World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Britain's airline terror plot: Questions that need to be answered

பிரிட்டன் விமானத் தாக்குதல் பயங்கரச் சதி : விடையிறுக்கப்பட வேண்டிய வினாக்கள்

By the Editorial Board
11 August 2006

Back to screen version

இக்கட்டுரை பதிவிறக்கம் செய்து விநியோகிப்பதற்காக PDF துண்டுப்பிரசுர வடிவில் கிடைக்கிறது.

அமெரிக்க, பிரிட்டிஷ் பாதுகாப்புப் பிரிவுகள் பிரிட்டனுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே பயணிகள் விமானப் போக்குவரத்தை வெடிவைத்துச் சிதறடிக்கும் பயங்கரவாத சதித்திட்டத்தை முறியடித்தனர் என்ற கூற்று விமர்சிக்கப்படாமல் ஏற்கப்பட இயலாததாகும். அத்தகைய தாக்குதல் தயாரிப்பில் இருந்தது என்பதை இத்தருணத்தில் நிர்ணயிப்பது முடியாத காரியம்; ஆனால் வழக்கம்போல் செய்தி ஊடகமானது, உத்தியோகபூர்வக் கதைக்கு ஆதாரம் தரக்கூடிய குறிப்பிடத் தகுந்த தகவல் ஏதேனும் உள்ளதா என்பதைப் பற்றிக் கவலைப்படாமல், பிரிட்டிஷ், அமெரிக்க அரசாங்கங்களின் கூற்றுக்களை ஐயத்திற்கிடமில்லான உண்மை என்பது போல் பிரசுரித்துள்ளன.

நடுவழியில் வானிலுள்ள கணக்கற்ற விமானங்களை தாக்கிச் சிதறடிப்பதின் மூலம் "கற்பனை செய்தும் பார்க்கமுடியாத அளவிற்கு வெகுஜனக் கொலை செய்ய", சதித்திட்டங்கள் இருப்பதாக பிரிட்டிஷ் போலீஸ் கொடுத்துள்ள அறிக்கை உள்ளத்தை உறைய வைக்கிறது. இதைத்தொடர்ந்து தொலைநிலை பாதுகாப்பு நடவடிக்கைகள் ---லண்டன் ஹீத்ரூ விமான நிலையம் மூடப்படுதல், பயணிகள் கொண்டு செல்லும் பொதிகள் மீதான காலவரையற்ற தடைகள்--- ஆகியவை அச்சம், கவலைகொள்ளவைத்தல் என்ற சூழ்நிலையை அதிகரித்துள்ளன.

இதுபோன்ற நேரத்தில், லண்டன் மற்றும் வாஷிங்டனிலிருந்து கவனத்தை ஈர்க்கும் கூற்றுக்கள் வெளிவந்து அவற்றை செய்தி ஊடகங்கள் பெரும் ஆதரவு கொடுக்கும் நிலையில், விமானப் போக்குவரத்து கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளினால் மாபெரும் தடைக்குட்பட்டுள்ள நிலையில், மக்கள் தங்களுடைய சீர்தூக்கி ஆராயும் சிந்தனையையும் அரசியல் நிதானக் குவிப்பையும் நிறுத்திவிடமால் இருப்பதுதான் மிகவும் இன்றியமையாததாகும்.

வியாழக்கிழமை அதிகாலையில் இருந்து லண்டனிலும் மேற்கு மிட்லாண்ட்ஸ் வீடுகளிலும் வணிகப் பகுதிகளிலும் நிகழ்த்தப்பட்ட சோதனையின் விளைவாக 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்க, பிரிட்டிஷ் அரசாங்கங்களின் செய்தித் தொடர்பாளர்கள், கைது செய்யப்பட்டவர்கள், 9/11 சதித்திட்டங்களுக்கு பின்னர் மிக முக்கியமான பயங்கரவாத சதிகளில் தொடர்பு கொண்டுள்ளதாக உறுதியளிக்கின்றனர்.

இதற்குப் பின் வந்த தகவல்கள் பிரிட்டனில் 24 பேரைக் கைது செய்துள்ளதாகவும் இன்னும் கூடுதலான நபர்கள் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஒரு முஸ்லிம் அறக்கட்டளை ஊழியரும், அனைத்துப் பகுதிகளுக்கும் செல்லக்கூடிய அனுமதித் தகுதி உடைய ஹீத்ரோ விமானப் பளியாளர் ஆவார் என்று பிரிட்டனின் சானெல் 4 செய்திப் பிரிவு கூறியுள்ளது. சந்தேகத்திற்குரிய ஐந்து நபர்கள் இன்னும் பிடிபடவில்லை என்று அமெரிக்க ஆதாரங்களை மேற்கோளிட்டு ABC செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

வியாழனன்று மாலை BBC செய்திப் பிரிவு அமெரிக்க, பிரிட்டிஷ், பாகிஸ்தானிய அரசாங்கங்களின் நீண்ட கால ஒருங்கிணைப்புச் செயலின்மூலம் இக்கைதுகள் நடத்தப்பட்டதாக கூறியுள்ளது. பிரிட்டிஷ் உள்துறை மந்திரி ஜோன் ரீட் வியாழனன்று இதற்கு முன்னதாக நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பிரதம மந்திரி டொனி பிளேயர் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷிடம் வரவிருக்கும் கைதுகளை பற்றியும், வார இறுதியில் நடக்கவுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் தெரிவித்துள்ளதாக கூறினார்.

இதற்குப் பின் வந்த தகவல்களின்படி சதித்திட்டத்தின் ஒரே நேரத்தில் மூன்று அமெரிக்க நிறுவனங்களின் 10 விமானங்கள் தாக்கப்படுவதற்கு அவற்றினுள் குளிர்பானங்கள் அல்லது மின்னணுக் கருவிகள் என்ற மறைப்பில் திரவ இராசயன வெடிப் பொருட்கள் பயன்படுத்தி இலக்கு கொள்ளுவதாக இருந்தது என்று கூறியுள்ளனர்.

சதிகாரர்கள் "ஒத்திகை" ஒன்றை இன்று (வெள்ளி) நடத்த இருந்ததாகவும், உண்மைத் தாக்குதல் சில நாட்களுக்கு பின்னர் செய்யப்படலாம் எனக் கருதியிருந்ததாகவும் அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் கூறினர். ஒரு மூத்த தேசிய சட்ட மன்ற மூலாதாரம், சதிகாரர்கள் விளையாட்டுத் துறைப் பானம் ஒன்றில் பெரொக்சைட் மூலத்தைக் கொண்ட பசை ஒன்றைப் பயன்படுத்தி "வெடி கக்கும் காக்டெயில்" ஒன்றை, ஒரு MP3 கருவிமூலம் அல்லது செல் தொலைபேசி மூலம் இயக்கும் வகையில், திட்டமிட்டிருந்ததாக தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமை நண்பகலில் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் ஒரு சுருக்கமான அறிக்கையை வெளியிட்டார்; இது பொதுமக்களின் கவலைகளை உயர்த்தும் நோக்கத்தைக் கொண்டிருந்ததுடன் பயங்கரவாத தாக்குதல் என்பதைப் பயன்படுத்திக் கொண்டு, "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்ற பெயரில் 9/11க்கு பின்னர் இவருடைய நிர்வாகம் தொடரும் பிற்போக்குக் கொள்கைகளின் கீழ் பரந்த அளவில் நடக்கும் பலவற்றையும் நியாயப்படுத்தும் வகையில் இருந்தது.

விஸ்கொன்சின் க்ரீன்பே விமான ஓடுதளத்தில் இருந்து பேசிய புஷ், தகர்க்கப்பட்டு விட்ட சதித்திட்டம், "சுதந்திரத்தை பெரிதும் பேணிக்காக்கும் நம் அனைவரையும் எவ்விதத்திலும் அழிக்க வேண்டும் என்ற கருத்துடைய இஸ்லாமிய அடிப்படைவாத பாசிஸ்டுகளுடன் இந்த நாடு போரில் ஈடுபட்டுள்ளது என்பதை அப்பட்டமாக நினைவுறுத்துகிறது" என்றார். தன்னுடைய நிர்வாகம் "அமெரிக்க மக்களை காப்பதற்காக மகத்தான முறையில் மேற்கொண்டுள்ள உள்நாட்டு ஒற்றுவேலை, இராணுவ நீதிக்குழுக்கள், விசாரணையின்றி தடுப்புக் காவல்கள் போன்ற நடவடிக்கைகள் சரியானவையே என்பதை இச்சதித்திட்டம் காட்டியுள்ளது என்றும், "அமெரிக்காவிற்கு அச்சுறுத்தல் இல்லை என்று நம்புவது பெரும் தவறாகிவிடும்" என்ற எச்சரிக்கையையும் விடுத்தார்.

இப்படிக் கூறப்படும் பெரும் தன்மையுடைய ஒரு பயங்கரவாத சதித்திட்டம் இருந்ததா இல்லையா என்பது பற்றி உறுதியாகத் தீர்மானிக்கக் கூடிய தகவல் ஏதும் நம்மிடம் இல்லை என்று உலக சோசலிச வலைத் தளம் கருதுகிறது. ஆனால் தங்களுடைய கூற்றுக்களை நிரூபிக்கவும், மிகக் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்துள்ளதற்கான உண்மைகளை பிரிட்டிஷ், மற்றும் அமெரிக்க அரசாங்கங்கள் வெளியிடும் பொறுப்பைக் கொண்டுள்ளன என்றும் அப்படிப்பட்ட உண்மைகளின் வெளியீடு மிகத் தெளிவான, துல்லியமான முறையில் மக்களுக்கு வேண்டும் என்றும் கோருகிறது.

இவ்விரு அரசாங்கங்களும் அத்தகைய உண்மை நிலையையோ, ஆதாரங்களையோ இதுவரை வெளியிடவில்லை.

வெள்ளை மாளிகையோ அல்லது டெளனிங் தெருவோ, இவர்களுடைய கூற்றுக்களை மக்கள் அப்படியே நம்பவேண்டும் என்றோ அவர்களுடைய அறிக்கைகள்மீது முழு நம்பிக்கை காட்ட வேண்டும் என்றோ எதிர்பார்க்கும் உரிமையை பெற்றிருக்கவில்லை. ஈராக்கிற்கு எதிரான போர் ஈராக்கியப் பேரழிவு ஆயுதங்கள் மற்றும் சதான் ஹுசைன் மற்றும் அல் கொய்தா இயக்கத்திற்கும் இடையே இருப்பதாக கூறப்பட்ட பொய்த் தகவல்களின் அடிப்படையில் நெறிப்படுத்தப்பட்டது. அப்பொய்கள் புஷ், பிளேயர் இருவர்மீதான நம்பகத்தன்மையையும் எப்போதைக்குமாக அழித்துவிட்டன.

அத்தகைய கொடூரமான இழிந்த குற்றம் தயாரிப்பில் இருந்ததும் உண்மையானால், அதற்கான இறுதிப் பொறுப்பும் வாஷிங்டன் மற்றும் லண்டன் இரண்டும் தொடரும் கொள்கைகளில்தான் சார்ந்திருக்கும். 9/11ல் இருந்தே புஷ்ஷும், பிளேயரும் "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்ற மந்திரத்தை மத்திய கிழக்கில் தாங்கள் நடத்தும் கொள்ளை போரின் நோக்கங்களுக்கு திரைபோல் பயன்படுத்தி, முஸ்லீம் உலகத்திற்குள் அமெரிக்க, பிரிட்டிஷ் எதிர்ப்பு உணர்வுகளை மிக ஆழ்ந்த முறையில் தீவிரப்படுத்தி வருகின்றனர். அதே நேரத்தில் "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்பது உள்நாட்டிலும் ஜனநாயக உரிமைகள்மீது முன்னோடியற்ற வகையில் நடத்தப்படும் தாக்குதல்களுக்கு போலிக் காரணமாக பயன்படுத்தப்படுகிறது.

ஆப்கானிஸ்தானத்திலும், ஈராக்கிலும் மோசமான நிலையை எதிர்கொண்டுள்ள நிலையில், லெபனானை இஸ்ரேல் பேரழிவிற்கு உட்படுத்துவதற்கு இவை கொடுக்கும் ஆதரவிற்கு மகத்தான சர்வதேச எதிர்ப்பை எதிர்கொண்டுள்ள நிலையில், இரண்டு அரசாங்கங்களும் வெறித்தனச் சூழ்நிலையை நீடிக்க வைப்பதில் அக்கறை கொண்டுள்ளவையாகும். அத்தகைய சூழல் அவர்களுடைய எதிரிகளை மிரட்டுவதற்கும், உள்நாட்டிலும் வெளியிலும் மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை நியாயப்படுத்தவும் உதவும்.

உண்மையில், பிரிட்டனின் பயங்கராவாத சதித்திட்டம் பற்றிய உத்தியோகபூர்வ தகவல்கள் குறிப்பான அல்லது சோதனைக்குட்படுத்தப்படக்கூடிய உண்மைகள் எதையும் கொண்டிருக்கவில்லை; வியத்தகு முறையில் மிகச் சுருக்கமாகவும் உள்ளன. முறையான ஆதாரம் என்று வரும்போது அமெரிக்க அதிகாரிகளின் அறிக்கைகளும் இதே தன்மையைத்தான் கொண்டுள்ளன. ஆனால் தங்களுடைய கூற்றுக்களில் இவை விரிவான தன்மையை கொண்டுள்ளன.

அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு மந்திரியான மைக்கேல் ஷெர்ட்டாப் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் சதித்திட்டம் "ஒரு பெரும் நவீன தொழில்நுட்பம் வாய்ந்த திட்டம், நடைமுறையை" கொண்டிருந்தது என்றும் கிட்டத்தட்ட வெற்றி பெற்றிருக்கும் என்றும் கூறினார். "ஒரு வட்டத்திற்குள் சில நபர்கள் உட்கார்ந்துக் கற்பனை செய்ததில்லை. தேவையான திறனைக் குவித்திருந்த அவர்கள் பெருமளவு திட்டத்தை சாதித்திருக்கவும் கூடும்."

ஹீத்ரோவில் இருந்து புறப்பட்டிருக்கும் அமெரிக்க வணிகப் பிரிவு விமானங்களை சதித்திட்டம் இலக்கு கொண்டிருந்திருக்கலாம் என்றும் அவர் தொடர்ந்து கூறினார். "இது ஒரு சர்வதேச பரப்பைக் கொண்டிருந்தது", அல் கொய்தாவின் செயற்பாடாக இருக்குமோ என்ற கருத்தையும் தெரிவித்துள்ளது."

திட்டம் எக்குறிப்பிட்ட தேதியில் நிகழ்ந்திருக்கும் என்று அவர் குறிப்பிடவில்லை; ஆனால் 9/11 தாக்குதல் நினைவு தினத்திற்கு முன்னதாக வந்திருக்கும் என்றார். "அவர்கள் ஒரு குறிப்பிட்ட தேதியை நிர்ணயித்திருந்தார்கள் என நான் கூறமுடியாது; அதே நேரத்தில் அந்த நாள் வரை தாமதப்படுத்தியிருக்கவும் மாட்டார்கள். அது செயற்பாட்டு தினத்திற்கு நெருங்கிய நாள் எனக் கொள்ளலாம்."

இச் செயற்பாட்டிற்கான நாளே தாக்கதல்காரர்களுக்கு எப்பொது என்று தெரியாத நிலையில் பாதுகாப்புப் பணியாளர்கள் எப்படி அறிந்தனர் என்பது பற்றி ஷெர்ட்டாப் எவ்வித விளக்கமும் கொடுக்கவில்லை.

இது ஒன்று மட்டும் உத்தியோகபூர்வத் தகவல்களில் தொக்கி நின்று எழும் வினா அல்ல.

பிரிட்டனின் உள்துறை மந்திரி ரீட், தான் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் கைது செய்வதற்கான உந்துதல் கொடுத்த சான்றுகள் இங்கிலாந்தில் இருந்து வந்ததாக ஒரு தோற்றத்தை கொடுத்தார்; CNN இத்தகவல் அண்மையில் பாகிஸ்தானில் நிகழ்த்திய கைதுகள் பிரிட்டிஷ் ஆய்வாளர்களை சதியை உடனே நிறுத்தும் வகைக்கு உந்துதல் கொடுக்க நம்பிக்கை கொடுத்தது என்று கூறியுள்ளது. ஆனால் பிரிட்டனின் சானெல் 4 பிரிட்டிஷ் அதிகாரிகள் CIA உளவுத்துறை அளித்த தகவல்களின்படிதான் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கிறது.

மேலும், கடந்த வார இறுதியில் "தவிர்க்கமுடியாத" பயங்கரவாதத் தாக்குதல் வரக்கூடும் என்று பிளேயர் புஷ்ஷுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தார் என்றால், செவ்வாய்க்கிழமை தன்னுடைய விடுமுறைக்காக அவர் ஏன் பார்படோசிற்குப் புறப்பட்டார்? மேலும் சதித்திட்டம் விமானங்களை இலக்கு கொண்டிருந்தது என்றால், அவரை விமானத்தில் செல்ல எவ்வாறு பாதுகாப்புப் பிரிவினர் அனுமதித்தனர்?

"கடுமையான" என்பதில் இருந்து "மிகவும் ஆபத்தான" என்ற நிலைக்கு இங்கிலாந்தில் பயங்கரவாதம் பற்றிய எச்சரிக்கை உயர்த்தப்படும் அளவிற்கு சதித்திட்டத்தின் அச்சுறுத்தும் தன்மை கருதப்பட்டால், அமெரிக்காவில் சிகப்பு ஆபத்து என்ற நிலை ஏற்கப்பட்டால், ஐந்து நாட்களாக ஏன் எவ்வித கைதுகளும் செய்யப்படவில்லை? மற்றும் முன்னரே அல்லாமல், கைதுகள் நடந்த பின்னர், ஏன் பயங்கரவாத எச்சரிக்கை விடுக்கப்பட்டது?

இத்தகைய வினாக்கள் செய்தி ஊடகத்தால் கேட்கப்படவில்லை. ஆயினும்கூட சமீபத்திய மாதங்களில் ஏராளமான பயங்கரவாத சதித்திட்டங்கள் பற்றி அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியாவில் பேசப்பட்டு அவை பாதுகாப்புத்துறையினரால் தகர்க்கப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகின்றன. ஒவ்வொரு நிகழ்விலும் ஏராளமான பேர் கைதுசெய்யப்பட்டனர்; குற்றச்சாட்டுக்களின்படி அவர்கள் பயங்கரவாத செயல்கள் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர். எந்த பருப்பொருள் திட்டங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை; எந்த ஆயுதங்கள், வெடிமருந்துகளும் கைப்பற்றப்படவில்லை. பெரும்பாலான நிகழ்வுகளில், சதி எனக் கூறப்படுபவை அரசாங்கத்திற்கு தகவல் கொடுப்பவர்களால் தொடக்கப்பட்டு, ஊக்கமளிக்கப்பட்டிருந்து; அவர்கள்தான் சதிகாரர்கள் எனக் கூறப்படுபவர்களை பொறிவைத்து பிடித்த முனைவர்கள் ஆவர்.

நியூ யோர்க்கில் "நீண்ட மலைக்குகை வெடிகுண்டு" என்ற அழைக்கப்பட்ட ஜூலை நிகழ்வில் அமெரிக்காவில் அடியெடுத்துக்கூட வைக்காத வெளிநாட்டுக் குடிமக்கள்தான் சதிகாரர்களாக இருந்திருப்பர் என்று கூறப்பட்டது.

தற்போதைய பயங்கரவாத அச்சத்தின் அரசியல் பயன்பாடுபற்றிக் கூறவேண்டும் என்றால், வியாழக் கிழமை சோதனைகளுக்கு சில மணி நேரம் முன்புதான் பிரிட்டிஷ் உள்துறை மந்திரி ரீட், லண்டனில் நிகழ்த்திய முக்கிய உரை ஒன்றில் "பயங்கரவாதத்தின் மீது" அரசாங்கம் நடத்தும் போரைப் பற்றி எதிர்க்கட்சிகள் ஜனநாயக விரோதச் சட்டங்கள் என குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாக குறிப்பிட்டார்.

"இரண்டாம் உலகப் போர் முடிவடைந்ததற்கு பிந்தை காலத்தில் மிகக் கொடுமையான தொடர்ந்த அச்சுறுத்தல் வந்துள்ளது" என்ற குறிப்பிட்ட அவர், "இதைப் பெரிதுபடுத்தாதீர்கள்" என்று கூறியவர்களை கடிந்து கொண்டார்; "எமது தேவைக்கேற்ப விரைவில் நம்முடைய நிறுவனங்கள் மற்றும் சட்ட நெறியில் மரபார்ந்த பழமையை மாற்றிக் கொள்ளும் தன்மையை கொண்டிராமல் இருப்பதற்கு" அவர்களைத்தான் குறைகூறினார்.

இப்படிப்பட்ட "மாற்றிக் கொள்ளும்" நிலைப்பாட்டிற்கு மரபார்ந்த, ஜனநாயக உரிமைகள் சாக்கடையில் போடப்பட வேண்டும் என்ற பொருள் என்பதை தெளிவாக்கிய அவர் மேலும் கூறியதாவது: "சில சமயம் நாம் குறுகிய காலத்தில் அவை தவறான முறையில் பயன்படுத்தப்படுவதை தடுக்கச் செயல்படவேண்டும்; அதிலும் குறிப்பாக எமது அடிப்படை மதிப்புக்களை எதிர்ப்பவர்கள், தற்கால உலகில் உள்ள எமது உரிமைகள் அனைத்தையும் அழிக்க வேண்டும் என்று கருதுபவர்களிடம் இருந்து காத்துக் கொள்ளுவதற்காக."


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved