்பிரகடனம் செய்ததால் Bochum தொழிற்சாலை தொழிலாளர்களும், ஓப்பல் தொழிலாளர்களின் குடும்பங்களும் Ruhr பகுதியைச் சேர்ந்த மக்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரும் தன்னியல்பாக ஆக்கிரமிப்பிற்கு தலைமை தாங்கினர். என்றாலும், இந்த நடவடிக்கை தொழிற்சாலை தொழிலாளர் குழு மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் பெரும்பகுதியினரால் எதிர்க்கப்பட்டது. ஆறு நாட்களுக்கு பின்னர், இரகசிய தந்திரோபாயங்களை கையாண்டு, தொழிற்சாலை தொழிலாளர் குழுவும் தொழிற்சங்கமும் வேலைநிறுத்தத்தை ஒரு முடிவிற்கு கொண்டு வந்தன.

அதன் மூலம் தெளிவாக நிறுவன கோரிக்கையான பாரியளவு பணிகள் வெட்டு மற்றும் ஊதியக் குறைப்பை அமுல்படுத்தியது. உதாரணமாக பாதிக்கப்பட்ட தனிப்பட்ட தொழிலாளர்களான Turhan Ersin மற்றும் Richard K ஆகியோர் நிர்வாகத்தினால் பழிவாங்கப்படுவதற்காக தொழிற்சாலை தொழிலாளர் குழுவும் தொழிற் சங்கமும் கதவுகளை திறந்தவிட்டன. அதிக தயக்கத்திற்கு பின்னர் தொழிற்சாலை தொழிலாளர் குழு இறுதியாக தொழிலாளர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டதை புறக்கணித்தது. என்றாலும், இதற்கு முந்திய தொழிற்துறை தகராறுகளில் ஓப்பல் நிர்வாகம் அத்தகைய பழி வாங்கும் நடவடிக்கைகளுக்கு தடை விதிப்பதற்கான ஒரு உடன்படிக்கை செய்துகொள்வதற்கு இந்த முறை தவறிவிட்டது. தொழிற்சாலை தொழிலாளர் குழு ஆட்சேபனைக்கு அப்பாலும், ஒரு சாதாரண ஊழியரான Richard K இன் பதவி நீக்கம் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட்டது. என்றாலும், Turhan Ersin தொழிற்சாலை தொழிலாளர் குழுவின் ஒரு உறுப்பினர் என்ற முறையில் ஓப்பல் அந்த வழக்கை ஒரு தொழில் தகராறு நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

Ersin இன் வழக்கு விசாரணைக்கு வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் ஓப்பல் தனது குற்றச்சாட்டுக்களை அதிகமாக அடுக்கியது. அவர்கள் ஒரு இரண்டாவது மனுவை தாக்கல் செய்தது, அதில் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதை நடுவர் மன்றம் தள்ளுபடி செய்துவிடுமானால், அவர் உலக சோசலிச வலைத் தளத்திற்கு அளித்த ஒரு பேட்டியில் கூறிய கருத்துக்களுக்காக அவர் தொழிற்சாலை தொழிலாளர் குழுவிலிருந்து நீக்கப்படக்கூடும். இப் பேட்டியில் Richard K உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டமைக்கு எதிராக அவரை பாதுகாத்து நிற்பதற்கு தொழிற்சாலை தொழிலாளர் குழுவும் தொழிற் சங்கமும் போதுமான அளவிற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்று Ersin விமர்சித்திருந்தார். Richard K இன் பதவி நீக்கத்தை நிறுவனம் இரத்து செய்கிறவரை மேலதிக வேலைக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு தொழிற்சாலை தொழிலாளர் குழு மறுத்திருக்க வேண்டும் என்று Ersin கருத்துத் தெரிவித்தார்.

எனவே, Ersin இன் பதவிநீக்கம் தொடர்பான வழக்கு Bochum தொழிலாளர்களிடையே அதிக கவனத்தை ஈர்த்திருப்பதில் வியப்படைவதற்கு எதுவுமில்லை. அவருக்கு ஆதரவாக Ersin இன் பல சகாக்களும் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். பொது மக்கள் அந்த விசாரணையில் கலந்துகொள்ளலாம் என்ற நிலை இருந்தாலும் அவரது சகாக்களில் சுமார் 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். அந்த அறையில் போதுமான இடம் இருந்தும், நீதிமன்றம் கூடுதல் இருக்கைகளை வழங்க மறுத்துவிட்டது. சுமார் 50 தொழிலாளர்களும் மற்றும் இதர ஆதரவாளர்களும், அந்த நீதிமன்ற கட்டிடத்திற்கு முன்னே உள்ள நடைபாதையில் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இந்த வழக்கு விசாரணையில் Bochum மனிதவள மேலாளரும் மற்றும் சர்வதேச சட்ட நிறுவனமான Baker & McKenzie LLP இன் வழக்கறிஞர் டாக்டர் மார்கஸ் கப்பன்ஹேகனும் ஓப்பல் சார்பில் ஆஜரானார்கள். அவரது வக்கீல் Michael Dornieden உடன் Turhan Ersin கலந்துகொண்டார்.

Bochum தொழிற்சாலை தொழிலாளர் குழுவும் Ersin இற்கு ஆதரவாக ஆஜரானது, அதன் சார்பில் தலைவர் Rainer Einenkel உம் ஒரு தொழிற்சங்க வக்கீலும் ஆஜரானார்கள். தொழிற்சாலை தொழிலாளர் குழு கடைசி நேரத்தில்தான் அதில் கலந்துகொள்ள முடிவு செய்தது, விசாரணை தொடங்குவதற்கு ஒரு நாளைக்கு முன்னர்தான் தொழிற்சாலை தொழிலாளர் குழு எழுத்து மூலம் தனது அறிக்கையை தாக்கல் செய்தது. இது அந்த நடுவர்மன்ற தலைவரும் மாஜிஸ்திரேட்டுமான Dieter Vermaasen விசாரணையை தொடக்கும்போது ``அனைத்து விசாரணைகளிலும் தொழிற்சாலை தொழிலாளர் குழு பங்கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை என்ற கருத்தை'' தெரிவித்தார்.

தாங்கள் முழுவதுமாக Ersin இன் வக்கீல் Dorniedenஐ ஆதரிப்பதாகவும், அதனால்தான் நீதிமன்றத்திற்கு இதற்கு முன்னர் எழுத்துபூர்வமான வாக்குமூலம் எதையும் தாக்கல் செய்யவில்லையென்றும் Einenkel உம் அவரது சட்டபிரதிநிதியும் தெரிவித்தனர். Einenkel , WSWS இற்கு அளித்த பேட்டியில் குறிப்பாக இரண்டாவது மனு தொழிற்சாலை தொழிலாளர் குழு முழுவதற்கும் எதிராக தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். Ersin தனது WSWS பேட்டியில் குறிப்பிட்டிருந்ததைப்போல், பதவி நீக்கம் இரத்துச் செய்யப்படும் வரையில் ஓப்பல் கோருகின்ற கூடுதல் வேலைநேரத்திற்கு ஒப்புதல் தரக்கூடாது என்று தான் தனிப்பட்ட முறையில் கோரினேன் என்று குறிப்பிட்டார். இந்த முன்மொழிவு ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டதென்று Einenkel கூறினார். கூடுதல் வேலைநேரத்தை ஓப்பல் கோராத காரணத்தினால் தொழிற்சாலை தொழிலாளர் குழு எந்த இதர நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர் கூறினார். இந்த வழக்கின் முடிவில்தான் எல்லாம் தங்கியிருப்பதாக Einenkel கூறினார்.

முதல் நாள் விசாரணையிலேயே அது ஒரு வியக்கத்தக்க திருப்பத்திற்கு உள்ளானது. இந்த விசாரணையில் நீதிமன்றம் இரண்டு சம்பிரதாய பிரச்சனைகளை ஆராய வேண்டியிருப்பதாக விசாரணை ஆரம்பத்திலேயே மாஜிஸ்திரேட் வெர்மான்ஸன் அறிவித்தார். பிரதான பிரச்சனை சென்ற இளவேனிற்காலத்தில் என்ன நடந்தது, Ersin நீக்கப்பட்டது சட்டப்படி சரியா? அல்லவா என்பது பின்னர்தான் முடிவு செய்யப்படும் என்று மாஜிஸ்திரேட் குறிப்பிட்டார். எனவே, இதில் ஒரு இறுதித்தீர்ப்பு எதிர்காலத்தில்தான் வரும்.

கீழ்கண்ட நடைமுறை பிரச்சனையை நடுவர் மன்றம் ஆராய வேண்டும்: Turhan Ersin ஐ பணியில் அமர்த்தியுள்ள நிறுவனம் மூன்று தனித்தனி நிறுவனங்களான Adam Opel AG, GM-Fiat Worldwide Purchasing Opel Germany GmbH மற்றும் Opel Powertrain GmbH ஆகும். இதனால் நீதிமன்றத்திற்கு இரண்டு கேள்விகள் எழுகின்றன. முதலாவதாக Adam Opel AG யுடன் இதர இரண்டு நிறுவனங்களும் இந்த வழக்கு விசாரணையில் கலந்து கொள்கின்றனவா? அப்படியிருக்குமானால், அவர்களது தரப்பை கேட்பதற்கும் சட்டபூர்வமான உரிமை வழங்கப்பட வேண்டும் மற்றும் அந்த நிறுவனங்கள் விசாரணையில் கலந்து கொள்ள அழைக்கப்பட வேண்டும்.

இரண்டாவதாக மற்ற இரண்டு நிறுவனங்களும் Ersin நீக்கப்பட்டதற்கு உடன்பாடு தெரிவிக்க வேண்டுமா? இந்தக் கேள்வி இந்த வழக்கில் மகத்தானதொரு முக்கியத்துவம் பெறுகிறது, ஏனென்றால் இந்தக் கேள்விக்கு ஆம் என்று பதில் வருமானால் இந்த விசாரணையே சட்டப்படி செல்லுபடியாகாது. ஏனெனில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ள இரண்டு வார காலத்திற்குள் அவரை பணியிலிருந்து நீக்குவதற்கு அவை உடனடியாக மனுச்செய்ய தவறிவிட்டன.

முதலாவது கேள்வியை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட தரப்பினர், 'மிக ஆழமான தகராறுக்களை' எழுப்பியிருப்பதால் மாஜிஸ்திரேட் வெர்மாஸன் இற்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஓப்பலின் இரண்டாவது மனுவான, Ersin ஐ தொழிற்சாலை தொழிலாளர் குழுவிலிருந்து நீக்கக் கோரியிருப்பது, தர்க்கரீதியாகவே அதில் சம்மந்தப்பட்ட மூன்று நிறுவனங்களும் இந்த வழக்கில் பங்கெடுத்துக்கொள்ள வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். Ersin இன் வக்கீல் இந்த மதிப்பீட்டை ஏற்றுக்கொண்டார், அதே நேரத்தில் ஓப்பலின் சட்ட பிரதிநிதி நடுவர்மன்றம்தான் இந்த விவகாரத்தை முடிவு செய்ய வேண்டும் என்றார்.

அவர்கள் விரும்பினால் சம்பிரதாய முறையில் இதர நிறுவனங்களுக்கும் அறிவிப்புக் கொடுக்க வேண்டும் ஆனால், இது கட்டாயமல்ல என்று நடுவர் மன்றம் முடிவு செய்தது. அதற்கு பின்னர் ஓப்பல் இந்த முடிவின் அடிப்படையில் தங்களது மனுவை மீண்டும் தாக்கல் செய்யக் கட்டளையிடப்பட்டது.

அந்த நிறுவனத்தின் விடுமுறை அறிவிப்பிற்கு முன்னர் இந்த கோடைக்காலத்தில் அடுத்த விசாரணை நடைபெறவிருக்கிறது.

அந்த விசாரணை முடிவில், Turhan Ersin நீதிமன்றத்திலிருந்து தனது சகாக்களுக்கும் இதர பார்வையாளர்களுக்கும் வாழ்த்து தெரிவிக்க வந்தார். அவர்களது ஆதரவிற்காக, நன்றி தெரிவித்துக்கொண்டார் மற்றும் Richard K வழக்கு விசாரணைக்கு வரும்போதும் இவ்வாறு கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். WSWS க்கு பேட்டியளித்த Ersin இந்த சகாவின் எதிர்காலம்தான் முக்கியமான பிரச்சனை அவர் தன்னைப்போன்று தொழிற்சாலை தொழிலாளர் குழு உறுப்பினர் என்ற முறையில் சட்ட பாதுகாப்பு உரிமைகளை அனுபவிக்கவில்லை மற்றும் இப்போது அவர் வேலையில்லாதிருக்கிறார் என்று வலியுறுத்திக் கூறினார்.

தொழிற்சாலை தொழிலாளர் குழு- இது ஒவ்வொரு தொழிற்சாலையிலும் உள்ள தொழிலாளர்களால் தெரிவு செய்யப்படும் ஒரு குழுவாகும். இதில் தொழிற்சங்கத்திலுள்ள மற்றும் தொழிற்சங்கத்தில் உறுப்பினரல்லாத தொழிலாளர்கள் ஒவ்வொரு 4 ஆண்டுக்கு ஒரு முறை தெரிவு செய்யப்படுவர். இதன் பங்கு தொழிற்சாலை பிரச்சனைகளை நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்துக்கொள்ளவதாகும். கூடுதலாக தொழிற்சங்கங்களின் ஆளுமைக்குட்பட்ட இக்குழு தற்போது நிர்வாகத்தின் கட்டளைகளை தொழிலாளர்களின் மீது திணிப்பதற்கான ஒரு கருவியாக செயற்படுகின்றது. தொழிற்சாலையில் உள்ள தொழிலாளர்களின் அளவைப்பொறுத்து குறிப்பிட்ட அளவிலான தொழிற்சாலை தொழிலாளர் குழு அங்கத்தவர்கள் முழுநேரப்பணியாக இக்குழுவின் விடயங்களில் மட்டும் ஈடுபடுவர். இவர்கள் சாதாரண தொழிலாளர்களைவிட அதிக சம்பளத்தை பெறுவதுடன். நிர்வாகத்திற்கு செய்யும் உதவிக்கு கைமாறாக மேலதிக சட்ட பாதுகாப்பையும் (வேலைநீக்கம் போன்றவற்றில் இருந்து) பெற்றுள்ளனர்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved