World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Close to 1,000 dead in Baghdad tragedy

பாக்தாத் பெருந்துயரத்தில் 1000 பேர் மரணம்

By James Cogan
2 September 2005

Back to screen version

புதன்கிழமையன்று பாக்தாத்தில் ஒரு பாலத்தின் மீது பீதிகொண்டு ஓடியதில் குறைந்தபட்சம் 953 மக்கள் மிதித்துக் கொல்லப்பட்டனர் அல்லது ஆற்றில் மூழ்கி இறந்தனர். நவம்பர் கடைசியில் முதல் சில நாட்களில் அமெரிக்கா இராணுவம் நடத்திய தாக்குதல்களில் பல்லூஜாவில் நடைபெற்ற சாவுகள் தவிர 2003 மார்ச்சில் ஈராக் மீது அமெரிக்கா தலைமையில் படையெடுப்பு நடந்த பின்னர் நடந்துள்ள மிகப்பெரிய மனித உயிர்கள் இழப்பு சம்பவமாகும் இது.

பாக்தாத்தின் காதிமியா மசூதியில் ஒரு ஷியைட் மதகுருவின் ஆண்டு நிறைவு தினத்தை பக்தியோடு நடத்துவதற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் அந்த ஆற்றுப்பாலத்தை கடக்கும்போது இந்த துயர விபத்து நடந்திருக்கிறது. கிழக்கு பகுதியில் வந்துகொண்டிருந்த யாரோ ஒருவர் கூட்டத்தில் ஒரு தற்கொலை குண்டு வெடிப்பவர் இருக்கிறார் என்று கூச்சலிட்டார், அந்த வதந்தி பீதியை கிளறிவிட்டது.

இரண்டு மணி நேரத்திற்கு முன்னர், ஷியைட் முஸ்லீம்களுக்கு விரோதமானவர்கள் என்று கருதுகின்ற அல்கொய்தாவுடன் சம்மந்தப்பட்டிருப்பதாக கூறப்படும் தாக்குதல்தாரர்கள் அந்த மசூதியில் சிறுபீரங்கிகளால் சுட்டதில் ஏழு பேர் கொல்லப்பட்டனர்.

மற்றொரு தாக்குதல் நடக்கக்கூடும் என்று அஞ்சிய மக்கள் அந்த பாலத்தில் இரண்டு திசைகளிலும் தப்பி ஓடுவதற்கு முயன்றனர், ஆனால் ஒருவர் அல்லது இரண்டு தனி மனிதர்கள் வீதம் பாலத்தில் புகுவதை கட்டுப்படுத்துவதற்கு அதன் நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு சோதனை சாவடிகள் சனக்கும்பலால் சூழப்பட்டன. இந்த பீதியை கிளறிவிடுகின்ற வகையில் ஈராக் அரசாங்கத் துருப்புக்களும், போலீசாரும் வானத்தை நோக்கி சுட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் மிதிபட்டனர் அல்லது கீழேயுள்ள டைகிரிஸ் ஆற்றின் 30 மீட்டர் பாலத்தின் பாதுகாப்பு தடுப்பிலிருந்து கீழே பிடித்துத் தள்ளப்பட்டனர்.

வாஷிங்டன் போஸ்ட் நிருபரிடம் ஒரு இளைஞர் ''முற்றிலும் பீதியில் நடுநடுங்கி கதறிக் கொண்டிருந்த ஒரு வயதான பெண் அந்த பாலத்திலிருந்து ஆற்றுக்குள் குதிப்பதை நான் பார்த்தேன் மற்றொரு மனிதர் அந்த கரையிலுள்ள செங்கற்கள் மீது விழுந்து அந்த இடத்திலேயே மடிவதை பார்த்தேன். மூச்சு திணறி அந்த பாலத்தின் கடைசி பகுதியிலிருந்து 7 பேர் உடல்கள் கொண்டு வரப்பட்டதை நான் பார்த்தேன்.'' என கூறினார்.

நேரில் பார்த்த மற்றொருவர் போஸ்டிடம் ''ஆற்றில் நீந்தத் தெரிந்தவர்கள் உயிர் தப்பிவிட்டனர், நீந்தத் தெரியாத மக்கள் மடிந்துவிட்டனர்.'' எனக்கூறினார்.

எந்தவிதமான ஆதாரமும் தராமல் அரசாங்கப் பேச்சாளர் உடனடியாக இந்த இறப்பிற்கு ''பயங்கரவாதிகள் மீது'' பழிபோட்டார். அந்த பீரங்கி தாக்குதல்களை இஸ்லாமிய வெறியர்கள், அல்-கொய்தாவுடன் தொடர்புள்ளவர்கள் செய்ததாக இருக்கக்கூடும், ஆனால் கூட்ட நெரிசல் திட்டமிட்டே தூண்டிவிடப்பட்டதா அப்படி தூண்டிவிடப்பட்டிருந்தால் யாரால் தூண்டிவிடப்பட்டது என்பது தெளிவாக இல்லை. அது முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாக இருந்திருக்குமானால், நேரடியாக அமெரிக்க மற்றும் அதன் கூட்டாளிகளது கைகள் அதன் பின்னணியில் இருந்திருக்கும். அமெரிக்காவும் அதன் கூட்டணியினரும் சுன்னிக்களுக்கும் மற்றும் ஆக்கிரமிப்பை எதிர்க்கும் ஷியாக்களுக்கும் இடையே வளர்ந்து வரும் ஐக்கியத்தைக் கண்டு ஆழமாக கவலையடைந்துள்ளனர்.

மடிந்தவர்களில் மிகப்பெரும்பாலோர் பெண்களும், குழந்தைகளும், வயதானவர்களும் பாக்தாத்தின் மாவட்டத்திலுள்ள தொழிலாள வர்க்க பகுதியான, ஷியா மத போதகர் மொக்தாதா அல்-சதரின் விசுவாசிகளால் அரசியல் ரீதியாக கட்டுப்படுத்துகின்ற சாதர் நகரத்தைச் சேர்ந்தவர்களாகும். கடந்த சில வாரங்களுக்கு மேலாக, பிரதான சுன்னி அமைப்புக்களுக்கும் சதர் இயக்கத்திற்கும் இடையில் நகல் அரசியல் சட்டத்திற்கு பரஸ்பர எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஒரு கூட்டணி உருவாக தொடங்கியிருக்கிறது, அதை அமெரிக்கா ஆதரவு பெற்ற ஈராக் அரசாங்கம் ஞாயிறன்று ஏற்றுக்கொண்டது மற்றும் அக்டோபர் 15ல் ஒரு பொதுஜனவாக்கெடுப்பிற்கு விடப்படும் (See: "Iraq's draft constitution: a recipe for neo-colonial rule")

நகல் அரசியலமைப்பு அமெரிக்க-சார்பானதொரு ஆவணம் என்றும் ஈராக்கின் ஐக்கியத்திற்கு ஒரு அச்சுறுத்தல் என்றும் கண்டனம் தெரிவிக்கின்ற வகையில் சதர் இயக்கம் ஈராக் நகரங்கள் முழுவதிலும் நடத்திய பேரணிகளில் 100,000 மக்கள் சென்ற வெள்ளிக்கிழமையன்று பங்கெடுத்துக்கொண்டனர் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த வார தொடக்கத்தில் பிரதான சுன்னி மையங்களில் சதரையும் அரசியல் சட்டத்தை எதிர்த்து பேசிய இதர ஷியைட் தலைவர்களையும் பாராட்டி மற்றும் ஆக்கிரமிப்பிற்கு எதிராக ஈராக் மக்கள் அனைவரும் ஐக்கியப்பட்டு நிற்க வேண்டும் என்று கோரியும் கண்டனப் பேரணிகள் நடைபெற்றன. அரசியல் சட்டத்திற்கு எதிரான பிரதான சுன்னி பேச்சாளர் சாலிஹ் அல் முட்லாக்க் அவர் திங்களன்று, அல் ஜஷீராவிடம் ''முக்தாதா அல் சாதருடன் ஒத்துழைக்க நாங்கள் விரும்புகிறோம். மற்றும் மிக விரைவில் நாங்கள் அவருடன் உடன்பாட்டு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்போம்.'' என்று குறிப்பிட்டார்.

சதரின் ஆதரவாளர்களுக்கும் பிரதான சுன்னி அமைப்புக்களுக்கும் இடையில் ஒரு கூட்டணி உருவாகின்ற சாத்தியக்கூறு பரவலாக எழுந்துள்ளது. அது அக்டோபரில் நடக்கும் கருத்தெடுப்பில் அரசியலமைப்பை வீழ்த்துவதற்கு தேவையான வாக்குகளை திரட்ட முடியும். ஈராக்கின் 18 மாகாணங்களில், 3 மாகாணங்களில் மட்டுமே பதிவாகும் வாக்குகளில் மூன்றில் இரண்டு பங்கு அதற்கு ''இல்லை'' என்று வாக்களிக்குமானால் அந்த ஆவணம் தள்ளுபடி செய்யப்பட்டுவிடும். பாக்தாத் உட்பட நான்கு முதல் ஐந்து மாகாணங்களில் அரசியலமைப்பிற்கு எதிராக தேவைப்படுகின்ற வாக்குகளை பெறுகின்ற வல்லமை சதர்-சுன்னி அணிக்கு உண்டு.

அமெரிக்கா படையெடுப்பு நடத்தியதற்கு பின்னர் 1,00,000 மக்கள் மடிந்துவிட்ட ஒரு நாட்டில் கூட அந்த பாலப் பேரழிவால் இயல்பாக மக்களிடம் அதிர்ச்சி மற்றும் துக்கம் ஆவேசம் பொங்கி எழுந்திருக்கிறது. என்றாலும், இதுவரை அந்தத் துயர பேரழிவு குறுங்குழுவாதத்தை உசுப்பிவிடவில்லை அல்லது அந்த சம்பவத்தை தொடர்ந்து வகுப்புவாத மோதல் நடக்கவில்லை.

உண்மையிலேயே, அந்தக் கூட்ட நெரிசல்களுக்கு நடுவில் அந்தப் பாலத்தின் கிழக்கு பகுதியிலுள்ள ஆதமியா புறநகர் சுன்னி குடிமக்கள் உடனடியாக ஷியாக்களின் உதவிக்கு வந்து ஆற்றில் விழுந்துவிட்டவர்களை காப்பாற்ற முன்வந்தனர். வாஷிங்டன் போஸ்ட் தந்துள்ள தகவலின்படி ஒரு சுன்னி ஷேக் ஒரு ''சிறிய மோட்டார் படகுகள் மற்றும் கையினால் தள்ளும் படகுகள்''.... அணிதிரட்டி ஆற்றில் விழுந்துவிட்டவர்களை கரையில் இழுத்துவர உதவினார். ஆதமியாவில் வாழ்கின்ற ஒருவர் அந்த பத்திரிகையிடம் கூறும்போது: ''நாங்கள் வான்கள், கார்கள் மற்றும் நாங்கள் பயன்படுத்தக்கூடிய எந்த வாகனத்தையும் உடல்களை தூக்கிச் செல்வதற்கு பயன்படுத்தினோம்.``

ஷியாக்களின் ஒரு விழாவிற்கு போதுமான பாதுகாப்பை வழங்குவதற்கு அமெரிக்கா ஆதரவு பெற்ற அரசாங்கம் தவறிவிட்டது என்று சாதர் இயக்கம் குற்றம்சாட்டியது. ஈராக் நாடாளுமன்றத்தின் ஒரு உறுப்பினரான அல்-சாதரோடு தொடர்புடைய பகா அல்-ஆராஜி ஊடகங்களுக்கு பேட்டியளித்த போது ''உள்துறை மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் போதுமான அளவிற்கு பணியாற்றத் தவறியதன் விளைவுதான் இவ்வளவு பெரிய உயிர் சேதமாகும். அவர்கள் இருவரையும் நாடாளுமன்றத்தின் முன் நிறுத்தி அவர்களை விசாரிக்க வேண்டும். அந்த விசாரணையில் அவர்கள் தங்களது பொறுப்புக்களை நிறைவேற்றத் தவறிவிட்டார்கள் என்று நிரூபிக்கப்பட்டால் அவர்கள் பதவியிலிருந்து நீக்கப்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.'' என கூறினார்.

இந்த கண்டனத்தை எதிர்கொண்டுள்ள பிரதமர் இப்ரஹீம் அல்-ஜபாரி அதிகாரபூர்வமாக மூன்று நாள்கள் துக்க தினம் என்று அறிவித்தார். அவருடைய அரசாங்கத்திற்கு எதிராக பகை உணர்வு பெருகிக்கொண்டு வந்தாலும் இதைச் செய்தார். நேற்றைய தினம் அந்தப் பாலத்தில் சாதரின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் அரசாங்கத்திற்கு எதிரான கண்டனப் பேரணி நடத்த முயற்சி மேற்கொண்டபோது அந்த பேரணியை நோக்கி போலீஸ் சுட்டது.

இறுதி ஆய்வில், இந்த பயங்கரமான பெருந்துயரத்திற்கு புஷ் நிர்வாகம் தான் பொறுப்பாகும். புதன்கிழமை சம்பவத்தை எந்த நிகழ்ச்சி தூண்டிவிட்டிருந்தாலும், இந்த பீதி உணர்வு பாக்தாதிலும் நாடு முழுவதிலும் அமெரிக்க ஆக்கிரமிப்பினால் உருவாக்கப்பட்டுள்ள தீவிரமான அரசியல் மற்றும் சமூக நெருக்கடிகளின் நேரடியான விளைவுதான்.

அந்த நாட்டின் எண்ணெய் வளங்களை சூறையாட வேண்டும் என்ற அமெரிக்க அபிலாஷைகளுக்கு எதிர்ப்பு உருவாகியிருப்பதை பிளவுபடுத்தவும் மத மற்றும் இன பிளவுகளை தூண்டிவிடவும் வெள்ளை மாளிகை மேற்கொண்ட நனவுபூர்வமான ஒரு கொள்கையின் வெளிப்பாடுதான் குழுக்களுக்கிடையேயான பதட்டங்கள். அது தொகுத்து நகல் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது, நாட்டின் சியைட்டுகள் உள்ள தெற்கு மற்றும் குர்திஸ்கள் உள்ள வடக்கில் பிராந்திய அரசாங்கங்கள் எண்ணெய் வளத்தை அவ்வரசியலமைப்பு பெரிய வல்லரசுக்கு வழங்குகிறது. ஈராக் மக்கள் அனைவருக்கும் எதிராக அதிகாரத்தையும், சலுகைகளையும், செல்வத்தையும் பெற்றுக்கொள்ள அமெரிக்க ஆக்கிரமிப்பை அந்த நாட்டின் ஆளும் செல்வந்த தட்டினர் ஆதரிக்கின்றனர்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved