World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Panasonic closes Esslingen work despite hunger-strike

உண்ணாவிரத போராட்டத்திற்கு மத்தியிலும் எஸ்லிங்கன் பனசொனிக் நிறுவனம் மூடப்படவுள்ளது

By Markus Salzmann and K. Nesan
3 July 2006

Back to screen version

மூன்று மாத ஆர்ப்பாட்டம் மற்றும் பல நாட்களுக்கும் மேலான உண்ணாவிரத போராட்டங்களை தொடர்ந்து, பனசொனிக் நிறுவனம் பாடன் வூட்டன்பேர்க் மாநிலத்தில் உள்ள எஸ்லிங்கன் நகரில் அமைந்துள்ள அதனது தொலைக்காட்சி பெட்டியின் கதிர்க்குழாய்கள் செய்யும் (Picture Tube) வேலைத்தலத்தை மூடவுள்ளது. இதனால் 600 தொழிலாளர்கள் தமது வேலைகளை இழக்கின்றனர்.

எஸ்லிங்கனில் உள்ள இந்த வேலைத்தலத்தை மூடுவதற்கு Matsushita, Toshiba போன்ற சகோதர நிறுவனங்களின் நிர்வாகமான MT Picture Display Germany GmbH ஏற்கனவே முடிவெடுத்திருந்தது. 2005 ஆரம்பத்தில் 300 தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டு, இவ்வருடம் பெப்ரவரி முதல் உற்பத்தி முற்றாக நிறுத்தப்பட்டது. பின்னர் அனைத்து தொழிலாளர்களும் யூலை 31 உடன் வேலைநீக்கம் செய்யப்படுவர் என அறிவிக்கப்பட்டது.

எனினும் தொழிலாளர்கள் வேலைத்தலம் மூடப்படும் வரையிலும் தமது எதிர்ப்புக்களை தெரிவித்தனர். மார்ச் கடைசியில் 500 தொழிலாளர்கள் வேலைத்தல வளாகத்தில் கூடாரம் அடித்து அங்கே இரவு பகலாக தமது எதிர்ப்பை காட்டினர். யூன் ஆரம்பம் முதல் போராட்டம் உச்ச கட்டத்தை அடைந்து. முதலில் ஒன்பது தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் இறங்கினர். சில நாட்களுக்கு பின்னால் மேலும் ஆறு தொழிலாளர்கள் இதில் இணைந்து கொண்டனர். இருபது பேர் மேலும் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்வதற்கான தமது உடன்பாட்டை தெரிவித்தனர்.

எவ்வாறெனினும், கடந்த வெள்ளியில் மத்தியஸ்துவப்படுத்தும் குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆகக்குறைவான சலுகைகள் உள்ளடங்கிய நஷ்டஈடு வழங்கும் திட்டத்தை இவர்களால் தடுக்க முடியவில்லை. இத்துடன் இந்த வேலைத்தலத்தை மூடுவது உறுதிப்படுத்தப்பட்டது.

ஏமாற்றமும், தடுமாற்றமும் பல தொழிலாளர்களினதும், அவர்களது குடும்ப அங்கத்தவர்களினதும் முகங்களில் பிரதிபலித்தன. உண்ணாவிரதத்தை அடுத்து அம்மாநிலத்திற்கு அப்பாலும் மற்றைய தொழிலாளர்களிடமிருந்தும் மக்களிடமிருந்தும் இதற்கான அனுதாபமும், தன்னிச்சையான ஆதரவும் அதிகரித்து காணப்பட்டதால், இதில் கலந்து கொண்டோர் நல்ல முடிவுகளை எதிர்பார்த்திருந்தனர்.

உலக சந்தையில் தொலைக்காட்சி பெட்டியின் கண்ணாடி குழாய்களின் உற்பத்தியில் ஏற்பட்ட விலை வீழ்ச்சிதான் அத்தொழிற்சாலையை மூடுவதற்கன காரணம் என நிறுவனத்தின் தலமை அதை நியாயப்படுத்தியது. தொழிற்சாலை தொழிலாளர்குழு (Factory committee) பலவிதமான மாற்றீட்டு கோரிக்கைகளை முன்னவைத்த போதிலும், வேலைத்தலத்தை மறுபடியும் வேறுவகைகளில் இயங்க வைப்பதற்கான முயற்சிகள் முற்றிலுமாக இல்லை என்பதை தொழிற்சாலை தலைமை தான்தோன்றித்தனமாக தெளிவுபடுத்தியது.

உண்மை என்னவெனில், வேலைத்தலத்தை மூடுவதானது, குறைந்த கூலியுள்ள நாட்டுக்கு உற்பத்தியை மாற்றும் நிறுவனத்தின் கொள்கையின் ஒரு பகுதியாகும். கடந்த வருடங்களில் திட்டவட்டமான முறையில் கிழக்கு ஜரோப்பா, ஆசியாவில் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டன. அவை இப்போது செயற்படவுள்ளன. ''பூகோளரீதியில் விலைகளுக்கான போட்டியில்'', நீட சாக்ஸ்சன் மாநிலத்தின் பைன எனும் இடத்தில் உள்ள AVC Network Germany எனும் சகோதர தொழிற்சாலையும் கூட மூடப்பட இருப்பதாக நிறுவனம் அறிவித்துள்ளது. அங்கே 151 தொழிலாளர்கள் வேலை இழக்கவுள்ளனர்.

தொழிலாளர்கள் விசேடமாக ஆத்திரமுற்று இருப்பதற்கு காரணம் யாதெனில், Panasonic எனும் பெரிய பெயருக்கு பின்னால் இருக்கும் Matsushita Electric Industrial எனும் ஜப்பான் எலக்ரோனிக் நிறுவனம் எஸ்லிங்கனிலும், பைனவிலும் வேலைத்தலங்களை மூடிவிடும் தனது முடிவை அறிவித்த அதேசமயம் கணிசமான வருவாய் மற்றும் இலாபத்தின் உயர்ச்சியை பற்றியும் அது அறிவித்து இருப்பதுதான். டிசம்பர் கடைசியில் முற்றுப்பெற்ற அதனது 2005/6 இற்கான மூன்று மாத வியாபாரத்தின்படி நிகர வருமானமானது முதல் வருடத்தின் 39 வீதத்தில் இருந்து 344 இலட்சம் யூரோவாக உயர்ந்தும், மொத்தவருமானம் 4 வீதமாக அதாவது 16,8 கோடி யூரோவாக அதிகரித்தும் உள்ளதாக இவ்வருடத்தின் ஆரம்பத்தில் நிறுவனம் தெரிவித்தது.

இவ்வாறு நிறுவனத்தின் வியாபார வருமான தகவல்கள் மிக நல்லபடியாக இருப்பினும், வேலைத்தலத்தை மூடிவிட்டு தொழிலாளர்களுக்கான நஷ்ட ஈட்டுத்தொகையில் ஒவ்வொரு சதத்தையும் குறைத்து கொடுப்பதில் தலைமை கவனமாக உள்ளது. எஸ்லிங்கன் தொழிலாளர்களது மிகவும் கடுமையான மற்றும் நீண்ட போராட்டத்தின் மத்தியிலும் அவர்களது நஷ்ட ஈட்டு பணத்தின் தொகையை இப்பகுதியில் வழமையாக உள்ள அளவிலும் மிகவும் கணிசமாக குறைத்துவிட்டுள்ளது. அண்மையில் மூடப்பட்ட ஹம்போர்க் நகரில் உள்ள Panasonic நிறுவனம், அங்கே நஷ்ட ஈட்டுத்தொகை வழங்கும்போது தொழிலாளர்களின் ஒவ்வொரு பிள்ளைக்கும் 5.000 யூரோக்கள் வழங்கியுள்ளபோது, எஸ்லிங்கனில் அதே தொகை 1.000 யூரோக்களாக இருக்கும் என அறிவித்துள்ளது.

தற்போது செயற்படுத்தப்பட்டிருக்கும் இந்த நஷ்ட ஈட்டுத்திட்டமானது தமது முகத்தில் நிர்வாகம் பலமாக அறைந்திருப்பதாக பல தொழிலாளர்கள் கருதுகின்றனர். அதிகமான தொழிலாளர்கள் இந்த வேலைத்தலத்தில் பத்து வருடங்களுக்கும் மேலாக வேலை செய்கின்றனர். அதன் மூலம் தமது உடல் நலத்தை அழிவுற்குட்படுத்தியுள்ளனர். இந்த நஷ்ட ஈட்டுத்தொகை பெரியளவில் இவர்களுக்கு உதவி செய்யப் போவதில்லை. அவர்களில் அதிகமானவர்கள் சாதாரண பயிற்சியற்ற தொழிலாளர்கள் (அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் வெளிநாட்டு மூலத்தை கொண்ட தொழிலாளர்கள்) அவர்களுக்கு ஒரு புதிய வேலை வாய்ப்பு என்பது இலகுவானதல்ல. வேலை இழந்த ஒரு வருடத்துக்கு பின்னால் பாரிய நிதி நெருக்கடியை இவர்கள் எதிர்நோக்க வேண்டியிருப்பதுடன், பெற்றுக் கொண்ட நஷ்ட ஈட்டுத்தொகையும் மற்றும் அவர்களது சொந்த சேமிப்பில் இருக்கும் பணமும் கரைந்து விட்ட பின்னரே அவருக்கு மற்றுமோர் வாய்பான வேலையில்லாதோருக்கான உதவிப் பணம் II (Arbeitslosengeld II) வழங்கப்படும்.

தொழிற்சாலை அதிபர்களது மூர்க்கத்தனமான நடவடிக்கைளுக்கு மட்டுமல்ல, IG Metall தொழிற்சங்கம் வகித்த பாத்திரம் தொடர்பாகவும் வேலையிழந்த தொழிலாளர்கள் ஆத்திரமுற்று இருக்கின்றனர். தொழில் செய்வதற்கான உடன்படிக்கையின் கால அவகாசம் யூலை மாதத்தின் கடைசி வரையிலும் இருக்கும்போதே IG Metall தொழிற்சங்கம் பெப்ரவரி மாதத்தில் முதலாளிகளின் கூட்டமைப்புடனும் நிறுவனத்தின் தலமையுடனும் Refugio எனும் பெயருடைய ''இடமாற்ற அமைப்பு'' (transfer company) ஒன்றை உருவாக்கும் ஒரு உடன்படிக்கை செய்ய தயாராக இருந்தது.

இந்த ''இடமாற்ற அமைப்பு'' ஒரு வருடத்துக்கு மட்டுமே இருக்கும். இக்காலமானது மேலதிக பயிற்சிகளை வழங்கவோ அல்லது வேறு தொழிற்கற்கை முறைகளை வழங்குவதற்கோ மிகவும் குறைவானது. இதற்குள் நுழைந்து கொள்ளும் ஒரு தொழிலாளி, ஒப்பந்தத்தில் உறுதிப்படுத்தப்பட்ட பல மாதங்களுக்காக தொழில் புரியும் உத்தரவாதத்தையும் மற்றும் அவரது வேலையில் இருந்து நிறுத்திவைக்கப்படுவதற்குள்ள பாதுகாப்பு காலத்தையும் உடனேயே இழந்து விடுகிறார்.

இக் காரணத்துக்காக 89 வீதமான தொழிலாளர்கள் தொழிற் சங்கம் முன்னெடுத்த இந்த நஷ்ட ஈட்டு திட்டத்திற்கும் மற்றும் ''இடமாற்ற அமைப்பு'' இற்கான திட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர். தொழிலாளர்களை ''இவ்வாறு முட்டாள்களாக்கப்படக்கூடாது'' என தொழிற்சாலை தொழிற்சங்க குழுவின் தலைவர் Murat Bozkurt கூறினார்.

தொழிற்சாலை தொழிற்சங்க குழுவால் முன்வைக்கப்பட்ட நீண்டகாலத்துக்கான வேலை இழப்பிற்கான முன்னறிவித்தல் கால பாதுகாப்பு மற்றும் நவம்பர் மாத கடைசி வரைக்கும் சம்பளத்தை பெற்றுக்கொள்வதற்கான உத்தரவாதங்களை பேச்சுவார்த்தையின்போது தொழிற்சங்கத்தால் கூட கவனத்திற்கு எடுக்கப்படவில்லை. IG Metall தொழிற் சங்கம், நிர்வாக தலமையுடன் செய்து கொண்ட நடவடிக்கைகளை பற்றி புகழ்ந்ததுடன், இந்த இடமாற்ற அமைப்புக்குள் (Transfergesellschaft) பிரவேசிக்கும்படியும் தொழிலாளர்களை கேட்டுக் கொண்டது.

பெரும்பான்மையான தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தின் கோரிக்கைகளுக்கு எதிராக குரல் எழுப்பியதை தொடர்ந்து, எஸ்லிங்கன் IG Metall தொழிற்சங்கம் தொழிலாளர்களுடைய போராட்டத்துக்கான ஒவ்வொரு ஆதரவுகளையும் பின்னடித்தது. இத்தொழிற்சாலையின் தொழிற்சங்க விடயங்களுக்கு பொறுப்பான IG Metall எஸ்லிங்கன் பிரிவை சேர்ந்த Ilona Dammköhler என்பவர் பத்திரிகைக்கு கூறுகையில், ''நாம் கவனித்த மாதிரியில், மிக அதிகமான நஷ்ட ஈட்டுப்பணத்தை பெற்றுக் கொள்வதில்தான் இவர்கள் ஆர்வமாக இருக்கிறார்களே தவிர ஒரு வேலைக்கான பயிற்சியை பெற்றுக் கொள்ள விரும்புவதாக இல்லை.'' என்றார்.

பனசொனிக் தொழிலாளியின் சம்பளத்தை விடவும் அங்கத்துவ பணத்தால் பெற்றுக் கொள்ளும் தொழிற்சங்கவாதியின் சம்பளம் மிக அதிகமானது என ஒருவர் கூறினார்.

இந்த நிலைமையின் கீழ் உண்ணாவிரதம் தொழிலாளர்களின் ஒரு அவநம்பிக்கைக்குரிய நடவடிக்கையாக இருந்தபோதும், அவர்களுக்கான ஆதரவு, ஐக்கியம் போன்ற ஒவ்வொன்றையும் தொழிற்சங்கம் நிராகரித்த நிலமைகளுக்கு கீழ் பொதுமக்களுடைய கவனமும், ஆதரவும் அவர்களுக்கு கிடைத்தன.

''அவர்களுடைய ஆத்திரம் IG Metall தொழிற்சங்கத்தையும் நோக்கியுள்ளது'' எனும் தலைப்பில் Gabriele Renz என்பவர் Frankfurter Rundschau பத்திரிகைக்கு, கடந்த வார மத்தியில் வேலைத்தல வாயிலிலுக்கு முன்னால் நிலவிய போக்கை பற்றி மிகவும் அனுதாபமான முறையில் விபரித்து இருந்தார். ''Caner Ögüz என்பவர் மிகவும் சிரமத்துடன் கண் புருவத்தை உயர்த்திக் கொண்டார். 40 வயதுடைய ஒருவர் அந்த தடுப்புக் கூடாரத்தில் சோர்வடைந்து படுத்திருந்தார், அவருடை ஒன்பது வயது நிரம்பிய மகள், ''அப்பா, நான் உன்னை இழக்க விரும்பிவில்லை'' என்று எழுதிய கடிதத்தாலும் அவரது உண்ணாவிரதத்தை நிறுத்த முடியவில்லை. Tayyar Recep எனும் அவருடன் வேலை செய்யும் மற்றுமொரு தொழிலாளி 5 நாட்களாக அங்கே உண்ணாவிரம் இருந்து தொழிற்சாலை மருத்துவரால் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அவர் மீண்டும் இங்கே வந்திருக்கின்றார். 14 பேர் வரையில் அந்த உண்ணாவிரதத்தில் பங்கு பற்றினர். 12 வருடங்கள் கண்ணாடி குழாய்கள் பூட்டும் வேலைக்காக 15.000 யூரோ உதவிப் பணமாக தரப்படுகிறது, இது ஒரு இனிப்பு வாங்கும் பணம் என அவர் கூறினார்''.

பிரதானமாக தொழிற்சங்கம் அவர்களை கைவிட்டுவிட்டது, என அங்கே சோர்வுடன் படுத்திருந்தவர்கள் முறைப்பட்டனர். மாதம் 18 யூரோ (தொழிற்சங்க அங்கத்துவ சந்தா) எதற்காக? எமது குழந்தைகளுக்கு இவர்கள் என்ன கூறப் போகிறார்கள் என Ögüz என்பவர் கேட்டார். "நான் உன்னுடைய தந்தைக்காக போராடினேனா அல்லது அடிபணிந்து விட்டேனா?" 400 இற்கும் அதிகமான அங்கத்துவ விலகல் விண்ணப்பங்களை தொழிற்சாலை தொழிற்சங்க ஆலோசகரான Fahrettin Özcan தொழிற்சங்கத்திடம் கையளிக்காதுள்ளார். ஒரு தொழிற்சங்கவாதியும் ஏன் என்று கூட பார்க்காவிட்டால், இவரும், அவருடன் போராடுபவர்களும் தொழிற்சங்கத்துடன் எவ்வித தொடர்பையும் வைத்துக்கொள்ள விரும்பவில்லை''.

''நான் IG Metall தொழிற் சங்கத்தில் இருந்து வெளியேறப் போகிறேன்'' என தொழிற்சாலை தொழிற்சங்க பிரதிநிதியான Fahrettin Özcan உலக சோசலிச வலைத் தளத்திற்கு கூறினார். ''தொழிற் சங்கம் எமது 115 நாட்கள் போராட்டத்தை முழுப்படியே கவனிக்காமல் விட்டுவிட்டது. தொழிற்சங்கத்தின் உடன்படிக்கை முடிவுகளுக்கும் மேலாக, நாம் இதுவரையிலும் எமது போராட்டத்தினால் 5,5 இலட்சம் யூரோ அதிகமாக பெற்றிருக்கிறோம். Ilona Dammköhler என்பரும் மற்றும் IG Metall தொழிற்சங்க பணியாட்கள், ''நாம் எமது எமது வேலைக்காக அல்லாமல், கூடுதலான உதவிப் பணத்துக்காகத்தான் போராடினோம் எனக் கூறுவது உண்மையிலும் ஒரு வெட்கக்கேடாகும்'' என கருத்து தெரிவித்தனர். எமது வேலையை பாதுகாப்பது, இதுதான் எமக்கு முதன்மையானது என்பது இங்கு எல்லோருக்குமே மிகவும் நன்றாகத் தெரியும். ஆனாலும் நாம் என்ன செய்ய முடியும், எமது ஒவ்வொரு போராட்டத்துக்கும் எதிராக நிறுவனம் வேலைத்தலத்தை மூடிவிட முடிவு செய்கையில். பின்னர் நாம் வேறு இடங்களில் கொடுப்பதை போன்று உதவிப் பணத்தை தரவேண்டும் என போராடினோம்.

உற்பத்தி நிறுத்தப்பட்டுவிட்டதால் இங்கு செய்வதற்கு எதுவுமில்லாதுபோனது என IG Metall தொழிற்சங்கம் கூறுவதில் உண்மையில்லை. வேறு இடங்களில் வேலைத்தலங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன, அங்கே அவர்களால் வேலை நிறுத்தம் செய்ய முடியும்'' என்றார்.

Mustafa Toktepe (49) துருக்கி நாட்டு தொழிலாளி, IG Metall தொழிற் சங்கத்தையும், நிறுவனத்தின் தலமையையும் தேசியவாதிகள் என கணிப்பிடுகிறார். ''இதை விட வேறுவிதமாய் கூற முடியாது, சில மாதங்களுக்கு முன்னால் ஹம்பேர்க் நகரில் உள்ள வேலைத்தலத்தில் கூடுதலான நஷ்ட ஈட்டு பணத்துக்கான முடிவுகள் எடுக்கப்பட்டிருந்தன. நாம் இங்கே எஸ்லிங்கனில் இருப்பவர்கள் பெரும்பாலும் வெளிநாட்டவர்கள் ஆகையால், இங்கே இது ஓர் முக்கிய பங்கை வகுத்துள்ளதென என்னால் நிட்சயமாக கூறமுடியும்.'' என்றார்.

Toktepe, திருமணமானவர், மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர். கடந்த 30 வருடங்களாக இங்கே வேலைத்தல ஒழுங்கமைப்பாளராக ஒரு பொறுப்பான துறையில் வேலை செய்தவர். ''இன்று இங்கு எவருமே, வருடக்கணக்காக நாம் மிகவும் கஸ்டப்பட்டு வேலை செய்ததைப் பற்றி கேட்பதற்கு இல்லை. நாம், எவருக்குமே பயன்படாத குப்பைகளாக இங்கு கையாளப்படுகின்றோம்.''

உண்ணாவிரதத்துக்கு மத்தியில் அவருக்கு ஏற்பட்ட சடுதியான இருதய வருத்தம் காரணமாக மருத்துவ மனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். ''வேலைத்தலத்தை பாதுகாப்பதுதான் எனது குறிக்கோள், தொழிற்சாலை தலமையின் திட்டங்களை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. நாம் இதுவரையிலும் சிலவற்றை அடைந்துள்ளோம், ஆனாலும் அவை பெரிதாக இல்லை. நான் இப்போதுள்ள முடிவுகளையிட்டு திருப்திப்படவில்லை, இருப்பினும் இதை ஏற்பதை தவிர வேறு எந்த வழியும் இல்லை. IG Metall தொழிற் சங்கம் தவிர்ந்த ஏனைய எஸ்லிங்கன் மக்கள், வேறு தொழிற்சாலைகளை சேர்ந்த பல சக தொழிலாளர்கள் எமக்கு தினமும் ஆதரவு தந்தனர், இவை மிகவும் முக்கியமானவை.'' என்றார்.

Manfred Werner (45) பனசொனிக் நிறுவனத்தில் கடந்த 20 வருடங்களாக வேலை செய்கிறார். ''என்னுடைய தந்தையார், மற்றும் எனது குடும்பத்தில் அதிகமானோர் இங்கே வேலை செய்தோம். இங்கு நிறுவனங்களின் உடமையாளர்கள் பலமுறை மாறுவதும், அதனால் ஒவ்வொரு முறையும் வேலைத்தலங்கள் அழிக்கப்பட்ட சம்பவங்களை பற்றியும் நான் அறிவேன். ஆனால் நிலமை தற்போது மிகவும் மோசமாகி விட்டது, நான் இந்த நஷ்ட ஈட்டுத்திட்டத்துடன் உடன்படவில்லை. எனக்கு உதவிப் பணம் வேண்டாம், எனக்கு தேவை வேலை. இந்த உண்ணாவிரதத்தால் நாம் 2.000 யூரோ அதிகமாக பெற்றுள்ளோம். எம்முடைய உடல்நிலையை பணயம் வைக்கையில், இது எவ்வளவு பெறுமதி என்பது ஒரு கேள்விக் குறிதான்.

கடந்த வாரத்தில் நிறுவனத்தின் தலமையிடம் இரவு நேர வேலை, சனி, ஞாயிறுகளில் வேலை, அதிகப்படியான நேரத்துக்கு வேலை என நாம் பல சிரமங்களுக்கு மத்தியில் செய்த வேலைகளை பற்றி கூறியபோது இதற்காக எம்மால் உங்களுக்கு சம்பளம் தரப்பட்டது என்ற பதில்தான் எமக்கு கிடைத்து. நாம் இந்த நிறுவனத்துக்காக பல வகையிலும் மிகவும் கடுமையான முறையில் உழைத்தோம். ஆனால் இப்போதோ எம்மை அவர்கள் குப்பைகளாக நடத்துகிறார்கள்.

நான் இதுவரையிலும் தொழிற்சங்கத்தின் ஒரு அங்கத்தவனாக உள்ள போதிலும் தொழிற் சங்கத்தால் ஏமாற்றப்பட்டு விட்டேன். எட்டு அல்லது பத்து வருடங்களுக்கு முன்னால் IG Metall தொழிற்சங்கம் பேச்சுவார்த்தையில் அழுத்தம் கொடுக்ககூடியதாக இருந்தது. இன்று முழுப்படியே நிறுவனத்தின் பக்கத்துக்கே சென்று விட்டது. IG Metall தொழிற்சங்கத்தின் அதிகாரி ஒருவர், ''துருக்கியில் விடுதிகள் கட்டிக் கொள்வதற்கு துருக்கியர்களுக்கு மிகவும் அதிகமான பணம் தேவைப்படுகிறது, அதனால்தான் அவர்கள் உண்ணாவிரதத்தில் குதிக்கிறார்கள்'' என்று தெரிவித்துள்ளதாக நான் கேள்விப்பட்டேன். ''முன்னர் எல்லாம் இவ்விதமான வாக்குவாதங்கள் தொழிற்சாலையில் இருந்ததில்லை. தொழிலாளர்களுக்குள் எத்தனை நாட்டை சேர்ந்தவர்கள் இருக்கிறார் என்பது எனக்கு தெரியாது. ஆனால் நாம் எப்போதுமே ஒரு பெரிய குடும்பமாகவே இருந்துள்ளோம்.''

''நான் கடந்த 27 வருடங்களாக வேலை செய்கிறேன்.'' என Antonio Giorgi (50) என்பவர் உலக சோசலிச வலைத் தளத்திற்கு தெரிவித்தார். மேலும் ''நான் தனியாகத்தான் இருக்கிறேன், ஆனால் அதன் அர்த்தம் இந்த நஷ்ட ஈட்டுத் தொகை எனது மிகுதி வாழ்க்கைக்கு போதுமானது என்று பொருள் அல்ல. இப் புதிய ஹார்ட்ஸ் IV (Hartz IV) சட்டமானது, பெற்றுக் கொள்ளும் நஷ்ட ஈட்டுத் தொகையை முதுமைக்கால காப்புறுதிக்காக சேமிப்பதற்கு இடம் தராது. வேலையில்லாதோருக்கான நிதி II (Arbeitslosengeld II) ஒருவர் பெற்றுக் கொள்வதற்கு முன்னால் அவர் தன்னிடம் உள்ள அனைத்தையும் இழந்திருக்க வேண்டும். ஆனால் பணத்தையும், வேலையையும் மட்டும் இங்கே நாம் இழக்கவில்லை, எனக்கும் மற்றைய சக தொழிலாளர்களுக்கும் எமது வேலைத்தலம் ஓர் பெரிய குடும்பமாகும். நான் எனது வேலைத்தலத்தை பாதுகாத்துக்கொள்ள ஒவ்வொரு சதத்தையும் நான் இழப்பதற்கு உள்ளேன்.

மேலும், மேலும் வேலைத்தலங்கள் அழிக்கப்பட்டுக் கொண்டு போனால் இளம் சமுதாயத்தின் நிலமை எவ்வாறு அமையப் போகிறது. அனேகமான அரசியல்வாதிகள், இளம் சமுதாயம் போதைவஸ்து மற்றும் மதுபான துஸ்பிரயோகத்திற்கு முன்னால் நிற்பதாக எச்சரிக்கிறார்கள். எதிர்காலத்தில் இளம் சமுதாயத்தினது மிகவும் திட்டவட்டமான மற்றும் எதிர்கால சந்தர்ப்பங்களையும் இல்லாதொழித்துவிட்டு, இவ்வாறு அவர்களை எச்சரிப்பது என்பது ஓர் கேலியான கதையாகும்'' என்றார்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved