World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

European media report US plans to strike Iran

ஈரானை தாக்குவதற்கான அமெரிக்கத் திட்டங்களை ஐரோப்பிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன

By Joe Kay
5 January 2006

Back to screen version

ஈரானுக்கு எதிராக விமானத் தாக்குதல்களை நடத்துவதற்கு அமெரிக்க அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாக ஜேர்மன் மற்றும் துருக்கி ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருக்கின்றன. அந்தத் தாக்குதல்கள் 2006 ஆரம்பத்தில் நடக்கக் கூடும் என்று அந்த செய்திகள் கருத்துத் தெரிவித்துள்ளன.

டிசம்பர் 30-ல் ஜேர்மன் சஞ்சிகை Der Spiegel, செய்தி நிறுவனமான DDP-ன் உடோ உல்ப்கோட்டேயின் ஒரு அறிக்கை உட்பட ஜேர்மன் பத்திரிகைகளில் வந்த சமீபத்திய கட்டுரைகளை கலந்தாராய்ந்திருக்கிறது. பெயர் குறிப்பிடாத ''மேற்கு நாடுகளின் பாதுகாப்பு வட்டாரங்களை'' மேற்கோள் காட்டி உல்ப்கோட்டே CIA இயக்குனர் போர்டர் குரோசிற்கும் மற்றும் துருக்கி பிரதமர் ரிசப் தையீப் எர்ட்ரோகனுக்கும் இடையில் ஒரு சமீபத்திய கூட்டத்தின்பொழுது விமானப் படை தாக்குதலுக்கான ஒரு சாத்தியக் கூறு பற்றி கலந்தாராயப்பட்டதாக எழுதுகிறார்.

"மிக திட்டவட்டமாக,'' பணிக்கு உதவக்கூடிய வகையில் தடையில்லா புலனாய்வு பரிமாற்றத்தை வழங்குவதற்கு துருக்கியை கேட்டுக் கொண்டதாக குரோஸ் குறிப்பிட்டார். செளதி அரேபியா ஜோர்டான், ஓமன் மற்றும் பாக்கிஸ்தான் அரசாங்கங்களுக்கும் அண்மை வாரங்களில் வாஷிங்டனின் இராணுவத் திட்டங்கள் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளன என்று DDP-யும் செய்தி வெளியிட்டிருக்கின்றது.

DDP தகவலின்படி, குரோஸ் ஈரானுக்கும் அல்-கொய்தாவிற்கும் இடையில் ஒரு தொடர்பை எடுத்துக்காட்டுவதாக கூறப்படும் சான்றை வழங்கினார். ''பயங்கரவாதத்தின் மீதான போர்'' என்ற மந்திரத்தால் அதன் ஏகாதிபத்திய அபிலாசைகள் அனைத்தையும் மூடி மறைப்பதற்கான வாஷிங்டனின் முயற்சியை எடுத்துக்கொண்டால், இந்த வகையான சான்றின் உள்நோக்கம் எந்த இராணுவ நடவடிக்கையையும் தயாரிப்பதில் முக்கியமானதாக இருக்கும். ஈராக் போரை நியாயப்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட ஈராக்கிற்கும் அல்கொய்தாவிற்கும் இடையில் தொடர்புகள் இருப்பதாக உற்பத்தி செய்யப்பட்ட சாட்சியத்தை விட இது அதிக நம்பகத் தன்மை கொண்டதாக இருக்கப் போவதில்லை.

துருக்கியின் புலனாய்விற்கான பரிவர்த்தனை அல்லது தாக்குதல்களை நடத்துவதற்கு துருக்கிலுள்ள அமெரிக்க விமானப் படை தளங்களை பயன்படுத்திக் கொள்வதற்கு துருக்கி அரசாங்கத்திற்கு குரோஸ் ஒரு ஆசை காட்டியிருப்பதாக கூறப்படுகிறது: குறிப்பிட்ட அந்த நாளில் ஈரானில் உள்ள பிரிவினைவாத குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியின் (PKK) முகாமின் மீது தாக்குதல் நடத்த துருக்கி அரசாங்கமும் 'பச்சை விளக்கு' காட்டியுள்ளது'' என DDP கட்டுரையை மேற்கோள் காட்டி Der Spiegel எழுதியது.

அணு ஆயுதங்களை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் என்று அமெரிக்கா கூறி வரும் ஈரானின் அணுக்கரு ஆற்றல் வசதிகளை குறிவைக்கும் ''இராணுவத் தேர்வை'' அது தொடர்ந்து தக்கவைத்திருப்பதாக புஷ் நிர்வாகம் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறது.

DDP- இடமிருந்து வரும் செய்திகளின் நம்பகத் தன்மை, கடந்த பல வாரங்களாக துருக்கியானது, குரோஸ், FBI இயக்குனர் ரொபேர்ட் முல்லர், நேட்டோ பொதுச் செயலாளர், ஜென்ரல் ஜாப்-டி-ஹூப் ஷெபர் மற்றும் இந்த மாதக் கடைசியில் மீண்டும் துருக்கிக்கு விஜயம் செய்ய திட்டமிட்டிருக்கின்ற அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கொண்டலிசா ரைஸ் உள்பட, அமெரிக்க மற்றும் மேற்கத்திய உயர் மட்ட அதிகாரிகளை விருந்தோம்பி வருகிறது என்ற உண்மையால் தாங்கி நிற்கப்படுகிறது.

குறிப்பாக, குரோசின் பயணம், துருக்கி பத்திரிகைகளில் ஒரு பெருமளவிற்கு கவனத்தை பெற்றுள்ளது, துருக்கியின் புலனாய்வுத்துறையின் தலைவர் மற்றும் பிரதமர் ஆகிய இருவருடனும் அவரின் வழக்கத்திற்கு மாறான நீண்ட கூட்டத்தில் அமெரிக்க தாக்குதல்களின் சாத்தியம் பற்றிய விவாதங்கள் சம்மந்தப்பட்டிருந்திருக்கலாம் என அது ஊகிக்கிறது.

இந்தச் செய்திகள் ஜேர்மனியில் பெரிதுபடுத்திக்கூறப்படவில்லை, துருக்கியினால் மறுத்துக் கூறப்பட்டது, மற்றும் அமெரிக்க ஊடகங்களும் அரசியல் ஸ்தாபனங்களும் ஒட்டு மொத்மாக புறக்கணித்து விட்டன. அமெரிக்க பாதுகாப்பு துறைச் அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பெல்ட் அண்மையில் ஜேர்மனிக்கு விஜயம் செய்தபோது அந்த சம்பவத்தின் பின்னணியில் விவாதங்கள் நடத்தப்பட்டன என்பதில் சந்தேகம் எதுவுமில்லை என்றாலும் பகிரங்கமாக அவை எழுப்பப்படவில்லை.

அமெரிக்க ஊடகங்கள் அமைதியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது. ஜனவரி 2-ல் ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் துருக்கியின் மறுப்புக்கள் தொடர்பாக ஒரு செய்தியை தந்திருந்தும், அது தற்போது வெளிவந்து இரண்டு வார காலங்களாகியும் எந்தப் பெரிய செய்தி பத்திரிகையும் அந்த செய்தியை வெளியிடவில்லை.

அமெரிக்க ஊடகங்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களை அச்சுறுத்தும் ஆற்றல் வாய்ந்த அந்த புதிய செய்திகளை நசுக்குவதில் அல்லது மூடி மறைப்பதில் நன்றாக பயிற்சி பெற்றிருக்கின்றன. ஒரு எடுத்துக்காட்டை கூறுவது என்றால்: தேசிய பாதுகாப்பு அமைப்பினால் சட்ட விரோதமாக உளவு பார்ப்பதை அம்பலப்படுத்தும் தனது கட்டுரைகளை ஓராண்டிற்கு மேலாக நியூயோர்க் டைம்ஸ் வெளியிடாது நிறுத்தி வைத்திருந்தது.

ஈரானுக்கு எதிராக விமான தாக்குதலுக்கான திட்டம் பற்றி அமெரிக்க ஊடகங்களுக்கு தகவல் தெரிந்திருக்குமானால் இது முழுவதும் ''தேசிய பாதுகாப்பின்'' அடிப்படையில் அந்த செய்தி நசுக்கப்பட்டிருக்கக்கூடிய சாத்தியக்கூறு உள்ளது.

ஈரானின் அணுக்கரு ஆற்றல் தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்துவதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி பல செய்திகள் வந்ததை தொடர்ந்து, அமெரிக்கா விமானப்படைத் தாக்குதல் ஒன்றை நடத்துவதற்கான திட்டங்கள் கோடிட்டுக்காட்டப்பட்டன. டிசம்பரில் பிரிட்டனின் செய்தி பத்திரிகையான சன்டே டைம்ஸ் இஸ்ரேல் இராணுவத்திற்குள்ளே உள்ள வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஏற்கனவே ஒரு தாக்குதலுக்கான முன்முயற்சிக்கான ஆயத்த நிலை உயர்ந்த கட்டத்திற்கு வந்திருப்பதாக செய்தி வெளியிட்டிருந்தது. அணு நிலையங்கள் இருக்கக் கூடும் என்று இஸ்ரேல் கூறுகின்ற அந்த குண்டு தளங்களிற்கு F-15I போர் விமான சிறப்பு உபகரணங்களை பயன்படுத்துவதற்கான குறிப்பிட்ட திட்டங்கள் வரையப்பட்டிருப்பதாக அந்த செய்தி பத்திரிகை எழுதியது.

ஒரு ''அணுக்கரு ஆற்றல் ஈரானை'' தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இஸ்ரேல் எடுக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் ஏரியல் ஷரோன் எச்சரித்திருந்தார். ஷரோனின் முந்தைய கட்சியான லிக்குட் கட்சி உறுப்பினர்கள் சென்ற வாரக் கடைசியில் விவசாய அமைச்சர் யிஸ்ரேல் காட்ஸ் தலைமையில் ஒரு மாநாடு நடத்தி, "கால கடக்கும் முன் ஈரானின் அணு உலையை குண்டு வீசித் தாக்க வேண்டும்" என்று வாக்களித்ததாக அவற்றில் கலந்து கொண்ட ஒருவர் தெரிவித்தார்.

2005 ஜனவரியில் நியூ யோர்க்கர் பத்திரிகையாளர் சேமோர் ஹெர்ஸ் உயர்மட்ட புலனாய்வுத்துறையின் முன்னாள் அதிகாரிகளை மேற்கோள் காட்டி வெளியிட்டிருந்த செய்தியில், 2004 கோடை காலத்திலிருந்து ஈரானில் புஷ் நிர்வாகம் வேவு பார்க்கும் பணிகளை மேற்கொண்டு வந்தது என்று செய்தி வெளியிட்டிருந்தது. உளவுத் தகவல்களின் திரட்டலிலும் ஈரானின் அணுக்கரு ஆற்றல், வேதியியல் (இரசாயனவியல்) மற்றும் ஏவுகணை தளங்களில் இலக்குவைக்கப்பட்ட தகவல்கள், அறிவிக்கப்பட்டது மற்றும் சந்தேகிக்கப்பட்டது ஆகிய இரண்டிலும் முக்கியமாக குவிமையப்படுத்தப்பட்டது. "குறுகிய கால அதிரடி நடவடிக்கைகள் மற்றும் துல்லியமான தாக்குதல்களினால் அத்தகைய இலக்குகள் அழிக்கப்படக்கூடும், மூன்று டசின் மற்றும் அதற்கு மேற்பட்ட இலக்குகளை தனிமைப்படுத்துவதும் அடையாளப்படுத்துவதும்தான் குறிக்கோளாகும்." என்று ஹெர்ஸ் எழுதினார்.

ஹெர்சின் கட்டுரையை வெள்ளை மாளிகை எப்போதும் மறுத்ததில்லை. "வாஷிங்டனில் அந்தக் கட்டுரையில் ''துல்லியமற்ற அறிக்கைகள்'' நிரம்பியிருப்பதாக வதந்திகள் பரவின. "ஆனால் அந்தக் கட்டுரைக்கு பின்னணியாக அமைந்த முக்கியமான செய்தியை எவரும் மறுக்கவில்லை" என்று Der Spiegel குறிப்பிட்டது.

அண்மையில் திட்டமிட்ட அமெரிக்கத் தாக்குதல்கள் தொடர்பாக வந்திருக்கின்ற செய்திகளின் பின்னணி என்னவென்றால், அமெரிக்க அரசாங்கம் ஈரானின் அணுக்கரு ஆற்றல் திட்டத்தை அது முற்றிலும் சமாதான நோக்கங்களுக்காக என்று ஈரான் வலியுறுத்திக் கூறி வந்தாலும், அதை ஒரு சாக்கு போக்காகப் பயன்படுத்தி அந்த நாட்டிற்கு எதிராக ஆத்திரமூட்டல்களை முடுக்கி விடும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறது.

ஈரானுக்கும் ஐரோப்பிய நாடுகளின் ஒரு குழுவிற்கும் இடையில் ஈரானின் அணுக்கரு ஆற்றல் திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இந்த மாதம் தொடங்கவிருக்கின்றன. அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தின் கீழ் சமாதான அணுக்கரு ஆற்றல் திட்டங்களை மேற்கொள்வதற்கு ஈரானுக்கும் வெளிப்படையான உரிமை உண்டு என்றாலும், அமெரிக்கா ஐரோப்பிய வல்லரசுகளோடு சேர்ந்து ஈரான் ஒரு சுதந்திரமான அணுக்கரு எரிபொருள் செறிவூட்ட ஆற்றல் வளர்ச்சிக்கான அனைத்து முயற்சிகளையும் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.

ஒரு இரண்டரை ஆண்டுகள் முடக்கத்திற்கு பின்னர் தனது அணுக்கரு ஆராய்ச்சி திட்டத்தின் சில அம்சங்களை மீண்டும் தொடக்கப் போவதாக ஜனவரி 3-ல் ஈரான் தெரிவித்தது. ஐரோப்பாவோடு பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதை ஒட்டி ஒரு தற்காலிக நடவடிக்கையாக அதை முடக்கம் செய்து விட ஈரான் சம்மதித்து.

அந்த ஆராய்ச்சியில் அணுக்கரு எரிபொருள் உற்பத்தி சம்மந்தப்பட்டிருக்காது என்று ஈரான் கூறியது, என்றாலும் அமெரிக்கா புதிய அச்சுறுத்தல்களை பதிலாக தந்தது.

"செறிவூட்டம் தொடர்பான எந்த மேல் நடவடிக்கையை ஈரான் எடுத்தாலும் சர்வதேச சமுதாயம் ஈரானின் அணுக்கரு அபிலாஷைகளை கட்டுப்படுத்துவதற்கு கூடுதல் நடவடிக்கைகளை எடுப்பது குறித்து ஆராய வேண்டி வரும் என்பது நமது கருத்தாகும்" என்று அமெரிக்க வெளியுறவுத்துறை பேச்சாளர் சியன் மக்கோர்மக் அறிவித்தார்.

ஐக்கிய நாடு பாதுகாப்பு சபைக்கு ஈரானின் அணுக்கரு திட்டத்தை விசாரணைக்கு அனுப்ப அமெரிக்கா முயன்றது. ஐ.நா. பாதுகாப்பு சபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், ஈராக்கின் அமெரிக்க படையெடுப்பு மற்றும் ஆக்கரமிப்பை நியாயப்படுத்துவதற்கு பயன்படுத்திய முந்தைய ஐ.நா தீர்மானங்களைப்போன்று, அதை எதிர்கால அமெரிக்க இராணுவ நடவடிக்கைக்கு ஒரு சாக்குப் போக்காக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ஈரானின் அணு ஆயுதங்கள் திட்டத்திற்கு உதவுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ள இரண்டு ஈரானின் நிறுவனங்களது சொத்துக்களை முடக்கிவிடுமாறு ஜனவரி 4-ல் புஷ் நிர்வாகம் அமெரிக்க வங்கிகளுக்கு கட்டளையிட்டிருப்பதாக அறிவித்தது. இந்த நடவடிக்கைகளை தொடர்ந்து, ஈரானுக்கு ஆயுதங்கள் உதவி வழங்கும் நிறுவனங்கள் என்ற அடிப்படையில் சீன அரசிற்கு சொந்தமான நிறுவனங்களுக்கு எதிராக டிசம்பர் 27-ல் புதிய தடை நடவடிக்கைகள் சுமத்தப்பட்டுள்ளது.

ஜனவரி 4-ல் பிரிட்டனின் செய்தி பத்திரிகையான கார்டியனும் ஒரு ''மேற்கு நாடுகளின் புலனாய்வு மதிப்பீட்டை'' ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தது, அது ஈரான் ஒரு அணு குண்டை தயாரிக்க முயன்று வருகிறது என்று முடித்திருந்தது. அந்த கட்டுரை ஒரு திட்டவட்டமான அமைப்பு அல்லது செய்தி நிறுவனத்தை அந்த புலனாய்வு மதிப்பீட்டை தயாரித்தாக பெயர் சுட்டிக் குறிப்பிடவில்லை, ஆனால் பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் பெல்ஜியத்தின் புலனாய்வு முகவாண்மைகளிடமிருந்து அது வந்ததாக குறிப்பிட்டது.

ஈரானின் அணுக்கரு ஆயுதங்கள் திட்டம் தொடர்பான கூற்றுக்களை நிரூபிப்பதற்கு திட்டவட்டமான உண்மைகளையோ அல்லது சான்றையோ அந்தக் கட்டுரை தரவில்லை, ஈரான் மீது அழுத்தங்களை அதிகரிப்பதற்கு திட்டமிட்டு அரசாங்கத்தால் வேண்டுமென்றே கசியவிடப்பட்ட அனைத்து சமிக்கைகளையும் பெற்றிருந்தது.

ஈரானுக்கு எதிரான அச்சுறுத்தல்கள், அமெரிக்காவின் ஏகாதிபத்திய அபிலாசைகளான ஈரானின் மிகப் பெரும் எண்ணெய் எரிவாயு அளிப்புகளின் மீதான கட்டுப்பாட்டை வென்றெடுப்பது உட்பட, நீண்டகால புவிசார்- மூலோபாய நலன்களையும் மற்றும் மிக உடனடியான கண்ணோட்டங்கள் ஆகிய இரண்டையும் எதிரொலிக்கின்றது. உடனடியாக இடம் பெற்றிருப்பது ஈராக்கில் ஈரானின் செல்வாக்கு வளர்ந்திருப்பது தொடர்பாக அமெரிக்க அரசியல் நிர்வாகம் பெருகி வரும் கவலையை காட்டுவதாக அமைந்திருக்கிறது.

சென்ற மாதம் ஈராக்கிய தேர்தல்கள் நடைபெறுவதற்கு முன்னர் ஈரானுடன் நெருக்கமான உறவுகளை கொண்டிருக்கின்ற அரசியல் குழுக்களை குறிப்பாக ஈராக் இஸ்லாமிய புரட்சி சுப்ரீம் கவுன்சிலை (SCIRI) பலவீனப்படுத்துவதற்கு அமெரிக்கா முயன்று வந்தது. ஈரானிற்கு விஸ்தரிக்கப்படும் நடவடிக்கையினால் ஈராக்கில் தான் சந்தித்துக் கொண்டிருக்கின்ற சங்கடங்களை சரிசெய்து கொள்ளமுடியும் என்பதில் அமெரிக்க இராணுவத்திலும் புஷ் நிர்வாகத்திற்குள்ளேயும் உள்ள கன்னைவாத பிரிவிற்கு சந்தேகம் ஏதுமில்லை.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved