World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France: "First Job Contract" legislation approved by Constitutional Council

பிரான்ஸ்: "முதல் வேலை ஒப்பந்தச் சட்டம்" அரசியலமைப்புக் குழுவால் ஒப்புதல் பெற்றது

By Rick Kelly and Antoine Lerougetel
31 March 2006

Back to screen version

கோலிச அரசாங்கத்தின் "முதல் வேலை ஒப்பந்த சட்டத்தின்" (CPE) சட்டபூர்வ நெறிக்கு பிரான்சின் அரசியலமைப்புக் குழு நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. முதல் இரண்டு ஆண்டுகள் வேலைக்காலத்தில் முதலாளிகள் தொழிலாளர்களை காரணமின்றி பணி நீக்கம் செய்யலாம் என்று அனுமதிக்கும் CPE பிரான்ஸ் முழுவதும் தொழிலாளர்களையும் மாணவர்களையும் நடந்து கொண்டிருக்கும் வேலைநிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றில் ஈடுபடத் தூண்டியுள்ளது.

தேசிய சட்டமன்றத்திற்கு சட்டத்தை திருப்பி மறுபரிசீலனைக்கு அனுப்பும் உரிமை, திருத்துவதற்கான வாய்ப்பை பயன்படுத்துதல் என்று இருந்தாலும்கூட, இன்று அதிகாரபூர்வமாக ஜனாதிபதி ஜாக் சிராக் இச்சட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவருவார் என்று பரந்த அளவில் எதிர்பார்க்கப்படுகிறது. பிரெஞ்சு நேரப்படி இன்று இரவு எட்டு மணிக்கு தொலைக்காட்சியில் இது பற்றி அவர் ஓர் அறிவிப்புக் கொடுக்க இருக்கிறார்.

மகாத்தான எதிர்ப்பு இச்சட்டத்திற்கு வெளிவந்துள்ளபோதிலும்கூட, சிராக்கும் பிரதம மந்திரி டொமினிக் டு வில்ப்பனும் CPE ஐ கைவிடத்தயாராக இல்லை என்று பலமுறையும் வலியுறுத்தியுள்ளனர். தொழிற்சங்கங்கள் மற்றும் மாணவர் அமைப்புக்களுடன் சட்டம் செயல்படுத்தப்படும் சில அம்சங்கள் பற்றி, இரண்டு ஆண்டு பரீட்சார்த்த காலம் போன்றது பற்றி பேச்சு வார்த்தைகள் நடத்த மட்டும் தயாராக இருப்பதாக அரசாங்கம் கூறியுள்ளது.

புதிய சட்டம் குடிமக்களை வயதை ஒட்டிப் பாரபட்சம் காட்டுகிறது என்ற கருத்தின் பேரில், சோசலிஸ்ட் கட்சி அதை அரசியலமைப்பு குழுவின் முன் பரிசீலனைக்கு கொண்டுவந்தது. சட்டம் விரைவில் தேசிய சட்டமன்றம் மூலம் மார்ச் 9 அன்று நிறைவேற்றவப்பட்ட போது பாராளுமன்ற விவாதத்தை வில்ப்பன் ஒடுக்கியதை மனு ஆட்சேபித்தது. ஆனால் குழுவோ சமூக ஜனநாயகவாதிகளுடைய அறைகூவலை "சட்ட மன்ற உறுப்பினர் இளையவர்களுக்கு வேலை கொடுப்பதை ஆதரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுப்பதை எந்த சட்டமும் தடை செய்யவில்லை" என்ற அடிப்படையில் குழுவானது நிராகரித்துவிட்டது.

இந்த தூண்டுதலை கொடுக்கும் அறிக்கை அரசியலமைப்பு குழுவின் அரசியல் தன்மையை தெளிவுபடுத்துகின்றது. திரைக்கு பின்னணியில் அரசியல் நடைமுறையின் உயர்மட்டங்களுக்குள்ளே கடுமையான விவாதம் இந்தத் தீர்ப்பிற்கு முன் இருந்திருக்க வேண்டும் என்பதில் ஐயம் ஏதுமில்லை.

ஒன்பது ஆண்டு பதவிக்காலத்தை உடைய அரசியலமைப்புக் குழுவின் பத்து உறுப்பினர்களும் நீண்டகால கட்சி-அரசியல் பிரமுகர்கள் ஆவர். குழுவின் தலைவரான Pierre Mazeaud சிராக்கிற்கு நெருக்கமானவர்களில் ஒருவராவார். "சிராக்கையும் விடக் கூடுதலான சிராக் தன்மை படைத்தவர்" இவர் என்று Liberation ஏடு கூறியுள்ளது.

இளம் தொழிலாளர்களின் வேலை நிலைமை பற்றிய பிரதம மந்திரியின் தாக்குதலுக்கு தக்க ஆதரவை சிராக் கொடுக்க இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் பிரெஞ்சு ஊடகத்தில் ஏராளமான தகவல்கள் வந்துள்ளன. உள்துறை மந்திரி நிக்கோலா சார்க்கோசி வில்ப்பனை பற்றியும் CPE பற்றியும் குறை கூறியுள்ளது பற்றி ஜனாதிபதி கடும் சீற்றத்தில் இருப்பதாக Le Parisien தெரிவித்துள்ளது. ஜனாதிபதிக்கு நெருக்கமாக உள்ள ஆதாரங்களின்படி நீதிமன்ற தீர்ப்பிற்கு முன்னரே சிராக்கும் வில்ப்பனும் "தெருக்களில் இருந்து வரும் அழுத்தத்திற்கு பணிந்து போவதில்லை என்பதில் முழு உடன்பாடு கொண்டிருப்பதாக" கருத்து நிலவுகிறது.

கருத்து வாக்கெடுப்பு நிறுவனமான Ipsos ல் ஆய்வு இயக்குனராக இருக்கும் Pierre Giacometti கூறியிருப்பதாவது: "கடந்த காலத்தில் சிராக் எப்பொழுதுமே தன்னுடைய விருப்பமான அரசியல் அதிகாரத்தை தக்கவைத்து கொள்ளும் விருப்பத்தை அடிப்படையாக கொண்டுதான் முடிவுகளை எடுப்பார். ஆனால் இப்பொழுது அவர் பதவிக்காலத்தின் முடிவை நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் கூடுதலான வகையில் உறுதியாக நின்று உண்மையான சமூகப் பூசலை தூண்டும் வகையில் செயல்படுகிறார்."

சிராக்கும் வில்ப்பனும் CPE ஐ எதிர்க்கும் தொழிலாளர்கள், இளைஞர்களுடன் மோதலை தவிர்க்க தயாராகிக் கொண்டுள்ளனர் என்ற அடையாளங்கள் இருந்த போதிலும்கூட, தொழிற்சங்கங்களும், சோசலிஸ்ட் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஜனாதிபதிக்கு "பொறுப்புடன்" நடந்து கொள்ளுமாறும் பேச்சு வார்த்தைகள் மூலம் சமரசம் காணுமாறும் முறையீடுகளை தொடர்ந்து வெளியிட்டுள்ளன. சோசலிஸ்ட் கட்சியின் தலைவரான Francois Hollande ஜனாதிபதியை சட்டத்தை பிரகடனப்படுத்த வேண்டாம் என்றும் அது பாராளுமன்றத்திற்கு விவாதிப்பதற்காக அனுப்பப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

"இப்பொழுது ஜனாதிபதி தன்னுடைய பொறுப்புக்களை செவ்வனே செய்ய வேண்டிய நேரமாகும்" என்று CFDT தொழிற்சங்கத்தின் தலைவரான François Chérèque கூறியுள்ளார். அவர் மேலும் கூறியிருப்பதாவது: "செவ்வாய்க்கிழமை மாலை ஐந்து தொழிற்சங்க கூட்டமைப்புக்கள் CPE ஐ அமைக்கும் 6வது விதிச் சட்டம் இரண்டாம் முறை விவாதத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று கோரி நாங்கள் அனுப்பியுள்ள கடிதத்தைப்பற்றி அவருக்கு நினைவூட்ட விரும்புகிறேன். அப்பொழுதுதான் அதை திரும்பப் பெறவியலும்; பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு வழிவகை ஏற்படும்."

Reuters தகவல்படி, சோசலிஸ்ட், கம்யூனிஸ்ட், பசுமைக் கட்சிகள் உட்பட 11 "இடது" அமைப்புக்கள் இன்று கூட்டுச் செய்தியாளர் மாநாட்டை நடத்த உள்ளன. நிலைமை பற்றி அவை கூட்டறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளன. இக்கூட்டத்தில் பங்கு பெறும் பிரதிநிதிகளுள் Ligue Communiste Revolutionnaire (LCR) இன் Alain Krivine உம் இருக்கிறார். இக்கூட்டத்தில் LCR பங்கு பெற்றிருப்பது ஸ்ராலினிஸ்டுகளுக்கும், சமூகஜனநாயகவாதிகளுக்கும் இடது மறைப்பை கொடுக்கும் அவற்றின் பங்கை மீண்டும் நிரூபணம் செய்துள்ளது. அவை இரண்டுமே CPE எதிர்ப்பு இயக்கத்தை சிதைக்கவும் அராசங்கத்தை உறுதிப்படுத்தவும் அனைத்து முயற்சிகளையும் செய்து வருகின்றன.

நேற்று மற்றொரு அபிவிருத்தியாக உயர்நிலைப்பள்ளி மற்றும் பல்கலைக் கழக மாணவர்கள் CPE க்கு எதிரான தங்களுடைய போராட்டத்தை தொடர்ந்தனர். சாலைகள் மறியல், இரயில் தடுப்புக்கள் ஆகியவை நடத்தப்பட வேண்டும் என்ற அழைப்பை ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஏற்றனர்; இந்த அழைப்பு தேசிய மாணவர்கள் ஒருங்கிணைப்பு குழுவினால் இவ்வார தொடக்கத்தில் கொடுக்கப்பட்டு இருந்தது. கிட்டத்தட்ட 2,000 மாணவர்கள் பாரிசின் Gare de Lyon இரயில் நிலையத்திற்குள் தடுப்புக்களை நிறுவியிருந்தனர். பயணிகள் இரயில்களும், மிக விரைவு TGV இரயில்களும் போலீசார் வந்து தடைகளை அகற்றும்வரை இரண்டு மணிநேரம் தடைப்பட்டிருந்தன. மற்றொரு இரயில் நிலையத்தில் இரயில் மற்றும் சாலைப் போக்குவரத்தை சீர்குலைத்துக்கொண்டிருந்த Marseilles ல் கலவரத்தடுப்பு போலீசார் 400 மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை குண்டுகளை எறிந்தனர்.

தேசிய நெடுஞ்சாலைகளும் பிரான்ஸ் முழுவதும் தடுப்பிற்கு உட்படுத்தப்பட்டன. Nantes, Rennes, Lille, Montpellier, Dunkirj, Aix-sn-Provence ஆகிய பகுதிகள் இதில் அடங்கும். பாரிசில் மாணவர்கள் நகரத்தின் முக்கிய வளை பாதைகளில் போக்கு வரத்தை நிறுத்திவிட்டனர். அந்த சாலைத் தடுப்புக்கள் நாடெங்கிலும் 345 கிலோமீட்டர்கள் (215 மைல்கள்) போக்குவரத்தை பாதித்ததாக Reuters மதிப்பிட்டுள்ளது.

டஜன் கணக்கான கைதுகள் பற்றி தகவல்கள் வந்துள்ளன. கைது செய்யப்பட்டுள்ளோரில் ஒருவர் முக்கிய உயர்நிலைப் பள்ளி மாணவர் சங்கமான UNL (Union Nationale Lyceenne) இன் தலைவரான Kark Stoeckel ஆவார், "அவர்கள் ஒன்றும் எங்களை கைது செய்திருக்க வேண்டியதில்லை; நாங்கள் பெரும் அமைதியுடன் இருந்தோம். போலீசாரை இப்படி பயன்படுத்தியதில் அவர்கள், இயக்கம் தீவிரப்படுதலை நெறியாக்கியுள்ளனர்" என்று அவர் அறிவித்துள்ளார்.

கல்வி மந்திரி Gilles de Robien, தேவையானால் போலீசாரை பயன்படுத்தி முதல்வர்களுக்கு அனைத்து பள்ளிகளையும் மீண்டும் திறக்குமாறும், மாணவர்களுடைய பள்ளி முற்றுகைகளை உடைக்குமாறும் உத்திரவிட்டுள்ளது பற்றி ஓர் தகவல் வந்துள்ளது. உயர்நிலைப்பள்ளி மாணவர்களுடைய சங்கங்களின் தலைவர் மொத்தத்தில் நான்கில் ஒரு பங்கு பள்ளிகள் வேலைநிறுத்தம் செய்யும் மாணவர்களால் முற்றுகைக்கு உட்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

போலீசாரை தருவித்துப் பள்ளிகளை திறக்கும் அரசாங்கத்தின் ஆணையை பல பள்ளி முதல்வர்களும் எதிர்த்துள்ளனர். "De Robien தீயில் எண்ணெயை ஊற்றிக் கொண்டிருக்கிறார்" என்று மார்ச் 10ம் தேதியில் இருந்து முற்றுகைக்கு உட்பட்டுள்ள பள்ளி ஒன்றின் முதல்வரான Philippe Tournier, International Herald Tribune இடம் கூறினார். "மாணவர்களை போலீசாரை கொண்டு அச்சுறுத்தினால், அவர்கள் இன்னும் கூடுதலான உறுதியை கொள்ளுவர்."


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved