World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Germany joins US, British, Israeli axis of aggression

அமெரிக்க, பிரிட்டிஷ், இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் போர் அச்சில் ஜேர்மனியும் சேருகிறது

By Ulrich Rippert
4 August 2006

Back to screen version

கடந்த ஞாயிறன்று, ஜேர்மன் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் உல்ரிச் வில்லியம், அதிபர் அங்கேலா மேர்க்கல் (கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் -CDU) சார்பாக கருத்துத் தெரிவிக்கையில், "கானா மீது இஸ்ரேலிய விமானத் தாக்குதல்களின் விளைவுகளை பற்றிய அவரது ஆழ்ந்த வருத்தத்தையும், வேதனையும் தெரிவிப்பதாக" கூறினார்.

இரண்டு நாட்களுக்கு பின்னர், ஜேர்மனியின் வெளியுறவ மந்திரி பிராங்-வால்டெர் ஸ்ரைன்மையர் (சமூக ஜனநாயக கட்சி- SPD), Suddeutsche Zeitung பத்திரிகைக்கு கொடுத்த பேட்டியொன்றை கீழ்க்கண்ட சொற்களுடன் தொடங்கினார்: "ஞாயிறன்று கானாவில் நிகழ்ந்தவை கொடூரமானவை. இஸ்ரேலிய ஆகாயத் தாக்குல்களினால் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளமை பயங்கரம், ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல."

ஆனால் ஜேர்மனிய மக்கள் முழுவதுமாக உண்மையில் கானாவில் குழந்தைகள் பற்றிய சிதைந்த, தீயில் கருகிய படங்களை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தாலும், ஜேர்மன் அரசாங்கம் (CDU மற்றும் SPD கட்சிகளின் பெரும் கூட்டணி அரசாங்கம்) ஓர் இழிந்த போர்க்குற்றமாகிய இச்செயலை அவ்வாறு உணர்ந்து கண்டிக்க மறுத்துவிட்டது. "சுய பாதுகாப்பு உரிமை" என்ற பின்னணியில் எந்த இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும் அது பொருத்தமாக இருக்க வேண்டும், பொதுமக்கள் பாதிப்பு தவிர்க்கப்பட வேண்டும் என்ற ஸ்ரைன்மையரின் இஸ்ரேலுக்கான எச்சரிக்கை அவநம்பிக்கைத்தன்மை நிறைந்த, ஒரு கோழைத்தனமான தவிர்ப்புச் செயலாகவும் இருந்தது.

கானாவில் இலக்குகள் தவறாக குறிவைக்கப்பட்ட நிலையோ, சாதாரண மக்கள் இறப்பை தவிர்ப்பதில் எடுத்த நடவடிக்கை தோல்வியடைந்த விவகாரமோ அல்ல. மாறாக, நிரபராதிகளான மகளிரும், சிறார்களும் வேண்டுமென்றே படுகொலை செய்யப்பட்டு, தெற்கு லெபனானில் இருந்து பெருந்திரளான அகதிகள் விரைந்தோட வேண்டுமென்று நடத்தப்பட்ட நிகழ்வாகும். இப்படுகொலை ஒன்றும் "துரதிருஷ்டவசமான விதிவிலக்கு" என்று இல்லாமல், இஸ்ரேலிய ஆக்கிரோஷத்தின் உண்மைத் தன்மையின் வெளிப்பாடாக இருப்பதுடன், இதுகாறும் இது போராடுபவர்களை விடக் கூடுதலான குழந்தைகளின் உயிர்களைத்தான் கவர்ந்துள்ளது.

Suddeutsche Zeitung இற்கு கொடுத்த பேட்டிக்கு மறுநாள் செவ்வாயன்று புருஸ்ஸல்ஸில் நடைபெற்ற ஐரோப்பிய வெளியுறவு மந்திரிகளின் கூட்டத்தில், ஸ்ரைன்மையர் இஸ்ரேலிய போர்க்குற்றங்களை கண்டிக்கும் தீர்மானங்கள் எதையும் தடுத்தது மட்டுமல்லாமல், இறுதி அறிக்கையாக அனைத்து மந்திரிகளும் சேர்ந்து உடனடிப் போர் நிறுத்தக் கோரிக்கையை முன்வைக்கும் தீர்மானத்தை அகற்றிவிடுவதற்கும் அழுத்தம் கொடுத்தார். முதலில் இருந்த தீர்மான வரைவு, பின்லாந்து நாட்டின் தலமையால் எழுதப்பட்டிருந்தது; அதில் லெபனானில் உடனடிப் போர் நிறுத்தம் வேண்டும் என்றும் "பொதுமக்கள் உயிர்கள் இழப்பை தவிர்ப்பதற்கான தேவையான முன்னெச்செரிக்கைகள் கையாள மறுக்கப்படுவது என்பது சர்வதேச மனிதாபிமான சட்டத்தைக் கடுமையாக மீறுவது ஆகும்" என்ற சொற்றொடரும் இருந்தது.

பிரிட்டன் மற்றும் ஜேர்மனியில் இருந்து வந்த அழுத்தத்தின் விளைவாக, இரண்டு கருத்துக்களும் கைவிடப்பட்டு, ஒரு மாற்றுத் தீர்மானத்திற்கு உடன்பாடு காணப்பட்டது (இதற்கு செக் குடியரசு, போலந்து மற்றும் டென்மார்க்கின் ஆதரவு இருந்தது); அதில் அனைத்துத் தரப்பினரும் சாதாரண குடிமக்களை காப்பாற்றுவதற்கு முயற்சிகளை கொள்ள வேண்டும் என்றும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறும் நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும்" என்றும் அழைப்பு விடப்பட்டுள்ளது; இப்படிக் கூறுவது தன்னுடைய போர்க் குற்றங்களை நியாயப்படுத்தும் இஸ்ரேலின் பாசாங்குத்தனமான கருத்துக்களுடன் இயைந்து நிற்பதாகும். இன்னும் கூடுதலான வகையில் இத்தீர்மானமும் மாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டு இஸ்ரேல் மீதான ஹெஸ்போல்லாவின் ராக்கட் தாக்குதல்கள் பற்றிய விமர்சனம் கானாவில் லெபனிய குடிமக்களை இஸ்ரேல் கொன்றது பற்றிய குறிப்பிற்கு முன்வைக்கப்பட்டது.

கானாவில் பாதிப்படைந்தவர்களுக்கு "ஆழ்ந்த வருத்தம் மற்றும் வேதனை" என்ற மேர்க்கலின் அறிவிப்புக்கள் இருந்தபோதிலும்கூட, ஜேர்மன் அரசாங்கம் இப்பொழுது லெபனானில் நடைபெற்றுவரும் போர்க்குற்றங்களுக்கு பெருமளவு பொறுப்பைக் கொண்டுள்ளது என்பதை இந்த உண்மைகள் தெளிவாக்குகின்றன. ஜேர்மனி வெளியுறவுக் கொள்கைகளில் ஏற்பட்டுள்ள அமெரிக்க சார்பு மாற்றம் மிகப் பெரிய அளவில் அமெரிக்க-இஸ்ரேலிய போர்க்கொள்கைக்கு வலிமையையும் ஊக்கத்தையும் கொடுத்துள்ளது.

தற்போதைய அரசாங்கத்தின் வெளியுறவு மந்திரிப் பதவிக்கு வருமுன், ஸ்ரைன்மையர் ஜேர்மனியின் முந்தைய சமூக ஜனநாயக கட்சி-பசுமைக் கட்சி அரசாங்கத்தில், ஹெகார்ட் ஷ்ரோடரின் தலைமையில் இருந்த அதிபர் அமைச்சக பிரிவின் தலைவராக இருந்தார். ஈராக்கிற்கு எதிரான அமெரிக்க தலைமையிலான ஷ்ரோடரின் இருமுகத் தன்மையை ஸ்ரைன்மையர் நன்கு அறிந்திருந்தார். போரை பகிரங்கமாகக் குறை கூறிவந்தாலும். ஜேர்மனி திரைக்குப் பின்னணியில் அமெரிக்க அரசாங்கத்திற்கும் உளவுத்துறைகளுக்கும் பல திட்டமிடல் பணிகளுக்கு ஆதரவுகளை கொடுத்துவந்தது.

ஆயினும்கூட, போருக்கு எதிரான ஜேர்மனியின் பகிரங்க அறிவிப்புக்களுக்கு விளைவு இல்லாமல் போகவில்லை. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புக் குழுவில் ஜேர்மனிக்கு நிரந்தர இடம் இல்லை; ஆனால் ஈராக் போர் பற்றி அது காட்டியிருந்த தயக்கங்கள் பாதுகாப்புக் குழுவில் பிரதிநிதித்துவம் பெற்றிருந்த நாடுகளுக்கு ஊக்கத்தை கொடுத்ததுடன் போரை ஆதரித்து ஐ.நா. தீர்மானத்தில் ஒரு பந்தி வருவதை தடுக்க உதவியது.

இது போருக்கு எதிரான மக்கள் அணிதிரளலுக்கான ஒரு முக்கிய காரணியாகப் போயிற்று. ஆரம்பத்தில் இருந்தே இந்த சட்ட விரோத ஆக்கிரமிப்பு போரின் தன்மை நன்கு புலப்படுத்தப்பட்டு உலகம் முழுவதும் மக்கள் மில்லியன் கணக்கில் தெருக்களுக்கு வந்து அதற்கு எதிராக ஆர்ப்பரித்தனர்.

இந்த விதத்தில் ஜேர்மனி வெளியுறவுக் கொள்கையில் ஒரு அமெரிக்கச் சார்பு மாற்றத்தை ஐயத்திற்கு இடமின்றிக் காட்டும் புதிய அரசாங்கத்தின் முயற்சிகள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய அரசாங்கங்களுக்கு பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். மேர்க்கல், ஸ்ரைன்மையர் மற்றும் சகாக்கள் ஐரோப்பாவில் அரசியல் சமபலநிலையை அமெரிக்க அரசாங்கத்தின்பால் உயர்த்துவதற்கும் அமெரிக்க இஸ்ரேலிய போர் பற்றிக் குறைகூறுபவர்கள் தனிமைப்படுத்தவும் பெரும் பங்கினைக் கொண்டுள்ளனர்.

ஞாயிறன்று மாலை, கானா படுகொலையை தொடர்ந்து, ஐரோப்பாவில் ஜோர்ஜ் புஷ்ஷின் முக்கிய நண்பராக இருக்கும் பிரிட்டிஷ் பிரதம மந்திரி பிளேயருக்கு தொலைபேசி தொடர்பை கொள்வதை, ஜனாதிபதி ஜாக் சிராக்குடன் தொடர்பு கொள்ளுவதை காட்டிலும் முக்கியமாக மேர்க்கல் கருதினார். இவ்வாறு செய்கையில், ஜேர்மனியின் புதிய அமெரிக்க சார்பு தன்மை ஒரு தற்காலிக விஷயம் அல்ல என்பதையும் மற்றும் அமெரிக்க ஜனாதிபதியின் அழுத்தத்தின் விளைவு என்றும் காட்டாமல் உறுதியானது என்பதைத் தெளிவாக்கினார். உண்மையில் செயின்ட் பீட்டர்ஸ்பேர்க்கில் G8 மாநாட்டின் மேர்க்கல் காட்டியிருந்த அமெரிக்க சார்பின் தொடர்ச்சி மற்றும் மீள்உறுதிப்பாடாகத்தான் இது இருந்தது; அப்பொழுது அவர் புஷ்ஷின் கருத்துக்களுக்கு இணங்கி லெபனான் மீதான இஸ்ரேலியத் தாக்குதலை அவருடன் சேர்ந்து, ஹெஸ்போல்லாவினர் ஜூலை 12 அன்று எல்லைத் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்த இஸ்ரேலின் தற்காப்புச் செயல்" என்று நியாயப்படுத்தினார்;

இப்படி ஜேர்மனி அரசாங்கம் கொண்டுள்ள சார்பு மாற்றம், சர்வதேச உறவுகளை மாற்றுவதற்கும் மிகப் பிற்போக்குவாத அரசியல் சக்திகளை வலுப்படுத்தவும் உதவியுள்ளது. இஸ்ரேலிய ஆட்சிக்கும் அதன் புரவலரான வாஷிங்டனுக்கும் அவற்றின் சட்ட நெறியற்ற ஆக்கிரமிப்பு மற்றும் ஐ.நா.காவல்நிலைய தாக்குதல் ஆகியவை தண்டனைக்கு உட்படாது என்ற நம்பிக்கைக்கு இது பெரும் ஊக்கத்தை கொடுத்துள்ளது.

அமெரிக்கா, மற்றும் இஸ்ரேலுக்கு நிபந்தனையற்ற ஆதரவைக் கொடுத்ததின்மூலம், ஜேர்மனிய அரசாங்கம் புஷ் நிர்வாகத்திற்கும் இஸ்ரேலிய அரசாங்கத்திற்கும் லெபனானில் படுகொலைகளை தீவிரப்படுத்த ஊக்கம் அளித்துள்ளது. இவ்விதத்தில் கானா மற்றும் லெபனான், மற்றும் காசாப்பகுதிகளில் இறப்பும் அழிவும் பெருகியுள்ளதற்கான பொறுப்பில் ஜேர்மனி அரசாங்கத்திற்கும் பங்கு உள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஜேர்மன் அரசாங்கத்தின் பிரதிநிதிகள் ஈராக்கிற்கு எதிரான அமெரிக்கப் போர் பற்றிய தங்கள் எதிர்ப்பை சர்வதேச சட்ட கட்டமைப்பிற்குள் வெளிப்படுத்த தயாராக இருந்தனர். தங்கள் பங்கிற்கு வாஷிங்டனில் இருந்த போர்ப்பிரியர்கள் அத்தகைய சர்வதேச விதிகள், அமைப்புக்கள் ஆகியவற்றிற்கான இகழ்வை நன்கு வெளிப்படுத்தினர். இப்பொழுது ஜேர்மனி அரசாங்கம் தன்னுடைய கொள்கைகளுக்கு சர்வதேச சட்டம்தான் ஒரு கட்டமைப்பு என்பதை தான் ஒப்புக் கொள்ளவில்லை என்பதை ஜேர்மனி அரசாங்கமும் தெளிவாக்கிவிட்டது.

ஜேர்மனிய வெளியுறவுக் கொள்கையில் வந்துள்ள இம்மாற்றம் சமூக ஜனநாயக கட்சி தலைமை தொடர்பாக குறிப்பிடத்தக்க வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். ஈராக்கியப் போருக்கு ஜேர்மனிய குடிமக்களின் பெரும்பாலான எதிர்ப்பை நன்கு அறிந்திருந்த சமூக ஜனநாயக கட்சி தன்னுடைய தேர்தல் வாய்ப்புக்களை பெருக்கிக் கொள்ள அந்த போரெதிர்ப்பு நிலைப்பாட்டை நன்கு பயன்படுத்திக் கொண்டது. ஆனால் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய சர்வதே சட்டம் சீர்படுத்த முடியாத அளவிற்கு முறிக்கப்பட்டுவிட்டது என்பது தெளிவானவுடன், ஏகாதிபத்திய இராணுவவாதமும், மிருகத்தனமான சக்தியும்தான் மீண்டும் விதிவிலக்குகள் இல்லாமல் விதியாகி விட்டன என்பதை அறிந்த அளவில், சமூக ஜனநாயக கட்சி இதற்கு முன்பு காட்டிய விடையிறுப்பையே மீண்டும் காட்டுகிறது; அதாவது வலுவான ஏகாதிபத்திய சக்தியுடன் அதுவும் அணிவகுத்து நிற்கிறது.

இஸ்ரேலுக்கு ஜேர்மன் ஆயுதங்கள் ஏற்றுமதி

ஜேர்மனி அரசாங்கம் லெபனானில் இழைக்கப்படும் போர்க்குற்றங்களுக்கு இன்னொரு விதத்திலும் பொறுப்பைக் கொண்டுள்ளது. இஸ்ரேலிய இராணுவத்திற்கு தளவாடம் கொடுக்கும் முக்கிய பொறுப்பு அமெரிக்காவிடம்தான் உள்ளது என்றாலும், ஜேர்மனியும் இஸ்ரேலுக்கு குறிப்பிடத்தக்க வகையில் உயர் தொழில்நுட்ப தளவாடங்களை அளித்து வருகிறது.

ஜூலை 27 தொலைக்காட்சி "Monitor" நிகழ்ச்சி ஒளிபரப்பில் இஸ்ரேலுக்கு ஜேர்மனியில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் கொடுக்கப்பட்ட தகவல் வெளிவந்தது. அந்த அறிக்கை கூறுகிறது: "பல நாட்களாக இஸ்ரேலிய விமானப் படை லெபனானில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இலக்கு வைக்கும் கருவிகளில் ஒரு பகுதியாக, அதாவது இஸ்ரேலிய போர்விமானங்களின் நோக்கும் கருவிகள் (Sighting device) ஜேர்மனிய தொழில்நுடபத்தை அடிப்படையாக கொண்டவை; இவை மற்றவர்களுடனுன் கூட ஜேர்மன் நிறுவனமான AEG உடைய துணை நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன."

இந்நிகழ்ச்சியில் பின்னர் F-16 இஸ்ரேலிய தாக்கும் விமானத்தின் கீழ்ப்பகுதியில் இலக்கை உணரும் கருவி பொருத்தப்படுவது காட்டப்பட்டது.

அறிக்கை தொடர்கிறது: "தரைப் படை பிரிவிலும் இஸ்ரேலிய துருப்புக்கள் ஜேர்மன் தொழில்நுட்ப உதவியுடன் போரிடுகின்றனர். இஸ்ரேலிய டாங்கியான "மெர்கவா" என்பதுதான் லெபனானில் முக்கிய தரைப்படை தாக்குதலுக்கு பின்னணியாக இருப்பது; இந்த டாங்கியின் பீரங்கிகுழாய் பகுதி ஜேர்மனிய ஆயுதத்தயாரிப்பு நிறுவனமான Rheinmetall ஆல் தயாரிக்கப்படுகிறது. மேலும் ஜேர்மனிய தொழில்நுட்பத்தின் உதவி இல்லாமல், இஸ்ரேலிய டாங்கிகள் சுடவோ, இயக்கப்படவோ முடியாது; ஏனெனில் இயந்திரம் ஜேர்மனிய பொறியாளர்களால் தயாரிக்கப்பட்டது; இதன் கியர்கள் அவுக்பேர்க் நகரிலுள்ள Renk-AG ஜேர்மன் நிறுவத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது."

ஜேர்மன் அரசாங்கம் "நெருக்கடிகள் உள்ள பகுதிகளுக்கு" ஆயுதங்கள் அனுப்ப அது அனுமதி கொடுப்பதில்லை என்று கூறினாலும்கூட, அடுத்த ஜேர்மனிய-இஸ்ரேலிய ஆயுத பேரம் தொடங்கிவிட்டது. "டிங்கோ" என்று பெயரிடப்பட்டுள்ள ஜேர்மனிய கவச துருப்புக்காவி வாகனங்களில் இஸ்ரேல் பெரும் ஆர்வம் கொண்டுள்ளது. "Monitor" நிகழ்ச்சி மேலும் கூறியதாவது: "நம்முடைய ஆய்வின்படி ஜேர்மன் அரசாங்கம் அண்மையில் ஒரு சோதனை வாகனம் அனுப்பத் தயாராக உள்ளது." இஸ்ரேல் போர் நடத்திக் கொண்டிருக்கும்போதும் "டிங்கோ" திட்டமிட்டபடி அனுப்பப்படுமா எனக் கேட்கப்பட்டதற்கு அரசாங்கத்தின் பிரதிநிதிகள் பதில்கூற மறுத்துவிட்டனர்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved