World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Mass deportation to SriLanka

பெருமளவில் இலங்கைக்கு நாடுகடத்தல்

நாடு கடத்தப்படுதலை ஒரு அகதி விபரிக்கிறார்

By our correspondents
27 October 2005

Back to screen version

வெளிநாட்டவர்களுக்கான ஜேர்மன் பொலிஸ் அலுவலகம் அதனது கொடுமையான நாடுகடத்தலை தொடர்ந்து கடைப்பிடிக்கின்றது. கடந்த ஆகஸ்ட் மாதம் 24 இரவு 120 தமிழ் அகதிகள் ஜேர்மனியின் பல பாகங்களிலும் இருந்து தீடீரென பிடிக்கப்பட்டு டுசுல்டோஃவ் நகர விமான நிலையத்தில் இருந்து துருக்கியின் ஸ்ராம்புல் ஊடாக, அங்கே அவர்களுக்கான பாதுகாப்பு எதுவும் இல்லாதிருக்கையிலும் கூட இலங்கைக்கு கடத்தப்பட்டுள்ளனர்.

இருபது வருடத்தின் உள்நாட்டு யுத்தமானது இதுவரையிலும் 60.000 க்கும் மேலான உயிர்களை பலிகொண்டுள்ளது, 2002 முதலான யுத்த நிறுத்தம் தற்போது முறிவடைந்துள்ளது. சுனாமி பேரழிவின் துன்பத்தில் 30.000 மக்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நூறாயிரக்கணக்கானோர் தமது வீடுகளையும், வேலைகளையும் பறிகொடுத்த நிலையில் உள்ளனர்.

அரசாங்கத்திற்கும், தனிநாட்டுக்காக போராடும் விடுதலை புலிளுக்கும் இடையேயான சமாதான ஒப்பந்தம் தற்சமயம் முறிவடைந்ததை தொடர்ந்து மறுபடியும் பகிரங்கமான உள்நாட்டு யுத்ததிற்கு இட்டுச்செல்லப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. நாடுகடத்தப்படுவதற்கு முன்னர், தலைநகர் கொழும்பில் வெளிநாட்டமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை செய்யப்பட்டதை அடுத்து இலங்கை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அவசரகால சட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்தினார்.

அனேகமாக நாட்டின் வடக்கிலும், கிழக்கிலும் பயங்கரவாதம் மீண்டும் அதிகரித்துள்ளது. தினமும் த.ஈ.வி. புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையேயான மோதல்களை பற்றிய செய்திகள் வெளிவந்தபடி உள்ளன. அடிக்கடி மக்கள் அரசியல் நோக்கத்துடன் கொலை செய்யப்படுகின்றனர். ஆனால் அவற்றிற்கான பின்னணி ஒருபோதும் தெளிவுபடுத்தப்படவில்லை.

ஜேர்மன் உல்லாசப் பிரயாணத்திற்கான அலுவலகம், தமிழர்கள் மிகவும் செறிவாக வாழும் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு பிரயாணம் செய்வதை பற்றி கடுமையாக எச்சரித்துள்ளது. அது குறிப்பிடுவதாவது: ''கடந்தகாலங்களில் திருகோணமலை, மட்டக்களப்பு பகுதிகளில் ஏற்பட்ட இனக்கலவரங்களில் கொலைகள் இடம்பெற்றுள்ளன. நிர்வாகம் அவ்விடங்களில் ஊரடங்கு சட்டத்தை அமுல்ப்படுத்தியுமுள்ளது. இதுமாதிரியான அனர்த்தங்கள் மறுபடியும் இடம்பெறாது என்பது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை''.

கொழும்பில் மட்டும் ஜூலை ஆரம்பத்தில் இருந்து 3000 க்கும் மேலான தமிழர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு கீழ் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். தமிழ் பத்திரிகை ஆசிரியர்களின் பணிகள் பாதுகாப்பு படையால் இடையூறு செய்யப்படுகிறது அல்லது அவர்கள் இனவாத தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். நாளாந்தம் அரசியல் எதிரிகளை பயமுறுத்துவதற்காக வீட்டு சோதனைகள் இடம்பெறுகின்றன.

எவ்வாறெனினும், வெளிநாட்டு பொலிஸ் அலுவலகம் தமிழ் அகதிகளை அவர்களுக்கான பாதுகாப்பு அங்கே இல்லாத நிலமையிலும், சுனாமியின் மோசமான தாக்கங்களுக்கு மத்தியிலும் பெருமளவில் நாடுகடத்தலை நிறுத்தப் போவதில்லை.

கடந்த எட்டு மாதங்களிலும் சுனாமி பேரழிவில் தப்பி பிழைத்தவர்களுடைய நிலமையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் இப்போதும் முகாம்களிலும், தற்காலிக புகலிடங்களிலும் வசிக்கின்றனர். வடக்கு கிழக்கில் உள்ள உடைந்த வீடுகளை திருத்தியமைக்கும் கட்டிட வேலைகள் இன்னமும் ஆரம்பிக்கப்படாத இடங்களிலும்தான் வசிக்கின்றனர்.

ஜனவரியில் உள்நாட்டு அமைச்சர் ஓட்டோ ஷில்லி (சமூக ஜனநாயக கட்சி-SPD) இலங்கை உட்பட சுனாமியால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு நாடுகடத்துவதை, மூன்று மாதங்களுக்கு பின்தள்ளிபோடலாம் என்றார். இருப்பினும், அவர் திருப்பி அனுப்புவதை நிறுத்த வேண்டும் என்பது அவசியமில்லை என கண்டார். மாநில உள்நாட்டு அமைச்சர்கள், இலங்கைக்கு திருப்பி அனுப்புவது என்பது ''அங்கிருக்கும் தற்போதைய நிலமைகளை கணக்கில் எடுத்து அதை தனித்தனியே சாதூர்யமாக கையாளும் ஒரு விடயமாக கருதவேண்டும்'' என வெளிநாட்டு பொலிஸ் அலுவலகங்களுக்கு கட்டளையிட்டனர்.

ஜனவரியில் திருப்பி அனுப்புவதை பொதுவாக கைவிடவிரும்பாது, சுனாமி பேரழிவின் செய்திகள் அனேகமாக பத்திரிகை துறையின் தலைப்பு பக்கங்களில் இருந்து மறைந்து போனதை அடுத்து பலாத்காரமாக திருப்பி அனுப்பும் படலம் நடைமுறைப்பட்டுள்ளது.

மனிதத்தன்மையற்ற நாடுகடத்தல்முறை - உலக சோசலிச வலைத் தளத்திற்கு ஓர் அகதி தெரியப்படுத்துகிறார்

திருப்பி அனுப்பப்பட்ட 120 தமிழ் அகதிகளில் பலருக்கு எதுவிதமான முன்னறிவிப்பும் கொடுக்காமல் ஓர் நள்ளிரவில் படுக்கையில் வைத்து பிடித்து அவர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர். இந்நடவடிக்கைக்கு ஆயுதம் தரித்த விசேடமான பொலிஸ்படையும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

உலக சோசலிச வலைத் தளத்தின் இன் நிருபர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட ஒரு அகதியுடன் உரையாடுகிறார். 31 வயதுடைய U, திருமணமான மூன்று பிள்ளைகளுக்கு தந்தை, ஜேர்மனியின் நாடுகடத்தல் முறையை விபரிக்கிறார். U. ஜேர்மனியில் நீண்டகாலமாக வசித்தவர், கடந்த ஐந்து வருடங்களாக ஒரு இறைச்சி தொழிற்சாலையில் வேலை செய்தார்.

எனது மனைவியினதும், எனதும் அரசியல் தஞ்சம் கோருவதற்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, எமது வழக்கு முடிவடைந்துள்ளது. ஆனால் அரசியல் தஞ்சம் வழக்கு நடைபெறும் எமது இரு பிள்ளைகளுக்காக எமக்கும் தற்காலிக வதிவிட அனுமதி (Aufenthaltsduldung) வழங்கப்பட்டன. எமது சட்டத்தரணி, எமக்கு ஓர் உறுதியான வேலை இருப்பதாலும், நீண்டகாலம் இங்கு வசித்து வருவதாலும் எமக்கு குடியுரிமை (Einbürgerung) வழங்க வேண்டுமென முயற்சித்தார். அவர், எம்மை திருப்பி அனுப்புவதை அலுவலகம் ஆகக் குறைந்தது ஒரு மாதத்துக்கு முன்னர் தெரிவிக்க வேண்டும் எனவும், அதை அவர் தனக்கு அறிவிக்கவேண்டும் எனவும் கேட்டிருந்தார். எமது கடைசி வதிவிட அனுமதி (Duldung) செப்டம்பர் 13, 2005 வரையிலும் இருந்தது.

ஆகஸ்ட் 23, மாலை 20.45 மணிபோல் தூதரக அலுவலக அதிகாரி, ஒரு வைத்தியர், பொலிஸ் உட்பட எனது வீட்டுக்குள் வந்தனர். நான் அவர்களை உள்ளே வர அனுமதித்தேன். அவர்கள் எனது மனைவியை எங்கே (அப்போது அவர் வீட்டில் இல்லை) என கேட்டனர். பின்னர் அவர்கள் என்னிடத்தில், நீங்கள் ஜேர்மனியை விட்டு கட்டாயமாக நாடுகடத்தப்பட இருக்கிறீர்கள் என கூறினர்.

எமக்கு இதுபற்றி முன்னர் அறிவிக்கப்படாததுடன், அதற்கான காலக்கேடு எதுவும் வழங்கப்படவில்லை. செப்டம்பர் 13 வரைக்கும் எமக்கு வதிவிட அனுமதி இருக்கிறது.

U. தொடர்ந்து கூறுகையில், நாடுகடத்தும் அபாயத்தில் இருந்து அவர் தன்னை விடுவிக்க முயற்சிக்கையில் பொலிஸ் அவரை துன்புறுத்தியதாகவும், மருத்துவ வசதிகள் முற்றாக அவருக்கு மறுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

எனக்கு அந்நேரத்தில் என்ன செய்வதென்றே தெரியவில்லை, தப்பி ஓட முயற்சிக்கையில் அவர்கள் என்னை துரத்தி பிடித்து அடித்தனர். தலையிலும், கன்னத்திலும் அவர்கள் என்னை தாக்கியதால் இரத்தம் பலமாக ஓடியது. இத் தருணத்தில் எனது மனைவி வீட்டுக்குள் வந்தார். அவர் அதிர்ச்சியாலும், பயத்தாலும் நினைவிழந்தார். பொலிஸார் எனக்கு கை விலங்கு மாட்டி கூட்டிச் சென்றனர்.

நான் மறுநாள் காலையில் விமான நிலையத்திற்கு அழைத்து செல்லப்படும் வரையிலும் எனது கைகள் முதுகுக்கு பின்பக்கமாக விலங்கிடப்பட்டிருந்தன. முழுநேரமும் நான் பொலிஸ் வாகனத்திற்குள் இருத்தி வைக்கப்பட்டேன். கொழும்பு விமான நிலையத்தில் இரண்டு மணிநேரம், அவர்கள் எம்மிடம் கேட்ட இரண்டு கேள்விகளுக்காக காத்திருக்க வேண்டியிருந்தது. ''ஜேர்மனியில் குற்றச் செயல்களுக்காக தேடப்பட்டீர்களா? இலங்கையில் குற்றச் செயல்களுக்காக தேடப்பட்டீர்களா?'' என கேட்டனர். எனது காயத்திற்கு பின்னர் யாழ்பாணத்தில்தான் வைத்தியம் செய்யப்பட்டது. எனது தலைக்காயத்திற்கு மூன்று தையல்கள் போடப்பட்டன.

ஜேர்மனியில் வெளிநாட்டுக்காரர்களை கையாள்வது மிகவும் மோசமாகி உள்ளது. அடிப்படை உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் பற்றி அவர்கள் கவனமெடுப்பதேயில்லை. அவர்கள் என்னை பிடித்து அடித்து எனது கைகள் கட்டப்பட்ட நிலையில், காயத்திற்கு மருந்து தரப்படாமல் நான் மணித்தியாலக் கணக்காக இருக்கும்படி பணிக்கப்பட்டேன்.

மக்களை நாட்டை விட்டு துரத்துவதற்கு இப்படி ஒரு சட்டம் இருக்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியாமல் உள்ளது. எதுவிமான முன்னறிவித்தலும் கொடுக்காமல் செய்வதால் இது மிகவும் மோசமான நடவடிக்கையாகும். ஏன் அவர்கள் என்னை இவ்வாறு கைது செய்தார்கள்? அரசியல் தஞ்சம் கோருவது என்பது தடை செய்யப்பட்டுள்ளதா? நான் ஏன் அங்கு வாழமுடியாது? என்னைப் பொறுத்தவரையில், ஜேர்மனி பொலிஸுக்கு கொடுமையான அதிகாரமுள்ள நீதியற்ற ஒரு அரசாகும்.

திருப்பி அனுப்புகையில் எமது குடும்பத்துக்கு 150 ரூபாய்கள் (1,50 Euro) வழங்கப்பட்டது. எமக்கு வேலையும் இல்லை, இருப்பதற்கு வீடும் இல்லை. எனக்கு உதவி செய்யுமாறு சர்வதேச குடியேற்ற நிறுவனத்திடம் (IOM) நான் கேட்டுக் கொண்டேன். அதற்கு அவர்கள் என்னிடத்தில் நான் ஜேர்மனியில் உள்ள நிறுவனத்திடம் பதிவு செய்திருந்தால் மட்டும்தான் எனக்கு உதவுவதாக குறிப்பிட்டனர். அதன் பின்னர் நான் ஒரு ஜேர்மன் தொழில்நுட்ப கூட்டுழைப்பிற்கான நிறுவனத்திடம் (GTZ) உதவி கோரினேன், அவர்களும் எனக்கு உதவ முடியாது எனக் கூறிவிட்டனர். நான் என்ன செய்வதென எனக்கு தெரியாது உள்ளது.

U. என்பவர் மட்டும் தனியாக அனுப்பப்படவில்லை. நோர்த்ரைன் வெஸ்ட்பாலியாவின் அகதிகள் அலுவலகம் தெரிவித்ததின்படி, சார்லான்ட் மாநிலத்தின் மெசடே எனும் இடத்தில் 10 வருடங்களுக்கும் மேலாக வசித்துவந்த ஒரு பெண் V. மற்றும் அவரது பிள்ளைகளும் அதே விமானத்தில் திருப்பி அனுப்பப்பட்டிருந்தனர். இரு பிள்ளைகளில் ஒன்று உளவியலாக பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது, மற்றது ஓர் சிறிய கைக்குழந்தையாகும். அங்கே தொடர்ந்து இருப்பதற்காக அவர்களின் நிலைமை கருதி ஒரு விஷேட விண்ணப்பம் ஏற்கனவே விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

இப்பெண் V. உம் பிள்ளைகளும் நள்ளிரவில் படுக்கையில் வைத்து பிடிக்கப்பட்டுள்ளனர். வீட்டு கதவுகளை திறக்கும் ஒரு நிறுவனத்தின் உதவியுடன் இவருடைய வீட்டைத் திறந்து எட்டு பொலிஸார் அவருடைய படுக்கை அறைக்குள் சென்று அவரை உடனே எழுந்து உடமைகளை எடுத்துக் கொண்டு புறப்படுமாறு கூறினர். அவரது கணவர், பிள்ளைகளின் தந்தை இரவுநேர வேலைக்கு போய் மறுநாள் காலையில் திரும்பி வருகையில் அவரது மனைவியும், பிள்ளைகளும் விமானத்தில் அவரில்லாமலே இலங்கைக்கு பிரயாணம் செய்து கொண்டிருந்தனர்.

மற்றும் ஒரு தம்பதிகள் K. இலங்கைக்கு அதே நாளில் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர், இவர்கள் இரண்டு வருடங்களுக்கு முன்னால் இவ்வாறு பலவந்தமாக திருப்பி அனுப்புகையில் தற்கொலை முயற்சியை மேற்கொண்டிருந்தனர். இருவரும் இதற்காக மனோவியல் மருத்துவ பயிற்சியை பெற்று வந்தனர். வெளிநாட்டு பொலிஸ் அலுவலகம் இதனையும் கவனத்திற்கு எடுக்கவில்லை. அலுவலகம், இருவரையும் வைத்தியரின் உதவியுடன் நாடு கடத்த சாதாரணமாக முடிவெடுத்தது.

அவர்களால் தாம் திருப்பி அனுப்பப்பட முன்னர் வீட்டுத்திறப்பையும், வங்கி பாதுகாப்பு வைப்பக திறப்பையும் தமது உறவினருக்கு கொடுக்கமுடியாது போனது. அவர்கள் அதனை வெளிநாட்டவர்களுக்கான பொலிஸ் அலுவலகத்தில் பெற சென்றபோது, வங்கி பாதுகாப்பு வைப்பகத்தை திறக்கும்போது தமது அலுவலகர் ஒருவரும் பக்கத்தில் இருக்க அனுமதிக்கவேண்டும் என கூறப்பட்டது. ஏனெனில் திருப்பி அனுப்பபட்டதற்கான செலவுகளை அவர்களே பொறுப்பெடுக்கவேண்டும் என கூறப்பட்டது.

சீகன் நகர உளவியல் மருத்துவமனையில் இருந்து ஒரு அகதி கூட்டிச் செல்லப்பட்டார். அவருக்கு தெரிந்த ஒரு தமிழர் Th. சத்தியப்பிரமாணத்தை நோர்த்ரைன் வெஸ்ட்பாலிய மாநில அகதிகள் நிலையத்திடம் கையளித்தார். ஆகஸ்ட் 19 ல் Th. வெளிநாட்டு அலுவலகத்தின் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். மனநோயினால் ஏற்கனவே பாதிக்கப்பட்ட Th. பொலிஸ் நிலையத்தில் அதிர்ச்சியடைந்து, பின்னர் அவர் வைத்தியசாலையில் அதற்கான பிரிவில் சேர்க்கப்பட்டார். அவருக்கு அங்கே உணவு கொடுக்கப்படவில்லை ஆகையால் வாந்தி எடுத்து வலியானாலும் மூச்சுவிடமுடியாமலும் அவஸ்தைப்பட்டார். மூன்று நாட்களுக்கு பின்னர் அவரை கவனித்த வைத்தியர் Th. நடிப்பதாக குறிப்பிட்டார்.

செப்டம்பர் 23ல், அவரை அமைதிப்படுத்தி நாடு கடத்துவதற்காக ஒரு கடுமையான மருந்து கொடுக்கப்பட்டது. சில மணித்தியாலங்களுக்கு பின்னர் அவர் கைவிலங்கிடப்பட்டு பல பொலிசாரால் ஒரு நீதிபதியுடன் மருத்துவமனையில் இருந்து விமான நிலையத்திற்கு கூட்டிச் செல்லப்பட்டார்.

சித்திரவதைக்கும், தேடப்படுதலுக்கும் உள்ளாகிய இந்த அப்பாவி மனிதர்கள், சுனாமி பேரழிவினால் பொருளாதார சீரழிவுக்குள்ளான இலங்கையை எதிர்நோக்கவேண்டியுள்ளதுடன், உள்நாட்டு யுத்தத்துக்கான ஆபத்திற்கும் முகம் கொடுக்கின்றனர். தற்போது மீண்டும் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டத்தின்கீழ் அரசபடையினரின் துன்புறுத்தலையும் எதிர்நோக்குகின்றனர். ஜேர்மன் வெளிநாட்டு அலுவலகத்திற்கு தெரிந்திருக்கும் இந்த அடிப்படை மனித உரிமை மற்றும் சர்வதேச சட்டமீறல்கள் அரசியலால் மூடிமறைக்கப்படுகின்றது.

நோர்த்ரைன் வெஸ்ட்பாலின் மாநிலத்தின் உள்நாட்டு அமைச்சர் கொடுமையான முறையை அனுமதித்துள்ளார்

வெளிநாட்டவர்களுக்கான அலுவலகத்தின் மனிதத்தன்மையற்ற நடவடிக்கைகளை நோர்த்ரைன் வெஸ்ட்பாலியனின் உள்நாட்டு அமைச்சர் Ingo Wolf (தாராளவாத ஜனநாயக கட்சி-FDP) மிகவும் ஆணித்தரமாக ஆதரித்துள்ளார். ஜூன் மாதக் கடைசியில் துருக்கிக்கு திருப்பி அனுப்பப்பட்ட பாரியளவிலான குர்திஸ்தான் மக்களுக்கு அங்கு ஏற்பட்ட கொடூரமான விளைவுகளே ஆகஸ்டில் அதிகளவில் கூட்டமாக அனுப்பப்பட்ட தமிழர்களுக்கும் நேரும்.

நோர்த்ரைன் வெஸ்ட்பாலியாவின் அகதிகள் அலுவலகம் இதுபற்றி அவரது நிலைப்பாட்டை Ingo Wolf இடம் கேட்டுக்கொண்டுள்ளது. ''சட்டத்திற்கு மாறான முறைப்படி திருப்பி அனுப்பப்பட்டதற்கான தடயங்கள் எதுவுமே இங்கு இருக்கவில்லை'' என Wolf விளக்கம் கொடுத்தார். அவர் மேலும், அகதிகள் மிகவும் மனநிலை பாதிக்கப்பட்டுள்ள நிலைமைகளில் திருப்பி அனுப்பப்பட்டதாக வைத்தியர்களால் வழங்கப்பட்ட அத்தாட்சிப்பத்திரங்களை நிராகரித்தார்.

இரவு நேரத்தில், படுக்கையில் வைத்து அகதிகளை பிடிப்பது பற்றிய அவரது கருத்தில் அது நியாயமானதே என கூறியுள்ளார். பொதுவாகவே, மாலை ஒன்பது மணிக்கும் அதிகாலை நாலு மணிக்கும் இடையே தனியார் வீடுகளுக்குள் புகுவது நோர்த்ரைன் வெஸ்ட்பாலியா மாநில பொலிஸ் சட்டத்தின்படி தடை செய்யப்பட்டுள்ளது, ஆனால் விசேட பொலிஸ் படையினரின் உதவியுடன் வெளிநாட்டு அலுவலகத்தினர் நள்ளிரவில் மேற்கொள்ளும் மூர்க்கமான நடவடிக்கைகள் நியாயமானது என Wolf கூறினார். அடுத்ததாக, ''திருப்பி அனுப்புகையில் மேற்கொள்ளப்படும் தற்கொலை முயற்சியை தடுத்து நிறுத்த, மிகவும் துரிதமான முறையில் நடவடிக்கை எடுப்பது அவசியம்'' எனவும் கூறியுள்ளார்.

இவ்வாறான கருத்துக்களின் விசமத்தனத்தைவிட அதிகமானது ஒன்றும் இருக்கமுடியாது. அகதிகளை இரவில், நள்ளிரவில் பிடிப்பதற்கு ஏற்றவாறு இவர்கள் மோசமான குற்றவாளிகளாகவே இருக்கிறார்கள் என Wolf விளக்கம் கூறி அச்சம்பவத்தை நியாயப்படுத்துகிறார்.

பொலிஸாரின் சட்டத்தின்படி ஆபத்தான தருணங்களில் பாதுகாப்பு கருதி எந்நேரத்திலும் வீட்டுக்குள் புகமுடியும் என Wolf கூறினார். அதற்கான சரியான காரணத்துடன் சந்தேகப் பேர்வழி தொடர்புபட்டிருந்தால், அவர் சட்டபூர்வமாக இங்கே வாழ்வதற்கான உரிமைக்கான குற்றசட்டவிதிகளுடன் மோதிக் கொள்கிறார். நாட்டைவிட்டு வெளியேறவேண்டிய ஒரு வெளிநாட்டவர், இங்கு வாழ்வதற்கு தேவையான அனுமதிப்பத்திரத்தை வைத்திருக்காவிட்டாலும் அவரை நாடுகடத்துவதற்கான உத்தரவு இரத்துச்செய்யப்படாவிட்டாலும் அவர் ஒரு குற்றச்செயலை செய்கின்றார் என்றார்.

பெருமளவான குர்திஸ்தான் அதேபோன்று தமிழ் அகதிகளை திருப்பி அனுப்புகையில் செல்லுபடியாகக் கூடிய வதிவிட அனுமதிப்பத்திரங்களை அவர்கள் வைத்திருந்தனர். ''பாதிக்கப்பட்டுள்ளவர்கள் குற்றவாளிகள் என கூறப்படுகின்றனர், ஒரு வீட்டினுள் கண்டபடி செல்லக்கூடாது என்ற அடிப்படை உரிமை இந்த பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது.'' என நோர்த்ரைன் வெஸ்ட்பாலியாவின் அகதிகள் அலுவலகத்தை சேர்ந்த Andrea Genten குறிப்பிட்டுள்ளார்.

Wolf, வெளிநாட்டவர்களுக்கான அலுவவலகம் குர்திஸ்தான் மக்களை திருப்பி அனுப்புவதற்கான முழு உரிமையையும் கொடுத்தை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு பின்னர் கொடுமையான நாடுகடத்தல் பெருமளவான தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அகதிகள் குற்றவாளியாக்கப்பட்டமையானது இலங்கை அகதிகளுடைய மனித உரிமைகளை இல்லாதொழிக்கவும், வெளிப்படையான வன்முறைகளை அலுவலகங்கள் மேற்கொள்வதற்குமே வழிவிட்டிருக்கின்றன.

வெளிநாட்டு அலுவலகத்தினதும், நோர்த்ரைன் வெஸ்பாலிய உள்நாட்டு அமைச்சினதும் நடவடிக்கை, தென் அமெரிக்காவின் சர்வாதிகார ஆட்சிமுறையை ஒத்ததாக இருக்கிறது என சவர்லான்ட் மாநில ஆர்ண்ஸ்பேர்க் தேவாலய வட்டாரத்தை சேர்ந்த தலைவர் Lothar Kuschnik பொண் நகர General-Anzeiger பத்திரிகையில் மிகவும் சரியாகவே குறிப்பிட்டுள்ளார்.

Ingo Wolf அகதிகளை குற்றவாளிகளாக்குவது, ஜேர்மனியின் உள்நாட்டு அமைச்சர் ஓட்டோ ஷல்லி (SPD) தெரிவிக்கும் ''பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டம்'' என்பதுடன் இணைந்துகொண்டு ''உள்நாட்டு பாதுகாப்புக்கு'' ஆபத்து எனும் பேரில் வெளிநாட்டவர், அகதிகளுடைய உரிமைகளை இல்லாதொழிக்க சேவை செய்கிறது. குடியேறியவர்களுக்கும், அகதிகளுக்கும் எதிரான வெறுப்புடன் மாநில மற்றும் மத்திய அரசாங்கங்கள் கொடுமையான நாடுகடத்தலை பாரியளவில் தயாரிக்கிறது, இந்நடவடிக்கை சர்வதேச சட்ட உரிமைகளை மேலும் மேலும் இல்லாதொழிக்கின்றது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved