World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Volkswagen to cut 20,000 jobs

வோல்க்ஸ்வாகன் 20,000 வேலைகளை வெட்டவுள்ளது

By Ulrich Rippert
11 February 2006

Back to screen version

அடுத்த மூன்றாண்டுகளில் 20,000 வேலைகளை இல்லாதொழிப்பதற்கான திட்டங்களை வோல்க்ஸ்வாகன் நிறுவன தலைவர் பேர்ன்ட் பிச்சர்ட்ரீடர் வெள்ளிக்கிழமையன்று அறிவித்தார். மேற்கு ஜேர்மனியிலுள்ள பயணிகள் கார் உற்பத்தி நிலையத்தில் உற்பத்தி செலவினங்களை குறைப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு ''ஆழமான மறுசீரமைப்புத் திட்டம்" என அவர் இந்த பாரியளவு ஆட்குறைப்பை பற்றி குறிப்பிட்டார்.

மேற்கு ஜேர்மனியிலுள்ள ஆறு வேலைத்தளங்களில் வோல்க்ஸ்வாகன் மொத்தம் 100,000 தொழிலாளர்களை வேலையில் அமர்த்தியிருக்கிறது. செலவீனத்தை வெட்டுவதற்கான எந்த நடவடிக்கைகள் பற்றிய விவரமும் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அறிக்கையில் இடம்பெறவில்லை. ஆனால் பிச்சர்ட்ரீடர் கூறியுள்ளபடி அந்த நடவடிக்கைகளில் ''உதிரி பாகங்கள் தயாரிப்பை மறுசீரமைப்பதும்'' மற்றும் இயந்திர பாகங்களை ஒன்றிணைக்கும் (assembly) உற்பத்தியும் அடங்கும்.

தற்போது அந்த நிறுவனம், எந்திர மின்னோடிகள், அச்சாணி மற்றும் கடத்திகள் (transmissions) ஆகியவற்றை தனது சொந்த தொழிற்சாலைகளான சால்ஸ்கிட்டர், பிரவுண்ஸ்வைக் மற்றும் கேசலில் தயாரித்து வருகிறது. குறிப்பாக, பிரவுண்ஸ்வைக்கிலுள்ள தொழிற்கூடம் ஆபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. தனித்தனி வேலைத்தளங்கள் விற்கப்படக்கூடிய சாத்தியக்கூறும் உள்ளது.

நிருபர்கள் மாநாட்டில் நிர்வாகக்குழுவின் தலைவர், கூறியது என்னவென்றால் சென்ற ஆண்டை விட நிறுவனத்தின் மொத்த விற்பனை 7 சதவீதத்தால் அதிகரித்து 93.3 பில்லியன் யூரோக்களாக இருந்தது. வடக்கு அமெரிக்காவிலும் சீனாவிலும் பெரும் இழப்புக்கள் ஏற்பட்டாலும் இதற்கு முன்னர் எப்போதும் இருந்திராத அளவிற்கு உலகம் முழுவதிலும் 5.24 மில்லியன் வாகனங்களை விற்றிருக்கிறது.

வோல்க்ஸ்வாகனின் செயல்பாட்டு இலாபம் 70 சதவீதம் உயர்ந்து 2.79 பில்லியன் யூரோக்களாக இருந்தது. இது ஆய்வாளர்களின் எதிர்பார்ப்புக்களையும் மிஞ்சுகின்ற இலாபமாகும். கடந்த ஆண்டை விட நிறுவனத்தின் வருமானம் மிகப்பெருமளவில் உயர்ந்திருப்பதற்கு காரணம் நிறுவனம் தற்போது கடைப்பிடித்து வருகின்ற சேமிப்புத் திட்டங்கள்தான். இந்த திட்டங்களால் சரியாக ஆண்டிற்கு 3.5 பில்லியன் யூரோக்கள் உயர்ந்திருப்பதாக வோல்ஸ்வாகன் ஒப்புக் கொண்டது.

வேலைகளை வெட்டுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டதும் பங்குச்சந்தையில் வோல்ஸ்வாகன் பங்குகளின் பெறுமதி மிகவேகமாக உயர்ந்தது. ஒரு கட்டத்தில் அந்த நிறுவன பங்கு விலை 2002 ஜூனுக்கு பின்னர் அதிக சாதனையளவிற்கு சென்றது. DAX பங்குபரிவர்த்தனை விற்பனை நேரமுடிவில் வோல்ஸ்வாகன் பங்குகள் விலை 54 அளவிற்கு இருந்தது-----இது 6.6 சதவீத உயர்வாகும்.

''தொழிலாளர்களிடமிருந்து இச்சேமிப்பை கறந்தெடுக்கின்ற அதே நேரத்தில் பங்குதாரர்களுக்கு இலாப பங்கீட்டுத் தொகை அதிகரிக்கப்பட வேண்டும்.'' என்று Spiegel-online எழுதியது.'' 2005ல் இலாப பங்கீட்டுத் தொகை ஒரு பங்கிற்கு 1.5 விகிதம் உயர்ந்தது அதற்கு முந்திய ஆண்டு உயர்வு ஒருபங்கிற்கு 1.05 ஆகும்'' என்று மேலும் அது எழுதியது. எனவே முந்திய ஆண்டை விட இது உயர்வுதான்.

வேலைநீக்கத்திற்கான ஆதரவை கோடிட்டுக்காட்டிய தொழிற்சங்கத் தலைமை

ஜேர்மனியின் மிகப்பெரிய தொழிற்துறை தொழிற்சங்கமான IG Metall தனது ஆரம்ப அறிக்கை ஒன்றில் ''அந்த தொழிற்சாலை சங்கடமான நிலையில் இருக்கின்ற சூழ்நிலையை கருத்தில் கொண்டு உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளையும் மற்றும் உற்பத்தித்திறன் பற்றாக்குறைகளை சமாளிப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளின் அவசியத்தையும் IG Metall அங்கீகரிக்கிறது'' என கூறியிருந்தது.

''கடந்த காலத்தில் உற்பத்தித்திறனை பெருக்குவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் உற்பத்தி ஒழுங்கமைப்பில் புதிய முறைகளை புகுத்த வேண்டிய முக்கியத்துவத்தையும்'' தொழிற்சங்கமும் அதன் தொழிற்சாலை தொழிலாளர் குழுவும் தொழிலாளர்களின் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறது என்ற உண்மையை அது எடுத்துக்காட்டுகிறது.

சென்ற ஆண்டு செப்டம்பர் இறுதியில் ஊழியர்களில் ஒரு பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 20 சதவீத ஊதிய வெட்டு செயல்படுத்தப்படுவதற்கு IG Metall சம்மதித்தது. அந்த நிறுவனத்தின் வொல்ஸ்பேர்க்கிலுள்ள பிரதான தொழிற்சாலையில் புதியவகை வோல்க்ஸ்வாகன் ஜீப்புக்கள் தயாரிக்கப்படமாட்டாது என்று நிர்வாகம் அறிவித்தது. ஆனால் அதற்கு மாறாக போர்ச்சுகலில் அங்குள்ள பல்மேளா தொழிற்கூடத்தில் ஒரு வாகனத்திற்கு 1000 அளவிற்கு உற்பத்திச்செலவு குறைவாக உள்ள இடத்தில் தயாரிக்கப்படும் என்று நிர்வாகம் அறிவித்தது. ஊதியம் கடுமையாக குறைக்கப்பட்டால் மட்டுமை ஜேர்மனியில் ஜீப்புக்கள் தயாரிக்கப்படும் என்று நிர்வாகக் குழு அறிவித்தது. இந்த அச்சுறுத்தலுக்கு அடி பணிந்தது மட்டுமல்லாமல் இந்த உடன்பாட்டை ''வேலைகளை பாதுகாப்பதற்கான ஒரு வெற்றி'' என்றும் தொழிற்சங்கம் கொண்டாடியது.

இப்படி தொழிற்சங்கம் விட்டுக் கொடுத்தது நிர்வாகத்தை தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடத்துவதற்கு ஊக்குவிப்பாகவே அமைந்து விட்டது.

ஜேர்மனி தொழில்களில் தொழிற்சாலைகள் மூடுவதும் ஆட்குறைப்புக்கள் முன்னெடுப்பதும் ஒரு அலை போன்று நடைபெற்றுக் கொண்டிருப்பதன் ஒரு பாகமாகவே வோல்க்ஸ்வாகன் அறிவித்துள்ள புதிய வேலை வெட்டுக்களை பார்த்தாக வேண்டும். ஜேர்மனி Telekom 32,000 பேரையும், DaimlerChrysler 8,000 பேரையும், Siemens மற்றுமொரு 8,000 பேரையும் நீக்குவதற்கு திட்டமிட்டுள்ளன. Karstadt-Quelle 5,700 வேலைகளை வெட்டுவதற்கு திட்டமிட்டுள்ளது, HypoVereinsbank 2,4000 பேரை பணியிலிருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது.

ஜேர்மனியில் ஏறத்தாழ ஒவ்வொரு வாரமும் பாரியளவில் ஆட்குறைப்புக்கள் புதிதாக அறிவிக்கப்பட்டு கொண்டுவரப்படுகின்றன.

ஜேர்மனியின் தொழிற்துறையில் ஒரு நீண்ட வரலாற்றை கொண்ட நூரம்பேர்கிலுள்ள AEG தொழிற்துறை தொழிலாளர்கள் பல வாரங்களாக தொழிற்சாலை மூடப்படுவதை தடுப்பதற்கு போராடி வருகின்றனர். டிசம்பர் மத்தியில் ஸ்வீடன் நாட்டிற்கு சொந்தமான எலக்ட்ரிக்கல் நிறுவனமான Elektrolux தனது AEG தொழிற்சாலையை மூடிவிடுவதாக அறிவித்தது மற்றும் உற்பத்தியை போலந்திற்கு மாற்றுவதாகவும் அறிவித்தது. இந்த மூடல்களினால் நேரடியாக 1750 வேலைகள் அச்சுறுத்தல்களுக்குள்ளாகும். அத்துடன் சேர்த்து உதிரி பாகங்கள் உற்பத்தி மற்றும் விநியோக துறையை சார்ந்த ஏராளமானவர்கள் வேலையிழக்கின்றனர்.

AEG தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்திற்கு இணையாக பாடன்-வூட்டம்பேர்க் மற்றும் சார்லாந்து பொதுச்சேவை ஊழியர்கள் இழப்பீடு எதுவும் இல்லாமல் தங்களது வாராந்தரபணி நீடிப்பை எதிர்த்து வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். உள்ளூர் தொழிற்சாலைகளை சேர்ந்த 90 சதவீத தொழிலாளர்களும் மற்றும் இதர மாநிலங்களை சேர்ந்த பொது அதிகாரிகளும் வேலைநிறுத்தத்தை ஆதரிப்பதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர். பொதுத்துறை தொழிலாளர்களின் இந்த வேலைநிறுத்தத்தின் விரிவாக்கம் அடுத்த வாரம் இதர மாநிலங்களிலும் தொடக்கயிருக்கிறது. அதன் மூலம் கடந்த 14 ஆண்டுகளில் நடைபெற்றிராத மிகப்பெரிய வேலைநிறுத்தமாக இது அமையும்.

மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் போராடி வருவதை ஒரு தனி சக்திவாய்ந்த இயக்கமாக ஒருங்கிணைப்பதற்கு பதிலாக தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தங்களையும் தொழிற் தகராறுகளையும் தனிமைப்படுத்த முயன்று வருகின்றனர். மற்றும் ஒன்றின் பின் ஒன்றாக அந்த வேலைநிறுத்தங்களை காட்டிக் கொடுத்து வருகின்றனர்.

வோல்க்ஸ்வாகன் பாரியளவு தற்காலிக பணிநீக்கம் அறிவிப்பு கார் நிறுவனங்கள் வேலைகள் ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகள் மீது நடத்தி வரும் பூகோளரீதியான தாக்குதலின் ஒரு பாகமாகும். அமெரிக்காவில் ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் போர்டு நிறுவனங்கள் பத்தாயிரக்கணக்கான தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்திருக்கின்றன. மற்றும் அவர்களது ஓய்வூதியங்கள் மற்றும் மருத்துவ நலன்களில் முன்கண்டிராத அளவிற்கு வெட்டுக்களை கோரியுள்ளன.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved